இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்


விஜே டயஸ்

ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும். பரந்த அளவிலான மக்களை பற்றிப் பிடித்த விதத்தில், யுத்த தீச்சுவாலைகள் வெடிப்பது நீண்ட காலமாக பொறிபறந்து வளர்ச்சி கண்டுவரும் தீப்பிளம்பு பற்றி எரியும் போதேயாகும்.

சகல தீப்பிளம்புகளும் எங்கும் எப்போதும் ஒரே பணியை ஆற்றுவதில்லை. சில தணிந்து போகலாம் அல்லது தணிக்கப்பட்டுவிடலாம். ஆனால், அவற்றின் சூட்டிலும் உத்வேகம் பெறும் வெவ்வேறு தீப்பொறிகள் யுத்தப் பிளம்புகளை தோற்றுவிப்பதில் வெற்றிகாணும். தொகை பண்பாக மாறுகின்றது என்ற இயக்கவியல் விதி இங்கு செல்லுபடியாகின்றது 

தமிழர் விரோத இனவாத யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பொலிஸ் பரிசோதகர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 1983ல் 13 பேர் வடக்கில் கொலை செய்யப்பட்டதால் ஆரம்பமானதாக சிங்கள இனவாதிகள் கூறிக்கொள்கிறார்கள். தாராளவாத முகமூடி போட்டுக் கொண்டுள்ள முதலாளித்துவக் கையாட்கள் இனவாத யுத்தம் 1983 கறுப்பு ஜுலையின் பெறுபேறு என்கின்றனர்.

வரலாற்றாசிரியர்களாக வேஷம் போடுவோரும் இனவாத யுத்தத்திற்கு இரு விதமான காரணங்களை காட்டுகின்றனர். சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த அதில் ஒரு சாரார் யுத்தத்திற்கான காரணங்களை பிரித்தானிய ஆட்சிக்காலம் வரை நீடிக்கின்றனர். இதில் பலர் இனவாத விதிமுறைகளை நடைமுறைக்கிடுகையில் இந்நாட்டு பிற்போக்கு சிங்கள-தமிழ் முதலாளித்துவத்தின் பொறுப்பை பூசி மெழுக முயற்சிக்கின்றனர். இங்கு ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து பிரிவினைக்கு முதலில் நடவடிக்கை எடுத்தது தமிழ் தேசிய இனத்தின் முதலாளிகளா அல்லது சிங்கள தேசிய இனத்தின் முதலாளிகளா என்பதை தேடுவது, முதலில் தோன்றியது முட்டையா அல்லது கோழியா என்பதை தேடுவது போன்றதாகும். ஏகாதிபத்திய அவசியங்களின்படி, பிரிவினையை எதிர்பார்த்த சிங்கள மற்றும் தமிழ் தேசிய இனங்கள் இரண்டினதும் முதலாளிகள் அனுமதி கிடைத்த இடத்திலேயே அதைப் பற்றிக்கொண்டனர்.

பிரித்தானியர்களின் ''பிரித்தாளும்'' விதிமுறை, சிங்கள-தமிழ் முதலாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் நடைமுறைக்கிடப்பட்ட ஒன்றல்ல. ஏகாதிபத்தியவாதிகளுக்கும் தேசிய முதலாளிகளுக்கும் இடையே இங்கு நிலவிய இருதரப்பு ஒத்துழைப்புக்குமான காரணம், அவர்களிடையே இருந்து வந்ந கருத்து வேறுபாடுகளை காட்டிலும் அவர்கள் இரு சாராரும் இந்நாட்டு சிங்கள தமிழ் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்தின் மூலம் எழுச்சி பெறும் சவாலைப் பற்றி பீதியும் எதிர்ப்பும் அடைந்ததேயாகும். அது வர்க்க உறவு மற்றும் வர்க்க ஆட்சி பற்றிய விடயமாகும்.

இரண்டாம் பிரிவைச் சேர்ந்த ''வரலாற்றாசிரியர்கள்'' 1948ன் பின்னைய யூ.என்.பி - ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்களின் இனவாதக் கொள்கையை யுத்தத்திற்கான காரணங்களாக காட்டுகின்றார்கள். இந்தப் பிரிவில் பெரும்பான்மையாக அடங்குவோர் இடதுசாரி வேஷம் போட்டுக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் ஆவர்.

1948ம் ஆண்டின் சுதந்திரம் எனப்படுவது, தேசிய சுதந்திரத்துக்கும் தேசிய ஐக்கியத்துக்கும் எதிராக ஏகாதிபத்தியவாதிகளும் தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்களும் முன்னெடுத்த சதியின் பெறுபேறு என்பதில் சர்ச்சைக்கு இடமில்லை. 1949ன் பிரஜா உரிமைச் சட்டம் போலவே 1956ன் சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கிய சட்டமும் சிங்கள முதலாளித்துவ ஆட்சியின் கீழ் நடைமுறைக்கிடப்பட்ட இனவாத பாகுபாடுகளுக்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

ஆனால், 1948ன் சுதந்திரம் எனப்படுவதைப் போலவே 1956ன் பிற்போக்கு மசோதாவுக்கும் எதிராக நின்று முதலாளித்துவ காட்டுமிராண்டி விதிமுறையைத் தோற்கடிக்கும் வல்லமை வாய்ந்த ஒரு அரசியல் சக்தி இருக்கவில்லையா? உண்மையிலேயே இருந்தது. இடதுசாரி வேஷம் போடும் தீவிரவாதிகள் அவ்வாறில்லை எனக் கூறுவது அவர்கள் பேணிக்கொள்ள முயலும் பழைய இடதுசாரி அரசியல் அமைப்புக்களின் காட்டிக்கொடுப்புக்கும் துரோகத்திற்கும் முந்தைய வரலாற்றுக்கே காலால் எட்டி உதைப்பதாகும்.

இந்தச் சம்மந்தப்பட்ட காலப்பகுதியில் சிறப்பாக போல்ஷிவிக்-லெனினிஸ்ட் சமசமாஜ கட்சி, 1950க்கு முன்னர், யூ.என்.பி. க்கும் சமரசவாத தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக இன பேதங்களுக்கு அப்பால் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்டுகின்றதும் வழிநாடாத்துகின்றதுமான முக்கிய அரசியல் சக்தியாக விளங்கியது. 1953 ஹர்த்தால் போராட்டம் காட்டியதை போல், அந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசும் வல்லமை கொண்டிருந்தது. இந்த அரசியல் இயக்கத்தின் பிற்காலத் துரோக நடவடிக்கைகளுக்கும் இனவாத யுத்தத்துக்கும் இடையே நிலவும் உறவைக் கவனத்தில் கொள்ளாமல், முதலாளித்துவ அரசாங்கங்களின் இனவாத விதிமுறைகளைக் குற்றம் சாட்டுவதானது புறநிலை ரீதியாக முதலாளி வர்க்கம் சம்பந்தமாக பரிந்துரைக்கும் விதிமுறைகள் மூலம் வரலாற்றை விளக்குவதாகும். அது திரிப்பே அன்றி வரலாறு அல்ல.

1960-70களில் அரசியல் கட்சி நடவடிக்கை

அரசியல் கட்சிகளின் பணி, புறநிலை அபிவிருத்திகளினுள் அகநிலை காரணிகளாக செயற்படும் வர்க்க ரீதியான அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் திட்டவட்டமான பணிகளை இட்டு நிரப்புகின்றன. அந்தப் பணியை நோக்காது வரலாறு சப்பந்தமாக நிஜ புரிந்துணர்வைப் பெறமுடியாது. வரலாறு சம்மந்தமான அத்தகைய விளக்கங்கள் புறநிலை வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

1964 சமாசமாஜ-ஸ்டாலினிசக் கட்சிகளின் காட்டிக்கொடுப்பு இல்லாது இருந்திருக்குமானால், 1948 ஏகாதிபத்திய சார்பு சதிக்கும் 1956 சி.ல.சு.க. இனவாத அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, பிற்காத்தில் மூண்ட இனவாத யுத்தத்தை தவிர்க்க இடம் இருக்கவில்லையா? அவ்வாறு இல்லை எனக் கூறுவது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கு பதிலீடு இல்லை எனவும் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி, மனித இனத்தின் அமைதியான வாழ்க்கைக்கு வழியமைக்க இப்புவியில் இடமில்லை எனவும் கூறுவதற்கு சமமானதாகும்.

சி.ல.சு.க. அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சமசமாஜக் கட்சி 1964ல் இழைத்த மாபெரும் காட்டிக்கொடுப்பினால் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக சோசலிச மாற்றீட்டுக்கு இந்நாட்டின் சிங்கள தமிழ் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களுக்கு இருந்து வந்த சோசலிச பதிலீட்டு தீர்வுக்கான வாய்ப்புக்கள் இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமன்றி 1970-75 முதலாளித்துவ கூட்டரசாங்க காலத்தில் அத்தகைய ஒரு முற்போக்கு பதிலீட்டுக்காக சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களிடையே வளர்ச்சி கண்டுவந்த முயற்சிகளை முதலாளித்துவ அரச பலத்தைக் கொண்டு இரத்தத்தில் மூழ்கடிக்கும் பொல்லாக முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தின் பங்காளி என்ற விதத்தில் சமசமாஜ மற்றும் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறின. இது 1970க்கு முன்னர் அகநிலைவாதிகளால் கண்டு கொள்ள முடியாது போன 1964ன் மாபெரும் காட்டிக்கொடுப்பின் அழிவுகரமான நடைமுறைப் பாத்திரத்தை வெளிக்காட்டியது.

எனவேதான் நாம் இனவாத யுத்தத்தின் வேர் அந்தக் காலப்பகுதியை நோக்கி வேரூன்றியுள்ளது எனச் சுட்டிக்காட்டுகின்றோம்.

1970-1977 காலத்தில் இருந்து வந்த முதலாளித்துவ கூட்டரசாங்கம் மூலம், சிறப்பாக 1972 தொடக்கம் அத்திவாரம் இடப்பட்டு யூ.என்.பி.யினால் அப்பட்டமான யுத்த மட்டத்துக்கு கட்டி எழுப்பப்பட்ட தமிழர் விரோத இனவாத யுத்தம், இன்று இரண்டாவது பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தின் கீழ் முன்னொருபோதும் இல்லாத காட்டுமிராண்டித் தனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது. அன்று சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இருந்த கூட்டரசாங்கத்துக்கு தோள்கொடுத்த சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூ.என்.பி.க்கு வழியமைத்துக் கொடுத்து மட்டுமன்றி, பின்னர் யூ.என்.பி. அரசாங்கம் முன்னெடுத்துச் சென்ற இனவாத யுத்தத்திற்கும் ஆதரவளித்தனர் என்பதை அறியாதோர் கிடையாது. 1987ல் இந்திய இராணுவத்தை தருவித்து, தமிழ்ப் பொதுமக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க யூ.என்.பி அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினை அங்கிகரித்தது வரையும் அவர்கள் இரத்தவெறி ஆர்வத்துடன் யூ.என்.பி. யின் இனவாத யுத்தத்தின் வக்கீல்களாகினர்.

தமிழ்ப் பொது மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கியும் அங்கிருந்து வவுனியாவின் சித்திரவதை முகாம்களுக்கும் குடும்பத்தோடு கலைத்த இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணரும் பொருட்டு, சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகள் மட்டுமல்லாது ஏனைய சகல குட்டி முதலாளித்துவ கட்சிகளும், தீவிரவாதக் குழுக்களும் தோள் கொடுத்தன என்பது அப்படி ஒன்றும் இரகசியம் அல்ல. நவசமசமாஜ கட்சி, மலையக மக்கள் முன்னணி, ஜே.வி.பி, மற்றும் ஜனதா மிதுரோவும் அவ்வாறே விடுதலைப் புலிகள் உட்பட சகல தமிழ் முதலாளித்துவ அமைப்புக்களும் சந்திரிகா குமாரதுங்காவை ஜனாதிபதியாக்க தோள் கொடுத்தனர். இந்த அடிபணிவானது ஜனாதிபதி வேட்பாளரின் குள்ளத்தனங்களைக் காட்டிலும், அடிபணிந்தவர்களது அரசியல் வங்குரோத்தினையும் முறைகேடுகளையும் எடுத்துக் காட்டியது. பிற்போக்கு தலைவிரித்தாடும் இந்த வங்குரோத்துக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக உறுதியாகப் போராடிய ஒரே அரசியல் அமைப்பு, அனைத்துலக குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்) மட்டுமே ஆகும்.

யுத்தத்தின் பேரழிவு

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தம் இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் முன்னேரு போதும் இல்லாத அளவுக்கு உக்கிரம் கண்டதன் மூலம் சிங்கள-தமிழ் தேசிய இனங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள பேரழிவு அளப்பரியதாகும்.

அரசாங்கத்தின் ஆண்டின் முழுச் செலவில் நூற்றுக்கு 25 வீதம் இப்போது மக்கள் படுகொலை யுத்தத்துக்கு செலவிடப்படுகிறது. அது ரூபா 5000 கோடிக்கும் அதிகமாகும். 1995ல் அரசாங்கம் சுகாதார செலவுகளுக்கு 1095 கோடி ரூபாய்களை செலவிட்டது. கல்விச் செலவுக்கு 1890 கோடி ரூபாய்களை செலவழித்தது. இதனை 1994ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 1995ல் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு செலவு நூற்றுக்கு 50 சதவீதத்தினால் அதிகரித்ததோடு பொதுமக்களின் உயிர்களைக் காக்கவும் எதிர்கால சந்ததியினரின் கண்களைத் திறக்கவும் அவசியமான சுகாதார, கல்வி சேவைகளுக்காகவும் செலவான செலவுடன் ஒப்பிடும்போது அதில் எந்தவிதமான அதிகரிப்பும் ஏற்படவில்லை. அந்நிலையில் 1996ல் வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்திற்கும் கல்விக்கும் ஒதுக்கப்பட்ட தொகையையும் விட, இனவாத யுத்தத்துக்கும் இராணுவமயமாக்கத்துக்கும் ஒதுக்கிய தொகை அதனையும் தாண்டி மேலும் 30 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. அந்த விதத்தில், இதனை 1994ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு 80 வீதத்தினால் அதிகரிக்க பொதுஜன முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் முதலாளித்துவ அரசியல் அடக்குமுறை இயந்திரமான இராணுவத்தினதும் பொலிசினதும் கொலைகாரப் படையாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசியங்களை இட்டுநிரப்ப செலவிடக்கூடிய பெருமளவிலான பணத்தைக் கொண்டே இந்த அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. 1985-95 க்கும் இடைப்பட்ட ஒரு தசாப்த காலத்தில் யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களின் கீழ் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1985-95 தசாப்தத்தில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையிலான அதிகரிப்பு கம்போடியா, ஈரான், பர்மா முதலான நாடுகளில் முறையே (நூற்றுக்கு) 153, 68, 54 வீதங்களாக விளங்கியது. ஆனால், அதே காலப்பகுதியில் இலங்கையில் இராணுவ-பொலிஸ் படைகளின் தொகை நூற்றுக்கு 483 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதாவது கம்போடியாவைக் காட்டிலும் மும்மடங்கு அதிகரித்துள்ளது. படைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் இன்று இலங்கை உலகில் 34வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டின் சனத்தொகையும் பரப்பளவும் சிறியது என்பதை மனதில் கொண்டால் இங்கு மக்கள் படுகொலைகள் உக்கிரம் கண்டுள்ளது பளிச்சிடும். 1985ல் 22,000 ஆக இருந்த இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை இன்று 126,000ஐத் தாண்டியுள்ளது. யுத்தத்தில் உயிரிழக்கும் படையினரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மட்டுமன்றி படைக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. இது இளம் தலைமுறையினரை மக்கள் படுகொலைக்காரர்களாகவும், மக்கள் படுகொலை யுத்தத்தின் பலிகடாக்களாகவும் மாற்றும் ஒரு பொறிக்கிடங்காக விளங்குகிறது.

யூ.என்.பி.யைப் போலவே பொதுஜன முன்னணி அரசாங்கமும் இளைஞர், யுவதிகளை திரட்டுவது அவர்கள் தம்மையும் பொது மக்களையும் வாழவைக்க வழிவகுக்கும் தொழில்களுக்கு அல்ல, மக்கள் படுகொலை இராணுவத்துக்கேயாகும். இளம் தலைமுறையினரின் சிருஷ்டித் திறன்மிக்க உற்பத்திச் சக்திகள் கசக்கிப் பிழியப்படுவதோடு அலுக்கோசு கொலைகாரப் படையாகவும் அவர்கள் மாற்றப்படுகின்றனர். அவர்களால் கொலைசெய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளதோடு கொலையுண்ட படையினரின் எண்ணிக்கை பல்லாயிரங்களைத் தாண்டியுள்ளது.

கொலையுண்ட லட்சக் கணக்கானோரிடையே முதலாளித்துவக் குடும்பங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கையை தனியொருவரின் கைவிரல்களைக் கொண்டே கணித்துவிடலாம். முதலாளி வர்க்கத்தினால் தமது சுய அவசியங்களுக்காக தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இரத்தக் களரியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு மேலும் சாட்சி வேண்டுமா? இனவாத யுத்தத்தினை மையமாக கொண்டு கட்டவிழ்க்கப்பட்டுள்ள இந்த மக்கட் படுகொலையின் முக்கிய பயங்கர பணி யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களினால் இட்டு நிரப்பபட்டுள்ள அதே வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தமிழ் இயக்கங்களின் துணை நடவடிக்கைகளின் கொடுமைகளை எந்த விதத்திலும் குறைந்தவையாக நோக்க முடியாது.

இனவாத யுத்தத்தினதும் அதன் பின்னணியில் வளர்ச்சி கண்டுள்ள ஒடுக்குமுறை அரச இயந்திரத்தினதும் நச்சுத்தனமான பெறுபேறுகள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மட்டுப்பட்டது என்ற கருத்து ஒரு பயங்கரமான நப்பாசையாகும் என்பது இதுகாறும் சகலரும் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்குத் தெளிவாகியுள்ளது.

