ICFI
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

16. முதலாளித்துவத்தின் நீடித்த வரலாற்று ரீதியான நெருக்கடியானது, இன்று பண்பியல் ரீதியான வளர்ச்சிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இது சர்வதேச ரீதியாக வர்க்கப் போராட்டத்தில் ஒரு வெடிப்பை உண்டு பண்ணுவதுடன், அமெரிக்க ஐக்கிய அரசுகள் உட்பட அனைத்து பெரும் ஏகாதிபத்திய நாடுகளிலும் புரட்சிகர நிலைமையை உருவாக்கும். தொழிலாள வர்க்கத்திற்கும், இதன் புரட்சிகர முன்னணிக்குமான இந்த நெருக்கடியின் முழுமையான தாற்பரியத்தை, ஒரு வரலாற்று ரீதியான முன்னோக்கின் கட்டமைப்புக்குள் ஆராய்ந்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

17. நான்காம் அகிலத்தின் ஸ்தாபன ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி இரண்டு உட்தொடர்புள்ள பிரேரணைகளை முன்வைத்தார். அவர் இந்த சகாப்தத்தை ஏகாதிபத்தியத்தின் மரணவேதனை என விளக்கினார். அதேசமயம் மனித இனத்தின் நெருக்கடி சாராம்சத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமை நெருக்கடி என வலியுறுத்தினார். முதலாவது பிரேரணையின் உள்ளடக்கம் உலக முதலாளித்துவத்தின் ஆற்றொணா மற்றும் தீர்க்க முடியாத முரண்பாடுகளின் தன்மை பற்றிய புறநிலை ரீதியானதும், வரலாற்று ரீதியானதுமான கணிப்பாகும். இரண்டாவது பிரேரணையில் உள்ளடங்கியிருப்பது, ஒரு சமூக முற்போக்கை அடிப்படையாகக் கொண்ட இந்த வரலாற்று நெருக்கடியின் தீர்வானது, இறுதி ஆய்வில் பார்க்கையில் நான்காம் அகிலத்தைக் கட்டுவதிலேயே தங்கியிருக்கிறது என எச்சரிக்கப்பட்டது.

18. இப்படியான இரண்டு பிரேரணைகள் சம்பந்தமாக என்றும் சரியான தன்மையை அனைத்துலகக் குழு மட்டுமே வலியுறுத்துகின்றது. உண்மையான புரட்சிகர மார்க்சிசத்தின் அனைத்து குட்டிமுதலாளித்துவ தீவிரவாத எதிர்ப்பாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் இருக்கும் கொள்கைகள், வேலைத்திட்டம் பற்றிய ட்ரொட்ஸ்கிசத்தின் கூடுதலான கவனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென நிராகரிக்கின்றனர். அதற்குப் பதிலாக அவர்கள் ட்ரொட்ஸ்கி வரலாற்று ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய முதலாளித்துவ அமைப்பைக் குறைத்து மதிப்பிட்டு, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரத் திறனை முற்று முழுதாக மிகை மதிப்பீடு செய்துள்ளார் என்பதையே நிரூபிக்கின்றது என வலியுறுத்தினார்கள். இப்படியான ட்ரொட்ஸ்கிசத்தின் 'நிராகரிப்பு' தவிர்க்கமுடியாதபடி மார்க்சிசத்தின் அடிப்படை ரீதியான கருத்துக்களை ஏறக்குறைய வெளிப்படையாகவே நிராகரிப்பதில் முடிவடைகிறது. இப்படியான ஏகாதிபத்தியச் சித்தாந்த அடிவருடிகள் கூறியதின்படி நான்காம் அகிலத்தின் 'தோல்வி' எனக் கருதப்படுவது, பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கமாக தோல்வி கண்டதன் பிரதிபலிப்பும் அத்துடன் சோசலிசம் பற்றிய அனைத்து வரலாற்று முன்னோக்கின் தோல்வியுமாகும்.

