உக்ரேன் நெருக்கடி காரணமாக ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய அரசாங்கங்கள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் போர் உந்துதலின் விரிவாக்கத்துடன் கிழக்கு உக்ரேனின் சில பகுதிகளின் சுதந்திரத்தை மாஸ்கோ அங்கீகரித்ததற்கு பதிலளிக்கின்றன.

திங்களன்று, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரின் உத்தியோகபூர்வ அறிக்கையில் 'உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பை' கண்டித்தனர்.

'சுதந்திர நிறுவனங்களாக அங்கீகரித்து, உக்ரேனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரஷ்ய துருப்புக்களை அனுப்புவதற்கான ரஷ்ய கூட்டமைப்பின் முடிவு, சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும்' என்று அறிக்கை அறிவிக்கிறது. 'இது சர்வதேச சட்டம், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை மீறுகிறது மேலும் ரஷ்யாவின் சொந்த சர்வதேச கடமைகளை மீறுகிறது மற்றும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.'

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல், இடதுபுறம், பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன், இரண்டாவது இடது, ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயர்பொக், இரண்டாவது வலது, மற்றும் இத்தாலிய வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ ஆகியோர் கலந்துகொண்டனர். பிப்ரவரி 21, 2022 திங்கட்கிழமை, பிரான்சில் உள்ள Quai d'Orsay வெளியுறவு அமைச்சகத்தில் அவர்களின் மற்ற G7 சகாக்களுடன் தொலைபேசி அழைப்புக்கு முன்னைய சந்திப்பு. (AP Photo/Michel Euler)

இரு தலைவர்களும் 'உறுப்பு நாடுகளின் உறுதியான ஒற்றுமை மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வலுவான மற்றும் வேகத்துடன் எதிர்வினையாற்றுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை' வரவேற்றனர்.

பாரிசில் நடந்த ஒரு அசாதாரண கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய (EU) வெளியுறவு அமைச்சர்கள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை ஏற்றுக்கொண்டனர். லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசுகளின் அங்கீகாரத்திற்கு வாக்களித்த ரஷ்ய நாடாளுமன்றத்தின் 351 உறுப்பினர்களை ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் பட்டியலில் வைப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும். உக்ரேனின் 'பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை' குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மேலும் 27 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பொருளாதாரத் தடைகளுக்கு மேலும் இலக்காகின்றன.

கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றிய நிதிச் சந்தைகளுக்கான ரஷ்ய அரசின் அணுகல் குறைக்கப்படும் மற்றும் பிரிந்த பகுதிகளுடன் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் கட்டுப்படுத்தப்படும். ஐரோப்பிய ஒன்றிய தடைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். கூடுதலாக, பட்டியலிடப்பட்ட நபர்கள் இனி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் பட்டியலிடப்பட்டவர்களுடன் எந்த வணிகமும் நடத்தப்படக்கூடாது. ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தற்போதைய பிரெஞ்சு தலைமைப் பதவியின் படி, ரஷ்யாவிற்கு எதிரான புதிய ஐரோப்பிய ஒன்றிய தடைகள் இந்த புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

'இந்தத் தடைகளின் தொகுப்பு ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது' என வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கூறினார். 'இது ரஷ்யாவை காயப்படுத்தும் மற்றும் அது மிகவும் காயப்படுத்தும் மற்றும் நான் நெருங்கிய தொடர்பில் இருந்த எங்கள் கூட்டாளிகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடனான வலுவான ஒருங்கிணைப்பில் நாங்கள் அதைச் செய்கிறோம்' என்றார்.

நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் அனுமதி செயல்திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவை ஊர்சுலா வொன் டெர் லெயன் வரவேற்றார். 'நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஐ ஐரோப்பா முழுவதுமான விநியோக பாதுகாப்பின் பார்வையில் இருந்து, முற்றிலும் புதிதாக பார்க்க வேண்டும்,' என்று அவர் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பா இன்னும் ரஷ்ய எரிவாயுவை சார்ந்துள்ளது என்பதை நெருக்கடி, காட்டுகிறது.

மற்ற ஐரோப்பிய தலைவர்களைப் போலவே, வொன் டெர் லெயன் மேலும் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தினார். 'கிரெம்ளின் இந்த நெருக்கடியை தொடர்ந்து அதிகரித்தால், மேலும் நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்,' என்றும் 'ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுபட்டுள்ளது மற்றும் விரைவாக செயல்பட தயாராக உள்ளது' என்றும் அவர் கூறினார்.

