Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் ஸ்தாபிதம்

5-1. 1939 செப்டெம்பரில், ஒரு பக்கம் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையிலும் மறுபக்கம் நாஜி ஜேர்மனிக்கும் அதன் பங்காளிகளுக்கும் இடையிலும் மோதல்கள் வெடித்ததில் இருந்தே, லங்கா சம சமாஜக் கட்சி யுத்தத்திற்கு எந்தவொரு ஆதரவும் கொடுப்பதை உறுதியாக எதிர்த்து வந்தது. இலங்கை தேசிய காங்கிரஸின் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு “மனப்பூர்வமான முழு ஆதரவை” கொடுத்து அரச சபையில் தீர்மானமொன்றை கொண்டுவந்தபோது, இரு ஏகாதிபத்திய முகாங்களுக்கு இடையிலான யுத்தத்தை கண்டனம் செய்த பிலிப் குணவர்த்தனா, “எந்தவொரு ஏகாதிபத்திய யுத்தத்தினதும் பங்காளியாக இருக்க நாம் மறுக்கின்றோம். நாம் சகல ஏகாதிபத்திய யுத்தங்களையும் சுரண்டல்களையும் எதிர்க்கின்றோம். ஒரு நாடு யுத்தத்தினுள் இருப்பதனால் வர்க்கப் போராட்டம் நின்றுவிடாது,” எனப் பிரகடனம் செய்தார்.[9] 1939 டிசம்பரில் முல்லோயா தோட்டத்தில் தொடங்கிய பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலான வேலைநிறுத்த அலைகளில் லங்கா சம சமாஜக் கட்சி முன்னணிப் பாத்திரம் வகித்தது. அந்தத் தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு தொழிலாளியான கோவிந்தன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வேலைநிறுத்தம் விரிவடைந்து, 1940 மே மாதம் வேவெஸ்ஸ தோட்டத்தில் தொழிலாளர் சபை ஒன்றை அமைத்ததுடன் அது உச்சகட்டத்தை அடைந்த நிலையில், முன்னணி தோட்ட உரிமையாளர்கள் லங்கா சம சமாஜக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரினர். “இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருவதானது, இந்தியாவில் சந்தேகத்துக்கிடமற்ற முறையில் மிகப்பெருமளவு எதிர்விளைவுகளையும் தரக்கூடியவாறு, இரத்தக்களரி மற்றும் வன்முறையை நோக்கி வழியமைக்கக் கூடும்” என அவர்கள் எச்சரித்தனர். பொலிசார் தேயிலைத் தோட்டங்கள் பூராவும் ஒரு அச்ச சூழ்நிலையை கட்டவிழ்த்துவிட்டனர். பாரிஸ் நகரம், நாஜி இராணுவத்திடம் தோல்வியடைந்து சில நாட்களே ஆகியிருந்த ஜூன் 18 அன்று, லங்கா சம சமாஜக் கட்சி தடை செய்யப்பட்டதோடு பிலிப் குணவர்த்தனா, என்.எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, எட்மன்ட் சமரக்கொடி ஆகிய நான்கு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த போதும், யுத்த காலம் பூராவும் இலங்கையில் சட்டவிரோதமாக தொடர்ந்தும் செயற்படுவதற்குரிய தயாரிப்புகளை கட்சி ஏற்கனவே மேற்கொண்டிருந்தது.

