Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

ஸ்ராலினிசத்தின் மூலங்களும் இடது எதிர்ப்பு நிறுவப்படுதலும்

40. 1923ம் ஆண்டு ஜேர்மனியப் புரட்சி தோல்வி அடைந்தது சோவியத் ஒன்றியத்தில் அரசிலும் கட்சி அதிகாரத்துவத்திலும் இருந்த பழமைவாத போக்குகளை கணிசமாக வலுப்படுத்துவதற்கு உதவிற்று. 1921 வசந்தத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையை சோவியத் ஆட்சி செயல்படுத்த தொடங்கியபின் குறிப்பாக இப்போக்குகள் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. NEP (புதிய பொருளாதாரக் கொள்கை) முதலாளித்துவ சந்தை புதுப்பிக்கப்பட அனுமதித்து நகரங்களிலும் கிராமப் புறங்களிலும் கணிசமான பொருளாதாரச் சலுகைகளையும் முதலாளித்துவ அடுக்குகளுக்கு கொடுத்திருந்தது. இத்தகைய சலுகைகளுடைய நோக்கம் பல ஆண்டுகள் நடைபெற்ற போர் மற்றும் புரட்சியினால் சிதைந்திருந்த பொருளாதார செயல்களைப் புதுப்பிப்பதாகும். சர்வதேச புரட்சிகர போராட்டத்தின் புதுப்பிக்கப்பட்டதொரு எழுச்சிக் காலம் வரை சோவியத் ஒன்றியத்துக்கான அவகாச காலத்தை பெறும் வகையில், NEP ஆனது ஒப்புமையளவில் ஒரு குறுகிய-கால கொள்கையாகவே இருக்கும் என்பது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் நம்பிக்கையாக இருந்தது என்றாலும், இது பழமைவாத சமூக சக்திகளை வலுப்படுத்தி சோவியத் வாழ்க்கையின் பொருளாதார மற்றும் அரசியல் இயங்கியலை மாற்றிவிட்டது. இந்த நிகழ்வுப்போக்குகள் போல்ஷிவிக் கட்சியிலும் பிரதிபலித்து தலைமையில் ட்ரொட்ஸ்கியின் நிலையை பலவீனப்படுத்தின. ஆளும் உயரடுக்குக்குள்ளும், பெருகி வந்த கட்சி மற்றும் அரச அதிகாரத்துக்குள்ளும், பழமைவாதம் மற்றும் மெத்தனத்திற்கான மனோநிலைகள் முன்னெப்போதையும் விடவான வெளிப்டையான அரசியல் வெளிப்பாட்டைக் காணலாயிற்று. ட்ரொட்ஸ்கி தனது சுயசரிதையில் நினைவுகூருகிறார்:

"எல்லாமும் எப்போதும் புரட்சிக்காகவே என்பதல்ல, ஆனால் ஒருவரின் தனிநலனுக்காகவும் தான்" என்னும் மனோநிலையானது "நிரந்தரப் புரட்சி ஒழிக" என்பதாக மொழிபெயர்ப்பாகியது. புரட்சியின் தத்துவார்த்த கோரிக்கைகளுக்கு எதிரான கலகமானது, இந்த மனிதர்களின் கண்களில் "ட்ரொட்ஸ்கிசவாதத்திற்கு" எதிரானதொரு போராட்டத்தின் வடிவை படிப்படியாக உருக்கொண்டது. இந்த பதாகையின் கீழ், போல்ஷிவிக் கட்சியில் மேம்போக்கானதனத்தினை விடுவிப்பது முன்செல்லத் தொடங்கியது. இதனால் தான் நான் அதிகாரத்தை இழந்தேன், இது தான் இந்த இழப்பு எடுத்த வடிவத்தை தீர்மானித்தது.[28]

41. "ட்ரொட்ஸ்கி விவசாயிகளை குறைத்து மதிப்பிடுகிறார்" என்ற பொய்யுடன் ஆரம்பிக்கப்பட்டு லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நிரந்தர புரட்சி கோட்பாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பெருகிய அளவிலான கடுமையான தாக்குதல்கள் அக்டோபர் புரட்சியின் சர்வதேச வேலைத்திட்டத்தின் மீது பெருகிய அளவில் அரசு மற்றும் கட்சி அதிகாரத்துவத்தினது வெறுப்பின் அரசியல் பிரதிபலிப்பாக இருந்தன. ஸ்ராலினின் அதிகரித்த அரசியல் அதிகாரமும் அவரது பெயருடன் தொடர்புபடுத்தப்படும் அதிகாரத்துவ சர்வாதிகாரமும் சோசலிச புரட்சியின் ஒரு தவிர்க்கவியலாத விளைபொருள் அல்ல, மாறாக ஒரு பின்தங்கிய நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு, சர்வதேச புரட்சியின் தோல்விகளால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாளர் அரசின் முரண்பாடுகளில் இருந்து அபிவிருத்தியுறுவது ஆகும். ஜாரிச ரஷ்யாவில் இருந்து பரம்பரைச் சொத்தாக வந்த பொருளாதார பின்தங்கிய நிலைமை, ஏழு வருட ஏகாதிபத்திய (1914-17) மற்றும் உள்நாட்டு (1918-21) யுத்தத்தின் சீரழிவான விளைவுகளால் மேலும் சிக்கலுற்று, போல்ஷிவிக் கட்சியானது சோவியத் பொருளாதாரத்தை எதன் மீது கட்ட எண்ணியிருந்ததோ அந்த சடத்துவ அஸ்திவாரங்களை சிதைத்து விட்டிருந்தது. தவிரவும், உள்நாட்டு யுத்தமானது பெருமளவில் மனித உயிர்களை தொழிலாள வர்க்கத்தில் இருந்து மற்றும் போல்ஷிவிக் கட்சியிலிருந்துமே கூட பலி கொண்டிருந்தது. போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான அடிப்படையை உருவாக்கிய வர்க்க சிந்தனையுள்ள தொழிலாளர்களின் ஒரு கணிசமான பிரிவு கொல்லப்பட்டிருந்தது. போல்ஷிவிக் கட்சியின் சீரழிவுக்கு மற்றுமொரு முக்கிய காரணம் அதன் காரியாளர்களில் ஒரு கணிசமான பிரிவினர் மலர்ந்து வந்த அரசு மற்றும் கட்சி அதிகாரத்துவத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். நீண்ட-கால புரட்சியாளர்கள் நிர்வாகிகளாக மாற்றப்பட்டனர், இந்த மாற்றம் நாளடைவில் அவர்களின் அரசியல் நோக்குநிலையில் ஒரு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இது தவிர, புதிய அரசாங்கத்தில் திறமைவாய்ந்த நிர்வாகிகளின் தேவை இருந்ததால் முந்தைய ஆட்சியில் அதிகாரத்துவத்தில் செயலாற்றிய மக்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினரை பணியமர்த்துவது அவசியமாகியது. அரச அமைப்பில் நிகழ்ந்த இந்த பெருக்க மாற்றங்கள், "பழைய" போல்ஷிவிக்குகள் பலரின் சமூக செயல்பாடு, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒட்டுமொத்த நிலை ஆகியவை இறுதியாக அரசியல் வெளிப்பாட்டைக் கண்டன.

