ICFI
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

சர்வதேசியமும், பாட்டாளி வர்க்கமும்

9. நான்காம் அகிலத்தின் சகாப்தம் அர்த்தப்படுத்துவது உலகப் பாட்டாளி வர்க்க முன்னணிப்படையின் புரட்சிகர சர்வதேசியத்தின் மறு உயிர்ப்பையேயாகும். உண்மையிலேயே ஸ்ராலினிசத்தின் மற்றும் சீர்திருத்தல்வாத அதிகாரத்துவத்தின் நெருக்கடி, அரசியல் பொருளாதார தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்களின் திவால் நிலையை எடுத்துக் காட்டுகிறது. அது ஏதோ ஒரு விதத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கும் மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்குமாக முழுமையாக கீழ்ப்படுத்துகின்றது. 1914ல் முதலாவது உலகப்போர் வெடித்ததிலிருந்து மார்க்சிஸ்டுகளின் போராட்டம் முதலாவதாக சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிராகவும் அதன் பின் ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராகவும் சர்வதேச பதாகையின் கீழேயே தொடர்ந்தது. திட்டவட்டமாக அறுபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ராலினிச அதிகாரத்துவ ஆளுமைக்குள் அடியோடு விழுந்துவிட்ட *மூன்றாம் அகிலத்தின் வரைவு வேலைத்திட்டம் பற்றிய அவரது விமர்சனத்தில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்;

10. ''எமது சகாப்தத்தில் - இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில் - அதாவது உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாகவும், பிரதானமாகவும் தனது சொந்த நாட்டினுள் உள்ள நிலைமைகளின், போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது...1914 -ஆகஸ்ட் 4ம் திகதி அனைத்துக் காலங்களுக்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன் தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின் ஒருங்கிணைப்போ அல்ல. சர்வதேச வேலைத்திட்டம், உலகப் பொருளாதார உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய அணுகுமுறை ஒரு உலக அணுகு முறையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.''

11. முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்புக்கு ஒரு முடிவுகட்ட நடத்தும் போராட்டத்தின் மூலோபாய அச்சாக இருப்பது, உலக சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டுவதாகும். இந்தப் போராட்டத்தின் வேலைத்திட்ட அடித்தளம் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சி தத்துவத்தினின்று வந்ததாகும். அது உலக சோசலிசப்புரட்சி பற்றிய முழுமையான பரந்த விசாலமான தத்துவமாகும். அது வளர்ச்சியடைந்த பின்தங்கிய நாடுகளதும் அதேபோல் சோவியத்யூனியனின் மற்றும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளினதும் (சீனா, வியட்னாம், கிழக்கு ஐரோப்பா..) பாட்டாளிகளின் நடவடிக்கையை உள்ளடக்கியதாகும். அனைத்துலகக் குழுவின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர சர்வதேசியம் ஒரு விஞ்ஞான ரீதியாக முதலாளித்துவ உற்பத்திமுறையின் சர்வதேசத் தன்மை பற்றியும், முதலாளித்துவ நெருக்கடியின் உலகப் பரிமாணங்கள் பற்றியும் அனைத்துக்கும் மேலாகப் பாட்டாளி வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கம் என்னும் தன்மை பற்றி சரியாக உணர்ந்து கொள்வதிலாகும்.

12. புறநிலை ரீதியாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமானது, மிகவும் ஆழ்ந்த முக்கியமான பொருளாதார செயற்பாடுகளினால் பலப்படுத்தப்பட்டு வருகிறது. நாடுகடந்த கூட்டுக் கம்பனிகளின் பிரமாண்டமான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளரீதியான ஒரு முகப்படுத்தலும் முன்னொருபோதும் இல்லாத அளவில் உலகத் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் நிலைமைகளுள் ஒரே தன்மையை உண்டுபண்ணியுள்ளது. முதலாளிகளின் தேசிய குழுக்களுக்கிடையில் உலகச் சந்தையின் ஆதிக்கத்திற்காக நடக்கும் குரூரமான போட்டி, ஆளும் வர்க்கங்கள் அவர்களது ''சொந்த'' நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம், மிகக் குரூரமான முறையில் உலகளாவிய செயல்முறைகள் மூலம் வெளிக்காட்டப்படுகிறது. மூலதனம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதலை மூர்க்கப்படுத்துவதில் நிலைநாட்டப்படுகிறது.

