Statement of the  International committee of  the  Forth International on the situation in Srilanka and the Political Task of the Revolutionary Communist League

ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை

19-11-1987

1.             இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற எண்ணற்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் குள்ளத்தனத்தையும், வஞ்சகத்தனத்தையும், நிறுவிக்காட்டியுள்ளன. இவற்றிலே இந்திய-இலங்கை ஒப்பந்தமும், இந்தியா இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களிலே ஆக்கிரமித்ததும் ஒடுக்கப்பட்ட உழைப்பவர்களுக்கு கிடைத்த இன்னுமொரு கசப்பான அனுபவமாகும். ஜெயவர்த்தனாவதும் காந்தியதும் செயல்களிலே ஏதாவது முக்கியமானதென்றால் அவர்கள் இருவரும் இணைந்து செய்த வஞ்சனையும், கொடுமையும்தான். இந்த தேசிய முதலாளித்துவ குப்பை கூழங்களான இந்த கொலைகாரர்கள் இரண்டுபேரும் செய்தது மறக்கவும், மன்னிக்கவும் முடியாததாகும். ஏகாதிபத்திய வால்பிடிகளான சியாங் கேய் சேக், சதாத், மொபுட்டு போன்றோருக்கு இவர்கள் எந்தவிதத்திலும் குறைத்தவர்கள் அல்லர். ஜெயவர்த்தனாவதும் காந்தியதும் அரசியலானது தேசிய முதலாளித்துவத்தின் ஏதோ அற்ப சொற்ப முற்போக்குத்தனமென்ற பிரமைகளிற்குக்கூட முழுக்குப் போட்டுவிட்டதோடு இனிமேல் இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் முற்போக்குப் பாத்திரத்தை வகிக்க மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

2.             பல தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவம் வெகுஜனங்களை மதிமயங்க வைப்பதற்கு மகாத்மாவின் காந்தியம் என்ற வரலாற்றுத் தப்பெண்ணத்தை அழகுபடுத்தி ஆலாபரணம் பண்ணிய மகாத்மாவின் அரசியற் குள்ளத்தன மதப் போர்வையை வியூகமாகப் பாவித்து காங்கிரஸ் மூலதனச் சுறாக்களை அவற்றின் கொடூரம் தெரியாமல் பூசி மெழுகி வைத்துள்ளது. கூட்டுச் சேராமை என்ற துறவுப் போர்வையால் தன்னை மென்மையிலும் மென்மையானதாக உலகத்திற்கு காட்டும் இந்திய முதலாளித்துவம் உலகத்திலே நான்காவது பெரிய ஆயுதப்படையை ஆட்டிப்படைக்க வல்லதோடு மிக மௌமாகவும், கொடுங்கோன்மையாகவும் தெற்காசியாவிலே ஏகாதிபத்தியத்தின் நலனை மிக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தனது சொந்த நாட்டிலே விழுங்கி ஏப்பம் விட்டுப் பாதுகாக்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய பொழுது, தான் சின்னப் பங்காற்றிய கௌரவங்கூட இல்லாத இலங்கை முதலாளித்துவம் வேண்டுமென்று புவிச்சூழலையும், விஜயன், துட்டகைமுனு, பாராக்கிரமபாகு போன்ற கர்ண பரம்பரைக் கதைகளையும் தனது ஆதிபத்தியற்கான உரிமையாக காரணம் காட்டுகின்றது.

3.             1948 தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை நசுக்கியது தொடக்கம், 1956 தமிழ்மொழிக்கான சம அந்தஸ்த்தை நிராகரித்ததனூடாக, 1983 தமிழ் விரோதப் படுகொலை செய்ததோடு இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களை, இந்திய முதலாளித்துவத்தினை ஆக்கிரமிக்க வரவழைத்ததான மாபெரும் சாதனையை செய்த இலங்கை முதலாளித்துவம் தனது தொடர்ச்சியான இரத்தவெறிப் பாதகத்தை நியாயப்படுத்தத்தான் இலங்கையின் ஒரே நாடான தனித்துவத்தை காப்பாற்ற பகிரதப் பிரயத்தனப்படுவதாக தொடர்ந்து கொக்கரித்தது. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்கு சிங்கள வெகு ஜனங்களின் பேராதரவை பெறுவதற்காக இந்திய தேச விஸ்தரிப்பிற்கு, கடைசிக் குழியை தோண்டுகின்றது. சிங்களச்சாதி என்ற விஷப்பிரசாரத்தின் மூலம் சிங்கள மக்களை இனவாதத்திற்கு தூண்டியது. இந்த இலங்கை முதலாளித்துவம் கிராமப்புற வெகு ஜனங்களிற்கு அத்தியாவசிய ஜீவாதாரப் பொருட்களை நிராகரித்ததோடு முதலாளித்துவ கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விவசாயிகளிற்கு தமிழ் விரோத நஞ்சை ஊட்டியது.

