Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

ஸ்ரீலங்கா - தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகள்

25-1. 1987 நவம்பரில், “இலங்கையின் நிலைமையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்” என்ற தலைப்பில், அனைத்துலகக் குழு பிரசுரித்த ஒரு விரிவான அறிக்கை, முதன்முறையாக ஸ்ரீலங்கா- தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற சுலோகத்தை எழுப்பியது. நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருந்த அந்த அறிக்கை, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் ஊடாக மட்டுமே அடையப்பட முடியும் என்று ஒரேகுரலில் வலியுறுத்தியது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் எவ்வளவு உத்வேகமானதாக அல்லது போர்க்குணமிக்கதாக இருந்தாலும், அவற்றால் ஏனைய ஜனநாயகக் கடமைகளைப் போலவே, தேசிய சுய-நிர்ணய பிரச்சினையையும் தீர்க்க முடியாது. இந்த சுலோகம், சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலமாக அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போராடும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நோக்குநிலையை தெளிவாக வேறுபடுத்திக் காட்டியது, அது பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) செய்திருந்ததைப் போல், தமிழ் தேசிய இயக்கத்தின் ஊக்குவிப்பாளனாக மற்றும் அரசியல் ஆலோசகராக பாத்திரம் ஆற்றுமளவுக்கு கட்சியை தரம் குறைக்கும் எந்தவொரு போக்கிலிருந்தும் வேறுபட்டிருந்தது.

25-2. அனைத்துலகக் குழுவின் அறிக்கை விளக்கியதைப் போல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர அரசுகள் என்றழைக்கப்படுபவற்றில் எதுவும் வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளையோ அல்லது அடிப்படையான சடத்துவ தேவைகளையோ பூர்த்தி செய்திருக்கவில்லை. “மாற்றமின்றி, ஏகாதிபத்திய ஒப்புதலுடனான ‘சுதந்திரம்’ என்பது, முறைதவறிப் பிறந்த அரசுகளை அமைப்பதையே அர்த்தப்படுத்துகிறது. ஜனநாயகக் கோட்பாடுகளை தவிர்க்க முடியாதவாறு சமரசம் செய்வதன் மீதே இந்த அரசுகளின் அத்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுப்போக்கில், தேசிய முதலாளித்துவம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாளனாக செயற்படாமல், ஏகாதிபத்திய சூறையாடலின் பிரதான பங்காளியாகவே செயல்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கில் உருவாக்கப்பட்ட அரசின் வகையானது, உற்பத்தி சக்திகளின் முற்போக்கான அபிவிருத்திக்கு, சாத்தியமற்றதாகியுள்ள, அழுகிப் போய்க்கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கான ஒரு சிறைக்கூடமே தவிர வேறொன்றுமில்லை.... இத்தகைய நிலைமைகளில் இருந்தே, முதலாளித்துவத்தின் மகிழ்ச்சியான ஒப்புதலுடன் இனவாத யுத்தப் பயங்கரங்கள் எழுகின்றன. முதலாளித்துவ ஆட்சி நீடிக்கும் வரை இத்தகைய நிலவரம் மாற்றப்பட முடியாதது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், பர்மா ஆகிய நாடுகளின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு மற்றும் உண்மையில் உலகின் ஒவ்வொரு முன்னாள் காலனித்துவ நாட்டினதும் வரலாறு, முதலாளித்துவத்தால் உண்மையான தேசிய ஐக்கியத்தையும் அரசியல் சுயாதீனத்தையும் ஸ்தாபிக்க முடியாது என்பதையே தீர்க்கமாக நிரூபித்துள்ளன.”[57]

