Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர எழுச்சிகளை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்தது

7-1. யுத்தத்தின் இரத்தக்களரி பயங்கரங்கள் யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர எழுச்சிகளை ஏற்படுத்தும் என்ற ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பு, ஆசியா பூராவும் நிரூபிக்கப்பட்டது. ஜப்பானிய ஏகாதிபத்தியமானது சீனா, கொரியா மற்றும் அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஏனைய நாடுகளில் முன்னெடுத்த படுகொலைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த குற்றவியல் வழிமுறையுடன் சமாந்தரமாக இருந்தது. அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்புக்களை அதிகப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தீ பரவச்செய்யும் குண்டுகளை அதிகளவில் பயன்படுத்துவது உட்பட, ஜப்பானிய நகரங்கள் மீதான அமெரிக்காவின் உக்கிரமான குண்டுத் தாக்குதல்கள், 1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசுவதுடன் உச்சகட்டத்தை அடைந்தது. இந்தக் கடைசி இரு அட்டூழியங்களதும் பிரதான குறிக்கோள், புதிய ஆயுதத்தின் அழிவுகரமான பலத்தை சோவியத் ஒன்றியத்துக்கு எடுத்துக்காட்டுவதுடன், சோவியத் இராணுவங்கள் சீனா மற்றும் கொரியாவுக்குள் துரிதமாக முன்னேறிக்கொண்டிருந்த நிலையில், பசுபிக்கில் இடம்பெற்ற யுத்தத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவருவதுமாகும். பெருமந்தநிலையின் தீவிரமான சுமைகளைத் தொடர்ந்து, ஆறு வருடகால ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம், மனித குலத்தின் கண்களின் எதிரில் முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தியது. மதிப்பிழந்த ஆளும் வர்க்கங்கள் மீண்டும் தமது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க எடுத்த முயற்சிகள், தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறுதியான எதிர்ப்பையும் உலகம் பூராவும் புரட்சிகர எழுச்சிகளையும் தூண்டிவிட்டன.

7-2. இடைமருவு வேலைத்திட்டம் விளக்கியது போன்று, புரட்சிகரத் தலைமையே மையப் பிரச்சினையாக இருந்தது. யுத்தத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் உத்வேகத்துடன் போராடிய அதேவேளை, ஜனநாயக சக்திகள் என சொல்லப்படுபவர்கள், பாசிஸ்டுகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளாலும் நான்காம் அகிலத்தின் பகுதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சளைக்காத ஒடுக்குமுறைகளால் நான்காம் அகிலம் கடுமையாக பலவீனமடைந்திருந்தது. மேலும், நாஜிக்கள் மீதான செஞ்சேனையின் வெற்றிகளால் யுத்தத்தில் இருந்து சோவியத் அதிகாரத்துவம் பெருமிதம் பொங்க வெளிவந்தது. ஆயினும், மேற்கில் வெற்றிகரமான புரட்சிகள், தனது ஆட்சிக்கு எதிராக சோவியத் தொழிலாள வர்க்கத்தின் இயக்கங்களுக்கு செயலூக்கம் கொடுக்கும் என ஸ்ராலின் அச்சம் கொண்டார். கிழக்கு ஐரோப்பாவில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சோவியத் செல்வாக்கை அனுமதிப்பதற்கு பிரதியுபகாரமாக முதலாளித்துவத்தை பேணிக்காப்பதற்கு உதவுவதன் பேரில், ஸ்ராலின் தெஹ்ரானிலும் (1943) யால்டாவிலும் (1945 பெப்பிரவரி) மற்றும் போஸ்ட்டாமிலும் (ஜூலை 1945) வைத்து, ரூஸ்வெல்ட் மற்றும் சேர்ச்சிலுடனும் ஒரு தொகை உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டார். பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் முதலாளித்துவக் கட்சிகள் பாசிசத்துக்கு மறைமுக ஆதரவு கொடுத்தும் வெளிப்படையாக ஒத்துழைத்தும் முழு சமரசம் செய்து கொண்டதோடு, இந்த நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், மொஸ்கோவின் கட்டளைகளைப் பின்பற்றி, எதிர்ப்புப் போராளிகளை நிராயுதபாணிகளாக்கி, முதலாளித்துவ அரசாங்கங்களில் அமைச்சுப் பொறுப்புகளோடு இணைந்துகொண்டதோடு தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன நடவடிக்கையையும் ஒடுக்கின. பிரான்சில் முதலாளித்துவ அரசாங்கத்தின் பாகமாக இருந்த பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி, அல்ஜீரியா மற்றும் இந்தோசீனா உட்பட பிரான்சின் காலனிகளின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்தது. ஜப்பானில், இதற்குச் சளைக்காத துரோகத்தனத்தை தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான எழுச்சியைத் தணிப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றியது. ஸ்ராலினிச இரண்டு-கட்ட தத்துவத்தின் விபரீதமான வடிவத்தின் அடிப்படையில், ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்க ஆக்கிரமிப்பானது “ஜனநாயகப் புரட்சியை” முன்னெடுக்கின்றது எனக் கூறிக்கொண்டதோடு, இந்த அடிப்படையில், ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தரின் கட்டளைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் வேலை நிறுத்த இயக்கத்தை அடிபணியச் செய்தது. இதன் விளைவாக, முதலாளித்துவ ஆட்சி காப்பாற்றப்பட்டதோடு ஜப்பான் ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கியமான பங்காளியாக மாறியது.