4.             இதற்கிடையில் குள்ளத்தனம் வாய்ந்த புதுடில்லி சதிகாரர்கள் இலங்கை தமிழ் மக்கள் பாவம் என்று சொல்லி மிகப் பிரபல்யமாக முதலைக் கண்ணீர் வடித்ததோடு தாமே சிங்கள இனக் கொலையை தடுக்கவந்த ஆபத்பாந்தவர்கள் என்று காட்டிக்கொண்டு விடுதலை இயக்கங்களின் அரசியலில் வீட்டோ அதிகாரத்தை பாவித்தார்கள்.

5.             ஈற்றில் கொலைகார வர்க்க நலன் வழிநாடத்த ஆடிய நாடகங்கள் எல்லாம் அம்பலமாகியது. ஆனால் தெளிவற்ற தன்மையோடு, ஜெயவர்த்தனாவின் சிங்கள இனத்தின் தனித்துவம் காக்கும் தன்மையும் ராஜீவ் காந்தியின் தமிழ் மக்களின், விடுதலையை பாதுகாப்போம் என்பதும் எதிர்பார்த்த மாதிரியே உருக்குலைந்து கோணங்கி வேடமாகி, இருவரும் இராணுவ ஐக்கியம் ஏற்படுத்தி எந்த மக்களுக்காக தாம் பரிந்து பேசினார்களோ, அந்த அதே மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். ஜெயவர்த்தனா வட-கீழ் மாகாணங்களை எல்லையற்ற காலத்திற்கு இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டார். தமிழ் மக்களை நரபலி வேட்டையாட நான்கு வருடங்களாக பாவித்த இலங்கை இராணுவம் இன்று வறிய சிங்களத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் நசுக்க தெற்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய முதலாளித்துவத்திற்கு, தமிழ் மக்களை பாதுகாப்பதென்பது, அவர்களை பூண்டோடு ஒழிப்பதற்கான தாக்குதலை தொடுப்பதாகிவிட்டது. அவர்களின் செயல்களானது, எவ்வாறு அமெரிக்கப் படைகள் வியட்நாமில் கியூ (Hue) பிரதேசத்தை தரைமட்டமாக்கியபோது "ஒரு நகரத்தை காப்பாற்ற வேண்டுமானால் சில வேளைகளில் அதனை அழிக்க நேரிடுகின்றது" என்றார்களோ, அதே போல்தான் இருக்கின்றது. இப்படியே இந்திய முதலாளித்துவமும், ஒரு தேசிய இனத்தைக் "காப்பாற்ற" அந்த இனத்தின் மக்களையே பூண்டோடு அழிக்கிறார்கள்.

6.             இலங்கை முதலாளித்துவத்தின் செயல்களை எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதற்கு ஒப்புமையாக நாம் கடந்தகால புரட்சிகர வரலாறுகளில் காணமுடியும். தங்களிற்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த பிரெஞ்சு பூர்சுவாக்களும், பிரெஷ்சிய பூர்சுவாக்களும் 1871ல் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பாரிஸ் தொழிலாளர்களை நசுக்குவதற்காக ஐக்கியப்பட்டார்கள். இந்தச் சம்பவத்திற்கு 46 வருடங்களிற்கு பின்பு கெரென்ஸ்கி போல்ஷிவிக் புரட்சியை நசுக்குவதற்காக பெட்ரோகிராட்டை ஜேர்மனியிடம் தாரைவார்க்க முற்பட்டார். ஜெயவர்த்தனா சதியிலிருந்து கற்கும் பாடம் என்னவெனில் தேசிய முதலாளித்துவத்தின் "தேசபக்தி" ஏதும் அர்த்தமற்றதாகும். அது முதலாளித்துவ பேராசையின் பலவீனமான வெளிப்பாடாகும். அது எப்பொழுதும் வர்க்க வாஞ்சையின் அத்தியாவசியத்திற்கு அடிபணிந்தது. இலங்கை முதலாளித்துவத்தின் ஆட்சியானது வடகீழ் மாகாணத்தில் இந்திய ஆக்கிரமிப்பும் தெற்கிலே தமிழ் விரோத இனவாதமும் என்ற இரு தூண்களிலிலேயே நிலை கொண்டுள்ளது. இந்நிலைமைகள் ஒரு வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அதாவது ஒரு நாட்டிலுள்ள தேசிய இனங்களினதும், மதக் குழுக்களினதும் உண்மையான சமத்துவம் என்பது பாட்டாளி வர்க்கத்தால் தலைமை கொடுக்கப்பட்ட சோசலிசப் புரட்சியால் மாத்திரம் தான் நிர்ணயிக்க முடியும் என்பதாகும்.

