LETTER FROM KEERTHI BALASURIYA TO A SRI LANKAN COMRADE IN LONDON JANUARY 11,1972

லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

ஜனவரி 11, 1972
கொழும்பு

அன்புள்ள தோழருக்கு,

உங்கள் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்த பணமும் கிடைத்தது. நீங்கள் உறுதியளித்திருந்த புத்தகங்களும் மைக்கின் கடிதமும் பெற வேண்டியிருக்கிறது. இன்று நான் அனைத்துலக முன்னோக்குகள் மற்றும் 1967 ஆவணங்களை பெற்றுக் கொண்டேன்.

உங்களது கடிதம் மற்றும் வேர்க்கர்ஸ் பிரஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளில் இருந்தும் டிசம்பர் 16 இல் அனைத்துலக் குழுவிற்கு (IC) நாம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எச்சரிக்கைகளின் முக்கியத்துவம் இப்போது இன்னும் தெளிவாகியிருக்கிறது.

பங்களாதேஷ் தொடர்பான அனைத்துலக் குழுவின் தவறான அரசியல் நிலைப்பாட்டின் தர்க்கவியல், காலனித்துவ நாட்டு மக்களின் போராட்டங்கள் குறித்த மார்க்சிச இயக்கத்தின் கடந்த கால அனைத்து அனுபவங்களையும் கைவிடுவதற்கு இட்டுச் செல்லக் கூடும், இட்டுச் சென்றிருக்கிறது. இந்த முயற்சிகள், 1961-63 காலத்தில் SWP க்கு எதிரான போராட்டத்தில் SLL தலைமையினால் பெறப்பட்ட முக்கிய வெற்றிகளை மீளாய்வு செய்யும் பாதையில் நகரத் தலைப்படுகின்றன என்பது இப்போது வெளிப்படையாகி இருக்கிறது. உங்களது டிசம்பர் 27 கடிதமானது முழுதாக மார்க்சிசத்திலிருந்து உடைந்து செல்லும் ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கும் முயற்சி என்பதற்கு மேல் எதுவும் இல்லை. அதனை ஆதரிக்க முயன்றதன் மூலம், நீங்கள் மார்க்சிசத்தை சிதைத்திருக்கிறீர்கள், உங்களையே குழப்பத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறீர்கள் உங்களது அரசியல் திவால் நிலையை வெளிப்படையாக்கி இருக்கிறீர்கள்.

உங்களது கடிதத்திற்கு பதிலளிப்பதற்கு முன்பு, எங்களது அரசியல் நிலைப்பாட்டை குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன். உங்களது கடிதத்தில் எங்களது நிலைப்பாட்டை "ஒதுங்கியிருக்கும்" (Abstentionist) ஒன்றாக வரையறை செய்ய முயன்றிருக்கிறீர்கள். இது முற்றிலும் தவறானதாகும். கானுக்கு எதிரான போராட்டத்தில் கிழக்கு வங்காள மக்களுக்கு நாங்கள் எங்கள் நிபந்தனையற்ற ஆதரவினை அளித்தோம். பூர்சுவா அவாமி லீக் தலைமையுடன் எங்களுக்கு ஆழமான அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையிலும் கூட நாங்கள் இதனை மேற்கொண்டோம். எனவே இது நீங்கள் கூறுவது போல் "ஒதுங்கியிருக்கும்" நிலைப்பாடல்ல.

மற்றொரு பக்கத்தில், சுதந்திரத்திற்கான போர் என்ற பெயரில் அல்லது வங்காள மக்கள் சார்பாக செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஒரு போர் என்ற பெயரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட போரை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. போர் நோக்கங்கள் குறித்த ஆய்வில் நாங்கள் கூறியிருந்தோம்: "கான் கிழக்கு வங்காளத்தை அடக்க முடியவில்லையானால், அப்போது கிழக்கு வங்காளத்தில் தலையிடவேண்டியதும் மற்றும் தனது பிடியை செலுத்த வேண்டியதும் இந்திராவின் கடமையாகின்றது. இந்த நோக்கத்தை தவிர பங்களாதேஷுக்கான இந்திய ஆதரவில் நாங்கள் வேறு எந்த அர்த்தத்தையும் காண முடியாது. அதே சமயத்தில் இந்து ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் அடித்தளத்தை அச்சுறுத்தும் வகையில் இந்தியாவில் வளரும் அனைத்து மக்கள் போராட்டங்களையும் பாக்கிஸ்தான் எதிர்ப்பு வெறி உணர்வுக்குள்ளாக மூழ்கடிக்கவும் அதன் மூலம் ஒட்டுண்ணி இந்து ஆட்சிக்குள் அந்த போராட்டங்களை அடக்கவும் விரும்புகிறார்கள். (அனைத்துலக் குழுவிற்கான டிசம்பர் 16 கடிதம்) நாங்கள் இந்த நிலைப்பாட்டை ஆதரித்தோம், இப்போதும் ஆதரிக்கிறோம். பங்களாதேஷ் போராட்டத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் இந்து பூர்சுவா மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிராக போகாத ஒரு அரசியல் தீர்வு மோசடியை திணிக்கவும், போராடிய பங்களாதேஷ் மக்களுக்கு துரோகமிழைத்த அவாமி லீக்கின் மறைமுகமான அனுமதியுடன் இந்திராவின் இராணுவமானது கிழக்கு பகுதிக்கு சென்றது. இதன் காரணமாக, கிழக்கில் இந்திய இராணுவம் ஆற்றுவதற்கான உண்மையான பங்களிப்பாக இருந்ததெல்லாம், இத்தகையதொரு அரசியல் தீர்வுக்கு எதிரான எந்த ஒவ்வொரு போக்கையும் நசுக்குவதே.