7-3. ஆசியாவில் காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்களை காட்டிக்கொடுப்பதில் ஸ்ராலினிசத்தின் பாத்திரம் முதலாளித்துவத்தை பூகோள ரீதியில் மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கு இன்றியமையாததாக இருந்தது. யுத்தத்தின் முடிவானது பிராந்தியம் பூராவும் வெகுஜனங்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களை நிகரற்ற அளவில் உக்கிரமாக தூண்டிவிட்டது. இந்த மோதல்களில் பழைய ஐரோப்பிய சக்திகள் ஜப்பானால் நசுக்கித் தோற்கடிக்கப்பட்டமை, அவர்களது ஆசிய பேரரசுக்கான அடித்தளத்தை நொருக்கி விட்டிருந்தது. ஒவ்வொரு விடயத்திலும், அது இந்தோசீனாவில் பிரான்ஸ் என்றாலும் சரி, இந்தோனேஷியாவில் டச்சு என்றாலும் சரி, அல்லது மலேசியாவில் மற்றும் இந்திய உபகண்டத்தில் பிரிட்டன் என்றாலும் சரி, தமது நிலைகளில் கட்டுப்பாட்டை புதுப்பிக்க முன்னாள் காலனித்துவ ஆட்சிகள் எடுத்த முயற்சிகள், வெகுஜன எதிர்ப்பைச் சந்தித்தன. சீனா மற்றும் கொரியாவில் ஜப்பானிய ஆட்சியின் வீழ்ச்சியானது அமெரிக்க ஏகாதிபத்தியம் பதவியிருத்த முயன்ற சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான பரந்த இயக்கங்களுக்கு எழுச்சியூட்டியது.

7-4. 1934ல் எழுதப்பட்ட யுத்தமும் நான்காம் அகிலமும் என்ற நூலில், கிழக்கில் காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்திய ட்ரொட்ஸ்கி விளக்கியதாவது: “அவர்களது போராட்டம் இரு மடங்கு முற்போக்கானது: பின்தங்கிய மக்களை ஆசியவாதம், பிரிவுவாதம் மற்றும் வெளிநாட்டு அடிமைத்தனத்தில் இருந்து பிரிக்கிறது, அவர்கள் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராக சக்திவாய்ந்த அடிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காலதாமதமான புரட்சிகள், தேசிய அரசுகள் புத்துயிர்பெறும் ஒரு புதிய சகாப்தத்தைத் திறந்துவிட இலாயக்கற்றவை என்பதை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு அரைக் காலனித்துவ நாடாகவும் இருந்த ரஷ்யாவில், காலங்கடந்து வந்த ஜனநாயகத் திருப்பம், சோசலிசப் புரட்சிக்கான அறிமுகமாக மட்டுமே இருந்தது போல், காலனிகளின் விடுதலையும் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு மிகப்பெரிய அத்தியாயமாக மட்டுமே இருக்கும்.” அந்த வகையில், யுத்தத்துக்குப் பிந்திய காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் ஜனநாயகக் கடமைகள், அனைத்துலக சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே அடையப்பட முடியும். ஆனால், அந்தப் பாதை ஸ்ராலினிசத்தால் தடுக்கப்பட்டுவிட்டது.

