"நாங்கள் நிறுவனம் மற்றும் UAW இரண்டையும் எதிர்த்துப் போராடுகிறோம்"

வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் வேர்ஜீனியாவில் மூன்றாவது வார வேலைநிறுத்தத்தைத் தொடங்குகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி தொழிற்சாலையில் 2,900 வொல்வோ டிரக் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தின் மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தை இன்று குறிக்கிறது. சுவீடிஷ் பன்னாட்டு நிறுவனத்தின் மிகப் பெரிய டிரக் தயாரிக்கும் நிலையத்தில் உள்ள தொழிலாளர்கள் ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கம் (UAW) முன்வைத்த இரண்டு ஒப்பந்தங்களை நிராகரித்துள்ளனர். மேலும் கணிசமான மேம்படுத்தல்களை வெல்வதற்கும், ஒரு தசாப்தத்திற்கும் மேலான UAW இன் விட்டுக்கொடுப்புக்களை முறியடிப்பதற்கும் உறுதியாக உள்ளனர்.

UAW மற்றும் நிறுவன அதிகாரிகளின் கூற்றுப்படி, வட கரோலினாவின் சார்லோட்டில் முறையான பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை மீண்டும் தொடங்க உள்ளன. கடந்த வார இறுதியில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எழுதிய கடிதங்களில், UAW கருவூல செயலாளரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான ரே காரி மற்றும் UAW உள்ளூர் 2069 தலைவர் மாட் ப்ளாண்டினோ ஆகியோர் UAW ஒரு "நியாயமான ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறினார். எவ்வாறாயினும், UAW கோரிக்கைகள் ஏதேனும் முன்வைக்க இருந்தால் அதுபற்றியும், அவர்களின் அடுத்த ஒப்பந்தம் தொழிலாளர்கள் 90-91 சதவிகிதம் வாக்களித்த முந்தைய இரண்டு ஒப்பந்தங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டதாக இருக்கும் என்று இருவரும் கூற மாட்டார்கள்.

வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்கள்(ஆதாரம்: UAW L. 2069)

UAW மற்றும் வொல்வோ இடையேயான "பேச்சுவார்த்தைகள்" இரண்டு விரோத கட்சிகளுக்கு இடையிலானதாக இருக்காது. மாறாக, அவை இரண்டு வணிக நிறுவனங்களுக்கிடையிலானதாகவே இருக்கும். அவை தொழிலாளர்களின் எதிர்ப்பை முறியடிப்பதற்கும், நிறுவனத்திற்கும் UAW ஐ நடத்தும் ஊழல் நிர்வாகிகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் ஒரு தொழிலாளர் ஒப்பந்தத்தை சுமத்துவதிலும் தீர்மானகரமானதாக இருக்கும்.

வேலைநிறுத்தத்தை வெல்வதற்கான ஒரு மூலோபாயத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக, வொல்வோ தொழிலாளர்களை வேண்டுமென்றே UAW தனிமைப்படுத்துகிறது. வேலைநிறுத்த சலுகையை வாரத்திற்கு 275 டாலர் என்ற பட்டினி மட்டத்திற்கு வைக்கிறது. மேலும் வேலைநிறுத்தத்தை ஏனைய UAW உறுப்பினர்களிடமிருந்து மறைக்க மற்றும் அவர்கள் வொல்வோ தொழிலாளர்களின் உதவிக்கு வருவதைத் தடுக்க ஒரு செய்தி இருட்டடிப்பு விதிக்கிறது.

எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தத்தில், தொழிலாளர்கள் ஏற்கனவே வொல்வோ சாமானிய தொழிலாளர் குழுவை (VWRFC) உருவாக்கியுள்ளனர். UAW இன் நாசவேலை மற்றும் பொய்களை எதிர்கொண்டு, வேலைநிறுத்தத்தின் தனிமைப்படுத்தலை உடைக்க அனைத்து வொல்வோ தொழிலாளர்களையும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளையும் அணிதிரட்ட போராடுகின்றனர்.