இந்திய-பாக்கிஸ்தான் போர் முழுவதிலும், இந்திராவுக்கும் கானுக்கும் இருந்த மோதலின் சாரமே கிழக்கு வங்காளத்தை எவ்வாறு அடக்குவது என்பதே தவிர, வங்காள மக்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் ஒருபோதும் இருக்கவில்லை. இந்திராவே இந்திய நாடாளுமன்றத்தில் நவம்பர் 24 இல் கூறியதைப் போல: "சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடக்குவதற்கான போர் மற்றும் அடக்குமுறையை விட அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசத்தின் பாதையே நன்மை பயக்கக் கூடியதாகும் என்பதை பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்".

இராஜதந்திர வார்த்தை ஜாலங்ளை அகற்றி விட்டால் இது எடுத்துக்காட்டுவதென்ன? சுற்றறிக்கையின் டிசம்பர் 8 பதிப்பு தெளிவான வார்த்தைகளில் தெரிவித்தது, "அவர் (இந்திரா) சுதந்திர இயக்கத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி மற்றும் முக்தி பாஹினி போராளிகளை ஒரு  'அரசியல் தீர்வின்' பகடைக் காய்களாக பயன்படுத்தி நெருக்கடி-நிரம்பிய இந்திய பூர்சுவாக்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் வகையிலான ஒரு முதலாளித்துவ கிழக்கு பாக்கிஸ்தானை உருவாக்கும்  உருவாக்கலாம்". போரை அறிவித்தபோதும், அதை தொடர்ந்த போதும் இந்திராவின் கொள்கையாக இருந்தது இது மட்டும் தான்.

இந்திய தொழிலாள வர்க்கமும் சரி அல்லது அனைத்துலக தொழிலாள வர்க்கமும் சரி இந்த போரை ஆதரிக்க முடியாது. பங்களாதேஷ் போராட்டத்திற்கு இந்திய தொழிலாள வர்க்கம் அளிக்கக் கூடிய உண்மையான மிக முக்கிய ஆதரவானது இந்திரா காந்தி அரசை தூக்கிவீசி விட்டு தனது சொந்த வர்க்க அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தான். அதிகாரத்திற்கான ஒரு உடனடியான போராட்டத்திற்கு இந்திய உழைக்கும் வர்க்கம் தயாராக இல்லாத ஒரு சூழலில், நமது பணியானது பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பாதுகாவலருக்கு அரசின் போர் நோக்கங்களை பொறுமையாக விளக்குவதையும், அதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சியை துரிதப்படுத்துவதையும் உள்ளடக்கி இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கின்ற சமயத்தில், பங்களாதேஷ்க்கான எந்த பொருள் அல்லது இராணுவ உதவியை தடுக்க வேண்டாம் என்றும், மாறாக இத்தகையதொரு உதவியை ஏற்பாடு செய்வதற்கு தேவையான ஒவ்வொன்றையும் செய்வதற்கும் இந்திய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம், எந்த சமயத்திலும் எங்கும் இராணுவத்தை அனுப்பும் அரசின் முடிவுகளை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இந்திரா கிழக்குக்கு தனது படைகளை அனுப்பினார் என்றால், அவர் அவ்வாறு தான் செய்தார், இந்திய தொழிலாளர்கள் இதனை வர்க்க நடவடிக்கை மூலம் நிறுத்தவே நாங்கள் கேட்டுக் கொண்டிருந்திருப்போம். இந்திரா தனது துருப்புகளை அனுப்புகிற அந்த தருணத்தில் நாங்கள் போராட்டத்தை தொடக்கியிருந்தால் மட்டுமே, இப்போது கிழக்கு வங்காளத்தில் இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு, குறிப்பாக முக்தி பாஹினி போராளிகளுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக இப்போது போராடுவதை எங்களுக்கு சாத்தியமாக்கி இருக்க முடியும்.

இதிலிருந்து, இந்திய பாக்கிஸ்தான் போர் குறித்த எங்களின் நிலைப்பாடு "ஒதுங்கியிருப்பதால்" வந்ததல்ல "தோற்கடிப்பு வாதத்தால்" விளைந்ததென்று தெளிவாகி இருக்கும்.

இந்த தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை அனைத்துலக் குழு எடுக்கவில்லை, ஏனென்றால் இந்திய இராணுவத்தை பங்களாதேஷ்க்கான விடுதலைப் படையாக அது குணாதிசயப்படுத்தியதால் ஆகும். எனவே கிழக்கு வங்காளத்திற்குள் இந்திய படைகள் நுழைவதை உண்மையில் அனைத்துலக் குழு ஆதரித்தது.

இந்த நிலைப்பாட்டின் பயங்கர விளைவுகளை நாங்கள் டிசம்பர் 16 கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டோம். அப்போது நாங்கள் கூறினோம்: "பங்களாதேஷ்க்கு இராணுவ உதவி அளிக்கும் இந்திய அரசின் முடிவிற்கு நாங்கள் 'விமர்சன ரீதியான ஆதரவளிக்கிறோம்' என்று கூறுவது மிகவும் குற்றத்தன்மையானது. இது இறுதியாக கிழக்கு வங்காளத்தில் இந்தியாவின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதற்கு ஒப்பானதாகும்".

