ஜூலியன் அசான்ஜ் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று பிற்பகல் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ், அமெரிக்காவிடம் தான் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மே 1, 2019, புதன்கிழமை, இலண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் அழைத்துச் செல்லப்படுகிறார். [AP Photo/Matt Dunham] [AP Photo/Matt Dunham]

அசான்ஜை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான எதிர்கால நோக்கம் குறித்து நடக்கும் நீண்டகால சட்டப் போராட்டத்தில் சமீபத்திய நிலையை இந்த முறையீடு தொடங்குகிறது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய தகவல்கள் உட்பட, உண்மையான செய்திகளை வெளியிட்டதற்காக அமெரிக்காவின் உச்சபட்ச பாதுகாப்பு சிறையில் 175 ஆண்டுகள் சிறைவாசத்தை அசான்ஜ் எதிர்கொள்வார்.

பிரிட்டிஷ் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது நான்காவது ஆண்டில் தொடர்கிறது, அந்த நேரத்தில் அசான்ஜ் இலண்டனின் உச்சபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த காலகட்டத்தின் பெரும்பகுதியில் அவர் பிரிட்டனில் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் விசாரணைகள் முதன்மையாக அசான்ஜின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்துகின்றன. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலான துன்புறுத்தலால் அவரது உடல் மற்றும் மன நிலையில் எற்பட்டுள்ள சீர்குலைவு, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நீதித்துறைக்காக வேலை செய்யும் வழக்கறிஞர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அசான்ஜ் இறக்கக்கூடும் என நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் எச்சரித்துள்ள போதிலும், மேலும் அவரை நாடுகடத்துவது நிச்சயமாக மரண தண்டனைக்கு ஒப்பாகும் என மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த முதல் நீதிபதி ஒப்புக்கொண்டுள்ள போதிலும், இது நடக்கிறது.

அசான்ஜை துன்புறுத்துவதில் பிரிட்டிஷ் அரசின் குற்றவியல் உடந்தையானது, கடந்த அக்டோபரில் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு ஒப்புதல் அளித்த பிரிட்டிஷ் உயர் நீதிமன்ற தீர்ப்பால் சுருக்கமாகக் கூறப்பட்டது, அவரது உடல்நலக் காரணங்களை மையமாகக் கொண்ட மேல்முறையீட்டை விசாரிக்க அதே நீதிமன்றம் மறுத்தது, மற்றும் ஜூன் மாதம் அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்த உத்தரவிட்டுள்ளதாக உள்துறைச் செயலர் பிரித்தி பட்டேல் அறிவித்தது ஆகியவற்றின் மூலம் மொத்தமாக எடுத்துக்காட்டப்பட்டது.

அசான்ஜ் நேற்று தாக்கல் செய்த மேல்முறையீடு பிரிட்டிஷ் சட்ட அமைப்பிற்குள் அவர் நாடும் கடைசி வழியாகும். அவரது உடல்நலம் குறித்த கேள்வி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போதைய மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டால், விசாரணைகள், அமெரிக்கா வழக்குத் தொடர முயற்சித்ததன் அரசியல் தன்மை மற்றும் அசான்ஜை அமெரிக்கா பின்தொடர்ந்தபோது நிகழ்ந்த எண்ணற்ற துஷ்பிரயோகங்கள் குறித்து கவனம் செலுத்தும்.

நேற்று வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸ் செய்திக்குறிப்பு விளக்கத்தின்படி மேல்முறையீட்டின் அடிப்படைகளில் பின்வருவன அடங்கும்:

* ஜூலியன் அசான்ஜ் அவரது அரசியல் கருத்துக்களுக்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுகிறார்

* பாதுகாக்கப்பட்ட பேச்சுக்காக ஜூலியன் அசான்ஜ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

* அமெரிக்க கோரிக்கை அமெரிக்க-இங்கிலாந்து ஒப்படைப்பு ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுகிறது, ஏனெனில் இது அரசியல் குற்றங்களுக்கானது, அவை ஒப்படைப்பதற்கான காரணங்களாக விலக்கப்பட்டுள்ளன.

* இந்த வழக்கு பற்றிய முக்கிய உண்மைகளை அமெரிக்க அரசாங்கம் பிரித்தானிய நீதிமன்றங்களில் தவறாக உருவகப்படுத்துகிறது.

* ஒப்படைப்பு கோரிக்கையும் அதைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளும் துஷ்பிரயோகமிக்க செயல்முறையை உருவாக்குகிறது.

