Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

1985-1986தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவு

23-1. 1985 ஜனவரியில் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பத்தாவது மாநாட்டில் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட இரு விடயங்கள் செல்வாக்கு செலுத்தின: முதலாவது, பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நிலவிய ஒரு அழிவுகரமான அரசியல் நெருக்கடி, மற்றும் இரண்டாவது, அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் அமெரிக்காவின் வேர்க்கர்ஸ் லீக்கினால் (Workers League) எழுப்பப்பட்டிருந்த அடிப்படையான அரசியல் வேறுபாடுகளை ஒடுக்குவது பற்றியதாகும். இவை இரண்டில் எதுவுமே கலந்துரையாடப்படவில்லை. பப்லோவாதத்திற்கு எதிரான தனது முந்தைய கொள்கைரீதியான போராட்டத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி கைவிட்டுக்கொண்டிருந்த போது, வேர்க்கர்ஸ் லீக் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. 1974ல் தேசிய செயலாளரான ரிம் வோல்ஃபோர்த் வெளியேறியதை அடுத்து, வேர்க்கர்ஸ் லீக் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திடமாகத் திரும்பியதோடு பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தை கட்சி வேலையின் மத்தியில் இருத்தியது. அனைத்து பப்லோவாதக் குழுக்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்ட “பாதுகாப்பும் நான்காம் அகிலமும்” என்ற விசாரணையில் வேர்க்கர்ஸ் லீக் தலைமை பாத்திரம் வகித்தது. இந்த விசாரணை, ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பொறுப்பான ஸ்ராலினிச முகவர்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் கொண்டிருந்த வலையமைப்பை அம்பலப்படுத்தியது. சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜோசப் ஹான்சன் ஒரு ஸ்ராலினிஸ்டாக இருந்து, பின்னர் எஃப்.பி.ஐ.யின் (FBI -அமெரிக்க புலனாய்வுத் துறை) முகவராகி இருந்தார் என்பதற்கான முடிவான ஆதாரத்தை அது வழங்கியிருந்தது.

23-2. 1982ல், வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலரான டேவிட் நோர்த், ஜெரி ஹீலியின் “இயங்கியல் சடவாதத்திலான கற்கைகள்” குறித்து விரிவான விமர்சனங்களை முன்வைத்து, அது மார்க்சின் இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தை கைவிடுவதை பிரதிநிதித்துவம் செய்கின்றது என வெளிப்படுத்தினார். “இயங்கியல் சடவாதத்திற்கானதும் மற்றும் பிரச்சாரவாதத்திற்கு எதிரானதுமான போராட்டம் என்ற பெயரில்” ட்ரொட்ஸ்கிசத்திற்கான, குறிப்பாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கான போராட்டத்தில் இருந்து ஒரு தொடர்ச்சியான விலகல் இருந்து வந்தது என்பதை நோர்த் சுட்டிக் காட்டினார். நோர்த் தனது விமர்சனங்களைத் திரும்பப் பெறாவிட்டால் வேர்க்கர்ஸ் லீக் உடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவிருப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமைத்துவம் இதற்குப் பதிலிறுத்தது. 1984 ஜனவரியில் தொழிலாளர் புரட்சிக் கட்சி பொதுச் செயலரான மைக் பண்டாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து, குறிப்பாக மத்திய கிழக்கு விடயத்தில், மேலும் பகுப்பாய்வை செய்திருந்த நோர்த், “முடிவுகளிலும் சரி வழிமுறைகளிலும் சரி, வரலாற்றுரீதியாக நாம் எவற்றையெல்லாம் பப்லோவாதத்துடன் தொடர்புபடுத்தியிருந்தோமோ அவற்றை ஒத்த நிலைகளை நோக்கிய ஒரு அரசியல் சரிவின் பெருகிவரும் அறிகுறிகளால்” வேர்க்கர்ஸ் லீக் ஆழமாக கவலையுற்றுள்ளது என தெரிவித்திருந்தார். 1984 பெப்பிரவரியில், நோர்த் அனைத்துலகக் குழுவுக்கு வழங்கிய அரசியல் அறிக்கை, 1982 டிசம்பரில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை சந்தேகத்திற்கிடமின்றி கைவிட்டதன் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்வதுடன் தொடங்கியது. மத்திய கிழக்கின் முதலாளித்துவ ஆட்சிகளுக்கு மட்டுமன்றி பிரிட்டனின் தொழிற்கட்சி இடதுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் கூட தொழிலாளர் புரட்சிக் கட்சி அடிபணிந்துள்ளதை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். மீண்டும் வேர்க்கர்ஸ் லீக் உடன் முறித்துக் கொள்வதற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி அச்சுறுத்தியதோடு எந்தவொரு கலந்துரையாடலையும் தடைசெய்தது. கூட்டத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பிரதிநிதித்துவம் செய்யாததோடு அந்த கலந்துரையாடல் குறித்தும் அதற்கு அறிவிக்கப்படவில்லை.