5-2. 1940 மே மாதத்தில், இந்தியாவில் ட்ரொட்ஸ்கிசக் குழுக்களை தொடர்புகொண்டு அனைத்து-இந்திய கட்சியொன்றுக்கான அடித்தள வேலைகளைத் தொடங்குவதற்காக லங்கா சமசமாஜக் கட்சி இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்பத் தொடங்கியது. அஜித் குமார் முகர்ஜி ரோய் மற்றும் கமலேஷ் பனர்ஜி தலைமையில் கல்கத்தாவிலும், ஒன்கர்நாத் வர்ம சாஸ்திரி தலைமையில் கான்பூர் தொழிற்துறை நகரிலும் மற்றும் சந்திரவதன் ஷுக்லா தலைமையில் மும்பையிலுமாக மூன்று குழுக்களின் ஆதரவை லங்கா சமசமாஜக் கட்சி வென்றது. சாஸ்திரி, ஷுக்லா இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India -CPI) உறுப்பினர்களாக இருந்த போதிலும், கட்சி மக்கள் முன்னணிவாதத்தின் பக்கம் திரும்பியதை எதிர்த்த அவர்கள், 1930களின் கடைப்பகுதியில் கட்சியில் இருந்து வெளியேறினர். தடை செய்யப்பட்டிருந்த நிலைமையின் கீழும் இந்தியா, பர்மா மற்றும் இலங்கைக்கும் ஒரே ட்ரொட்ஸ்கிசக் கட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்காக 1940 டிசம்பரிலும் 1941 மார்ச்சிலும் கண்டியில் இரு இரகசியக் கூட்டங்களை லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் நடத்தியிருந்தனர். சிறையில் இருந்த லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் தமது சிறைக்காவலரை வென்றெடுத்திருந்த காரணத்தால் இரு கூட்டங்களிலும் அவர்களும் பங்குபற்றியிருந்தனர். இரண்டாவது கூட்டத்தில் இந்தியாவில் இருந்தும் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். இந்தியாவில் ஆழமான புரட்சிகர தாக்கங்களைக் கொண்ட வெடிப்பு நிலைமை அபிவிருத்தியடைவதை உணர்ந்த அநேக லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்கள், இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1942 ஏப்பிரல் 7 அன்று, தாமிருந்த கண்டி சிறைச்சாலையில் இருந்த தமது சிறைக் காவலருடன் வெளியேறிய நான்கு லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்கள், பொலிஸ் சுற்றிவளைப்புக்களையும் கடந்து வெற்றிகரமாக இந்தியாவுக்குச் சென்றனர். 1942 மே மாதம், லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் இந்திய ட்ரொட்ஸ்கிசத் தலைவர்களுக்கு இடையிலான கூட்டமொன்றில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பி.ஐ.) உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு வேலைத் திட்டமொன்று நிறைவேற்றப்பட்டதோடு நான்காம் அகிலத்தில் இணைந்துகொள்ளவும் கோரப்பட்டது.

5-3. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை, இந்தியத் துணைக்கண்டத்தில் புரட்சிகர மார்க்சிசத்துக்கான போராட்டத்தில் ஒரு மைல் கல்லை பிரதிநிதித்துவம் செய்தது. இந்திய துணைக் கண்டத்தினுள் ட்ரொட்ஸ்கிசத்தை அறிமுகப்படுத்துவதில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள் செய்த சாதனைகளில் இருந்து, அதைத் தொடர்ந்து அவர்கள் செய்த எதுவொன்றும் கூட, பிரித்து விட முடியாது. இலங்கையில் சோசலிசத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பு விடுத்து, 1935இல் லங்கா சம சமாஜக் கட்சி நிறைவேற்றிய மேலெழுந்தவாரியான அழைப்பிற்கு மாறாக இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் வேலைத் திட்டமானது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தது. அது, இலங்கையில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டமும், இந்தியாவிலும் சர்வதேச அளவிலுமான சோசலிசப் புரட்சியுடன் முழுமையாகப் பிணைந்துள்ளது என்பதைக் கண்டுணர்ந்து அதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த வேலைத் திட்டமானது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, முதலாளித்துவத்தின் தோற்றம், பல்வேறு வர்க்கங்களதும் மற்றும் சகல அரசியல் கட்சிகளதும் பாத்திரம் பற்றி பூரணமான ஆய்வினைச் செய்ததோடு நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இடைமருவுக் கோரிக்கைகளின் ஒரு வரிசையை விரிவுபடுத்தியிருந்தது.

5-4. இந்திய தேசிய காங்கிரஸின் (ஐ.என்.சி.) சமரச அரசியலையும், நிலப் பிரபுக்களுடன் அது கொண்டுள்ள நெருங்கிய உறவையும் மற்றும் 1920களின் முற்பகுதியிலும் 1930களிலும் பெரும் வெகுஜன ஒத்துழையாமை இயக்கத்தை அது காட்டிக்கொடுத்ததையும் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. காந்தியின் “அகிம்சையின்” பக்கம் கவனத்தை திருப்பிய அது, இந்தக் கொள்கையின் ஊடாக “முதலாளித்துவமானது போராட்டத்தின் வடிவத்தையும் சீற்றத்தையும் கட்டுப்படுத்தி, அது புரட்சிகர நீரோட்டத்தில் கலந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம், தேசிய இயக்கங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது” என விளக்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பல-வர்க்கக் கட்சியாக இருப்பதாக அறிவிப்பதன் மூலம், அதனுடன் தமக்குள்ள உறவை நியாயப்படுத்த ஸ்ராலினிஸ்டுகள் எடுத்த முயற்சிகளை “வெளிப்படையான மோசடி” என இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கண்டனம் செய்தது. காங்கிரஸ், எல்லாவற்றுக்கும் மேலாக அதன் அரசியல் தலைமை, 1925-27 புரட்சியை நசுக்கிய சீனாவின் முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு எல்லா வகையிலும் ஒத்த இயல்பைக் கொண்டுள்ளது என அது எச்சரித்தது.