அசான்ஜின் மேல்முறையீடு, “உள்துறைச் செயலர் பிரித்தி பட்டேல் சிறப்பு வகை அடிப்படையில் ஒப்படைப்பு உத்தரவிற்கு ஒப்புதல் அளித்ததில் தவறு செய்துள்ளார், அதிலும் ஒப்படைப்பு கோரிக்கையே அமெரிக்கா-இங்கிலாந்து நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் பிரிவு 4 ஐ மீறுகிறது என்ற வாதங்களையும் உள்ளடக்கியது,” என்பதை விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

அசான்ஜின் மனைவி ஸ்டெலா மோரிஸ் ஒரு இணை அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்: “கடந்த தீர்ப்புக்குப் பின்னர், எனது கணவருக்கு எதிராக அமெரிக்கா வழக்குத் தொடுத்தது ஒரு குற்றவியல் துஷ்பிரயோகம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. மேல்முறையீட்டின் பேரில், அமெரிக்காவிற்கு எதிரான வழக்கை திறந்த நீதிமன்றத்தில், முழுமையாக, முன்வைக்க ஜூலியனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இப்போது முடிவு செய்வார்கள்.”

டிசம்பர் 10, 2021, வெள்ளிக்கிழமை, இலண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முன் ஜூலியன் அசான்ஜின் வருங்கால மனைவி ஸ்டெலா மோரிஸ் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். (Credit: AP Photo/Frank Augstein)

மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டால், அது, ஜனவரி 2021 இல் வழங்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி வனேசா பாரைட்ஸரின் தீர்ப்புக்கு சவாலாக உருவெடுக்கும். அந்த ஆரம்பகட்ட விசாரணைகளில், உடல்நிலை காரணங்களுக்காக அசான்ஜ் நாடுகடத்தப்படுவதை பாரைட்ஸர் தடுத்தார், பின்னர் அமெரிக்காவுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றங்களால் இது முறியடிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அவரது தீர்ப்பு, அசான்ஜ் ஒப்படைப்புக்கான அமெரிக்க வழக்கை உறுதிசெய்தது, அரசாங்கங்கள் மறைத்து வைத்திருக்க விரும்பும் தகவல்களை வெளிப்படுத்துவதைத் தடுக்க ஒரு முன்னுதாரணத்தை திறம்பட உருவாக்கியது.

மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டால், அந்த முன்மாதிரி, நீதிமன்றங்களில் சவால் செய்யப்படும்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரைட்ஸரின் தீர்ப்பில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளதான, மோரிஸால் குறிப்பிடப்பட்ட ஆதாரம், வன்முறை செறிந்த குற்றக் கும்பல்களுடன் அடிக்கடி தொடர்புபடுத்தப்பட்ட முறைகளை உள்ளடக்கிய அசாதாரண செயல்பாட்டிற்கான போலி-சட்ட மூடிமறைப்பு என அமெரிக்க ஒப்படைப்பு கோரிக்கையை முத்திரைகுத்துகிறது.

ஜூன் 2021 இல், அசான்ஜூக்கு எதிரான அமெரிக்காவின் பிரதான சாட்சியான சிகுர்தூர் ‘சிக்கி’ தோர்டார்சன், மத்திய உளவுத்துறையின் (Federal Bureau of Investigation-FBI) வழக்கில் இருந்து விடுபடுவதற்கு ஈடாக தான் அளித்த சாட்சியத்தின் பெரும்பகுதி பொய்யானது என்பதை ஒப்புக்கொண்டார். ஆயினும்கூட, அமெரிக்க குற்றப்பத்திரிக்கையில் அந்தக் கூற்றுக்கள் முக்கியமாக உள்ளன, இது அசான்ஜுக்கு எதிரான ஒப்படைப்பு கோரிக்கைக்கு அடிப்படையாக அமைகிறது.

தோர்டார்சன் முன்பு விக்கிலீக்ஸில் ஒரு FBI உளவாளியாக செயல்பட்டார். அமெரிக்க அரசுடனான அவரது சமீபத்திய ஒத்துழைப்புக்கு முன்னர், அவர் ஐஸ்லாந்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் விக்கிலீக்ஸில் பல்லாயிரக்கணக்கான டாலர்களை மோசடி செய்த குற்றங்களின் பேரில் தண்டனை பெற்றார். குற்றச்சாட்டுக்காக அவர் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டது ஐஸ்லாந்தில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளிவரும் Stundin செய்தியிதழால் உடைக்கப்பட்டது, ஆனால் பெரும்பாலான மேற்கத்திய பத்திரிகைகளில் இது ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை.

செப்டம்பர் 2021 ஆம் ஆண்டில், Yahoo! News, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க நிர்வாகமும் மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA), அசான்ஜை கடத்துவது அல்லது படுகொலை செய்வது குறித்து விவாதித்தது தொடர்பான செய்திகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டது. அந்த நேரத்தில், விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தில் வசிக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அகதியாக இருந்தார்.

