Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் அது போரில் இறங்குவதும்

21-1. இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் வருகை பரந்த உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுப்போக்குகளின் ஒரு பாகம் ஆகும். 1968-1975 காலகட்டத்தின் புரட்சிகரப் போராட்ட அலை தோல்வியடைந்ததை அடுத்து, ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிர்த்தாக்குதலை தொடுத்தன. 1979ல் பிரிட்டனில் தாட்சர் அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 1980ல் அமெரிக்காவில் ரீகன் அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இதனை அரசியல்ரீதியாக குறித்தன. அடுத்து வந்த வருடத்தில் ரீகன், ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஓ.வின் (AFL-CIO) சம்மதத்துடன், 11,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களை பதவிநீக்கி பட்கோ வேலைநிறுத்தத்தை நசுக்கினார். உலகெங்கிலுமான அரசாங்கங்களுக்கு புதிய அடையாளமாக, பணச்சுற்றோட்ட, சந்தை-சார்புக் கொள்கைகள் கீனிசியப் பொருளாதார ஒழுங்கமைப்பை மாற்றீடு செய்தன. கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் தொடங்கி, மலிவு உழைப்புக் களங்களை உருவாக்குவதை நோக்கிய ஒரு திருப்பம் உண்டானது. 1980களில் ஆசியப் “புலிகளாக” ஆகவிருந்த சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தைவான் ஆகிய அனைத்து நாடுகளுமே தங்களது குறைந்த ஊதிய உழைப்பினை அனுகூலமாக எடுத்துக் கொள்ளும் பொருட்டு அந்நிய முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வாரிவழங்கின. சீனாவில் டெங் ஜியாவோ பிங் 1978ல் தனது பகிரங்கமான சந்தை-சார்பு வேலைத்திட்டத்தை அறிவித்தார்.

21-2. இலங்கையில் இந்தக் கொள்கைகளை தழுவுகையில், சிறிமாவோ பண்டாரநாயக்கா தற்காலிகமாக ஒரு சுதந்திர சந்தை நிகழ்ச்சிநிரலை நோக்கித் திரும்பியதால் தூண்டப்பட்ட 1975-1977 எழுச்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி திட்டவட்டமான முடிவுகளை வரைந்திருந்தது. பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கவும், சமூகச் செலவினங்களை வெட்டவும், தனியார்மயமாக்கங்களை மேற்கொள்ளவும் தொடங்கிய நிலையில், அரசு எந்திரத்தை பலப்படுத்துவதன் மூலமும் தனது சொந்த சமூக அடித்தளத்தை பலப்படுத்திக்கொண்டு தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த வகுப்புவாத பதட்டங்களை உச்சத்திற்குக் கொண்டுசெல்வதன் மூலமும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலுக்கு தயாரானார். 1978ல் நாடாளுமன்றத்தில் தனது அறுதிப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு அரசியலமைப்பைத் திருத்தி எழுதிய ஐக்கிய தேசியக் கட்சி, பெருமளவிலான ஜனநாயக விரோத அதிகாரங்களுடன் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஸ்தாபித்ததோடு ஜெயவர்த்தனாவை ஜனாதிபதியாக அமர்த்தியது. அரசாங்கம் 1979 ஜூலையில், கைது செய்து விசாரணையின்றி சிறைவைத்திருக்கக் கூடியளவு அதிகாரத்தை பொலிசுக்கு வழங்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை திணித்தது.

21-3. தேர்தலின் போது தமிழ் மக்களின் துயரங்களை நிவர்த்தி செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதியளித்திருந்த போதிலும், ஜெயவர்த்தனா துரிதமாக தமிழர்-விரோத இனவாதத்தை நோக்கித் திரும்பினார். 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு தனியான ஒரு ஈழத் தமிழ் அரசுக்கு அழைப்பு விடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. தாம் முகங்கொடுத்த பாரபட்சங்களால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் நிலவிய சீற்றம், பல்வேறு சிறிய ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்கு வழி வகுத்தது. ஜெயவர்த்தனா யாழ்ப்பாணத்திற்குள் இராணுவத்தை அனுப்ப உத்தரவிடவும் எல்லா இடங்களிலும் திட்டமிட்ட இனப்படுகொலைகளை ஊக்குவிக்கவும் 1977 ஆகஸ்டில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட ஒரு சிறு தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டார். தமது தேர்தல் வெற்றிகள் ஒரு தனி ஈழத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உரிமையை அளித்திருப்பதாக வலியுறுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணியை அரசாங்கம் கண்டனம் செய்தது. “உங்களுக்கு ஒரு போர் வேண்டுமானால், போர் நடக்கும்”, என பிரதமர் பாராளுமன்றத்தில் ஆத்திரமூட்டும் விதத்தில் பிரகடனம் செய்தார். உள்நாட்டுப் போருக்குள் துரிதமாக இறங்குவதற்கான முன்மாதிரியை ஜெயவர்த்தனா அமைத்தார். ஒவ்வொரு கட்டத்திலும், பொலிஸ் மீது ஆங்காங்கே நடத்தப்பட்ட தாக்குதல்களை சுரண்டிக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான பிரமாண்டமான அரசு ஒடுக்குமுறை மற்றும் படுகொலைகள் மூலம் பதிலிறுத்தது.