5-5. இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுக்களுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு விவசாயிகளின் மிகவும் அடிப்படையான தேவைகளைக் கூட இட்டு நிரப்ப அது இயல்பிலேயே இலாயக்கற்றுள்ளதை வெளிப்படுத்தியது. “விவசாயிகள் தமக்குத்தாமே வழங்கிக்கொள்ள முடியாத புரட்சிகரத் தலைமை, நகர்ப்புற வர்க்கங்களில் இருந்தே தோன்ற முடியும். முதலாவதாக, இந்திய முதலாளித்துவம் அத்தகைய தலைமையை வழங்குவது சாத்தியமற்றது. ஏனென்றால் விவசாயிகளை ஒட்டுண்ணித்தனமாக சுரண்டுவதில் பெருமளவில் அதுவும் பங்கு பெறுகின்ற நிலையில், நிலப் பிரச்சினையிலேயே அது முற்றிலுமாக பிற்போக்கானதாக இருக்கிறது,. எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பலவீனத்தையும் ஏகாதிபத்தியத்திலேயே அது தங்கியிருப்பதையும் கணக்கிட்டுப் பார்க்கும் போது, அது ஆட்சிக்கான எதிர்வரும் போராட்டத்தில் ஒரு எதிர்ப் புரட்சி பாத்திரத்தை ஆற்றுவதற்கான விதியைக் கொண்டிருக்கிறது.”[10] அதிகாரத்துக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பின்னால் விவசாயிகளை, குறிப்பாக அதன் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டுக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு வழிமுறையாக, “இழப்பீடு தராமல் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது” என்பதில் தொடங்கி “உழுபவருக்கே நிலம் சொந்தம்”, “விவசாயத்துக்காக பெற்றுள்ள கடன்களை இரத்து செய்தல்” போன்ற சுலோகங்கள் உட்பட்ட கோரிக்கைகளின் ஒரு வரிசையை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி விரிவுபடுத்தியது.

5-6. 1920ல் ஸ்தாபிக்கப்பட்ட, ஸ்ராலினிசத்தால் முற்றிலுமாக சீரழிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றும் பாத்திரத்தை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. சீனாவில் போல், இந்திய தேசியக் காங்கிரஸில் உருவாகியிருந்த முதலாளித்துவத்தின் “புரட்சிகர” பகுதி என்றழைக்கப்பட்டதுடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கொமின்டேர்ன் (மூன்றாம் அகிலம்) 1920களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்தியது. காங்கிரஸை இடதுபக்கம் உந்தித்தள்ளும் நோக்குடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது சக்தியை ஒரு முதலாளித்துவ ஜனநாயக வேலைத்திட்டத்துடனான தொழிலாளர் மற்றும் விவசாயிகளைக் கொண்ட “இரு வர்க்க”க் கட்சிகளை கட்டியெழுப்புவதை நோக்கி மேலும் குவிமையப்படுத்தப்பட்டது. அதன் மூலம், அதன் வர்க்க சுயாதீனத்தை மேலும் அழித்துக்கொண்டதோடு தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்துக்காக காத்திரமாக நின்று போராட இலாயக்கற்றதாக குன்றிப் போனது. 1930களின் முற்பகுதியில், மூன்றாவது காலகட்ட வழியைப் பின்பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச-மென்ஷிவிக்குகளின் இரண்டு-கட்ட புரட்சி தத்துவத்திற்கு தொடர்ந்து வக்காலத்துவாங்குவதுடன் சேர்த்து இந்திய தேசியக் காங்கிரஸ் மீதான வெற்று வாய்ச்சவடால் கண்டனங்களைச் சேர்த்துக் கொண்டது. இரண்டாவதாக நடந்த பெரும் வெகுஜன அடிபணியாமை இயக்கத்தில் இருந்து மிகவும் தொலைவில் நின்ற அது, காங்கிரஸ் தலைமைத்துவத்தை நேரடியாக சவால் செய்ய மறுத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1930களில் மக்கள் முன்னணி பக்கம் திரும்பிய நிலையில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாக மிகவும் பகிரங்கமாக பண்பற்ற முறையில் புகழ்பாடியது. காங்கிரஸ் 1935 அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பாலான மாகாணங்களில் அமைச்சரவைகளை ஸ்தாபித்ததன் மூலம் காலனித்துவ ஆட்சியின் ஒரு பங்காளியாக ஆனபின்னரும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு செய்தது. 1930களின் பிற்பகுதி, காங்கிரஸ் அமைச்சரவைகளுடன் நேரடியாக மோதலுக்கு வந்த தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் மிக்க எழுச்சியையும் மற்றும் விவசாயிகள் சபைகள் (கிஸான் சபா) வேகமாக வளர்ச்சியடைந்தது உட்பட விவசாயிகளின் போராட்ட அலைகளையும் சந்தித்தது. ஸ்ராலினிஸ்டுகள் இத்தகைய இயக்கங்களை இந்திய தேசிய காங்கிரசிற்கு பின்னால் பிணைத்துவிடுவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை பொருளாதார கோரிக்கைகளுடன் மட்டுப்படுத்துவதற்கும், காங்கிரஸ் தலைமையுடன் மோதலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சி ஜமீன்தார் நிலப்பிரபுத்துவ முறையைத் தூக்கிவீச அழைப்புவிடுப்பதைக் கைவிடவும் முனைந்தனர்.