7-5. தென்கிழக்கு ஆசியா பூராவும், யுத்தத்துக்குப் பிந்திய காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களை தடம்புரளச் செய்வதில் ஸ்ராலினிசக் கட்சிகள் கருவிகளாக பயன்பட்டுள்ளன. இதன் நீண்ட விளைவுகளுக்கு தொழிலாள வர்க்கம் இன்னமும் விலை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பிராந்தியத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அரசுகளில் எதுவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத்தரத்துக்கான உழைக்கும் மக்களின் அபிலாசைகளை இட்டு நிரப்ப முடியாதவையாக இருக்கின்றன. இந்தோனேஷியாவில், இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி (Indonesian Communist Party -PKI), சுகார்னோ முதலில் டச்சுக்காரர்களுடனும் பின்னர் அமெரிக்காவுடனும் சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர் தலைமையிலான தேசிய இயக்கத்துக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்தது. சுதந்திரத்துக்கு அமெரிக்கா கொடுத்த ஆதரவுக்கு பிரதியுபகாரமாக, சுகார்னோ 1948ல் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியை இரத்தத்தில் மூழ்கடித்தார். இதில் ஆயிரக்கணக்கான இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆயினும் கூட இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி சுகார்னோவுடன் கூட்டணியை புதுப்பித்துக்கொள்வதை நிறுத்தவில்லை. அது 1965-66ல் சி.ஐ.ஏ. ஆதரவிலான இராணுவ சதிக் கவிழ்ப்புக்கும் பாதை அமைத்தது. இந்த சதிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுமாக குறைந்தபட்சம் 500,000 பேர் உயிரிழந்ததோடு மூன்று தசாப்த கால சர்வாதிகாரம் நிலவியது. மலாயாவில், மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் (Malayan Communist Party - MCP) ஜப்பான்-விரோத மலாயன் மக்கள் இராணுவமும் பிரிட்டிஷ் படைகள் மீண்டும் வருவதை பகிரங்கமாக வரவேற்றதோடு, புதிய பிரிட்டிஷ் நிர்வாகம் தன்னை மீண்டும் ஸ்தாபித்துக்கொள்ள முயற்சித்த போது அதனுடன் ஒத்துழைத்தன. 1948ல் தனது கட்டுப்பாட்டை மீண்டும் பலப்படுத்திக்கொண்ட பிரிட்டன், மலாயா கம்யூனிஸ்ட் கட்சி மீது திரும்பியதோடு அடுத்த தசாப்தம் பூராவும் அதன் கெரில்லாப் படைகளை ஈவிரக்கமின்றி நசுக்கியது. அதன் பின்னரே பழமைவாத மலாய் இனவாதக் கட்சியான ஐக்கிய மலாயா தேசிய அமைப்பிடம் ஆட்சியை கையளித்தது. அதிலிருந்து இக்கட்சியே மலேசியாவை மேலாதிக்கம் செய்துவந்தது. லீ குவன் யூவுக்கும் மற்றும் அவரது மக்கள் நடவடிக்கைக் கட்சிக்கும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தமையே, சிங்கப்பூரில் இன்றைய ஒரே-கட்சி பொலிஸ் அரசுக்கு அடித்தளம் அமைத்தது.

