Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ஐக்கிய முன்னணியும்

28-1. இலங்கையில் 1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் ஆரம்ப காலம் பூராவும் ஒரு தீவிரமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஆதிக்கம் செலுத்தியது. வடக்கில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் மூண்ட நிலையில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் அதிகரித்துவந்த அமைதியின்மையை, அரசு ஒடுக்குமுறை மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பேரினவாதப் பிரச்சாரமும் ஒன்றுசேர்ந்து தடம்புரளச் செய்தது. ஒப்பந்தத்தை ஆதரித்த அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கிதாரிகள் இலக்குவைத்தனர். வேலைநிறுத்தங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தால் அல்லது அதில் பங்கேற்றால் மரண தண்டனை பிறப்பிக்கும் இராணுவச் சட்டத்தை அரசாங்கம் 1988 நவம்பரில் திணித்தது. ஒப்பந்தத்தை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரணசிங்க பிரேமதாச 1988 டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தலில் வென்றதோடு உடனடியாக முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்த மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர முயற்சித்தார்.

28-2. ஐ.தே.க. அரசாங்கத்திற்கும் மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி.க்கும் இடையில் நடைமுறையிலிருந்த ஒரு கூட்டணி, அரச ஒடுக்குமுறையுடனும் அதேபோல் “தாயகத்தைப் பாதுகாக்க” மக்கள் விடுதலை முன்னணி அழைப்புவிடுக்கும் “வேலைநிறுத்தங்களில்” இணையாமல் அதன் கட்டளைகளை எதிர்க்கும் எவர் மீதும் மக்கள் விடுதலை முன்னணி தொடுத்த பாசிசத் தாக்குதல்களுடனும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பேரினவாதப் பிரச்சாரத்துக்கும் எதிராக தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்குப் போராடிய ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். இந்த அடிப்படையில் 1988 ஜூன் மாதத்தில் மத்திய வங்கி ஊழியர் சங்கத் தலைமையை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வென்றது. அதன் நிலைப்பாட்டின் விளைவாக, பொலிஸ் சோதனைகள் மற்றும் கைதுகள், அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் தாக்குதல்களையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்கொண்டது. மக்கள் விடுதலை முன்னணி குண்டர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று உறுப்பினர்களை கொன்றனர். 1988 நவம்பர் 12 அன்று ஆர்.ஏ. பிட்டவெலவும் 1988 டிசம்பர் 23 அன்று பீ.எச். குணபாலவும் 1989 ஜூன் 23 அன்று கிரேஷன் கீகியனகேயும் கொல்லப்பட்டனர்.

28-3. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அனைத்துலகக் குழுவில் உள்ள தனது சகோதரக் கட்சிகளுடன் ஒத்துழைத்து, அரச ஒடுக்குமுறையில் இருந்தும் மக்கள் விடுதலை முன்னணியின் தாக்குதல்களில் இருந்தும் தொழிலாளர்களையும் அவர்களது அமைப்புகளையும் பாதுகாக்க உடனடியான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சகல தொழிலாள வர்க்கக் கட்சிகளதும் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கு 1988 நவம்பரில் பிரச்சாரமொன்றை ஆரம்பித்தது. தொழிலாள வர்க்க கட்சிகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி போன்ற இலங்கை முதலாளித்துவத்தின் கட்சிகளிடம் இருந்து பிரிவதற்கும் “அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் வர்க்க வலிமையை” அணிதிரட்டுவதற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழைப்பு விடுத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது தொழிலாளர்களது பாதுகாப்புப் படைகள் மற்றும் நடவடிக்கைக் குழுக்கள், கூட்டு மறியல் போராட்டங்கள் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்யவும் அழைப்பு விடுத்ததோடு, மிகச் சிரமமான சூழ்நிலையிலும் தனது கோரிக்கைகளுக்காக தொழிலாள வர்க்கத்தில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. ஐக்கிய முன்னணிக்கான அனைத்துலகக் குழுவின் சர்வதேசப் பிரச்சாரத்தின் பகுதியாக, ஆஸ்திரேலிய சோசலிச தொழிலாளர் கழகத்துடன் இணைந்து இரண்டு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு ஒரு விரிவான சுற்றுப் பயணமும் மேற்கொண்டனர்.

28-4. ஐக்கிய முன்னணிக்கான அழைப்பானது அதை ஏகமனதாக எதிர்த்த சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்கு மன்னிப்பு வழங்குவதை எந்த வகையிலும் அர்த்தப்படுத்தவில்லை. அவை அனைத்தினதும் சார்பாகப் பேசிய நவ சம சமாஜக் கட்சி, தான் “புதிய பாட்டாளி வர்க்க சீர்திருத்தவாத வெகுஜனப் போக்கு” என போலியாக வருணித்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்தமைக்காக, ஐக்கிய முன்னணியை ”குறுங்குழுவாத” மற்றும் “தீவிர-இடது” எனக் கண்டனம் செய்தது. ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அமைத்துக்கொண்ட நவ சம சமாஜக் கட்சியின் சொந்த “ஐக்கிய சோசலிசக் கூட்டணி” மக்கள் முன்னணிவாதத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாய் இருந்தது. ஐ.தே.க. அரசாங்கத்திடம் இருந்தும் அரசு எந்திரத்திடம் இருந்தும் பாதுகாப்புப் பெறுவதை இது இலக்காகக் கொண்டிருந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது பதிலில் எச்சரித்தது: “முதலாவதாக இது [ஐக்கிய முன்னணியை நிராகரிப்பது], தனது வர்க்க எதிரிக்கு எதிராக தொழிலாள வர்க்கம் எடுக்கும் நடைமுறை நடவடிக்கைகளின் செயலூக்கமிக்க அமைப்பிற்கு முற்றிலும் விரோதமான ஒரு நடவடிக்கை ஆகும். இரண்டாவதாக, இது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வேலைத்திட்டங்களின் மீது உருவாக்கப்பட்ட முன்னணிகளுடன் கட்டிப் போட்டு, பலவீனப்படுத்துவதோடு அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதுடன், தொழிலாள வர்க்கத்தையும் ஏழை விவசாயிகளையும் ஒரு இரத்த ஆற்றில் மூழ்கடிப்பதற்கான வாய்ப்பையும் வர்க்க எதிரிக்கு உருவாக்கித் தருகிறது”. “இடது” கட்சிகள், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எந்தவிதத்திலும் விமர்சிப்பதைக் கைவிட்டு அதற்குப் பிரதியுபகாரமாக ஆயுதங்களை பெற்றுக் கொண்ட அதே வேளை, இந்தத் துரோகத்துக்காக நூற்றுக்கணக்கான போர்க்குணம் மிகுந்த தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் தங்கள் உயிரால் விலை கொடுத்தனர்.