7.             காந்தி ஜெயவர்த்தனா சதியானது இந்திய உபகண்டத்தில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் அக்கிரமத்தை அம்பலப்படுத்துவதோடு இந்த புதிய அனுபவமானது குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் திவாலான தன்மையையும் வெளிப்படுத்துகிறது. அதாவது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க குட்டி முதலாளித்துவ தேசியவாதம் இலாயக்கற்றதென்பதை இது நிறுவிக் காட்டியுள்ளது. வரலாற்று நெருக்கடியான காலகட்டங்களிலே முழு மக்களினதும் தலைவி தத்தளித்துக் கொண்டிருக்கையிலே மற்றவர் மனம் புண்பட்டுப் போகுமேயன்று யோசிப்பதற்கு இடமேது. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் நிலைமையை பற்றியோ, அதன் போராளிகளின் தலைவிதியில் அனுதாபங்கொண்டோ சொல்ல வேண்டிய உண்மையை சொல்லாமல் மன்னித்து மறந்துவிட முடியாது. யூலை 1987ல் இருந்து தேசிய விடுதலை பெரிய பின்னடைவிற்கு சென்றதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளே பிரதான பொறுப்பாகும்.

8.             பிரபாகரன், தான் புதுடில்லிக்கு பறக்க யோசித்ததும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றதும், இந்தியாவினது தந்திரத்தினதும் கபடத்தினதும் விளைபொருள் என்கின்றார். இந்த சாக்குப் போக்கு LTTE இன் சின்னத்தனத்தையும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் ஆண்மையின்மையையுமே அம்பலப்படுத்துகிறது. LTTE இன் தலைவர் ஏன் காந்தியினால் ஏமாற்றப்படக் கூடியவராக இருந்தாரென்றால் அதாவது முழு அரசியலுமே தமிழீழத்தின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு இந்திய முதலாளித்துவத்தை வருந்தி அழைத்து உதவி செய்யும்படி கேட்ட அரசியலின் அடித்தளத்திலே ஆனதாகும். முதலாளித்துவ தேசிய வாதத்தின் வர்க்க முன்னோக்கும், வர்க்க வேலைத்திட்டமுமே இந்தப் பேரழிவை கொண்டு வந்த தவறான எடைபோடலின் ஊற்றிடமாகும். 70 வருடத்திற்கு முன்பு லெனின் எச்சரித்தது போன்று ஓர் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை பற்றிய எண்ணக்கரு என்னவெனில் தனக்கென்று பிரத்தியேக சலுகைகளை பெறுவதும் சுதந்திரம் அடைந்த நாட்டிலுள்ள தொழிலாளர்களையும், விவசாயிகளையும் தான் தனித்துச் சுரண்டுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதுமாகும். இத் தன்னல தன்மையானது முதலாளித்துவ வர்க்க குணம் என்ற நிதர்சன வேரிலிருந்து தொடங்கி கூலி உழைப்பிலுள்ள உபரிப் பெறுமானத்தை உறுஞ்சியெடுப்பதென்ற அடிப்படையில் தங்கியதால் தொழிலாள வர்க்கத்தை அடக்கியாள்கிறது. முதலாளித்துவ தேசியவாதத்தின் அனைத்து கன்னைகளின் கொள்கைகளையும், LTTE போன்ற தீவிர போக்குகளின் கொள்கைகளையும், இந்த வர்க்க காரணிகளே வழிநடத்துகின்றன. அவர்களின் அரசியல் வதன சாஸ்திரங்களை இந்த வர்க்கக் காரணிகளே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அடியிலும் முதலாளித்துவத் தேசியவாதிகள் விடுதலைப் போராட்டம் தங்கள் "கைப்பிடிகளிலிருந்து நழுவி" முதலாளித்துவ ஆட்சிக்கு விரோதமாக மாறாமல் காத்துக் கொள்வார்கள்.

9.             ஒடுக்கப்பட்டதும் பின்தங்கியதுமான நாடுகளிலுள்ள முதலாளித்துவவாதிகள் தங்களது தேசியத்தை ஏகாதிபத்திய ஒடுக்குமுறை நுகத்தடியிலிருந்து விடுவிக்கக் கூடிய மட்டத்திற்கு சர்வ வியாபகத் தன்மை பெற அதாவது விடுதலையை பூர்த்தி செய்யத் தேவையான சர்வாம்சத்தையும் பூர்த்தி செய்ய இயல்பிலேயே இலாயக்கற்றவர்கள் ஆதலால் அவர்கள் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை அணிதிரட்டி கிளர்ந்தெழச் செய்வதை மட்டுப்படுத்திவிடுவார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அக்டோபர் 16, கம்கறுமாவத்தை ஏட்டில் சரியாக கூறியாங்கு:

