Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் சர்வதேச முன்னோக்குகள்

26-1. 1988 ஆகஸ்டில் வெளியான, “உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்” என்ற அனைத்துலகக் குழுவின் முன்னோக்குத் தீர்மானம், உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் பற்றிய முழு விரிவான பகுப்பாய்வுகளை முதல் தடவையாக வழங்கியது. இத்தகைய வேலைகளை பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி 1970களின் ஆரம்பத்தில் இருந்தே கைவிட்டிருந்தது. அந்தத் தீர்மானம், அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பகுதிகளதும் நெருக்கமான ஒருங்கிணைவிற்கு அடித்தளத்தை அமைத்தது. உற்பத்தி நிகழ்வுபோக்குகளது முன்கண்டிராத அளவிலான பூகோள ஒருங்கிணைப்பின் உள்ளர்த்தங்களை ஆய்வு செய்வதே இந்த ஆவணத்தின் மையமாக இருந்தது. உலகப் பொருளாதார உறவுகளிலான ஒரு பண்புரீதியான நகர்வைக் குறிக்கும், உற்பத்தி நிகழ்வுபோக்குகளில் இத்தகைய பூகோள ஒருங்கிணைப்பு, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்தையும் உலக சோசலிசப் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தையும் புறநிலையில் பலப்படுத்தியுள்ளது. “வர்க்கப் போராட்டம் என்பது வடிவத்தில் மட்டுமே தேசியரீதியானது, ஆனால் சாராம்சத்தில் அது சர்வதேசப் போராட்டமாகும், என்பதே வெகுகாலமாக மார்க்சிசத்தின் அடிப்படை கூற்றாக இருந்து வந்திருக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைப் பொறுத்தளவில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேசத் தன்மையை எடுத்தாக வேண்டும்... தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான போராட்டங்களும் கூட, சர்வதேச அளவில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை முன்வைக்கின்றன. முன்கண்டிராத அளவிலான மூலதனத்தின் சர்வதேச இயக்கமானது வெவ்வேறு நாடுகளின் தொழிலாள இயக்கத்தின் அனைத்து தேசியவாத வேலைத்திட்டங்களையும் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற்போக்குத்தனமானவையாகவும் ஆக்கியிருக்கின்றன. சகல இடங்களிலும் இத்தகைய வேலைத்திட்டங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உலகச் சந்தையில் “தங்களது” முதலாளித்துவ நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்கு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை திட்டமிட்டுக் குறைப்பதில் “தங்களது” ஆளும் வர்க்கங்களுடன் விரும்பி ஒத்துழைப்பதையே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றன”[61]

26-2. தேசிய அடித்தளம் கொண்ட வேலைத்திட்டங்களின் திவால்நிலை, தொழிலாள வர்க்கத்தின் பழைய தலைமைகளை பரவலாகப் பற்றிக்கொண்டுள்ள “கைவிடுதல்வாத” அலையில் பிரதிபலிக்கின்றது. “பாட்டாளி வர்க்கம் சமூகத்தில் ஒரு தனித்துவமான வர்க்கமாக இருப்பதுடன் அது முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தனது சுயாதீனமான நலன்களைப் பாதுகாத்தாக வேண்டும் என்ற அடிப்படை கொள்கைகளைக் கூட” ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் புறக்கணிக்கின்றன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் அதிகரித்துவரும் சீரழிவை அனைத்துலகக் குழு விரிவாக ஆராய்ந்தது. சகல நடுத்தர வர்க்க சந்தர்ப்பவாத போக்குகளுக்கும் எதிராக, கோர்பச்சேவின் கிளாஸ்நோஸ்ட்டும் (ஒளிவுமறைவின்மை glasnost) மற்றும் பெரெஸ்துரோய்காவும் (புனர்நிர்மாணம் perestroika) முதலாளித்துவ மீட்சிக்கான கொள்கைகளே என்று நான்காம் அகிலம் வலியுறுத்தியமை துரிதமாக நிரூபணமும் ஆனது. இலங்கையில் தமிழ் ஆயுதக் குழுக்களின் நெருக்கடி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு இடைவிடாத போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய முதலாளித்துவம் இலாயக்கற்றதாக இருப்பதில் இருந்தே எழுகின்றது என அந்த ஆவணம் நிறுவியது. புது டில்லியிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவானது, பாலஸ்தீனக் கிளர்ச்சியை (intifada) அரபு முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான நலன்களுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) அடிபணியச்செய்ததற்கும், நிக்கராகுவாவின் சன்டானிஸ்டாக்கள் வலதுசாரி கொண்ட்ரா கிளர்ச்சியாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கும் சமாந்தரமாய் கூறத்தக்கது.