தற்போதுள்ள நிலை என்ன? நீங்கள் டிசம்பர் 27 கடிதத்தை எழுதிய போது இருந்த சூழல் குறித்து வேர்க்கர்ஸ் பிரசில் (Workers Press) இருந்து ஒரு மேற்கோளை எடுத்துக் காட்ட அனுமதியுங்கள். இந்த பத்திரிகையின் டிசம்பர் 22 பதிப்பு தனது தலைமைக் கட்டுரையை "இந்தியா கெரில்லாக்களை மனித வேட்டையாடுகிறது" என்ற தலைப்பில் கொண்டிருந்தது: "ஆக்கிரமிப்பு இந்திய இராணுவம் தனது சட்ட ஒழுங்கு பிரச்சாரத்தை கடுமையாக்கிய போது பங்களாதேஷ் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய துரோக கட்டம் நேற்று தொடங்கியது".

"முக்தி பாஹினியின் தீரமிகு டாக்கா பிரிவின் தலைவரான A.Q. சித்தீக் இந்திய இராணுவத்தால் தேடல் வேட்டைக்கு ஆளாகியிருக்கிறார் என்பது இப்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது....

ஆக்கிரமிப்பு இராணுவமானது, சணல் முதலாளிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பணக்கார தொழில்நிபுண வர்க்கத்தினால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பழைய முதலாளித்துவ ஒழுங்கினை பங்களாதேஷ்க்கு திரும்பக் கொண்டு வர விரும்புகிறது".

இந்த சூழ்நிலையில் கூட, இந்த வேர்க்கர்ஸ் பிரசோ அல்லது சுற்றறிக்கையோ "கெரில்லாக்களை மனித வேட்டையாடும்" இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கு போராடவில்லை. இது எங்களது எச்சரிக்கைகளின் சரியான தன்மையை நியாயப்படுத்துவதாய் அமையவில்லையா? இந்திய படைகளை விடுதலைப் படைகளாக அங்கீகரித்து விட்ட பின்னர், ஒரு இரத்த ஆறு ஓடுவதற்கான மேடை அமைக்கப்பட்டு விட்ட நிலையிலும் அந்த படைகளின் பின்வாங்குவதற்கான போராட்டம் எதனையும் நடத்தாமல் இருப்பது என்பது, தர்க்க ரீதியாக சற்று சரியானதாகவே இருக்கும், நிச்சயமாக இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

சித்தீக்குக்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கை மூலம் கிழக்கு வங்காளத்தில் இந்தியாவின் ஊடுருவலுக்கான நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்து விட்ட ஒரு சூழலில், "இந்திய மற்றும் வங்காள படைகள் மூலம் பங்களாதேஷின் விடுதலை" குறித்து தோழர் லேன் யேட்ஸ் வேர்க்கர்ஸ் பிரசின் டிசம்பர் 23 பதிப்பில் எழுதுகிறார் (அதாவது மனித வேட்டை கட்டுரையை தொடர்ந்து வந்த இதழில்). இதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப்போக்கின்றீர்கள்? இந்த வகையான தெளிவின்மைகள், எந்த வர்க்க உள்ளடக்கமும் இன்றி, யார் யாரை விடுதலை செய்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ஒருவரையும் அனுமதிக்காது. பங்களாதேஷ் விடுதலை என்பது ஒரு உட்பொருளற்ற சிந்தனையாக இருக்கக் கூடிய வங்காள முதலாளித்துவவாதிகள் மட்டுமே இத்தகையதொரு "விடுதலையை" பாராட்டுவார்களே ஒழிய இந்திய இராணுவத்தால் வேட்டையாடப்படும் ஒடுக்கப்படும் போராளிகள் அல்ல. மார்க்சிஸ்டுகளுக்கு பங்களாதேஷ் விடுதலை என்பது ஒரு உட்பொருளற்ற வெற்று சிந்தனை அல்ல. ஷேக் முஜிபூர் ரஹ்மான் பற்றிய தனது கட்டுரையில் இதனை தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறார் தோழர் ராப். பிளாக் (வேர்க்கர்ஸ் பிரஸ், ஆகஸ்ட் 10, 1971): "ஒவ்வொரு வங்காளியும் கேட்கும் வகையில் இதனை தெளிவாகவும் உரக்கவும் கூறுவோம்.

"விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்படும் வரையில் பங்களாதேஷ்க்கு சுதந்திரம் என்பது இல்லை." (மூலத்தில் உள்ள அழுத்தம்)

வேர்க்கர்ஸ் பிரஸ் பத்திரிகையும் சுற்றறிக்கையும், கான் ஆட்சி மீதான இந்திரா ஆட்சியின் தற்போதைய இராணுவ வெற்றி குறித்து பெருமை பேசுவதன் மூலம், பங்களாதேஷ் விடுதலைக்கு மார்க்சிஸ்டுகள் வழங்கும் உறுதி வாய்ந்த வர்க்க அர்த்தத்தை ஒரு உட்பொருளற்ற வெற்று சிந்தனையாக நீர்க்கச் செய்கிறது.

தோழர் மைக், "முக்தி பாஹினி மற்றும் இந்திய இராணுவத்தின் இணைந்த துருப்புகளால், வெறுக்கப்பட்ட பாக்கிஸ்தான் ஆட்சி பங்களாதேஷில் தோற்கடிக்கப்பட்டதை உலகெங்கிலும் உள்ள மார்க்சிஸ்டுகள் பாராட்டுகிறார்கள்" என்று எழுதியபோது, இந்த மார்க்சிச நிலைப்பாட்டினை அவர் தெளிவாக கைவிடுகிறார், வங்காள மற்றும் இந்து முதலாளித்துவத்தின் வெற்றியை பாராட்டுகிறார்.