"நாங்கள் இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், நாங்கள் ஒரு நீண்ட வேலைநிறுத்தத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்" என்று VWRFC இன் உறுப்பினர் WSWS இடம் கூறினார். “இது வொல்வோவுடன் மட்டுமல்ல. நாங்கள் UAW உடன் போராடுகிறோம். இது கடினமான பகுதியாகும். நாங்கள் அவர்கள் இருவரையும் எதிர்த்துப் போராடுகிறோம். அவர்களின் அடுத்த தாக்குதல் என்னவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்கள் தாக்குவதற்கு முன்பு எங்கள் சொந்த பதிலைக் முன்வைக்க உள்ளோம்.

"UAW பேச்சுவார்த்தை நடத்திய கடைசி மூன்று ஒப்பந்தங்கள் மிகவும் மோசமானவை. பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீள்பதவியிலிருத்தப்பட்ட தொழிலாளர்கள் 2008 ஒப்பந்தத்தின் கீழ் ஒரு மணி நேரத்திற்கு 6-7 டாலர் ஊதியக் குறைப்பை பெற்றனர். இது இரு அடுக்கு ஊதிய முறையை அறிமுகப்படுத்தியது. சில தொழிலாளர்கள் இறுதியாக முக்கிய பிரிவை அடைய 15 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அவர்கள் மீண்டும் ஊதிய அளவை திருத்த முயற்சிக்கின்றனர். எங்களிடம் இனி இரண்டு அடுக்குகள் இருக்காது என்று UAW கூறியது. ஆனால் 2011 க்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 27 டாலர்களாகவும், முன்பு பணியமர்த்தப்பட்ட முக்கிய பிரிவினருக்கு 31 டாலர்களாகவும் இருக்கும்.”

"2011 க்குப் பின்னர் பணியில் இணைந்தவர்களுக்கு அதிக ஊதியம் பெறுவதற்கு ஆறு ஆண்டுகள் ஆகும். இது முக்கிய பிரிவு தொழிலாளர்களை விட 3-4 டாலர் குறைவாக இருக்கும்" என்று மற்றொரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவரும் வொல்வோ சாமானிய தொழிலாளர் குழு உறுப்பினரும் WSWS இடம் கூறினார். “ஊதிய அடுக்குகளில் இருந்து விடுபட்டு அனைவரையும் விரைவில் உயர் மட்டத்திற்கு வரவிட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகளை UAW கேட்கவில்லை. இப்போது நாங்கள் இங்கே இருக்கிறோம், இன்னும் அதிகமான விஷயங்களை இழக்கிறோம். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட இந்த ஊதியம் போதுமானதாக இல்லை, மேலும் தொழிலாளர்கள் உயர் சம்பளத்தை போதுமான அளவு அல்லது எப்போதும் அடைவதில்லை.”

வாரன் கனரக வாகன பொருத்தும் ஆலையில் ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர்கள் (WSWS Media)

முந்தைய இரண்டு ஒப்பந்தங்களை பெருமளவில் நிராகரித்த பின்னர் வொல்வோ தொழிலாளர்கள் கணிசமான வெற்றியினை வெல்வதை தடுப்பதே UAW இன் விருப்பமாகும். இது கனரக மற்றும் வாகனத் தொழில்துறை தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் பல தசாப்தங்களாக ஊதியம் மற்றும் நலன்களில் வெட்டுக்களை ஈடுசெய்ய ஒரு எதிர்ப்புத் தாக்குதலைத் தொடங்குவதற்கான கதவை திறந்துவிடும். இந்த வெட்டுக்கள் பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினரையும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அவர்களின் பணியாளர்களையும் வளப்படுத்தியுள்ளது.