5-7. 1939 ஆகஸ்ட்டில் ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கை கையெழுத்தானதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்துக்கு எதிராக “ஜனநாயக” சக்திகளை ஆதரிப்பதில் இருந்து, யுத்தத்தை எதிர்ப்பதற்கு மாறிக்கொண்டது. 1941 ஜூனில், சோவியத் ஒன்றியத்தின் மீது நாஜிக்கள் படையெடுத்ததை அடுத்து இன்னுமொரு முறை தலைகீழாக மாறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டனுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்ததோடு தொழிலாள வர்க்கத்தினுள் வேலை நிறுத்தங்களை கலைப்பதில் பிரதானமாக செயற்பட்டதுடன், ஏகாதிபத்திய யுத்தத்துக்காக வக்காலத்து வாங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத்தை சாராம்சப்படுத்தி இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி பிரகடனம் செய்ததாவது: “இன்று இந்த நடத்தை, மிகவும் வெட்கக்கேடானதும், எல்லாவற்றையும் விட கொடூரமானதுமாகும். எதிர்ப்புரட்சிகர கிரேம்ளின் கும்பலுக்கு அடிமைத்தனமாக கீழ்ப்படிகின்ற காரணத்தால், அவர்கள் ஏகாதிபத்திய யுத்தத்துக்கு நிபந்தனையற்ற மற்றும் செயலூக்கமான ஆதரவைக் கொடுக்க பகிரங்கமாக வக்காலத்து வாங்குகிறார்கள். தேசிய முன்னணி என்ற தன் போலிக் கோட்பாட்டைக் கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரப் போராட்டத்தின் தலைமையை துரோகத்தனமான முதலாளித்துவ வர்க்கத்திடம் கையளிப்பதன் மூலம் சீனப் புரட்சியின் காட்டிக்கொடுப்பை மீண்டும் அரங்கேற்றுவதற்கு தயாராக உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அது ரஷ்ய புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்தான நன்மதிப்பை சுவீகரித்துக் கொள்ள முயற்சிக்கின்ற நிலையில், இன்று இந்திய தொழிலாள வர்க்கத்தினுள் அது மிக மிக ஆபத்தான செல்வாக்கினைக் கொண்டுள்ளது.[11]

5-8. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் (Congress Socialist Party - CSP) பக்கம் திரும்பிய இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அறிவித்ததாவது: “ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் முதலாளித்துவத்துக்கு முற்றுமுழுதாய் கீழ்ப்படிகின்ற ஒரு கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கின்ற இக்கட்சி இன்று தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதற்கு எந்தவொரு அடித்தளமும் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது. சுயாதீனமாக இருப்பதாக கூறிக்கொண்டதையும் கைவிட்டிருக்கின்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, அதற்குள் செயற்பட்ட கம்யூனிஸ்டுகளால் பெரிதாக பிளவுபட்டு, இன்று அரசியல் சாரம் எதுவுமில்லாத ஒரு வெற்று கூடாக இருக்கிறது.” அது வலியுறுத்தியது: “தான் திரட்டிக்கொண்டுள்ள வரலாற்று அனுபவங்களை, குறிப்பாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை, அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர மூலோபாயத்தைக் கொண்டு இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியால் மட்டுமே புரட்சிகர வெற்றியை நோக்கி தொழிலாள வர்க்கத்தை வழிநடத்த முடியும்.”[12]

