பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களில் முதல் சுற்று மிக குறைந்த வாக்களிப்பை வெளிப்படுத்துகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சில் பிராந்தியத் தேர்தலின் முதல் சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அவை இதுவரை காலமும் இல்லாதவகையில் வாக்களிப்பு வீதத்தால் குறைந்து இருந்தது, அதே நேரத்தில் மரின் லு பென்னின் (Marine LePen) தீவிர வலதுசாரி தேசிய பேரணி (Rassemblement National-RN) புரோவன்ஸ்-ஆல்ப்ஸ்-கோட் அஸூர் (PACA) பிராந்தியத்தில் அதிக வாக்குகளைப் பெற்றது.

தொடக்கத்திலிருந்து வைரஸ் பரவலுக்கான மக்ரோனின் நடவடிக்கைகளின் வெளிப்பாடானது, நாட்டில் 110,000 க்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த இத் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தத் தேர்தல்கள் நடந்தன. அரசியல் ஸ்தாபகத்தைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்கூட்டிய இத்தேர்தல்கள் ஒரு பொது கருத்துக் கணிப்பாக பார்க்கப்படுகிறது.

தீவிர வலதுசாரி தலைவர் மரின் லு பென், ஜூன் 17, 2021 இல் தெற்கு பிரான்சின் துலோனில் (Toulon)ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். (AP புகைப்படம் / டானியல் கோல்)

ஆரம்ப கட்ட மதிப்பீடுகளின்படி, நாடு தழுவிய வாக்குப்பதிவானது வெறும் 32.8 சதவீதமாக இருந்தது, வாக்களிக்காதோரின் எண்ணிக்கை 67.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஐந்தாம் குடியரசின் கீழ் இரண்டு சுற்று தேர்தல்களில் உயர்ந்த மட்டமாகும். 2015 இல், பிராந்திய தேர்தல்களில் வாக்களிப்பு 49.9 சதவீதமாக இருந்தது; 2010 ல் இது 53 சதவீதமாக இருந்தது. இதற்கு மாறாக, 1986 பிராந்திய தேர்தல்களில் வாக்களிப்பு 22.7 சதவீதம் மட்டுமே.

இந்த வாக்களிப்பு, ஸ்தாபக அரசியல் கட்சிகளுடனான பரவலான ஏமாற்றத்தையும், விரோதத்தையும், அத்தோடு ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI) போன்ற கட்சிகளின் மறைமுக ஆதரவைப் பெற்றுள்ள, மக்ரோனின் தொற்றுநோயை கையாளுவதில் உள்ள அவநம்பிக்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிராந்திய தேர்தல்கள் பிரான்சின் 12 பெருநகரங்களில் ஆறு ஆண்டுகளுக்கு 1,767 பிராந்திய கவுன்சிலர்களை நியமிக்கின்றன. முதல் சுற்றில், வாக்களித்த வாக்குகளில் முழுமையான பெரும்பான்மையைப் பெற்றால், அதற்குரிய இடங்களின் கால் பகுதியைப் பெறுகிறது. மீதமுள்ள இடங்கள் குறைந்தது 5 சதவீத வாக்குகளைப் பெற்ற அனைத்து விகிதாசார பிரதிநிதித்துவத்தால் வழங்கப்படுகின்றன.

குடியரசுக் கட்சியினர் (LR) Hauts-de-France (43.1 சதவீதம்), Grand Est (31.5 சதவீதம்), Normandy (35.1 சதவீதம்), Pays de la Loire (34.1 சதவீதம்) மற்றும் Auvergne-Rhône-Alpes (43.8 சதவீதம்), மற்றும் Ile-de-France (34.2 சதவீதம்) என இப்பிராந்தியங்களில் வென்றது. சோசலிஸ்ட் கட்சியானது Centre-Val de Loire (25.6 சதவீதம்), Nouvelle-Aquitaine (28.6 சதவீதம்), Occitanie (39.6 சதவீதம்), Bourgogne-Franche-Comté (26.2 சதவீதம்) மற்றும் Bretagne (20.8 சதவீதம்) என ஐந்து பிராந்தியங்களில் முதலிடத்தை பிடித்தது.

லு பென்னின் தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) PACA பிராந்தியத்தில் 34.8 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது.

கோர்சிகா பிராந்தியத்தில், கோர்சிகாவுக்கான தன்னாட்சி அமைப்பின் (Inseme) உறுப்பினர் 28 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

Carte des régions françaises (Source: Wikimedia)

எந்தவொரு கட்சியும் வாக்களித்த வாக்குகளில் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து பிராந்தியங்களிலும் இரண்டாவது சுற்று தேர்தல்கள் அவசியமாகின்றது. குறைந்தபட்சம் 10 சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சிகள் இரண்டாவது சுற்றில் போட்டியிடலாம், மேலும் குறைந்தது 5 சதவீத வாக்குகளைப் பெற்ற பட்டியல்களுடன் இணைக்கப்படலாம்.