ஜூன் 21 திங்கள் வரை வேலைநிறுத்த காசோலைகளை வழங்கத் தொடங்க மாட்டோம் என்று UAW அறிவித்ததில் தொழிலாளர்களிடம் எழுந்த சலசலப்புக்குப் பின்னர் [வேலைநிறுத்தத்திற்கு இரண்டு வாரங்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர்கள் எந்த நன்மையும் பெறாத நிலையில் முந்தைய இரண்டு வார வேலைநிறுத்தத்திற்குப் பிறகு], உள்ளூர் 2069 அதிகாரிகள் கடைசியாக வெள்ளிக்கிழமை, “இன்று பிற்பகல் காசோலைகள் எதிர்பாராத விதமாக வந்தன என தெரிவித்தனர். நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து வருகிறோம், இன்று 6/18 மாலை 6 முதல் 10 மணி வரை அவற்றை வழங்கத் தொடங்குவோம்.” என அறிவித்தனர்.

வார இறுதியில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகளை எதிர்கொண்டு, 790 மில்லியன் டாலர் UAW வேலைநிறுத்த மற்றும் பாதுகாப்பு நிதியிலிருந்து செலுத்தும் வேலைநிறுத்த ஊதியத்தை தொழிற்சங்கம் அதிகரிக்க வேண்டும் எனக் கோரினர். தொழிற்சங்க அதிகாரிகள் அவர் சாத்தியமற்றது என்றும் எந்தவொரு அதிகரிப்புக்கும் முதலில் UAW அரசியலமைப்பு மாநாட்டால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் மாநாடு ஜூன் 2022 வரை மீண்டும் சந்திக்காது என்றும் கூறினார்.

பாம் ஸ்பிரிங்ஸ், கலிபோர்னியா மற்றும் பிற உல்லாச தங்குமிடங்களில் கோல்ஃப் பயணங்கள் மற்றும் சொகுசு வில்லாக்களுக்கு நிதியளிப்பதற்காக தொழிற்சங்க சந்தா தொகையை பலமுறை பயன்படுத்திய ஒரு அமைப்பின் சுய தேவை முட்டாள்தனத்தை விட வேறு எதுவும் இல்லை. மேலும், உயர்மட்ட UAW தலைமை நிர்வாகிகளால் நிரம்பியுள்ள UAW அரசியலமைப்பு மாநாடுகள் வேலைநிறுத்த நிதியில் இருந்து "நிர்வாக" மற்றும் பிற சந்தேகத்திற்குரிய நோக்கங்களுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன்களை திசை திருப்ப பலமுறை வாக்களித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தம் ஏற்கனவே ஹாகர்ஸ்டவுன், மேரிலாந்து மற்றும் பென்சில்வேனியாவின் அலெண்டவுன் ஆகிய இடங்களில் உள்ள Mack-Volvo ஆலைகளில் உற்பத்தியை பாதித்துள்ளது. நியூ ரிவர் வேலி ஆலையில் பொருத்தப்படும் வாகனங்களில் இயந்திரங்கள் மற்றும் கடத்திகளை உற்பத்தி செய்யும் ஹாகர்ஸ்டவுன் ஆலையின் தொழிலாளர்கள், ஜூலை 5-23 தேதிகளில் தற்காலிக பணிநீக்க “முன்மொழிவு” குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக WSWS இடம் தெரிவித்தனர்.

3,500 Mack-Volvo தொழிலாளர்களின் 2019 வேலைநிறுத்தத்தை விற்ற காரி மற்றும் UAW, அனைத்து வொல்வோ தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. UAW இன் துரோகங்கள் குறித்து ஒரு ஹாகர்ஸ்டவுன் தொழிலாளி WSWS இடம், “சர்வதேச தலைமை அவர்களின் தனிப்பட்ட தவறான இலாபத்திற்காக தொழிற்சங்க ஊழியரின் உரிமைகளையும் திறன்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்று கூறினார்.

தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களின் அக்கறை இல்லாத ஒரு ஒப்பந்தத்துடன் நாங்கள் ஒருபோதும் திரும்பி வேலைக்கு செல்லக்கூடாது. தொழிலாளர்கள் அதிக விட்டுக்கொடுப்புக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நிறுவனம் ஆலையை மூடிவிட்டு அதன் உற்பத்தியை வெளியேற்றிவிடும் என்ற அச்சுறுத்தலுடன் UAW அதிகாரிகள் 2019 ஒப்பந்தத்தினை திணித்தனர். “நிகழ்ச்சி நிரலைப் பார்ப்பது கடினம் அல்ல; நிறுவனம் தற்காலிக தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க தர ஊதியத்தை மெதுவாக நீக்குகிறது. வொல்வோ இலாபகரமானதாக இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் பல ஆண்டுகளில் பல விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளோம். இது தொழிலாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளின் இடைவிடாத நீர்வீழ்ச்சியாக மாறியுள்ளது!”

வொல்வோ சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்குங்கள்

பெருநிறுவன சார்பு UAW இலிருந்து சாமானிய தொழிலாளர் குழு சுயாதீனமாக உள்ளது, இதனால் தொழிலாளர்கள் தங்கள் சொந்த போராட்டத்தை ஒழுங்கமைக்க முடியும்.

UAW மற்றும் பெருநிறுவன சார்பு ஊடகங்களில் வேலைநிறுத்தம் குறித்த மௌனத்தின் சதித்திட்டத்தை உடைத்து, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள வாகனத்துறை மற்றும் பிற தொழிலாளர்களுக்கு இந்த முக்கியமான போராட்டத்தைப் பற்றி அறிவிக்க உலக சோசலிச வலைத் தளம் தீவிரமாக போராடுகிறது.

ஒரு WSWS பிரச்சாரக் குழு சனிக்கிழமை டெட்ராய்டில் உள்ள ஸ்டெல்லாண்டிஸின் ஜெபர்சன் வடக்கு பொருத்தும் ஆலைக்கு விஜயம் செய்தது. அங்கு தொழிலாளர்கள் Jeep Cherokees மற்றும் Dodge Durangos உற்பத்தி செய்கிறார்கள். அங்கு UAW க்கு எழுதிய பகிரங்க கடிதத்தின் நகல்களை விநியோகித்தனர்.

வேர்ஜீனியாவில் தொழிலாளர்கள் இரண்டு முறை ஒரு ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்து, UAW தங்கள் வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுக்கவிடாமல் தடுக்க ஒரு குழுவை அமைத்ததாக WSWS விளக்கமளித்தபோது, பல தொழிலாளர்கள், “இப்போது இது ஒரு சுவாரஸ்யமான யோசனை” என்றனர். வேலைநிறுத்தம் குறித்து UAW அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு இளம் தொழிலாளி "நீங்கள் தொழிற்சங்கத்துடன் இருக்கிறீர்களா?" என்று WSWS பிரச்சாரகாரரை கேட்டபோது, தாம் UAW உடன் இணைந்தவர்கள் இல்லை என்று கூறினார். அதற்கு அந்த தொழிலாளி, “ஓ, அது நல்லது. இந்த தொழிற்சங்கம் எங்களுக்காக ஒரு விடயத்தையும் செய்யவில்லை.” அவர் காரில் பின்னோக்கி வந்து ஒரு துண்டுப்பிரசுரத்தை எடுத்துக்கொண்டார். சில தொழிலாளர்கள் வொல்வோ வேலைநிறுத்தத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதாகக் கூறினர். ஏனெனில் அவர்கள் அதைப்பற்றி WSWS Autoworker Newsletter செய்திமடலில் படித்தார்கள்.

