Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

உலக நிலைமையில் ஒரு மாற்றம்: முதலாளித்துவ எதிர்த்தாக்குதல்

172. 1968 மற்றும் 1975 க்கு இடைப்பட்ட காலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு தீவிர எழுச்சியை கண்டது. இடதுசாரி மற்றும் சோசலிச இயக்கங்கள் உலகெங்கிலும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டன. பிரிட்டிஷ் தொழிலாளர்கள் 1972 கோடையில் நடத்திய சக்தி வாய்ந்த ஒரு வேலைநிறுத்தத்தின் இடையே, Daily Telegraph முதலாளித்துவ அரசை தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாய் தூக்கியெறியப் போகிறது எனும் ஒரு பூதத்தை வெளிப்படையாக எழுப்பி, "யார் ஆளுவார்கள்?" என்ற தலைப்பிட்ட தலையங்கத்தை வெளியிட்டது. அமெரிக்காவில், AFL-CIO அதிகாரத்துவத்தின் உதவியுடன் ஊதியக் கட்டுப்பாடுகளை திணிக்க நிக்சன் நிர்வாகம் எடுத்துக் கொண்ட முயற்சியானது அதிகரித்த போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் பரவலான எதிர்ப்பினை அடுத்து தோல்வியுற்றது. ஒரு நாடு விட்டு ஒரு நாடாக, தொழிலாளர்கள் தங்களது வர்க்க நலன்களை பாதுகாப்பதற்கான தளர்ச்சியில்லாத முழு தீரத்தினை வெளிப்படுத்தினார்கள். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938ம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட மைய வரலாற்று பிரச்சினையான "பாட்டாளி வர்க்க தலைமையின் வரலாற்று நெருக்கடி" தீர்க்கப்படாமலேயே தொடர்ந்தது. பழைய ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயக தொழிலாளர் மற்றும் தொழிற் சங்க அதிகாரத்துவமானது, முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்திய மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும், நோக்குநிலை மாற்றவும், அடக்கவும் பப்லோவாத போக்குகளின் முக்கிய உதவியுடன் தங்களது செல்வாக்கான நிலைகளையும் பயன்படுத்தியது. தீவிர புரட்சிகர சாத்திய வளத்துடனான சூழல்கள் திசைதிருப்பப்பட்டன, தணிக்கப்பட்டன, வஞ்சிக்கப்பட்டன மற்றும் தோல்விக்கு இட்டுச் செல்லப்பட்டன. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் அரசியல் துரோகத்தின் விளைவுகள் தங்களது கொடிய வெளிப்பாட்டை சிலியில் கண்டன. அங்கு "சோசலிச" அலென்டே அரசாங்கமானது, கம்யூனிஸ்ட் கட்சியினால் ஆதரவளிக்கப்பட்டு, தொழிலாள வர்க்கம் ஆட்சியை பிடிப்பதை தடுக்க தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்தது. முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கியெறிவதை தடுக்கும் தனது முயற்சிகளின் ஒரு விளைவாக தனது உயிரையே அலென்டே இழக்க வேண்டி வந்தது என்பதானது, செப்டம்பர் 11, 1973ல் ஜெனரல் ஒகுஸ்டோ பினோசே தலைமையேற்ற இராணுவ புரட்சிக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததின் அரசியல் பொறுப்பை குறைத்து விடவில்லை.