   "தேசிய புறநீங்கல் வாதத்தையும் ஒன்றின் தனியுரிமையை அடையும் இலக்கையும் மாத்திரம் அடிப்படையாக கொண்ட ஓர் இயக்கத்தால் ஒருபோதும் தேசிய விடுதலையை அடைய முடியாது. எங்களது சகாப்தத்தில் அப்படியான இயக்கம் அது எவ்வளவு பெரிய வெகுஜன ஆதரவை பெற்ற இயக்கமாக இருந்தாலும் முதலாளித்துவ நாடுகளிடையே தனிமைப்படுத்தப்பட்டுவிடும். ஒரு பிரத்தியேக ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலை இயக்கமானது திறந்த மனத்தோடு ஜனநாயகத்திற்காகப் போராடும் இயக்கத்தின் பகுதியாயும், முழுதாயும் இயங்கிச் சென்றால் மாத்திரமே முன்னேறிச் செல்ல முடியும்.

   ‘‘தேசிய புறநீங்கல்வாதம் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பரிபூரண ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் பகுதியும் முழுமையும் ஆவதை தடை செய்யும். இது ஏன் இப்படி நிகழ்கிறதென்று பார்க்குமிடத்து அதன் இறுதி ஆய்வு வெளிப்படுத்துவது என்னவெனில், தேசிய புறநீங்கல் வாதமானது தேசிய முதலாளித்துவம் தனது சொந்த நாட்டுத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சுரண்டும் பிரயத்தனத்தோடு பின்னிப் பிணைந்தது என்பதையே. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் தளர்ச்சியின் ஊற்றிடம் இதுவேயாகும்.

10.           இந்திய இராணுவம் பெரும் கொலைகளை செய்ததோடான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை LTTE ஏற்றுக்கொண்டதன் பின்பு, மீண்டும் காந்தி அரசாங்கத்தின் விட்டதைத் தொட்டதை பொறுக்குவதற்கு அது முண்டியடித்து ஓடுகிறது. இந்திய இராணுவத்தின் இனப்படுகொலை சம்பவத்தை அடுத்து அக்டோபர் 14, பிரபாகரன் அறிக்கை வெளியிடும் பொழுது இந்த இனப்படுகொலை நிகழ்ச்சி தப்பப்பிராயத்தால் ஏற்பட்டது என்று பாசாங்கு செய்தார். அவர் காந்திக்கு அனுப்பிய செய்தியில்அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் ஜனநாயக சுதந்திரம் உள்ள மக்கள் மேல் இந்தியா போன்ற ஜனநாயக நாடு தனது விருப்பத்தை துவக்கு முனையிலே திணிப்பது வியப்பானது என்று கூறினார். இந்திய ஜனநாயகம் பற்றிய பிரபாகரனது ஸ்தோத்திரங்கள் குழந்தை புத்திக்கான சிறந்த உதாரணமாகும். இது தமிழ் வெகுஜனங்களை ஏமாற்றும் கபடம் நிறைந்ததாகும். இதன் நோக்கு கொழும்பு, டெல்லி, யாழ்ப்பாணத்திலுள்ள தொழிலாளர்களும் விவசாயிகளும் தமது வர்க்க எதிர்க்கெதிராக சுயாதீனமாக கிளர்ந்தெழுவதை வேண்டுமென்று தடுப்பதாகும்.

11.           தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை LTTE பெறத் தவறியதால் அந்த உரிமை நிறைவேற முடியாத உரிமையாகவோ அன்றேல் அப்படி ஒரு கோரிக்கைக்காக போராடுவது பிரயோசனம் அற்றதாகியோ விடவில்லை. இது தேசிய ஜனநாயகப் போராட்டமானது ஒடுக்கப்பட்ட நாட்டின் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தோடு பின்னிப் பிணைந்ததையே நிறுவிக் காட்டுகிறது. தீர்க்கப்படாத மற்றய ஜனநாயகக் கடமைகளோடு தேசிய சுயநிர்ணய உரிமையையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தால் மாத்திரம்தான் அடைய முடியும். நான்காம் அகிலத்தின் இந்த வரலாற்று முன்நோக்கானது இலங்கையிலுள்ள சிங்கள தமிழ் மக்களின் 40 வருட அனுபவத்தால் மீண்டும் நிறுவிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த கால் நூற்றாண்டாய் பப்லோவாத திரிபுவாதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட லங்கா சமசமாஜ கட்சியின் வரலாற்றுத் துரோகம் இல்லையெனில், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் ஸ்ரீலங்கா பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிபட்டிருக்கமாட்டாது.