23-3. 1985ல் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களின் நீண்டகால வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் வெடித்த நெருக்கடி, அது அனைத்துலகக் குழுவிடமிருந்து முறித்துக் கொள்வதற்கும் அதன் அரசியல் சீரழிவுக்கும் துரிதமாக வழிவகுத்தது. 1985 அக்டோபரில் கீர்த்தி பாலசூரியா லண்டன் சென்றதோடு தொழிலாளர் புரட்சிக் கட்சி மீதான டேவிட் நோர்த்தின் விமர்சனங்களைப் பற்றி அப்போதே அவர் முதல் முறையாக தெரிந்துகொண்டார். ஆஸ்திரேலியாவின் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) மற்றும் ஜேர்மன் சோசலிச தொழிலாளர் கழக (BSA) பிரதிநிதிகளுடன் சேர்ந்து, நோர்த்தின் ஆய்வுக்கு தமது உடன்பாட்டை அவர் வெளிப்படுத்தினர். 1985 அக்டோபர் 25 அன்று, ஜெரி ஹீலியின் வெளியேற்றம் பற்றியும் பிரிட்டிஷ் பகுதியின் நெருக்கடி பற்றியும் அனைத்துலகக் குழு இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. இந்த அரசியல் நெருக்கடியின் தோற்றுவாய், “தொழிலாளர் புரட்சிக் கட்சித் தலைமை, நீண்டநாட்களாக சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்பும் மூலோபாயக் கடமையிலிருந்து விலகி, தேசியவாத முன்னோக்கு மற்றும் நடைமுறை வேலைகளை நோக்கி அதிகளவு முன்நகர்ந்தமையே” ஆகும் என இரண்டாவது அறிக்கை அடையாளம் கண்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை வெளிப்படையாக அங்கீகரிப்பதுடன் அதன் முடிவுகளுக்கும் பிரிட்டிஷ் பகுதி கீழ்ப்படிகின்ற அடிப்படையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தனது உறுப்பினர்களை பதிவு செய்ய வேண்டும் என அனைத்துலகக் குழு தீர்மானித்தது.

23-4. 1985 டிசம்பர் 16 அன்று, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிதி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அனைத்துலகக் குழு தனது கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கையை பெற்றது. அது கண்டுபிடித்தவற்றுக்கு பதிலிறுத்த அனைத்துலகக் குழு, தொழிலாளர் புரட்சிக் கட்சியானது அனைத்துலகக் குழுவையும் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தையும் வரலாற்று ரீதியில் காட்டிக்கொடுத்துவிட்டதாக பிரகடனம் செய்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தக் காட்டிக்கொடுப்பு, “பணத்துக்குப் பிரதியுபகாரமாக காலனித்துவ முதலாளித்துவ தட்டுக்களுடன் கொள்கையற்ற உறவுகளை கொண்டிருந்ததன் விளைவாக, நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை முழுமையாகக் கைவிட்டதை உள்ளடக்கியுள்ளது” என அது தெரிவித்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் 8வது காங்கிரசை தொடர்ந்து நடக்கவிருந்த அனைத்துலகக் குழுவின் அவசர மாநாடு வரை, தொழிலாளர் புரட்சிக் கட்சியை இடைநீக்கம் செய்வதற்கு அனைத்துலகக் குழு தீர்மானித்து. மறு நாள், அனைத்துலகக் குழுவின் இன்றியமையாத வேலைத்திட்ட அடித்தளங்களையும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று ரீதியான சரியான தன்மையையும் மறு உறுதி செய்து, இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்ட கோட்பாடுகளின் மத்திய முக்கியத்துவத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இடைநீக்கம் தீர்க்கமானதாக இருந்தது. இந்த அடிப்படைப் பிரச்சினைகளில் எந்த சமரசமும் இருக்க முடியாதென்பதை இந்தத் தீர்மானம் தெளிவாக்கியதோடு தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளான நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு கொள்கைரீதியான அடித்தளத்தையும் அது ஸ்தாபித்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரதிநிதிகளில், டேவிட் ஹைலன்ட் மட்டுமே தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் ஹைலன்டின் தலமையிலான சிறுபான்மைக் குழுவே பின்னர் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியை அமைத்தது. பண்டா-சுலோட்டர் கன்னை ஹீலியுடன் மோதிக்கொண்டாலும், அவர்களும் அதே சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத முன்னோக்கினையே அடிப்படையில் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பதை அந்தக் கன்னையின் எதிர்ப்பு வெளிப்படுத்தியது.

