Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

இந்தியப் பிரிவினை

9-1. இந்தியாவில், யுத்தத்தின் பின்னர் உடனடியாகத் தோன்றிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை கருவறுப்பதிலும் மற்றும் தெற்காசியா பூராவும் முதலாளித்துவ ஆட்சியை மீள ஸ்தாபிப்பதிலும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கொடுத்த ஆதரவுடன் காங்கிரஸ் மையமான பாத்திரத்தை ஆற்றியது. காங்கிரஸ் தலைமையானது, புதுப்பிக்கப்பட்ட இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம் தமது கட்டுப்பாட்டிலிருந்து நழுவி விடும் என மிரட்சியுற்றும், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிகண்டுவரும் போராட்ட அலையாலும் மற்றும் மன்னராட்சி நிலவிய மாநிலங்களில் வளர்ச்சியடைந்துகொண்டிருந்த அமைதியின்மையினாலும் கவலை கொண்டும், இந்தியப் பேரரசின் மீதான தனது பிடி தளர்ந்து போயுள்ளதை ஏற்கனவே புரிந்துகொண்டிருந்த பிரிட்டனுடன் சாத்தியமானளவு விரைவில் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றது. அவ்வாறு செய்ததன் மூலம், காங்கிரஸ் தனது சொந்த வேலைத்திட்டத்தின் பிரதான அம்சங்களையே கைவிட்டது என்பதுடன் பிரிட்டனுடன் மட்டுமன்றி, முஸ்லிம் லீக் மற்றும் இந்து மஹாசபை போன்ற இனவாத கட்சிகளுடனும், காலனித்துவ அரசுக்கு பழமைவாத அடித்தளத்தை அமைத்தளித்த ஜமீன்தார்கள் மற்றும் மன்னர்களுடனும் ஒரு உடன்படிக்கைக்கு சென்றது.

9-2. இந்தியாவில் முஸ்லிம் நிலவுடமையாளர்களது நலன்களையும் முதலாளித்துவவாதிகளது நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்த முஸ்லிம் லீக், 1940ல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் உள்ளடங்கிய ஒரு தனி பாகிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்தது. பிரிட்டன் தனது ஏகாதிபத்திய ஆட்சியின் பிரதான கருவியாக வகுப்புவாத பிரிவுகளை பயன்படுத்தியதன் காரணத்தால் முஸ்லீம் உயரடுக்கினை ஒரு தனியான அரசியல் சக்தியாக ஒழுங்கமைத்து வளர்த்தெடுத்திருந்தது. அந்த முஸ்லிம் உயரடுக்கு ஒரு ஐக்கியப்பட்ட இந்திய அரசுக்குள் தாம் ஓரங்கட்டப்படுவதையிட்டும் மற்றும் சமூக அமைதியின்மை வளர்ச்சியடைவதையிட்டும் அச்சமடைந்தது. தனியான முஸ்லிம் அரசுக்கான முஸ்லீம் உயரடுக்கின் கோரிக்கையானது, யுத்தத்துக்குப்-பின் தெற்காசியா மறு ஒழுங்கமைப்புக்கு உட்படும் என்பது ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில் அந்த மறுஒழுங்கமைப்பின் போது அரசியல் அதிகாரத்தில் தனக்கு கணிசமான பங்கினைக் கோருவதற்கும் அத்துடன் நாளுக்கு நாள் அமைதியின்மை பெருகி வந்த பரந்த மக்களை திசைதிருப்பி பிளவுபடுத்திப் பராமரிக்கும் பொருட்டு வகுப்புவாதத்தைக் கிளறுவதற்கும் அது பயன்படுத்திய வழிமுறையாக இருந்தது. இந்து மன்னர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் வர்த்தகர்கள் மத்தியில் காலூன்றியிருந்த இந்து மகாசபை, பிரிட்டன் உடனான தனது ஒத்துழைப்பை, முஸ்லிம் “மேலாதிக்கத்தை” எதிர்க்கும் வழிமுறையாக இனவாத அடிப்படையில் நியாயப்படுத்தியது. காங்கிரஸ் முஸ்லிகளை “திருப்திப்படுத்துவதாக” கூறி அதற்கு எதிராக அணிதிரண்ட இந்து மகாசபையினர், முஸ்லிம்கள் “இந்து தேசிய இனத்தில்” இருந்து வேறுபட்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு முழுக் குடியுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர். தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் அவர்களது பொது சமூகத் தேவைகளைச் சூழ அணிதிரட்டுவதை நோக்கித் திரும்புவது மட்டுமே இனவாதத்துக்கு எதிராக அரசியல் ரீதியில் போராடுவதற்கான ஒரே வழிமுறையாக இருந்தது. ஒட்டுமொத்த இந்திய முதலாளித்துவத்தினது அடிப்படை நலன்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்ற அத்தகைய ஒரு மூலோபாயத்துக்கு இயல்பிலேயே பகைமைகொண்ட காங்கிரஸ், மேலும் மேலும் வகுப்புவாத்திற்கு அடிபணிந்த அதேவேளை, வகுப்புவாதப் பிரிவினையை வெகுஜனங்கள் பூரணமாக எதிர்த்த சமூகப் போராட்டங்களை கட்டுப்படுத்தி நசுக்கியது. 1945-46 தேர்தல்களில், வங்காளத்திலும் ஏனைய இடங்களிலும் இந்து மகாசபையுடன் தேர்தல் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள விரைந்த காங்கிரஸ், இந்து மகாசபை உறுப்பினர்களை தமது உறுப்பினர்களாக வரவேற்றது.