19. அரசியல் பிற்போக்கான கடந்த தசாப்தத்தின் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியில், குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஒரு சமயம் ஈடுபட்டவர்கள் மத்தியில் இப்படியான பின்னோக்கான தத்துவங்கள் மிகப்பரந்த ஆதரவாளர்களைப் பெற்றது ஆச்சரியமானதல்ல. இந்த சமூகத் தட்டின் கண்ணோட்டத்தை 'தொழிலாள வர்க்கத்துக்கு பிரியாவிடை' (Farewell to the working Class) எனும் புத்தகத்தின் தலைப்பானது தெளிவாகச் சுருக்கிக் கூறுகிறது. இப்புத்தகத்தில் இதன் ஆசிரியர் ''முதலாளித்துவ வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தை உண்டு பண்ணியுள்ளது. இது முழுமையாக உற்பத்திச் சாதனங்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முடியாதிருக்கின்றதோடு, அதன் உடனடித் தேவைகள் சோசலிச நியாயத்துடன் ஒத்ததாக இல்லை'' என்று ஆணித்தரமாய் கூறுகிறார்.

20. தொழிலாள வர்க்கம் அடைந்த தோல்விகள், பின்னடைவுகள் என்பவற்றிற்கான காரணங்களைப் பாட்டாளி வர்க்கத்தின் சமூகத் தன்மையில் கண்டுபிடிக்க எடுத்த எண்ணற்ற முயற்சிகளின் வடிவங்கள் எவ்வளவுதான் வேறுபட்டனவாக இருந்தபோதிலும், அவை தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்த போலித் தலைமைகளுக்கு அரசியல் வக்காலத்து வாங்குபவையாக அமைகின்றன. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டபொழுது அவரது மேசையின்மேல் இருந்த அவரது கடைசிக் கட்டுரையில் ஸ்பானியப் புரட்சியின் தோல்விக்கு பாட்டாளி வர்க்கத்தைக் குறைகாண முயன்றவர்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் பதிலளித்துள்ளார்.123

21. ட்ரொட்ஸ்கி எழுதுகையில், ''வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல் இதில்தான் அடங்கியுள்ளது. அதாவது ஸ்பானிய பரந்த மக்களின் தோல்விக்கான பொறுப்பு உழைக்கும் பரந்த மக்களின் மேல் சுமத்தப்படுகின்றது. அது பரந்த மக்களின் புரட்சிகர இயக்கத்தை செயல் இழக்கச் செய்த, அல்லது அப்பட்டமாக நசுக்கிய கட்சிகளின் மேல் சுமத்தப்படவில்லை. பூம் கட்சியின் (POUM) (ஸ்பானிய மத்தியவாதிகள்) வக்கீல்கள் வெறுமனே தலைவர்களின் பொறுப்பைத் தாம் ஏற்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கிறார்கள். இந்த கையாகாலாத மெய்யியலானது, பிரபஞ்ச வளர்ச்சியின் சங்கிலித் தொடரில் தோல்விகளை இன்றியமையாத ஒரு இணைப்பாக நியாயப்படுத்த முயற்சிக்கின்றது. இது தோல்வியை ஒருங்கமைத்த வேலைத்திட்டங்கள், கட்சிகள், நபர்கள் என்ற ஸ்தூலமான அம்சங்களின் அடிப்படையில் பிரச்சனையை முன்வைக்க முழுமையாகத் திறனற்றது மட்டுமல்லாது, அது முன்வைக்கவும் மறுக்கிறது. இந்த விதிப்பயன்வாத மெய்யியலும் சாஸ்டாங்கமாக விழுதலும் புரட்சிகர செயலின் தத்துவமான மார்க்சிசத்தை நேரெதிராக எதிர்ப்பவையாகும்'' என்றார்.