173. தனது சொந்த அமைப்புகளாலேயே உருவாக்கப்பட்ட அரசியல் முட்டுக்கட்டையை உடைப்பதற்கு தொழிலாள வர்க்கத்தினால் இயலாமல் போனது முதலாளித்துவ வர்க்கத்திற்கு உடைந்த உலக ஒழுங்கினை ஸ்திரப்படுத்துவதற்கும் மறுஒழுங்கமைப்பதற்கும் தேவையான நேரத்தை கொடுத்தது. 1975களின் மத்தியில் பொருளாதார நெருக்கடியின் மோசமான கட்டம் கடந்து விட்டதன் வளர்ச்சியடைந்த அறிகுறிகள் இருந்தன. எண்ணெய் விலை நான்கு மடங்காக உயர்ந்ததால் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் பாய்ந்த டாலர்கள் ("பெட்ரோ-டாலர்கள்") சர்வதேச நாணய நிதியத்தின் உதவியால் மறுபடியும் முதலாளித்துவ வங்கி மையங்களுக்கே உலக நிதியாதார அமைப்புக்கு புதிய பணப்புழக்கத்தை கொடுக்கும் பொருட்டு திருப்பி விடப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு "மறுவீக்கமானது (reflation)", தொழிலாள வர்க்கத்தின் மீது புதுப்பித்த தாக்குதல்களுக்கான அடித்தளத்திற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த அதே வேளையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தற்காலிக சமரசங்களுக்கு ஏற்பாடு செய்து கொள்வதற்கு அவசியமாக இருந்த நிதி ஆதாரங்களை பிரிட்டனின் தொழிற் கட்சி பிரதமர் ஹரால்ட் வில்சனுக்கு வழங்கியது. செப்டம்பர் 1975ல் வில்சனின் அரசாங்கம் தொழிலாளர் புரட்சி கட்சியின் கல்வி மையத்தில் முன்கண்டிராத போலீஸ் சோதனைக்கு உத்தரவிட்டபோது, தொழிற்கட்சி அரசாங்கத்தின் எதிர்வினையாற்றும் அரசியல் நோக்கங்கள் நனவான வெளிப்பாட்டை கண்டன.

174. 1975 இன் பிற்பகுதிவாக்கில், நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச தீர்வினை நடைமுறைப்படுத்த முடியாத நிலையினால் உற்பத்தியான சமூக வெறுப்புணர்வுகளை சுரண்டத் தொடங்குவதற்கு சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்திற்கு இயலுமானதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் நவம்பர் 1975 இல், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோஃப் விட்லாமின் தொழிற்கட்சி அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு தாராண்மை முதலாளித்துவ கட்சி மேற்கொண்ட இடையூறு மற்றும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளால் உருவான அரசியல் நெருக்கடியில் கவர்னர் ஜெனரல் ஜோன் கெர் தலையீடு செய்தார். விட்லாம் அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க சிஐஏ கடுமையான முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்பது நன்கு அறியப்பட்டிருந்த ஒரு நிலையில் இந்த நடவடிக்கை நிகழ்ந்தது. கெர்ரின் "கவிழ்ப்பு முயற்சி" தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்ட எதிர்ப்புகளால் எதிர்கொள்ளப்பட்டது, விட்லாம் உறுதியாக நின்று கெர்ரினை வெளிப்படையாக எதிர்க்க தொழிலாள வர்க்கம் கோரியது. விட்லாம் கெர்ரினை "நீக்க" வேண்டும் என்ற அழைப்பு குரல் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தொழிலாளர் வர்க்க ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆஸ்திரேலியாவெங்கும் எழுப்பப்பட்டது. மாறாக, கவர்னர்-ஜெனரல் வசம் கோழைத்தனமாக சரணடைந்த விட்லாம் பதவி விலகினார். தொழிலாளர் அதிகாரத்துவங்களால் காட்டப்பட்ட இத்தகைய அரசியல் கோழைத்தனங்களானவை, தாங்கள் தொழிலாள வர்க்கத்தை எந்த ஆபத்துமின்றி தாக்கலாம் என்று சர்வதேச முதலாளித்து வர்க்கம் நம்புவதற்கு வழிவகுப்பதை மட்டுமே செய்தது. அர்ஜென்டினாவில் இராணுவம் பப்லோவாதிகளால் ஆதரிக்கப்பட்டிருந்த பெரோனிச ஆட்சியை கவிழ்த்து இடதுசாரிகளுக்கு எதிராக தாக்குதல் மிரட்டலுக்கு முன்முயற்சியளித்தது. இலங்கை மற்றும் இஸ்ரேலில் வலதுசாரி அரசாங்கங்கள் அதிகாரத்திற்கு வந்தன. இவை, ஏற்கனவே சிலியின் சர்வாதிகாரத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொருளாதார தத்துவங்களின் சொந்தக்காரரான மில்டன் ஃபிரைட்மனால் ஊக்குவிக்கப்பட்ட கீன்சிய விரோத நிதியாள்கையை கைக்கொண்டன.