   1964 பண்டாரநாயக்கா கூட்டரசாங்கத்தில் LSSP சேர்ந்தது வர்க்கப் போராட்டத்தினதும், தேசிய விடுதலைப் போராட்டத்தினதும், திருப்பு முனையாகும். இந்த வரலாற்று துரோகத்திற்கு முன்பு தமிழ்மக்கள் தொழிலாள வர்க்கத்தை தலைமைக்காக பார்த்துக் கொண்டிருந்ததோடு ஸ்ரீலங்கா முதலாளித்துவத்தை பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிந்தவுடன், இன ஒடுக்கு முறையும் ஒழிந்துவிடும் என்று நம்பியிருந்தார்கள். இதை 1953 கர்த்தாலிலும் (பொதுவேலை நிறுத்தம்) 1963-64 21 அம்ச கோரிக்கை போராட்டங்களிலும் நிதர்சனமாக காணக்கூடியதாக இருந்தது. 1964லிருந்து 1972 க்கு முழு நிலமைகளும் மாறியதோடு LSSP, முதலாளித்துவ அரசாங்கத்துள் அங்கம் வகித்ததோடு தேசிய ஒடுக்க முறையை ஸ்தாபனப்படுத்திய அரச சட்டத்தை உண்டாக்கவும் பங்காளியாகியது. LSSP ஆல் குலுக்கி எறியப்பட்ட தமிழ் மக்கள் முதலாளித்துவ தேசியவாத அரசியலுக்குள் வாரி அள்ளப்பட்டுச் சென்றனர்.

12.           LSSP யின் துரோகம் எவ்வாறக இருந்தாலும், முதலாளித்துவ தேசியவாத முட்டுச்சந்தில் இருந்து மீழ்வதற்கான முன்னோக்கு தமிழ் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் ஒன்றேயாகும். இந்திய ஆக்கிரமிப்பானது தமிழ் தேசிய இனத்தின் ஒடுக்க முறைக்கும் தெற்கிலுள்ள சிங்கள வெகுஜனங்களின் ஒடுக்கு முறைக்குமான வர்க்க அடித்தளத்தை அம்பலப்படுத்தியதோடு, வர்க்கப் போராட்டத்தையும், தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சிங்கள தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் ஐக்கியப்படுத்த வேண்டிய அத்தியாவசியத்தையும் கொண்டுள்து. இது திட்டவட்டமாக ஐக்கிய சோசலிச தமிழீழம்- ஸ்ரீலங்கா பதாகையை உயர்த்தும்படி பணிக்கிறது!

13.           அழுகுகின்ற முதலாளித்துவ அரச அமைப்பு முறைக்குள்ளும் அவர்களின் செயற்கையான தேச எல்லைகள் என்ற சவப் பெட்டிக்குள்ளும் திக்குமுக்காடி திணறுவதை தவிர வெகுஜனங்களின் தேவைகளோ ஜனநாயக உணர்வுகளோ திருப்திப்படுத்தப்படுவதில்லை. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததிலிருந்து நாடு உள்ளடக்கியுள்ள வெவ்வேறுவிதமான மொழி, மத, இனக்கூறுகளின் உண்மையான ஜனநாயக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித் தேசியம் உண்டாக்க ஏகாதிபத்தியம் விட்டது கிடையாது. மாறாக ஏகாதிபத்தியத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட "சுதந்திரம்" என்பது, ஜனநாயகக் கொள்கைகளின் கேவலமான சமரசத்தின் அடிப்படையில் அமைந்த வம்பில் பிறந்த அரசுகளாகும். இந்த அரசுகளின் உருவாக்கத்தினுள்ளே தேசிய முதலாளித்துவம் ஒடுக்கப்பட்ட வெகு ஜனங்களை விடுதலை செய்யும் பாத்திரத்தை வகிக்காமல் ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களின் இளைய பங்காளியாகவே செயற்பட்டது. இப்படி உருவாக்கப்பட்ட அரசுகள் அழுகுகின்ற முதலாளித்துவத்தின் மறியல் வீடாகவே இருக்கின்றதே அன்றி உற்பத்திச் சக்திகளின் முற்போக்கான அபிவிருத்தி அதற்குள்ளே முடியவே முடியாததாகும்.