23-5. டேவிட் நோர்த்துக்கு சுலோட்டர் எழுதிய கடிதத்தில், அனைத்துலகக் குழுவின் ஆளுமையை தொழிலாளர் புரட்சிக் கட்சி ஏற்கவேண்டுமென்பதை எதிர்த்தார். சர்வதேசியவாதம் என்பது “வர்க்க நிலைப்பாட்டை வரைவதும் அதற்காக போராடுவதுமாகும்” என அவர் வலியுறுத்தினார். வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு எழுதிய பதிலில் பின்வரும் கேள்விகள் எழுப்பப்பட்டன: “ஆனால் இந்த ‘வர்க்க நிலைப்பாட்டை’ தீர்மானிக்கும் நிகழ்முறை எது? அதற்கு நான்காம் அகிலத்தின் இருப்பு அவசியமாயுள்ளதா?... நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்பது ‘ட்ரொட்ஸ்கிசத்தின், மார்க்ஸ் மற்றும் லெனினது மார்க்சிசத்தின் ஒட்டுமொத்த வேலைத்திட்ட அடித்தளத்தின்’ வரலாற்று வடிவமாகும். தேசியப் பிரிவுகள் அனைத்துலகக் குழுவின் ஆளுமைக்குட்படுவது அந்த வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் கொண்டுள்ள உடன்பாட்டின் ஒழுங்கமைந்த வெளிப்பாடே ஆகும். மார்க்சிசக் கோட்பாடுகளின் மற்றும் வேலைத்திட்டத்தின் சமகால அபிவிருத்தியாக ட்ரொட்ஸ்கிசத்தை உறுதியாக கடைப்பிடிக்கும் கட்சிகள், நான்காம் அகிலத்தில் ஒழுங்கமைந்துள்ளதோடு அவை அனைத்துலகக் குழுவின் ஆளுமையை ஏற்றுக் கொள்கின்றன. ஒருவர் அமைப்புரீதியான வெளிப்பாட்டில் இருந்து வேலைத்திட்டத்தை பிரிப்பதையே சர்வதேசியவாதத்தின் வரையறையாகக் கொள்வார் எனில், அது தங்களது நடவடிக்கைகளுக்கான அரங்கில் செயற்படும் சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ள மார்க்சிசத்தின் தொடர்ச்சியை மறுக்கின்ற, ட்ரொட்ஸ்கிசத்தின் திருத்தல்வாத மற்றும் மத்தியவாத எதிரிகள் அனைவரதும் நிலைப்பாட்டுக்கு அடிபணிவதாகும்”.[54]

23-6. “அனைத்துலகக் குழு இத்தோடு புதைக்கப்பட்டு நான்காம் அகிலம் கட்டியெழுப்பப்பட வேண்டியது ஏன் என்பதற்கான 27 காரணங்கள்”, என்ற தலைப்பிலான பண்டாவின் ஆவணத்தின் அடிப்படையில், 1986 பிப்ரவரி 8 அன்று நடந்த அதன் பிரதிநிதித்துவம் அற்ற மாநாட்டில் அனைத்துலகக் குழுவில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரிந்தது, அந்த ஆவணம் பப்லோவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் கைவிட்டிருந்தது. அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் அனைவரும் மாநாட்டில் இருந்து விலக்கப்பட்டனர். சில மாதங்களிலேயே, பண்டா ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்து, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சி என்பது சாத்தியமற்றது என்று பிரகடனப்படுத்தியதோடு ஸ்ராலினை அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாத்த அவசியமான பொனபார்ட்டிசத் தலைவர் என்று புகழ்ந்தார். 1985-86ல் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்த அனைவரையும் பற்றி தெளிவாக ஆய்வு செய்த பின், ஒரு வருடம் கழித்து அனைத்துலகக் குழு பின்வரும் முடிவுக்கு வந்தது: “அனைத்துலகக் குழுவுக்கு விரோதமான போக்குகள் அனைத்தினதும் பிரதான நோக்குநிலை முழுக்க முழுக்க ஸ்ராலினிசத்துக்கும் சமூக ஜனநாயகத்துக்கும் அடிபணிவதும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிராகரிப்பதும் மற்றும் முதலாளித்துவத் தட்டுக்களுடன் மக்கள் முன்னணிக் கூட்டணிகளில் பங்கேற்பதை நோக்கி முன்னெப்போதையும் விட திடமாக நோக்குநிலை வகுப்பதுமாகும்.” [55]