7-6. பிரான்ஸ் அதன் காலனிகள் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட செய்துகொள்வதற்கு ஹோ சி மின் தலைமையிலான இந்தோசீனா கம்யூனிஸ்ட் கட்சி (Indochinese Communist Party -ICP), குறிப்பான ஒரு குற்றவியல் பாத்திரத்தை ஆற்றியது. 1945 ஆகஸ்டில் ஜப்பான் சரணடைந்ததற்குப் பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு தற்காலிக அரசாங்கத்தை அமைத்ததோடு பிரிட்டன் மற்றும் பிரெஞ்சுப் படைகள் வந்திறங்கிய நிலையில் அந்த நாடுகளுடன் பேரம் பேசலுக்கு முயற்சித்தனர். தேசிய சுதந்திர இயக்கத்தின் வளர்ச்சியின் மத்தியில், லா லூட் குழு (La Lutte) மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களையும் சுயாதீனமாக அணிதிரட்டப் போராடினர். சைகோனில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன; மக்கள் குழுக்கள் பெருகத் தொடங்கின; ஒரு தற்காலிக மத்திய குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது. 1945 செப்டெம்பரில் பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்த நிலையில், மக்கள் குழுக்களை கலைத்த ஸ்ராலினிஸ்டுகள், தற்காலிக மத்திய குழுவையும் நசுக்கியதோடு லா லூட் தலைவர் டா து தௌ (Ta Thu Thau) உட்பட பெருந்தொகையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் கொன்றனர். சுதந்திரத்தைப் பாதுகாப்பதென்பதற்கு வெகுதூரத்தில், பிரான்சுடனான இந்தோசீனா கம்யூனிஸ்ட் கட்சியின் ஒத்துழைப்பு, தெற்கில் காலனித்துவ ஆட்சியை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு மட்டுமே உதவியது. யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர எழுச்சி காட்டிக்கொடுக்கப்பட்டதற்கும் அதைத் தொடர்ந்து பிரெஞ்சு மற்றும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஸ்ராலினிஸ்டுகள் செய்த சூழ்ச்சித்திட்டங்களுக்கும், வியட்னாம் மக்கள் துன்பகரமாக விலைகொடுக்கத் தள்ளப்பட்டனர். முப்பது ஆண்டுகால யுத்தம் நாட்டை அழித்ததோடு மில்லியன்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

7-7. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்பு, மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக யுத்தத்தில் இருந்து எழுந்த அமெரிக்காவுக்கு, உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஒரு தொடர் நடவடிக்கைகளை அமுல்படுத்த இயலுமையைக் கொடுத்தது. பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம், டாலரை தங்கத்துக்கு நிகராக ஒரு நிலையான வீதத்தில் நிறுத்துவதன் மூலம், டாலரை ஒரு உறுதியான பூகோள நாணயமாக ஸ்தாபித்தது; காப்புவரி மற்றும் வாணிபம் சம்பந்தமான பொது உடன்படிக்கை வர்த்தகத்தை விரிவாக்குவதையும் 1930களின் உள்நாட்டுத் தொழிலுக்கு பாதுகாப்பளிக்கும் அழிவுகரமான கொள்கைகள் மீண்டும் திரும்பிவருவதைத் தடுப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தது; அத்துடன் மேற்கு ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சேதமடைந்திருந்த பொருளாதாரங்களை மீளக் கட்டியெழுப்ப அமெரிக்கா கணிசமானளவு நிதியுதவி செய்தது. ஓரளவு முதலாளித்துவ ஸ்திரத்தன்மையை பெற்றுக்கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், “கம்யூனிசத்துக்கு” எதிராக அதன் “பனிப் போர்” எதிர்த் தாக்குதலை முன்னெடுத்தது. கிரேக்க மற்றும் துருக்கியின் வலதுசாரி ஆட்சிகளுக்கான அமெரிக்க ஆதரவு, மற்றும் மேற்கு ஐரோப்பாவை சோவியத்-எதிர்ப்பு கூட்டாக மாற்றிய மார்ஷல் திட்டத்தை முன்னெடுப்பது போன்றவை ஆரம்ப தாக்குதல்களாக இருந்தபோதிலும், அவை விரைவில் உலகமோதலாக விரிவடைந்தன. 1949 சீனப் புரட்சிக்கு பதிலிறுத்த அமெரிக்கா, சியோலில் அதன் வலதுசாரி எதேச்சதிகார ஆட்சியை தூக்கி நிறுத்த கொரியாவில் பிரம்மாண்டமாக இராணுவத் தலையீடு செய்தது. 1950-53ல் கொரிய யுத்தத்தில் மில்லியன் கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டதோடு தீவு நிரந்தரமாக பிளவுபட்டதாகவும் தழும்புபட்டதாகவும் ஆக்கப்பட்டது.