ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

தேர்தல் பிரச்சாரம்

டோரிக்கள், 55 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் முதல் முறையாக, மார்ச் 28, 1979 இல், ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர், அது அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்கியது. வெறும் நான்கு நாட்களுக்கு முன்னர், இறுதியில் WRP என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்ததுடன், "தொழிலாள வர்க்க அமைப்புகளையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நசுக்கி, தொழிலாள வர்க்கத்தை யாசிக்கும் நிலைக்குத் தள்ளுவதற்கு, பிற்போக்குச் சக்திகள் முன்னொருபோதும் இல்லாதளவில் ஒரு முற்றுமுதலான தாக்குதலுக்காக ஒன்று கூடி வருகின்றன," என்றது குறிப்பிட்டது (நியூஸ் லைன், மார்ச் 24, 1979)

ஆனால் அதே பக்கத்தில், இளம் சோசலிஸ்டுக்கள் அமைப்பின் (Young Socialists-YS) 19 ஆம் வருடாந்த மாநாடு குறித்த கவனத்தை ஈர்க்கும் முதல்பக்க விளம்பரம் ஒன்றில், "தொழிற் கட்சி அரசாங்கத்தைக் கீழிறக்கு," என்ற கோஷமும் இருந்தது.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, “மார்ச் மாத கருத்துக்கள் நடைமுறையில் எம்மை நோக்கியே செலுத்தப்பட்டது" என்று பிரகடனப்படுத்திய ஒரு தீர்மானம், பண்டாவினால் வரையப்பட்டிருந்த அது, பின்வருமாறு அறிவித்தது: "தொழிற் கட்சி அரசாங்கத்தின் இந்த வினோத நாடகத்தைப் பாதுகாப்பதற்காக நின்ற அனைவரது முகத்திரையும் இப்போது கிழிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டத்தின் பாகமாக WRP மற்றும் YS இன் தொழிற் கட்சியைக் கீழிறக்குவதற்கான கொள்கை சர்ச்சைக்கிடமின்றி சரியானதென நிரூபணமாகி உள்ளது. ஆனால் டோரிக்கள் அவர்களின் சொந்த பிற்போக்குத்தனமான மற்றும் அற்பத்தனமான வழியிலேயே, நமது எச்சரிக்கைகளை ஆயிரம் முறை அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர் என்ற உண்மை, எந்தவிதத்திலும் நம்மைத் திருப்திப்படுத்தி விடவில்லை." (நியூஸ் லைன், மார்ச் 26, 1979)

பண்டாவின் சேர்ச்சில் பாணியிலான (Churchillian) வார்த்தைஜாலங்களால் கூட, WRP இன் கொள்கைகள் ஆபத்தான விதத்தில் தடம் மாறிவிட்டிருந்தன என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. "கலஹன் அரசாங்கத்தின் வேலை அழிப்போரையும் மற்றும் கூலி வெட்டுவோரையும் தொழிலாள வர்க்கம் 1974 இல் ஹீத்தை போல் பதவியிலிருந்து கீழிறக்கி விட்டிருந்தால் அது பெரிதும் விரும்பத்தக்கதாக இருந்திருக்கும்" என்றவர் ஒருவித ஏமாற்றத்துடன் ஒப்புக் கொண்டார். (அதே ஆவணம்)

யதார்த்தத்தில், WRP, 1975 இல் இருந்து தொழிற் கட்சிவாதிகளை ட்ரொட்ஸ்கியை போல்எதிர்த்திருந்தால் —அதாவது, டோரிக்களுக்குக் கதவைத் திறந்து விட்டதற்காக அவர்களின் கோபத்தை தொழிற் கட்சி துரோகிகளுக்கு எதிராக ஒருமுனைப்படுத்தி, இடது-வார்த்தை ஜாலக்காரர்கள் கலஹனிடமிருந்து முறித்துக் கொள்ள வேண்டுமெனக் கோரி, வட்டார தொழிற் கட்சி கிளைகளுக்குள் டோரி-ஆதரவு தொழிற் கட்சிவாதிகளுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த மோதல்களுக்குள் தலையீடு செய்து, இடைமருவு கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு அணிதிரட்டி, எதிர்த்திருந்தால்— அதிக விரும்பத்தக்கதாக இருந்திருக்கும். அத்தகைய கொள்கை, போர்குணம் மிக்க தொழிற் கட்சிவாதிகள் மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் கண்களில், அளவிட முடியாதளவு, கட்சியின் மதிப்பை உயர்த்தி இருக்கும்.