9-3. யுத்தத்துக்குப் பிந்திய ஏகாதிபத்திய-எதிர்ப்பு எழுச்சியானது ஆரம்பத்தில், இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தை கொடூரமாக நசுக்கியதையும் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐ.என்.ஏ.) தலைவர்களை விசாரணை செய்வதையும் எதிர்க்கும் வடிவத்திலேயே தோன்றியது. ஒரு போர்க்குணமிக்க காங்கிரஸ் தலைவரான சுபாஸ் சந்திர போஸ், காந்தியை எதிர்த்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட முயற்சித்த போதிலும், அவர் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பாமல், ஒரு எதிர் ஏகாதிபத்திய சக்தியின் பக்கமே திரும்பினார். ஜப்பானிய இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இந்தியச் சிப்பாய்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்திய தேசிய இராணுவத்திற்கு (INA) தலைமையேற்கவும் ஜப்பானியத் தலைமையின் கீழ் பிரிட்டிஷாருக்கு எதிராகச் சண்டையிடுவதற்கும் அவர் உடன்பட்டார். அவர்களது குறிக்கோள்கள் பிழையாக வழிநடத்தப்பட்ட போதிலும், இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்கள் பரந்தளவில் வீரர்களாகவும் தேசாபிமானிகளாகவும் கருதப்பட்டதோடு, அவர்களுக்கு பொதுமன்னிப்பு காட்டுமாறு அழைப்பு விடுத்து இந்தியா பூராவும் வெடித்தெழுந்த போராட்டங்கள் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களையும் ஐக்கியப்படுத்தின. 1945 நவம்பரிலும் மற்றும் மீண்டும் 1946 பெப்பிரவரியிலும் கல்கத்தாவில், இந்திய தேசிய இராணுவத்தின் மீதான விசாரணைகளுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் அமைப்புக்களுடன் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி நெருக்கமாகத் தலையிட்டது. கட்டுப்பாடின்மைக்கும் மற்றும் ஒழுங்கின்மைக்கும் எதிரான போராட்டம் என்ற பெயரில் கூட்டங்களை கலைத்து விடுவதில் காங்கிரசுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கைகோர்த்துக்கொண்ட அதேவேளை, இந்த ஆர்ப்பாட்டங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் வன்முறையால் நசுக்கப்பட்டன.