சமூக சீரழிவு

இனவாத யுத்தம் என்பது முழு நாட்டையும் படுகொலைக்குள்ளும், பயங்கரங்களுக்குள்ளும் மூழ்கடிக்கும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாகும் என சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) மட்டுமே தோடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளன. இதன் உண்மை, 1988-90 காலப்பகுதியில் இடம்பெற்ற இளைஞர் படுகொலைகள் மூலம் நாடு பூராவும் பரந்து விரிந்து, இன்னமும் இடத்துக்கு இடம் வெறிபிடித்துள்ள அரசியல் காடைத்தன இயக்கங்கள் மூலமும், தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களது போராட்டங்களையும் ஊர்வலங்களையும் இரத்தத்தினால் மூழ்கடிக்க இராணுவ-பொலிஸ் அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலமும், மின்சாரசபை ஊழியர் போராட்டத்தில் தலைதுக்கியது போல் அவசரகால சட்ட ஆட்சியின் கீழ் தொடுக்கப்பட்ட மக்கள் படுகொலை இயக்கங்கள் மூலமும் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இவை யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் படுகொலை இயக்கங்களாகும். இவற்றுக்கு மேலதிகமாக முதலாளித்துவ அமைப்பின் கீழ் வாழ்க்கைக்கு வழியில்லாத நிலமைக்குள் தள்ளப்பட்டு குழம்பிப் போயுள்ள மக்கள், கொலைகள், கொள்ளைகளில் ஈடுபடுவதோடு தற்கொலை செய்துகொள்ளவும் திரும்பியுள்ளமை பொறுக்க முடியாத சமூகச் சீரழிவினை வெளிக்காட்டுகின்றது.

பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 1995 ஜுன் 1ம் திகதி தொடக்கம் 1996 ஜுன்1ம் திகதி வரையிலான ஒரு வருட காலத்துள் 1270 கொலைகள் இடம்பொற்றுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வருடத்தில் 2246 கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறானால் ஒரு நாளைக்கு 7 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. 565 வாகன கொள்ளையடிப்புகள் 43 கற்பழிப்பு சம்பவங்களும் இக்காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகக் கலாச்சார மரபுகள் மூலம் போடப்பட்டுள்ள தடைகளின் கீழ் கற்பழிப்பு பற்றிச் செய்யப்படும் முறைப்பாடுகள் இலங்கை போன்ற நாடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கில் கொள்ளும்போது இந்தப் புள்ளி விபரம் எந்தளவுக்குப் பரந்துபட்டுள்ள சமூக முறைகேடுகளின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. பொலிஸ் அறிக்கைகள் மூலம் அம்பலமாகும் இந்த சமூக அழிவு, வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இடம்பெற்றவை மட்டுமே. இனவாத யுத்தப் பிராந்தியமான வடக்கு-கிழக்கில் இடம்பெறும் கொலைகள், சமூக ஊழல்கள் இதைக் காட்டிலும் பிரமாண்டமானவை என்பதைக் கூற வேண்டுமா?

காதில் கேட்டவுடன் மெய்சிலிர்க்க வைக்கும் அளவிலான சமூகப் பேரழிவுகள் நடைபெறும் இன்றைய நிலைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்? சாதாரண பொதுமக்களா? அல்லது அம்மக்களைச் சிறைப்படுத்தி ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள முதலாளித்துவ அமைப்பும் அதன் ஆட்சியாளர்களுமா? அதனுடன் இணைந்த இன்னொரு கேள்வியும் உள்ளது. பொது மக்களின் பேரில் பேசிக்கொண்டு முதலாளித்துவ ஆட்சியின் மரணத்தை தள்ளிப்போட 1970-77 கூட்டரசாங்கத்துக்கும், யூ.என்.பி. க்கும் போல் இன்றைய பொதுஜன முன்னணி அரசங்கத்துக்கும் முண்டு கொடுத்துள்ள துரோக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்த நச்சுப் பொறுப்பில் இருந்து விடுபட முடியுமா? இந்தக் கேள்விகளை எழுப்புவதே அவற்றுக்கு சரியான பதில்களை வழங்கும். நாம் மேலும் கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம். இந்தத் துரோகத்துடன் கூட்டுச் சேராமல் யூ.என்.பி. முதலாளித்துவ கூட்டரசாங்க ஆட்சியை தூக்கி வீசவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்ந்து, சமுக சமத்துவத்தையும் நீதியின் அடிப்படையில் சமாதானமான சுபிட்சமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டும் பொது மக்களுக்கு வழிகாட்டிய கட்சி இருந்ததா? அதற்குப் பதில் ''நிச்சயமாக ஆம்'' என்பதேயாகும். அது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே ஆகும்.

நாம் மீண்டும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் முகம் கொடுக்கும் சமுகப் பேரழிவுகள் பற்றிய பிரச்சனைக்குத் திரும்புவோம். இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியது போல், இராணுவமயமாக்க வேகத்தைப் போலவே தற்கொலை சம்பவங்கள் அளவுகணக்கற்ற விதத்தில் அதிகரிப்பதிலும் இலங்கை உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. சனத்தொகையின் ஒவ்வொரு இலட்சத்துக்கும் 47 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 22பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்வோரிடையே அதிகமானோர் கடன் பளுவைச் செலுத்த முடியாமை, தனது குடும்பத்துக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்க முடியாமை, வேலை நீக்கம் போன்ற காரணங்களினால் இந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தாங்க முடியாததும் விடுவித்துக்கொள்ள முடியாததுமான தரித்திர நிலைமைக்குள் தாம் அகப்பட்டுக்கொண்டுள்ளோம் என்ற மன உளைச்சலில் அவர்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நெருக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இங்ஙனம் தற்கொலை செய்து கொள்வது அவர்களைப் பற்றிப்பிடித்துக் கொண்டுள்ள நாற்றம் கண்ட முதலாளித்துவ சமூக அமைப்புக்கு எதிராக சுமத்தப்படும் பலத்த குற்றச்சாட்டாகும்.

இந்தச் சமுகச் சீரழிவு முதலாளித்துவ அமைப்பின் கீழ் உக்கிரம் கண்டுள்ளதை அம்பலமாக்கும் இன்னோரு விடயம் நாடு பூராவும் சிறுவர் பாலியல் உழைப்பு பரந்து பட்டு வருவதாகும். 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 10000 க்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் இந்தக் மோசமான தொழிலுக்கு பலியாக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2001ம் ஆண்டளவில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை 80000ஐ தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முழுச் சனத்தொகையில் கிட்டத்தட்ட சரி அரைவாசிப் பேர் மாதம் ரூபா.500க்கும் குறைவான வருமானம் பெற்று வாழ்க்கையை ஓட்டும் நிலையில், அழிவுமிக்க பெறுபேறுகள் சகல வகையிலும் வெளிப்பாடாகத் தொடங்கி உள்ளது.

17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த யூ.என்.பி. அரசாங்கத்தைப் போலவே இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கமும் தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கும் பிரச்சாரங்களுக்கு அரச குண்டர் படைகளைப் பாவித்தும் நலன்புரிச் சேவைகளை வெட்டியும் பொதுமக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளுவதும் இனவாத யுத்தத்தின் கல் உருளையை பாவித்தாகும். யுத்தம் நடக்கும் வரை எதையும் கேட்க வேண்டாம்! ஆளும் வர்க்கத்தின் யுத்தக் கோஷம் அதுவே. இப்போது நடத்திவரும் மக்கட் படுகொலை யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொணர்ந்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதானது, சிங்கள-தமிழ் இரண்டு தேசிய இனங்களதும் பொதுமக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தை தொடுப்பதற்குத் தயாராகும் வரை நடாத்தும் மோசடியாகும்.

இந்த மோசடி ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் கீழும் அவ்வாறே ஆர்.பிரேமதாச, டீ.பீ.விஜயதுங்கவின் கீழும் பாவிக்கப்பட்டவையாகும். சகல துரோகத் தலைவர்களினாலும் தூக்கிப்பிடிக்கப்பட்ட சந்திரிகா குமாரதுங்க மீண்டும் திணிப்பதும் இந்த மோசடியையேயாகும்.

ஒரே வழி

இனவாத யுத்தத்தை நிறுத்தவும் தமிழ் முதலாளித்துவ பிரிவனைவாதத்தினை தோற்கடிக்கவும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை வறுமையில் இருந்து மீட்கவும் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிச சமத்துவத்தின் அடிப்படையில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வது அத்தியாவசியமாகும். இதற்காக சிங்கள, தமிழ் இரு தேசிய இனங்களையும் சேர்ந்த பொதுமக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டும் கட்சியை கட்டியெழுப்புவது சோசலிச சமத்துவக் கட்சியேயாகும்.

வேலையின்மை, வறுமை, தொற்றுநோய்கள் மற்றும் படிப்பறிவின்மை உக்கிரம் கண்டுவரும் நாட்டில் பொதுமக்களின் நலனுக்காக உடன் நிறுத்தப்பட வேண்டிய யுத்தத்தை தள்ளி வைத்துவிட்டு, ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி வர்க்கமும் அவர்களின் பொதுஜன முன்னணி அரசாங்கமும் ஊழையிடுவது கொலைகார இனவாத யுத்தத்தின் வெற்றிகளைப் பற்றியேயாகும். பொதுமக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது என்பதற்கு வேறு சாட்சியும் வேண்டுமா?

முதலாளி வர்க்கமும் அவர்களின் அரசாங்கமும் மக்களின் நலன்களையிட்டு எதுவித அக்கறையும் கொள்ளாததற்கு காரணம் அவர்கள் தப்பெண்ணங்களைக் கொண்டுள்ளதால் அல்ல. அவர்களது நடைமுறையைத் தீர்மானிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு காலாவதியாகிப் போய் மனித இனத்தின் மீது காட்டுமிராண்டித்தனத்தை திணிக்கும் ஒரு அமைப்பாக பரிணாமம் கண்டுவிட்டதனாலாகும். மக்கள் படுகொலை இனவாத யுத்தம் போலவே கொலைகார மோதுதல்களை தூண்டும் முதலாளித்துவ பிரிவினைவாதத்தையும் இதில் இருந்து வேறுபடுத்த முடியாது.

''தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தம் எமது யுத்தம் அல்ல'' என்ற தொழிலாளர் வர்க்க ஒடுக்கப்படும் மக்களின் நிலைப்பாட்டையும் மனோபாவத்தையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியாகத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. அது காட்டுமிராண்டித்தனம் கோலோச்சும் முதலாளி வர்க்கத்தின் யுத்தமாகும்.

முதலாளி வர்க்கமும் அவர்களின் யூ.என்.பி - பொதுஜன முன்னணி அரசாங்கமும் நடத்திவரும் மக்கள் படுகொலை யுத்தத்தின் பின்னணியைத் தயார் செய்து கொடுப்பதில் சமசமாஜ, ஸ்டாலினிச கம்யூனிஸ்ட், நவசமசமாஜ, இ.தொ.கா, ஜே. வீ. பி. தலைமைகள் இட்டு நிரப்பிய நச்சுத்தனமான அரசியல் பாத்திரத்துக்கு வெளியே இனவாத யுத்தத்தின் பிற்போக்கு பணியை புரிந்து கொள்ள முடியாது. இனவாத யுத்தத்தின் முக்கிய சிருஷ்டி பணியை இந்த துரோகத் தலைமைகளே இட்டுநிரப்பி உள்ளன.

இனவாத யுத்தத்திற்கான திட்டத் தயாரிப்புக்கள் செய்யப்பட்ட தருணத்தில் இருந்து யுத்தத்தை எதிர்த்து நின்று வந்த ஒரே அரசியல் அமைப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே (இப்போது சோசலிச சமத்துவக் கட்சி) என்பதை இங்கு குறிப்பிட்டு, அந்த இனவாத யுத்தச் சதியின் அடி வேரை தெளிவுபடுத்தும் பணியை அடுத்துவரும் பகுதிகளிடம் ஒப்படைத்து இந்தப் பகுதியை நிறைவு செய்வோம்.

1972 அரசியலமைப்பும் தமிழர் விரோத தாக்குதல் உக்கிரமடைதலும் 

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத யுத்தம் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அவ்வாறு கொள்ளக் காரணம் அந்த யுத்தத்திற்கு அடிக்கல் நாட்டும் வேலைகள் ஸ்ரீலங்கா- சமசமாஜ - கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் கீழ் 1972ல் இருந்து ஆரம்பமாகிவிட்டதேயாகும். இதை நாம் கடந்த பகுதியில் சுட்டிக்காட்டினோம்.

1972ல் இடம்பெற்றது என்ன? அந்த ஆண்டில் கூட்டரசாங்கம் சிங்கள-பெளத்த இனவாத அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அது சிங்கள-பெளத்த மக்கட் பிரிவினரை தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த ரீதியில் தூண்டிவிடும் ஒரு நனவான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக விளங்கியது.

1972 அரசியலமைப்புச் சட்டத்தின் இலக்கு என்னவாக இருந்தது? இதைப் புரிந்து கொள்வதற்கு 1945ல் இயற்றி 1947ல் நடைமுறைக்கிட்டதும் 1972வரை அமுலில் இருந்ததுமான அரசியலமைப்புச் சட்டத்தின் அரசியல் பின்னணியையும் செயற்பாட்டையும் பற்றி சிறிது தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும்.

1947 அரசியலமைப்புச் சட்டம், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இலங்கையில் அதி வலதுசாரி படு பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் இடையே பொதுமக்களுக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட ஒரு சதியின் பெறுபேறாகும். இந்த அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடுவதற்கு சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்கு எந்தவிதமான சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. அத்தோடு முதலாளி வர்க்கத்தின் தீவிரவாதிகளாகக் கோலம் போட்டுக் கொண்ட பகுதியினருக்கும் கூட அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இருந்து வந்த முதலாளித்துவ அமைச்சரவை 1944ல் தயாரித்த அரசியலமைப்பு வரைவே 1947 அரசியலமைப்புச் சட்டத்துக்கு அடிப்படையாக இருந்து வந்தது. அரசியலமைப்புச் சட்ட வரைவினைத் தயார் செய்ய டீ.எஸ். சேனநாயக்கவின் தலைமையில் இருந்த அமைச்சரவையைத் தூண்டியது 1943 மே மாதத்தில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனமாகும்.

ஏகாதிபத்திய இரண்டாம் உலக யுத்தம் அதன் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த இந்தக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் ஆசிய காலனிகள் யப்பான் ஏகாதிபத்தியத்தின் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தன. யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கும், முகங்கொடுத்திருந்த அச்சுறுத்தலின் தன்மைக்கும் சமாந்தரமாக, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனித்துவ கைக்கூலி முதலாளிகளைக் கொண்டு இத்தருணத்தில் பொது மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளைத் தீவிரமாக்கினர்.

மக்கள் விரோத ஒடுக்குமுறையானது தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டிக் கொண்டு தேசிய சுதந்திரத்துக்கும் சோசலிசத்துக்குமாகப் போராடிய லங்கா சமசமாஜக் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டதன் மூலம் அப்பட்டமான முறையில் வெளிப்பாடாகியது. 1940 ஜூன் மாதத்தில் சமசமாஜக் கட்சியின் அரச சபை எம்.பீ.க்கள் இருவர் உட்பட முன்னணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளப்பட்டதோடு கட்சியின் அரசியல் நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டன. சமசமாஜக் கட்சி அந்தரங்கமாகச் செயற்படத் தள்ளப்பட்ட போதிலும் அதன் தொழிற்சங்கங்கள் இன்னமும் இருந்துவர இடமளிக்கப்பட்டது. 1942 மார்ச்சில் அந்த அனுமதியும் இரத்துச் செய்யப்பட்டது. ஏகாதிபத்திய யுத்தத்துக்கு தோள்கொடுத்தபடி, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியைக் கொண்டிருக்க முழு மூச்சாக நின்று வந்த ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த பொதுஜன ஒடுக்குமுறைக்கு மத்தியில் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை முற்றுகையிட்டுக்கொள்ளவும், இலங்கை தேசிய காங்கிரசின் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தமது ஏகாதிபத்தியச் சார்பு துரோக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

அமைச்சரவையின் அரசியலமைப்புச் சட்ட வரைவு முன்வைக்கப்பட்ட போது டீ.எஸ். சேனநாயக்க இலங்கை தேசிய காங்கிரசில் இருந்தும் வெளியேறி இருந்தார். காங்கிரசின் முதலாளித்துவ தீவிரவாதிகளின் கோரிக்கைகளைக் கூட ஏகாதிபத்திய எஜமானர்களைப் போலவே தேசிய முதலாளித்துவ வர்க்கத் தலைவரான அவராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சரவை வரைவு தயார் செய்யப்பட்டது, இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி பொதுமக்கள் மீது திணித்த மிலேச்ச ஒடுக்குமுறைகளினால் மதங்கொண்டிருந்த தேசிய முதலாளிகளின் விருப்பு வெறுப்புகளின் பேரிலாகும். எனினும் 1944ல் நியமனம் செய்யப்பட்ட சோல்பரி ஆணைக்குழுவின் சிபார்சுகளின்படி, ஐவர் ஜென்னிங்சினால் தயார் செய்யப்பட்ட "சோல்பரி அரசியலமைப்பு" யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் ஏகாதிபதிய சார்பு ஆட்சியின் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைக் கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

சிங்கள முதலாளிகள் ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து சகல சலுகைகளையும் தமது மடியில் போட்டுக் கட்டிக்கொள்ள முயற்சி செய்தாலும் -அத்தருணத்தில் ஒரு தொகை இனவாத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்ததால்- உறிஞ்சப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களதும் ஏனைய சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஐக்கியத்தின் அச்சுறுத்தலின் எதிரில், சிங்கள-தமிழ் மற்றும் இன, மத முதலாளித்துவ குழுக்களிடையே இடம்பெறும் குத்து வெட்டுக்களினால் தோன்றக் கூடிய அரசியல் ஆபத்துக்களை பிரித்தானிய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருந்தனர். சோல்பரி அரசியலமைப்புக்கு சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கும் சில நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இதற்குக் காரணம் நளின் டி சில்வா, குணதாச அமரசேகர போன்ற இனவாத முதலாளித்துவ பரிந்துரையாளர்கள் கூறுவது போல், சிறுபான்மை மக்கள் குழுக்கள் சம்பந்தமாக பிரித்தானியர்களிடையே தலை தூக்கிய அனுதாபம் அல்ல. ஒரு ஆளும் வர்க்கம் என்ற முறையில், தாம் பெற்றிருந்த அனுபவத்தின் அடிப்படையில் அன்றைய முதலாளித்துவ ஆட்சிக்கு இருந்து வந்த அச்சுறுத்தல்களை புரிந்து கொண்டதே அதற்கு காரணமாகும். அந்த நிலைமைகளுக்கு அவசியமான முறையில் பொதுமக்களைக் குழப்பியடிக்கவும் ஒடுக்குமுறைக்கு முதலாளித்துவ பகுதியினரைப் பிளவுபடுத்தவும் (இந்தியாவில் போன்று) மறுபுறத்தில் ஏகாதிபத்திய அவசியங்களுக்காக இனத்துவ முதலாளித்துவ பகுதியினரை திரட்டி, தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களின் அச்சுறுத்தலை நசுக்கிவிடும் அளவுக்கு ஒரு ஆளும் வட்டத்தை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் நியமித்திருந்தனர்.