அத்தீர்மானம் நெறிப்பிறழ்ந்திருந்தது என்பது, அது டோரி வெற்றியைச் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டதிலும் மற்றும் டோரிக்களை தடுக்கவும் தொழிற் கட்சிக்கு வாக்களிக்கவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்க அது அக்கறையும் கூட எடுக்கவில்லை என்ற உண்மையினாலும் எடுத்துக்காட்டப்பட்டது.

பின்னர் WRP இன் அரசியல் நிலைப்பாட்டில் மற்றொரு திருப்பமும் இருந்தது. அதனது முந்தைய ஒட்டுமொத்த நிலைப்பாடும் டோரிக்களின் நாடாளுமன்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் செல்வாக்கு இழந்திருந்ததை உணர்ந்து, WRP தலைவர்கள், தாட்சர் வென்றாலும் பரவாயில்லை என்று வாதிட்டு, அவர்களின் உறுப்பினர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கண்களில் மண்ணைத் தூவ முனைந்தனர். தொழிற் கட்சி அரசாங்கத்தை விட டோரி அரசாங்கம் மோசமாக இருக்கும் என்று கூறியதற்காக, அவர்கள், குழப்பம்மிக்க குதர்க்கவாதத்துடன், பல்வேறு திருத்தல்வாதக் குழுக்களைக் பின்வருமாறு கண்டித்தனர்:

“பிரிட்டனில் இன்று தீர்க்கமானது என்னவென்றால், தாட்சரும் ஜோசப்பும், கலஹனையும் ஹேலியையும் விட அதிகமாக தொழிலாள வர்க்கத்தை அகநிலையாக வெறுப்பவர்களா என்பதோ, ஆகவே அவர்களைத் தான் மிகவும் ஆக்ரோஷமாக தாக்க வேண்டுமா என்பதோ கிடையாது.

“தீர்க்கமான காரணி, புறநிலையான உலக நெருக்கடியும் மற்றும் பிரிட்டிஷ் முதலாளித்துவம் மீதான அதன் பாதிப்பும் தான். எதிர்வரும் பொதுத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் பிரிட்டனில் உள்நாட்டு போருக்கான களம் அமைக்கப்பட்டுவிட்டது.

“அனைத்து திருத்தல்வாதிகளும் செய்வது போலவே, டோரிகள் ஜெயித்தால் தான் தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தப்படும், தொழிற் கட்சி ஜெயித்தால் ஒப்பீட்டளவில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறுவது, எதிர்வரவிருக்கும் மோதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பின்றி விட்டு வைப்பதாக ஆகிவிடும்." (நியூஸ் லைன், ஏப்ரல் 7, 1979)

இந்த வழியில் காரணம் காட்டுவது மார்க்சிசத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். வர்க்கப் போராட்டம் எந்த அரசியல் வடிவங்கள் மூலமாக வெளிப்பட்டதோ அதன் புறநிலை முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு ட்ரொட்ஸ்கிசவாதி பின்வருமாறு வாதிட முடியும்: "தாட்சர் மற்றும் கலஹனுக்கு இடையிலான அகநிலை ஒற்றுமைகளை பொருட்படுத்தாமல், டோரிக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து, ஹீத் தொடங்கிய வேலையைத் தொடர்வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. கலஹன் நம்மைக் காட்டிக்கொடுத்திருந்தாலும் கூட, நம்மை விலையாக கொடுத்து அவரை தண்டிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. முதல் விடயங்கள் முதலில் இருக்க வேண்டும். டோரிக்களை வெளியில் நிறுத்துவதற்காக, தொழிலாள வர்க்கத்தை, ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அணித்திரட்டி இருக்க வேண்டும். தொழிற் கட்சிக்குப் பாரியளவில், ஆனால் விமர்சனபூர்வமாக, வாக்களிக்க அழைப்பு விடுப்பதன் மூலமாக தொழிலாளர்களை நெறிப்பிறழச் செய்வதற்கான சமூக ஜனநாயகவாதிகளின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். இது முதலாளித்துவத்துக்கு எதிராக ஓர் அடி கொடுக்கும் என்பதோடு, ஒரேயடியில் என்றென்றைக்குமாய் சமூக ஜனநாயகவாத துரோகிகளை அம்பலப்படுத்த சிறந்த நிலைமைகளை உருவாக்கும்."