9-4. 1946 பெப்பிரவரியில், பம்பாயிலும் கராச்சியிலும் இந்தியக் கடற்படை பகுதியினர் சம்பளம் மற்றும் வேலைநிலைமைகள் தொடர்பாக கிளர்ச்சி செய்த அதே வேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய், இந்தோனேஷியாவில் இருந்து பிரிட்டிஷ் இந்திய துருப்புக்களை திருப்பி அழை மற்றும் “இந்தியாவில் இருந்து வெளியேறு” போன்றவை உட்பட ஒரு வரிசையான தீவிர அரசியல் கோரிக்கைகளை எழுப்பினர். அவர்களது நடவடிக்கை, ஏனைய இந்திய இராணுவப் படைப்பிரிவுகளின் ஒத்துழைப்பையும் கிளர்ச்சியையும் காட்சிக்குக் கொண்டுவந்ததோடு, இறுதியில் பம்பாயில் பெரும் தொழிலாளர் நடவடிக்கைகளுக்கும் வீதி மோதல்களுக்கும் தூண்டுதலளித்தது. அந்த எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காக படைகளைப் பயன்படுத்துவதற்கு காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் பிரிட்டனுக்கு ஆதரவளித்தன. குறிப்பாக காந்தி கடற்படை (Royal Indian Navy) கிளர்ச்சியாளர்களை கண்டனம் செய்வதிலும் மற்றும் அவர்களது போராட்டத்தின் பண்பாக இருந்த மதப்பாகுபாடு கடந்த ஐக்கியத்தின் பொருட்டும் கடும் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார். “மந்தைக் கும்பலின்” வெற்றியைக் காண்பதை விட “தீயில் எரிந்து சாகவே விரும்புவேன்” எனக் கூறிய காந்தி, “வன்முறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனையவர்களுக்கு இடையிலான ஏற்படக்கூடிய ஒருமைப்பாடு தூய்மையற்றது,” எனப் பிரகடனம் செய்தார். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்களுக்கும் பொது வேலைநிறுத்தத்துக்கும் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அழைப்புவிடுத்த அதேவேளை, ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி “பெருந்திரள் வெறி” என அதைக் கண்டனம் செய்ததுடன் கிளர்ச்சிக்கு பரந்த ஆதரவு கிடைப்பதை தடுக்க முயற்சித்தது. காங்கிரஸ் வெகுஜன இயக்கங்களுக்கு கடிவாளமிட்ட ஏனைய ஒவ்வொரு சமயத்திலும் போலவே, இக்கிளர்ச்சியின் தோல்வியை அடுத்தும் வகுப்புவாதம் தலைநீட்டியது. 1946 ஆகஸ்ட்டில் தனது “பாகிஸ்தான்” கோரிக்கைக்கு ஆதரவாக “நேரடி நடவடிக்கைக்கு” முஸ்லிம் லீக் விடுத்த ஒரு அழைப்பு, கல்கத்தாவில் இந்துக்களுடனான வன்முறை மோதல்களில் முடிவடைந்தது. இதில் 6,000 பேர் உயிரிழந்ததோடு அதற்குப் பதிலடியாக முஸ்லிம்கள் மீதான இந்து இனவாத அட்டூழியங்களும் தூண்டிவிடப்பட்டன.

