Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் , தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் தேசியப் பிரச்சினை

22-1. ஆரம்பம் முதலே தேசியப் பிரச்சினை சம்பந்தமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) நிலைப்பாடானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழிலாள வர்க்க சர்வதேசியவாதத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தொழிலாளர்களை ஒரு வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதன் பேரில், கட்சி இடைவிடாமல் தேசியவாதம், மதவாதம் மற்றும் இனவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராக போராடி வந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான உத்தியோகபூர்வ இனப்பாகுபாட்டின் மேலும் மேலும் பட்டவர்த்தனமான வடிவங்களை அது உத்வேகத்துடன் எதிர்த்ததோடு அவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்தது. 1970களின் ஆரம்பத்திலே தீவின் வடக்குக்கு அனுப்பப்பட்ட துருப்புகளை திரும்பப் பெறுமாறு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அறைகூவல் விடுத்ததுடன் போர் நடைபெற்ற காலம் முழுவதும் இதை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை தவிர்த்து, 1972 அரசியலமைப்பை எதிர்த்தது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே. அரசாங்க அச்சக தொழிற் சங்கத்தில் இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக குழு, அரசியலமைப்பை எதிர்த்து முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, லங்கா சம சமாஜக் கட்சி அலுவலர்கள் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிரான ஒரு வேட்டையாடலை செய்தனர்.

22-2. தமிழ் இளைஞர்கள் தீவிரமயமாவது வளர்ச்சியடைந்து வந்த நிலைமையில், 1972 ஜூனில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அறிவித்ததாவது: “தமிழ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை மார்க்சிஸ்டுகளாகிய நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே சமயம், இவ்வுரிமையை அங்கீகரிக்கின்ற மற்றும் சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலம் மட்டும் அந்த உரிமையை வெற்றிகொள்ள முடியும் என நாம் வலியுறுத்துகிறோம்.”[51] தேசியப் பிரச்சினை பற்றி லெனின் எழுதிய வழியில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு தனித் தமிழ் அரசை பரிந்துரைக்கவில்லை, மாறாக, அவ்வாறு செய்வதற்கு தமிழர்களுக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாத்து நின்றது. முதலாளித்துவ தமிழ் அரசியல்வாதிகளின் மோசடியை அம்பலப்படுத்துவதற்கும் ஒட்டுமொத்தமாக இலங்கை மற்றும் இந்தியத் துணைக் கண்டத்திற்கான ஒரு சோசலிச முன்னோக்கிற்கு தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வென்றெடுப்பதற்குமான ஒரு வழிமுறையாகவே இந்தக் கொள்கை இருந்தது.

22-3. ஆயினும், 1972ல் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கூட்டமொன்றில், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிலைப்பாட்டை ஆவேசமாக எதிர்த்தது. சுய நிர்ணயத்திற்கான தமிழ் மக்களின் உரிமைக்கு ஆதரவளிப்பதென்பது தீவைத் துண்டாட நினைக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டங்களுக்கே உதவும் என பண்டா வாதிட்டார். 1971ல் கிழக்கு பாகிஸ்தானில் இந்திய இராணுவத் தலையீட்டிற்கு அவர் ஆதரவளித்ததைப் போலவே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மீதான பண்டாவின் எதிர்ப்பும் 1947-48ல் தெற்காசியாவில் ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திரமான தேசிய அரசுகள் என்று அழைக்கப்படுவனவற்றின் நியாயத்தன்மையை ஏற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பாலசூரியா பின்னர் விளக்கியதாவது: “தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடு, தேசிய முதலாளித்துவத்திடம் சரணடையவும் அதன் மூலம் ஏகாதிபத்தியத்திடம் சரணடையவும் விடாப்பிடியாக வழிவகுக்கின்றது. ஏனெனில், அதன் கோட்பாடு இந்த முதலாளித்துவ அரசுகள் பாதிப்பின்றி பாதுகாக்கப்பட வேண்டிய அவசியமிருப்பதாகக் கருதுவதையை முழு அடிப்படையைக் கொண்டுள்ளது. விதிவிலக்கின்றி இந்த அரசுக் கட்டமைப்புகள், ஒரே தேசிய இனத்தின் மேலாதிக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் –அதன் முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து மற்ற தேசிய இனங்களை கீழ்ப்படுத்தி வைப்பதற்கு கொடூரமான பலாத்காரத்தை பயன்படுத்துவதனால்– இந்த அரசுக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பது என்பது ஏகாதிபத்தியத்தையே பாதுகாப்பதாகவே ஆகிறது.” [52]