26-3. உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பு, முதலாளித்துவத்தின் ஒரு புதிய பொற்காலத்தைத் திறந்து விடுவதற்கு மாறாக, உலகப் பொருளாதாரத்திற்கும் காலங்கடந்துபோய்விட்ட தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலும், மற்றும் சமூக உற்பத்திக்கும் தனியார் சொத்துடைமைக்கும் இடையிலும் அமைந்திருக்கக் கூடிய அடிப்படை முரண்பாடுகளை ஒரு புதிய உச்சத்திற்கு தீவிரமாக உயர்த்தியது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, ஏகாதிபத்திய உட் பகைமைகளின் அதிகரிப்பு, குறிப்பாக ஆசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புதிய பெரும் படையணிகளின் தோற்றம், பின்தங்கிய நாடுகள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுதல் மற்றும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி ஆகியவை உட்பட, புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய காலகட்டத்திற்கான உந்துசக்திகளை இத்தீர்மானம் அடையாளம் கண்டது.

26-4. தனது மூலோபாயப் பணிகளுக்குத் திரும்பிய அனைத்துலகக் குழு, பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவின் பெறுபேறாக இருந்த மிச்சசொச்சமான தேசியவாதப் போக்குகளில் இருந்து மீள்வதன் பேரில், 1985-86 பிளவினைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் படிப்பினைகளை சுருக்கமாக விவரித்தது. “புரட்சிகர சர்வதேசியவாதமானது சந்தர்ப்பவாதத்திற்கு நேர்விரோத அரசியல் எதிரியாகும். சந்தர்ப்பவாதமானது ஏதேனும் ஒரு வடிவத்தில், அவ்வப்போதான தேசியச் சூழலுக்குள் அரசியல் வாழ்க்கையின் யதார்த்தங்கள் என சொல்லப்படுவனவற்றுக்கு ஒரு நிச்சயமான அடிபணிவை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் குறுக்கு வழிகளைத் தேடும் சந்தர்ப்பவாதம், உலக சோசலிசப் புரட்சிக்கான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு மேலாக ஏதேனும் ஒரு தேசியவாத தந்திரோபாயத்தை உயர்த்திப் பிடிக்கும். ஒரு சந்தர்ப்பவாதி, உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை மிகவும் அரூபமானதாகக் கருதி, ஸ்தூலமான தந்திரோபாய முன்முயற்சிகளெனக் கூறப்படுவதன் மீது பேராவல் கொள்கின்றார். ஒரு சந்தர்ப்பவாதி, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச பண்பை ‘மறக்க’ முடிவு செய்வதோடு மட்டுமன்றி, ஒவ்வொரு நாட்டிலுமான நெருக்கடியின் தவிர்க்கவியலாத தோற்றுவாய் உலகளாவிய முரண்பாடுகளிலேயே இருக்கின்ற நிலையில், அந்த நெருக்கடியை ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உண்மையையும் அவர் ‘காணத்தவறுகிறார்’. கட்சியின் அரசியல் செயற்திட்டங்களில் ஒரு தேசிய தந்திரோபாயம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஆற்றினாலும், அந்த தேசிய தந்திரோபாயம், அனைத்துலகக் குழுவின் உலக மூலோபாயத்திலிருந்து வேறாக்கப்பட்டு அதற்கு மேலானதாக இருத்தப்பட்டாலோ, அல்லது அதற்குச் சமமான ஒன்றைச் செய்தாலோ, அதனால் அதன் புரட்சிகர உள்ளடக்கத்தைக் காக்க முடியாது. இதனால், அனைத்துலகக் குழுவின் பகுதிகள், அவை செயல்படுகின்ற நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கத்துக்கு செய்யக் கூடிய மைய வரலாற்றுப் பங்களிப்பு, உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கிற்கான கூட்டான ஐக்கியப்பட்ட போராட்டம் ஆகும்.”[62]


[61]

[உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்] The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, pp. 6–7.

[62]

அதே நூல் பக்கம் 70-71