9-5. யுத்தத்துக்குப் பிந்திய எழுச்சிகள் ஒரு தொழிற்சங்க நடவடிக்கைகளின் அலையையும் தூண்டிவிட்டன. இவற்றில் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி உக்கிரமாக தலையீடு செய்ததோடு கணிசமானளவு ஆதரவையும் பெற்றிருந்தது. 1946 ஜூனிலும் மற்றும் மீண்டும் 1947 மார்ச்-ஜூனிலும், மெட்ராஸ் லேபர் யூனியனின் (எம்.எல்.யூ.) தலைமையை வென்ற போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி, இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றான, சென்னையில் இருக்கும் பக்கிங்ஹாம் அன்ட் கர்னாட்டிக் (பி அன்ட் சி) நெசவாலைகளில் பெரும் வேலைநிறுத்தங்களுக்கு தலைமை வகித்தது. 1947 வேலைநிறுத்தம் ஒரு கடுமையான மூன்று மாதகால போராட்டமாகும். இதன்போது பாரிய பேரணிகளும், 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறிய வர்த்தகர்களும் பங்கெடுத்த வேலைநிறுத்தங்களும் நடந்தன. ஜூனில், தொழிற்சங்கம் சட்டவிரோதமாக்கப்பட்டு, அதன் நிதிகள் அபகரிக்கப்பட்டு, தலைவர்கள் கைது செய்யப்பட்ட போதும், பி அன்ட் சி ஆலைகளை திறக்க அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்விகண்டது. முடிவில் மெட்ராஸ் லேபர் யூனியன் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்ட போதிலும், முக்கியமான சலுகைகளை வழங்க நிர்வாகத்தை தள்ளியிருந்தது.

9-6 போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி வகுப்புவாத அரசியலுக்கும் தனி முஸ்லிம் பாகிஸ்தானுக்கான கோரிக்கைக்கும் எதிராக ஒரு கொள்கைரீதியான நிலைப்பாட்டை எடுத்தது. 1944ல் நடந்த போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மாநாட்டின் தீர்மானமொன்று பிரகடனம் செய்ததாவது: “இந்த கோஷமானது அரசியல்ரீதியில் பிற்போக்கானதும் தத்துவார்த்தரீதியில் பிழையானதுமாகும். முஸ்லிம் வெகுஜனங்களின் வளர்ச்சியடைந்துவரும் அதிருப்தியை, அவர்களின் உண்மையான எதிரியான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் உள்நாட்டு பங்காளிகளுக்கு எதிராய் செலுத்தப்படுவதில் இருந்து திசைதிருப்பி இந்துக்களுக்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற நோக்குடன் வகுப்புவாத உணர்வுகளுக்கு அழைப்புவிடும் முயற்சியை உள்ளடக்கியிருக்கின்றது என்னும் வகையில் இது அரசியல்ரீதியில் பிற்போக்கானதாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் ஒரு தேசிய இனம், அவர்கள் இந்து என்ற தேசிய இன மக்களால் ஒடுக்கப்படுகின்றனர் (இதுவும் அதே அளவுக்கு பிழையானது) என்ற தாக்குப்பிடிக்கவியலாத ஒரு கருத்தில் இருந்து இது தோன்றுவதால் தத்துவார்த்தரீதியாகவும் போலியானது. பொது வரலாற்று பாரம்பரியம், மொழி, கலாச்சாரம், அல்லது இனம், அல்லது புவியியல்ரீதியான மற்றும் பொருளாதார காரணிகளைப் பொறுத்தளவில் எடுத்துக்கொண்டாலும், ஒரு தனித்துவமான முஸ்லிம் தேசிய இனமொன்று எழுவதற்கான அடிப்படை எதுவும் கிடையாது. மதம் மட்டுமே (அதனைச் சூழ அமைகின்ற எந்தவொரு கலாச்சார பொதுக் கூறையும் சேர்த்து) அவர்களை ஐக்கியப்படுத்துகின்ற ஒரே காரணியாகும். அனைத்து வரலாற்று அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், ஒரு தேசிய நனவினை அடக்கிய எந்தவொரு உணர்ச்சியையும் உருவாக்க இந்த ஒரு காரணி மட்டுமே போதுமானதல்ல என்பது தெள்ளத்தெளிவான விடயமாகும். [17]

