Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

சோசலிச சமத்துவக் கட்சி

31-1 1996ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றியதானது தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புகளின் உருமாற்றங்களைப் பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எடுத்த முடிவுகளின் விளைவாகும். யுத்தத்துக்குப் பிந்திய ஸ்திரமாக்கல் மற்றும் பொருளாதார விரிவாக்க நிலைமைகளின் கீழ், பல்வேறு தொழிற்சங்க, சமூக ஜனநாயகவாத மற்றும் ஸ்ராலினிச அமைப்புக்களால், தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால வரலாற்று நலன்கள் காட்டிக்கொடுக்கப்பட்ட அதேவேளை, தேசியப் பொருளாதார ஒழுங்கமைப்பு என்ற கட்டமைப்பினுள் தொழிலாள வர்க்கத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட உடனடி வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது. இந்த நிலைமையில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச அமைப்புகள், சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களின் பரந்த தட்டினரின் அரசியல் விசுவாசத்தை பெற்றிருக்கின்றன என்பதை புரிந்துகொண்ட அனைத்துலக் குழுவின் பிரிவுகள், கழகங்கள் என்ற வடிவத்தை எடுத்திருந்தன. லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து பிரிந்து, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பாதையில் செல்ல வேண்டும் என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த கோரிக்கை, இந்த கட்சிகளை அம்பலப்படுத்துவதோடு தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய தட்டினரை வெற்றிகொள்வதை இலக்காகக் கொண்டிருந்தது. ஆயினும், உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது தேசிய சீர்திருத்தவாதத்தின் எந்தவொரு புறநிலை அடித்தளத்தையும் தகர்த்தெறிந்திருந்ததோடு பழைய அமைப்புகளை, 'சர்வதேசப் போட்டித்திறன்' என்னும் முடிவில்லாத ஓட்டத்தில் தொழில்கள், தொழில் நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை வெட்டித் தள்ளுவதில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நேரடியான முகவர்களாக மாற்றியிருந்தது. இந்தக் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட அல்லது அதன் பேரில் பேசிவரும் அமைப்புகளாக இனிமேலும் எந்தவகையிலும் கருத முடியாது.

31-2. லங்கா சம சமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும், முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த சந்திரிகா குமாரதுங்காவின் கீழ், மூன்றாவது ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் 1994ல் நுழைந்து கொண்டன. இந்த இரண்டு கட்சிகளும், 1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தில் பங்கேற்றதினால் தொழிலாள வர்க்கத்தில் உருவாகியிருந்த ஆழமான குரோதத்தில் இருந்தே ஒருபோதும் மீண்டிருக்கவில்லை. பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்ட போது லங்கா சம சமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றுக் கூடுகளாகவே இருந்தன. சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுப்பது ஒரு புறம் இருக்க, இந்தக் கட்சிகளில் எதுவும் அடிப்படை சமூக சீர்திருத்தங்களுக்காக போராடும் என்று கூட தொழிலாளர்கள் எதிர்பார்க்கவில்லை. குமாரதுங்கா யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலை முன்னெடுத்த போது, அதற்கு லங்கா சம சமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் வழங்கிய ஆதரவினால் மிச்சமிருந்த போலி நம்பிக்கைகளும் துரிதமாகக் கலைந்து போயின. இதனையடுத்து, அவை சுதந்திரமான கட்சிகளாக இருப்பதை விட, ஏறத்தாழ ஸ்ரீ.ல.சு.க.யின் கன்னைகளாகவே செயல்பட்டன.

31-3. நவ சம சமாஜக் கட்சி –இதன் தலைவர்கள், முதல் இரண்டு கூட்டணி அரசாங்கங்களையும் ஒருபோதும் எதிர்த்திருக்கவில்லை– குமாரதுங்காவின் தேர்வினை ஆதரித்தது. வாசுதேவ நாணயக்காராவின் தலைமையிலான ஒரு கன்னை, நவ சமசமாஜக் கட்சியின் வர்க்க ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் இருந்து தர்க்கரீதியான முடிவை எடுத்து, பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டது. நவ சமசமாஜக் கட்சியும் அதன் துணை விளைவான ஐக்கிய சோசலிசக் கட்சியும் (USP), கொழும்பு அரசியல் ஆளும்வர்க்கத்தை சுற்றி வரும் கோள்களாக இருந்து வந்ததோடு மேலும் மேலும் அவலட்சணமான, தொடர்ச்சியான, அரசியல் பந்தங்களில் இணைந்துகொண்டன. 1990களின் நடுப்பகுதியில், பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வளர்ச்சி கண்ட நிலையில், சற்றே ஒரு தசாப்தத்திற்கு முன்னர் துப்பாக்கிதாரிகள் மூலம் தனது உறுப்பினர்களையே சுட்டுக் கொன்ற மக்கள் விடுதலை முன்னணியுடன் நவ சம சமாஜக் கட்சி ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டது. குமாரதுங்காவினால் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்கங்களில் ஒரு இருப்பை ஸ்தாபிப்பதற்கான ஒரு படிக்கல்லாக நவ சமசமாஜக் கட்சியை பயன்படுத்திக் கொண்டு, பின்னர் கூட்டணியிலிருந்து உடைத்துக்கொண்டது. தமது பல்வேறு மாற்றங்கள் மற்றும் திருப்பங்களின் சமயத்திலும், நவ சம சமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் (USP) ஒரு விடயத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தன: அது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தின் மீதான அவற்றின் பகைமை உணர்விலாகும்.

