Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

லங்கா சம சமாஜக் கட்சி நான்காம் அகிலத்தின் பக்கம் திரும்பியது

4-1. நான்காம் அகிலமானது 11 நாடுகளைச் சேர்ந்த 30 பிரதிநிதிகளால் பாரிசில் நடந்த ஒரு இரகசிய கூட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. சீனா, பிரெஞ்சு-இந்தோசீனா, ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று ஆசியக் கட்சிகள் பிரதிநிதிகளை அனுப்ப முடியாவிட்டாலும், அவை தம்மை நான்காம் அகிலத்தின் பகுதிகளாக இணைத்துக்கொண்டன. ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “ இடைமருவு வேலைத் திட்டம்: முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் ”, என்ற அறிக்கை பிரகடனம் செய்ததாவது: “சோசலிசத்துக்கான வரலாற்று நிலைமைகள் இன்னமும் ‘பக்குவம்’ அடையவில்லை என்ற சகல கதையளப்புக்களும் அலட்சியம் அல்லது நனவான மோசடியின் வெளிப்பாடுகளாகும். தொழிலாள வர்க்கப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் ‘பக்குவம்’ அடைந்தது மட்டுமன்றி; அவை கொஞ்சம் அழுகிப்போகவும் தொடங்கிவிட்டன. அடுத்த வரலாற்றுக் காலப் பகுதியில் ஒரு சோசலிசப் புரட்சி இல்லாது போகின், மனித இனத்தின் முழுக் கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. இது பாட்டாளி வர்க்கத்தின், பிரதானமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் முறையாகும். மனித குலத்தின் வரலாற்று நெருக்கடி, புரட்சிகரத் தலைமை நெருக்கடியாகக் குறைந்து விட்டுள்ளது.”[3] “தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினரின் இன்றைய நிலைமைகள் மற்றும் இன்றைய நனவில் இருந்து தோன்றி, தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு மாற்ற முடியாத இறுதித் தீர்மானத்துக்கு இட்டுச் செல்லும் இடைமருவு கோரிக்கைகளின் தொகுப்பு ஒன்றை ” இந்த வேலைத் திட்டம் வரைந்தது.[4] இந்த இடைமருவு கோரிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னெடுப்புகளையும் நனவையும் அபிவிருத்தி செய்வதற்கே அன்றி, வேலைத் திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய நனவுக்குள் கரைத்துவிடுவதற்கல்ல.

4-2. இந்த ஸ்தாபக ஆவணம் முதலாளித்துவத்தின் இணைந்த (combined) மற்றும் சமனற்ற (uneven) அபிவிருத்தியின் அடிப்படையில் நிரந்தரப் புரட்சி முன்னோக்கினை இரத்தினச் சுருக்கமாய் கூறியது: “காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகள் அவற்றின் வெகு இயல்பிலேயே பின்தங்கிய நாடுகளாகும். ஆனாலும் பின்தங்கிய நாடுகள் ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற உலகத்தின் ஒரு பகுதியே. எனவே அவற்றின் அபிவிருத்தி ஒரு இணைந்த (combined) பண்பினைக் கொண்டுள்ளது: மிக ஆதி காலத்தின் பொருளாதார வடிவங்கள் முதலாளித்துவ தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் மிக சமீபத்திய அம்சங்களுடன் இணைந்துள்ளன. இதேவகையிலேயே பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டங்களும் வரையறுக்கப்படுகின்றன: தேசிய சுதந்திரம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிக ஆரம்பநிலை சாதனைகளுக்கான போராட்டம் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சோசலிசப் போராட்டத்துடன் இணைந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் ஜனநாயக சுலோகங்கள், இடைமருவல் கோரிக்கைகள், மற்றும் சோசலிசப் புரட்சியின் பிரச்சினைகள் எல்லாம் தனித்தனி வரலாற்று சகாப்தங்களாய் பிரிக்கப்படுவதில்லை, மாறாக நேரடியாய் ஒன்றிலிருந்து மற்றொன்று எழுகிறது.” [5]