42. ட்ரொட்ஸ்கி பின்னர் தெளிவுபடுத்திக்கூறியபடி, புரட்சி மற்றும் உள்நாட்டுப்போர் ஆகியவற்றில் இருந்து உருவாகிய சோவியத் அரசானது முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்ட ஒரு நிகழ்வுப்போக்காகும். ஒரு புறத்தில் அது பழைய அரசு அமைப்பை தூக்கியெறிந்து மிகப்பெரியளவில் பூர்ஷ்வா சொத்து உறவுகளை அகற்றிய ஒரு உண்மையான தொழிலாள வர்க்கப் புரட்சியின் விளைவாகும். புதிய அரசானது புதிய சொத்துடமை உறவுகளை, அதாவது நிதியங்களினதும் மற்றும் உற்பத்தி சாதனங்களின் உடைமை உரிமையையும், அரச கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாத்து அதனை தக்க வைத்துக் கொண்டது. இந்த விதத்தில் 1917 அக்டோபர் புரட்சியினால் தோற்றுவிக்கப்பட்ட புதிய ஆட்சி ஒரு தொழிலாளர் அரசாகும். ஆனால் அங்கே இன்னொரு பக்கமும் இருந்தது. உற்பத்தி சக்திகளின் குறைந்த மட்டத்தினதும் மற்றும் ‘பரந்துபட்ட தேவையும்’ சோவியத் ரஷ்யாவில் வியாபித்திருந்த விளைவினால், புதிய அரசு ஒரு பூர்ஷ்வா விநியோக முறைக்கு (அதாவது சமத்துவமற்ற) தலைமை தாங்கியது. சோசலிச வடிவிலான சொத்துடைமை உரிமைக்கும் பூர்ஷ்வா வடிவிலான விநியோகத்திற்குமிடையிலான இந்த அடிப்படை முரண்பாடு சோவியத் ஆட்சிக்கு, அதற்கு பிரத்தியேகமாவும் அதிகரித்த முறையிலும் அடக்குமுறை வடிவத்தை தான் கொடுத்தது.

43. ட்ரொட்ஸ்கியும் அவருடைய ஆதரவாளர்களும் --ரஷ்ய புரட்சியின் மிக முக்கியமான தலைவர்கள் பலர் உட்பட-- 1923ல் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை சீர்திருத்தவும் கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டை சரிசெய்வதற்கு போராடவும் இடது எதிர்ப்பை உருவாக்கினர். இடது எதிர்ப்பின் ஆதரவாளர்கள் உள்கட்சி ஜனநாயகத்தின் சிதைவை எதிர்த்தனர், சோசலிச திட்டமிடலை வலுப்படுத்துவதற்கும் தொழில்துறை பொருட்கள் விலை குறைக்கப்படுவதற்கும் அரச தொழில்துறை வளர்ச்சியின் மீது கூடுதலான வலியுறுத்தலை செய்யும் பொருளாதார கொள்கைக்காக வாதாடினார்கள். ஆனால் இன்னும் கூடுதலான வகையில் சந்தை தாராளமயத்தை ஸ்ராலினின் கன்னை விரும்பியதானது விவசாயிகளில் வசதியுடைய பிரிவுகளிடத்தில் (குலாக்கள்) கூடுதலான நோக்குநிலையையும் மற்றும் அரசுத்துறையில் வளர்ச்சியிலும் மற்றும் பொருளாதாரத் திட்டமிடலிலும் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியையும் நோக்கமாக கொண்டிருந்தது. ஸ்ராலினுடைய தலைமையில் இருந்த இப்பிரிவின் கரங்கள், லெனின் நோய்வாய்ப்பட்டபோதும் பின்னர் ஜனவரி 1924ல் இறந்ததை அடுத்தும் வலுவாக்கப்பட்டன. தன்னுடைய கடைசி எழுத்துக்களில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியில் பெருகிய முறையில் அதிகாரத்துவம் வந்தது பற்றி எச்சரித்ததுடன், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஸ்ராலின் அகற்றப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.


[28]

My Life (New York: Charles Scribner’s Sons, 1931), p. 505.