1947ல் இருந்து தொழிற்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 29வது சரத்தின்படி, பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்களுக்கு ஒரு சில வரையறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

(அ) எந்த ஒரு மதப் பிரிவினரதும் சமய செயற்பாட்டை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல்.

(ஆ) ஏதாவதொரு மக்கள் குழுவையோ அல்லது மதப் பிரிவையோ சேர்ந்த தனிநபர்களை, வேறு பொது மக்கள் குழுவையோ அல்லது மதங்களையோ சேர்ந்தவர்கள் கீழ்ப்படுத்தும் தடைகளுக்கு அல்லது வரையறைகளுக்கு கீழ்ப்படுத்தல்.

(இ) எந்த ஒரு மக்கட் குழுவையோ அல்லது மதத்தினையோ சேர்ந்த தனியாட்களுக்கு வேறு மக்கட் குழுக்களையோ அல்லது மதங்களையோ சேர்ந்த தனியாட்களுக்கு வழங்கியிராத சலுகைகளை அல்லது நன்மைகளை வழங்குதல்.

(ஈ) எந்த ஒரு மத அமைப்பினதும் அமைப்பு விதிகளை அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் அங்கீகாரம் இல்லாமல் மாற்றுதல்.

இவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களால் செய்ய முடியாமல் இருந்தது. அத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால் அவை அரசியலமைப்புக்கு அமைய செல்லுபடியற்றதாகும்.

அனைத்து அரசியலமைப்புச் சட்டங்களும் அந்தந்த காலப்பகுதியில் நிலவிய வர்க்க சமபல நிலையின் வெளிப்பாடாகும். அவ்வாறே அந்த சமபல நிலையைத் தமக்குச் சார்பான விதத்தில் திருப்பிக் கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் முயற்சியின் ஒரு பெறுபேறுமாகும்.

தமிழ் மற்றும் சிறுபான்மைக் குழுக்களின் முதலாளித்துவப் பகுதியினருடன் சேர்ந்துகொள்ளாமல் இலங்கையில் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியை நடத்திச் செல்ல வாய்ப்புக் கிடையாது என சிங்கள முதலாளி வர்க்கப் பகுதியினருக்கு எச்சரிக்கை செய்தவர்களும் அவர்களுக்கு அதைப் புரிய வைத்தவர்களும் பிரித்தானியர்களே. ஆளும் வர்க்கத்தின் நோக்கில் அதன் சரியான தன்மை, அந்த ஆண்டின் சோல்பரி அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கும் மற்றும் அது 1947ல் அமுலுக்கு இடப்பட்டதற்கும் இடையே கழிந்து சென்ற இரண்டு ஆண்டுகளுள் அது நிரூபிக்கப்பட்டது.

சிங்கள தமிழ் முதலாளித்துவக் கூட்டு

1945ல் ஆரம்பமாகி 1947 பொது வேலை நிறுத்தம் மூலம் உச்சக் கட்டத்தை அடைந்த ஒரு தொகை தொழிலாளர் போராட்டங்கள் இந்த இரண்டு வருட காலத்தினுள் வெடித்தன. லங்கா சமசமாஜக் கட்சியும் போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியும் (நான்காம் அகிலத்தின் பகுதி) சட்ட விரோத நிலைமையில் இருந்து விடுபட்டு மீண்டும் வெளிப்படையாகச் செயற்படத் தொடங்கியதோடு ஸ்டாலினிஸ்டுகளின் ஏகாதிபத்தியச் சார்பு கருங்காலி இயக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டிக்கொள்ள முடிந்தமை அந்தப் போரட்டங்களின் பின்னால் இருந்து வந்த முக்கிய அரசியல் காரணியினாலே ஆகும். நடேசையரின் தலைமையிலான இலங்கை இந்திய காங்கிரஸின் மூலம் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்ட நடாத்திய ஒரு தொகை போராட்டம் இதனுடன் இணைந்து கொண்டது. இந்தப் புரட்சிகர தொழிலாளர் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் இலக்குடனேயே சிங்கள-தமிழ் முதலாளிகளின் கூட்டு நிர்மாணிக்கப்பட்டது. 1947 பொது வேலை நிறுத்தத்தில் கொலன்னாவையில் இருந்து புறப்பட்ட தொழிலாளர் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அரசாங்க லிகிதர் சேவை சங்கத்தின் (GCSU) கந்தசாமியை கொலை செய்ததன் மூலம் இந்தப் பிற்போக்கு கூட்டின் மக்கள் விரோத காட்டுமிராண்டி இலக்கு இரத்தத்தினால் பொறிக்கப்பட்டது.

பாகுபாடுகளுக்கு இடம் வைக்காமல் பல்வேறு மக்கள் குழுக்களுக்கு இடையேயும் சமத்துவத்தை ஸ்தாபிதம் செய்யும் நோக்குடன் சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 29வது சரத்து, மக்களை ஏமாற்றி முதலாளித்துவ பிரிவினரிடையே ஒரு கூட்டுக்கு வழிவகுப்பதாக விளங்கியது என்பது இன்னொரு விதத்தில் நிரூபிக்கப்பட்டது. அது இந்திய பிறப்புரிமை கொண்ட தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழித்துக் கட்டும் சட்டம் 1949ல் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.

1949 ஆகஸ்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை மசோதா, இலங்கையில் வசித்த ஒரு மக்கள் பிரிவினருக்கு எதிராகத் திட்டவட்டமான பாகுபாடு காட்டுவதாகவும் அவர்களின் உரிமைகளை பிடுங்கிக் கொள்வதாகவும் விளங்கியது. அது அரசியலமைப்புச் சட்டத்தின் 29வது சரத்தினால் தவிர்க்கப்படவில்லை. அது மட்டுமன்றி, அந்த காட்டுமிராண்டி மசோதாவுக்கு ஆதரவாக ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆதரவை யூ.என்.பி. வெற்றிகொள்ளவும் முடிந்தது. இந்த மசோதா அரசியலமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது எனக் காட்டி சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அதற்கு எதிராக அணிதிரட்டப் போராடியது போல்ஷிவிக்-லெனினிஸ்ட் சமசமாஜக் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியுமே ஆகும்.

1950ல் ஒன்றிணைந்து கொண்ட இந்த இரண்டு சமசமாஜக் கட்சிகளதும் தலைவர்கள், 1972 பிற்போக்கு குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், சோல்பரி அரசியலமைப்பின் 29வது சரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புகளில் இருந்தும் சிறுபான்மைக் குழுக்களை தள்ளி வைக்க பங்களிப்பு செய்தனர். சோல்பரி அரசியலமைப்பின் 29வது அரசியலமைப்பு இருந்து வந்த நிலைமையிலும் குடியுரிமை மசோதா, சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கும் சட்டம் போன்ற தமிழ் பேசும் மக்களுக்கு பாகுபாடு காட்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது உண்மையே. எனினும் குறைந்தபட்சம் அந்த சரத்தின் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்ய இந்நாட்டின் தொழிலாளர் வர்க்க அரசியல் இயக்கமொன்று போராடிக்கொண்டுள்ளதையிட்டு தமிழ் மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் 1972ல் சமசமாஜ துரோகத்தின் மூலம் சிதறடிக்கப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றதும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை பிடுங்கிக்கொள்கின்றதுமான சகல சட்டங்களும் 1972 அரசியலமைப்புச் சட்டத்தினுள் உறிஞ்சிக்கொள்ளப்பட்டது மட்டுமன்றி, பெளத்த மதம் அரச மதமாக பிரகடனம் செய்யப்பட்டதன் மூலம், அவை இன்னொரு அடி முன்னெடுக்கவும் பட்டன. 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது சரத்து, "இலங்கை மக்கள் குடியரசு பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் அதே சமயம் அதன் பிரகாரம் பெளத்த மதத்தினைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் பொறுப்பாகும்" என்றது.

பெளத்த மதத்தை கோலோச்ச செய்யும் இந்த நடவடிக்கையானது முக்கியமாக அன்று பெரும்பான்மையாக இந்து சமயத்தினை பின்பற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டது என்பதை ஆளும் வர்க்கம் அங்கீரித்து ஒப்புக்கொண்டது.

இதனை இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டின: 1. கத்தோலிக்க, கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்தமை. 2. யூ.என்.பி. சிறப்பாக அந்த சரத்துக்கு ஆதரவு வழங்கியமை.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிரதிபலிப்புகள் மூலமும் இந்த அங்கீகாரம் வெளியாகிற்று. 1972 அரசியலமைப்புச் சட்டதுக்கு எதிராக தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடையே பரவி இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்தன. இவை ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தன. தமிழ் மக்களிடையே பலவீனம் கண்டுவரும தமது அரசியல் ஆளுமையை கட்டியெழுப்பும் பொருட்டு 1972 அரசியலமைப்பினால் தொடுக்கப்பட்ட தமிழ் மக்கள் விரோத தாக்குதலை பயன்படுத்திக் கொள்ள கூட்டாக தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் அங்ஙனம் முடிவு செய்தன.

சிங்கள-தமிழ் மக்கள் குழுக்களுக்கு இடையே மோதுதலை புதிய மட்டத்துக்கு உயர்த்தும் நோக்கத்துடன் 1972 அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டது எனவும், அது தமிழர் விரோத இனவாத யுத்தத்துக்கான அடிக்கல் நாட்டலாக விளங்கியது எனவும் நாம் வலியுறுத்தக் காரணம், அது முன்னொரு போதும் இல்லாத விதத்தில் இனவாத துருவப்படுத்தலுக்கு வழிவகுத்ததேயாகும்.

சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை ஐக்கியப்படுத்துவதற்காக முன்னர் போராடிய சமசமாஜக் கட்சி, 1964 முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கங்கத்தினுள் நுழைந்துகொண்டு இழைத்த மாபெரும் காட்டிக் கொடுப்பின் நடைமுறைப் பெறுபேறாகவே இது இடம்பெற்றது. இது துருவப்படுத்தப்பட்ட இரண்டு இனக் குழுக்களுக்கிடையே யுத்த மோதுதல் அரசியலை நிகழ்ச்சி நிரலில் புகுத்தியது.

1972 ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் அரசியலமைப்பு, அக்கட்டத்தில் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களின் பேரிலான பிற்போக்கு முதலாளித்துவ பிரதிபலிப்பாக விளங்கியது.

மக்கள் போராட்டம்

1970 மே பொதுத் தேர்தலில் ஒரு தொகை மோசடி வாக்குறுதிகள் மூலம் பொது மக்களை ஏமாற்றி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஒரு சில மாதங்கள் கழிவதற்கும் முன்னரே தொழிலாளர்களதும் ஒடுக்கப்படும் மக்களதும் வெறுப்புக்கும் ஆத்திரத்துக்கும் இலக்காகியது. ஐக்கிய முன்னணியின் வாக்குறுதிகளால் உற்சாகமடைந்து அது ஆட்சிபீடம் ஏறத் தொழிற்பட்ட மக்கட் பகுதியினர், அரசாங்கம் அமைக்கப்பட்டது தான் தாமதம் தத்தமது கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் இறங்கினர். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களுக்குள் அணிதிரண்டு போய் இருந்த தொழிலாளர்கள் ஓரளவிற்கு சகிப்புடன் நடந்து கொண்ட போதிலும், வீடுகளை இழந்த ஏழை மக்கட் பகுதியினர் தனிப்பட்ட முதலாளிகளதும் அரசாங்கத்தினதும் காணிகளைக் கூட்டாகக் கைப்பற்றிக் கொண்டு பகிர்ந்து கொள்ளும் இயக்கத்தை நாடு பூராவும் பல்வேறு பிராந்தியங்களிலும் ஆரம்பித்தனர். அரச பலத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் இந்த ஏழை மக்களைக் கலைத்து தனிப்பட்ட முதலாளித்துவக் காணிச் சொந்தக் காரர்களின் உரிமைகளை பாதுகாக்க ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் ஒரு கணமும் தாமதம் காட்டவில்லை.

சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிலாளர் வர்க்க அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும் முதலாளித்துவ கூட்டரசாங்க அரசியலுக்குள் கால் கட்டுப் போட்டுவிட்டிருந்த ஒரு சமயத்தில், சகிக்க முடியாத வாழ்க்கைச் சுமைகளால் நலிந்து போய்வந்த ஏழை மக்கள், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன வேலைத் திட்டத்தினைக் கொண்ட ஒரு தலைமை இல்லாமல் செய்யப்பட்டதன் தீய விளைவாக தமது போராட்டங்களில் இருந்து பின்வாங்கச் செய்யப்பட்டனர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் தமது அடிப்படை உரிமைகளை முதலாளித்துவ சொத்து அமைப்புக்கும் அரசுக்கும் எதிராக உறுதியாக போராடக் கூடியதும் போராடுகின்றதுமான தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் தலைமையின் கீழேயே வெற்றி கொள்ள முடியும் என்ற மறக்க முடியாத விஞ்ஞானபூர்வமான மார்க்சிய உண்மை மீண்டும் ஒரு தடவை ஊர்ஜிதமாகியது.

எனினும் ஜே.வி.பி. இந்த உண்மைக்கு மாறாக, தமது குட்டி முதலாளித்துவ இயக்கத்தை ஏழை மக்களதும் இளைஞர்களதும் விடுதலையாளனாகப் பிரகடனம் செய்து கொண்டு செயற்பட்டது. 1970ல் பிற்போக்கு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வதற்கு செயற்பட்டதன் விளைவாக, ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஜே.வி.பி., அரசாங்கத்துக்கு எதிராக பொறுமையிழந்து வந்த ஒடுக்கப்படும் மக்களுக்கிடையே சந்தர்ப்பவாத ரீதியில் தமது அடிப்படையை ஏற்படுத்திக் கொள்ள முயன்றது. அங்கு அது சமசமாஜ-கம்யூனிஸ்ட் அரசியல் கட்சிகளின் துரோகத்தினை முழு தொழிலாளர் வர்க்கத்தினதும் இலாயக்கற்ற தன்மையாகக் காட்டியும், அசிங்கமான சிங்கள பெளத்த சிந்தனா முறையைக் கொண்ட குப்பை கூழங்களை தவிர்க்க முடியாத விதத்தில் பயன்படுத்தியும் ஏழை மக்களையும் இளைஞர்களில் ஒரு பகுதியினரையும் தமது குட்டி முதலாளித்துவ இயக்கத்தினுள் ஈர்த்துக்கொள்வதில் வெற்றி கண்டது.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் யூ.என்.பி., ஐக்கிய முன்னணி என்ற இரு சாராரும் ஜே.வி.பி. யின் சர்ந்தர்ப்பவாதத்தைப் பற்றியும் குட்டி முதலாளித்துவ அரசியல் வங்குரோத்தையிட்டும் விழிப்பாக இருந்து வந்தன. ஆதலால், அந்த இரு சாராரும் ஜே.வி.பி.யை தம்பக்கம் ஈர்த்துக்கொள்ள உள்ள வாய்ப்பையும் அவ்வாறு முடியாதவிடத்து, ஜே.வி.பி. யின் அரசியல் மலட்டுத்தனத்தை பயன்படுத்தி அதனை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கவும் கணக்கிட்டுக் கொண்டு செயற்பட்டனர். அந்தக் கணிப்பின்படியே ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1971 ஏப்பிரல் வரை ஜே.வி.பி. சுதந்திரமாக தமது அரசியல் பிரச்சாரங்கள் மூலம் அரசாங்கத்தை சவால் செய்ய இடமளித்து பார்த்திருந்ததே தவிர, பாதுகாப்புத் துறையினர் வழங்கிய அறிக்கைகளைக் கணக்கில் எடுக்காமல் விட்டதனால் அல்ல. இந்த விடயத்தையிட்டு நாம் கவனம் செலுத்துவது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கும் அதன் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கும் மார்க்சிசத்தை நனவான முறையில் காட்டிக்கொடுத்த கட்சிகளின் திட்டவட்டமான ஆதரவு கிடைத்து வந்தது என்பதை கணக்கில் கொண்டேயாகும். அதைப் பற்றி இன்று போலவே அன்றும் நனவற்ற முறையிலும் குருடாகவும் இருந்தது அரசியல் ரீதியில் வங்குரோத்தான ஜே.வி.பி. யேயாகும்.

1971 ஏப்பிரலில் ஜே.வி.பி. நடாத்திய கிளர்ச்சி, ஐக்கிய முன்னணியும் யூ.என்.பி. யும் கூட்டாக கட்டவிழ்த்துவிட்ட அரச ஒடுக்குமுறையின் மூலம் இரத்த வெள்ளத்தில் நசுக்கப்பட்ட போதிலும் ஏழை மக்களுக்கிடையே ஐக்கிய முன்னணியின் ஆதரவு அடியோடு முழுமனே சிதறுண்டு போய் இருந்தது என்ற யதார்த்தத்தையிட்டு அரசாங்கம் கண்களை மூடிக்கொள்ள விரும்பவில்லை. இதுவரை காலமும் குட்டி முதலாளித்துவ மத்தியதர வர்க்க பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியைக் காக்க மேற்கொண்ட தமது மூலோபாய வேலைத் திட்டங்களை மீளச் சீர்செய்து கொள்ளும் பிரச்சினையை ஆளும் வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை.