4-3. 1939 ஜூலையில் இந்திய தொழிலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், நெருங்கிக்கொண்டிருந்த யுத்தத்தில் அவர்கள் எதிர்கொண்ட அரசியல் பிரச்சினைகளை ட்ரொட்ஸ்கி மேலும் விளக்கினார். “பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முகவர்கள், ‘ஜனநாயகத்தின்’ அடிப்படைகளுக்காகவே யுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பாசிசத்திடம் இருந்து ‘ஜனநாயகத்தின்’ அடிப்படைகளை பாதுகாக்க வேண்டும் என்பது போலவும் சித்தரிக்கின்றனர். அதன்படி பாசிச ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவதற்காக அனைத்து வர்க்கங்களும் மக்களும் ‘சமாதானமான’, ‘ஜனநாயகபூர்வமான’ அரசாங்கங்களை சூழ அணிதிரள வேண்டும். இவ்வாறாக நிரந்தரமாக ‘ஜனநாயகம்’ பாதுகாக்கப்படுவதோடு சமாதானம் நிலைநாட்டப்படும், எனக்கூறுகின்றனர். இந்த போதனை வேண்டுமென்றே கூறப்படும் பொய்யாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் ஜனநாயகம் பூத்துக்குலுங்குவதையிட்டு உண்மையில் அக்கறைகாட்டுமெனில், அதை வெளிப்படுத்துவதற்கு மிகவும் இலகுவான சந்தர்ப்பம் உள்ளது: அது பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதாகும்.” [6] பாசிசத்தின் ஆபத்தை குறைத்து மதிப்பிடாத அதேவேளை, ட்ரொட்ஸ்கி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினதும் மக்களதும் பிரதான எதிரி உள்நாட்டிலேயே இருப்பதாக வலியுறுத்தினார். இந்தியாவில், அந்த எதிரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே ஆகும். அதை தூக்கிவீசுவது பாசிச சர்வாதிகாரிகள் உட்பட சகல ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஒரு மிகப்பெரும் அடியாக இருக்கும்.

4-4. இந்திய முதலாளித்துவ வர்க்கம் பற்றிய தனது மதிப்பீட்டில் ட்ரொட்ஸ்கி மிகவும் கூர்மையுடன் இருந்தார்: “அவர்கள் பிரித்தானிய முதலாளித்துவத்துடன் நெருக்கமாக கட்டுண்டிருந்ததோடு அதில் தங்கியுமிருக்கிறார்கள். அவர்கள் தமது சொந்த சொத்துக்களை நினைத்து நடுக்கம் கொண்டுள்ளார்கள். அவர்கள் வெகுஜனங்களைப் பற்றி பீதியடைந்துள்ளார்கள். அவர்கள் என்ன விலை கொடுத்தாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமசரசம் செய்துகொள்ள முயற்சிப்பதோடு மேலிருந்து கிடைக்கும் சீர்திருத்தங்கள் பற்றிய எதிர்பார்ப்பை பயன்படுத்தி இந்திய வெகுஜனங்களை சாந்தப்படுத்த முயற்சிக்கின்றனர். காந்தி இந்த முதலாளித்துவத்தின் தலைவராகவும் போதகராகவும் இருக்கின்றார். அவர் ஒரு ஏமாற்றுத் தலைவரும் ஒரு போலி போதகருமாவார்! காந்தியும் அவரது கூட்டாளிகளும், இந்தியாவின் நிலைமை இடைவிடாது முன்னேறும், அதனது விடுதலை தொடர்ந்தும் விரிவடையும், மற்றும் இந்தியா சிறிது சிறிதாக அமைதியான சீர்திருத்தப் பாதையில் ஒரு டொமினியனாக (பிரித்தானியாவிற்குட்பட்ட தன்னாட்சிப் பிரதேசமாக) மாறும் என்ற கருத்தை அபிவிருத்தி செய்கின்றனர். இந்த முழு முன்னோக்கும் அதன் உட்கருவிலேயே தவறானதாகும்.” [7]

4-5. ஸ்ராலினிசம் வகிக்கும் பாத்திரத்தைப் பற்றி குறிப்பிடும் போது, ஏனைய நாடுகளில் போல், சோவியத் அதிகாரத்துவம் “ஜனநாயக சக்திகளுடனான” அதன் இராஜதந்திர சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்திய மக்களின் நலன்களை அடிபணியச் செய்தது என ட்ரொட்ஸ்கி விளக்கினார் – ஸ்ராலினிச அதிகாரத்துவம், பாசிஸ்டுகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக வாதாடிய போதிலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் காலனிகளில் ஆக்கிரமிப்பைத் தொடர அனுமதித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் நெருங்கிவரும் யுத்தத்துக்கும் எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது என்பது, ஸ்ராலினிசத்திடம் இருந்து முழுமையாக பிரிந்துசெல்வதை அர்த்தப்படுத்துகிறது. மிகச் சரியாக இந்தப் பிரச்சினைகளையே நான்காம் அகிலத்தை நோக்கித் திரும்பிய லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் எதிர்கொண்டனர். பிரிட்டன் மற்றும் வட அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச தலைவர்களுடன் தொடர்புகொள்வதற்காக 1939ல் செலினா பெரேரா பிரிட்டனுக்கும் வட அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்ட போதிலும், ட்ரொட்ஸ்கியை சந்திக்கும் முயற்சி தோல்விகண்டது.