21-4. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) இடைவிடாது பிரச்சாரம் செய்து வந்துள்ளது. தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதற்கும் துரிதமாக உள்நாட்டுப் போருக்கு இழுபட்டுச் செல்வதை தடுப்பதற்கும் இலாயக்கான ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வலியுறுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்டு ஸ்ரீ.ல.சு.க., லங்கா சம சமாஜ கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியாலும் ஆதரிக்கப்பட்ட இனவாதப் பிற்போக்குச் சூழ்நிலையில், பு.க.க. அவசியமான கணிசமானளவு உத்வேகத்துடன் நின்றது. 1979ல் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்ததற்காக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்த பொலிசுடன் செயற்பட்ட குண்டர்களால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னணி உறுப்பினரான ஆர்.பி. பியாதாச கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

21-5. 1980 ஜூலையில், ஊதிய உயர்வு கோரி ஒரு பரந்த பொது வேலைநிறுத்த இயக்கம் வெடித்த சமயத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தனியார்மயமாக்கம் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான எதிர்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்தது. ஜனாதிபதி ஜெயவர்த்தனா, உடனடியாக அந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானதாக அறிவித்ததோடு வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் பதவிநீக்கம் செய்வதாகவும் அச்சுறுத்தினார். லங்கா சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்த வேலைநிறுத்தம் “அரசியல்-சார்பற்றது” ஒன்று என அறிவித்ததோடு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின அவசரகாலநிலை அதிகாரங்களை சவால் செய்யவோ அதனைப் பதவியிறக்க அழைப்பு விடவோ மறுத்தன. புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சித் தலைவரான பாலா தம்பு, தனது சி.எம்.யு. தொழிற்சங்கத்தை வேலைநிறுத்தத்தில் இறங்க அழைக்கவில்லை. நவ சம ஜசமாஜக் கட்சி, இந்த வேலைநிறுத்தம் வெறும் சம்பளப் பிரச்சினை தான் என்று அறிவித்ததோடு அதனை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் இயக்கமாக மாற்றுவதற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொடுத்த பிரச்சாரத்தை கசப்புடன் விமர்சித்தது. இந்தத் தலைமைகளின் துரோகத்தின் விளைவாக, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது ஏறக்குறைய எந்த எதிர்ப்புமே இல்லாமல் 100,000 பொதுத்துறை ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிந்தது, இதன்மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீது அழிவுகரமான தோல்வி திணிக்கப்பட்டது.

21-6. இலங்கைத் தொழிலாள வர்க்கம் கடைசியாக மேற்கொண்ட பெரும் வேலைநிறுத்தமான அந்த 1980 பொது வேலைநிறுத்தத்தின் தோல்வியே முழு அளவிலான உள்நாட்டுப் போருக்குக் கதவைத் திறந்தது. எந்தவொரு அரசியல் சவால் அல்லது நெருக்கடிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பதிலிறுப்பு தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை நாடுவதாக இருந்தது. அது 1983 ஜூலையில் நடந்த படுபயங்கரமான இனப்படுகொலையில் உச்சகட்டத்தை அடைந்தது. தமிழ் போராளிகள் 13 படையினரை கொன்றதை அடுத்து, அந்த சடலங்களை கொழும்புக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வேண்டுமென்றே இன துவேஷத்தை பற்றவைத்தது. அடுத்த நாளில், ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்கள் முன்னிலை வகித்த, தமிழர்-விரோத வன்முறைகள் தீவு முழுவதிலும் முன்கண்டிராத வகையில் வெடித்தது. தமிழர்களின் வீடுகளும் கடைகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அரசாங்கமும் பொலிசும் நான்கு நாட்களுக்கு இந்த வெறியாட்டம் தடையில்லாமல் தொடர அனுமதித்ததோடு எந்த செய்தியும் வெளியாவதை தடுக்க கடுமையான தணிக்கையையும் அமுல்படுத்தியது.

21-7 இந்தக் கொடூரமான இனப்படுகொலை, அடுத்த கால் நூற்றாண்டு காலமும் நாட்டைச் சீரழிக்கவிருக்கும் ஒரு முழு அளவிலான உள்நாட்டுப் போருக்கான தொடக்கத்தைக் குறித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது ஆகஸ்ட் 4 அன்று, ஒரு போர்ப் பிரகடனமாக காணத்தக்க வகையில், தனி ஈழத்தைப் பரிந்துரைப்பதை தடை செய்கின்ற மற்றும் அனைத்துப் பொது ஊழியர்களின் மீதும் விசுவாச உறுதிமொழியை திணிக்கின்ற ஆறாவது அரசியல்சட்டத் திருத்தத்தை திணித்தது. இந்த உறுதிமொழியை எடுக்க மறுத்ததால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இழந்தனர். 1983 டிசம்பருக்குள்ளாக, யாழ்ப்பாண குடாநாடு ஒரு “போர் வலயமாக” அறிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள், பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களில் சேருவதற்கு ஆயிரக்கணக்கில் அணிதிரண்டனர்.

21-8. இந்தப் படுகொலையின் போது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் குறிப்பாக தாக்குதலின் இலக்கானது. கம்கறு மாவத்த ஆசிரியர் கே. ரட்நாயக்காவின் வீடு எரித்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் கட்சியின் அச்சகத்தை தரைமட்டமாக்குவதற்கான முயற்சியும் மயிரிழையில் தடுக்கப்பட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அரசாங்கத் தணிக்கையை எதிர்த்தது. அது அரசாங்கத்தையும் எதிர்க்கட்சிகளையும் குற்றஞ்சாட்டியும், தமிழ் மக்களைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. பு.க.க. போரை எதிர்த்ததோடு லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தினதும் உடந்தையை அம்பலப்படுத்தியதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறக் கோரியது. 1984 மே மாதத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக செய்தித்தாள்களுக்கு சட்டரீதியாகப் பொறுப்பு வகித்த ஆனந்த வக்கும்புர. ஆறாவது சட்டத்திருத்தத்தை மீறியதாகக் கூறி பொலீசாரால் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பு.க.க.வின் சக்திவாய்ந்த பிரச்சாரத்தை எதிர்கொண்ட அரசாங்கம், வக்கும்புற மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கிக் கொண்டது.