Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் விவசாயிகளும்

29-1. தெற்கில் சமூக அமைதியின்மை பெருகுவதை எதிர்கொண்ட ஜனாதிபதி பிரேமதாச, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக ஒரு திட்டவட்டமான பொது நிலைப்பாட்டை எடுத்து, இந்தியத் துருப்புகள் 1989 ஜூலை அளவில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரினார். 1989 ஜூன் மாதத்தில் விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்களும் விநியோகித்த அவர், அதன் மூலம் இந்திய இராணுவத்திற்கு எதிரான அவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு உதவினார். மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் தோல்விகண்ட நிலையில், ஐ.தே.க. அதற்கு எதிராகவும், இன்னும் பரந்தளவில் அதன் சமூக அடித்தளமான சிங்கள விவசாயிகளுக்கு எதிராகவும் திரும்பியது. 1989 நவம்பரில் அதன் உயர்மட்டத் தலைவர் ரோஹண விஜேவீர உட்பட, அநேகமான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களை பாதுகாப்புப் படைகள் கைது செய்ததுடன் கொடூரமாகப் படுகொலையும் செய்தன. இந்தப் படுகொலைகள், அடுத்த இரண்டாண்டுகளில் கிராமப்புற மக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினராலும் அவர்களோடு தொடர்புபட்ட கொலைப் படைகளாலும் முன்னெடுக்கப்படவிருந்த ஏறத்தாழ ஒரு யுத்தத்தின் ஆரம்பமாக இருந்தது. ஒரு மதிப்பீட்டின்படி இதில் 60,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

29-2. இலங்கை ஆளும் வர்க்கத்தின் இந்த திடீர் திருப்பம் புதிய அரசியல் சவால்களை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன் நிறுத்தியதுடன் அவை அனைத்துலகக் குழுவுக்குள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இந்த அரச ஒடுக்குமுறையின் மிகப்பெரும் ஆபத்தைப் பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கவும் கிராமப்புற இளைஞர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு உத்வேகத்துடன் அழைப்பு விடுக்கவும் வேண்டிய அவசியம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு ஏற்பட்டது. இது வெறுமனே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களின் தலைவிதி குறித்த விடயம் அல்ல, மாறாக, அந்த அமைப்பு தங்கியிருந்த சமூக அடித்தளம் பற்றிய விடயமாகும். 1971 ஏப்ரல் எழுச்சியின் போது அது செய்ததைப் போலவே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது வேலையின் அத்தனை அம்சங்களிலும் அரசாங்கத்திற்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பைப் பராமரிப்பதோடு கிராமப்புற மக்களை பாதுகாப்பதில் வெற்றி காண வேண்டியிருந்தது. அதன் மூலம், சோசலிசப் புரட்சிக்கு அவசியமான தொழிலாள வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணியை உறுதியாக உருவாக்க வேண்டியிருந்தது.

29-3. தெற்கில் கிராமப்புற இளைஞர்கள் அரச படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதையும் வடக்கில் இந்திய இராணுவம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீதான போர் புதுப்பிக்கப்படுவதையும் எதிர்த்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு பூரணமான அறிக்கையை வெளியிட்டது. சிங்கள மற்றும் தமிழ் கிராமப்புற மக்களின் பாதுகாப்பானது, முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசின் வடிவத்தில் தொழிலாளர்களதும் மற்றும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை நிறுவுவதற்குமான போராட்டத்துடன் பிரிக்கமுடியாதளவு பிணைந்துள்ளது என்று அது விளக்கியது. வடக்கில் போரை ஆதரிப்பதற்காகவும் தெற்கில் கிராமப்புற மக்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அரசியல் ரீதியான மற்றும் சுயாதீனமான அணிதிரள்வைத் தடுப்பதற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத் தலைமைகளான லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சம சமாஜக் கட்சியையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் குற்றம் சுமத்தியது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகளின் ஜனநாயக அபிலாசைகளையும் அவர்களை நெருக்கும் பொருளாதாரத் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு இடைமருவுக் கோரிக்கைகளைக் கொண்ட ஒரு விரிவான வேலைத்திட்டத்தை இந்த அறிக்கை செய்து காட்டியிருந்தது. இந்த அடிப்படையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அரச படைகளால் முன்னெடுக்கப்படும் கொடுமைகளை அம்பலப்படுத்தவும் கிராமப்புற இளைஞர்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டுவதற்கும் ஒரு விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்தது.