14.           ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ், இந்த முதலாளித்துவ அரசுகளின் விளைவுகளை அனைவரும் அறிந்ததே. இந்த நாடுகளில் தொடர்ந்து நிலைத்திருக்கக்கூடிய ஓர் உள்நாட்டுத் தொழிற்சாலையை அமைக்க முடியவில்லை. இவைகளின் பொருளாதார தலைவிதி சில மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு மாத்திரம் விலங்கிடப்பட்டு மீண்டும் திருப்பிச் செலுத்த முடியாத மீளாக் கடனிலும் ஆறாத் துயரினிலும் பூதாகாரமான எழுத்தறிவின்மை, நோய்நொடி, கோள் குண்டணி, பஞ்சம் பசி, பட்டினிச்சாவு என்பவையையே நித்திய வரமாகப் பெற்றுள்ளன. இந்த பின்தங்கிய நாடுகளில் எங்காவது அருமை பெருமையாக உள்நாட்டு தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருந்தால், இவையும் பிரத்தியேகமாக ஏகாதிபத்தியத்தால் அடக்கியாளப்படும் பல்நாட்டு உற்பத்தியின் ஒரு பாகமாகவும் ஏகாதிபத்திய அதீத இலாபத்தை சுரண்டும் ஊற்றிடமாகவுமே இருக்க முடியும். இந்த போலிப் பொருளாதார அபிவிருத்தி ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் எந்த தேவையையும் நிறைவு செய்யப் போவதில்லை. இந்தப் பிரச்சனைகளின் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் வாழ்த்தி வரங்கொடுத்தலோடும், எக்காள முக்காள சிரிப்போடும், பெருக்கெடுப்பதுதான் இனக்கலவரங்களும், யுத்தக் களரிகளுமாகும். மூக்குள்ளளவும் சளிபோல முதலாளித்துவ ஆட்சி முறை இருக்கும்வரை இதுவே நிலைமை. மாறாது தீராது. இந்திய பாக்கிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், பர்மா போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு பிந்திய வரலாறு, இன்னும் நறுக்காகச் சொல்வதென்றால், உலகிலுள்ள முன்னாள் காலனித்துவ நாடுகள் எல்லாமே நறுக்காக நிறுவிக் காட்டுவதென்னவெனில் முதலாளித்துவவாதிகள் ஒருபோதும் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, அரசியற் சுயாதீனத்தையோ ஏற்படுத்த மாட்டார்கள் என்பதைத்தான்.

15.           ஸ்ராலினிஸ்டுக்களதும், திரிபுவாதிகளினதும், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளதும் பிடாரித்தனமான எதிர்ப்பினுள்ளும் இந்தக் கடமைகளை செய்து முடிக்க வரலாறு பாட்டாளி வர்க்கத்தை மாத்திரந்தான் நம்பியுள்ளது. இந்த ஒரேயொரு சமூக சக்தியால் மாத்திரந்தான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது பகற்கனவு அல்ல என்று ஆக்கமுடியும். பாட்டாளி வர்க்கம் இதைச் செய்து முடிக்கும் பொழுது ஒருபோதும் முதலாளித்துவத்தின் சகபாடியாக செய்யாது. மாறாக பரம எதிரியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை தனது சொந்த ஆயுதத்தால், தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தனக்கு பின்னே அணிதிரட்டியே செய்து முடிக்கும். தேசிய சுயநிர்ணய உரிமையை பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிர்மாணித்ததுடன் ஒடுக்கப்பட்ட எல்லா தேசிய இனங்களுக்கும் அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் உத்தரவாதமாக்கப்படும். தேசங்களின் உண்மையான சமத்துவத்திற்கான வரையறைக்குள், அது தாமே முன்வந்து ஒரு ஐக்கிய சோசலிச சமஷ்டிக் குடியரசை அமைக்கும்படி அறைகூவும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தாமே முன்வந்து ஐக்கிய குடியரசு அமைக்கும் பட்சத்தில் ஒடுக்கப்பட்ட இனங்களின் பொருளாதார, கலாச்சார முன்னேற்றங்களுக்கு அதிக வாய்ப்பு கிட்டுமென நம்பும் பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தின் கீழ், பிரிந்து செல்ல விரும்பும் தேசிய இனங்கள் செல்வதற்கு உறுதி அளிக்கும். தமிழீழம்- ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வேலைத்திட்டத்தையே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தன் வேலைத் திட்டத்தின் முக்கிய சாராம்சமாக முன்மொழிந்துள்ளது.