9-7. எவ்வாறெனினும், பிரிட்டன் மற்றும் அதன் மன்னர்கள் மற்றும் நிலப்பிரபு பங்காளிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு துரிதமாக காங்கிரஸ் நகர்ந்தது. காங்கிரஸ் தலைமை தனக்கு ஆதரவு திரட்டிக்கொள்வதற்காக இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்துடனான அதன் தொடர்பை சுரண்டிக்கொண்ட அதே வேளையில், காந்தியும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டதை அடுத்தும் யுத்தத்துக்குப் பிந்திய சமூகப் போராட்டங்கள் வளர்ச்சியடைந்ததாலும் இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம் தீவிரமய திருப்பத்தை எடுத்ததானது, காங்கிரஸ் தலைமையை,

பிரிட்டிஷ் ஆட்சிக்கு சவால் விடுகின்றதான எந்தவொரு மக்கள் போராட்டத்துக்கும் தலைமை வகிக்க விரும்பாத நிலைக்கும் முதலாளித்துவ ஆட்சியை சாத்தியமானளவு விரைவில் ஸ்திரப்படுத்தும் பொருட்டு காலனித்துவ அரசில் பங்குபெறுவதற்கும் தீர்மானம் கொண்டதாக ஆக்கியது. இதன் விளைவாக, முழுமையான சுதந்திரத்துக்கான தமது கோரிக்கையை கைவிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பிரிட்டனுடனான பிணைப்பு தொடர்ந்தும் அப்படியே இருக்க, ஒரு டொமினியன் அந்தஸ்தை (Dominion status) ஏற்றுக்கொண்டனர். அவர்கள் முழுமையான சர்வஜன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்புச் சபைக்கான தமது கோரிக்கையையும் கைவிட்டதோடு மன்னர்களதும் நிலப்பிரப்புக்களதும் ஆட்சியை தீவிரமாக சவால்செய்வதை தவிர்க்க முயன்றனர். மிகவும் அடிப்படையாய், ஐக்கியப்பட்ட மற்றும் மதச்சார்பற்ற இந்தியா என்ற தனது வேலைத்திட்டத்தையும் கைவிட்ட காங்கிரஸ், துணைக்கண்டத்தை வகுப்புவாத முறையில் பிரிப்பதை ஏற்றுக்கொண்டு அமுல்படுத்தியது. வங்காளத்தையும் பஞ்சாப்பையும் முழுமையாக பாகிஸ்தானுக்குள் உள்ளடக்குமாறு முஸ்லிம் லீக் நெருக்கிய அதேவேளை, காங்கிரஸ் இந்த இரு மாகாணங்களையும் வகுப்புவாத ரீதியில் பிரிப்பதற்கு பரிந்துரைத்ததுடன், இந்து மகாசபையின் முன்னாள் தலைவரும் ஜன சங்கத்தின் (பின்னர் அது பாரதீய ஜனதா கட்சி [பி.ஜே.பி.]) எதிர்கால ஸ்தாபகருமான எஸ்.பி. முகர்ஜீ உள்ளிட்ட, மோசமான வகுப்புவாத சக்திகளுடன் சேர்ந்து செயற்படுவதையிட்டு எந்தவித மனக்கிலேசமும் கொள்ளவில்லை. பஞ்சாப்பிலும் மற்றும் வங்காளத்திலும் முஸ்லிம் “மேலாதிக்கத்திடம்” இருந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் “பாதுகாப்பதற்கான” காங்கிரசின் பிரச்சாரம், 1947 பிரிவினையின் போது இடம்பெற்ற வகுப்புவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதில் ஒரு பிரதான காரணியாக இருந்தது. இதில் இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 12-14 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