23-7. அனைத்துலகக் குழுவிலான பிளவானது உலக முதலாளித்துவத்தின் பொருளாதார அடித்தளத்திலும் அதன் அரசியல் மேற்கட்டுமானத்திலும் ஏற்பட்டிருந்த ஆழமான மாற்றங்களின் ஒரு பிரதிபலிப்பு ஆகும். 1970களின் பிற்பகுதியில் ஆரம்பித்த, உற்பத்தி நடவடிக்கைகளிலான பூகோளரீதியான ஒருங்கிணைப்பு மற்றும் ஆசியாவில் மலிவு உழைப்புக் களங்களிலான சுரண்டலும், போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதத் தலைமைகள் தங்கியிருந்த தேசியப் பொருளாதார ஒழுங்கு வேலைத்திட்டங்களை கீழறுத்திருந்தன. தொழிலாள வர்க்கத்தின் மீதான இத்தகைய அதிகாரத்துவ எந்திரங்களின் மேலாதிக்கத்திற்கு சந்தர்ப்பவாத முறையிலான அடிபணிவின் விளைவாகவே நான்காம் அகிலத்திற்குள் பப்லோவாதம் எழுந்தது. பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பாதுகாத்தது ஆனால் குறிப்பாக 1963ல் பப்லோவாதிகளுடன் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி மீண்டும் இணைந்ததாலும், 1971ல் பிரான்சின் சர்வதேச கம்யூனிச அமைப்புடன் (OCI) பிளவடைந்ததாலும் அதிகளவு தனிமைப்படலை எதிர்கொண்டது. தேசியவாத நோக்குநிலையை சோசலிச தொழிலாளர் கழகம் மேலும் மேலும் எடுத்ததனால் அது, 1953 மற்றும் 1961-63 பிளவுகளின் படிப்பினைகளை அடித்தளமாகக் கொண்டு 1960கள் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த அனைத்துலகக் குழுவின் புதிய பகுதிகளில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கியது. இந்த நிகழ்வுப் போக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி அமைக்கப்பட்டதுடன் துரிதமடைந்தது. பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தினாலேயே அனைத்துலகக் குழுவிற்குள் தனது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்திருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சி, அந்தப் போராட்டத்தையே கைவிட்ட நிலையில், சர்வதேசிய இயக்கத்திற்குள் அரசியல் கலந்துரையாடல்களை தடுத்ததோடு அமைப்புரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் ஆத்திரமூட்டல்களை கொண்டே விமர்சனங்களுக்கு பதிலிறுப்பு செய்தது. அனைத்துலகக் குழுவிற்குள் ட்ரொட்ஸ்கிசவாதிகளின் வெற்றியும் அதன் வேலையின் மையத்தில் ட்ரொட்ஸ்கிசம் மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்டதும் வர்க்க உறவுகளில் ஒரு ஆழமான மாற்றத்தைக் குறித்தது. அது தொழிலாள வர்க்கத்தின் சகல பழைய அதிகாரத்துவ அமைப்புகளதும் சீரழிவு மற்றும் சிதறல்களிலும் மற்றும் பப்லோவாதக் குழுக்கள் அனைத்தும் துரிதமாக வலதுபக்கம் நகர்ந்ததாலும் மேலும் வெளிப்படையானது.


[54]

நான்காம் அகிலம், [Fourth International, Volume 13, No. 2, p. 77]

[55]

நான்காம் அகிலம், [Fourth International, Volume, 14 No. 1, p. 4.]