16.           இந்திய இலங்கை ஆளும் வர்க்கத்தால் விலைக்கு வாங்கப்பட்ட LSSP மற்றும் ஸ்ராலினிஸ்டுக்களே இந்தப் போராட்டத்திலேயுள்ள பிரதான தடைக்கல்லாகும். அவர்களது ஜெயவர்த்தனா ஆட்சியுடனான இராஜதந்திர ஐக்கியம், ஒற்றையாட்சி முறையை பாதுகாத்தல் என்ற தவிர்க்க முடியாத அரசியலின் வெளிப்பாடாகும். இந்த இரண்டு கட்சிகளுமே முதலாளித்துவத்திலிருந்து இம்மியும் சுயாதீனமானவையல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரமானது ஸ்ராலினிசத்தின் முழு வரலாற்றிலிருந்து வேரூன்றி வந்தது. LSSP தனது கடந்தகால பாரம்பரியம் முழுவதையும் உதறித்தள்ளிவிட்டது. என்ன சாபக்கேடோ தெரியவில்லை கொல்வின் ஆர். டி. சில்வாவின் தேசிய இனம் பற்றிய கடந்தகால எழுத்துக்கள் மாக்சி இலக்கியத்தின் வளம்மிக்க தாரக மந்திரங்களாகும். இன்று அவையே அவரால் தலைமை தாங்கப்பட்டு வழிநடத்தப்படும் கட்சியின் முழு அரசியலையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்றது. LSSP வண்டியிலே UNP குதிரையை பூட்டி டி. சில்வா இந்த நாட்டிலேயுள்ள படுபிற்போக்கு சோவனிச அரசிற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிங்கள அரசை பாதுகாக்க வேண்டிய எந்த தேவையும் தொழிலாள வர்க்கத்திற்கு கிடையாது. தொழிலாள வர்க்கத்தின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட்டு ஜெயவர்த்தனா செய்த அத்தனை நெட்டூரங்களுக்கும் LSSP யும் சக பங்கை ஏற்க வேண்டும்.

17.           அதற்கும் மேலாக இவர்கள் வடக்கு கிழக்கிலே இந்திய ஆக்கிரமிப்பை சூடுசுரணை இல்லாமல் வரவேற்பதானது ஒடுக்கப்பட்ட சிங்கள விவசாயிகளின் நியாயமான தேசிய உணர்வுகளை உதாசீனம் செய்வதாகும். இச்செயல்கள் அதிபிற்போக்கான JVP மற்றும் அதன் வழிகாட்டியான SLFP இன் கரங்களை பலப்படுத்தியுள்ளது. இச் செயல்கள் குட்டி முதலாளித்துவ வெகுஜனங்களின் கண்களிற்கு முன்னால் தொழிலாள வர்க்க இயக்கத்தை கொச்சைப்படுத்தி சிங்கள பேரினவாதத்தில் அடித்தளமமைத்த பாசிச இயக்கம் வளர்வதற்கு துணை நிற்கும். இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரானதும் இலங்கை முதலாளித்துவத்திற்கு எதிரானதுமான வர்க்கப் போராட்டத்தினுள்ளே சிங்கள தமிழ் வெகுஜனங்களை ஜனநாயக ரீதியில் ஐக்கியப்படுத்த பிரயத்தனப்படாமல் LSSP இந்த நாட்டு ஒடுக்கப்பட்ட சனத்தொகையின் ஒரு பகுதியை விரோதிப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறது. இது இந்திய ஆக்கிரமிப்பை அழகுபடுத்துவதோடு தமிழ் மக்களை பூண்டோடு ஒழிக்க ஒத்தாசை வழங்குவதோடு தெற்கிலே ஜெயவர்த்தனாவின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு ஆராத்தி எடுத்து ஆலவட்டம் வீசுகிறது. LSSP யின் அரசியலானது சோசலிச ஜனநாயக வேலைத் திட்டங்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடியோடு நிராகரிக்கிறது.

18.           நடந்து முடிந்த அனைத்து சம்பவங்களுமே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைத்திட்டம் அனைத்தையும் மீண்டும் மீண்டும் சரியென்பதையே நிறுவியுள்ளன. இது மாத்திரமே வடக்கிலுள்ள தமிழ் தொழிலாளர்களதும், தெற்கிலுள்ள சிங்கள தொழிலாளர்களதும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய மூலோபாயத்தை ஸ்திரமாக உயர்த்திப் பிடித்தது. அதற்கும் மேலாக கடந்த வருடம் சக சகோதர இயக்கமான இந்தியாவின் சோசலிச தொழிலாளர் கழகத்தோடு நெருக்கமுற இணைந்து பல மில்லியன் இந்திய தொழிலாள வர்க்கத்தினுள்ளே ட்ரொட்ஸ்கிசத்திற்காக போராடியது. இதுவுங்கூட இந்திய இலங்கை தொழிலாளர்களின் தலைவிதியானது சிக்கறுக்க முடியாத மட்டத்திற்கு பின்னிப் பிணைந்தது என்பதை நனவுபூர்வமாக விளக்கியதோடு, ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டமானது இரண்டு தொழிலாளர்களினதும் இணைந்த போராட்டமென்பதையும் விளங்கியதன் பேரிலேயாகும்.