வெளிப்படையாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக சாத்தியமான தடைகளை விவாதிக்கிறது. 'அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் திரு புட்டின் இல்லை' என்று செவ்வாய்க்கிழமை மாலை பாரிஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்திற்குப் பின்னர் பொரெல் கூறினார்.
மேலும் நடவடிக்கைகள், கையிருப்பில் இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனில் ரஷ்ய-எதிர்ப்பு ஆட்சிக்கு அதன் ஆதரவை அதிகரிப்பதோடு, கிழக்கு ஐரோப்பாவில் அதன் நேட்டோ நிலைநிறுத்தல்களை அதிகரித்து வருகிறது. செவ்வாயன்று, பல ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் தங்கள் இணைய பாதுகாப்புப் பிரிவைத் திரட்டுவதற்கான திட்டங்களை அறிவித்தன. 'உக்ரேனின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, [நாங்கள்] லித்துவேனியன் தலைமையிலான இணைய விரைவான-செயற்பாட்டு குழுவை செயல்படுத்துகிறோம், இது வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை சமாளிக்க உக்ரேனிய நிறுவனங்களுக்கு உதவும்' என லித்துவேனிய பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட் செய்தது.

EU இன் இணைய பாதுகாப்பு விரைவான செயற்பாட்டு குழு 2019 இல் நிறுவப்பட்டது மற்றும் எஸ்தோனியா, குரோஷியா, லித்துவேனியா, போலந்து மற்றும் ருமேனியா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ரினா லாம்ப்ரெக்ட் செவ்வாயன்று லித்துவேனியாவில் ஜேர்மன் நேட்டோ துருப்புக்களை பார்வையிட்டார், அவை சமீபத்திய நாட்களில் 350 துருப்புகள் மற்றும் சுமார் 100 வாகனங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளன. “ரஷ்யா இங்கு ஆக்கிரமிப்பாளராக செயல்படுகிறது. ரஷ்ய தரப்பு அதன் ஆக்கிரமிப்பை எவ்வளவு தூரம் தள்ளும் என்பது இந்த நேரத்தில் நிச்சயமற்றது. நாங்கள் இங்கே விழிப்புடன் நிற்கிறோம், நம்மை தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்,” என்று மிரட்டினார். 'துரதிர்ஷ்டவசமாக, கடந்த வாரங்கள் மற்றும் மாதங்களின் இராஜதந்திரத்தால் நமது ஐரோப்பிய அமைதி ஒழுங்கின் இந்த அப்பட்டமான மீறலைத் தடுக்க முடியவில்லை' என்றார்.

ரஷ்யாவுடன் தீவிரமடைந்து வரும் இராணுவ மோதலை தொடர்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களால் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பொய்களிலும் பாசாங்குத்தனத்திலும் மூழ்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்யா அல்ல, நேட்டோ சக்திகள்தான் ஓர் உலகளாவிய ஆக்கிரமிப்பு இராணுவ மற்றும் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுகிறது, ரஷ்யாவை தனிமைப்படுத்தி, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல் மற்றும் இராணுவ அக்கறைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து, அதை ஒரு அரை-காலனித்துவ நிலைக்கு குறைக்க முயல்கிறது.

தற்போதைய நெருக்கடியானது, 1991ல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்ததற்கு நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் எதிர்வினையாற்றிய போர் உந்துதலின் உச்சக்கட்டத்தை பிரதிபலிக்கிறது. சோவியத் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட இராணுவ-அரசியல் தடையிலிருந்து விடுபட்டு, நேட்டோ சக்திகள் ஈராக், யூகோஸ்லாவியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பின்னர் லிபியா மற்றும் சிரியாவை மீண்டும் தாக்கின. போர்கள், டிரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் மில்லியன் கணக்கான உயிர்களின் இழப்புகளோடு, இந்த நாடுகளை சிதைத்து விட்டன.

2013 செப்டம்பரில் அமெரிக்கா, பிரெஞ்சு மற்றும் பிற நேட்டோ போர்க்கப்பல்கள் சிரியா மீது குண்டுவீசுவதைத் தடுக்க, கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் துறைமுகத்தை தளமாகக் கொண்ட ரஷ்ய போர்க்கப்பல்கள் சிரிய கடற்கரையில் நிறுத்தப்பட்ட பின்னர், நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கு எதிராக வன்முறையில் திரும்பியது. அவர்கள் மைதான் சதுக்க எதிர்ப்புக்களுக்கு ஆதரவளித்தனர் மற்றும் உக்ரேனில் நேட்டோ கைப்பாவை ஆட்சியை நிறுவ 2013 இல் கியேவில் உக்ரேனிய நவ-பாசிஸ்டுகள் தலைமையிலான ஆட்சியை ஆதரித்தனர். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் உள்ள பிரிவினைவாதிகள் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர், அவர்கள் ரஷ்ய மொழி பேசும் மக்களை தாக்குவதற்கும் பயமுறுத்துவதற்கும் கியேவ் ஆட்சியால் அனுப்பப்பட்ட ரஷ்ய எதிர்ப்பு குடிப்படையினராவர்.

அசோவ் பட்டாலியன் போன்ற பாசிசப் பிரிவுகளின் தலைமையில் உக்ரேனிய ஆயுதப் படைகள் இப்போது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மீது குண்டுகளை வீசுவதால், இந்த மோதல் மீண்டும் வெடித்துள்ளது, ஆனால் நேட்டோ சக்திகள் இப்போது அதை மிகப் பெரிய அளவில் தொடர்கின்றன, ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளவும், போருக்கான காரணங்களை உருவாக்கவும் அவை செயற்படுகின்றன.