இந்திய இராணுவப் பெருமை பேசுதலின் பின்னணியில் இருப்பது வங்காள, இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தகமை மீதான தெளிவான நிராகரிப்பு தான். பாக்கிஸ்தான் முதலாளித்துவவாதிகளின் இராணுவ வலிமை மீதான அச்சம், கிழக்கு வங்காளம் மற்றும் மேற்கு பாக்கிஸ்தானிய பாட்டாளி வர்க்கம் அதனை எதிர்த்து போரிட முடியாது என்று குறைத்து மதிப்பிடுவதற்கு இட்டுச் சென்றதுடன், இது இந்திய இராணுவம் இல்லாமல் கான் தோற்கடிக்கப்பட முடியாது என்ற கருத்தாக்கத்திற்கு உருவாக்கத்திற்கு வளர்ச்சி அளித்துள்ளது. அனைத்துலகக் குழுவின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு பின் இருப்பதெல்லாம் இந்திய மற்றும் பாக்கிஸ்தான் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய இந்த ஐயுறவுவாத மற்றும் தோல்வி மனப்போக்கு தான். சான்று அவசியம் என்றால், தோழர் மெலடி ஃபாரோ சுற்றறிக்கையின் ஜனவரி 3 இதழில் எழுதிய கட்டுரையை படியுங்கள். அவர் தெரிவிக்கிறார், "இந்தியாவின் இராணுவத் தலையீடு இல்லையென்றால், கானின் படைகள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டிருக்க முடியும்?"

கானை வங்காளத்தை விட்டு துரத்தும் திறனுள்ள ஒரே படையாக தோழர்.மெலடி ஃபாரோ ஏற்றுக் கொள்ளும் இந்திய இராணுவப் படைகளை வெட்கமின்றி தழுவிக் கொள்ளும் பொருட்டு, தொழிலாள வர்க்கத்தின் தகமையை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியப்படுவதை இங்கே நீங்கள் காண முடியும். தோழர் மெலடி ஃபாரோக்கிற்கு ட்ரொட்ஸ்கியை பதிலளிக்க விடுவோம்:

"புரட்சிகள் இதுவரை வெற்றிகரமாக இருந்ததென்றால் அதற்கு ஆயுதங்கள் வழங்கிய உயர்ந்த வலிமையான அந்நிய ஆதரவாளர்கள் மட்டும் நன்றிக்குரியவர்கள் ஆக முடியாது. ஒரு விதியாக, எதிர்புரட்சியானது அந்நிய ஆதரவை அனுபவித்தது. சோவியத்துகளுக்கு எதிராக பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற படைகள் தலையிட்ட அனுபவத்தை நாம் நினைவு கூரவும் வேண்டுமா? ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் வெளியிலிருந்து இராணுவ ஆதரவு இல்லாமலே உள்நாட்டு பிற்போக்கிற்கும் மற்றும் அந்நிய தலையீட்டாளர்களுக்கு எதிராக வென்றது.

"புரட்சிகள் வெற்றி பெறுவது முதலாவதாக மக்களுக்கு அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கும், பகைவர் இராணுவத்தை சிதறடிப்பதற்கும் வாய்ப்பினை அளிக்கக் கூடிய ஒரு துணிச்சலான சோசலிச வேலைத்திட்டத்தின் உதவியால் தான். செம்படையானது பிரான்ஸ் மற்றும் அமெரிக்க விநியோகங்களை பறிமுதல் செய்து அந்நிய துரித செயல்பாட்டு படைகளை கடலுக்குள் துரத்தியது. இது ஏற்கனவே மறக்கப்பட்டு விட்டதா?" ("ஸ்பெயின், இறுதி எச்சரிக்கை")

இது ஏற்கனவே மறக்கப்பட்டு விட்டதா?

அனைத்துலகக் குழுவின் நிலைப்பாட்டை ஆதரிக்க முயலுவதன் மூலம், தோழர் மெலடி ஃபாரோக்கை விடவும் கூடுதலாக பலவீனமான ஒரு நிலைப்பாட்டிற்குள் உங்களை நீங்கள் தள்ளியிருக்கிறீர்கள். வேர்க்கர்ஸ் பிரஸ் மற்றும் சுற்றறிக்கையின் சரணாகதிக்கான தத்துவார்த்த மூடியை கண்டறியும் முயற்சியில், ஒரு முழுமையான திருத்தல்வாத நிலைப்பாட்டை நீங்கள் வளர்த்து கூறினீர்கள்: "சொந்தநாட்டு முதலாளித்துவம் முழுக்கவும் எதிர்புரட்சி முகாமிற்கு சென்றுவிட்டார்கள் என்ற முடிவெடுப்பது எந்திரத்தனமான தீர்மானமாகும்".

உங்களது பகுப்பாய்வு வழிமுறையை சற்று காண்போம். நீங்கள் கூறுவது: "ஒரு தேசிய பூர்சுவா தலைமையின் கீழ் ஏகாதிபத்தியத்தின் பிடிக்கு எதிராக இத்தகையதொரு பெரும் அளவிலான மக்கள் போராட்டம் இதுவரை இருந்ததில்லை. தேசியவாத முதலாளித்துவம் காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளுக்குள்ளாக இத்தகையதொரு போராட்ட நிலைப்பாடுகளுக்கு இன்னமும் தள்ளப்பட முடியும். அவர்களின் சொந்த வர்க்க நலன்களுக்காகவே என்பதில் சந்தேகமில்லை. தேசிய பூர்சுவாக்கள் முழுக்கவும் எதிர்புரட்சி முகாமிற்கு சென்றுவிட்டார்கள் என்ற முடிவெடுப்பது எந்திரத்தனமான தீர்மானமாகும்".