22. கடந்த அரை நூற்றாண்டின் வரலாற்று அனுபவம் ட்ரொட்ஸ்கியின் ஆய்வை அடிப்படையில் ருசுப்படுத்தியுள்ளது. மனித இனத்தை எதிர்கொள்ளும் வரலாற்று ரீதியான பிரச்சனைகளின் தீர்வு, தொழிலாள வர்க்கத்தின் பற்றாக்குறைகளைப் பற்றிய புத்தி மயங்கிய மற்றும் சிடுமூஞ்சித்தனமான ஊகங்களில் அல்ல இருக்கின்றது. அது தொழிலாள வர்க்க இயக்கத்தை புரட்சிகர ரீதியாக அணிதிரட்டலைத் தடைசெய்கின்ற, அல்லது ஊறுவிளைவிக்கின்ற தொழிலாள வர்க்கத்தினுள்ளும், அதன் விளிம்புகளினுள்ளும் உள்ள அரசியல் போக்குகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற போராட்டத்தில் தான் இருக்கின்றது. இந்த போராட்டத்தைத் தொடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ரீதியான மூலோபாய அனுபவங்களைப் பற்றி கசடறப் புரிந்துகொண்ட விளக்கம் தேவை.

23. உலகப் போருக்குப் பிந்திய காலப்பகுதி பற்றிய மார்க்சிச ஆய்வானது, உண்மையில் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு வருகிறது. அதாவது, ஸ்ராலினிஸ்டுகளும், சமூக ஜனநாயகவாதிகளும் வரிசைக்கிரமமாக நடாத்திய காட்டிக்கொடுப்புக்களே, சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தை 1930ம் ஆண்டுகளின் மாபெரும் பொருளாதாரத் தாழ்விலிருந்து உயிர்பிழைக்கவும் வழிவகுத்து, இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கமும், காலனித்துவ வெகுஜனங்களும் தொடுத்த உலகளாவிய எதிர்த் தாக்குதலிலிருந்தும் உயிர்பிழைக்க முடிந்தது. 1930ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் கண்ட தோல்விகள் குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலும் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகத் தலைவர்களின் துரோகக் கொள்கைகளினால் ஏற்பட்டனவாகும். இவை நேரடியாக இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்தன. 1930ம் ஆண்டுகளின் பூகோள ரீதியான பொருளாதாரத் தாழ்விலிருந்து மீள்வதற்கு, ஏறக்குறைய10 கோடி மக்களின் உயிர்கள் உட்பட, பிரமாண்டமான உற்பத்தி சக்திகளின் பகுதிகளை அழிப்பதில் முடிந்த குரூரமான யுத்தம் ஒன்று தேவைப்பட்டது என்பதை, ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு உலக யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதாரச் செழுமையானது, மனிதப் பிணங்களாலான மலையொன்றின்மேல் கட்டப்பட்டது. இந்தப் பயங்கர அழிவானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு புதிய செல்வங்களுக்கான ஒரு வருவாயாக அமைந்தது. மூலதனப் பசி கொண்ட பிரமாண்டமான சந்தையொன்று அதன் முன் இப்போது உருவானது. ஆனால் ஐரோப்பாவிற்கு அமெரிக்க மூலதனம் செல்வது, யால்டா, போர்ஸ்டாம் உடன்பாட்டுக்களை ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் மேல் திணித்து, அது ஏகாதிபத்தியத்துடன் ஒரு புரட்சிகரமான கணக்குத் தீர்த்தலைத் தடுத்த சமூக ஜனநாயகவாதிகளதும் குறிப்பாக ஸ்ராலினிஸ்டுகளதும் ஒத்துழைப்பிலேயே தங்கியிருந்தது.

24. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிற்பாடு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முதலாளித்துவ சமநிலையானது, முதலாளித்துவத்தின் ஆழமான முரண்பாடுகளைத் தீர்க்கத் தவறியது. உலக முதலாளித்துவம் அதன் பிரமாண்டமான பொருளாதார விரிவாக்கத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுதே, இந்த ஆழமான முரண்பாடுகள் நெருக்கடியின் புதிய வெடித்தெழுதல்களைத் தயாரித்துக் கொண்டிருந்தன. உலகின் பிரதான ஏகாதிபத்திய வல்லரசு என்ற நிலையிலிருந்த பிரிட்டனின் இடத்தை அபகரித்துக் கொண்ட அமெரிக்க முதலாளித்துவத்தின் விசாலமான நிதி மற்றும் தொழிற்துறைப்பலம், உலக யுத்தத்திற்குப் பிந்திய பொருளாதாரச் செழுமையின் அடித்தளமாக அமைந்திருந்தது. போருக்குப் பிந்திய உலக முதலாளித்துவத்தின் புனர்நிர்மாணம் எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கு ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் சிறகின் கீழ் தொடரப்பட்டது.

25. 1944ம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலருக்கு சமம் என்ற விகிதத்தின்படி அமெரிக்க டாலர் உலக நாணயமாகியது. 1930ம் ஆண்டுகளில் உலகச் சந்தையை சிதறடித்த பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்கு மீண்டும் செல்லாது தடுக்கவும், முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை நெறிப்படுத்தவும், அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களான சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் வர்த்தக சுங்கவரிகள் பற்றிய பொது உடன்பாடுகள் போன்றவை நிறுவப்பட்டன. ஏகாதிபத்திய மையங்களில் வர்த்தக மோதல்களைத் தணியச் செய்வதற்காக, மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கங்கள், நலன்புரி அரசுகளின் கொள்கைகளையும், சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் தமது கொள்கைகளாக்கிக் கொண்டன.

26. உலகப் போருக்குப் பின்பான ஸ்திர நிலையின் அடிப்படை முரண்பாடுகள் பின்வருமாறு; சார்பு ரீதியான சமநிலை, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஆதிக்க நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்க முதலாளித்துவம் அதன் வெளிநாட்டுப் பகையாளிகளை மீண்டும் புனருத்தாரணம் செய்வதற்கான காரணம், உலகச் சந்தையை புத்துயிரூட்டவும் ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் புரட்சிகர அலையைத் தடுத்து நிறுத்தவுமாகும். இந்தக் கொள்கையில் அடங்கியிருந்தது, அதன் சொந்த அழிவிற்கான வித்துக்களாகும். வெளிநாடுகளுக்கு இடைவிடாத அமெரிக்க மூலதனத்தின் ஏற்றுமதியானது 1960களில் டாலர் நெருக்கடியை உண்டுபண்ணியது. அது அமெரிக்க ஆதிக்கத்தின் அடிப்படையில் இரண்டாம் உலகப் போரின் பின் உருவாக்கப்பட்ட சமநிலையில், உடைவுக்கான சமிக்ஞையைச் செய்தது. அமெரிக்காவின் நீடித்த அயல்நாட்டுச் செலுத்து நிலையின் (Balance of Payments) பற்றாக்குறை, அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைப்பாட்டின் சீரழிவின் நிதி பிரதிபலிப்பாகும். இந்நெருக்கடியைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகள் பயனற்றவை என நிரூபிப்பதுடன், ஆகஸ்ட் 15, 1971ல் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் அடித்தளத்தை, டாலர் தங்கமாற்றை முடிவுக்குக் கொண்டு வருவதன்மூலம் அமெரிக்க ஐக்கிய அரசுகள் அழித்தது.

27. முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சி காணும் சமனற்ற நிலை சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தினால் தூண்டப்பட்டதுடன், அதன் புத்துயிர் பெற்ற போராட்டங்களினால் உக்கிரப்படுத்தப்பட்டது. 1920களிலிருந்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் புரட்சிகர இயக்கத்துக்கான காலகட்டம் 1968க்கும் 75க்கும் இடையிலான பகுதியாக குறிப்பிடப்பட்டது. வியட்னாம் தொழிலாளர் விவசாயிகளின் இராணுவ எதிர்ப்பினால் அமெரிக்க ஏகாதிபத்தியம் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கைத் தரங்களை உயர்த்த ஒரு சக்திவாய்ந்த எதிர்த் தாக்குதலை நடத்தியது. வரலாற்றிலேயே மிகப்பெரிய பிரமாண்டமான பிரான்சின் மே-யூன், 1968 பொது வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் சர்வதேச எதிர்த் தாக்குதலுக்கான அறிகுறியை வெளிப்படுத்தியது. அடுத்த ஏழு வருடங்களில் நாட்டுக்குப் பின் நாடாக முன்னொருபோதும் இல்லாத அளவு அரசியல் கொந்தளிப்புக்குள் இழுக்கப்பட்டது.