இரண்டு முக்கிய காரணிகள்

இச்சமயத்தில் தலைநீட்டிய இரு வேறு முக்கிய காரணிகள் முதலாளித்துவ ஆட்சியில் மூலோபாய மாற்றத்தினை வேண்டி நின்றன:

1. 1971 ஆகஸ்ட்டில் தங்கத்துக்கும் அமெரிக்க டாலருக்கும் இடையே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிலைநாட்டப்பட்ட பெறுமதி உறவுகள் தகர்ந்தமை. பிரெட்டன்வூட்ஸ் உடன்படிக்கையின்படி 1 அவுன்ஸ் தங்கம் 35 டாலர்களுக்கு சமம் எனவும், அந்த நிலையான பெறுமதி அமைப்பின்படி ஏனைய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியை தீர்மானம் செய்யவும் இருந்து வந்த உடன்பாடு, அமெரிக்க ஜனாதிபதி றிச்சர்ட் நிக்சனால் ஒருதலைப்பட்சமான முறையில் உடைத்தெறியப்பட்டது. இது உலகம் பூராவும் பணவீக்கம் அலை அலையாக பெருக்கெடுக்க காரணமாகியது. சிறப்பாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமக்குக் கிடைக்கும் டொலர்களின் பெறுமதி குறைந்து போவதை ஈடு செய்யும் பொருட்டு எண்ணெய் விலையை அதிகரித்தன. இதனால் சகல பொருட்களதும் விலைகளும் அத்தோடு எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரம், விவசாய இரசாயனப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரித்தன. இதன் விளைவாக கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்களைத் தொடர்ந்தும் வழங்குவது ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் பிரச்சினையாகியது.

2. இந்தப் பணவீக்க சூழ்நிலையில் இதுவரை காலமும் மெளனமாக இருந்துவந்த மற்றும் ஜே.வி.பி.யினால் தள்ளி வைக்கப்பட்டு இருந்ததுமான தொழிலாளர் வர்க்கம் தமது வேலை நிறுத்தப் போராட்டங்களின் மூலம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் இறங்கியமை, 1973-75 காலப்பகுதியில் பிரித்தானியாவிலும் ஸ்பெயினிலும் போர்த்துக்கல்லிலும் அவ்வாறே ஐரோப்பா பூராவும் பரந்து வந்ததும், இந்தியாவினுள் இந்திராகாந்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்து வந்ததுமான ஒரு தொகை புரட்சிகர தொழிலாளர் போராட்டங்களின் முன்னோடியாக, 1971ன் கடைப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம் அதில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.

வங்கி ஊழியர்கள் தமது போராட்டத்துக்கான தயாரிப்பு நடவடிக்கையாக 1971 டிசம்பர் 13ம் திகதி நடைபெற்ற மாநாட்டில் தமது தொழிற்சங்கத் தலைமையில் இருந்து சமசமாஜவாதிகளை வெளியேற்றினர். அதைத் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்ட தலைமை ஒரு மத்தியவாத தலைமையாக இருந்த போதிலும் சமசமாஜக் கட்சியை பாவித்து தொழிலாளர் வர்க்கத்துக்கு கால்கட்டு போடும் ஆளும் வர்க்க உபாயம் சிதறுண்டு போகும் என்பதற்கு அது நல்லதொரு சாட்சியாக விளங்கியது. புதிய தலைமையின் கீழ் 1972 மார்ச்சில் வெடித்த வங்கி ஊழியர் வேலை நிறுத்தம், தீவெங்கிலும் கைத்தொழில், வர்த்தக நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தது. தொழிலாளர் வர்க்கத்தினுள் தலைநீட்டி இருந்த இந்த எச்சரிக்கை, ஏழைகளின் போராட்டத்தைக் காட்டிலும் முதலாளித்துவ ஆட்சிக்கு ஆபத்தானதாக விளங்கியது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மேயில் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது இந்த அரசியல் பின்னணியிலேயே ஆகும்.

துரோகத் தலைவர்களைக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தை நெறிப்படுத்திக்கொள்ள முடியாதெனில், உதவி மானியங்களை வழங்கி, கிராமப்புற ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் கால் கட்டுப் போட இருந்து வந்த வாய்ப்புக்கள் அடைப்பட்டுப் போனால் முதலாளித்துவ ஆட்சியை காக்க இப்போது செய்ய வேண்டியது என்ன? ஆளும் வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினதும் எதிரில் தோன்றிய தீர்க்கமான பிரச்சினை இதுவேயாகும்.

1972 அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் சிங்கள-தமிழ் மக்களை ஆளுக்காள் மோதவைக்கும் உடன்பிறப்பைக் கொல்லும் யுத்தத் திட்டங்களுக்குள் அடைத்துப் போடுவது ஆளும் வர்க்கத்தின் புதிய மூலோபாயமாகியது. முதலாளி வர்க்கத்துக்கு அவசியமாக இருந்த இனவாதத்துக்கு தோள் கொடுத்து, ஜே.வி.பி. யினால் கிளறிவிடப்பட்ட தொழிலாளர் விரோத அவ்வாறே சிங்கள-பெளத்த பேரினவாத அட்டூழியங்களில் இருந்தும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அனைத்துலகவாதத்தின் கீழ், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டப் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்பட்டு இன்னமும் நான்கு ஆண்டுகள் கடந்து விடாத நிலையில், ஜே.வி.பி. யை இழுத்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வைத்திருப்பதன் இலாபத்தை முதலாளி வர்க்கம் பற்றிக் கொண்டது.

1947ல் இருந்து நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியலமைப்புச் சட்டம், யுத்தத்துக்கு பின்னைய முதலாளித்துவ ஆட்சியின் சார்புரீதியான உறுதிப்பாட்டை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்குமாயின், 1972 அரசியலமைப்புச் சட்டம் ஏகாதிபத்திய உலக அமைப்பின் வெடிப்பின் புதிய சுற்றின் தொடக்கத்துடன் எழுந்த வர்க்கப் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் காட்டுமிராண்டி எதிர்பார்ப்புக்களுடன் தயார் செய்யப்பட்டதாகும். இனவாதத்தைத் தூண்டுவதற்கு மேலாக முழு மக்களதும் சிவில் உரிமைகளை நசுக்கித் தள்ளப் பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட அதிகாரங்களைச் சாதாரண சட்டங்களாக்கிக் கொண்டு, 1972 அரசியலமைப்புச் சட்டம் இந்தக் காட்டுமிராண்டி இலக்குகளை வெளிக்காட்டிக் கொண்டது.

சிங்கள, தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி உடன்பிறப்பைக் கொல்லும் யுத்தத்தினுள் அவர்களைத் தள்ளும் பொருட்டு 1972 அரசியலமைப்பை சட்டமாக்கிய ஸ்ரீலங்கா-சமசமாஜ-ஸ்டாலினிச முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் பங்காளிகளே 1994ல் பொதூஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பை மீண்டும் தோளில் சுமந்து கொண்டுள்ளனர். அதிகாரங்களைப் பரவலாக்கி, ஜனநாயகத்தை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு ''அரசியல் தீர்வு'' என்ற பேரில் தூக்கிப்பிடிக்கப்படும் புதிய அரசியலமைப்பை சுற்றி பேராசையுடன் சகல குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் பல்வேறு கருத்தரங்குகளிலும் கலந்துரையாடல்களிலும் சதிராடுகின்றார்கள். சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் ஆய்வுக்கட்டுரைகளைத் தீட்டுகின்றார்கள். இவை எல்லாம் பொதுஜன முன்னணி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத யுத்தத்தினை உக்கிரமாக்கி உள்ள ஒரு நிலையிலேயே இடம்பெறுகின்றன. யுத்தத்தின் பேரால் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பு எத்தகைய ஒடுக்குமுறை முதலாளித்துவ ஆட்சியை கொணரப்போகின்றது என்பதைப் புரிந்து கொள்ள இந்த அரசியலமைப்புச் சட்டம் தயார் செய்யப்படும் அரசியல் பின்னணியே போதுமானது.

இனவாத யுத்தத்துக்கு அடிப்படையான 1972 அரசியலமைப்புச் சட்டம் தயார் செய்யப்பட்ட காலப்பகுதி இதற்குப் பெரிதும் சமமானது.

இன்றைய ஜனாதிபதியின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க, இன்று போல் அல்லாது அன்று பெரும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட பிரதமராக விளங்கினார்.1970 ஜூலை 19ம் திகதி அரசியலமைப்பு நிர்ணய சபை என்ற பேரில் நவரங்கஹலவில் (புதிய நாடக அரங்கு) கூடிய முதலாளித்துவ பாராளுமன்ற நடிகர் நடிகைகள் முன்னிலையில் பேசிய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அறிக்கை, ஜனநாயகத்துக்கு இரு புறத்திலும் குழி தோண்டுவதாக விளங்கியது. அவர் கூறியதாவது:

''நான் அரசியலமைப்புச் சட்டத்தை முன்கூட்டியே எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. எமது புதிய அரசியலமைப்பு எமது தேசத்தின் ஒற்றையாட்சிப் பண்பை பலப்படுத்த உதவுவதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நான் கூறியாக வேண்டும். எம்மிடையே சிங்களம், தமிழ், முஸ்லீம், பறங்கியர் மற்றும் நானாவித இனக்குழுக்களும் பெளத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்ற பல மதக்குழுக்களும் இருந்த போதிலும் நாம் ஒரு தேசிய இனமாகச் செயற்பட வேண்டும்.''

நிலமானித்துவ பிரபு வம்சத்தைச் சேர்ந்த ஒரு அம்மணி, தமது பண்ணை அடிமையின் திருமண வைபவத்துக்கு சென்று சாய்மனைக் கதிரையில் நீட்டி நிமிர உட்கார்ந்து கொண்டு, தாமும் தமது அடிமைகளும் ஒரே குடும்பத்தின் பங்காளிகள் எனக் கூறினால் அதில் பொதிந்திருக்கும் வஞ்சனைக்கு மேலான எதுவும் இந்த அறிக்கையில் பொதிந்திருக்கவில்லை, என்பதை இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் நடவடிக்கைகள் நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே காட்டிக்கொண்டு விட்டது. ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ''ஜனநாயக மதிப்பு'', தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அல்லாது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அவசியங்களினால் வழிநடத்தப்படுவதே அதற்குக் காரணம்.

இன்றைய ''அரசியல் தீர்வை'' முன்வைக்கும் போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கடந்தகால தீவிரவாத மிகைப்படுத்தல்களை தூக்கிப் பிடிப்பதன் மூலம் அவரது அரசியல் பின்னணி இருட்டடிப்புச் செய்யப்படுவதோடு, அவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் அவசியத்தினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் காட்டப்பட்டு வருகின்றது. சில தமிழர்கள் சம்பந்தமாக கடந்த காலத்தில் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட விருப்பும் ஆதரவும் இதற்கு சாட்சியாகக் காட்டப்பட்டது. இந்தக் கதையளப்பில் ஈடுபட்டுள்ள மந்திரவாதிகள், முதலாளித்துவத்தின் நாற்றமெடுப்புச் சகாப்தத்தில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினால் ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியாது என்ற பொது உண்மையை குழிதோண்டிப் புதைக்கின்றார்கள். ஜயவர்த்தனவின் தந்திரங்களில் அல்லது பிரேமதாசவின் களவுகள் அல்லது காடைத்தனங்களுக்கு கைநீட்டியவாறு அவர்களின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மக்கட் படுகொலைகள் மற்றும் இனவாத யுத்தம் உட்பட நாசகார நடவடிக்கைளை சிருஷ்டித்த நிஜ காரணிகளை அவர்களால் விளக்கிக் காட்ட முடியாது. அது மட்டுமன்றி, முதலாளித்துவ அரசியல்வாதிகளால் அன்று தொடக்கம் இன்று வரை ஏதேனும் ஒரு இடத்தில் வெளியிடப்பட்டுள்ள வாயளவிலான தீவிரவாத அறிக்கைகளைக் கொண்டும் அவர்களின் பணியை புரிந்து கொள்ள முடியாது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு நடவடிக்கைகள் ஊற்றெடுப்பது, சமூக உற்பத்தி செயற்பாட்டினுள் அவர்கள் வகிக்கும் பிற்போக்கு நிலைப்பாடுகளில் இருந்தாகும். இனவேறுபாடுகள் தணிந்து போய் விடுவதில்லை. முதலாளி வர்க்க பகுதியினர் அவற்றை உலகம் பூராவும் உக்கிரம் அடைபவையாக மாற்றியுள்ளனர். இலாபப் பொதியை காத்துக் கொள்ள அவர்கள் எடுக்கும் கையாலாகாத்தனமான முயற்சியாக, அதற்குக் குறுக்கே நிற்கும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை இரத்தத் தடாகத்தில் மூழ்கடித்து நாசமாக்கிவிட துடிப்பதே காரணமாகும்.

லங்கா சமசாமாஜ கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் வரை, தமிழ் மக்கள் உட்பட்ட தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கட் பகுதியினரின் ஜனநாயக உரிமைகளை காக்க வாயளவில் மட்டுமன்றி செயலளவிலும் போராடிய வரலாற்றை தனதாக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய ஒரு கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா, உற்சாகத்துடன் சிங்கள-பெளத்த பேரினவாதமயமானதும் பொதுமக்கள் ஒடுக்குமுறையை இலக்காகக் கொண்டதுமான 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் வரைஞர் ஆகியதை அவரின் தனிப்பட்ட நெறிகேடாக மட்டும் விளக்க முடியுமா? இல்லை. அது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தினைக் கைவிட்டுவிட்டு சமசமாஜக் கட்சி தீர்க்கமான முறையில் முதலாளித்துவ முகாமுக்குள் மாறிக்கொண்ட கூட்டரசாங்க அரசியலின் ஒரு பெறுபேறாகும்.

முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க, சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் முதலான பிரிவினருக்கு ஒரு தேசிய இனமாக தொழிற்படுவதற்கு வழங்கிய மோசடி மிக்க வாக்குறுதியை வீசி எறிந்தார் எனினும், ஜனநாயக உரிமைகளை காக்கும் போராட்ட வரலாறு படைத்த சமசமாஜ கட்சித் தலைவர் வழங்கிய வாக்குறுதி சம்பந்தமாக பொதுமக்கள் எதிர்ப்புக்களைக் கொண்டிருந்தனர். 1970 கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், முதலாவது சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பேசிய கொல்வின் ஆர்.டி. சில்வா, ''இலங்கையர்களை உண்மையில் சுதந்திர, சுயாதீனமான, இறைமை கொண்ட மக்களாக மாற்றும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்கு நாம் செயற்பட்டு வருகிறோம்'' என்றார். நாற்றம் எடுத்த முதலாளித்துவ அமைப்பின் பாதுகாப்புக்கு அர்ப்பணம் செய்துகொண்டுள்ள ஒரு முதலாளித்துவ ஆட்சியினால் இதை நிறைவேற்ற முடியுமா? என்ற பிரச்சனையை அணுகாத சகல தீவிரவாதிகளும், இன்று போல் அன்றும் அந்த வாக்குறுதிகளை தோள்களில் சுமந்துகொண்டு மக்களை குழப்புவதில் ஈடுபட்டனர்.

1972 ஜூலை மாதத்தில் "அரசியலமைப்புச் சபை" என்ற பெயரில் பாராளுமன்றம் புதிய நாடக அரங்கில் கூடிய போது, யூ.என்.பி. மட்டுமன்றி சகல தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் அதை அங்கீகரித்து அதில் பங்குகொண்டன. இன்று போலவே அன்றும் இந்த அங்கீகாரத்தின் மீது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சகல கட்சிகளதும் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசியலமைப்புத் தொடர்பான செயற்குழு, பணியை ஆரம்பித்தது.

அவசரகாலச் சட்ட ஆட்சி

முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் விழுந்தடித்துக்கொண்டு பொதுமக்களின் கள்ளக் கையொப்பங்களில் நிறைவேற்றிக்கொண்ட அரசியலமைப்பு நிர்ணயசபை, இன்று போல் அன்றும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்துவந்த நிலையிலேயே தனது பணியை முன்னெடுத்தது. 1971ல் இருந்து தொடர்ச்சியாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டது. வெளியீட்டுச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்காக லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரசமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு சகல அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களும் உத்தரவு பெற்ற செய்தி அதிகாரிகளின் கீழ் கொணரப்பட்டது.

புதிதாக வரையப்பட்டுவந்த புதிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் இலட்சணம், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நின்று, கூட்டரசாங்கத்துக்கு எதிராக தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) தொழிலாளர் செய்தி,கம்கரு புவத், இளைஞர் செய்தி ஆகிய பத்திரிகைகள் 1971ல் இருந்து ''சீல்'' வைக்கப்பட்டதன் மூலம் எல்லாவற்றுக்கும் மேலாக அம்பலமாகியது.

அன்று நவசமசமாஜக் கட்சியின் இன்றைய தலைமையானது சமசமாஜக் கட்சியினுள் பதுங்கிக் கொண்டு, 1971ல் ஆரம்பமான இளைஞர் படுகொலைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முழுமனதாக ஆதரவு வழங்கியதோடு, 1972 அரசியலமைப்புச் சட்ட நிறைவேற்றத்தின் பின்னணியில் இருந்துவந்த அவசரகாலச் சட்ட ஆட்சியின் பங்காளியாகவும் விளங்கியது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கான தமது தொண்டர் சேவையை எதுவிதமான குறைச்சலும் இன்றி இட்டு நிரப்பும் பொருட்டு, ஏப்ரல் கிளர்ச்சியின் எதிரில் இடைஞ்சல்களுக்கு உள்ளான முதலாளித்துவ அரசின் ஆயுதப்படைகளுடன் கைகோர்த்துக்கொண்டு அலுகோசு வேலையில் இறங்கும் பொருட்டு, சமசமாஜக் கட்சித் தலைமையின் கீழ் அன்னம் படைப்பிரிவு (ஹங்ச றெஜிமேன்துவ) என்ற ஒன்றை அமைக்கவும் கூட கருணாரட்ன தலைமையிலான தற்போதைய நவசமசமாஜத் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தனர். தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்த நிலைமையில் தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளான முதலாளித்துவ அரச படைகளின் முதுகெலும்பை நிமிர்த்தும் பொருட்டு, ஒடுக்கப்படும் இளைஞர்களை ஈடுபடுத்தி சங்கிலிப்படைகள் அமைக்கும்படி யூ.என்.பி.அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் நவசமசமாஜக் கட்சி பிற்காலத்தில் இந்த அலுகோசு வேலைத்திட்டத்தை மேலும் முன்னெடுத்தது.

சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் ''மக்களின் சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை''யை ஊர்ஜிதம் செய்ய வாக்குறுதி அளித்து, பொதுமக்களின் மீது திணித்த 1972 பிற்போக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முன்னுரையாக மற்றுமோர் நச்சுத்தனமான மசோதா நிறைவேற்றப்பட்டது. அது1972 ஏப்ரல் மாதத்தில் அதாவது, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கு இன்னமும் ஒன்றரை மாதங்கள் இருக்கையில் நிறைவேற்றப்பட்ட "குற்றவியல் ஆணைக்குழு மசோதாவாகும்". முதலாளித்துவ நிறைவேற்று அதிகாரத்தின் நச்சுத்தனமான தடியடிகளால் நசுங்கி வந்தவர்கள் முதலாளித்துவ நீதிமன்றத்தின் எதிரில் முறைப்பாடு செய்து, நிவாரணம் கேட்க இருந்து வந்த கந்தலான உரிமையும் இந்த மசோதாவின் மூலம் பறிக்கப்பட்டது. தமது அரசியல் எதிரிகளை சுதந்திரமாக இழுத்துச் செல்லவும், கைகால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கவும் அரச படைகளுக்கும் அதிகாரிகளுக்கும் இதன்மூலம் எல்லையற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஸ்டாலினிசத்தின் தொழிற்பாடு

1965-70 யூ.என்.பி. ஆட்சிக்காலப் பகுதியில், பிரமாண்டமான வாழ்க்கைச் சுமைகளால் நசுங்குண்டு வந்த மக்களிடையே பதட்ட நிலை அதிகரித்து வருகையில், தொழிலாளர்களை வார்த்தையாலங்களின் மூலம் வெறியூட்டி, ஸ்தம்பிக்க வைக்கவும் இளைஞர்களுக்கு கயிறு கொடுத்து முதலாளித்துவ பொறியில் மாட்டிவைக்கவும் ''கிளருங்கள் கிளருங்கள் கிளர்ந்து எழுங்கள்! நாட்டின் சகல புறத்திலும் கிளர்ந்து எழுங்கள்!" என்ற மோசடி சுலோகங்களைக் கோசித்துவந்த ஸ்டாலினிஸ்டுக்கள், 1972 அளவில் கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் புதிய இராகத்தை இசைக்கத் தொடங்கினர். அதாவது ''1970ல் மக்கள் வெற்றியை காப்பதற்கும் அதை முன்கொண்டு செல்வதற்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் இயக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டும்'' என்ற திருப்பத்தைப் போடுவதாகும்.

ஸ்டாலினிஸ்டுக்கள் இந்த மோசடி வேசம் போடப் பொருத்தமான விதத்தில், குற்றவியல் ஆணைக்குழு மசோதாவினை, ''ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முற்போக்கு வேலைக்கு இடையூறாக விளங்கும்" அரசாங்கத்தின் உள்ளேயான ஒரு சதிகாரர்களின் வேலையாக'' வருணித்தனர். அந்த சதி எனப்படுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க தொடக்கம் என்.எம்.பெரேரா, கெனமன் வரையிலான தமது மீட்சிக்கான தலைவர்கள் சகலரும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதைக் குறிப்பிடாமல் இருப்பதில் கவனமாக இருந்து கொண்ட ஸ்டாலினிஸ்டுகள், 1972 ஏப்ரல் 10ம் திகதி ''அத்த'' பத்திரிகையில் தமது முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் உரையின் அறிக்கையொன்றை குறிப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தனர்:

''பொதுமக்களையும் தொழிலாளர் வர்க்கத்தையும் அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டுள்ள பிற்போக்காளர்கள் தமது இயக்கத்தை நடத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜக் பெரெரா, சமிபத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் ஆணைக்குழு மசோதாவை அதற்கு ஒரு உதாரணமாகக் காட்டினார்.''

ராவய, யுக்திய, தியச, பிரவாத போன்ற சஞ்சிகைகள் மூலமும் ஜே.வீ.பி.யின் பல்வேறு வெளியீடுகள் ஊடாகவும் சந்திரிகா குமாரதுங்காவை சிம்மாசனம் ஏற்றுவதற்கு வியர்வை சிந்தி இன்று களைத்துப்போயுள்ள தீவிரவாத போர்வை போர்த்தியுள்ள முதலாளித்துவக் கைக்கூலிகளும் இப்போது முரண்பட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளதைப் பேலவே, அந்தச் சகலரின் சார்பிலும் முன்கூட்டியே அன்று ஸ்டாலினிஸ்டுக்கள் குள்ளத்தனமான முறையில் கூச்சல் போடத் தொடங்கினார்கள். முதலாளித்துவ கூட்டரசாங்க அரசியலுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமான வழியில் இறங்கி, முதலாளித்துவ எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்டுவதைத் தவிர்க்கும் கடைகெட்ட மோசடிக்கு குறைந்த எதுவும் இன்று போலவே அன்றும் அந்த முறைப்பாட்டுக்குள் உள்ளடங்கியது கிடையாது. உருவாகியுள்ள 'துரதிஷ்டவசமான நிலையை ஆழமாக ஆய்வு செய்யும் பொருட்டு', அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்மேளனத்தை கூட்டிய ஸ்டாலினிஸ்டுக்கள், அன்று நிலவிய சூழ்நிலையை பற்றிய ஒரு சாராம்சத்தை, சம்மேளனம் நடைபெற்ற நாளான 1972 ஏப்ரல் 9ம் திகதி வெளியான அத்தபத்திரிகையில், 'பொது அரசியல் போராட்டத்தை தேர்ந்தெடுப்போம்' என்ற தலையங்கத்தின் கீழ் வெளியிட்டிருந்தனர்.

''ஐக்கிய முன்னணி பதாகையின் கீழ் உறுதியான போராட்டத்தில் ஈடுபட்ட பொது முற்போக்கு மக்களை போலவே, தொழிலாளர் வர்க்கத்தினது எதிர்ப்புக்கள் எதிர்பாராத விதத்தில் தகர்ந்து கொட்டி வருகின்றன... ஏகாதிபத்திய ஏழு கட்சிக் கூட்டை தோற்கடிக்க மனப்பூர்வமாக தொழிற்பட்ட மக்கள் பகுதியினர் இடையே விரக்தியும் வெறுப்பும் கொண்ட ஒரு தன்மை படிப்படியாக வளர்ச்சிகண்டு வருகிறது." (அத்த பத்திரிகை -1972 ஏப்ரல் 9) தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ ஆட்சியுடன் கட்டிப்போடும் புதிய சூழ்ச்சிகளின் துணையை நாட ஸ்டாலினிஸ்டுக்கள் தள்ளப்பட்டனர். இதற்குக் காரணம் பொது மக்களிடையே வளர்ச்சி கண்ட இந்த விரக்தியேயாகும். இந்தச் சூழ்ச்சிகள் மூலம் சிருஸ்டிக்கப்பட்ட நச்சு வாயுக்களின் பின்னணியில் இனவாத யுத்த திட்டமான 1972 அரசியலமைப்பு நிர்ணயம் சகலரதும் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் சென்றது.

இனவாத யுத்தத்தை உக்கிரமாக்கி பொதுஜன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தும் அதேவேளை, ஒரு அரசியல் தீர்வு கண்கட்டி வித்தையை முன்வைத்து, அதன் பின்னணியில் மக்களை இடுப்புவரை ஆணி அறையும் இன்றைய வேலைத்திட்டம், 1972 அரசியலமைப்புச் சட்ட நிர்ணயத்துடனும் கைகோர்த்துக் கொண்டுள்ளது. மீண்டும் அத்த பத்திரிகையில் இருந்து மேற்கோள் காட்டுவதன் மூலம் ஸ்டாலினிஸ்டுக்கள் அன்று அந்த நிலைமையை குறிப்பிட்ட விதத்தினைக் காட்டுவது பொருத்தமானது:

''இன்று இந்நாட்டின் விலைவாசி வேகமாக உயர்ந்து வருவதோடு இதனால் அரச, கூட்டுத்தாபன துறை ஊழியர்களும் நாட்டின் பொது மக்களும் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. எனினும் அரச, கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் ஒரு சதத்தினாலும் அதிகரிக்கப்படவில்லை. ''(அத்த -1972 ஏப்ரல் 10)

இலவு காத்த கிளிகளைப் போல அன்று சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள், முதலாளித்துவ கூட்டரசாங்கம் ஜனநாயகத்தை பகிர்ந்து தரும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர். அதற்குள் தலைகீழாக விழுந்த தீவிரவாதிகள் இன்று போலவே அன்றும் பொதுமக்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கி, முதலாளித்துவ தாக்குதல்களுக்கு பலிகடாக்களாக்க செயற்பட்டனர்.

இந்த அரசியல் மூலோபாயங்களின் படிப்பினையை இன்றைய தலைமுறையினருக்கு வழங்குவதற்கு இலாயக்கான அமைப்பாக சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே உள்ளது. அன்று சிறிலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் சகல மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராகப் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கொள்கையின் வாரிசாக அது விளங்குவதே அதற்குக் காரணமாகும்.

தரப்படுத்தல்

இனவாத யுத்தத்தின் பேரழிவுகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் பொருட்டு தொடுக்கப்பட்ட ஆத்திரமூட்டல்கள் நிறைந்த 1972 சிங்கள-பெளத்த அரசியலமைப்புக்கு முன்னோடியாக, தமிழ் குட்டி முதலாளித்துவ தட்டினரையும் இளைஞர்களையும் ஆயுதப் போராட்டப் பாதையில் தள்ளிவிடும் மற்றொரு மாற்றமும் கூட்டரசாங்கத்தினால் செய்யப்பட்டது. அது 1971 பல்கலைக்கழக புகுமுக தகுதி தொடர்பாக மாணவர்கள் மீது திணித்த தரப்படுத்தலாகும். தரப்படுத்தலின் கீழ் ஒரே வினாப் பத்திரத்துக்கு விடையிறுக்கும் மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைவதற்கான வாய்ப்பு தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் இரண்டினையும் சேர்ந்தவர்களுக்கு இரண்டு விதத்தில் வழங்கப்பட்டது. உதாரணமாக மருத்துவக் கல்லூரிக்கு நுழைவதற்கு தமிழ் தேசிய இனத்தின் மாணவர் ஒருவர் 1971ல் 400மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் 250 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டி இருந்த அதே வேளை, தெற்கில் சில பகுதிகளில் சிங்கள மாணவர் 229 புள்ளிகளை பெற்று அதை அடைய முடிந்தது. சிங்கள, தமிழ் மாணவர்கள் ஒரே ஆங்கில மொழியில் பதிலிறுத்த போதிலும் கூட, தமிழ் மாணவர்கள் இந்த இனரீதியான பாகுபாடுகளுக்கு உள்ளானார்கள். கண்களில் எதிரில் பளிச்சிட்ட இத்தகைய பாகுபாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் கூட இன்றுவரை நாளின் டி சில்வா, குணதாச அமரசேகர போன்ற முன்னணி இனவாத கழிசடைகள் தமிழ் மக்களுக்கு இடம்பெற்றுள்ள விசேட அநீதிகள் என்ன என வெட்கமற்ற முறையில் கேள்வி எழுப்புகின்றார்கள்.

படித்த இளைஞர்களின் உயர் கல்வி உரிமைக்குத் தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு மெருகூட்டும் பொருட்டு, தமிழ் விடைத்தாள் திருத்துபவர்கள் தமிழ் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் காட்டி அதிக புள்ளிகள் வழங்கினர் எனக் கூச்சலிடப்பட்டது. பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர்கள் இந்தக் கரிபூசல்களுக்கு ஒரே குரலில் எதிர்பைத் தெரிவித்ததோடு விசாரணையை ஒன்றையும் நடத்தும்படியும் கோரினர். அதைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட தமிழ், சிங்கள பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர்கள் கொண்ட கமிட்டி, அத்தகைய மேலதிக புள்ளிகளை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் புள்ளி வழங்கும் திட்டத்தின் கீழ் கிடையாது எனவும் ஆதலால், குற்றச்சாட்டு பொய்யானது எனவும் குறிப்பிட்டது. எனினும் இனவாதப் பாகுபாடுகள் காட்டும் தரப்படுத்தல் நின்று விடவில்லை.

1971க்குப் பின்னர், சிறப்பாக விஞ்ஞான பாடங்கள் தொடர்பாக பல்கலைக்கழக கல்வித் துறைகளில் தமிழ் மாணவர் எண்ணிக்கையை சிங்கள மாணவர்களுடன் ஒப்பிடுமிடத்து வேகமாக வீழ்ச்சி கண்டு சென்றது. 1972ல் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 63 வீதமாக இருக்க, தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை நுற்றுக்கு 33.6 வீதமாகியது. அது, 1973ல் சிங்கள மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 67.4 வீதமாகவும் தமிழ் மாணவர் என்ணிக்கை 29.5 வீதமுமாக மாறியது. 1974ல் சிங்கள மாணவர் நூற்றுக்கு 75.4 வீதமாக தமிழ் மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 20.9 வீதமாகிற்று. 1975ல் சிங்கள மாணவர் எண்ணிக்கை 78 வீதம் வரை உயர்ந்த அதே வேளையில், தமிழ் மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 19 வீதத்துடன் நின்று கொண்டது. இனவாதிகளின் பிரச்சாரத்தின் பெறுபேறாக சிங்கள முதலாளித்துவ, மத்தியதர வர்க்க இளைஞர்கள் அதிகளவிலானோர் கொழும்பில் கற்றுக்கொண்டு ஊவா பிரதேசத்தில் இருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மோசடியின் கீழ் உயர்கல்வி வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், தொழிலாளர்-ஒடுக்கப்படும் ஏழை மக்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அதனால் கிடைத்த வாய்ப்புக்கள் எதுவும் கிடையாது. முதலாளித்துவ சிறிலங்கா-சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தினால் உருவான தரப்படுத்தலின் தாக்கம் காரணமாக வளர்ச்சி கண்ட தமிழ் ஒடுக்கப்படும் மக்களின் பதட்ட நிலையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் பொருட்டு, துப்பாக்கிகாரர்களாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருவோரும் இந்த பெரும்பான்மை ஏழை இளைஞர்களே.

1972 அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமது மொழிக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் இதுவரை காலமும் இழைக்கப்பட்டு வந்த பாகுபாடுகள் நின்றுவிடும் என முதலாளித்துவ தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்த்த போதிலும் அது நிறைவேறவில்லை. தமிழ் முதலாளித்துவத் தலைவர்கள் முதுகை வளைத்துக்கொண்டு, முதலாளித்துவ அமைப்பினுள் ஏதேனும் ஒரு மாயையை திணித்து, தமிழ் ஒடுக்கப்படும் மக்களை தூங்கச் செய்ய முயற்சித்தனர். சிங்களத்தையும் தமிழையும் அரச மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட கைவிட்டு விட்டு, சிங்களத்தையும் தமிழையும் வடக்கு-கிழக்கு நிர்வாக மொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு கூட அரசியலமைப்பு நிர்ணய சபையினுள் அவர்கள் குழிபறிந்து போயினர். எனினும் அந்த சமரசத்தையும் கூட முதலாளித்துவ கூட்டரசாங்கம் நிராகரித்தது. முதலாளித்துவ பாராளுமன்ற விளையாட்டு தொடர்பாகவும் தமது தேசிய ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் மக்களிடையே வளர்ச்சி கண்டு வந்த எதிர்ப்பின் காரணமாக, அரசியலமைப்பு நிர்ணய நடவடிக்கைகள் ஆரம்பமாகி ஒரு ஆண்டின் பின்னர் -1971 ஜூனில்- அதில் இருந்து விலகிக் கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு செய்தது.

முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்வதாக நடிப்பதற்கும் இடையேயான முரண்பாடுகளுக்குள் தமிழரசுக் கட்சி அகப்பட்டுப் போய்க் கிடந்தது. தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அரசியலமைப்பு நிர்ணய சபையை பகிஷ்கரித்து நிகழ்த்திய உரை இதை நன்கு தெளிவு படுத்தியது; ''விவாதத்துக்கு உள்ளாகியுள்ள பிரச்சனை தொடர்பாக உடன்பாட்டுடன் கூடிய ஒரு தீர்வுக்காக நாம் சமரசத்துக்கு விருப்புக் கொண்டுள்ளோம். அரசியலமைப்பில் சேர்க்கப்பட எமக்கு அவசியமாக உள்ள குறைந்த பட்ச உரிமைகள் பற்றி, பிரதமருக்கும் அரசியலமைப்பு விவகார அமைச்சருக்கும் நாம் தெரிவித்தோம். பிரதமருடன் அரசியலமைப்பு விவகார அமைச்சருடனும் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் சினேகபூர்வமாகவும் எமது கருத்துக்கள் ஆழமான கவனத்துக்கு உள்ளாகும் என தோன்றிய போதிலும் அடிப்படைப் பிரேரணைகளில் எந்தவிதமான திருத்தத்தையும் செய்ய அவர்கள் தயாராகவில்லை.''

ஆட்சியின் மூலோபாய மாற்றம்

உருவாகியுள்ள பொருளாதார, அரசியல் வேறுபாடுகள் மூலம் முதலாளித்துவ ஆட்சி ஒரு மூலோபாய மாற்றத்தை வேண்டி நின்றது. இது தமிழ் முதலாளித்துவ தலைவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாகியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய உலகப் பொருளாதார அமைப்பின் காவலாளி போல் விளங்கிய, தங்கத்துக்கும் டொலருக்கும் இடையேயான உத்தியோகபூர்வமான உறவு, 1971 ஆகஸ் 15ம் திகதி நீக்கப்பட்டது. இது முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய ரீதியிலான நெருக்கடியின் ஆழத்தை எடுத்துக்காட்டியது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இதன் தாக்கம் நேரடியானதாயும் திட்டவட்டமானதாயும் விளங்கிற்று. முன்னைய யூ.என்.பி. ஆட்சியின் கீழ் இடம்பெற்ற உதவி மானிய வெட்டுக்களுக்கு எதிராக, ''சந்திரனில் இருந்தென்றாலும் அரிசி கொணர்ந்து தருவோம்'' எனப் பொய் வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த கூட்டரசாங்கம், 1971 நவம்பரில் சமர்ப்பித்த இரண்டாவது வரவு செலவு திட்டத்தில் உணவு மானியத்தையும் நலன்புரி சேவைகளையும் வெட்டத் தொடங்கியது. உலக சந்தையில் எண்ணெய் விலை பன்மடங்காக அதிகரித்ததுடன் அரசாங்கம் வெளிநாட்டு செலாவணி தொடர்பாக பாரதூரமான நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. உள்நாட்டில் உணவு உற்பத்தி வேகமாக வீழ்ச்சி கண்டு வந்ததோடு உணவு தட்டுப்பாடு பட்டினி மட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இதனால் உருவாகும் பொதுமக்களது கொதிப்பை நசுக்குவதற்கான நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்துக்கு அவசியப்பட்டது.