175. மே 1979ல் மார்கரெட் தாட்சர் தலைமையிலான டோரி கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடித்தது. அவரது வெற்றிக்கான அரசியல் சூழல்கள் தொழிற்கட்சி அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளால் உருவாக்கப்பட்டன. தொழிலாள வர்க்க கோபமானது "அதிருப்தி குளிர்காலம்" ("Winter of Discontent") என்று அழைக்கப்பட்ட 1978 இன் பிற்பகுதி மற்றும் 1979 இன் ஆரம்ப காலப்பகுதியில் வேலைநிறுத்த அலைகளின் தொடர்ச்சியாக வெளிப்பட்டது. இந்த அனைத்து போராட்டங்களும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் சதிக்குள்ளானது. அமெரிக்காவில், 1977-78 இல் 100 நாட்களுக்கும் மேல் நீடித்த சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து கார்ட்டர் நிர்வாகமானது கூர்மையாக வலதின் பக்கம் நகர்வு கண்டது. சுரங்கத் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிடும் டாஃப்ட்-ஹார்ட்லி சட்டத்தை அரசாங்கம் ஆணை பிறப்பித்தும் வேலைநிறுத்த தொழிலாளர்களால் புறக்கணிக்கப்பட்டு அமலாக்கப்பட முடியவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மீதான அடுத்த தாக்குதல் மிகவும் கவனமான தயாரிப்பை கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் முடிவு செய்தது. ஆகஸ்ட் 1979ல், ஜனாதிபதி கார்ட்டர் போல் வோல்க்கரை ஃபெடரல் ரிசேர்வின் தலைவராக நியமித்தார். வோல்கர் வட்டி விகிதங்களை முன்கண்டிராத நிலைகளுக்கு உயர்த்தினார், வேலைவாய்ப்பின்மை அளவுகளை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துவதும், தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்துவதும், பெரிய அளவிலான வலதுசாரி தாக்குதலுக்கான தளத்தை தயாரிப்பதுமான நோக்கத்தை அது கொண்டிருந்தது. வர்க்க மோதலை நோக்கிய கூர்மையான திருப்பமானது குடியரசுக் கட்சி ரொனால்ட் றேகனை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்ததிலும் நவம்பர் 1980ல் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் உறுதியானது. றேகன் அரசாங்கம் ஜனவரி 1981இல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள்ளேயே, தொழில்முறை வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு (PATCO) விடுத்திருந்த வேலைநிறுத்த அழைப்புக்கு வேலைநிறுத்தம் செய்த 11,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டு றேகன் நிர்வாகம் பதிலிறுப்பு செய்தது. இந்த பிரம்மாண்ட தாக்குதலில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க AFL-CIO மறுத்துவிட்டது. இந்த நிகழ்வானது தொழிற்சங்க இயக்கம் அமெரிக்காவில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக சக்தியாக விளங்குவதின் முடிவுக் கட்டத்தின் ஆரம்பத்தை குறித்தது. வெளிப்படையாக வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கு நிறுவனங்களுக்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியது. இது தவிர, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வலதுசாரி அடக்குமுறையை நிறுத்துவதற்கு தாங்கள் எதுவும் செய்ய இயலாது என்பதையும் AFL-CIO தெளிவாய் கூறி விட்டது.

176. பெரும் முதலாளித்துவ மையங்களில் தொழிலாள வர்க்கத்தால் உணரப்பட்ட பின்னடைவானது ஏகாதிபத்திய நலன்களை தீவிரமான நடைமுறைப்படுத்த வழி அமைத்துக் கொடுத்தது. ஆர்ஜென்டினாவை மல்வினாஸில் இருந்து அகற்ற (ஃபால்க்லாண்ட் தீவுகள்) தெற்கு அட்லாண்டிக்கு பிரிட்டிஷ் கடற்படையை அனுப்பினார் பிரதமர் தாட்சர். றேகன் நிர்வாகம் ஆழமாக எல் சல்வடோர் மற்றும் நிக்கராகுவாவில் இடதுசாரி படைகளுடன் மோசமான சண்டையில் ஈடுபட்டது, ஆப்கானிஸ்தானில் முஜாகிதீனுடன் கூட்டுறவை தீவிரப்படுத்தியது, அமெரிக்க படைகளை லெபனானுக்கு அனுப்பியது, தனது சோவியத் விரோத "தீய இராஜ்ஜிய" பல்லவியை அதிகரித்தது, மற்றும் கிரெனடாவுக்கு படைகளை அனுப்பியது.