4-6. 1939 டிசம்பரில், ட்ரொட்ஸ்கிச பிரிவு, லங்கா சம சமாஜக் கட்சியின் செயற் குழுவில் பின்வரும் பிரேரணையை முன்கொணர்ந்ததன் மூலம், லங்கா சம சமாஜக் கட்சிக்குள் இருந்த ஸ்ராலினிச ஆதரவாளர்களை சவாலுக்கு அழைத்தனர். “முதலாவது தொழிலாளர் அரசான சோவியத் ஒன்றியத்துடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் அதேவேளை, லங்கா சம சமாஜக் கட்சி, மூன்றாம் அகிலம் சர்வதேச புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கத்தின் நலன்களுக்காக செயற்படாதமையினால், அதன் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என அறிவிக்கின்றது.” 29 க்கு 5 என்ற எண்ணிக்கையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. கட்சியில் இருந்து விலகிய ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களின் ஆதரவாளர்களும், 1940 நவம்பரில் ஐக்கிய சோசலிசக் கட்சியையும் மற்றும் பின்னர் 1943 ஜுலையில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியையும் ஸ்தாபித்தனர்.

4-7. “மூன்றாம் அகிலம் கண்டிக்கப்பட்டது” என்ற தலைப்பில் லெஸ்லி குணவர்த்தனா ஸ்ராலினிசம் பற்றி விமர்சனம் ஒன்றை எழுதினார். அதில், ஏகாதிபத்திய யுத்தத்தை ஆதரித்த பிரிட்டன் மற்றும் பிரான்சில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், 1939ல் யுத்தத்துக்கு எதிரானவையாக சந்தர்ப்பவாத மாற்றம் எடுத்ததை வெளிச்சம்போட்டு காட்டினார். “ஜனநாயக சக்திகளுடன்” –பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்- கொள்கையற்ற சூழ்ச்சி நடவடிக்கைகளில் தொடங்கி, 1939 ஆகஸ்ட்டில் ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது வரை, கிரெம்ளினின் தலைகீழ் மாற்றங்களே இந்த கட்டுபாடற்ற அரசியல் ஊசலாட்டங்களை தூண்டுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார். “1914-18 யுத்தத்தில் இரண்டாம் அகிலம் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்தது. இன்று மூன்றாம் அகிலம், சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு அனைத்துலக புரட்சிகர இயக்கத்தை அடிபணியச் செய்வதன் மூலம், இன்னுமொரு காட்டிக்கொடுப்பைச் செய்கின்றது. இந்த உண்மையை சுட்டிக்காட்ட வேண்டியது எமது கடமை,” என அவர் முடித்தார். [8]

4-8. ஸ்ராலினிஸ்டுகளின் வெளியேற்றமும் லங்கா சம சமாஜக் கட்சி நான்காம் அகிலத்தின் பக்கம் திரும்பியமையும், அதன் வர்க்க அச்சில் ஒரு தீர்க்கமான மாற்றத்தையும் கட்சி நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் மறுநோக்குநிலைப்படுத்தப்பட்டதையும் குறித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் சோசலிசத்துக்கான போராட்டம், இந்தியாவிலும் சர்வதேசரீதியாகவும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்துள்ளது என்பதை லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் அடையாளங்கண்டுகொண்டனர். தொலைநோக்குடன் அடியெடுத்து வைத்த லங்கா சம சமாஜக் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக துணைக்கண்டம் பூராவும் தொழிலாள வர்க்கம் நடத்தும் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு, நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக அனைத்து இந்தியக் கட்சியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இந்த மூலோபாய மாற்றத்தின்படி, 1942ல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (Bolshevik Leninist Party of India -BLPI) ஸ்தாபிக்கப்பட்டது. கிடைக்கத்தக்க லங்கா சம சமாஜக் கட்சியின் வரலாறுகள், 1950களில் அடுத்துவந்த அதன் சீரழிவுகளை பிரதிபலிக்கின்ற முகமாக ஒன்று அது இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி அனுபவங்களை அலட்சியம் செய்துள்ளது, அல்லது புரட்சிகர கற்பனைமகிழ்வாதத்தின் ஒரு நம்பிக்கையற்ற சாகசமாக அதைக் கணித்தது. ஆனால், மிகவும் சரியாக, சம சமாஜவாதம் என்ற தீவிரவாத, தேசியவாத வரம்பில் இருந்து பிரிந்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் தன்னை திசையமைவுபடுத்திக் கொண்டதனாலேயே, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் மார்க்சிசத்துக்கான போராட்டத்துக்கு அழிக்கமுடியாத பங்களிப்பை செய்ய முடிந்தது. அவை இன்றைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தீர்க்கமான அரசியல் மற்றும் தத்துவார்த்த படிப்பினைகளை தொடர்ந்து தம்மகத்தே கொண்டிருக்கின்றன.