ஒரு தேசிய மட்டத்தில், Ipsos/Sopra Steria மதிப்பீட்டின்படி, அரசியல் கட்சிகளின் முதல் சுற்றின் முடிவுகள்: குடியரசுக் கட்சியினர் (LR) மற்றும் அதன் கூட்டுக்கள், 27.2 சதவீதம்; தீவிர வலதுசாரி பேரணி (RN), 19.3 சதவீதம்; சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டுக்கள் 17.6 சதவீதம்; ஐரோப்பா சூழலியல்-பசுமைவாதிகள் மற்றும் அதன் கூட்டுக்கள், 12.5 சதவீதம்; மக்ரோனின் LREM மற்றும் அதன் கூட்டுக்கள், 11.2 சதவீதம், மெலோன்சோனின் LFI மற்றும் அதன் கூட்டாளிகள் 4.2 சதவீதம்.

பல வர்ணனையாளர்கள் தேர்தல் வெளிப்படுத்தும் வர்க்க அரசியலை பரவலாக மதிப்பிடுவதை எடுத்துரைத்துள்ளனர். லு மொன்ட் (Le Monde), அதன் வார இறுதி பதிப்பில், “வாக்காளர்களின் இந்த விலகல் ஒரு நோய்வாய்ப்பட்ட ஜனநாயகத்தின் அடையாளம், ஒரு அரசியல் ஏமாற்றத்தின் அறிகுறியாகும், அங்கு ‘வாக்களிப்பது பயனற்றது’ என்ற உணர்வு பரந்துபட்ட மக்களிடையே வேரூன்றி வருகிறது.”

இந்த வெள்ளியன்று (LCI) யில் IFOP கருத்துக் குழுவின் இயக்குனர் ஃப்ரெடெரிக் டாபி (Frederic Dabi) இந்த வாக்களிப்பு வீதம் “இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கிய படிப்பினை” மற்றும் “பூகம்ப விளைவுகளை ஏற்படுத்தும், ஏனெனில் தேர்தல் சமநிலை முதன்மையாக பங்கேற்பின் விளைவாகும்” என்று கூறினார். மற்றும் வாக்களிக்கும் முகாம்களுக்கும் வாக்களிக்காத முகாம்களுக்கும் இடையில் அணிதிரட்டலின் வேறுபாடு. ஆனால் நாம் அத்தகைய நிலையை எட்டும்போது, யாருக்காக மணி ஒலிக்கிறது? இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மக்கள் தொகையின் அனைத்து பிரிவுகளுக்கும் ஒலிக்கிறது.”

Hauts-de-France, Auvergne Rhône Alpes மற்றும் Occitanie. பிராந்தியங்களில் மக்ரோனின் எல்.ஆர்.எம் (LRM) பாரிய தோல்வியை தழுவியது.

முதல் சுற்று லு பென்னின் ஆர்.என்-க்கு ஏமாற்றமாக இருந்தது. முன்னதாக, வாக்கெடுப்புகள் மற்றும் செய்தி ஊடகங்கள் இது ஆறு அல்லது ஏழு பிராந்தியங்களில் முதலிடம் பெறும் என்றும், இரண்டாவது சுற்றில் Grand Est, Centre Val de Loire மற்றும் PACA ஆகிய பிராந்தியங்களில் வெல்லும் என்றும் கணித்துள்ளன. உண்மையில், 2015 பிராந்திய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது RN வாக்குகள் குறைந்துவிட்டன, அதில் முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளில் கிட்டத்தட்ட 28 சதவீத வாக்குகள் அல்லது 6.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன. 2015 ஆம் ஆண்டில், RN இரண்டாவது சுற்றில் எந்த பிராந்தியங்களையும் வெல்லவில்லை, ஆனால் 358 பிராந்திய கவுன்சிலர்களை வென்றுள்ளது, இது முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

எவ்வாறாயினும், முதல் சுற்றில் அதன் வாக்குகள் வீழ்ச்சியடைந்த போதிலும், RN பிரான்சில் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவாகின்றது, பெரும்பாலும் அதனது கொள்கைகளை மக்ரோன் நியாயப்படுத்தியதற்கும், அவருக்கு முன் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கும் நன்றி கூறவேண்டும்.