இந்த வகை சிந்தனையானது இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன் தொடர்பற்ற ஒன்றாகும். "போராட்டத்தின் பிரம்மாண்டம்" என்னும் உட்பொருளற்ற எடுத்துகாட்டல் மூலமாக, நீங்கள் போராட்டத்தின் தலைமையை அதன் உண்மையான உள்ளடக்கத்துடன் அடையாளம் கண்டிருக்கிறீர்கள். உங்களது பதிவுவாத (Impressionist) சிந்தனை வழிமுறையின் படி, கிழக்கு வங்காள போராட்டமானது, அதன் இருப்பு காரணமாக தலைமை உட்பட, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. ஆனால் போராட்டத்தின் உள்ளடக்கம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது என்பதால் எந்த மார்க்சிஸ்டும் அதன் தலைமையை புரட்சிகரமானது அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பானது என்று தழுவிக் கொள்ள மாட்டான். இது தலைமையின் குணாதிசயத்திற்கும் போராட்டத்தின் உள்ளடக்கத்திற்கும் உள்ள முரண்பாட்டினை புறக்கணிப்பதற்கு ஒப்பானதாகி, அவாமி லீக்கினுள் புரட்சிகர கட்சியை கரைத்துவிடுவதற்கான முதல் படியாகவும் ஆகி விடும்.

இத்தகையதொரு கூற்றினை செய்ததன் மூலம், வரலாற்றில் அவாமி லீக் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது என்று நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். குறைத்துச் சொன்னால் கூட, இது அர்த்தமற்றதாகும். அவாமி லீக் தலைமை பாக்கிஸ்தானின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது என்று சித்தரிப்பார்களா? அப்படியென்றால் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளை நோக்கிய அதன் விருப்பத்தை நாம் எவ்வாறு விளக்கப் போக்கிறோம்? இது குறித்த உண்மையானது அவ்வளவு சிக்கலானதில்லை. தனது சொந்த வர்க்க நலன்களுக்காக கானுக்கு எதிராக போர் நடத்திய போதிலும், அதே வர்க்க முடிவுகளுக்காக தொடர்ந்து ஏகாதிபத்திய சக்திகளுடன் அவாமி லீக் சமரசம் செய்து கொள்ள நேர்ந்தது. இந்த காரணத்தால் தான் வெகுஜனப் போராட்டம் இந்த தலைமைக்கு எதிராகச் சென்று, நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடித்தளமாக கொண்ட ஒரு புதிய தலைமையைக் கோரும்.

லெனினுக்குப் பின் மூன்றாவது அகிலத்தில் சீனப் புரட்சி மீதான அத்தியாயத்தை தயவுசெய்து படிக்கவும், இந்த அல்லது அந்த மேற்கோளினைத் தேடி அல்ல மாறாக ட்ரொட்ஸ்கியின் வழிமுறையில் விஷயங்களைப் பிடித்துக் கொள்வதற்கு. சியாங் கேய்-ஷேக் பற்றிய ட்ரொட்ஸ்கியின் குணச்சித்திரப் படைப்பை நீங்கள் படிக்கும்போது உங்களது சூத்திரம் பழைய ஸ்ராலினிச நிலைப்பாட்டின் கார்பன் நகல் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். சியாங் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தியதாக கூறுவோருக்கு எதிராக ட்ரொட்ஸ்கி பதிலளிக்கிறார்:

"ஆனால் சியாங் கேய்-ஷேக் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் நடத்தியதாக கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்று குழு கூறுகிறது. சூழ்நிலையை இவ்வாறு வழங்க முனைவது உண்மை நிலைமையை மோசமாக்கி காட்டுவதற்கு ஒப்பானதாகும். சியாங் ஏகாதிபத்திய சக்திகளின் முகவர்களின் ஒருவராக குறிப்பிட்ட சீன இராணுவவாதிகளுக்கு எதிராக போரிட்டார். இதனை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் நடத்துவதற்கு சமம் என்று கருத முடியாது....

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோமின்டாங்கின் அணுகுமுறையானது ஆரம்பம் தொட்டே புரட்சிகரமாக இருக்கவில்லை மாறாக முழுக்கவும் சந்தர்ப்பவாதமானதாகவே இருக்கிறது. சில குறிப்பிட்ட ஏகாதிபத்திய சக்திகளின் முகவர்களை சிதைத்து தனிமைப்படுத்தி, அதன் மூலம் சீன பூர்சுவாக்களுக்கு கூடுதலான ஆதாயம் அளிக்கத்தக்க வகையில், அதே அல்லது பிற ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு சாதகமான கூட்டினை ஏற்படுத்திக்கொள்ளவே இது முயன்றது. அவ்வளவு தான்". (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

ஏகாதிபத்தியத்தை நோக்கிய தேசிய பூர்சுவாவின் மனோநிலை முழுக்கவும் சந்தர்ப்பவசமானது என்று நாம் புரிந்து கொண்டால், அதன்பின் இடது நோக்கிய ஊசலாட்டத்தை புரட்சிகரமானது என்றோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பானது என்றோ நாம் குழப்பிக் கொள்ள மாட்டோம்.

