Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

போரும் இராணுவவாதமும்

34-1 பனிப்போர் கால பூகோள அரசியல் கட்டமைப்பின் முடிவு, ஏகாதிபத்திய போட்டிகள் தீவிரமடைவதற்கும் இராணுவவாதம் வெடிப்பதற்கும் வழிவகுத்தது. எஞ்சியிருக்கும் ஒரே ''வல்லரசாக'' அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது எஞ்சியிருக்கும் இராணுவ வலிமையை மூர்க்கமாகப் பயன்படுத்துவதன் ஊடாக தனது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு முனைந்தது. 1990ல் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததை சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, அமெரிக்கா எரிசக்தி வளம் மிகுந்த மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு நீண்டகாலமாகக் கொண்டிருந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 1990-91 வளைகுடாப் போரை, தனது சொந்த எதிர்கால கொள்ளையடிக்கும் இலட்சியங்களை நியாயப்படுத்துவதற்கான வழியாக ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும், அதேபோல் சோவியத் மற்றும் சீனாவின் ஆட்சிகளும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் அதிகாரத்துவங்களும் ஆதரித்தன. “ஏகாதிபத்தியப் போரையும் காலனியாக்கத்தையும் எதிர்'' என்ற தலைப்பிலான தனது 1991 வேலைத்திட்ட அறிக்கையில், நவ காலனித்துவத்தின் ஒரு புதிய காலகட்டம் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற முடிவை அனைத்துலகக் குழு எடுத்தது. ''இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஏறத்தாழ ஈராக்கைத் துண்டாடும் நடவடிக்கையானது, ஏகாதிபத்தியவாதிகளால் உலகம் புதிதாக மறு பங்கீடு செய்யப்படுவதன் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. ஏகாதிபத்தியத்துக்கு வக்காலத்து வாங்கும் சந்தர்ப்பவாதிகளால் கடந்து போய் விட்ட சகாப்தத்திற்கு சொந்தமானவை என்று கூறப்பட்ட நாடுகளைக் கைப்பற்றி இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, மீண்டும் அன்றாட நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.”[70]

34-2. முதலாவது வளைகுடாப் போர், ஐக்கிய நாடுகள் சபையின் பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, 1999ல் சேர்பியாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீட்டுக்கு அத்தகைய போலிமறைப்பு இருக்கவில்லை. பால்கன்களில் நேட்டோவின் போருக்கு கூறப்பட்ட கொசோவோ மக்களை இனப்படுகொலை செய்யப்படுவதை தடுப்பது என்ற சாக்குப் போக்கு, மேலதிக நவ-காலனித்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நியாயப்படுத்துவதாகவே ஒரு மனிதாபிமான போலிச்சாக்காக பொதுமைப்படுத்தப்பட்டது. உண்மையில், பால்கன் யுத்தமானது சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவைத் தொடர்ந்து, குறிப்பாக புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட, வளங்கள் நிறைந்த மத்திய ஆசியாவின் குடியரசுகளில் திறந்துவிடப்படும் வாய்ப்புகளை சுரண்டுவதற்கான பரந்த அமெரிக்க மூலோபாயத்தின் பகுதியாகும். மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை கைப்பற்றுவதற்கான அமெரிக்க குறிக்கோள்களை முன்நகர்த்துகையில், 2001 செப்டம்பர் 11 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை பற்றிக் கொண்ட புஷ் நிர்வாகம், அதனை 2001ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கவும் 2003ல் ஈராக்கை ஆக்கிரமிப்பதற்குமான நியாய ஆதாரமாக ஆக்கியது. “முன்கூட்டியே யுத்தம் செய்தல்” என்ற புஷ்ஷின் புதிய கோட்பாடு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாஜி தலைவர்கள் மீதான விசாரணைக்கு காரணமாக இருந்த - ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுத்த - அடிப்படைக் குற்றத்துடன் ஒப்பிடக்கூடியதாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், பிரான்ஸ் தலைமையில் ஈராக் போருக்கு காட்டப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்கு, மத்திய கிழக்கில் ஏனைய சக்திகள் நீண்டகாலமாக பாதுகாத்து வந்த நலன்களில் அமெரிக்கா குறுக்கே நுழைக்கிறது என்ற அச்சம் மட்டுமே அடிப்படையாக இருந்தது. ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக சர்வதேசரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட பரந்த வெகுஜனப் போராட்டங்கள் முன்னெப்போதுமில்லா அளவு எழுச்சி கண்டதானது, போர் எதிர்ப்பு இயக்கத்தின் புறநிலையான, புரட்சிகர சாத்தியத்தை கோடிட்டுக் காட்டியதோடு, அதன் அரசியல் பலவீனத்தையும், அதாவது அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது ஐ.நா. ஊடாக யுத்தத்தை நிறுத்திவிட முடியும் என்று முழு போலி-தீவிரவாத அமைப்புக்களால் உருவாக்கிவிடப்பட்ட அழிவுகரமான மாயையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த ஆர்ப்பாட்டங்களின் தோல்வியானது, இலாப நோக்கு அமைப்புமுறை மற்றும் உலகம் முதலாளித்துவ தேசிய அரசுகளாக காலத்திற்கொவ்வாத முறையில் பிரிக்கப்பட்டுள்ளமை போன்ற அடித்தளமான காரணிகளை தூக்கி வீசுவதற்கு, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே யுத்தம் தடுக்கப்பட முடியும் என்ற மார்க்சிசத்தின் அடிப்படைப் படிப்பினையை கோடிட்டுக் காட்டியது.