31-4. இலங்கையில் தொழிற்சங்கங்களின் பரிணாமம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் தொழிற்சங்க அமைப்புகளுக்கு சமாந்தரமானவையாகும். பூகோளமயமான உற்பத்தியின் தாக்கத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான உரிமைகளைப் பாதுகாப்பதைக் கூடக் கைவிட்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், நிர்வாகத்தின் நேரடி முகவர்களாக உருமாறியிருக்கின்றன. தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புகளை அடுத்து, குறிப்பாக 1980 பொது வேலைநிறுத்தத்தின் பின்னர், தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை பாதாளத்திற்கு சரிந்தது. ஆயினும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அவற்றின் சமதரப்பினரைப் போலன்றி, இலங்கையில் இருந்த தொழிற்சங்கங்கள், பெரும்பகுதி வருவாய்க்கான மாற்று வழிகள் இல்லாமல் இருந்ததால், துரிதமாக சிதைவுற்றன. தொழிற்சங்கங்கள் கட்சியுடனான இணைப்புகளைக் கொண்டிருந்ததனால், பழைய கட்சித் தலைமைகள் மீதான வெறுப்பு அவற்றின் பாதாள வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்தின.

31-5. தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் - முதல் எடுத்துக்காட்டாய் வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) – ஒரு விசேட தன்மையை கொண்டிருக்கிறது. இ.தொ.கா. ஒரு தொழிற்சங்கம் என்பதை விட, ஒரு தந்தைவழி சேவைக்குணமுள்ள சமுதாயமாகவே எப்போதும் செயற்பட்டது. வீட்டு வசதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாடசாலை நடவடிக்கைகள் முதல் திருமணங்கள், மரணச் சடங்குகள் மற்றும் சமயக் கொண்டாட்டங்கள் வரை, தோட்டத்துறை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், நிர்வாகத்தின் ஆதரவுடன், அது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததன் காரணமாக, கணிசமான உறுப்பினர் எண்ணிக்கையையும் ஆதாரவளங்களையும் பெற்றிருந்தது. தனது உறுப்பினர்களை ஒரு அடிமை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள், பாராளுமன்றத்துக்குள் நுழைந்துகொண்டதோடு அமைச்சர் பதவிகளுக்கும் தனியந்தஸ்துகளுக்கும் பேரம் பேசினர். மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) போன்ற பல்வேறு மாற்று தொழிற்சங்கங்களும் வேறுவழியில் இயங்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றினை ஒடுக்குவதற்கு ஒன்றுபட்டு செயற்படுகின்ற இந்த அமைப்புகளில் எதுவும், தொழிலாளர்கள் இடையே எந்தவொரு கணிசமான சாதகமான ஆதரவையும் பெற்றிருக்கவில்லை.

31-6 சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை, தொழிலாள வர்க்கத்தின் புதிய இயக்கங்களைத் தயாரிப்பதில் இன்றியமையாத ஆரம்பப் படி ஆகும். இத்தகைய இயக்கங்கள், பழைய அமைப்புகளின் ஊடாக தோன்றப் போவதில்லை. மாறாக, அவற்றுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியிலேயே தோன்றும் –அது சோசலிச சமத்துவக் கட்சியினால் அரசியல் ரீதியில் தயார் செய்யப்பட்டு திட்டமிட்டு வழிநடத்தப்படும் கிளர்ச்சியாகும். சோசலிசத்தின் இன்றியமையாத குறிக்கோளாய் சமூக சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதில் - பல தசாப்தங்களாக சோசலிசம் என்ற பதம் சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதத்தினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இக்குறிக்கோள் மங்கச் செய்யப்பட்டிருந்தது - கவனத்தை குவிமையப்படுத்துவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே, சோசலிச சமத்துவக் கட்சி என்ற புதிய பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1996 முன்னோக்கு ஆவணம், ''தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அனைத்து பழைய கட்சிகள் மற்றும் அதிகாரத்துவங்களுக்கும் இடையிலான உறவில் மாற்றமேற்பட்டிருப்பதை அங்கீகரிப்பதானது, எதிர்வரவிருக்கும் வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்களுக்கான தலைமையை அனைத்துலகக் குழுவின் பகுதிகளை எடுத்துக்கொள்ளக் கோருகிறது'', என்ற முடிவுக்கு வந்தது.