ட்ரொட்ஸ்கி அதே அத்தியாயத்திலேயே, தேசிய பூர்சுவாக்களுக்கு ஒருபோதும் தனது ஏகாதிபத்திய முதலாளிகளுடன் தற்காலிகமான முரண்பாடுகள் வராது என்கிற எந்திரத்தனமான கருத்தாக்கத்திற்கு எதிராகவும், "எதிர்புரட்சி முகாமிற்கு நிட்சயமாக சென்றுவிடும்" என்று சூத்திரத்திற்குள் பொதிக்கப்பட்டுள்ள இந்த தவறான கருத்தாக்கத்திற்கு எதிராகவும் எழுதினார். இதற்கு அவர்களின் மொழியில் பதிலளிக்கையில் ட்ரொட்ஸ்கி கூறினார் "நேற்று சீன பூர்சுவா ஐக்கிய புரட்சிகர முன்னணியில் இணைந்துகொண்டது என்றால், இன்று அது "நிச்சயமாக எதிர்புரட்சி முகாமிற்கு சென்றுவிடும்' என பிரகடனப்படுத்தப்படுத்துவது, JB தெளிவான நிர்வாக வகையில் பாதித்துள்ள இந்த மாற்றங்களும் இணைப்புக்களும் எவ்வளவு அடித்தளமற்றது என்பதை வெளிப்படுத்துவது சிரமமாக இருக்காது". நீங்கள் பொய்யர்கள் எடுத்துக்காட்ட முயல்வதுபோல் ட்ரொட்ஸ்கி ஒரு போதும் தேசிய முதலாளித்துவமானது தற்காலிகமாகக்கூட ஒரு புரட்சிகர பாத்திரத்தை வகிக்கலாம் என்ற கருத்தை கொண்டிருக்கவில்லை.

வங்காள அவாமி லீக்கின் தலைமையின் போராட்டத்தை அடையாளம் காணுகையில் அதை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு, எதிர்ப்புரட்சியற்ற ஒன்று என்ற முடிவிற்கு வருகின்றீர்கள். இந்த குணாதிசயப்படுத்தலை உறுதிப்படுத்த கானை ஏகாதிபத்தியத்திடன் அடையாளம் காணுகின்றீர்கள். உங்களுக்கு பாக்கிஸ்தான் இந்தியாவாகின்றது. இந்த வகைப்படுத்தலை உருவாக்கையில் முக்தி பானியால் ஏகாதிபத்தியத்திற்கும் கானுக்கும் வழங்கப்பட்ட ஆதரவை முற்றுமுழுதாக மிகைமதிப்பீடு செய்கின்றீர்கள். இவ்வாறு எதிர்க்கமுடியாத உறுதிப்படுத்தப்பட்ட வகைப்படுத்தலுக்கு ஆதரவை பார்க்கையில், ஏகாதிபத்தியம் பங்களாதேஷும் இந்தியாவும் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாட்டினை நிராகரிக்கின்றீர்கள். 'இந்தியாவிற்கு எதிரான ஏகாதிபத்தியத்திய' நிலைப்பாடு பற்றிய உங்களது விவாதங்கள் எல்லாம் அரசியலில் மட்டரகமான பதிவுவாதம் (Vulgar impressionism) வகிக்கும் ஆபத்தான பாத்திரம் பற்றி எம்மை நம்பவைக்கின்றது.

கானுக்கு எதிரான அவாமி லீக் போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பாக தீர்ப்பு வெளியிட்ட பின்னர், இந்திய துணைக்கண்டத்தில் மோதிக் கொண்ட அனைத்து பிற சக்திகளையும் இந்த கருத்துப் பதிவின் பரிமாணப் பார்வையிலேயே நீங்கள் மதிப்பிடுகிறீர்கள். இந்திய அரசு பாக்கிஸ்தான் எதிர்ப்பு என்கிற இதற்குள் எளிதாகப் பொருத்தப்படமுடியும் என்பதால் அதனையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது எதிர்புரட்சி அற்றது என்று கூற முடியும். இது தனது அனைத்து அழகுகளுடன் கூடிய கற்பனாவாதமே அன்றி இயங்கியல் பொருள்முதல்வாதமே அல்ல. இந்த வகையான உயிரற்ற உட்பொருளற்ற தன்மைக்கும் மார்க்சிஸ்டுகளாக நாம் புரிந்து கொள்ளும் உட்பொருளற்ற தன்மைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஏங்கெல்ஸ் ஒருமுறை விளக்கிக் கூறினார்:

பொருள்களிலும் உறவுகளிலும் உள்ள பொதுவான உள்ளடக்கத்தினை மார்க்ஸ் அதன் மிகவும் உலகளாவிய கருத்தாக்க வெளிப்பாடாக சுருக்கினார்: அவரது உட்பொருளற்ற தன்மை பொருள்களில் ஏற்கனவே பொதிந்துள்ள உள்ளடக்கத்தின் கருத்திலிருந்து தொடர்ந்து மறு உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கு மாறாக, ரொட்பேர்டஸ் தனக்கே ஒரு ஏறக்குறைய ஒரு முழுநிறைவற்ற மனோ வெளிப்பாட்டை உருவாக்கிக் கொண்டு, எல்லா பொருள்களையும் அவற்றுடன் சமப்படுத்திப் பார்க்க கூடிய ஒரே கருத்தினை கொண்டு அளவிடுகிறார்". (ட்ரொட்ஸ்கியால் மேற்கோள் காட்டப்பட்டது: ஏங்கெல்ஸ் மற்றும் காவுட்ஸ்கி குறித்து, .12)

இந்திரா காந்தியின் பின்னால் வால் பிடிப்பதற்கு நீங்கள் கானை ஏகாதிபத்தியம் 100% ஆதரித்தது என்கிற "உண்மையை" பிரித்தெடுத்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில், பூர்சுவாக்கள் எமது அரசியலை தீர்மானிப்பதில்லை என்னும் லெனினின் பிரபலமான வார்த்தை பிரயோகத்தை உங்களுக்கு நாங்கள் ஞாபகமூட்ட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் பாடிஸ்டாவுக்கு தனது இராணுவ மற்றும் பொருளாதார உதவியை நிறுத்திய காலகட்டத்தில் அந்த சூழலை பயன்படுத்தி காஸ்ட்ரோ அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அல்லது, சிஐஏ பாரூக்கிற்கு எதிராக நாஸரை ஆதரித்த போது, ஏகாதிபத்தியமும் சிஐஏவும் பாடிஸ்டாவுக்கும் பாரூக்குக்கும் எதிராக இருந்தது என்பதால் "அதன் மறு பக்கம்" குறித்து கவனத்தை செலுத்த நாங்கள் முடிவு செய்யவில்லை.