28. 1960-களின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்க ஐக்கிய அரசுகள், மிகப்பரந்த மாணவர் எதிர்ப்புக்களினாலும் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்படும் பகுதியினரின் நகர்ப்புற எழுச்சிகரப் போராட்டங்களாலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட, தொழிற்துறை வேலைநிறுத்தப் போராட்டங்களினாலும் நடுங்க ஆரம்பித்தது. வியட்னாமில் எதிர்பாராத இராணுவத் தோல்வியின் பின்னணியில் அரசியல் நெருக்கடி, 1974ல் நிக்சன் அரசாங்கம் உடைந்ததுடன் முடிவடைந்தது. ஜேர்மனியில் கூட்டாட்சிக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக 1969ல் தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதல் சமூக ஜனநாயகவாதிகளை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. முதலாளித்துவ இத்தாலி ''சூடான இலையுதிர்காலம்'' எனப் பெயர்பெற்ற 1969 வேலைநிறுத்த அலையினால் ஆட்டம் கண்டது. பிரிட்டனில் தொழிற்சங்க நடவடிக்கைகளை சட்டரீதியாக கட்டுப்படுத்த டோரி அரசாங்கம் எடுத்த முயற்சி, 1926க்குப் பின் மிகப்பெரும் வேலைநிறுத்த இயக்கமாக வந்த சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை எதிர் கொண்டது. அது 1974 ஆரம்பத்தில் ஹீத் அரசாங்கத்தை ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்தித்தது. அதே ஆண்டில் போர்த்துக்கல்லிலும், கிரீசிலும் இராணுவ, பாசிச சர்வாதிகாரங்கள் வீழ்ச்சி கண்டன. லத்தீன் அமெரிக்கா முழுவதும் பொலிவியா, சிலி, ஆர்ஜென்டீனாவில் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது அந்த நாள் நடப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் 23 வருடகால லிபரல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து சமூகஜனநாயக விட்லம் அரசாங்கத்தை 1972 தேர்தலில் கொண்டுவந்தது. தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுறும் போர்க்குணத்தைப் பிரதிபலித்தது. மூன்றுவருட கால ஆழமான வர்க்க துருவ முனைப்படுத்தலும், அரசியல் நெருக்கடியும் நவம்பர் 1975ல் கவர்னர் ஜெனரலால் விடலம் (Witlam) வெளியேற்றப்பட்டதுடன் ஒரு உச்சத்துக்கு கொண்டுவரப்பட்டது.

29. பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர இயக்கம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அதிகாரத்தின் கீழுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்து செல்லாமல் இருக்கவில்லை. 1968ல் பிராக்கின் (Prague) வசந்தகாலம் செக்கோஸ்லாவாக்கியா மீதான சோவியத் யூனியனின் இராணுவ ஆக்கிரமிப்புடன் முடிவடைந்தது. ஆனால் சற்றே இரண்டு வருடங்களின் பின்பு போலந்து தொழிலாள வர்க்கத்தின் மிகப் பிரமாண்டமான புரட்சிகர இயக்கம் 'கோமுல்கா' அரசாங்கத்தைக் கவிழ்த்தது.

30. பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் டாலர் தங்கமாற்றுரிமை மற்றும் நிலையான நாணயமாற்று வீதங்கள் ஆகஸ்டு 71ல் வீழ்ச்சி கண்டதிலான ஸ்திரமற்ற பிரதி விளைவுகள் முதலாளித்துவ அமைப்பைப் புரட்சிகரமாகத் தூக்கி வீசுவதற்கான சாத்தியக்கூற்றை அதிகரித்தது. உடனடியாக உற்பத்தியில் ஒரு கூர்மையான உயர்ச்சி நிலைமை தொடர்ந்து இருந்தபோதிலும், அந்த செழுமை குறுகிய காலமானதென நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 15ன் பணவீக்க தாக்கம் 1973 இறுதியில் ''எண்ணெய் அதிர்ச்சிக்கு'' வழிவகுத்தது. அப்போது அரபு- இஸ்ரேல் யுத்தத்தின் இறுதியில் எண்ணெய்வள ஏற்றுமதி நாடுகள் (OPEC) எண்ணெய் விலைகளில் நான்கு மடங்கு அதிகரிப்பை அறிவித்தன. இது 1930களில் இருந்து முதலாளித்துவத்தால் அனுபவிக்கப் பெற்றதில் மிக மோசமான பின்வாங்கலைத் தூண்டிவிட்டது.

31. ஒழுங்கீனமான கொடிய இப்படியான காலங்களின்போது முதலாளித்துவம் உயிர் பிழைத்ததானது, 1950களிலும் பார்க்கக் குறைவில்லாமல், இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்த இக்கட்டான முதல் வருடங்களில் ஸ்ராலினிச, மாவோவாத சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களிலும் உண்மையில் எப்பொழுதும் போலவே அமெரிக்க ஐக்கிய குடியரசுகளில் உள்ள முழுமையாகச் சீரழிந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீதும் தங்கியிருந்தது. நாட்டுக்குப் பின் நாடாக, பிரதான தொழிலாள வர்க்க கட்சிகள் சோசலிசப் புரட்சிக்கான பாதையிலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் திசைதிருப்ப நனவாக வேலை செய்தது. 1968ல் பிரான்சிலும், 1969ல் இத்தாலியிலும், 1971ல் போர்த்துக்கல், கிரீசிலும் மீண்டும் ஸ்பெயினில் 1975-76லும் ஸ்ராலினிஸ்டுக்கள் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்தவும், ஆட்டம் கண்ட ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டவும் தமது சக்தியிலிருந்து அனைத்தையும் செய்தன. எல்லாவற்றிலும் பெரிய காட்டிக்கொடுப்பு சிலியில் செய்யப்பட்டது. அங்கே செப்டம்பர் 1973ல் இராணுவ பாசிச சதிக்கு வழிவகுத்த சால்வடோர் அலண்டேயின் முதலாளித்துவ மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஸ்ராலினிஸ்டுக்கள் முடிச்சுப் போட்டனர்.

32. சிலி தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கு சமூக ஜனநாயகவாதிகளின் பங்களிப்பானது, உலகத்தின் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் அவர்களின் பங்குடன் இசைந்ததாக இருந்தது. தனியாகவோ அல்லது ஸ்ராலினிஸ்டுக்களின் ஒத்துழைப்புடனோ இப்படியான ஆழமான அரசியல், பொருளாதார நெருக்கடி வருட காலங்களில் சமூக ஜனநாயகவாதிகள், ஏகாதிபத்தியத்தின் மிக அடிப்படையான நலன்களுக்கு சேவை செய்தனர். இந்த எதிர்ப் புரட்சிகரப் பாத்திரம் அதன் மிகச் சரியான வெளிப்பாட்டை ஜேர்மனியில்-பிராண்டின் (Brandts) போர்த்துக்கலில் சோரஸ்ஸின், ஸ்பெயினில் கோன்சாலேயின், ஆஸ்திரேலியாவில்- விட்லமின் (அவரின் ஆபிசிலிருந்து அவரின் சொந்த நீக்கத்தை ஏற்றுக் கொண்டு கவனர் ஜெனரலின் சதிக்கெதிரான தொழிலாள வர்க்க இயக்கத்தைத் தடம்புரளச் செய்தார்) சிலியில் அலெண்டேயின் கொள்கைகளிலும் எடுத்துக் காட்டியது.