பிரெஞ்சு நாளிதழான Le Monde அதன் தலையங்கத்தில், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பெரிய விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்காதவர்களைக் கண்டனம் செய்கிறது: '2014 முதல் டொன்பாஸில் ரஷ்யா நடைமுறையில் இருந்ததால், அது கண்டிப்பாக ஒரு படையெடுப்பு அல்ல என்று அவர்கள் நம்ப விரும்புகிறார்கள். இத்தகைய பிரதிபலிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் பணியில் இல்லை. இது 2014 தலையீட்டை சட்டபூர்வமாக்குகிறது. இது ரஷ்ய ஜனாதிபதியின் ஆழ்ந்த இலட்சியங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை: ரஷ்ய ஜனாதிபதியின் ஆழமான அபிலாஷைகளை இது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை: ஐரோப்பிய கண்டத்தை தனது சொந்த அளவுகோல்களின் அடிப்படையில் செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதை மீண்டும் நிறுவ” முயற்சிக்கிறார்.

2014 இல் உக்ரேனில் தலையிட்ட சக்தி, முதன்மையாக ரஷ்யா அல்ல, ஆனால் வாஷிங்டனும் பேர்லினும் ஆகும். '2014 தலையீட்டை' Le Monde கண்டனம் செய்யும் போது, அது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் உள்ள படைகளுக்கான ரஷ்ய உதவியைத் தாக்குகிறது, ஆனால் கியேவ் ஆட்சியை முற்றிலும் சட்டபூர்வ நிறுவனமாக தவறாகக் கருதுகிறது, அது ஒரு முறைகேடான, தீவிர வலதுசாரி சதி மூலம் நிறுவப்பட்டது என்ற உண்மையை வெறுமனே மௌனமாக கடந்து செல்கிறது.

இந்த அரசியல் சிதைவின் அடிப்படையில், Le Monde கிழக்கு உக்ரேனில் ரஷ்யத் தலையீட்டை சாத்தியமான மிகத் தீமூட்டும் விதத்தில், ஒரு முழுமையான படையெடுப்பு என விளக்குகிறது. இதிலிருந்து, ஐரோப்பாவில் உள்ள முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே இராணுவ செல்வாக்கைப் பிரிப்பதில் ரஷ்ய கவலைகள் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது என்று முடிவு செய்கிறது. அதாவது, நடைமுறையில், நேட்டோ சக்திகள் ஆயுதங்கள் மற்றும் துருப்புக்களை அதன் எல்லைகளில் வைக்கையில் எந்த ரஷ்ய எதிர்ப்புகளையும் தெரிவிக்காது என்கிறது.

இந்த நெருக்கடியில், நேட்டோ சக்திகளின் புவிசார் அரசியல் அபிலாசைகள், உள்நாட்டில் பெருகிவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மத்தியில், பிற்போக்குத்தனமான சுகாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளைத் திணிக்கும் அவர்களின் முயற்சிகளுடன் குறுக்கிடுகின்றன.

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் போர் உந்துதலின் மையத்தில், COVID-19 நோய்தொற்று பற்றிய அறிக்கைகளை புதைப்பதற்கான அரசியல் பிரச்சாரம் உள்ளது. ஐரோப்பாவில் ஒவ்வொரு வாரமும் 6 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்பட்டு 20,000 க்கும் அதிகமானோர் இறக்கின்றனர், கண்டம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க மீதமுள்ள அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் அகற்ற நகர்கின்றன, இது பிரிட்டனில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். ஆயினும்கூட, உக்ரேன் மீது ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ கட்டவிழ்த்துவிட்ட போர் நெருக்கடியால் இது பின்னணியில் தள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளும் பண்டிதர்களும் வலியுறுத்துவதால், தொற்றுநோய் பெருகிய முறையில் செய்திகளில் இருந்து மறைந்து வருகிறது.

இது, இந்த வார இறுதியில் முனிச் பாதுகாப்பு மாநாட்டுத் தலைவர் வொல்ப்காங் இஷிங்கரால் வெளியிடப்பட்டது, அவர் COVID-19 மீதான பொது சுகாதார நடவடிக்கைகளை கைவிட்டு போரில் கவனம் செலுத்த அழைப்பு விடுத்தார்: “நாம் உலக அரசியலை மட்டும் ஒத்திவைக்க முடியாது. பாதுகாப்பு சவால்கள் சமூக விலகலைச் செய்யாது.

இத்தகைய கருத்துக்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மொத்த அரசியல் திவால்நிலைக்கு சாட்சியமளிக்கின்றன. நடத்தப்பட வேண்டிய போர், கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான போர், அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவுடனான உலகளாவிய போர் அல்ல. ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய அச்சுறுத்தல்களால் ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு முன்வைக்கப்படும் முக்கியமான கேள்வி தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும்.

Loading