ஏகாதிபத்தியம் மிகத் தெளிவான வர்க்க காரணங்களுக்காக இந்திரா காந்திக்கு நெருக்கடி அளிக்க முயன்று, கானை ஆதரித்தது என்கிற உண்மையை யாரும் மறுக்கவில்லை. இந்திய துணைக்கண்டத்தில் சுதந்திரமான பங்களாதேஷ் அமைவது என்பது ஏகாதிபத்தியத்தில் தங்கியுள்ள ஒட்டுண்ணி இந்து மற்றும் முஸ்லீம் ஆட்சியை இல்லாதொழித்துவிடும் என்று ஏகாதிபத்தியம் அஞ்சியதால், போராட்டத்தை அடக்க கானுக்கு அது உதவியது, அதேநேரத்தில் இந்திராவின் 'சாகசத்தையும் அது ஜெயிக்காது என்று நம்பியதால் எதிர்த்தது. கானுக்கு எதிரான இந்திராவின் போரினை சுதந்திரப் போர் என்று வர்ணிப்பது தவறானதாகும் ஏனென்றால் பங்களாதேஷுடனான இந்தியாவின் மூலோபாயம் ஏகாதிபத்தியத்திற்கு துணைக்கண்டத்திற்குள்ளான இருந்த ஒரே ஒரு மாற்றாக இருந்தது.

இப்போது கானின் தோல்விக்கு பின்னர், ஏகாதிபத்தியம் முழுமனதோடு இந்தியாவின் திட்டத்தை தழுவிக் கொண்டது, பங்களாதேஷை மிக நன்றாக அங்கீகரித்தது.

இந்தியாவிற்கு எதிரான ஏகாதிபத்திய நிலைப்பாட்டு வரிசை குறித்து எழுதி விட்டு, மற்றுமொரு ஒப்புமைக்காக ஸ்பெயினுக்கு நீங்கள் தாவும்போது, இந்த ஒப்புமை உங்களது வழிமுறையின் திவால்நிலையையே காட்டுவதாக அமைகிறது, ஏனென்றால் ஸ்பெயினில் உள்நாட்டு போர் சமயத்தில்  இருந்த சூழலுக்கும் இந்தியாவின் தற்போதைய நிலைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

ஆம், பாசிசத்திற்கு எதிராக நெக்ரின் போரில் ஈடுபட்டபோது, ட்ரொட்ஸ்கி தனது அணுகுமுறையை இவ்வாறு வெளிப்படுத்தினார்:

இந்த அரசாங்கம் நொருக்கப்பட வேண்டும். அதனை மாற்றீடு செய்யும் அளவுக்கு நாம் பலம் இல்லாத வரை, நாம் அதன் கட்டளையின் கீழ் தான் போரிடுகிறோம். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதில் நம்பிக்கை இல்லாததை நாம் திறந்து வெளிப்படுத்தியே வருகிறோம்; இது மட்டும்தான் அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டுவதும் அதனை தூக்கியெறிவதற்கான தயாரிப்புக்கும் ஒரே ஒரு சாத்தியக் கூறாகும்."

இப்போது, நடப்பு போரில் யார் நெக்ரின்? இந்திராவா, கானா அல்லது முஜிபுரா? பெரிய இடைவெளி விட்டுப் பார்த்தோமென்றால், முஜிபுர் மட்டுமே நெக்ரினுக்கு நெருக்கமாக வருவார், இந்திரா வாய்ப்பே இல்லை. முஜிபுருக்கு எந்த அரசியல் ஆதரவும் அளிக்காமல், அவருடன் பக்கம் பக்கமாக நின்று கானுக்கு எதிராக போரிடுகிறோம். அதே சமயத்தில் அவரது தலைமையின் மீதுள்ள நம்பிக்கையின்மையை நாம் பிரகடனப்படுத்துகிறோம். நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராட்ட தலைமையில் இருந்து அவரை தூக்கியெறிவதற்கு நாம் முயல்கிறோம். இந்திராவின் நிலையோ முற்றிலும் வேறானது. இது வேறுபட்ட காரணங்களுக்காக போர்க்களத்திற்குள் நுழைந்த மூன்றாவது சக்தியாகும். இந்த தலையீடு இந்தியாவுக்குள்ளான பாசிச எழுச்சிக்கு எதிராகவோ அல்லது ஏகாதிபத்திய கொடுங்கோன்மைக்கு எதிராகவோ இயக்கப்பட்டது அல்ல.

இந்த வகை நியாயப்படுத்தல் மூலம் மார்க்சிச போராளிகளை நம்மால் பயிற்றுவிக்க முடியாது.