பகிரங்க கடிதத்தைப் படித்த பின்னர், ஃபோர்ட் சிகாகோ பொருத்தும் ஆலை தொழிலாளி WSWS இடம் கூறினார்: “ஒவ்வொரு UAW உறுப்பினரும் இதைப் பார்க்க வேண்டும். கோரிக்கைகளில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அது அப்படித்தான் இருக்க வேண்டும். சிகாகோவில் உள்ள ஃபோர்டில் உள்ள UAW அவர்கள் யாரைத் தேர்வு செய்கிறார்கள் என்பதை மட்டுமே தேடுகிறது. நாங்கள் ஏற்கனவே பெறவேண்டியதை UAW உம் மற்றும் நிறுவனமும் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை. அந்த கட்டுரை ஒவ்வொரு UAW உறுப்பினரின் கைகளிலும் இருக்க வேண்டும்.”

இந்தியா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், துருக்கி, இலங்கை மற்றும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இது இந்த மோதலில் வெற்றி பெறுவதற்கான தங்கள் உறுதியை உயர்த்தியதாக வொல்வோ தொழிலாளர்கள் கூறுகின்றனர். மெக்சிகோவின் சிலாவோவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் உற்பத்தி வளாகத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி வொல்வோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம், “முன்னோக்கி செல்லுங்கள், சக தொழிலாளர்களே. நாங்கள் ராட்சதர்களுக்கு எதிராக போராடுகிறோம். தடுமாற வேண்டாம். எதிர்ப்பாளர் எவ்வளவிற்கு பெரியவராக இருக்கின்றாரோ அந்தளவிற்கு அவர் கடினமாக விழுகிறார். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும். அவர்களை இந்த அசுத்தத்தில் விட்டுவிடக்கூடாது. நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம்; ஒன்றுபட்டு நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்றார்.

அமெரிக்காவில் 2019 இல் GM வேலைநிறுத்தத்தில் நிறுவனசார்பான CTM (Confederation of Mexican Workers) இனை எதிர்த்து எல்லைகளை கடந்த தமது சகோதரர்களுடன் இணைந்து மேலதிக வேலை நேரத்தை எதிர்த்தனர். இந்த தைரியமான நிலைப்பாட்டை எடுத்ததற்காக, டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர் CTM இன் ஆசீர்வாதத்துடன் பல தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. இதற்கு பதிலளித்த GM மற்றும் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பிற தொழிலாளர்கள் இந்த நடவடிக்கைகளை கண்டித்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ பணத்தை நன்கொடையாக வழங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

"அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பல தொழிலாளர்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிப்பதை நாங்கள் காணலாம்" என்று வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளி WSWS இடம் கூறினார். “டெட்ராய்டில் உள்ள தொழிலாளர்களின் நான் வொல்வோ தொழிலாளர்களை ஆதரிக்கிறேன்’ என்ற அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள், ‘எமக்கு உளவியல் தைரியத்தை தருவதுடன் உண்மையான வித்தியாசத்தை காட்டுகின்றது. அலபாமா சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற வேலைநிறுத்தம் செய்யும் பிற தொழிலாளர்களைப்போல் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்று நம்புகிறேன். பல தலைமுறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களைப் பற்றி அறிமுகமில்லாதவர்கள் மற்றும் எல்லா இடங்களிலும் நிறுவனங்களிலிருந்து பில்லியன்களை சம்பாதிக்கும் தொழிற்சங்க அதிகாரிகள், ‘இதுதான் எங்களால் பெறக்கூடிய சிறந்தது’ என்று கூறுகிறார்கள். எங்கள் ஊதியங்கள் மற்றும் சுகாதார நலன்களைப் திரும்பபெற அவர்கள் உத்தரவுகளைப் பெறுகிறார்கள். அவர்கள் பீடங்களில் நின்று கோடீஸ்வரர்களைப் போல செயல்பட்டு, நாங்கள் அவர்களுக்கு தலைவணங்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இப்போது நாங்கள் சொல்கிறோம், அவை எல்லாம் முடிவிற்கு வந்துவிட்டது”.

Loading