ஒடுக்கப்படும் மக்கள் தமது அவசியங்களின் பேரில் நடத்தும் போராட்டத்தில் அணிதிரளக் கூடிய ஒரு சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் தலை உயர்த்துவதையிட்டு ஆளும் வர்க்கம் எல்லையற்ற பீதி கொண்டிருந்தது. அதைத் தவிர்க்கும் பொருட்டு, 1964ல் சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்து கொண்டார்களேயாயின், 1972 அளவில் அந்த கூட்டரசாங்க மூலோபாயம் சிதறுண்டு போய் வந்தது. பொது மக்கள் மீது சகிக்க முடியாத சுமைகளைத் திணிப்பது தொடர்பாக மக்களின் வெறுப்பு அன்று நிதி அமைச்சராக விளங்கிய என்.எம்.பெரேராவுக்கு எதிரானதாக விளங்கிற்று. இந்தக் குழிபறிந்துபோன முண்டுகளின் துணையோடு அதிகாரத்தைக் கொண்டிருப்பது இனி பெரும் சிக்கலானது என்பதை முதலாளித்துவ ஆளும் வர்க்கம் புரிந்து கொண்டு வந்தது.

கூட்டரசாங்க அரசியலில் எதிர்ப்புரட்சித் தன்மையை அரசியல் ரீதியில் இன்னமும் புரிந்து கொண்டிராது விடினும், சமசமாஜ-ஸ்டாலினிஸ்ட் தலைவர்கள் அரசாங்கத்தை பாதுகாக்கப் போட்ட முடிச்சுக்களை அறுத்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளும் பிரச்சாரங்களும் வெடித்துக் கிளம்பின. உடனடியாக 50 ரூபா சம்பள உயர்வு வழங்கும்படியும் குறுங்கால விடுமுறை வெட்டு, புகையிரத பருவச் சீட்டுக்களுக்கு விதித்த 30 மைல் கட்டுப்பாடு, வேலைத்தல உணவகம் ஆகிய சேவை நிலமைகள் வெட்டுக்களை நிறுத்தும்படியும் தொழிலாளர்கள் பிரச்சாரத்தில் இறங்கினர்.

அரசாங்க திணைக்களங்களை கூட்டுத்தாபனங்களாக மாற்றுவதை நிறுத்தும்படியும் அரச ஊழியர்களை 55 வயது கட்டாய ஓய்வுபெறச் செய்வதை நிறுத்தும்படியும் ஓய்வூதியத்தை சகல கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் உத்தரவாதம் செய்யும்படியும் கோரும் ஒரு தொகை கோரிக்கைகளை தொழிலாளர்கள் இதில் சேர்த்துக் கொண்டிருந்தனர்.

முதலாளித்துவ அமைப்புக்கும் அதன் ஆட்சிக்கும் முழுச் சவாலாக வெடித்துக்கொண்டிருந்த இத்தகைய தொழிலாளர் வர்க்க அணிதிரள்வுகளைக் குழப்பத்தில் மூழ்கடித்து கலைத்துவிட தமக்கு 1964ல் இருந்துவந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான ஆளுமை சிதறுண்டு போய் விட்ட ஒரு நிலையில், தொழிலாளர்களுக்கு புதிய நச்சு வாயுக்களை ஏற்றுவதன் மூலம் அவர்களை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்பதை சமசமாஜ-ஸ்டாலினிச துரோகிகள் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். எனவேதான் முதலாளி வர்க்கத்தின் பாதுகாப்புக்காக இனவாதத்தை தூண்டிவிட்டு, தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் பொதுஜன அடக்குமுறையையும் இலக்காகக் கொண்டே 1972 அரசியலமைப்புச் சட்ட வரைஞராக சமசமாஜ தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா விளங்கியமையும், அந்த அரசியலமைப்பின் முன்னணி பாதுகாவலர்களாக சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளை முதன்மையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்கள் விளங்கியமையும் தற்செயலானது அல்ல.

துரோகத் தலைமைத்துவத்திற்கு எதிராக பு.க.க. போராட்டம்

முதலாளித்துவ அரச அடக்குமுறைக்கு இலக்காகி பொதுமக்களிடையே மிகவும் மதிப்பிழந்துபோனதன் காரணமாக, தொழிலாளர் வர்க்க புரட்சிகர முன்னணிப் படையணிக்கு, அன்று இன்னமும் சமசமாஜ-ஸ்டாலினிச அரசியலில் சார்ந்திருந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் நனவான பகுதியினரை மக்கள் முன்னணி அரசியலில் இருந்து பிரித்து எடுக்கும் பணி புறநிலை ரீதியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அதற்கான பொருத்தமான பிரச்சார உபாயமாக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ''சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறும் சோசலிச வேலைத் திட்டத்துக்கு அர்ப்பணம் செய்துகொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்குமாறும்'' நெருக்கும் இயக்கத்தை முன்னெடுத்தது. இது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தை நிராகரித்து, இறுதியில் முதலாளி வர்க்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதற்கு அர்ப்பணம் செய்து கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்களது பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில் தொழிலாளர் வர்க்கத்தை நனவான அரசியல் சக்தியாக அணிதிரட்டி, அதன் சிறந்த பிரிவினரை கட்சியின் பக்கம் வென்றெடுத்து, புரட்சிகர காரியாளர்களாக உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது.

முதலாளித்துவ கூட்டரசாங்கம், தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்திற்கான பின்ணிடையை உருவாக்கி, தமது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய 1972 மே மாதத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தமது பத்திரிகைகள் தடை செய்யப்பட்டிருந்த ஒரு நிலையிலும், அதிகாரம் பெற்ற பத்திரிகை அதிகாரியின் தணிக்கைக்கு உள்ளாக்கி பிரசுரங்கள் வெளியிடத் தள்ளப்பட்ட ஒரு நிலையிலும் கூட, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அச்சிட்டு வெளியிட்ட பிரசுரத்தின் மூலம் ட்ரொட்ஸ்கிச நிரந்தர புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அரசியல் முன்னோக்கை திடசங்கற்பத்துடன் வழங்கியது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது:

"ஸ்டாலினிஸ்டுகள் இரண்டு கட்டப் புரட்சி மூலம் ஜனநாயகப் புரட்சியின் பணிகளை 'முற்போக்கு முதலாளித்துவ வர்க்கத்துடன்' ஒன்றிணைந்து ஆற்ற வேண்டும் என்ற உயிராபத்தான வர்க்க அவசியங்களுக்கு தொழிலாளர் வர்க்கத்தை கீழ்படுத்துகின்றனர். தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் அடிப்படை உரிமைகளையும் கோரிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முக்கிய தடையாக இருப்பது, இந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிர்ப் புரட்சிக்கான கட்டத்தை உருவாக்கிக் கொடுக்கும் மக்கள் முன்னணி அரசியலேயாகும்.

''...சகல போராளிகளும் சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் இருந்து பிரித்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வல்லதும் முதலாளித்துவ சொத்துக்களை ஒழித்துக் கட்ட சபதம் பூண்டதுமான சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்களினை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசாங்கத்தினை அமைக்க போராடும்படி நெருக்க வேண்டும்.

''முதலாளித்துவ கூட்டரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கும் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களும் சீர்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களும் இந்தப் போராட்டத்தை எதிர்ப்பர். தொழிலாளர் வர்க்கத்தின் இழப்புக்களின் பேரில் முதலாளி வர்க்கத்தினை பாதுகாக்கும் அந்த துரோகிகளைத் தொழிலாளர் வர்க்கத்தினுள் இருந்து துரத்தி அடிக்கவும் நிஜ மாக்சிச தலைமையைத் தொழிலாளர் வர்க்கத்தினுள் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை வெற்றி கொள்ள முடியும்.

"தொழிலாளர் வர்க்கத்தின் சகல போராளிகள் முன்நிலையிலும் இந்தப் பிரச்சனை உருவாகியுள்ளது. அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும். அதில் இருந்து விடுபட்டு ஓடமுடியாது.''

இரண்டரை வருட காலங்கள் -1975 பெப்பிரவரி வரை- காங்கேசன்துறை இடைத் தேர்தலை நடத்துவதை நிராகரித்ததன் மூலம் 1972 முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் அரசியலமைப்பின் இனவாத யுத்த இலக்குகள் மேலும் வெளிச்சத்துக்கு வந்தன. நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பேரில் தமிழ் மக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தன்னும் வழங்காதிருப்பது ஆளும் வர்க்கத்தின் தீர்மானமாக விளங்கியது. சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் இந்த முடிவுக்கு தோள் கொடுத்து வந்தனர் 

தம்மீது திணிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களின் எந்த ஒரு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்காதிருப்பது சர்வாதிகார ஆட்சி முறையின் ஒரு இலட்சணமாகும். முதலாளித்துவ ஜனநாயகத் திரைமறைவில் பொது மக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தின் பாதையில் ஆளும் வர்க்கம் திரும்பியுள்ளமை இதன் மூலம் பிரபல்யமாகியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் முதலாளித்துவ பிரிவினைவாத அரசியலை நோக்கி அவர்களைத் தள்ளவும், இரத்தம் சிந்தும் இனவாத யுத்தத்தின் மூலம் அவர்களை நசுக்கித் தள்ளவும் அத்திவாரமிடப்பட்டது 1972ம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம், இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னராகும் என்பதை அது நிரூபிக்கின்றது.

இடைத் தேர்தலில் கருத்து வெளிப்பாட்டுக்கான சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதோடு மட்டும் நின்றுவிடாது இன்னும் நச்சுத்தனமான இனவாத நடவடிக்கைகள் பலவற்றை 1972-75 காலப்பகுதியில் முதலாளித்துவ கூட்டரசாங்கம் எடுத்தது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதை இலக்காகக் கொண்ட 1971ம் ஆண்டின் தரப்படுத்தல் கொள்கை மேலும் இனவாத அடிப்படையில் வலுப்படுத்தும் நடவடிக்கை 1972ல் இடம்பெற்றது. அப்போது க.பொ.த. (உயர்தர) விஞ்ஞானப் பாடங்கள் தொடர்பாக இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த செய்முறைப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டது. இந்தப் பிற்போக்கு நடவடிக்கையானது செய்முறைப் பரீட்சை முறை விஞ்ஞான கூடங்கள் இல்லாத கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அநீதியானது என்ற பிரச்சாரத்துடனேயே செய்யப்பட்டது. கிராமப்புறப் பாடசாலைகளில் நடைமுறையில் இருந்து வந்த கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றமான கற்பித்தல் முறைகளின் மட்டத்திற்கு தூக்கிநிறுத்தும் அவசியம் பற்றி எந்த ஒரு முதலாளித்துவப் பரிந்துரையாளரும் பேசியது கிடையாது. அதற்குப் பதிலாக அவர்கள் செய்தது எல்லாம், ஏழை பாடசாலைகளின் மட்டத்திற்கு ஏற்ற விதத்தில் கல்வி முறையை மாற்றியதேயாகும். பொது மக்களின் அவசியங்களை இட்டு நிரப்ப முடியாத முதலாளித்துவத்தின் சீர்திருத்தங்களை எதிர்பார்த்து நிற்கும் சகலரதும் பிற்போக்கு நடைமுறை இதன் மூலம் வெளியரங்குக்கு வந்தது. இன்று உலகளாவிய ரீதியில் இவர்கள் வடிக்கும் முதலைக் கண்ணீரானது "பொருளாதார அபிவிருத்திக்கும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும்" உலகில் உள்ள மிகக் குறைந்த மட்ட சம்பளம் அனைத்து நாடுகளதும் சம்பள மட்டம் ஆக வேண்டும் என்பதாகும்.

தேசியவாத சீர்திருத்தங்களின் கூச்சல்காரர்கள் இன்று இத்திசையிலேயே பயணம் செய்து கொண்டுள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியரான சீ.ஆர்.டி. சில்வா 1977ல் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தச் செய்முறைப் பரீட்சையை இரத்துச் செய்ததைப் பற்றிக் கூறியதாவது: "இந்த வேலைத்திட்டம் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு சம வாய்ப்புக்களை உத்தரவாதம் செய்வதாக அமைச்சு கூறினாலும், யாழ்ப்பாண தமிழ் மக்கள் இதனை விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் தாம் கொண்டிருந்த முன்னுரிமையை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு முயற்சியாகவே அர்த்தப்படுத்திக் கொண்டனர்". தமிழ் மக்களின் "அர்த்தப்படுத்தல்" 1977 அளவில் போதுமான அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டதை பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி சுட்டிக்காட்டியது.

1974ல் இடம்பெற்ற மற்றுமோர் பாகுபாடு, தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை முதலாளித்துவ ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் மேலும் தீவிரமாக்கியது. அது பல்கலைக்கழக அனுமதியின் பேரில் அமுலுக்கு வந்த மாவட்ட கோட்டா முறையை ஏற்படுத்துவதாகும். இது பிராந்திய வாதத்தினையும் இனவாதத்தினையும் மேலும் கட்டவிழ்த்துவிடுவதாக இருந்தது. 1971 தரப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தி அதன் வாய்ப்பினை சிங்கள குட்டி முதலாளித்துவ தட்டினரின் கைகளில் ஒப்படைத்த போதிலும், இந்த வேலைத் திட்டத்தினால் பிராந்திய மற்றும் இனக்குழுக்கள் ஊக்கமடைந்து தலைநிமிர்த்தத் தொடங்கி இருந்தன.

இனவாதத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் பிரிவினருக்கு எதிராக பாகுபாடு காட்டுதல் ஆரம்பமாகும் போது அதில் இருந்து ஏனைய இனக்குழுக்கள் இடையே உருவாகும் உயிர்காப்புப் பீதியினாலும், ஆரம்ப இனவாத பாகுபாடுகளால் அடைந்த நலன்களின் ஒரு பங்கினை பங்கிட்டுக் கொள்ளவும் ஒவ்வொரு வகையிலான முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் குழுக்களிடையே நாய்ச் சண்டை ஏற்படுவது இயற்கை.

முஸ்லீம் முதலாளித்துவக் கோரிக்கை

முஸ்லிம் மக்களிடையே பிரபல்யம் அடைந்திருந்த முதலாளித்துவத் தலைவரான பதியுதீன் முஹமது கல்வி அமைச்சராக இருந்து வந்த நிலைமையில், சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக உக்கிரமாக்கிய இனவாதப் பாகுபாடுகள் மூலம், சிங்கள குட்டி முதலாளித்துவ வர்க்கம் தட்டிக் கொண்ட வாய்ப்புக்களின் ஒரு பங்கு தமக்கும் வேண்டும் என பதியுதீன் முஹமதைச் சூழ முஸ்லிம் முதலாளிகள் அணிதிரண்டனர். சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் அடிப்படையில் இடம்பெற்ற தரப்படுத்தல், தமிழ் மூலம் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கு அநீதியானது என்பது அவர்களின் இனவாத விளக்கமாக விளங்கியது. தமிழ் மக்களிடையே பாகுபாடுகளுக்கு எதிராக வளர்ச்சி கண்டுகொண்டிருந்த எதிர்ப்பை நசுக்கும் பொருட்டு, தமிழ் மொழிபேசும் மக்களிடையேயும் மத அடிப்படையில் மேலும் பிளவை உண்டுபண்ணுவது வாய்ப்பானது எனக் கருதிய முதலாளித்துவ கூட்டரசாங்கம், உடனடியாக முஸ்லிம் கோரிக்கையின் நீதியைப் புரிந்து கொண்டு, அதற்கான சிகிச்சையாக பல்கலைக்கழக அனுமதிக்கு மாவட்டக் கோட்டா முறையை நடைமுறைப்படுத்தியது.