9-8. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவியும் ஊக்குவிப்பும் கொடுத்தது. முதலில் காங்கிரஸ் வடிவத்திலும், பின்னர், பிரிட்டன் ஆட்சியின் கடைசி வருடங்களில் வகுப்புவாதத்தின் எழுச்சிக்கும், மேலும் முஸ்லிம் லீக்குக்கும் அடிபணிந்ததன் மூலம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை இந்திய முதலாளித்துவத்துக்கு கீழ்ப்படியச் செய்தது. பாகிஸ்தான் சுலோகத்தை முஸ்லிம் சுயநிர்ணய உரிமையின் நியாயமான வெளிப்பாடாக அறிவித்து அதற்கு அரசியல் நியாயத்தன்மையை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் முஸ்லிம் லீக்குக்கு ஒரு சமூகத் தளத்தைக் கட்டியெழுப்புகின்ற வகையில் தன் உறுப்பினர்களை லீக்குக்குள் அனுப்பியது. 1945 மற்றும் 1947க்கு இடையில் காங்கிரசும் முஸ்லிம்லீக்கும் வகுப்புவாத தீயிற்கு எண்ணெய் வார்த்த நிலையில், அந்தப் போட்டி முதலாளித்துவ கட்சிகள் ஒன்றுபட்டு தேசியப் புரட்சிக்கு தலைமை கொடுக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரயோசனமற்ற அழைப்புகளை விடுத்தது.

9-9. இந்தப் பிரிவினை முதலாளித்துவ இந்தியா மற்றும் முதலாளித்துவ பாகிஸ்தான் அவதாரங்களை “விடுதலை” மற்றும் “சுதந்திரம்” என்று வரையறுத்தது, வரையறுக்கின்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பிறப்புடன் சேர்ந்தே நடைபெற்ற இனப்படுகொலைகள், ஜனநாயகப் புரட்சி கருக்கலைக்கப்பட்டதன் மிகவும் இரத்தக்களரி மிக்க உடனடி வெளிப்படையான பின்விளைவு மட்டுமேயாகும். இந்த புதிய அரசுகள் ஜமீன்தார்களின், மன்னர்களின் மற்றும் பெரும் வர்த்தகர்களின் சொத்துக்களைப் பாதுகாத்தன; முதலாளித்துவ அபிவிருத்திக்கு வழிவகை செய்கின்ற நோக்கத்துடன் கையளவேயான அற்ப, துண்டு துண்டான சீர்திருத்தங்களில் அநேகமானவற்றை ஏற்றுக்கொண்டன; பிரிட்டன் காலனித்துவ அரசின் பிரதான ஸ்தாபகங்களையும் சட்டங்களையும் தொடர்ந்தும் வைத்துக் கொண்டன. ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னும், வெகுஜனங்களின் உடனடி ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. அதற்கு மாறாக நிலவுடமை, சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஏனைய நிலப்பிரபுத்துவ எச்சங்கள் முதலாளித்துவ சுரண்டலுடன் மேலும் மேலும் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், அந்தப் பிரச்சனைகள் மேலும் ஆபத்தான முறையில் வளர்ச்சி கண்டுள்ளன.