25-3. இதனையடுத்து, இந்த முதலாளித்துவ ஜனநாயகக் கடமைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. சுய-நிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்த அதேசமயம், சோசலிசப் புரட்சி மூலோபாயத்தின் மூலம் மட்டுமே தேசிய சுயநிர்ணயத்தை அடைய முடியும், அதனால் அது அந்த மூலோபாயத்துக்குக் கீழ்ப்பட்டதே என அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை யதார்த்தமாக்கக் கூடிய ஒரே சமூக சக்தி இது [தொழிலாள வர்க்கம்] மட்டுமே. ஆயினும், அதனை தேசிய முதலாளித்துவத்தின் துணையுறுப்பாக இருந்து கொண்டு செய்ய முடியாது, மாறாக அதன் சமரசமற்ற எதிரியாக இருந்தே இதனைச் செய்ய முடியும். தனது சொந்த ஆயுதங்களின் மூலமும், தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும், கிராமங்கள் மற்றும் நாட்டுப்புறங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொண்டே அது சுய-நிர்ணயத்திற்காகப் போராடுகிறது. தனது சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக்கொண்டு, சகல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது நியாயமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்யும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில், சோசலிசப் புரட்சியின் ஒரு துணை விளைவாகவே சுயநிர்ணயம் சாதிக்கப்படுகிறது. தேசிய இனங்களின் உண்மையான சமத்துவத்துக்கான ஒரு திட்ட வரம்பாக, அது சுயவிருப்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு ஐக்கிய சோசலிச ஒன்றியத்தை முன்மொழிகிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அனைத்தும் தானாகவே ஒன்று சேர்வதானது பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று நம்பும் அதே சமயம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது பிரிந்து செல்ல விரும்பும் இனங்களுக்கு அவ்வாறு செய்வதற்கான உரிமை உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இது தான் ஸ்ரீலங்கா-தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அபிவிருத்தி செய்த வேலைத்திட்டத்தின் இன்றியமையாத உள்ளடக்கமாகும்.”[58]

25-4. இந்திய முதலாளித்துவத்திடம் புலிகள் அரசியல்ரீதியாக மண்டியிட்டதின் வெளிச்சத்தில், பல்வேறு தேசிய விடுதலை இயக்கங்களின் பண்பை மறுமதிப்பீடு செய்யும் நிகழ்வுப்போக்கையும் அனைத்துலகக் குழுவின் அறிக்கை தொடக்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் தோன்றிய, இனம், கைமொழி, மதம் மற்றும் சாதியைக் கடந்து வெகுஜனங்களை ஈர்த்த பரந்த காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்களுக்கு நேர் மாறான வகையில், விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் தேசிய தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இது, லெனின் எச்சரித்திருந்ததைப் போல், தேசிய முதலாளித்துவம் தனது சொந்த “சுதந்திர” அரசுக்குள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுரண்டுவதற்காக, தனது சொந்த தேசிய அந்தஸ்துகளையும் நிலைமைகளையும் ஸ்தாபிப்பதான விடயமாக மட்டுமே சுய நிர்ணயப் பிரச்சினையை நோக்குகிறது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, தீவின் மையத்தில் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கோ அல்லது பாக்கு நீரிணையைக் கடந்து தென்னிந்தியாவில் இருக்கும் பரந்த தமிழ் மக்களுக்கோ எந்த முன்னோக்கையும் கொண்டிராத, இலங்கையிலுள்ள தமிழ் முதலாளித்துவத்தின் அற்பமான இலட்சியங்களையே பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிடம் இருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதே ஒரு தனி ஈழத்திற்கான அதன் வேலைத்திட்டமாகும்.

25-5. ஆவணத்தில் மேற்கோளிடப்பட்டுள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அறிக்கை ஒன்று விளக்கியதாவது: “தேசிய பிரத்தியேகவாத அடிப்படையைக் கொண்ட, மற்றும் தனது சொந்த உரிமைகளை மட்டும் வெல்லும் நோக்கம் கொண்ட ஒரு இயக்கத்தின் மூலம் தேசிய விடுதலையை சாதிக்க முடியாது. நமது சகாப்தத்தில், அத்தகையதொரு இயக்கத்தால் உருவாக்கக் கூடிய மக்கள் இயக்கத்தின் வலிமை என்னவாக இருந்தாலும், அது முதலாளித்துவ தேசங்களிடையே தான் தனிமைப்படுவதைக் காணும். ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலை இயக்கமானது ஜனநாயகத்திற்காக முழுமையாகவும் நிபந்தனைகளின்றியும் போராடுகின்ற ஒரு இயக்கத்தின் பகுதியாக மட்டுமே முன்செல்ல முடியும். அத்தகைய ஒரு இயக்கத்தின் பாகமாக ஆகவிடாமல் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தடுப்பது இந்த தேசிய பிரத்தியேகவாதமே ஆகும். இறுதி ஆய்வில், தேசிய பிரத்தியேகவாதமானது தனது சொந்த நாட்டில் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுரண்டுவதற்கு தேசிய முதலாளித்துவம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் தொடர்புபட்டதாக இருப்பதே இதற்குக் காரணம். இங்கே தான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல்ரீதியான வலுவற்ற நிலை வெளிப்படுகின்ற தோற்றுவாய் அமைந்திருக்கிறது.”[59] தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு மார்க்சிச இயக்கம் அளிக்கக் கூடிய ஆதரவு பற்றிய ஒரு பரந்த ஆய்வுக்கான அடித்தளத்தை அனைத்துலகக் குழுவின் அறிக்கை அமைத்தது.