இறுதியாக, வரலாற்று ஆவணத்தின் மீதான உங்களின் கருத்துகளுக்கு வருவோம். இந்த ஆவணம் ஒரு முன்னோக்கு ஆவணத்திற்கான பதிலீடு அல்ல, மாறாக அதற்கான ஒரு முன் நிபந்தனையே ஆகும். நாங்கள் ஒரு முன்னோக்குகள் ஆவணத்தினை நிறைவேற்றியுள்ளோம், அதனை மொழிபெயர்த்து முடிந்தவுடன் உங்களுக்கு அனுப்புகிறோம். ஆனால் ஒரு முன்னோக்குகள் ஆவணத்தை வரைவு செய்வதற்கு, முதலில் நாம் தொழிலாள வர்க்கம் மற்றும் மார்க்சிச இயக்கத்தின் கடந்த கால போராட்டங்களில் நமது உறவினை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உறவினை வரையறை செய்யாமல் அல்லது புரிந்து கொள்ளாமல், வரவிருக்கும் வர்க்க போர்களில் நாம் ஆற்றவிருக்கும் பங்கு குறித்து நம்மால் முற்றிலுமாய் புரிந்து கொள்ள முடியாது. இது தான் வரலாற்றின் முக்கியத்துவம். ஏன் இத்தகைய நீளமானதொரு வரலாற்று ஆவணத்தை எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது விந்தையாக இருக்கிறது.

ஒரு புரட்சிகரப் போராளி ஒரு முன்னோக்குகள் ஆவணத்தின் அடிப்படையில் மட்டும் ஒன்றுபடுத்தப்பட்டு விட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு புரட்சிகரப் போராளி, கடந்த காலத்தில் வர்க்கப் போராட்டத்தில் தனது சொந்த உறவினைப் புரிந்து கொள்வதிலும், அதனை நடப்பு போராட்டங்களில் தலையிட்டு வர்க்கத்தின் உணர்மையை மாற்ற வகை செய்யும் ஒரு முன்னோக்கினாலும் தான் ஒன்றுபடுத்தப்படுகிறார்.

பொதுவாக அனைத்துலக் குழுவின் சர்வதேச முன்னோக்குகள் லோராவால் ஏற்றுக்கொண்டமை அவர் பொலிவியாவில் பிற்போக்குவாத சக்திகளிடம் சரணடைவதை தடை செய்யவில்லை. ஏனென்றால் அவரது பங்களிப்பு எவ்வாறு வடிவமெடுத்திருக்கிறது மற்றும் எவ்வாறு வடிவமெடுக்க இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அவர் முயலவில்லை, ஒரு புரட்சிகர சூழலில் ஒரு நேரடியான எதிர்புரட்சி பங்கினை ஆற்றக்கூடியதான தனது சொந்த குறைகள் மற்றும் தவறுகள் குறித்து உணர்ந்துகொள்ள முடியாதவராகிவிட்டார். இதனால் தான் அனைத்துலக் குழுவிற்குள் சேர்க்கப்படுவதற்கு ஒரு முன்னுரையாக தனது சொந்த வரலாற்றின் மீதான ஒரு ஆழமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று லோராவிடம் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) கோரியது.

1966-67 காலகட்டத்தின் போதான அனைத்துலக் குழுவின் முன்னோக்குகள் மீதான நமது ஏற்பு இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் நமது கடந்த காலகட்டத்தின் போதான நமது உண்மையான நடைமுறை இந்த முன்னோக்கினை நாம் புரிந்து கொள்ளவும் மற்றும் அந்த புரிதலுடன் நமது சொந்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வழி செய்யும். இவ்வாறு தவறுகளை திருத்திக் கொள்வது என்பது ஒரு கல்வி வழிமுறை அல்ல மாறாக வர்க்க போராட்டத்தில் உண்மையாக பங்கேற்பதை உள்ளடக்கியதாகும்.

மறு பக்கத்தில், நமது கடைசி மாநாட்டில் நாம் கைக்கொண்ட வரலாற்று ஆவணம் தீவிர குறைபாடுகள் கொண்டிருந்தது, இவை திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை குறித்த நமது புரிதலின் உண்மையான மதிப்பீட்டினை வெளிப்படுத்தியது. இந்த திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமையானது புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தினுள் மார்க்சிச தத்துவத்திற்கான போராட்டத்திற்கு குழி தோண்டுவதாக இருந்தது. தேர்தல் சமயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் (SLFP) சரணடைந்ததும் மற்றும் மஹாவலி ஒப்பந்த காலகட்டத்தின் போது குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு நாம் அடிபணிந்துபோனதும் இந்த மார்க்சிசத்தை கைவிட்டதன் நேரடி விளைவே.

இந்த அனைத்து குறைகள் மற்றும் தவறுகளும் அவற்றின் வேர் வரை சென்று ஆராயப்பட வேண்டும் மற்றும் அவற்றின் படிப்பினைகள் பகுத்தாயப்பட வேண்டும். நடப்பு ஆவணம் விவாதிக்கும் பிரச்சினைகள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினுள் கடந்த காலத்தில் விவாதிக்கப்படவில்லை. முக்கியமான பங்கேற்பாளர்களில் ஒருவராக, நீங்கள் இதனை ஊக்குவிக்கும் ஒரு நல்ல நிலையில்  உள்ளீர்கள்.

முன்னோக்கு ஆவணம் மற்றும் வரலாற்று ஆவணத்தின் இரண்டாவது பாகத்தை இயன்ற அளவு விரைவில் அனுப்புகிறேன்.

தாமதமின்றி எனக்கு எழுதவும்.

சகோதரத்துவத்துடன்,
கீர்த்தி

பின் குறிப்பு: தோழர் மைக்கிடம் நீங்கள் காட்ட இயலும் வகையில் இந்த கடிதத்தை நான் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.

கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்