Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

2000ஆவது ஆண்டின் இலங்கை நெருக்கடி

33-1. புத்தாயிரமாண்டு பிறந்த போது, 2000 ஏப்ரலில் ஆனையிறவு விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தது தொடங்கி தொடர்ச்சியான இராணுவப் படுதோல்விகளால் இலங்கை அரசாங்கம் முற்றுமுதலான குழப்பத்தில் இருந்தது. ''1948ல் இருந்து கொழும்பு ஆட்சி எதிர்கொண்ட மிகக் கடுமையான நெருக்கடி'' என்று அவரே வருணித்த நிலைமையின் மத்தியில், ஜனாதிபதி குமாரதுங்கா அரசியல் ஆதரவுக்கு ஏங்கிக்கொண்டிருந்தார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உத்தியோகபூர்வ கட்சி அந்தஸ்து மறுக்கப்பட்டு வந்திருந்த நிலையில், திடீரென சோசலிச சமத்துவக் கட்சிக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தின் பின்னர், அரசியல் நெருக்கடியைப் பற்றி கலந்துரையாடுவதற்கான அனைத்துக் கட்சி மாநாடு ஒன்றில் பங்குகொள்ளுமாறு ஜனாதிபதியின் அழைப்பு ஒன்று சோசலிச சமத்துவக் கட்சிக்கு கிடைத்தது. அந்த அழைப்பை நிராகரித்து விஜே டயஸ் விடுத்த அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தைகள் ''அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள முடிவுகளுக்கு முத்திரை குத்துவதாகவும், அதன் கொள்கைகளுக்கு நம்பகத்தன்மையை வழங்குவதாகவும், மற்றும் தீவு முழுவதிலும் வாழும் சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களுக்கு அழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்த ஒரு போரைத் தொடர்வதற்கு ஆதரவைப் பெறுவதற்குமானதாகவுமே'' காணப்படுகின்றது என கண்டனம் செய்தார்.

33-2. 2000 ஜூனில் நடந்த உலக சோசலிச வலைத் தள மற்றும் அனைத்துலகக் குழுவின் அமர்வில், குமாரதுங்காவின் கடிதத்தின் முக்கியத்துவமும் அனைத்துலகக் குழுவின் சகல பகுதிகளுக்குமான அரசியல் படிப்பினைகளும் மிகவிரிவாக கலந்துரையாடப்பட்டன. டேவிட் நோர்த் தனது ஆரம்ப அறிக்கையில் விளக்கியதாவது: ''நமது இயக்கத்தின் ஒரு பகுதி, தேசிய அரசாங்கத்துடனான அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கான ஒரு அழைப்பைப் பெற்றிருக்கிறது என்பதை அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக நாம் காணவேண்டும். இது கௌரவப்படுத்தப்பட்டதாக உணர்வதற்கான விடயம் அல்ல - நாம் நிச்சயமாக அப்படி நினைக்கவில்லை. மாறாக நாம் சில காலமாகவே கூறி வரும் ஒரு விடயத்திற்கு ஒரு முக்கியமான ஆதாரமாக ஆகியிருக்கிறது: குறிப்பிட்ட கட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் உறவுகள் ஆதிக்கம் செலுத்திய மற்றும் எதுவும் மாறாததாகவும் ஏறத்தாழ நகர்த்த முடியாததாகவும் காணப்பட்ட நடப்பில் உள்ள மற்றும் நெடுங்காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த அரசியல் உறவுகளின் தோற்றத்துக்கு கீழாக, மாபெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. மேற்பரப்புக்குக் கீழாக வர்க்க உறவுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தில் பாரியளவிலான மாற்றங்களாலும் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார இடைத்தொடர்புகளின் வடிவங்களில் மாற்றங்களாலும் – அதாவது, உற்பத்தி வழிமுறை மற்றும் உற்பத்தி உறவுகளிலான ஆழமான மாற்றங்களாலும் – தீவிரமாக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார அடித்தட்டுகளின் நகர்வுகள், ஒட்டுமொத்த அரசியல் மேற்கட்டுமானத்திலும் பிரமாண்டமான மாற்றங்களை கட்டியெழுப்பிக்கொண்டிருப்பதோடு திடீரென்ற, தீவிரமான மற்றும் அழிவுகரமான அரசியல் உருமாற்றங்களுக்கான வழியைத் தயார் செய்துகொண்டிருக்கின்றன''.

33-3. சுயதிருப்தி அல்லது அரசியல் செயலின்மையை நோக்கிய எந்தவொரு போக்குக்கும் எதிராக இந்த அமர்வு எச்சரிக்கை விடுத்தது. முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு புதிய ஆதரவுத் தளத்தை அனைத்துலகக் குழுவின் பகுதிகளின் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய முயற்சிகள் போலவே, அரச அடக்குமுறை பயன்படுத்தப்படுவது உள்ளடங்கிய, திடீர் அரசியல் மாற்றங்களுக்கும் அனைத்துலகக் குழு தயாராக இருக்க வேண்டும். கட்சியை தயார்ப்படுத்தவும் மற்றும் அது தயாரின்மைக்குள் சிக்கிக் கொள்ளாதிருப்பதை உறுதிப்படுத்தவும் தேவையான நிலையான அரசியல் கோட்பாட்டு வேலைகள் இங்கு வலியறுத்தப்பட்டுள்ளன. அரசியல் பிரச்சினைகள் சம்பந்தமாக இடைவிடாது செயலாற்றுவதன் மூலம், கட்சி தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் முன்னணிப் படையின் மீதும் முதலாளித்துவ சமுதாயத்தால் தன்னிச்சையாக உருவாக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிர்நடவடிக்கை எடுப்பதுடன், அது குட்டி முதலாளித்துவ மற்றும் காட்சிவாத முறையில் விடயங்களில் இறங்காது என்பதையும் உறுதிசெய்கிறது. தொழிலாள வர்க்க மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் புரட்சிகர சோசலிச இயக்கத்தின் அபிவிருத்திக்கு இன்றியமையாத அங்கமாக, அனைத்துலகக் குழுவின் பகுதிகளின் பாத்திரத்தை சிறப்படையச் செய்வதும் இதில் அடங்கும்.