WRP இவ்வாறான எதையும் கூறவில்லை. அதற்கு பதிலாக நியூஸ் லைன் அறிக்கை பின்வருமாறு தொடர்ந்தது: “பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றொரு தொழிற் கட்சி அரசாங்கத்தால் காப்பாற்றப்படும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கையில், இத்தேர்தலில் தொழிற் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பது நமக்கு தெரியும். தொழிலாளர்களின் நலன்களை அவ்வழியில் பாதுகாக்க முடியாது."

அப்படியாயின் WRP என்ன முன்மொழிந்தது? "சோசலிச கொள்கைகள்" என்று அது எதை அழைத்ததோ அதை முன்வைக்க 60 வேட்பாளர்களை நிறுத்தி, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு உண்மையான அரசியல் மூலோபாயத்தின் இடத்தில் அது ஒரு பிரச்சார திசைத்திருப்பலை முன்வைத்தது. இந்த பிரச்சாரம் டோரிக்களுக்கு எதிராக, அதேவேளையில் தொழிற் கட்சிவாதிகளை அம்பலப்படுத்தியும் மற்றும் இத்தகைய சீர்திருத்தவாதிகளுடன் தவிர்க்கவியலாத புரட்சிகர பலப்பரீட்சைக்காக தொழிலாளர்களை தயார் செய்வதை அடிப்படையாக கொண்டிருந்திருந்தால் மட்டுந்தான், கட்சி பதாகையின் கீழ் வேட்பாளர்களை நிறுத்தி ஒரு தேர்தல் தலையீடு செய்வது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அரசியல்ரீதியில் நனவுபூர்வமான ஒவ்வொரு தொழிலாளியும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த தெளிவான புரட்சிகர நிலைப்பாட்டில் இருந்து போராடுவதற்குப் பதிலாக, WRP இன் தலையீடு அரசியல் தட்டிக்கழிப்பு மற்றும் குழப்பங்களின் ஒரு வடிவமாக இருந்தது:

“தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தொழிலாளர்களை கலஹன் பின்னாலோ, மைக்கல் ஃபூட் அல்லது பென் (Michael Foot or Tony Benn) பின்னாலோ அணித்திரட்டுவதற்காக இந்த பொதுத் தேர்தலில் பங்கெடுக்கவில்லை, மாறாக அதிகாரத்திற்கான போராட்டத்தை ஒழுங்கமைக்கும் நமது முன்னோக்கை முன்னெடுக்கவே பங்கெடுக்கிறது."

WRP நிலைப்பாட்டின் முக்கிய உள்ளடக்கம், —சமூக ஜனநாயகவாதிகளுக்கும் டோரிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பது— ஹிட்லர் வெற்றிக்கு முன்னர் ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி எந்த மோசமான தவறை ஆய்வு செய்திருந்தாரோ, அதையே மறுஉற்பத்தி செய்தது. பாசிசமும் சமூக ஜனநாயகமும் ஏறத்தாழ முதலாளித்துவத்திற்கு சேவையாற்றுகின்றன, அங்கே அவ்விரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்ற ஸ்ராலினிச வாதத்திற்குப் பதிலளித்து, ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

“இந்த ஸ்ரானிச தத்துவத்தின் சாரம் பின்வருமாறு மிகவும் தெளிவாக உள்ளது: முற்றுமுழுதான முரண்பாடு பற்றிய மார்க்சிச நிராகரிப்பிலிருந்து அது முரண்பாடுகளின் பொதுவான மறுப்பையும், மேலும் ஒப்பீட்டளவிலான முரண்பாட்டின் மறுப்பையும் நோக்கி திரும்புகின்றது. இந்த பிழை தரந்தாழ்ந்த தீவிரக் கொள்கைக்கு உதாரணமாகும். முதலாளித்துவத்தின் ஆட்சி வடிவ அரங்கிற்கு உள்ளேயே கூட பாசிசத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே எவ்வகையிலும் முரண்பாடு இல்லை என்றால், அப்போது இரண்டு ஆட்சிகளும் போதுமானளவுக்கு வெளிப்படையாக ஒரேமாதிரியானவையாக இருக்க வேண்டும். இதிலிருந்து பெறும் முடிவே, சமூக ஜனநாயகமும் பாசிசமும் ஒன்று என்பது." (ஜேர்மனி 1931-1932, நியூ பார்க், பக்கம் 63)

