Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

பரந்த மக்களின் போருக்குப் பிந்தையகால எழுச்சி

101. யுத்தத்திற்கு பிந்தைய காலம், சர்வதேச முதலாளித்துவத்தின் பொருளாதார மறுஸ்திரப்படுத்தல் வடிவமைப்பிற்குள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மற்றும் காலனித்துவ ஆட்சியால் நீண்ட காலம் அடக்கப்பட்டிருந்த மக்களின் மகத்தான எழுச்சியால் சிறப்புப் பெற்றது. ஆசியாவிலும், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் எண்ணற்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் காலனித்துவ தளைகளை தூக்கியெறிய பாரிய போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த பாரிய போராட்டங்கள் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கும் மற்றும் சீனப் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிகொடுப்புக்கு எதிராக டரொட்ஸ்கியின் போராட்ட படிப்பினைகளுக்குமான பரந்த தொடர்புகளை புலப்படுத்தியது. மீண்டுமொருமுறை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் நிலைநாட்டிய முக்கிய பிரச்சினைகளான நிலப்பிரபுத்துவத்தின் எஞ்சிய கூறுபாடுகளை அகற்றுதல், பெரும் பண்ணையின் மேலாதிக்கம், காலனித்துவ ஆட்சியின் முடிவு, தேசிய சுதந்திரம் நிறுவப்படல், வறுமையை ஒழித்து மக்களின் சமூக, பண்பாட்டு தரத்தை உயர்த்தி பொருளாதார வாழ்வமைப்பை சீராக்குதல் போன்றவை உண்மையான ஜனநாயக, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை கொண்ட புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் தலைமையின்கீழ்தான் சாதிக்கப்பட முடியும். ஆனால் அத்தகைய வேலைத்திட்டத்தின் மற்றும் முன்னோக்கின் புறநிலைத் தேவை, ஸ்ராலினிச கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட தேசிய முதலாளித்துவ வர்க்கங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக எழுந்தது.

102. 1947-48 இல் இந்தியாவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் காந்தி, நேரு மற்றும் முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியின் பேரழிவுமிக்க காட்டிகொடுப்புகள், நிரந்தரப் புரட்சியின் தத்துவம் சரியென்பதை நிரூபித்து காட்டியது. பெரும்பான்மையான இந்து இந்தியா, மற்றும் முஸ்லிம் பாகிஸ்தான் என்ற இந்திய பிரிவினையை ஏற்று கொள்வதற்கான இந்திய முதலாளித்துவத்தின் ஒப்புதல், பத்து மில்லியன் உயிர்களை விலையாக அளிக்க வேண்டிய வகுப்புவாத மோதல்களுக்கு உடனடியாக வழிவகுத்தது. பிரிவினைக்கான மோசமான மரபியம் யுத்தம், வன்முறை மற்றும் மக்களின் நீடித்த வறுமையை பல தசாப்தங்களாக பதிவு செய்து கொண்டுள்ளது. ஏதேனும் ஒருவகையில், முதலாளித்துவத்தின் தலைமையிலான தேசிய இயக்கங்களுக்கு தொழிலாள வர்க்கம் கீழ்ப்படுத்தப்பட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் பேரழிவைத்தான் ஏற்படுத்தியது. முதலில் முதலாளித்துவ தலைமையின் கீழ் சுதந்திரம், பின்னர் வருங்காலத்தின் எப்பொழுது என்று தெரியாத ஒரு புள்ளியில் சோசலிசம் என்ற தங்களின் வர்க்க ஒத்துழைப்புவாத "இரு கட்ட" போராட்ட தத்துவத்தை தொடர்ந்து முன்னெடுத்த ஸ்ராலினிச கட்சிகளால் இதில் முக்கிய பங்கு வகிக்கப்பட்டது. பாரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் அதன் அரசியல் மேலாதிக்கத்தை உருவாக்கி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டத்தை அது துல்லியமாக தடுத்து நிறுத்தியது.

103. ஸ்ராலினிஸ்ட்டுகளுக்கு முற்றிலும் மாறான விதத்தில், இலங்கையில் (பின்னர் ஸ்ரீலங்கா என்றாயிற்று) இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியில் (BLPI) ஒருங்கிணைந்திருந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம், ஏகாதிபத்தியத்திற்கும், தேசிய முதலாளித்துவத்தில் இருந்த அதன் முகவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் ஒரு கோட்பாட்டு ரீதியான மற்றும் சர்வதேச நிலைப்பாட்டை கையில் எடுத்தது. இது மேலோட்டமாக காலனித்துவ அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வந்த தேசிய முதலாளித்துவம் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்பட்ட அரசியல் உடன்படிக்கையை எதிர்த்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பங்கை கொண்டிருந்த மக்களில் ஒரு பிரிவினை அதாவது தமிழ் தோட்டத் தொழிலாளர்களை, துல்லியமாக வாக்கு உரிமையை இல்லாமற் செய்த ஒரு குடியுரிமை சட்டத்தை இலங்கை முதலாளித்துவம் இயற்றியபோது, இந்த நிலைப்பாடு உடனடியாக முற்றிலும் நிரூபணம் ஆயிற்று. சுதந்திரத்திற்கு பின்னர் இருந்து, தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட இயக்கத்தை தடுக்கவும், சமூக குரோதங்களை திசைதிருப்பவும் ஒரு வழிமுறையாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இனவெறியை சிங்கள முதலாளித்துவ வர்க்கம் முன்னிலைப்படுத்தியது