Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

சோவியத் ஒன்றியத்தின் பொறிவு

27-1. இந்த சர்வதேசிய முன்னோக்கு அனைத்துலகக் குழுவினை 1989ல் வெடித்த ஸ்ராலினிசத்தின் அரசியல் நெருக்கடிக்கு தயார்படுத்தியிருந்தது. சீனாவில் வெகுஜனப் போராட்டங்களுடன் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி வெடித்ததைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் பொறிந்ததுடன், அதன் உச்சகட்டமாக 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் அழிவு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் அடியாக விழுந்ததுடன் கணிசமானளவு நோக்குநிலை தவறலையும் குழப்பத்தையும் விளைவித்தது. முதலாளித்துவத்தின் வெற்றி ஆரவாரத்துக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் முடிவானது முதலாளித்துவ சந்தையின் வெற்றியையோ சோசலிசத்தின் முடிவையோ குறிக்கவில்லை என்று அனைத்துலகக் குழு மட்டுமே வலியுறுத்தியது. 1936ல் வெளியான “காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி” என்னும் எதிர்கால நிகழ்வினை எடுத்துக்காட்டிய தனது நூலில், ட்ரொட்ஸ்கி சோவியத் தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கிவீச ஒரு அரசியல் புரட்சியை நடத்தாவிடில், ரஷ்யப் புரட்சியின் எஞ்சியிருக்கும் சமூக வெற்றிகள் இறுதியாகக் அழிக்கப்படுவதோடு முதலாளித்துவ சொத்து உறவுகள் மீள்ஸ்தாபிதம் செய்யப்படும் என்பதை முன்னறிவித்திருந்தார். சோவியத் ஒன்றியத்தின் முடிவு சோசலிசத்தின் தோல்வியைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக, ஸ்ராலினிசத்தினதும் பூகோள உற்பத்தியின் தாக்கத்தின் கீழ் அதன் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் பிற்போக்கு தேசியவாத முன்னோக்கினதும் தோல்வியையே குறித்தது. உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை நெடுங்காலத்துக்கு முன்பே கைவிட்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம், தன்னை பூகோள முதலாளித்துவத்துடன் ஒருங்கிணைத்து, அதன் ஊடாக, முதலாளித்துவ தனியார் சொத்துடமையில் தனது சொந்த சிறப்புரிமைகளை ஆழப் பதியவைப்பதன் மூலமே சோவியத் பொருளாதாரத்தின் நெருக்கடிக்கும் வளர்ச்சிகண்டுவந்த தொழிலாள வர்க்கத்தின் அமைதியின்மைக்கும் பதிலிறுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, யுத்தத்துக்குப் பிந்திய ஒழுங்கின் பொறிவினதும் மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கும் திவாலான தேசிய அரசுக்கும் இடையிலான முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் உக்கிரமடைந்ததனதும் ஒரு விளைவே ஆகும். முதலாளித்துவத்துக்கு ஒரு புதிய செழிப்பான காலத்தை திறந்து விடுவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தினதும் அதன் தன்னிறைவு (சுய தேவை பூர்த்தி) தேசிய பொருளாதாரத்தினதும் முடிவு, தேசிய பொருளாதார ஒழுங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்த சகல கட்சிகளிதும் மற்றும் அமைப்புகளினதும் உருமாற்றத்தை அல்லது பொறிவை முன்னறிவித்தது. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் தீவிரமடைகின்றமை தவிர்க்கவியலாமல் ஆழமான பொருளாதார நெருக்கடி, போர்கள் மற்றும் புரட்சியின் ஒரு புதிய காலகட்டத்திற்கு வழிவகுக்கும்.