25-6. இந்த அறிக்கை வெளியான சிறிது காலத்தில், கீர்த்தி பாலசூரியா 1987 டிசம்பர் 18 அன்று மாரடைப்பால் திடீரென துன்பகரமாக மரணமடைந்தார். அப்போது வெறும் 39 வயதையே அடைந்திருந்த அவர், தனது ஒட்டுமொத்த இளமை வாழ்க்கையையும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தார். லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பால் உருவாகியிருந்த அரசியல் குழப்பத்தின் மத்தியில், 19 வயதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு தலைமை வகிக்கும் பிரமாண்டமான பொறுப்பை ஏற்ற பாலசூரியா, அதன் மூலம் இலங்கைத் தொழிலாள வர்க்கம் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் கொண்டிருந்த உறவுகளை மறுபடிம் புத்துயிர்பெறச் செய்தார். 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் மத்தியதர வர்க்க தீவிரவாத அலைக்கும், விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பி. போன்ற இயக்கங்களுக்கு உயிர்கொடுத்த ”ஆயுதப் போராட்ட” கொள்கைக்கும் எதிராக பாலசூரியாவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் எழுந்து நின்றனர். ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் அவற்றின் பல்வேறு பப்லோவாத பரிந்துரையாளர்களிடம் இருந்து மட்டுமன்றி, அனைத்துலகக் குழுவுக்குள்ளேயே தொழிலாளர் புரட்சிக் கட்சி மூலமும் நிரந்தரப் புரட்சித் தத்துவம் உலகளாவிய தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சமயத்தில் அவர் அதைப் பாதுகாத்தார். அவ்வாறு செய்கையில், ஆசியாவிலும் சர்வதேசரீதியாகவும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கு பாலசூரியா அழியாதவொரு பங்களிப்பைச் செய்தார்.

25-7. அவரது மரணச்சடங்கில் பேசுகையில், டேவிட் நோர்த் விளக்கியதாவது: “ட்ரொட்ஸ்கி போராடிய முன்னோக்கின் விஞ்ஞானபூர்வமான செல்லுபடியான தகைமையில் தோழர் கீர்த்தி ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் மாவோ சே துங், ஹோ சி மின் மற்றும் பிடல் காஸ்ட்ரோவின் ‘வெற்றிகளால்’ ஈர்க்கப்பட்டிருந்த சமயத்தில், இந்த கிரகத்தில் எப்போதுமே புரட்சிகரமாக இருக்கும் ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாகவே மார்க்சிஸ்டுகளின் அரசியல் நோக்குநிலை இருக்க முடியும் என கீர்த்தி வலியுறுத்தினார்... இனிவரும் உடனடிக் காலகட்டத்தில், தொழிலாளர்கள், ஆசியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும், தோழர் கீர்த்தியின் எழுத்துக்களை வாசித்துக் கற்றுக்கொள்வர். அப்போது இளைஞர்களின் ஆசிரியர்களாக மா சேதுங்குகளோ, ஹோ சின் மின்களோ, காஸ்ட்ரோக்களோ இருக்கப் போவதில்லை என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மாறாக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையேயான முன்னேறிய பகுதியினர், கீர்த்தி பாலசூரியாவிடம் இருந்தும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திடம் இருந்தும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிடமும் இருந்தே தங்களது புரட்சிகரப் பாடங்களை கற்கவுள்ளனர்.”[60]

25-8. பாலசூரியாவின் அகால மரணம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் அனைத்துலகக் குழுவுக்கும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு பெரும் அரசியல் அடியாக விழுந்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகளுடனான பிளவுக்குப் பிந்தைய உடனடிக் காலத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தெளிவுபடுத்தும் மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தீர்க்கமான நேரத்திலேயே அந்த மரணம் நிகழ்ந்தது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட காரியாளர்கள் அவரது இழப்பைத் தாங்கிக்கொண்டு, விஜே டயஸின் தலைமையின் கீழ் மீண்டும் வலுப்பெற்று, விரிவடைந்து வந்த உள்நாட்டுப் போரின் சிக்கலான நிலைமைகளின் கீழ் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்தமை, பாலசூரியாவுக்கும் அவர் போராடிய கோட்பாட்டுக்கும் சான்றாக அமைந்தது.


[57]

நான்காம் அகிலம், [Fourth International, Volume 15, No. 1, January–March 1988, pp. 20–21.]

[58]

அதே இதழ், பக்கம் 21

[59]

அதே இதழ், பக்கம் 20

[60]

அதே இதழ், பக்கம் 9-10