4-9. யுத்தம் நெருங்கி வந்த நிலையில், ஸ்ராலின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தை அழிக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கியையே ஒழித்துக் கட்டவும் முயற்சித்தார். யுத்தத்தினால் நிச்சயமாக ஏற்படக்கூடிய புரட்சிகர எழுச்சிகள், சோவியத் ஒன்றியம் உட்பட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பெருமளவில் பலப்படுத்தும், அது சோவியத் அதிகாரத்துவத்தை நேரடியாக சவால் செய்யும் என ஸ்ராலின் அச்சமடைந்தார். நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னதாக, ஜி.பி.யூ., ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள் ஊடுருவியிருந்த முகவர் வலையமைப்பின் உதவியுடன், ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களில் ஒருவரான எர்வின் வொல்ஃப், ஜி.பி.யூ. வில் இருந்து பிரிந்து சென்று ட்ரொட்ஸ்கியை ஆதரிப்பதாக அறிவித்த இக்னாஸ் ரெய்ஸ், ட்ரொட்ஸ்கியுடன் நெருக்கமாக வேலை செய்து வந்த அவரது மகன் லியோன் செடொவ், நான்காம் அகிலத்தின் செயலாளர் ருடொல்ஃப் கிளெமென்ட் ஆகியோரைக் கொன்றது. 1940 மே மாதம் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, 1940 ஆகஸ்ட் 20 அன்று, மெக்சிக்கோ, கொயோகானில் அவரது வீட்டில் வைத்து ஜி.பி.யூ. முகவரான ராமொன் மெர்க்காடர் ட்ரொட்ஸ்கியை தாக்கினார். மறுநாள் ட்ரொட்ஸ்கி உயிரிழந்தார். ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை, அந்த நூற்றாண்டின் அரசியல் குற்றமாக இருந்ததோடு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு கடும் அடியாக விழுந்தது. அவர், ரஷ்யப் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராகவும், ஸ்ராலினிசத்தின் சமரசமற்ற எதிரியாகவும், மற்றும் 19ம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பெரும் புரட்சிகர தொழிலாளர் இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட உன்னத மார்க்சிச பாரம்பரியங்களின் கடைசி மற்றும் மிக உயர்ந்த பிரதிநிதியாகவும் இருந்தார்.


[3]

லியோன் ட்ரொட்ஸ்கி, இடைமருவு வேலைத் திட்டம்: முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும். பக்கம் 3.

[4]

நகலில் வலியுறுத்தப்பட்டுள்ளது; அதே நூல்.

[5]

நகலில் வலியுறுத்தப்பட்டுள்ளது; அதே நூல்.

[6]

லியோன் ட்ரொட்ஸ்கியின் கட்டுரைகள் Writings of Leon Trotsky- 1939-40), (நியூ யோர்க்: பாத்பைன்டர் அச்சகம், 2001) பக்கம் 29-30.

[7]

அதே நூல், பக்கம் 30-31

[8]

[Blows against the Empire; Trotskyism in Ceylon the Lanka Sama Samaja Party, 1935-1964 (ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அடி: இலங்கையில் ட்ரொட்ஸ்கிசம்; லங்கா சமசமாஜக் கட்சி, 1935-1964) :(London: Porcupine Press: Socialist Platform, 1997) பக்கங்கள் 64-67]