27-2. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவ மீட்சிக்கு தனது சொந்த பதிலிறுப்பை அபிவிருத்தி செய்யவியலாமல் போனதென்பது, பல்வேறு ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசிய அதிகாரத்துவங்களின் நெடுங்கால ஆதிக்கத்தினாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, 1930களில் ஸ்ராலின் மற்றும் அவரது அடியாட்களால் புரட்சிகர மார்க்சிசத்தின் மிகச்சிறந்த பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்டதாலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவுக்கு இழைக்கப்பட்ட பிரம்மாண்டமான சேதாரத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சோசலிசப் புரட்சி தன்னியல்பாக எழும் என்ற எந்தவொரு கருத்துருவுக்கும் எதிராக, அனைத்துலகக் குழுவின் 12வது நிறைவுப் பேரவைக்கு (Plenum) டேவிட் நோர்த் வழங்கிய அறிக்கை விளக்கியது: “வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடைவதானது புரட்சிகர இயக்கத்திற்கு பொதுவான அடித்தளத்தை வழங்குகிறது. ஆனால் அதன் அபிவிருத்திக்கு அவசியமாகின்ற, ஒரு உண்மையான புரட்சிகர சூழ்நிலைக்கான வரலாற்று அமைவை தயாரிக்கின்ற அரசியல், புத்திஜீவித்தன, இன்னும் சேர்த்துக்கொண்டால் கலாச்சார ரீதியான சூழலை அதனால் தானாகவே நேரடியாகவும் தன்னியல்பாகவும் உருவாக்கி விட முடியாது,”[63]. தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிசத்தின் மகத்தான அரசியல் கலாச்சாரத்தை மீளஸ்தாபிதம் செய்யும் பொறுப்பு அனைத்துலகக் குழுவின் தோள்களில் சுமத்தப்படுகிறது என்று அந்த அறிக்கை முடிவடைகின்றது. மலையெனக் குவிந்த பொய்களின் கீழ், ரஷ்யப் புரட்சியினதும் குறிப்பாக லியோன் ட்ரொட்ஸ்கியின் வேலைகளினதும் முக்கியத்துவத்தை புதைத்து விட முயன்ற, “சோவியத்துக்குப் பிந்தைய பொய்மைப்படுத்தல் பள்ளி” என்று அனைத்துலகக் குழுவால் வகைப்படுத்தப்பட்ட, பல்வேறு கூறுகளை முறையாக அம்பலப்படுத்துவதே அனைத்துலகக் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் இன்றியமையாத அங்கங்களாக இருந்தன.

27-3. கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் குடியரசுகளிலும், ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி, அந்நிய முதலீட்டுக்குத் துரிதமாக திறந்து விடப்படுவதற்கும், அரும்பிவந்த அரசியல் கொள்ளைக் கூட்டத்தால் அரசு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப்படுவதற்கும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் திகைப்பூட்டும் வகையில் சரிந்து போவதற்கும் வழிவகுத்தது. சீனாவில் முதலாளித்துவ மீட்சி நிகழ்வுப்போக்கு இன்னும் நெடியதாய் இருந்தது. புரட்சி நடந்து வெறும் 23 ஆண்டுகளே கடந்திருந்த நிலையில், 1972ல் மாவோவாத ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு கூட்டிணைவுக்குச் சென்றமை, ஏறத்தாழ சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஒரு கூட்டணிக்கும் சீனாவின் பொருளாதார உறவுகளை மேற்குடன் மீள் ஸ்தாபிதம் செய்துகொள்வதற்கும் வழி வகுத்தது. 1978ல் டெங் சியாவோபிங் ஆட்சிக்கு வந்த பின்னர், சீனாவை வெளிநாட்டு முதலீட்டுக்குத் திறந்துவிடுவதும் முதலாளித்துவ சந்தை உறவுகளை மீட்பதும் ஆரம்பிக்கப்பட்டமை, தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சிகண்டுவந்த எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. 1989 ஜூனில் தியனென்மென் சதுக்க ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக நசுக்கப்பட்ட உடன், அனைத்துலகக் குழு வெளியிட்ட “சீனாவில் அரசியல் புரட்சியின் வெற்றிக்கு” என்ற தலைப்பிலான அறிக்கை விளக்கியதாவது: “சீனாவில் முதலாளித்துவ மீட்சிக்கும் மற்றும் அதன் பொருளாதாரத்தை உலக ஏகாதிபத்திய கட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்பதற்கும் பெய்ஜிங் ஸ்ராலினிஸ்டுகள் திட்டமிட்டு செயற்பட்டு வந்த ஒரு தசாப்த காலத்தின் அரசியல் உச்சகட்டமே கடந்த வார மக்கள் படுகொலைகளாகும். பெய்ஜிங் அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் பயங்கரத்தின் பிரதான நோக்கம், சீன வெகுஜனங்களை பயமுறுத்துவதும் சீனப் புரட்சியின் சமூக வெற்றிகளை அது வேண்டுமென்றே அழிப்பதற்கு எதிராக எழும் அனைத்து எதிர்ப்புக்களையும் நசுக்குவதுமே ஆகும்.”[64] இந்த அடக்குமுறையைத் தொடர்ந்து, தொழிலாள வர்க்கத்தை அடக்கவும் தனியார் இலாபத்தை உத்தரவாதப்படுத்தவும் சகல வழிமுறைகளையும் பயன்படுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிஸ் அரச ஆட்சி தயங்கப் போவதில்லை என்பதையே தியனென்மென் சதுக்கப் படுகொலைகள் உறுதிப்படுத்துகின்றன என்ற முடிவிற்கு, பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்கள் வந்த நிலையில், சீனாவுக்குள் வெளிநாட்டு முதலீடு பெருக்கெடுத்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் சீனாவில் முதலாளித்துவ மீட்சியுடன் அரச அதிகாரத்துவத்துடன் நெருக்கமுடைய ஒரு முதலாளித்துவத்தின் தோற்றம், சமூகப் பிளவு ஆழமடைதல், மற்றும் 1949க்கு முந்திய சீனாவின் சமூகக் கேடுகள் பல மீண்டும் தலைநீட்டியமை ஆகியவையும் கைகோர்த்து நடந்தன.