19.           இந்த இக்கட்டான சூழ்நிலையிலே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது சக்திகளை எவ்வளவு வேகமாகப் பரப்ப முடியுமோ அவ்வளவு வேகமாகப் பரப்ப வேண்டும். UNP உடன் கூட்டுச் சேர்ந்துள்ள LSSP, CP க்கு எதிரான போராட்டத்தை உக்கிரப்படுத்த வேண்டும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சரியாகக் கூறியாங்கு:

இங்கேயுள்ள ஒரே முன்னேறும் வழி, தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவ கட்சியிலிருந்து சுயாதீனமாக அணிதிரட்டி, வடகிழக்கு மாகாணங்களிலிருந்து இந்திய இலங்கை ஆக்கிரமிப்பு படைகளை அகற்றுவதோடு தமிழ் தேசத்தின் தேசிய ஜனநாயக உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிப்பதன் மூலம், சிங்கள, தமிழ் பேசும் மக்களாலான சோசலிச குடியரசிற்கான முன்னோக்கோடு UNP அரசாங்கத்தை தூக்கியெறிய போராட வேண்டும்.

20.           இப்போராட்டத்தின் முக்கிய சக்தியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தெற்கிலே முதலாளித்துவ வர்க்கத்திற்கும் UNP க்கும் எதிரான தொழிலாள வர்க்க நானாவித போராட்டங்களிலே தன்னை அர்ப்பணிப்பதோடு, முன்னணி வகிக்கவும் வேண்டும். இன்று சீர்குலைந்து சின்னாபின்னப்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடியினால் உந்தப்பட்டு உலகத்திலுள்ள திருத்தல்வாதிகளால் மறக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் வரப்போகும் மாதங்களிலே புதிய தாக்குதல்களுக்கு வரும். இந்த புதிய தாக்குதலின் போது சரியான புரட்சிகர கொள்கைகளினால் ஆயுதபாணியாகி, இலங்கையினதும் முழு இந்திய உபகண்டத்தினதும் அரசியற் சூத்திரங்களையும் உருமாற்ற வேண்டும். இன்று நாட்டுப் புறங்களிலே குளறுபடி செய்யும் JVP க்கு சக்தி LSSP-CP செய்த துரோகத்தின் அடிப்படையிலும் கிராமப்புற சனங்களின் பாதிப்பினாலும் உருவானதாகும். வரவிருக்கும் கிளர்ச்சி எழுச்சியினுள்ளே தொழிலாள வர்க்கம் சிங்கள விவசாயிகளிற்கு நல்லதொரு புதிய முன்னோக்கை வழங்கினால் JVP மண்ணோடு மண்ணாகும்.

21.           நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு புரடசிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கடந்த சில மாதங்களில் கஷ்டப்பட்டதும் தாக்கத்தை தரவல்லதுமான வெற்றியை எண்ணித் திருப்திப்படுகிறது. அரசாங்கத்தினதும் சிங்கள இனவாதக் குண்டர்களின் ஒடுக்கு முறைக்கு மத்தியிலும் தொழிலாள வர்க்கத்திற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மாத்திரந்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்காக எதிராகப் பிரச்சாரம் செய்தது. எவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் இது கொழும்பு கண்டி யாழ்ப்பாணத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக செய்த வெற்றிகரமான பொதுக்கூட்டங்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் சிங்கள மக்களிடையே பேராதரவை பெறுகின்றதென்பதும் தெற்கிலே LSSP-CP கட்சிகளிலிருந்தும், வடக்கிலே புலி இயக்கத்திலிருந்தும் சக்திகளை வெற்றிகொள்கின்றது என்பதையே காட்டுகிறது. இந்த வெற்றியின் தாற்பரியந்தான் அண்மையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முக்கிய அங்கத்தவர்களை, பொதுச் செயலாளரின் சகோதரன் உட்பட நவம்பர் 12ந் திகதி கொழும்பிலே கொலை செய்ய முயற்சித்தது காட்டுகின்றது.

மீண்டும் இலங்கை தொழிலாள வர்க்கத்தினுள்ளே ட்ரொட்ஸ்கிசத்தின் ஆதிக்கம் உதித்தெழுவதற்கு இலங்கை முதலாளித்துவம் பயப்படுவதே அண்மையில் JVP, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவர்களை கொல்லப்போவதாக பயமுறுத்தியதன் காரணமாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்தத் தாக்குதல்களையும் மிரட்டல்களையும் மிகுந்த பாதுகாப்பு முன்நடவடிக்கைகளோடு எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர வேலைகளை மேலும் உக்கிரமாக்க வேண்டும்.

இந்தியப் படையே தமிழீழத்தைவிட்டு வெளியேறு! தமிழீழ விடுதலையை கையளி!காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஒழிக!

 
கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்