9-10. இந்தப் பிரிவினை “வகுப்புவாதப் பிரச்சினைகளை” தீர்ப்பதற்கெல்லாம் தூரத்தில், தெற்காசியாவின் அரச கட்டமைப்பினுள் வகுப்புவாதப் பிளவுகளை புனிதப்படுத்தியதன் மூலம் அதை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்துத்துவ கருத்தியல்வாதியான வி.டி. சவார்கரின் விசுவாசி ஒருவரால் 1948 ஜனவரியில் காந்தி கொலைசெய்யப்பட்ட பின்னர், கல்கத்தாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா விளக்கியதாவது: “பிரிவினையின் துன்பமானது குறிப்பாக அதனை வடிவமைத்தவர்களது பிரகடனப்படுத்தப்பட்ட குறிக்கோளில் இருந்து ஊற்றெடுக்கின்றது. ஒருபுறம் இந்தியாவின் உயிருள்ள சரீரத்தை துண்டுபோட்டமை இன்னொருபுறம் இரு உயிருள்ள “தேசிய இனங்களை” (பஞ்சாப் மற்றும் வங்காள மக்கள்) துண்டுபோட்டமை, ஒருபக்கத்தில் வகுப்புவாதப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவும் மறுபக்கத்தில் சுதந்திரத்துக்கான பாதையை திறப்பதற்கான வழிமுறையாகவும் முன்வைக்கப்படுகின்றது. இரு கூற்றுக்களுமே போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிவினையானது ஒரு அம்சத்தில் வெகுஜனங்களை ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்துகின்ற சங்கிலியை மீண்டும் பிணைப்பதற்கான ஒரு வழிமுறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது... இன்னொரு அம்சத்தில், மக்கள் கிளர்ச்சியை உள்முகமான வகுப்புவாத உணர்வுகளுக்குள் திருப்பிவிடும் ஒரே வழிமுறையாக பரஸ்பர யுத்தச் சிந்தனைக்குள் இரு நாடுகளையும் வசப்படுத்தும் வழிமுறையாக அது நிரூபிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இன்னமும் வராமல் இருக்கலாம் (அது காஷ்மீர் மற்றும் ஜனாகாத்தில் ஏற்கனவே வந்துவிட்டிருக்காத பட்சத்தில்). ஆனால், உள்நாட்டு அமைதியின்மை அழிவுகரமான முறையில் வெளித்தோன்றியுள்ளது.”

9-11. டி சில்வாவின் எச்சரிக்கைகள் தீர்க்கதரிசனம் போல் நிரூபணமாயின. இந்தப் பிரிவினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிற்போக்கு பூகோள-அரசியல் போராட்டங்களை வளர்ச்சியடையச் செய்துள்ளது. இது மூன்று பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தங்களையும் எண்ணிலடங்கா யுத்த நெருக்கடிகளையும் முக்கிய பொருளாதார வளங்களின் அழிவையும் விளைவாக்கியதோடு, இன்று அணுவாயுத மோதல் ஆபத்தைக் கொண்டு தெற்காசிய மக்களை அச்சுறுத்துகின்றது. 1947-48 இல் நடந்த முதலாவது இந்திய-பாக்கிஸ்தான் யுத்தம், பிளவுபட்ட ஒரு காஷ்மீரை உருவாக்கியது. இது காஷ்மீர் மக்களை இரக்கமின்றி பிளவுபடுத்தியுள்ளதோடு, வகுப்புவாத ரீதியில் பிரிக்கப்பட்ட துணைக்கண்டத்தின் கட்டமைப்பினுள் எளிதில் கையாளமுடியாத ஒரு அரசியல் பிரச்சினையாகவும் நிரூபணமாகியுள்ளது. எண்ணற்ற சமூகப் பதட்டங்களில் எதையும் தீர்க்க இலாயக்கற்ற இரு நாடுகளையும் சேர்ந்த ஆளும் தட்டுக்கள், உள்நாட்டில் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக வகுப்புவாத வார்த்தைஜாலங்களை நாடுவதை வழமையாகக் கொண்டுள்ளன. நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது உள்ளிட பகுத்தறிவுடனான பொருளாதார அபிவிருத்தியை கிட்டவிடாமல் செய்வதன் மூலமும், அமெரிக்காவும் மற்ற பெரும் சக்திகளும் ஒரு நாட்டின் ஆளும் உயரடுக்கினை இன்னொரு நாட்டின் ஆளும் உயரடுக்கிற்கு எதிராய் நிறுத்தி விளையாடுவதற்கு வசதியளிக்கின்ற ஒரு அரசியல் இயங்குமுறையை வழங்கியிருப்பதன் மூலமும் பிரிவினையானது தெற்காசியாவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு வழிவகை செய்திருக்கிறது. இன்று உலகில் வறியவர்கள் அதிகளவில் குவிந்துகிடக்கும் பகுதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியில் மிகக்குறைந்த ஒருங்கிணைவைக் கொண்ட பகுதியாகவும் தெற்காசியா உள்ளது.


[17]

[www.marxists.org]