13. நீண்டகாலமாக மார்க்சிசத்தின் அடிப்படைக் கூற்று, வர்க்கப் போராட்டமானது, வடிவத்தில் மட்டுமே தேசிய ரீதியானது என்றும் சாராம்சத்தில் அது சர்வதேச ரீதியான போராட்டம் என்றும் இருந்தது. என்றாலும் முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய தோற்றங்களில் வர்க்கப் போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேசத் தன்மையை எடுக்கவேண்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை ரீதியான போராட்டங்கள்கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை முன்வைக்கிறது. பொருளாதார வாழ்க்கையின் அடிப்படை ரீதியான உண்மை என்னவெனில், நாடு கடந்த கூட்டுக் கம்பனிகள் ஒரு பூர்த்தி செய்யப்பட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்கு பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் உழைக்கும் சக்தியைச் சுரண்டுகின்றன. அத்தோடு அவை தமது உற்பத்தியை அதியுயர்ந்த லாபத்தை தேடி பல்வேறு நாடுகளில், பல்வேறு கண்டங்களில் உள்ள தமது தொழிற்சாலைகளுக்கிடையில் உற்பத்தியை விநியோகிப்பதோடு இடம் மாற்றுகின்றன. உதாரணமாக போர்ட் எஸ்கோர்ட் (Ford Escort) ஐரோப்பிய மொடலின் பாகங்கள் உற்பத்திக்காக உபயோகிக்கப்படும் உட்பாக வலைப் பின்னல்- பிரிட்டனில் கார்புரேட்டர், எண்ணெய் பம்ப், சிலிண்டர் போல்ட்டுக்கள்- பெல்ஜியத்தில் சீட்பேட்கள்- சுவீடனில் ஹோஸ் கிளாம்ப்ஸ் (Hose Clamps)- டென்மார்க்கில் பேன் பெல்ட்டுகள்- இத்தாலியில் குளிர்நீக்கி வளைவுகள்- ஜப்பானில் (Alternators) ஆல்ட்டனேட்டர்ஸ்- அமெரிக்காவில் ஈ.ஜி.ஆர். வால்வுகளையும், சக்கரநட்டுக்களையும் உற்பத்தி செய்வதைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு முன்னொருபோதும் இல்லாத அளவு மூலதனத்தின் சர்வதேச இயக்கம் வெவ்வேறு நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தின் அனைத்துத் தேசியவாத வேலைத்திட்டங்களையும் காலாவதியாக்கி, முழுமையாக பிற்போக்காக்கின்றது. அப்படியான தேசிய வேலைத்திட்டங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ''அவர்களுடைய'' ஆளும் வர்க்கங்களுக்கு தன்னிச்சையாகவே கொடுக்கும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு, உலகச் சந்தையில் ''அவர்களுடைய'' முதலாளித்துவ நாடுகளின் நிலைப்பாட்டைப் பலப்படுத்தும் தேவையுடன் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை வரிசைக் கிரமமாக குறைக்கின்றன.

14. முதலாளித்துவ உற்பத்தியின் உலகத் தன்மையானது, மேலும் பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் அரசியல் பகைமைகளை பிரமாண்டமான ரீதியில் கூர்மைப்படுத்தியுள்ளது. இது மீண்டும் ஒருமுறை புறநிலை ரீதியாக உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்று ரீதியாக முதலாளித்துவ உடைமை வேரூன்றி இருக்கும் தேசிய அரசு வடிவத்துக்கும் இடையிலான சமரசம் காணமுடியாத முரண்பாட்டை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. திட்டவட்டமாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசத் தன்மையே அதாவது ஒரு வர்க்கம் எந்தவொரு முதலாளித்துவ ''தாய்நாட்டுக்கும்'' விசுவாசம் கொண்டிராதது, இத் தன்மையே அதனை, நாகரீகத்தைக் குரல்வளையில் நெரிக்கும் தேசிய அரசு அமைப்பு சங்கிலியிலிருந்து விடுவிக்கக்கூடிய முழுமையான சமூக சக்தியாக ஆக்குகின்றது.

15. இந்த அடிப்படைக் காரணங்களினால் எந்தவொரு நாட்டைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டமும், உலக ரீதியில் பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக அணிதிரட்டும் இலக்கைக் கொண்ட சர்வதேச மூலோபாயமாக இருந்தால் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு நிலையான முன்னேற்றத்தை மட்டுமல்லாது, அதனுடைய இறுதியான விடுதலையைத்தன்னும் தயாரிக்க முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்த அவசியமான ஐக்கியப்படுத்தல் ஒரு உண்மையான சர்வதேசப் பாட்டாளி வர்க்க, அதாவது ஒரு புரட்சிகரக் கட்சியாகக் கட்டுவதன் மூலமே அடையமுடியும். தசாப்தங்களாக சளையாத சித்தாந்த மற்றும் அரசியல் போராட்டங்களின் விளைபயனாய் இப்படியான ஒரேயொரு கட்சி மட்டுமே இருந்து வருகிறது. அதுதான் லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938ல் அமைக்கப்பட்ட நான்காம் அகிலமாகும். அது இன்று அனைத்துலகக் குழுவினால் வழிநடத்தப்படுகிறது.