Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

தேசியப் பிரச்சினை

30-1. பால்கன், கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றியதை அடுத்து அனைத்துலகக் குழு தேசியப் பிரச்சினை குறித்த ஒரு தீர்க்கமான மீளாய்வுக்கு மீண்டும் திரும்பியது. லெனின் 1913-16ல் தான் எழுதியவற்றில், ஜாரிசத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஆதரவை வெல்வதற்குமான ஒரு வழிமுறையாக “சுய-நிர்ணயத்துக்கான உரிமையை” பரிந்துரைத்தார். ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல்: “இந்த விடயத்தில் போல்ஷிவிக் கட்சி எந்த விதத்திலும் பிரிவினைக் கொள்கையை கையிலெடுக்கவில்லை. பொது அரசின் எல்லைகளுக்குள் ஏதேனும் ஒரு தேசியம் பலவந்தமாக தக்கவைக்கப்படுவது உட்பட, தேசிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக சமரசமற்று போராடுவதற்கான கடமைப்பாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டது. இந்த வழியில் மட்டும் தான் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக வென்றெடுக்க முடியும்.”[65] ஆயினும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான தசாப்தங்களில், பப்லோவாதிகளும் ஏனைய ஏராளமான குட்டி முதலாளித்துவ போலி-மார்க்சிஸ்டுகளும் “சுய-நிர்ணயத்திற்கான உரிமையை” திட்டமிட்டு திரிபுபடுத்தி, ஏறத்தாழ எந்தவொரு தேசிய-இனப் பிரிவினைவாத கோரிக்கைக்கும் ஆதரவளிக்க தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் கடமைப்பட்டுள்ளது என அர்த்தப்படுத்தின.

30-2. லெனினின் நிலைப்பாடு எப்போதும் சமூகப்-பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியின் அடிப்படையில் நிபந்தனைக்குரியதாகவே இருந்திருக்கிறது. முதலாம் உலகப் போருக்கு சற்று முன்னதாக, லெனின் கிழக்கு ஐரோப்பா, பால்கன் மற்றும் ஜாரிச பேரரசுகளில் சுய-நிர்ணயத்துக்கான உரிமையை பரிந்துரைத்தபோது, அந்தப் பிராந்தியங்கள் இன்னமும் விவசாயிகளின் செல்வாக்கில் இருந்ததோடு முதலாளித்துவமும் தேசிய இயக்கமும் மிகப் பெருமளவில் அவற்றின் குழந்தைப் பருவத்திலேயே இருந்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை அடுத்து, இந்தப் பிராந்தியங்களிலும் மற்றும் உலகைச் சூழவும் நிலைமைகள் மிகப் பரந்தளவில் வேறுபட்டவையாக இருந்தன. முன்னாள்-ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகளதும் முதலாளித்துவவாதிகளதும் சிறு கும்பல்கள், முதலாளித்துவ மீட்சி நிகழ்வுப்போக்கின் பாகமாக, தங்களது சொந்தப் பிராந்தியத்தை உருவாக்கியெடுக்கும் பொருட்டு, கிழக்கு ஐரோப்பா, பால்கன் மற்றும் ரஷ்யாவில் இன, மத உணர்வுகளைத் தூண்டி விட்டனர். இந்த இயக்கங்கள், ஏகாதிபத்திய-விரோதிகளாக இருப்பதற்கு மாறாக, ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெற செயலூக்கத்துடன் முயற்சித்தன. இந்த ஏகாதிபத்திய சக்திகள், பால்கனின் விடயத்தில் போல், தங்களது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய இலட்சியங்களை முன்நகர்த்துவதற்கான கருவியாக பிரிவினைவாதத்தை ஊக்குவித்தன. லெனினது காலத்தில், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமான காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளின் தேசிய இயக்கங்கள் ஆரம்பித்திருக்கவும் கூட இல்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் “சுதந்திரம்” பெற்ற இந்த தேசிய இயக்கங்கள், அடிப்படை ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதில் பரிதாபகரமாகத் தோல்விகண்டமையே இனம், மதம், மற்றும் மொழி அடிப்படையிலான புதிய பிரிவினைவாதப் போக்குகள் முளைத்தெழுவதற்குக் காரணமாகியது.

30-3.. உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது இருபதாம் நூற்றாண்டின் முடிவில் தேசிய-பிரிவினைவாத இயக்கங்கள் பரவுவதற்கு பிரதான காரணியாக இருந்தது. பூகோளமயமாக்க நிகழ்வுப் போக்கானது பூகோளச் சந்தை மற்றும் பூகோள ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், தேசிய சந்தை மற்றும் தேசியரீதியில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியின் முக்கியத்துவத்தை பரந்தளவில் குறைத்துள்ளது. அனைத்துலகக் குழு விளக்கியது போல்: “புதிய பூகோள பொருளாதார உறவுகள், தற்போதைய அரசுகளில் இருந்து பிரிந்துபோக முனைகின்ற, ஒரு புதிய வகை தேசியவாத இயக்கத்திற்கு புறநிலை உந்துதலை வழங்கியுள்ளன. உலகளாவியரீதியில் நகரும் மூலதனம், உலகச் சந்தையுடன் தம்மை நேரடியாக இணைத்துக்கொள்ளும் இயலுமையை சிறிய பிராந்தியங்களுக்கு வழங்கியுள்ளது. ஹொங் கொங், சிங்கப்பூர் மற்றும் தைவானும் அபிவிருத்தியின் புதிய மாதிரிகளாக ஆகியிருக்கின்றன. ஒரு சிறிய கடற்கரைத் தீவு போதுமான போக்குவரத்து இணைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மலிவு உழைப்பு விநியோகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால், அது, குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட ஒரு பெரிய நாட்டைக் காட்டிலும், பன்னாட்டு மூலதனத்துக்கான அதிக கவர்ச்சிகரமான தளமாக நிரூபணமாகலாம்.”[66]

30-4. புதிய பிரிவினைவாத இயக்கங்களின் பண்பை சுருங்க விவரித்த அனைத்துலகக் குழு விளக்கியதாவது: “இந்தியாவிலும் சீனாவிலும்,” இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியின் தேசிய இயக்கங்கள், “ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சிதறிக் கிடக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் முற்போக்கான கடமையை மேற்கொண்டன. இந்தப் பணி தேசிய முதலாளித்துவத்தின் தலைமையின் கீழ் எட்ட முடியாதது என்பது நிரூபணமானது. புதிய வடிவிலான தேசியவாதம், உள்ளூர் சுரண்டல்காரர்களின் ஆதாயத்திற்காக நடப்பில் உள்ள அரசுகளை பிரிக்கும் நோக்கத்துடன் இன, மொழி மற்றும் மதத்தின் அடிப்படையிலான பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இத்தகைய இயக்கங்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அதேபோல் எந்த அர்த்தத்திலும் அவை ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளின் வடிவமாகவும் இல்லை. அவை தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் வர்க்கப் போராட்டத்தை இன-வகுப்புவாதப் போராட்டமாக திசைதிருப்புவதற்குமே சேவை செய்கின்றன.”[67] தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் நோக்கத்தில், அனைத்துலகக் குழுவானது, தேசிய பிரிவினைவாத இயக்கங்கள் பெருகுவதையும் மற்றும் அவை தனித்தனியான முதலாளித்துவ அரசுகள் உருவாவதை நியாயப்படுத்துவதற்கு “சுய-நிர்ணய உரிமையைப்” பயன்படுத்துவதை பற்றியும் ஒரு விமர்சனரீதியான அணுகுமுறையை, இன்னும் குரோதமானதுமான அணுகுமுறையையும் கூட வலியுறுத்தியது.

30-5. தேசிய முதலாளித்துவம் ஜனநாயகப் புரட்சியை கருவறுத்தமையும் மற்றும் அதனதன் தேசியவாத வேலைத்திட்டத்தின் தோல்வியும் மதம், சாதி, மொழி மற்றும் இனத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்தரப்பட்ட பிளவுபட்ட முதலாளித்துவப் போக்குகளை உருவாக்கியிருக்கக் கூடியதான தெற்காசியாவிற்கு இந்தப் பகுப்பாய்வு குறிப்பாகப் பொருந்தும். இந்தியாவில், தேசியப் பொருளாதாரக் கட்டுப்பாடு என்னும் பழைய திட்டங்களில் இருந்து திரும்பி அந்நிய முதலீட்டையும் உலகளாவிய உற்பத்தி முறைகளுக்குள் ஒருங்கிணைப்பையும் தழுவிக் கொண்டதானது பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தியிருப்பதோடு சமூக சமத்துவமின்மையையும் ஆழப்படுத்தயிருக்கிறது. இதன் விளைவான சமூக நெருக்கடியும் வெகுஜன சீற்றமும், பல்வேறு முதலாளித்துவ போக்குகளால், காஷ்மீர், தமிழ்நாடு, அசாம் மற்றும் வட-கிழக்கின் ஏனைய பாகங்களில் இனரீதியில் வரையறுக்கப்பட்ட தனியான தேசிய அரசுகளை உருவாக்குவதற்கு நெருக்குவது உட்பட, இனப் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க சுரண்டிக்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துலகக் குழு விளக்கியதாவது: “பழைய முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் உடைவிற்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி எவ்வாறு பதிலிறுப்பு செய்கிறது? என்பதே இங்குள்ள முக்கிய கேள்வியாகும். இந்த நாடுகளின் வெகுஜனங்கள், காலனித்துவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு (decolonisation) மத பிரத்தியேகவாதத்தினால (particularism) நிறுவப்பட்ட அரசுத் துண்டுகளை அடிப்படையாகக் புதிய பிரிவினைவாத இயக்கங்களின் ஊடாக தங்களது நலன்களை முன்னெடுக்க வேண்டுமா? அத்தகையதொரு முன்னோக்கை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்தியாவில் அல்லது வேறெங்கிலும் சரி, அத்தகைய குட்டி அரசுகள் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எந்த முன்னேற்றமான வழியையும் வழங்காது. அதிகப்பட்சம், அவற்றால் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்கி, நாடு கடந்த மூலதனத்துடன் தனது சொந்த ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொள்ள முடியுமெனில், தனியந்தஸ்து பெற்ற வர்க்கங்களின் ஒரு சிறிய பிரிவினருக்காக அந்த அரசுகளால் இலாபத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் வெகுஜனங்களைப் பொறுத்தவரை, இனமோதல்களின் இரத்த ஆறு ஓடுவதற்கும், சுரண்டல் உக்கிரமாக்கப்படுவதற்கும் மட்டுமே வாய்ப்பை ஏற்படுத்தும்.”[68]

30-6. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கலந்துரையாடலின் பாகமாக, “தமிழ் மக்களின் சுய நிர்ணய” உரிமைக்கு ஆதரவளிப்பதானது, நடைமுறை அரசியல் அர்த்தத்தில், முற்போக்கான உள்ளடக்கம் எதையும் கொண்டிருக்காத விடுதலைப் புலிகளின் தேசிய பிரிவினைவாத வேலைத்திட்டத்தை ஆதரிப்பதை மட்டுமே அர்த்தப்படுத்தும் என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முடிவு செய்தது. 1990ல் போர் மீண்டும் தொடங்கியபோது, புலிகள் மேலும் மேலும் ஆழமான ஜனநாயக-விரோத மற்றும் இனவாதப் பண்பை எடுத்தனர்: அரசியல் எதிர்ப்பை சட்டவிரோதமாக்குவது மற்றும் அரசியல் எதிரிகளைக் கொலைசெய்வது; முஸ்லீம்கள் அனைவரையும் “எதிரியின் முகவர்கள்” எனக் கண்டனம் செய்து அவர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது; சிறைப்பிடித்த இராணுவத்தினரையும் பொலிசையும் கொலைசெய்வது; மற்றும் அப்பாவி சிங்கள மக்களை கண்மூடித்தனமாக கொல்வது ஆகியவை அதில் அடங்கும். புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை நிராகரிக்கும் அதே வேளை, தீவின் ஒற்றிணைப்பை இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாகப் பராமரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொடர்ந்து விட்டுக்கொடுப்பின்றி எதிர்த்து வந்துள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இராணுவப் படைகள் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்ற அதன் கோரிக்கை, எந்தவிதத்திலும் ஒரு தனி ஈழத்தை ஆதரிப்பதை அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, தமிழர்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறையை எதிர்ப்பதில், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஐக்கியப்படுத்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முயற்சிக்கின்றது.


[65]

[லியோன் ட்ரொட்ஸ்கியின் ரஷ்யப் புரட்சியின் வரலாறு] Leon Trotsky, History of the Russian Revolution, Volume 3 (London: Sphere Books, 1967) pp. 41–42.

[66]

[பூகோளமயமாக்கமும் அனைத்துலகத் தொழிலாள வர்க்கமும்]International Committee of the Fourth International, Globalisation and the International Working Class, Mehring Books, 1998, p. 108.

[67]

அதே நூல் பக்கம் 109.

[68]

அதே நூல் பக்கம் 115..