உக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில், தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை போர்ப் பயிற்சிகளை நடத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக போர் முழக்கங்களை ஒலித்தாலும், அமெரிக்க கடற்படை தென் சீனக் கடலில் சீனாவை அச்சுறுத்தும் நோக்கில் ஆத்திரமூட்டும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த கடற்படைப் பயிற்சிகள், ரஷ்யாவுடனான எந்தவொரு மோதலும் சீனாவை சிக்க வைக்க மிக விரைவாக விரிவடையும் என்பதை பென்டகனின் போர் திட்டமிடுபவர்கள் உணர்ந்துள்ளனர் என்பதற்கு தெளிவான அறிகுறியாகும்.

யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ஆகிய இரண்டு அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல்களும் அவற்றின் தாக்குதல் குழுக்களும் ஞாயிற்றுக்கிழமை கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கின. பயிற்சிகள் ஏதேனும் தீங்கான நோக்கம் கொண்டவை என்பதில் எவ்விதமான பாசாங்கும் இல்லை. 'அவர்களின் இலக்கு கடலில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் போருக்கான தயார்நிலையை வலுப்படுத்தவாகும்' என்று ஒரு ஊடக வெளியீடு கூறியது.

சீனாவுடனான போருக்கான பென்டகனின் கடல்-வான் போர் மூலோபாயம், சீன நிலப்பரப்பை ஒட்டிய நீர்நிலைகளில், குறிப்பாக தென் சீனக் கடலுக்கு அருகில் உள்ள ஹைனான் தீவு மற்றும் முக்கிய நீர்மூழ்கிக் கப்பல் தளங்களைக் அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கொண்டுவருவதை அடித்தளமாக கொண்டுள்ளது. கடல்-வான் போர் சீன இராணுவ தளங்கள் மீது அமெரிக்க தளங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் இருந்து பாரிய வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடாத்துவதை இலக்காக கொண்டுள்ளது.

The USS Abraham Lincoln [Credit: US Navy]

அதற்குத்தான் அமெரிக்க கடற்படை தயாராகி வருகிறது. செய்திக்குறிப்பபுகளின்படி, இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களும் 'மேம்பட்ட கடல்சார் தகவல் தொடர்பு நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் நடவடிக்கைகள், விமானப் போர் நடவடிக்கைகள், கடல் வழி வினியோகம், தரை மீதான விமான நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் தடை நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன'.

South China Morning Post இல் சென்ற வாரம் ஒரு கட்டுரையில், அமெரிக்க விமானந்தாங்கி தாக்குதல் குழுக்கள் 2021இல் 10 முறை தென் சீனக் கடலுக்குள் நுழைந்ததாகவும், 2020 இல் ஆறு முறையும் 2019 இல் ஐந்து முறையும் நுழைந்தன எனக் குறிப்பிட்டது. தற்போதைய பயிற்சிகளுக்கு முன்பே, யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகளைச் சுற்றி ஐந்து நாள் கூட்டுப் பயிற்சியை Essex Amphibious Ready குழுவுடன் இணைந்து மேற்கொண்டது. இது குறிப்பாக நீரிலும் நிலத்திலுமான தாக்குதல்களுக்குப் பொறுப்பாகும்.

கடந்த வாரம் USS கார்ல் வின்சன் மற்றும் Essex amphibious group உம் USS ஆப்ரகாம் லிங்கன் உடனும் மற்றும் நீரிலும் நிலத்திலுமான தாக்குதல்களுக்காகவும் நியமிக்கப்பட்ட America Expeditionary Strike குழுவுடன் இது தைவானின் கிழக்கே பிலிப்பைன்ஸ் கடலில் போர் பயிற்சிகளுக்காக இணைந்தது. இரண்டு ஜப்பானிய போர்க்கப்பல்களான JS Hyuga மற்றும் அழிப்பான் JS Myoko என்ற வானூர்தி தாங்கிளுடன் அமெரிக்க கடற்படையின் பாரிய இருப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது.

அமெரிக்க நீரிலும் நிலத்திலுமான கடற்படைப் பிரிவுகளைச் சேர்ப்பது குறிப்பாக சீனாவின் நிலப்பரப்புக்கு மட்டுமல்ல, சீனாவுடனான எந்தவொரு அமெரிக்கப் போரிலும் பிரதான இலக்குகளாக இருக்கும் தென் சீனக் கடலில் உள்ள சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

தென்சீனக் கடலில் அமெரிக்க கடற்படை நடவடிக்கைகள் எண்ணிக்கையிலும் சிக்கலான தன்மையிலும் அதிகரித்துள்ளதாக South China Morning Post கட்டுரை குறிப்பிடுகிறது. தைவானின் முன்னாள் கடற்படை இராணுவ பயிற்றுவிப்பாளரைக் குறிப்பிட்டு, சீனாவின் Mischief, Subi, Fiery Cross கடல்பாறைகளில் உள்ள ரேடார் அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக தென் சீனக் கடலுக்குள் அமெரிக்க போர்க்கப்பல்களின் நுழைவு வழிகள் மாறிவிட்டதாகக் கூறியது.

அமெரிக்க செய்தி ஊடகம் அமெரிக்க கடற்படை போர் பயிற்சிகளை புறக்கணித்து, அதற்கு பதிலாக சீனாவின் பதிலில் கவனம் செலுத்துகிறது. தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு (ADIZ) சீனப் போர் விமானங்களை அனுப்புவது, தைவான் மீது படையெடுப்பதற்கான பெய்ஜிங்கின் நோக்கங்கள் என அவை எப்போதும் 'ஊடுருவல்கள்' மற்றும் 'அச்சுறுத்தல்கள்' என்று விவரிக்கப்பட்டு ஆதாரங்களாக குறிப்பிடப்படுகின்றன. தைவான் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை 39 சீன இராணுவ விமானங்களும் மற்றும் அதைத் தொடர்ந்து திங்களன்று மேலும் 13 விமானங்களும் அதன் ADIZ மண்டலத்திற்குள் நுழைந்தன.