சில சந்தர்ப்பங்களில் மட்டுந்தான், WRP தலைவர்கள் அவர்களின் தேர்தல் அறிக்கைகளுக்குள் ஆழமாக புதைத்து வைத்து, தொழிற் கட்சிக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் முளைவிட்டு வரும் சந்தர்ப்பவாதத்தின் விதைகள் அதிதீவிர-இடது வடிவத்திற்குள் ஏற்கனவே துளிர்விடத் தொடங்கி இருந்தன. வாக்குப்பதிவின் முடிவு எந்தவித முக்கியத்துவமும் கொண்டிருக்கப் போவதில்லை மற்றும் உள்நாட்டு போர் வரவுள்ளது என்று மீண்டும் மீண்டும் அறிவித்து வந்த பின்னர், தேர்தல் அன்று, "டோரியிசத்திற்கு தேர்தலில் மரணஅடி வழங்க" பாரியளவில் வாக்களிக்க வருமாறு தொழிலாளர்களிடமும் நடுத்தர வர்க்கத்திடமும் ஓர் ஆச்சரியமூட்டும் அழைப்பை விடுத்தது. (நியூஸ் லைன், மே 3, 1979)

அதன் பின்னர், அது, தாட்சர் தொழிற்சங்கங்களையும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளையும் அழிக்க உத்தேசித்திருப்பதாக எச்சரித்தது. இந்த அச்சுறுத்தலைத் தடுக்கக்கூடியவர்களாக அதன் 60 வேட்பாளர்களை சுட்டிக்காட்டிய நியூஸ் லைன் குறிப்பிட்டது: "அரசாங்கம் அமைக்க போதுமானதாக இல்லையென்றாலும், நாங்கள் முதலாளித்துவத்தின் உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் திவாலான பிரிட்டனில் அதன் வெளிப்பாட்டுக்கு ஒரு தெளிவான சோசலிச கொள்கையை மாற்றீடாக வழங்குகிறோம்." (அதே ஆவணம்)

ஆனால் தொழிலாளர்களின் இயக்கத்தை அழிக்க அச்சுறுத்தும், எதிர்வரவிருந்த டோரி வெற்றியின் முன்னால் தொழிலாளர்கள் என்ன செய்வது? பின்வரும் வியப்பூட்டும் முன்னோக்கு வழங்கப்பட்டது:

“அடுத்த பொதுத் தேர்தலில், அது எப்போது நடந்தாலும், நாங்கள் ஓர் அரசாங்கம் அமைக்க போதுமான வேட்பாளர்களைக் களத்தில் இறக்க பணியாற்றுவோம்.”

இது வெறுமனே கடந்து சென்றுவிடக் கூடிய குறிப்பல்ல: தாட்சர் அரசாங்கத்தின் யதார்த்தத்தை முகங்கொடுத்திருந்த நிலையில், அதிதீவிர-இடதுவாதம் மீது செய்திருந்த நான்காண்டு கால பரிசோதனை முட்டிமோதி சிதறியது — ஹீலி ஒரு சந்தர்ப்பவாத பாராசூட் துணைகொண்டு காப்பாற்றப்பட்டார். 1975 இல் இருந்து 1979 வரையிலான காலகட்டம், அனைத்திற்கும் மேலாக, பிரிட்டனிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இரண்டு தரப்பிலும், தொழிலாள வர்க்கத்திலிருந்து விலகிய காலப்பகுதியாக இருந்தது. நாம் பின்னர் குறிப்பிட்டு காட்டவிருப்பதைப் போல, WRP பிரிட்டனுக்கு வெளியே அதன் வேலைகளில், ஏற்கனவே பாட்டாளி வர்க்கம் அல்லாத மற்றும் பிற்போக்குத்தனமான சக்திகளுடன் சந்தர்ப்பவாத உறவுகளை விளைவித்திருந்தது. அதிதீவிர-இடது வாய்சவடால் கொண்டு மூடிமறைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியாக இருந்த போதினும், பிரிட்டனுக்கு உள்ளேயும் கூட இதேபோன்ற ஒரு திருப்பத்திற்கு முற்றிலுமாக தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது.