Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம்

6-1. இந்தியாவில் ஒரு அரசியல் எழுச்சி பற்றிய இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் முன்னறிவிப்பு சரியானது என நிரூபணமானது. கொந்தளிப்பு மிகுந்த இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கமானது அது உருவாக்கப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள்ளேயே 1942 ஆகஸ்டில் வெடித்தது. காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக யுத்தத்தை எதிர்த்ததோடு, 1939 இலையுதிர் காலத்தில் அதன் அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகினர். ஆனால் அதன் எதிர்ப்பு, குடிமக்களின் தனிநபர் அடையாள ஒத்துழையாமையாக மட்டுப்படுத்தப்பட்டது. பசுபிக்கில் யுத்தம் வெடித்ததை அடுத்து, இந்தியா மீது ஜப்பான் உடனடியாக படையெடுக்கக் கூடிய ஆபத்தானது பிரிட்டனை நெருக்குவதற்கு தங்களுக்கு ஒரு பெரும் நெம்புகோலைக் கொடுத்திருக்கின்றது என காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் கணக்கிட்டனர். பிரிட்டனின் யுத்த முயற்சிகளுக்கு இந்தியா அடிபணிந்தமையால் உருவான சமூக-பொருளாதாரக் குழப்பம் பெருகி வந்த நிலைமையின் கீழ், காங்கிரஸ் வெகுஜன அமைதியின்மை தோன்றுவதை முன்கூட்டியே கட்டுப்பாட்டில் கொள்ள முயற்சித்தது. ஆகஸ்ட் 7 அன்று, காங்கிரஸ் செயற் குழு, மத்திய பம்பாயின் ஒரு மிகப்பெரும் திறந்தவெளிப் பிரதேசமான கொவாலியா டேங்க் மைதானத்தில் பிரமாண்டமான கூட்டத்தின் முன்னிலையில், “பிரிட்டனை முறையாக வெளியேறக்” கோரும் ஒரு வெகுஜன அஹிம்சைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானமொன்றை பற்றி ஆராய்ந்தது. அந்த செயற்குழுவில் இருந்த ஸ்ராலினிச உறுப்பினர்கள் தீர்மானத்தை பகிரங்கமாக எதிர்த்தமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரும் அரசியல் அடியாக விழுந்தது.

6-2. காங்கிரசால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து பம்பாய் கூட்டத்தில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி விநியோகித்த அதன் துண்டுப் பிரசுரம், விவசாயிகள் குழுக்கள் மூலம் நிலங்களைக் கைப்பற்ற வழிவகுக்கும் கிராமப்புற வரி-செலுத்தாமை மற்றும் வாடகை-செலுத்தாமை என்ற பிரச்சாரத்தின் ஆதரவுடன், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு பிரமாண்டமான பொது அரசியல் தாக்குதலுக்கு” அழைப்பு விடுத்தது. அவ்வாறு செய்ததன் மூலம், இந்தியத் தொழிலாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதத்தில் உள்ளடங்கியிருந்த ஆலோசனையை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி பின்பற்றியது: பெரிய பிரித்தானியாவின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டப் பாதையில், ஒரு சிறிய அடியையாவது முன் எடுத்து வைப்பதற்கு இந்திய முதலாளித்துவம் நெருக்கப்படும் நிலையில், அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் இயற்கையாகவே ஆதரவளிப்பர். ஆனால், அவர்கள் தமது சொந்த வழிமுறையிலேயே அதை ஆதரிப்பர்: பெரும் கூட்டங்கள், துணிவான சுலோகங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்கு செய்வதோடு, சக்திகளின் உறவு மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் மேலும் தீர்க்கமான போராட்ட நடவடிக்கைகளுக்கு செல்வர். இதைச் சரியாக செய்வதற்கு பாட்டாளிகளின் கைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய ஜனத்தொகையில் ஆதிக்கம் செலுத்தும் விவசாயிகளை தம்பின்னால் அணிதிரட்டிக்கொள்வதற்கு, தொழிலாளர்கள் முதலாளித்துவத்திடமிருந்து முற்றிலும் சுயாதீனமாக இருப்பது இன்றியமையாததாகும்.” [13]

6-3. ஆகஸ்ட் 8 அன்று, “செய் அல்லது செத்து மடி!” என்று கிளர்ச்சியூட்டும் வகையில் உரையாற்றிய போதும், அந்தத் தீர்மானம் வைஸ்ராயை பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரும் என்பதே காந்தியின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆயினும், பிரிட்டிஷ் அரசு முழு காங்கிரஸ் தலைமையையும் கைது செய்து பதிலளித்தது. இந்த நடவடிக்கை நாட்டின் பல பாகங்களிலும் சீற்றம் கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த அலைகளை கட்டவிழ்த்துவிட்டது. இந்த எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு ஆதரவளிப்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் முஸ்லிம் லீக்கும் இந்து மகா சபையும் இணைந்துகொண்டன. காந்தி உட்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருக்க, இயக்கத்தின் தலைமையை காங்கிரஸ் சோசலிஸ்டுகள் பெற்றனர். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்களிடம் எந்தவொரு முன்னோக்கும் இருக்கவில்லை. அவர்கள் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு நிலைநோக்கை வகுக்காததோடு, அதற்கு மாறாக நாசவேலை மற்றும் விவசாய கெரில்லாவாதம் போன்ற நடவடிக்கைகளால் அதைப் பயனற்றதாக்கினர். ஆர்ப்பாட்டங்களுக்குள் தன்னை செலுத்திக் கொண்ட இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தொழிலாளர் மற்றும் மாணவர்களின் பக்கம் திரும்பியதோடு மும்பை, கல்கத்தா, சென்னை மற்றும் ஏனைய பெருநகரங்களிலான ஆர்ப்பாட்டங்களிலும் அல்லது அவற்றை ஏற்பாடு செய்வதிலும் பங்கெடுத்தது. அதனால் அது பெரும் விலைகொடுக்க நேரிட்டது. “பாசிஸ்டுகளுக்கு உதவி செய்யும் கிரிமினல்கள் மற்றும் ரவுடிகள்” என்று இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சிக்கு முத்திரை குத்திய ஸ்ராலினிஸ்டுகளின் உதவியுடன், பொலிசார் பல இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும் மூத்த தலைவர்களையும் கைது செய்தனர். கொடூரமான பொலிஸ் அடக்குமுறைக்கு மத்தியிலும் இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தில் பல மில்லியன் மக்கள் ஈடுபட்டதோடு இப்போராட்டம் பல மாதங்கள் தொடர்ந்தது. உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி, 1942 ஆகஸ்ட் முதல் 1943 மார்ச் வரையான காலப்பகுதியினுள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு 60,000 பேர் சிறை வைக்கப்பட்டனர். இந்த இயக்கம் பின்னடைவு கண்டதோடு, பிரிட்டன் ஜப்பானிய இராணுவத்தை தோற்கடித்த பின்னர், காங்கிரஸ் எஞ்சிய யுத்தகாலம்வரை தனது இந்தியாவை விட்டு வெளியேறு கோரிக்கையை கிட்டத்தட்ட முற்றாக கைவிட்டுவிட்டது.

6-4. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி முன்னெடுத்த இடைவிடாத போராட்டம் பிராந்தியம் முழுக்க ட்ரொட்ஸ்கிசத்தின் சிறப்பை பரவச் செய்தது. தடை செய்யப்பட்ட நிலைமை, பொலிஸ் சட்ட நடவடிக்கை மற்றும் யுத்த காலத்தில் நான்காம் அகிலத்தில் இருந்து தனிமைப்பட்டிருந்தமை போன்ற கடினமான நிலைமைகளின் கீழும், காங்கிரசுக்கோ அல்லது காங்கிரஸ் சோசலிஸ்டுகளுக்கோ இம்மியளவும் அரசியல் சலுகை வழங்காமல், அது தனது கவனத்தை இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தில், எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் பக்கம் குவியச்செய்திருந்தது. எவ்வாறெனினும், புரட்சிகர அலை பின்னடைவைக் கண்ட நிலையில், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே கூர்மையான அரசியல் வேறுபாடுகள் தோன்றின. லங்கா சம சமாஜக் கட்சியை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியாக மாற்றுவதிலேயே இந்த வேறுபாடுகளின் மூலத் தோற்றம் காணப்பட்டது. இந்த மாற்றமானது ஒரு புதிய பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத அச்சை நோக்கிய ஒரு அடிப்படை நகர்வைக் குறித்ததோடு தவிர்க்க முடியாமல் உட்கட்சி பதட்டங்களை உருவாக்கியது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை ஒரு லெனினிசக் கட்சியாக மீள்வடிவமைக்கும் டொரிக் டி சொய்ஸாவின் முயற்சிகளை பிலிப் குணவர்த்தனா எதிர்த்ததைச் சூழவே ஆரம்ப முரண்பாடுகள் தோன்றின. கொழும்பில் உள்ள “குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள்” “வெகுஜனங்களில் இருந்து முழுமையாக துண்டித்துக்கொள்ளும் ஒரு குறுகிய சதிகாரக் கும்பலுக்குள்” கட்சியைத் திருப்பிவிட்டதாக பம்பாயில் இருந்த பிலிப் குணவர்த்தனா கண்டனம் செய்தார். 1942ல், அவரும் என்.எம். பெரேராவும் ஸ்தாபித்த தொழிலாளரது எதிர்ப்புப் பிரிவு, தொழிற்சங்கவாதிகளின் ஒரு தட்டை ஒன்றுதிரட்டியது. யுத்தத்தின் போது இலங்கையில், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் தலைமறைவு வேலைகளுக்கு தலைமை வகித்த டி சொய்ஸா, போல்ஷிவிக் லெனினிச பிரிவொன்றை அமைப்பதன் மூலம் பதிலிறுத்தார்.

6-5. இத்தகைய குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகள் முதலில் தெளிவற்றதாக இருந்த அதேவேளை, இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தின் முடிவு மிகவும் அடிப்படையான முரண்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் அளவு மற்றும் அபிவிருத்தியையிட்டு பொறுமையிழந்த பிலிப் குணவர்த்தனாவும் என்.எம். பெரேராவும், 1943ல் சிறையில் இருந்தவாறே ஆவணம் ஒன்றை வெளியிட்டனர். “இந்தியப் போராட்டம் – அடுத்த கட்டம்” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த ஆவணம், தெளிவின்றி வரையறுக்கப்பட்ட ஒரு “ஐக்கிய புரட்சிகர முன்னணியில்” காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு குட்டி முதலாளித்துவ அமைப்புக்களுடன் ஒரு கொள்கையற்ற கூட்டிணைவுக்காக வாதிட்டது. இந்தத் திட்டமானது இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கைவிட்ட சமசமாஜவாதத்தை நோக்கி மீண்டும் குறிப்பிடத்தக்க வகையில் பின்வாங்குவதாய் இருந்தது. சென்னையில் 1944ல் நடந்த மாநாட்டில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி, பிலிப் குணவர்த்தனா- என்.எம். பெரேரா ஆவணத்தை திட்டவட்டமாக நிராகரித்தது. “இந்தப் பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு தெளிவான புரட்சிகர வேலைத்திட்டத்துடன் இன்று இந்தியாவில் இருக்கின்ற ஒரே கட்சியை (அது சிறியதாக இருந்தாலும்) கலைத்துவிடுவதையும், மற்றும் அதன் இடத்தில் ஒரு பரந்த மத்தியவாதக் கட்சியை உருவாக்குவதையுமே விளைவாக்கும் என நாம் நம்புகிறோம்” என அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரகடனப்படுத்தியது.[14] எவ்வாறெனினும், இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருந்ததோடு, யுத்தம் முடிந்த பின்னர் பெரும் பலத்துடன் வெளிப்படவிருந்த அரசியல் பிரச்சினைகளின் முன்னோடியாகவும் இருந்தன.


[13]

[(லியோன் ட்ரொட்ஸ்கியின் கட்டுரைகள்) Writings of Leon Trotsky (1939-40) பாத்பைன்டர், பக்கம் 33]

[14]

[Tomorrow is Ours நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. பக்கங்கள் 170-171]