Yahoo! News அறிக்கை, அமெரிக்க அரசாங்கம் மற்றும் உளவுத்துறையின் 30 முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதன் உள்ளடக்கங்கள் ஒருபோதும் மறுக்கப்படவில்லை. ட்ரம்பின் சிஐஏ இயக்குநரும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலருமான மைக் பொம்பியோ, Yahoo! News அறிக்கைக்கான ஆதாரங்கள் குறித்து தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும், அவை அனைத்தும் அவற்றின் அறிக்கைகளின் உண்மைத் தன்மையை ஒப்புக்கொள்கின்றன.

ஈக்வடோர் தூதரகத்தில் இரகசிய அமெரிக்க உளவுத்துறை அமைப்பாக செயல்பட்டதாகக் கூறப்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனமான UC Global க்கு எதிரான குற்றவியல் வழக்கில் ஒரு சாட்சியாக சாட்சியமளிக்க, ஸ்பெயினின் தேசிய உயர் நீதிமன்றம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொம்பியோவுக்கு நீதிமன்ற அழைப்பு விடுத்தது. இந்த நிறுவனமும் அதன் நிர்வாகியும், சிஐஏ சார்பாக அசான்ஜூக்கு எதிராக ஒரு பரந்த சட்டவிரோத உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அத்துடன் அசான்ஜை கடத்துவது அல்லது கொலை செய்வது தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவது பற்றி விவாதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

ஜூன் மாத இறுதிக்குள் ஆஜராக வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த போதிலும், பொம்பியோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

மிக முக்கியமாக, இலண்டனில் இருந்து அசான்ஜை கடத்துவதற்கு அல்லது கொல்வதற்கு பரிசீலித்த பின்னரே, அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு எதிராக ஒரு சட்டபூர்வ குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது ஆரம்பத்தில் சிஐஏ இன் அசாதாரண விளக்கத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாக கருதப்பட்டது.

வாஷிங்டனிலும், அதே போல் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் அரசு எந்திரத்திலும், இந்த விஷயம் திறந்த நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் என்பது குறித்து தீவிர அச்சம் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது பெரிய ஏகாதிபத்திய சக்தியினதும், மற்றும் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் அனைத்து நட்பு நாடுகளினதும் குற்றவியல் குற்றச்சாட்டாகும். எனவே, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புக்கொள்ளும் எனக் கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை.

அவ்வாறு செய்தாலும் கூட, கடந்த தசாப்த கால அனுபவங்கள், அசான்ஜின் துன்புறுத்தலுக்கு பிரிட்டிஷ் நீதித்துறை ஒரு முக்கிய முட்டுக்கட்டை என்பதை நிரூபித்துள்ளது. அதுபோலவே, அனைத்து நாடுகளிலும் உள்ள பிரதான கட்சிகள் நீண்ட நெடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவில், ட்ரம்ப் ஆரம்பத்தில் தாக்கல் செய்த ஒப்படைப்பு கோரிக்கையை பைடென் நிர்வாகம் இன்றுவரை தொடர்கிறது. பிரிட்டனில், கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கமும், எதிர்க்கட்சியான கெய்ர் ஸ்டார்மரின் தொழிற் கட்சியும் அசான்ஜூக்கு எதிரான தங்கள் தீவிர விரோதத்தை நிரூபித்துள்ளன.

அசான்ஜ் பிறந்து குடியுரிமை பெற்ற ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, தற்போதைய தொழிற் கட்சி அரசாங்கமும் கூட, தாராளவாத தேசியக் கட்சியின் முந்தைய அரசாங்கம் மற்றும் முந்தைய அனைத்து நிர்வாகங்களின் பாதையைத் தொடர்கிறது. அசான்ஜின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அதன் இராஜதந்திர மற்றும் சட்டபூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்த மறுக்கிறது, அதற்குப் பதிலாக ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதல்களுக்கான நாட்டின் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இந்நிலையில், அசான்ஜின் பாதுகாப்பு மற்றும் அவரது விடுதலைக்கான போராட்டம் என்பது, முழு அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிராக இயக்கப்படக்கூடிய தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியில் தங்கியுள்ளது என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய இயக்கத்திற்கான அடிப்படையானது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அசான்ஜ் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டது உட்பட, சர்வாதிகாரத்தை நோக்கிய அரசாங்கங்களின் பரந்த அளவிலான திருப்பம் ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் பெருகிய முறையில் தீவிரமாக முன்னெடுக்கும் போராட்டங்களில் தங்கியுள்ளது.

Loading