22-4. அந்தக் கட்டத்தில், தமிழ் போராட்டம் அரும்பு வடிவத்தில் இருந்ததால், சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமையின் அனுபவத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தயக்கத்துடன் பணிந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை தளராமல் பாதுகாப்பதையும் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராடுவதையும் தொடர்ந்துகொண்டிருந்தாலும், 1970களின் அநேக காலம் பூராகவும் அது ஒரு முக்கியமான தந்திரோபாய ஆயுதம் இன்றி இயங்கிக்கொண்டிருந்தமை அதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காந்திய உபாயங்களுடன் குரோதமுற்றிருந்த தீவிரமான தமிழ் இளைஞர்களுக்கு மாவோயிஸ்டுகள் உபதேசித்த “ஆயுதப் போராட்டம்” ஈர்ப்புடையதாக இருந்ததால், கட்சி மாவோயிஸ்டுகளின் பெருகும் செல்வாக்குக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. ஜே.வி.பி.யைப் போலவே, மாவோயிஸ்டுகளும் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டனம் செய்வதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்திலிருந்த லங்கா சம சமாஜ கட்சி அமைச்சர்களின் துரோகத்தை சுட்டிக் காட்டினர். எவ்வாறெனினும், 1977ம் ஆண்டிற்கு முன்னர், இந்த குழுக்கள் மிகக்குறைந்த அரசியல் முக்கியத்துவத்தையே கொண்டிருந்ததுடன், சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களிடம் இருந்து வர்க்க அடிப்படையில் ஆதரவைப் பெற்ற தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கங்களினால் அவை முழுமையாக ஓரங்கட்டப்பட்டிருந்தன.

22-5. 1979ல் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த போது, பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) 180 பாகை திரும்பியது. இலங்கையில் தேசியப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி அலட்சியப்படுத்தி விட்டிருந்ததை ஒப்புக்கொண்டு, பண்டா புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பியிருந்த போதும், அதில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான உரிமையை பாதுகாக்க தாமதமாகத் திரும்பியதற்கான விளக்கத்தை அக்கடிதத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ அவர் வழங்கவில்லை. இலங்கை விடயத்திலான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் புதிய நிலைப்பாடும் பழைய நிலைப்பாட்டைப் போலவே நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. அது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்த நிலைப்பாட்டில் இருந்து அதை விமர்சனமற்றுத் தழுவிக்கொள்ளும் நிலைப்பாட்டிற்குத் தாவியது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இந்த தலைகீழ் மாற்றம், 1974ல் தொர்னெட் உடனான அரசியல்ரீதியில் விளக்கப்படாத பிளவுக்குப் பின்னர், அதன் வர்க்க அச்சில் ஏற்பட்டிருந்த மாற்றத்துடன் பிணைந்ததாக இருந்தது. 1976ல் முதலாளித்துவத்தின் புதிய சர்வதேச எதிர்த்தாக்குதலுடன் தொடர்புபட்ட புதிய அரசியல் பிரச்சினைகளை தொ.பு.க. சந்தித்தபோது, அது ஆதரவுக்காக ஏனைய வர்க்க சக்திகளான, பிரிட்டனில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கில் அரபு முதலாளித்துவ ஆட்சிகளை நோக்கியும் திரும்பத் தொடங்கியது.

22-6. அரபு முதலாளித்துவத்துடனான அதன் கொள்கையற்ற உறவுகளுக்கு சமாந்தரமாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு (ஈரோஸ்) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவை அடங்கிய தமிழ் ஆயுதக் குழுக்களில் விடுதலைப் புலிகள் முன்னிலையில் இருந்தனர். இந்தக் குழுக்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்தின் ஆதிக்கத்திற்குள்ளாகி இருந்தன, மற்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போல், ஒரு சோசலிசத் தமிழ் ஈழமே தங்கள் நோக்கம் என அறிவித்தன. ”தேசிய விடுதலை” என்னும் ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டத்திற்கு மிகவும் கலப்படமான “சோசலிச” முலாம் பூசுவதில் விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராகக் கூறப்பட்ட அன்டன் பாலசிங்கத்துக்கு பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சி உதவியது.