27-4. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, சோவியத் சந்தைகள், பொருளாதார உதவி மற்றும் பூகோள அரசியல் ஆதரவிலும் தங்கியிருந்த இந்தியாவுக்கு மட்டுமன்றி, ஆசியா முழுவதிலும் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களை கொண்டிருந்தது. 1991ல், அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்த காங்கிரஸ் அரசாங்கம், இந்திய தேசியப் பொருளாதாரக் கட்டுப்பாடு என்னும் கட்டமைப்பை கழற்றி, அந்நிய முதலீட்டுக்குத் திறந்து விடும் செயற்பாட்டைத் தொடங்கியது. இந்திய ஸ்ராலினிசக் கட்சிகள் புதிய நோக்குநிலையை ஆதரித்ததோடு மட்டுமன்றி, அவை அதிகாரத்தில் இருந்த மேற்கு வங்காளம் மற்றும் கேரளா மாநிலங்களில், சந்தை-சார்பு மறுசீரமைப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொறுப்பேற்றுக்கொண்டது. பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் இருந்த முதலாளித்துவ வர்க்கம், சோவியத் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அரசியல்ரீதியாக சமநிலையில் இருக்கவும், ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியுடன் “ஏகாதிபத்திய-விரோதிகளாக” காட்டிக்கொள்ளவும் கொண்டிருந்த திறனும் பனிப்போர் கட்டமைப்பின் பொறிவால் முடிவுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்துடன் வலுவான உறவுகளை வைத்துக் கொண்டு, அணிசேரா இயக்கம் என்பதன் முன்னணி உறுப்பினராகத் திகழ்ந்த இந்தியாவில் இந்த நிகழ்வுப்போக்கு குறிப்பாக மிகத் திட்டவட்டமானதாக இருந்தது. புது டெல்லி அமெரிக்காவுடனான தனது தொடர்புகளை திருத்தியமைத்துக்கொண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்ற தேசிய இயக்கங்களுக்கான தனது முன்னைய ஆதரவைக் கைவிட்டது.

27-5. முன்னாள் சோவியத் சார்பு நாடுகளிலும் சீனாவிலும் முதலாளித்துவத்தை அப்பட்டமாகத் தழுவிக் கொண்டமை, பிராந்தியத்தின் ஸ்ராலினிசக் கட்சிகளின் அரசியல் நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. அவை ஒன்று தாய்லாந்தின் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் முழுமையாக கவிழ்ந்து போயின, அல்லது பிலிப்பைன்சின் கம்யூனிஸ்ட் கட்சி போல் உடைந்துபோயின, அல்லது ஜப்பான் மற்றும் இந்தியாவில் போன்று அரசியல் அமைப்புமுறையினுள் தங்களை முழுமையாக ஒருங்கிணைத்துக்கொண்டன. இலங்கையில் “புலிப் பொருளாதாரத்துக்கு” விடுதலைப் புலிகள் அமைப்பு வக்காலத்து வாங்கி சிறந்த உதாரணமாக திகழ்ந்தது போல், பல்வேறு ஆயுதமேந்திய தேசிய விடுதலை இயக்கங்களும் தங்களது முன்னைய “சோசலிச” தோரணையை வேகமாகக் கலைத்து, சந்தை சித்தாந்தத்தை தழுவிக் கொண்டதோடு ஏகாதிபத்தியத்துடன் தங்களது சொந்த உறவை ஏற்படுத்திக்கொள்ள முயன்றன.


[63]

[டேவிட் நோர்த் எழுதிய “மார்க்சிசத்துக்கான போராட்டமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்”.] David North, “The Struggle for Marxism and the Tasks of the Fourth International,” Fourth International, Volume 19, Number 1, Fall Winter 1992, p. 74.

[64]

[நான்காம் அகிலம்] Fourth International, Volume 16, Nos. 1–2, p. 1.