இந்த சீன எதிர்ப்பு பிரச்சாரம் மற்றொரு பாசாங்குத்தனமான இரட்டைத் தன்மையை உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க கடற்படை அருகிலுள்ள அமெரிக்க பிரதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் போர் பயிற்சிகளை நடத்தும் போது, அது 'சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்' என்பதை உறுதிப்படுத்த 'சர்வதேச நீர்நிலைகளில்' செயல்படுகிறது எனக் கூறப்படுகின்றது.

ஆயினும்கூட, சீனப் போர் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு அருகில் பறக்கும்போது, அது சீனாவின் ஆக்கிரமிப்பு என்று முத்திரை குத்தப்படுகிறது. பொதுவாக ADIZ மண்டலத்திற்கு சர்வதேச சட்டத்தில் எந்த தரப்படுத்தல்களும் இல்லை. மேலும், தைவானிய ADIZ மண்டலம் ஆத்திரமூட்டும் வகையில் சீனாவின் பிரதான நிலப்பகுதியை உள்ளடக்கியது.

உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான அதன் நகர்வுகளைப் போலவே, வாஷிங்டனும் தைவான் தொட்டர்பாக சீனாவைப் பொறுத்தவரையில் இதேபோன்ற செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. ரஷ்ய பிரதேசத்தில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் உக்ரேன் மீதான உடனடி படையெடுப்பிற்கு 'ஆதாரம்' என்று மேற்கோள் காட்டப்படுகின்றன. இது மாஸ்கோவிற்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கும், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு பெரிய அமெரிக்க இராணுவக் கட்டமைப்பிற்கும் சாக்குப்போக்காக உள்ளது. இது USS கார்ல் வின்சன் தாக்குதல் குழுவின் தளபதியான ரியர் அட்மிரல் டான் மார்ட்டின், சீனாவிற்கு எதிரான 'மிகப் பெரும் கடல் படை' என்று விவரித்ததைப் போன்றுள்ளது.

கடந்த வாரம் சிட்னியில் இருந்தபோது ஆஸ்திரேலிய செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ், ஒரு சிறிய ஆதாரமும் வழங்காமல், உக்ரேன் நெருக்கடியை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தைவான் மீது படையெடுக்கலாம் என்று எச்சரித்தார். 'ரஷ்யா சீனாவுடன் எப்போதும் இருந்ததை விட நெருக்கமாக செயல்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் ஓரணியில் செயற்படுவதால், எங்களைப் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது கடமை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இதேபோன்ற வகையில், பைனான்சியல் டைம்ஸ் கருத்துரையாளர் கிடோன் ராஹ்மான் கடந்த வார இறுதியில் “புதிய உலக ஒழுங்கு: ரஷ்யா மற்றும் சீனாவின் திட்டங்கள் வடிவம் பெறுகின்றன” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார். ரஷ்ய மற்றும் சீன பூகோள அரசியலின் அடிப்படை நோக்கங்களை பற்றி கூடுதலாக குறிப்பிடாது மாறாக கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான நகர்வுகளுக்கான அடித்தளத்தில் உள்ள காரணங்களை அவர் கவனக்குறைவாக சுட்டிக்காட்டினார்.

ராஹ்மான் பின்வருமாறு அறிவித்தார்: 'ரஷ்யர்களும் சீனர்களும் அடிக்கடி எதிர்க்கும் தற்போதைய உலக ஒழுங்கின் இரண்டு அம்சங்கள் 'ஒருமுனை தன்மை' மற்றும் 'உலகளாவிய தன்மை'. இன்னும் எளிமையாகச் சொன்னால், தற்போதைய ஒழுங்கமைப்புகள் அமெரிக்காவிற்கு அதிக பலத்தைக் கொடுக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். அதை மாற்ற தீர்மானகரமாக இருக்கின்றனர்'.

உண்மையில், பாதணி வேறு கால்களில் உள்ளது: அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் வரலாற்று வீழ்ச்சியின்போது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் அது நிறுவிய உலகளாவிய மேலாதிக்கத்தை இராணுவம் உட்பட எல்லா வழிகள் மூலம் உயர்த்துவதில் உறுதியாக உள்ளது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்த அதன் வெற்றிகரமான தன்மை மறைந்து போருக்குப் பிந்தைய ஏகாதிபத்திய ஒழுங்கிற்கு முக்கிய அச்சுறுத்தல்களாகக் கருதுவதை அது இப்போது இலக்காகக் கொண்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் பூகோள-அரசியல் பதட்டங்களை பெரிதும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் மற்றும் பென்டகனில் போர் திட்டமிடலை துரிதப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் ஒரு பெரிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், அது அதிகரித்து வரும் வர்க்க மோதலுக்கு இட்டுச் செல்கையில் பைடென் நிர்வாகம் இந்த சமூக பதட்டங்களை ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிராக திருப்ப முயல்கிறது. இது போரின் ஆபத்தையும் பெரிதும் உயர்த்துகிறது.

உடனடி இலக்கு ரஷ்யா என்றாலும், சீனப் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்கக் கடற்படையின் பயிற்சிகள், ஒரு மோதல் எங்கு தொடங்கினாலும், அது அணுஆயுத சக்திகளை உள்ளடக்கிய பேரழிவு தரும் உலகளாவிய போராக விரைவாக பரிணமிக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்ற ஒரு எச்சரிக்கையாகும்.

Loading