22-7. பாலசிங்கத்தின் “தமிழ் தேசியப் பிரச்சினை குறித்து” என்ற கட்டுரையை தொ.பு.க. அதன் லேபர் ரிவ்யூ (Labour Review) இதழில் பிரசுரித்ததுடன் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் அவ்வாறே செய்ய வலியுறுத்தியது. 1913ல் தேசியப் பிரச்சினை குறித்து லெனின் எழுதியவை எல்லாம் பாலசிங்கத்தின் கைகளில் சிக்கி தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டன. மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை, தேசியப் பிரச்சினையில் “தொழிலாள வர்க்கத்தின் சுய நிர்ணயத்துக்கே” முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என லெனின் வலியுறுத்திய அதேவேளை, தமிழ் முதலாளித்துவத்தின் பிரிவினைவாத அபிலாசைகளுக்கு விமர்சனமற்ற ஆதரவாளர்களாக மார்க்சிஸ்டுகள் இருக்க வேண்டும் என்று லெனின் கூறியதாக பாலசிங்கம் வாதிட்டார். “[தமிழ் மக்கள்] போராட்டம் முதலாளித்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டாலும், தொழிலாள வர்க்க புரட்சிகரவாதியின் கடமை, அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதனை தேசிய விடுதலை மற்றும் சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேற்றுவதற்கான ஒரு மூலோபாயத்தை தழுவிக் கொள்வதுமே ஆகும்,” என அவர் அறிவித்தார். முதலாளித்துவத்திலிருந்து சுயாதீனமாக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, அணிதிரட்டுவதற்கான எந்தவொரு போராட்டமும் இன்றி, “சோசலிசப் புரட்சி” குறித்து பாலசிங்கம் கூறுவது, முழுக்க முழுக்க ஒரு அலங்கரிப்பாகும். 1980ல் “சோசலிச தமிழீழத்தை நோக்கி” என்ற தலையங்கத்துடனான ஒரு விவாதத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பு தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதை முழுமையாக வெளிப்படையாக நிராகரித்தது. “தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவது மற்றும் ஒட்டுமொத்த இலங்கைக்குமான புரட்சி போன்ற இற்றுப் போன சித்தாந்தத்தை தமிழ் மக்கள் போதுமான அளவு கேட்டாகி விட்டது. பெரும்பான்மையின் ஒடுக்குமுறைப் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு தேசிய சிறுபான்மை, முதலில் தனது விடுதலைக்காகப் போராடியாக வேண்டும்,” என அது பிரகடனம் செய்தது.

22-8. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை அவர்களது பொது வர்க்க நலன்களைச் சூழ ஐக்கியப்படுத்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சளைக்காமல் தொடர்ந்து போராடியது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் 1983 படுகொலைகளில் ஐக்கிய தேசியக் கட்சி சம்பந்தப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தவும் விரிவான பிரச்சாரங்களை கட்சி நடத்தியது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு தொ.பு.க. கொடுத்த விமர்சனமற்ற ஆதரவு, புலிகளதும் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களதும் அரசியல் சம்பந்தமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எந்தவொரு ஆய்வும் செய்வதை தடுத்ததன் மூலம் அந்த அமைப்புகள் தமிழ் இளைஞர்களிடையேயான தமது செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ள உதவியது. 1985-87ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னரே, தேசியப் பிரச்சினை சம்பந்தமாக, குறிப்பாக இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள் தொடர்பாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மீளாய்வு செய்ய முடிந்தது.

22-9. 1983 தமிழர் விரோதப் படுகொலைகள் இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு கடும் கொந்தளிப்பு அலையை உருவாக்கின. இந்திய பிரதமரான இந்திரா காந்தி சமாதான பேச்சுவார்த்தைகளை மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார். அதே சமயம், இந்திய அரசாங்கம் இரகசியமாகப் பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க அதிகாரமளித்தது. இது அந்தக் குழுக்களின் நடவடிக்கைகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும் மற்றும் இலங்கை அரசாங்கத்துடனான தனது கொடுக்கல் வாங்கல்களில் பேரம்பேசுவதற்கான ஒரு அம்சமாக அவர்களைப் பயன்படுத்துவதாவும் இருந்தது. அனைத்து தமிழ்க் குழுக்களும், இந்திய முதலாளித்துவமே தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்ற மாயையை ஊக்குவித்ததோடு பங்களாதேஷில் போன்று நேரடியான இந்தியத் தலையீட்டிற்கும் ஊக்குவித்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய ஸ்ராலினிசக் கட்சிகள் இந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சிகளில் நேரடியாகப் பங்கேற்றதோடு, தமிழ் இளைஞர்களுக்கு இந்திய உளவுத் துறையின் மேற்பார்வையின் கீழ் “அரசியல் பயிற்சியை” வழங்கின. புலிகள் மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தனர். புலிகள் இந்திய அரசாங்கத்தில் இருந்து கொஞ்சம் தூர விலகி இருப்பதாகக் காட்டிக்கொண்ட போதிலும், அது இந்தியாவில் பிராந்திய தமிழ் முதலாளித்துவ முகாமுக்குள்ளும் மற்றும் இலங்கை தமிழ் முதலாளித்துவத்துக்குள்ளும் மிக நேரடியாக நுழைவதற்கானதாக இருந்தது. விடுதலைப் புலிகள், தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரனுடனும் மற்றும் விடுதலைப் புலிகளுடனான தொடர்பை தனது சொந்த அரசியல் பிம்பத்தை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்ட அவரது முதலாளித்துவ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் (அ.இ.அ.தி.மு.க.) நெருக்கமான உறவுகளைப் பேணிவந்தனர். புலிகளுடனான தனது உறவுகளை இடைஞ்சல் செய்வதற்கு விரும்பாத தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எடுத்த முயற்சிகளை எதிர்த்தது.