5-9. நான்காம் அகிலம், ஏகாதிபத்திய சதிக்கும் தாக்குதலுக்கும் எதிராக சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்தமைக்கு இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி உறுதியான ஆதரவைக் கொடுத்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன், அமெரிக்க பகுதியான சோசலிசத் தொழிலாளர் கட்சியில் (Socialist Workers Party) மக்ஸ் சாக்ட்மன், ஜேம்ஸ் பேர்ன்ஹாம், மார்டின் எபெர்ன் ஆகியோர் தலைமையிலான ஒரு பகுதியினருக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை ட்ரொட்ஸ்கி முன்னெடுத்தார். அவர்கள், சோவியத் ஒன்றியம் யுத்தத்துக்குள் இழுபட்டுச் செல்லும் ஒரு நிகழ்வில் அதை தொடர்ந்தும் ஒரு தொழிலாளர்களின் அரசாக அதைக் கருத முடியாது, அதைப் பாதுகாப்பதற்காக நான்காம் அகிலம் அழைப்பு விடுக்கக்கூடாது என வாதிட்டனர். ஆயினும், சோவியத் ஒன்றியத்தின் மீது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும் அதன் காட்டிக்கொடுப்புகளதும் தாக்கம் இருந்தபோதும், அது ரஷ்யப் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயப்படுத்தப்பட்ட சொத்து உறவுகளிலேயே இன்னமும் தங்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் ஒரு “அதிகாரத்துவ கூட்டாண்மை” என்ற பேர்ன்ஹாமின் மறுவரையறைக்குப் பின்னால், சோவியத் ஒன்றியம் மார்க்சிசத்தால் முன்கணிக்கப்படாத, ஒரு நிர்வாக உயர்தட்டினால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற மற்றும் இயக்கப்படுகின்ற ஒரு புதிய வடிவிலான சமுதாயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்கிற அவநம்பிக்கையான முடிவு இருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தொழிலாளர் அரசின் ஒரு தற்காலிகமான புற்றுநோய் போன்ற மிகைவளர்ச்சியாகக் கருதுவதற்குப் பதிலாக சமூகத்தின் ஒரு நிரந்தரமான அம்சம் போல இவ்வாறு ஏற்றுக் கொள்வதென்பது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் ஏகாதிபத்திய சகாப்தத்தின் இயல்பு முதலாளித்துவத்தின் மரண ஓலமாக ஆகியிருப்பதை நிராகரிப்பதில் இருந்தும் தோன்றியிருந்தது. பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மன் அபிவிருத்தி செய்த வாதங்கள், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தோன்றிய மார்க்சிசத்துக்கு எதிரான நெடிய தாக்குதல்களுக்கு கட்டியம் கூறுவதாக இருந்தது. இவர்களது முடிவுகள் வேறுபட்டதாக இருந்தாலும் இந்த சகல திருத்தல்வாத குழுக்களும், அது “அரச முதலாளித்துவத்தின்” பல்வேறு தத்துவார்த்த வடிவங்கள் என்றாலும் சரி, அல்லது, மிஷேல் பப்லோவின் “அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு உருக்குலைந்த தொழிலாள அரசுகள்” என்ற தத்துவமென்றாலும் சரி, அவை ஸ்ராலினிச அரசுகள் வரலாற்று ஏற்புடைமையை கொண்டிருப்பதாகக் கருதியதோடு தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தி என்பதையும் நிராகரித்தன.


[9]

[ஜோர்ஜ் ஜான் லெர்ஸ்கியின் இலங்கையில் ட்ரொட்ஸ்கிஸத்தின் தோற்றம்: லங்கா சமசமாஜக் கட்சி பற்றி ஒரு வரலாற்று ஆவணம்,1935-1942, என்ற நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, ஹூவர் நிறுவன வெளியீடு, பக்கம் 206]

[10]

சார்ல்ஸ் வெஸ்லி எர்வின் எழுதிய, Tomorrow is Ours: The Trotskyist Movement in India and Ceylon, 1935–48 (நாளை நமது: இலங்கையிலும் இந்தியாவிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கம்) பக்கம் 300.

[11]

அதே நூல், பிற்சேர்க்கை, பக்கம் 304.

[12]

அதே நூல், பக்கம் 305.