34-3. கடந்த இரண்டு தசாப்தங்களிலான அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு, உலகம் முழுவதையும், குறிப்பாக தெற்கு ஆசியாவை ஆழமாக ஆட்டங்காணச் செய்யுமளவு பாதித்துள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவும் தனது எதிரிக்கு எதிராக பேரினவாத உணர்வுகளை கிளறி விடுவதன் மூலம் உள்நாட்டில் கூர்மையான சமூகப் பதட்டங்களை திசைதிருப்பிவிட முயல்கின்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் உக்கிரமடைந்து வந்திருக்கின்றன. 1998ல் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பரிசோதித்ததுடன், 1999ல் பாகிஸ்தான் துருப்புக்களும் இஸ்லாமிய போராளிகளும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் இருக்கும் கார்கில் பகுதியினுள் ஊடுருவி ஆக்கிரமித்த சமயத்தில் ஏறக்குறைய இரண்டு நாடுகளும் மோதலின் விளிம்பில் நின்றன. போராளிகளை ஆதரிப்பதை கைவிடும்படி அமெரிக்கா பாகிஸ்தானை நிர்ப்பந்தம் செய்ததை அடுத்து, ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தலைமையிலான இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 2001ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருமாறும், அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கு உதவுமாறும் முஷாரப்பை நிர்ப்பந்தித்ததால் அமெரிக்கா பாகிஸ்தானை மேலும் ஆட்டங்காணச் செய்தது. வாஷிங்டனின் போலியான “பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை” அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்ட புது டில்லி, இஸ்லாமாபாத் சம்பந்தமாக மேலும் மேலும் மோதலையே நாடும் அணுகுமுறையை எடுத்தது. 2001 டிசம்பரில் புது டில்லியில் பாராளுமன்ற கட்டிடத்தின் மீது இஸ்லாமிய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுடனான எல்லையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்களை நிறுத்தியது. பின்வாங்குவதற்கு முந்தைய மாதங்களில், இரண்டு அணு ஆயுத சக்திகளும் ஒரு முழுமூச்சான போரின் விளிம்பில் நின்றன. தசாப்தம் பூராவும் நீண்ட ஆப்கானிஸ்தான் மீதான நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் எல்லைகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளதுடன், ஜனாதிபதி ஒபாமாவின் கீழ், அது ஆப்-பாக் (ஆப்கான்-பாகிஸ்தான்) போராக ஆகியிருக்கின்றது. அதிகரித்துவரும் சி.ஐ.ஏ.யின் ஆளில்லா விமானத் தாக்குதல்களும் பாகிஸ்தானுக்குள் பழங்குடிப் பிரதேசங்களில் அமெரிக்க-ஆதரவு பாகிஸ்தான் இராணுவத்தின் அழிவுகரமான நடவடிக்கைகளும், இஸ்லாமாபாத்தில் ஆழமான அரசியல் நெருக்கடியை பெருகச் செய்துள்ளன. 1947ன் பின்னர், தெற்காசியாவில் முதலாவது நேரடி ஏகாதிபத்திய தலையீடான இந்த ஆப்-பாக் போரை எதிர்ப்பதற்கு, பிற்போக்கு இஸ்லாமியக் குழுக்களைத் தவிர வேறு எவரும் முன்வரத் தவறியதைக் காட்டிலும், இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவத்தினதும் மற்றும் தொழிலாள வர்க்கத்திலுள்ள அதன் முகவர்களினதும் அரசியல் திவால்நிலையை வெளிக்காட்டுவதற்கு வேறு சாட்சியங்கள் கிடையாது.


[70]

Fourth International, Volume 18, No. 1, Summer–Fall 1991, p. 2.