22-10 1983-85 காலகட்டத்தில் பிரிட்டன் தொழிலாளர் புரட்சிக் கட்சி, அனைத்துலகக் குழுவின் மீதான அதன் பரந்த தாக்குதல்களின் ஒரு பாகமாக இலங்கைப் பகுதியை அரசியல் ரீதியில் அழிக்க நனவாக முயற்சித்தது. 1983 ஜூலையில் தமிழர் விரோத படுகொலையின் உச்சகட்டத்தில், பண்டாவால் எழுதப்பட்டு நியூஸ் லைன் பத்திரிகையில் பிரசுரமான ஒரு கருத்து தெரிவித்ததாவது: “பொலிசும் இராணுவமும் அவசரகால சட்டங்களின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தன்னிச்சையான கட்டுப்பாடற்ற அதிகாரத்தை எங்களது தோழர்களைக் கொல்வதற்கும், எங்களது அச்சகத்தை அழிப்பதற்கும் பயன்படுத்தியிருக்க சாத்தியமிருக்கிறது அல்லது பயன்படுத்தியிருக்கலாம்.” கீர்த்தி பாலசூரியா இது குறித்து பின்னர் எழுதுகையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவிதி சம்பந்தமாக தொழிலாளர் புரட்சிக் கட்சி கொண்டிருந்த அலட்சியத்தைக் கண்டனம் செய்தார். “நீங்கள் எங்கள் பாதுகாப்புக்காக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க எதையுமே செய்யாததோடு, அதன் மூலம் எங்களது கட்சியை சரீரரீதியாக அழித்தாலும் கூட நீங்கள் ஒரு விரலைக் கூட உயர்த்தப் போவதில்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டீர்கள். அந்தக் காலகட்டம் முழுவதிலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டதோடு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளங்களில் இருந்து பின்வாங்காத காரணத்தால், பல்வேறு தொழிலாள வர்க்க மற்றும் இளைஞர் தட்டினரிடம் இருந்து மதிப்பை வென்றெடுத்தது. முற்றுமுழுதாக இந்த உண்மையினாலேயே எங்களது கட்சி ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் மூலமான அரசியல் ஆத்திரமூட்டல்களின் நிரந்தர இலக்காக ஆகியிருக்கிறது,”[53] என அவர் விளக்கினார்.

22-11. தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சனமின்றி ஆதரித்த அதேவேளை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இருந்து பிரிந்து சென்று, அதனை சிங்கள இனவாத சொற்பதங்களில் தாக்கிக்கொண்டிருந்த ஒரு குழுவுடன் அரசியல் உறவுகளைப் பேணுவதைப் பற்றி தொ.பு.க.வுக்கு மனவுறுத்தல் இருக்கவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த ஓடுகாலிகளுடன் சமரசத்திற்குச் செல்வதற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு அழுத்தம் கொடுத்தது. அது தோல்வியடைந்த நிலையில், அவர்களின் விஷமத்தனமான வீண்பேச்சுக்களைப் பயன்படுத்தி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை கீழறுக்கும் வேலை தொடர்ந்தது. அந்தக் குழுவின் “செய்திகளின்” அடிப்படையில், நா.அ.அ.கு.வில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை வெளியேற்றுவதற்கு 1985ல் நடந்த அதன் பத்தாவது காங்கிரசில் ஹீலியும் பண்டாவும் தீர்மானம் கொண்டுவந்தனர். வெளியேற்றுவது எக்காலத்திலும் நிறைவேற்றப்படாத அதேவேளை, தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் அனைத்துலகக் குழுவையும் அழிப்பதை நோக்கி தெளிவாகத் திரும்பியிருந்தனர்.


[51]

(நான்காம் அகிலம் சஞ்சிகை) Fourth International, Volume 14, No. 1, March 1987, p.54.

[52]

அதே சஞ்சிகை, பக்கம். 54-55

[53]

(நான்காம் அகிலம் சஞ்சிகை) Fourth International, Volume 14, No. 2, June 1987, p. 111.