2017 ஜனாதிபதித் தேர்தலில் வெறும் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற LFI மற்றும் மெலோன்சோனுக்கு, இப்போது 4.2 சதவீத வாக்குகள் கிடைத்தது பாரிய தோல்வியாகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான மிகப் பெரிய சுகாதார பேரழிவின் மத்தியில், நிதிய பிரபுத்துவத்தின் நலன்களுக்காக அரசாங்கத்தால் பேரழிவு தரும் மற்றும் அரசியல் ரீதியாக கொலைகார நிர்வாகத்திற்கு எதிராக LFI உண்மையான மாற்றீட்டை முன்வைக்கவில்லை.

இரண்டாவது சுற்றில், RN கட்சியை ஐ தடுக்கும் பொருட்டு LFIமற்ற முதலாளித்துவ கட்சிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. எந்தவொரு பிராந்தியத்தையும் RN க்கு அனுமதிக்கக்கூடாது என்று மெலோன்சோன் அழைப்பு விடுத்தார்: 'எங்கள் ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டங்களுக்கு இன்னும் ஒரு அடி சேர்க்கக்கூடாது என்று நாங்கள் அழைக்கிறோம். தேசிய பேரணிக்கு எந்த பிராந்தியமும் வழங்கப்படக்கூடாது என்பதை அனைவரையும் நம்ப வைக்க நாங்கள் தேவையானதை செய்வோம்.

சமீபத்திய ஆண்டுகளில் தீவிர வலதுசாரிகளின் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் மக்ரோனும் முழு அரசியல் ஸ்தாபகமும் RN இன் வருகைக்கு பெருமளவில் பங்களித்தன. தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிலாளர்கள் மீது அவர் தாக்குதல்களை நடத்தியபோது, மக்ரோன் தீவிர வலதுசாரிகளை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.

2017 தேர்தல் வெற்றி பெற்ற பின்னர், மக்ரோன் மரின் லு பென் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு 'குடியரசுக் கட்சி வணக்கம்' செய்தார். அவரது கலாச்சார அமைச்சகத்திற்குள் உள்ளவர்கள் சார்ல்ஸ் மோராஸின் (Charles Maurras) படைப்புகளை வெளியிட முயற்சித்தன. இவர், 20 ஆம் நூற்றாண்டின் Action françaiseஇன் யூத-விரோத தலைவரும், ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் தூணும், விடுதலைக்கு பின்னர் துரோகி என கண்டனம் செய்யப்பட்டவருமாவர். மேலும் 2018 ஆம் ஆண்டில், மக்ரோன் 'மஞ்சள் சீருடை போராட்டத்திற்கு' எதிராக கலகப் பிரிவு போலீஸை அனுப்பியதுடன், ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை (Philippe Pétain) 'ஒரு சிறந்த சிப்பாய்' என்றும் பாராட்டினார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மக்ரோன் அரசாங்கம் வங்கிகளுக்கும் பெருவணிகத்திற்கும் பில்லியன் கணக்கான யூரோக்களை வழங்கியுள்ளது, அதே நேரத்தில் பிரான்சில் 110,000 க்கும் அதிகமான உயிர்களையும் ஐரோப்பாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களையும் இழந்த 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை பின்பற்றுகிறது. இந்த காலகட்டத்தில், பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை பெருமளவில் அதிகரித்துள்ளனர், அதே நேரத்தில் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரம் நெருக்கடிக்குள்ளானது.

தொற்றுநோயை தொடர்ந்து, ஜனநாயக உரிமைகளை நிரந்தரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியில் RN இன் நிகழ்ச்சி நிரலின் பெரும்பகுதியை மக்ரோன் நடைமுறைப்படுத்தினார். இதில் முக்கியமாக முஸ்லீம் பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டம் அடங்கும், இது மதசார்பின்மை மற்றும் தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பது தொடர்பான 1905 சட்டத்தை தகர்த்து, கலாச்சார மற்றும் அரசியல் அமைப்புகளின் தன்னிச்சையான கலைப்புக்கு வழியைத் திறக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிராக, பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்தும் 'பொதுப் பாதுகாப்பு' சட்டத்தையும் அவர் நிறைவேற்றியுள்ளார்.

தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு பிரெஞ்சு அரசியல் அமைப்பு பதிலளிக்கவில்லை என்பதையும், நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களின் பேரிலேயே அது செயற்படுவதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேர்தலின் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எந்த அடிப்படை பிரச்சினைகளையும் இவர்கள் தீர்க்கப்போவதில்லை. முதலாளித்துவத்திற்கும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கும் எதிராக பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே இதற்கான தீர்க்கமான வழியாகும்.

Loading