இந்த மாவட்ட கோட்டா முறையின்படி பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு, அந்தந்த மாவட்ட ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் தமக்கு கூடுதலான வாய்ப்புகள் கிட்டும் என மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வசித்த முஸ்லிம் மக்கள் நினைத்தனர். கண்டிய சிங்கள இனவாதிகளும் இதே பேராசை பிடித்த நிலைப்பாட்டிலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் நிலைப்பாட்டில் பெரிதும் நாற்றம் கண்டது என்னவெனில், தம்முடைய பங்களிப்புடன் பிரஜா உரிமை இல்லாமல் ஆக்கப்பட்டவர்களும், எந்த விதமான கல்வி வசதிகளுக்கும் உரிமை கொண்டாடாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுமான தோட்டத்துறை தமிழ் மக்களின் எண்ணிக்கையும் தமது மாவட்ட ஜனத்தொகையுடன் சேர்க்கப்பட்டு அதன் மூலம் மாவட்ட கோட்டா முறையின் கீழ் கூடுதல் வாய்ப்புக்களை திரட்டிக்கொள்ளலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த எந்த ஒரு நடவடிக்கையும் தமிழ் மக்களுக்கு பாகுபாடு காட்டும் இலக்கில் இடம்பெறவில்லை எனவும், தமிழ் மக்களுக்கு விசேடமான அநீதி எதுவும் இடம்பெறவில்லை எனவும் கூறுகையில், நளின் டி. சில்வா மற்றும் குணதாச அமரசேகர தலைமையிலான இனவாத கழிசடைகள், தாம் குருடர்கள் என்பதை காட்டிக்கொள்வது மட்டுமன்றி, முதலாளித்துவ அமைப்பின் கையாட்களாக இவர்கள் ஸ்திரமாக கூறுவது என்னவெனில், வறிய மக்கள் மீதான உண்மையான பற்றினுள் மூழ்கிப்போயுள்ள முதலாளிகள், சமூக நியாயங்களுக்காகவே இதை செய்தனர் என்றாகும். இந்நடவடிக்கையின் மூலம் கிராமப்புற ஏழை மக்களின் குழந்தை குட்டிகளுக்கு கிடைத்த நிவாரணம் எத்தகையது? இதை நன்கு அறிந்தோர் அந்த மாகாண மக்களே. தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் இனவாத யுத்த மட்டத்தை நோக்கி வளர்ச்சி கண்டதற்கு சமாந்தரமாக, கிராமப்புற இளைஞர் படுகொலைகள் மற்றும் டயர் தீச்சுவாலைகளுடன் துப்பாக்கி வேட்டுக்களும் தீப்பிளம்புகளும் புறப்பட்ட விதத்தையும அறிந்தோர் அவர்களே. இதற்கிடையே இனவாத பிணந்தின்னும் காக்கைகள் வடக்கிலும் தெற்கிலும் கொலைக்குப் பலியானவர்களின் பிணங்களை சுற்றி வளைத்துக்கொண்டு கரைந்தன. பல்கலைக் கழகங்களுக்குள் நுழைவது மட்டுமல்ல, பாடசாலை கல்வியைக் கூட ஒழுங்குமுறையாக கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்காது, அரச படைகளில் அலுகோசு வேலைகளில் இறக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்திற்கு இட்டுச் செல்லப்படுவதன் மூலம் கொலைக்கு உள்ளாகும் அல்லது தெற்கில் இளைஞர் படுகொலைகளுக்கு இலக்காகும் எந்தவொரு இளைஞனைப் பற்றித் தன்னும் எந்தவிதமான அனுதாபமும் இந்த இனவாத பிணந்தின்னி காக்கைகளுக்கு கிடையவே கிடையாது.

கல்வித்துறைகளிலான பாகுபாடு மூலம் பின்தங்கிய சிங்கள மக்கள் பகுதியினரிடையே ஆர்வத்தைத் தூண்டிவிட்ட ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்டு கூட்டரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத யுத்த தாக்குதல்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுத்தது.

1974 ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரம் யாழ்ப்பாண நகரம் விழாக்போலம் பூண்டிருந்தது. அது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாகாநாட்டின் பேரில் இடம்பெற்றது. பல்வேறு நாடுகளிலும் வாழும் பரந்த அளவிலான தமிழ் புத்திஜீவிகள் கலந்து கொண்ட இம்மாகாநாட்டினை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் ஒரு கெளரவமாகக் கொண்டனர். சிறப்பாக இந்நாட்டு தமிழ் மக்களின் கலாச்சார, கல்வி உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த ஒரு காலகட்டத்தில் இடம்பெற்ற இந்த மாகாநாடு அம்மக்களிடையே ஒரு பலம் வாய்ந்த ஆர்வத்தை துளிர்விடச் செய்தது. யாழ்ப்பாண நகரம் கலாச்சாரக் காட்சிகளால் நிறைந்திருந்தது.

அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 19ம் திகதி மாலை, பொதுமக்கள் அணிதிரண்டிந்த ஒரு பொதுக் கூட்டம் இடம்பெற்றது. முதலாளித்துவ கூட்டரசாங்கம், பொலிசைப் பயன்படுத்தி செய்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு அதை ஒரு தருணமாக்கிக் கொண்டது. பொலிசார் திடீரென ஆகாயத்தில் வேட்டுக்களைத் தீர்க்கத் தொடங்கினர். பொதுமக்கள் கிலிகொண்டு ஒடத் தொடங்கினர். மின்சாரக் கம்பி வயர்களில் பட்ட துப்பாக்கிச் சூட்டில் அறுந்து போன வயர்கள், ஓடிய மக்கள் மீது விழுந்தன. இதனால் ஒன்பது பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.

இது உண்மையில் பிற்காலத்தில் யூ.என்.பி. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்டு நடாத்திய வாக்குச் சீட்டுக் கொள்ளைக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தின் பெறுமதிமிக்க நூல் நிலையத்தினைச் சாம்பலாக்கி ஆத்திரமூட்டும் யுத்த நடவடிக்கைகளுக்கு முன்நடவடிக்கையாகியது. இதனை முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் பொலிசார் நடத்தினர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக

இனவாத யுத்த தீச்சுவாலைகளை மூட்டுவதற்கு ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தொடர்ந்து வந்த வேலைகள் தோட்டத்துறை தமிழ் தொழிலாளர்களுக்கு எதிராக மற்றுமோர் கட்டத்தை எட்டியது.

1974 ஜனவரி 29ம் திகதி கைச்சாத்தான ஸ்ரீமா-இந்திரா காந்தி ஒப்பந்தம் மூலம் மேலும் 75,000 தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த தீர்மானம் செய்யப்பட்டது. 1964 ஸ்ரீமா -சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்ட 525,000 பேருடன் இந்தப் புதிய தொகையும் சேர்க்கப்பட வேண்டும். 1964 மாபெரும் காட்டிக்கொடுப்பின் கீழ் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்த சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் புதிய நடவடிக்கைகளையும் ஒருமனதாக அங்கீகரித்தன.

1949 குடியுரிமை மசோதாவின் மூலம், மலைநாட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இனவாத சிங்கள முதலாளித்துவ அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், முழுத் தமிழ் மக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்ட வழிசமைத்துக் கொடுத்தது என்பதை தமிழ் மக்கள் இத்தருணத்தில் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். ஆதலால் தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்கள் ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தத்தை தமக்கு எதிராக உக்கிரமடையும் இனவாத தாக்குதலின் ஒரு பாகமாக புரிந்து கொண்டிருந்தனர்.

இந்தத் தமிழ் பொதுஜன அபிப்பிராயம், அன்று அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக விளங்கியதைப் போலவே இன்று தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவ தலைமை கொண்டிருந்த கருத்துக்கும் முரண்பட்டதாக விளங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கை, ஸ்ரீமா-இந்திரா உடன்படிக்கைக்கு வக்காலத்து வாங்கும் விதத்தில் கூறியதாவது: அது "நாடற்றவர் என்ற அவல நிலையில் இருந்து தோட்டத் தொழிலாளர்களை விடுவிப்பதாகும்" என்றது.

தமிழ்நாட்டு முதலாளிகளதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் சிங்கள இனவாத ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக உக்கிரமாக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாக வடக்கில் கச்சதீவினை இலங்கைக்கு வழங்க முன்வந்ததும் இந்தத் தருணத்திலேயேயாகும்.

கடலில்போகும் மீனவர்களின் ஒரு தற்காலிக ஓய்வுக்களமாக மட்டுமே இது பயன்பட்டது. மக்கள் குடியிருப்பு இல்லாத இந்தக் காட்டுத் தீவை இலங்கைக்கு எழுதிக் கொடுத்தமையை, முதலாளித்துவக் கூட்டரசாங்கம் ஒரு மாபெரும் வெற்றியாகக் காட்டிக் கொண்டது. 1948ல் மலர்க் கொத்துக்களைச் சார்த்தி பெற்ற சுதந்திரம் எனப்பட்டது, ஏகாதிபத்தியவாதிகளும் தேசிய முதலாளிகளும் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக சிருஷ்டித்த ஒரு சதியாகியதைப் போலவே, கச்சதீவு வெற்றியும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவப் பிடி தொடர்ந்தும் நீடிப்பதற்காக இனவாதக் குத்துவெட்டல்களைத் தூண்டிவிடும் பிற்போக்குத் திட்டத்தின் ஒரு பாகமே தவிர வேறொன்றும் அல்ல. பின்னர் இனவாத யுத்தப் பிளம்புகளின் மத்தியில் இலங்கையிலும் இந்தியாவிலும் மீனவர்களைத் தண்டிக்கவும் சித்திரவதைக்கு உள்ளாக்கவும் ஒரு சுவர்க்கமாக கச்சத்தீவு எல்லையை பாவிக்கின்றமை இதை நன்கு நிரூபித்துள்ளது.

இத்தகைய துன்பகரமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருந்தாலும், கச்சதீவு வெற்றி முதலாளித்துவ கூட்டரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் ஆழமான கேலிக்கூத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்தது.

உலக நிலைமையின் பாரதூரமான மாற்றம்

சீர்திருத்தவாத சமசமாஜக் கட்சித் தலைவர்கள் முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தை திணித்தபோது இருந்த வந்த உலக நிலைமை இன்று பாரதூரமான விதத்தில் மாற்றம் கண்டுவிட்டது. யுத்தத்தின் பின்னைய உலக ஏகாதிபத்திய அமைப்பின் எதிரில் தலைகுனிந்து, நான்காம் அகிலத்தின் சுயாதீன புரட்சிகரப் பணியை நிராகரித்த பப்லோவாதத்தின் கைத்தேங்காயாகச் செயற்பட்ட சமசமாஜக் கட்சியும் அதன் தலைமையும், முதலாளித்துவம் அதனது அடிப்படை முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டுவிட்டது என்ற மாயையில் மூழ்கி இருந்தன. இந்த மாயைக்கு இணங்க கணக்குப் போட்டுக் கொண்ட இவர்கள், ட்ரொட்ஸ்கிச அனைத்துலக் குழுவுக்கு எதிராக, சோசலிசத்தின் ஊடாகப் பாராளுமன்றப் பாதை ஒன்றும், முதலாளிகளை இடதுபக்கம் (இடதுசாரிகளாக) தள்ளிச் செல்லும் சந்தர்ப்பமும் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டனர். 

இந்த மார்க்சிச எதிர்ப்பு, ஸ்டாலினிச சார்பு நப்பாசைகள் 1971 ஆகஸ்ட்டில் தங்கத்துக்கும் டாலருக்கும் இடையேயான மதிப்பு தொடர்பான உடன்பாடு சிதறுண்டு போனதாலும் அதன் பெறுபேறாக, சகல பொருட்களின் விலைகளும் அவ்வாறே சிறப்பாக எண்ணெய் விலையும் பன்மடங்கால் அதிகரித்ததாலும் தோன்றியது. சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் பதுங்கிக் கொண்டு, இந்த உலக முதலாளித்துவ நெருக்கடியை பொதுமக்களின் கண்களில் இருந்து மூடி மறைக்க தலைகீழாக நின்று வந்தனர். அது முக்கியமாக அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதி சமர்ப்பித்த உலக சோசலிச முன்நோக்கிற்கு எதிராக இடம்பெற்றது.

மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தினை எந்த விதத்திலும் புரிந்து கொண்டிராத சமசமாஜக் கடசித் தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரா, தாம் கலாநிதிப் பட்டத்தை தீட்டிக்கொள்ள சார்ந்திருந்த கீன்சியன்(Keynesian)பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில் புதிய கீன்ஸ் ஆகிவிட முயற்சித்தார். கீன்சின் கோட்பாடுகளின்படி ஸ்தாபிதம் செய்யப்பட்ட பிரெட்டென்வூட்ஸ் ஒப்பந்தம் தங்கத்துக்கும் டாலருக்கும் இடையே சிருஷ்டித்த நிலையான உறவு வீழ்ச்சி கண்டுள்ள நிலைமையில், கடதாசி தங்கத்தை(paper gold)அங்கீகரிக்கும் ஒரு அர்த்தமற்ற கோட்பாட்டை அவர் முதலாளித்துவ உலகுக்கு முன்வைத்தார். எந்தவொரு பொறுப்புள்ள முதலாளித்துவப் பொருளியலாளரும் அவரின் வழித்தடுமாற்றம் நிறைந்த கோட்பாட்டுக்கு இணக்கம் காட்ட முன்வந்ததில்லை. ஆதலால், அது சமசமாஜ தலைமை அலுவலகத்திலும் முதலாளித்துவ கூட்டரசாங்க தஸ்தாவேஜுக்களிடையேயும் மீண்டும் தலையெடுக்க முடியாத விதத்தில் புதையுண்டு போயிற்று.

அர்த்தமற்ற அது வெடித்துச் சிதறுண்டு போனதன் பின்னர், சமசமாஜக் கட்சி தலைவர்களும் கதியற்றுப் போன கூட்டரசாங்கமும் இலங்கையில் எண்ணெய் தோண்டும் முயற்சியில் தொங்கினர். இதற்குப் பெரும் ஊக்கமாக கச்சதீவு வெற்றி பறைசாற்றப்பட்டது. ஸ்டாலினிச கம்யூனிஸட் கட்சி உடனடியாக சோவியத் யூனியனில் இருந்து எண்ணெய் அகழ்வாராய்ச்சி நிபுணர்ளைத் தருவித்துக் கொண்டு இந்தச் செப்படி வித்தைக்கு மேலும் கோலங்கள் போட்டது.

எனினும் இந்த மோசடி 'சந்திரனில் இருந்து அரசி எடுத்துத் தருவோம்' என கூட்டரசாங்கம் 1970 பொதுத் தேர்தலில் வழங்கிய பொய் வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைவானது அல்ல. இப்போது அவர்கள் கச்சதீவின் நாற்புறமும் உள்ள மணல்களைத் தோண்டி எண்ணை எடுப்பதாக நாடுபூராவும் அலைந்து வாக்குறுதி அளித்தனர்.

இந்தப் பொய்யளப்புக்களின் பின்னணியில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக தொடுக்க ஆரம்பித்திருந்த இனவாத யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனம் விளங்கியது. இந்த எண்ணெய் வளத்தை குழி தோண்டி புதைக்கும் கொடூரமான இயக்கமே தமிழ் மக்களின் எதிர்ப்பு இயக்கம், என்ற மிகைப்படுத்தல் அந்த இலக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பொய் வாக்குறுதிகளால் கவரப்பட்ட பொது மக்களை தட்டுத் தடுமாற வைத்த இன்றைய நவசமசமாஜ கட்சித் தலைவர்கள் உட்பட சமசமாஜ - கம்யூனிஸ்ட் கட்சிகளின் அங்கத்தவர்களில் எவரையும் ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமையாக எவரும் பெயர் குறிப்பிட முடியுமா? இந்தப் பிரச்சினைக்கான பதிலை சகல வர்க்க நனவுள்ள தொழிலாளியும் ஒடுக்கப்படும் மக்களும் இளைஞர்களும் தீர்க்கமான முறையில் மனம் கொண்டாக வேண்டும்.

பிற்போக்கு, இனவாத 1972 அரசியல் அமைப்புச் சட்டத்தினை நிறைவேற்றியமையும் அதன் அடிப்படையில் தொடுத்த இனவாத யுத்த நடவடிக்கைகளையும் அங்கீகரித்த சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள், பொது மக்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கும் பொருட்டு இழைத்த சகல வேலைகளுக்கும் இன்று பொதுமக்களே நட்டஈடு கொடுக்க நேரிட்டுள்ளது. 1940 களில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் சார்பில் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் ஸ்டாலினிசத்திற்கும் எதிராக ஈவிரக்கமற்ற முறையில் போராடி கட்டி எழுப்பிய அரசியல் உருவத்தை, 1964 காட்டிக்கொடுப்பின் பின்னர் முதலாளித்துவ ஆட்சியின் பங்குதாரர்களாக மாறியதன் மூலம் அவமானத்திற்கு உள்ளாகிய சமசமாஜ கட்சித் தலைவர்கள், 1975ல் வரட்டிப் பாண் கடையாகியது ஒன்றும் புதுமை அல்ல.

1975ல் சிறிமாவோ பண்டாரநாயக்க, சமசமாஜ தலைவர்களுக்கு சவால் விடுத்து, அதே ஆண்டில் நடைபெற்ற ஹர்த்தால் நினைவு தினக் கூட்டத்தில், அந்தத் தலைவர்கள் செவல பண்டாவின் பிற்போக்கு உருவத்தை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டிய போது, அது பெரும் புதுமையான சம்பவமாகியது. அத்தருணத்தில் கூட்டரசாங்க அரசியலின் கீழ் பொது மக்கள் மத்தியில் சமசமாஜக் கட்சித் தலைவர்களின் உருவமே அவமானத்திற்கு உள்ளாகி இருந்தது என்பதை முதலாளித்துவ ஆட்சியாளர் என்ற வகையில் நன்கு அறிந்தே அவர் இந்த சவாலை விடுத்தார். முதலாளித்துவ சார்பு சந்தர்ப்பவாதத்தினுள் சேடம் இழுக்கும் அளவுக்கு தலைமூழ்கிப் போயிருந்த சமசமாஜ தலைவர்கள் அநாதை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமது உருவத்தை எப்பாடுபட்டேனும் குறைந்தபட்சம் ஒரு சில அமைச்சர் பதவிகளையும் அவற்றைச் சுற்றி குந்தி எழும்பும் வயிற்றுமாரி கொசு கும்பல்களின் வயிற்றுப்பிழைப்பையும் கணக்கில் கொண்டு, பிரதமரிடம் மன்னிப்புக் கோரியேனும் அரசாங்கத்தில் தொங்கிக்கொள்ள சமசமாஜ தலைமைப் பீடத்தில் கொல்வி. ஆர். டி. சில்வா பிரேரித்தமையும் ஒரு பரிதாபகரமான முயற்சியாகியது. சமசமாஜ கட்சிக்குள் இருந்துகொண்டே அத்தருணத்தில் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் அணிதிரண்டிருந்த வாசுதேவ நாணயக்காரவும் இந்த நரித் தந்திரத்தை அங்கீகரித்தமையும் பின்னர் அம்பலத்திற்கு வந்திருந்தது. ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படையில் கம்பீரமாகத் தோன்றினாலும் தேசியவாத சந்தர்ப்பவாதத்தில் தலைமூழ்கி சீரழிந்து போனமைக்காக நல்ல படிப்பினை இந்த பரிதாபகரமான சந்தர்ப்பத்துக்குள் பொதிந்து போயுள்ளது.

யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் பிளவு: 1975ன் பின்னர்

1964ல் தொழிலாளர்களின் 21 கோரிக்கைகள் இயக்கம் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யும் விதத்தில் வளர்ச்சி கண்டு வருகையில், அரசாங்கத்தை காக்கும் பொருட்டு கம்பளம் விரித்து அழைத்துக் கொள்ளப்பட்ட சமசமாஜத் தலைவர்கள், அதில் இருந்து 11 ஆண்டுகளின் பின்னர் 1975ல் காலால் உதைக்கப்பட்டு கலைக்கப்பட்டமையானது உலகளாவிய ரீதியில் பற்றிப் படர்ந்து வந்த வலதுசாரிப் போக்கினை சுட்டிக்காட்டியது. 1968-75க்கு இடைப்பட்ட காலத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு முகம் கொடுத்த நெருக்கடி நிலைமையின் மத்தியில் தோன்றிய மக்கள் கிளர்ச்சி அலைகளை பின்வாங்கச் செய்து சீரமைத்துக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு பதில் நடவடிக்கையும் அதன் மூலம் வெளிப்பாடாகியது. இலங்கையில் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலவே உலகம் பூராவும் ஸ்டாலினிச மற்றும் சீர்திருத்தவாத முதலாளித்துவ கையாட்கள் பப்லோவாதிகளின் உதவியுடன் பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிலும் அவ்வாறே இந்தியத் துணைக்கண்டம் போன்ற பின்தங்கிய நாடுகளிலும் பற்றிப் படர்ந்து வந்த ஒரு தொகை மக்கள் கிளர்ச்சிகளை முதலாளித்துவ சிறையினுள் சிறைபிடித்து வைக்க முயன்றனர். 1975ல் வியட்நாமிலும் கம்போடியாவிலும் லாவோசிலும் அமெரிக்க ஏகாதிபத்திய கைப்பொம்மை ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்டமை இந்த மக்கள் கிளர்ச்சியின் உச்சக் கட்டமாக விளங்கியது. தேசியவாத ஸ்டாலினிஸ்ட்டுகள், இவற்றையும் சோசலிச விடுதலையை நோக்கிய பாய்ச்சலாக அல்லாது காலனித்துவ பின்தங்கிய நிலைமையின் அதி உயர்ந்த கட்டமாக வரையறுத்துக்கொள்வதில் கண்டிப்பாக இருந்தனர். எனினும், தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் தமது ஆட்சி அதிகாரத்திற்கு சவால் விடுப்பது சம்பந்தமாக, அவர்கள் தொடர்பாக பீதியும் ஆத்திரமும் கொண்ட ஆளும் வர்க்கம் 1975 கடைப்பகுதியில் நடவடிக்கையில் இறங்கிக்கொண்டன.

இந்தியாவில் இந்திரா காந்தி பிரசித்திபெற்ற அவசரகால சட்ட ஆட்சியை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு எதிராக 1975ல் களத்தில் குதித்தார். 1971ல் சுதந்திரம் எனப்படுவதை பெற்றுக்கொண்ட பங்களாதேஷின் விடுதலை நாயகனாக நடித்த முஜுபுர் ரஹுமான் 1975ல் தனிக்கட்சி ஜனாதிபதி சர்வாதிகாரத்தினை திணித்தார். அதே ஆண்டில் அவரின் மரண சடங்கின் மீதாகவே இராணுவம் "மார்ஷல் சட்ட" ஆட்சிக்கு பங்களாதேஷ் மக்களை கீழ்ப்படுத்தியது. பாகிஸ்தானில் அலி பூட்டோ ஜனநாயகத்துடன் கொண்டிருந்த இரத்தம் தோய்ந்த காதலை முடிவுக்கு கொண்டுவந்து, 1977ல் ஷியா ஹுல் ஹக் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இலங்கையினுள் கூட்டரசாங்கத்தின் கீழ் பீலிக்ஸ் பண்டாரநாயக்கவை சுற்றி திரண்ட அதிகாரம் படைத்தவர்களின் கும்பல், சமசமாஜக் கட்சி தலைவர்களின் துரோகத்தினால் குழம்பிப்போயிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஒடுக்கப்படும் மக்கள் மீதும் மிலேச்சத் தாக்குதல் தொடுப்பதற்கு களம் அமைத்துக்கொள்ள இணைந்து கொண்டது. இந்நிலையில் சமசமாஜக் கட்சி இழைத்த காட்டிக்கொடுப்பிற்கு அதற்குக் கிடைத்த பரிசு கால் உதையாகும்.

இதன் மூலம், சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களை கூட்டரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த கோரிக்கையை சூழ, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக பொது மக்களிடையே முன்னெடுத்த இயக்கத்தின் காலப் பொருத்தம் மேலும் ருசுப்படுத்தப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்தினதும் தமிழ் மக்கள் உட்பட ஒடுக்கப்படும் மக்களினதும் உரிமைகளைக் காக்கும் போராட்டத்திற்கு அத்தியாவசியமான நிலைமை, முதலாளி வர்க்கத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக அரசியல் நடைமுறையில் கால் ஊன்றுவதாகும். ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மையமான இதற்கு புறமுதுகு காட்டியவர்களுக்கு வரலாற்றில் இந்த நூற்றாண்டு பூராவும் கிடைத்துள்ள கசையடி படுமோசமானது. சமசமாஜ தலைவர்களுக்கு கிடைத்த காலுதை இதில் இருந்து வேறுபட்டது அல்ல.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாளர் வர்க்க சுயாதீன அரசியல் நடைமுறைக்காக முன்னெடுத்த போராட்டம் நனவான தொழிலாளர் இளைஞர் பகுதியினர் இடையே ஈர்ப்பை வெற்றிகொண்ட போதிலும் இன்னமும் அது பொது மக்கள் இயக்கத்தினுள் சிறிதாக விளங்கியது. இதன் கொடிய எதிரியாக சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களைப் போலவே சகல வகையறாக்களைச் சேர்ந்த திரிபுவாதிகளும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் செயல்பட்டனர். இவர்கள் சகலரும் வலதுசாரிகளை பலப்படுத்துவதிலும் 1977ல் யூ.என்.பி. க்கு ஐந்தில் நான்கு பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை கையளிப்பதிலும் பங்காளர்களாக விளங்கினர்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பரிணாமம்

இந்த வலதுசரி அழுத்தம் தமிழ் முதலாளித்துவ அரசியல் இயக்கத்தின் உள்ளும் சமகாலத்தில் வெளிப்படச் செய்தது.

இந்த வலதுசாரி ஈர்ப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணி தனித் தமிழீழ அரசு பற்றிய சுலோகத்தைக் கையாண்டதன் மூலம் வெளிப்பாடாகியது. 1975 பெப்பிரவரி 6ல் நடைபெற்ற காங்கேசன்துறை இடைத்தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரச்சாரங்களில் அடிநாதமாக விளங்கியது இதுவே.

காங்கேசன்துறை இடைத்தேர்தலில் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த ஸ்டாலினிஸ்டான வி. பொன்னம்பலம் ஆவார். அது ஸ்டாலினிசம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பத்தில் இருந்து எடுத்த திருப்பத்தைக் குறித்து நிற்கின்றது. இங்கு நிச்சயமாக ஒருவருக்கு நினைவுக்கு வருவது ஸ்டாலினுக்கு எதிராக லெனின் தமது நோய்ப்படுக்கையில் இருந்தபடியே நடாத்திய போராட்டக் காலகட்டமாகும். ஸ்டாலினுக்கு எதிராக லெனின் சமரசம் அற்ற முறையில் போராடிய ஒரு அம்சம், ஜோர்ஜியா சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டதில் இருந்து ஜோர்ஜியன் தேசிய இனத்தவர்களுக்கு எதிராக ஜோர்ஜியன் தேசிய இனத்தவரான ஸ்டாலினால் ரூஷ்ய பேரினவாதத்தினைக் கட்டியணைத்துக் கொண்டு பலாத்காரத்தையும் காடைத்தனங்களையும் கையாண்டதாகும். அது பற்றிய விபரங்களை தர இந்தக் கட்டுரையில் அவகாசம் இல்லாத போதிலும், அந்த காட்டுமிராண்டி பேரினவாத சம்பிரதாயங்களை முன்னெடுத்த இலங்கை ஸ்டாலினிஸ்டுகள், தமது வேட்பாளரை தமிழ் மக்களிடையே தேர்ந்தெடுத்துக் கொண்டு சிங்கள பேரினவாத முதலாளித்துவ அரசாங்கத்தின் பிரதிநிதியாக காங்கேசன்துறைத் தொகுதிக்கு நிறுத்தியமை நிச்சயமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

இடைத் தேர்தலில் தமிழர் ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். வெற்றியின் பின்னர் செல்வநாயகம் ஆற்றிய உரையில், அனைத்து சிங்கள அரசாங்கங்கள் மீதும் குற்றஞ்சாட்டி பின்வருமாறு குறிப்பிட்டார். "ஆட்சியிலிருந்த சகல சிங்கள அரசாங்கங்களும், எமது அடிப்படை உரிமைகளை மறுத்தும் எம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைக்குத் தள்ளுவதற்காக சுதந்திரத்தில் இருந்து பெருக்கெடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும் வந்துள்ளன என்பது துன்பகரமானது. நான் எனது மக்களுக்கும் நாட்டுக்கும் கூற விரும்புவது என்னவெனில், ஏற்கனவே தமிழ் மக்களுக்குரிய இறைமையை அனுபவித்த தமிழீழ தேசிய இனம் சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒரு ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன் என்பதையே ஆகும். தமிழர் ஐக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்."

அதில் இருந்து தனித் தமிழீழ அரசுக்காக தமிழர் ஐக்கிய முன்னணி தொடுத்த பிரச்சாரத்தின் முக்கிய பேச்சாளராக அ. அமிர்தலிங்கம் விளங்கினார். அது அவரின் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் குத்துக்கரணமாக விளங்கியது. அதற்குக் காரணம், தனித் தமிழ் அரசு பற்றிய கோரிக்கை 1964ல் முதலில் தலைநீட்டிய போது அதன் முக்கிய எதிர்ப்புப் பேச்சாளராக அவர் விளங்கியதேயாகும்.

தனித் தமிழீழ அரசு பற்றிய கருத்து முதன் முதலில் சுந்தரலிங்கத்தினால் 1960களின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. அக்கருத்தின் அடிப்படையில் சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற ஒரு கட்சியையும் அமைத்துக்கொண்டு, 1960 மார்ச், ஜூலை பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டார். அந்தத் தேர்தல் இயக்கத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சுந்தரலிங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணியில் நின்றவர் அமிர்தலிங்கம்.

இருப்பினும் 1960 டிசம்பரில் தமிழரசுக் கட்சி செயற் குழுவினுள் சுந்தரலிங்கத்தின் கருத்து ஒரு பிரேரணை உருவில் வவுனியாவைச் சேர்ந்த ஏ. சிற்றம்பலத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. அது 1960ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதன் பின்னராகும். கமிட்டியின் 37 பேர் பிரேரணைக்கு ஆதரவாகப் பேசிய நிலைமையில், அதற்கு எதிரான விவாதத்துக்கு மீண்டும் முன்னணியில் நின்றவர் அமிர்தலிங்கமே. இன்னமும் அத்தகைய ஒரு பிரச்சாரத்துக்கு காலம் வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். "பிரிந்து போவது பற்றி யோசிப்பதற்கு இன்னமும் காலம் வந்துவிடவில்லை" என அவர் அன்று கண்டிப்பாகக் குறிப்பிட்டார்.

1975 அளவில் தமிழர் ஐக்கிய முன்னணியினுள்ளும் அமிர்தலிங்கத்தினுள்ளும் உருவான பரிணாமத்தின் பின்னணியில் இருந்த முக்கிய காரணி, சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்குகொண்ட முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் 1972 அரசியலமைப்புச் சட்டமும் அதன் அடிப்படையில் யுத்தப் பாதையில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் உக்கிரமாக்கியமையும் விளங்கியது. ஒரு தமிழ் முதலாளித்துவக் கட்சி என்ற முறையில், தமிழர் விடுதலைக் கூட்டணியானது தமிழ் மக்களிடையே சிங்கள இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராகத் தோன்றிய எதிர்ப்புக்களைச் சுரண்டிக் கொண்ட தமிழ் முதலாளிகளின் வசதி வாய்ப்புக்களை உறுதிசெய்யும் தனிநாட்டை இலக்காகக் கொண்டே ஒழுங்கமைக்கப்பட்டது. அது தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்யும் அவசியத்தினால் உருவானது அல்ல. தமிழ் மக்களை சுரண்டிக்கொள்ளும் அவகாசத்தினை வழங்குவதற்கான பிற்போக்கு முதலாளித்துவ அவசியங்களுக்கு மட்டும் அவர்கள் தயாரானார்கள்.

1975 இலும் அதன் பின்னரும் கொழும்பு ஆளும் வர்க்கம் தமிழ் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் உக்கிரமாக்கப்பட்டதைப் பற்றி எந்தவொரு மன்னிப்பும் வழங்காவிட்டாலும், தனி அரசு கோட்பாட்டை நோக்கி தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் திரும்பியமை, உலக அரசியல் நிலைமையினுள் வலதுசாரி நிலைப்பாடுகள் பலமடைந்ததுடன் தொடர்புபட்டதே என்பதை கூறாமல் இருக்க முடியாது.

முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினைப் போலவே, இனவாத தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிற்போக்கு வேலைத்திட்டங்களைத் தோற்கடிக்கும் சாத்தியம், இன்று போலவே அன்றும் அனத்துலகவாத புரட்சிகர வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் போராடிய ட்ரொட்ஸ்கிச அமைப்புக்கே உரியதாக விளங்கியது.

1975 பெப்பிரவரியில் இடம்பெற்ற காங்கேசன்துறை இடைத் தேர்தலை வென்றதன் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினால் வெளியிடப்பட்டதும் அமிர்தலிங்கத்தினால் மக்கள் பிரச்சாரத்துக்காக முன்வைக்கப்பட்டதுமான தனிநாடு கோரிக்கை, 1976 மே 14ம் திகதி நடைபெற்ற கட்சியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில் அக் கட்சியின் உத்தியோகபூர்வமான அரசியல் நிலைப்பாடாகியது. அந்த மகாநாட்டில் தமிழர் ஐக்கிய முன்னணியை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) எனப் பெயர் மாற்றவும் தீர்மானம் செய்யப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தத் தீர்மானத்தின் பின்னணியில், அனைத்துலக மற்றும் தேசிய ரீதியிலான ஒரு அரசியல் பரிணாம நிலைமையும் இருந்து கொண்டிருந்தது.

1. கூட்டரசாங்கத்தின் குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஆண்டு நிறைவான 1975 மே 22ம் திகதி, தமது கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியில் இருந்து இராஜினாமாச் செய்த யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, இடைத் தேர்தலை நடத்தும்படி கோரிக்கை விடுத்தார். அன்றைய கூட்டரசாங்கத்திற்குப் பதிலாக எதுவிதமான ஈடாட்டமும் இல்லாது ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய சபதம் பூண்ட, ஒரு பயங்கரமான வலதுசாரி அரசாங்கத்தினை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு மத்தியதர வர்க்கத்தினையும் குட்டி முதலாளித்துவத் தட்டினைரையும் அணிதிரட்டும் முயற்சியின் ஒரு திருப்பு முனையாக அது விளங்கியது.

யூ.என்.பி. அத்தகைய 'ஒரு துணிச்சலான' ஆரம்பிப்பில் இறங்கியமை, அனைத்துலக அரசியல் நிலைமையின் தாக்கத்தினால் ஏற்பட்டது அல்ல என பிறப்பிலேயே குருடாகப் பிறந்த ஒரு தேசியவாதியினால் மட்டுமே கூற முடியும். 1975ம் ஆண்டு ஏப்பிரலின் முதல் இரண்டு கிழமைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பெற்ற பிரமாண்டமான தோல்விகளால் நிறைந்து போயிருந்தது. கம்போடியா, லாவோஸ், வியட்னாமைக் கைப்பற்றிக் கொண்டிருந்த அமெரிக்கப் படைகள், பொது மக்களின் போராட்டங்களின் எதிரில் உயிரைப் பிடித்துக் கொள்வதற்காக கிடுநடுக்கம் பிடித்து ஓட்டம் பிடிக்கும் நிலை உருவானது. தெற்காசியாவில் இந்த ஆட்சி மையங்கள் சிதறடிக்கப்பட்ட ஒரு நிலைமையில், வெகு விரைவில் வேறு முகாம்களை அமைத்துக் கொள்ளும் அவசியம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்டது. இலங்கையில் யங்கி டிக்கி (ஜே.ஆர். ஜயவர்தன) இதற்குப் பொருத்தமான கைப்பொம்மையென அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டனர். அதற்கு அவரின் ஆட்சியை உறுதியாக்க செய்யவேண்டிய சகலதையும் செய்ய அவர்கள் முன்வருவர் என எதிர்பார்க்க முடிந்தது. 1975 மே மாதத்தில் யூ.என்.பி.யின் "துணிச்சலான" சவாலின் பின்னணியாக, இந்த பிற்போக்கு ஏகாதிபத்திய ஆதரவு விளங்கியது.

இந்த ஏகாதிபத்திய திட்டங்களை சவால் செய்வதை முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் நிராகரித்தது. கொழும்பு தெற்கு தொகுதியில் சமசமாஜக் கட்சி தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருந்த போதிலும், கூட்டரசாங்கம் யங்கி டிக்கியுடன் தேர்தலில் போட்டியிட சிங்கள இனவாத கூச்சல்களுக்குப் பேர் போனவரான ஆர். ஆர். சூரியப்பெருமவையே நிறுத்தியது. இவர் பிற்போக்கு முகாமில் இருந்து கொண்டு காலத்துக்கு காலம் முகாமை மாற்றிக் கொண்டு, தோல்வி கண்டு வந்தவராவார். யங்கி டிக்கியை வெற்றியீட்ட வைக்கும் அமெரிக்கத் திட்டத்திற்கு இணங்க இது இடம்பெற்றது என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. சிறப்பாக கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியைச் சேர்ந்த வெள்ளவத்தை, கிருலப்பனை பகுதிகளில் வாழ்ந்த இலட்சோப லட்சம் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மேலும் குழப்பியடித்து நிராயுதபாணியாக்க இது திட்டமிடப்பட்டு நடைமுறைக்கிடப்பட்டது என்பதில் ஐயம் கிடையாது. தமிழர் ஐக்கிய முன்னணி வெளிப்படையாக இல்லாது போனாலும் யூ.என்.பி. க்கே ஆதரவு வழங்கியது. தொண்டமான் தமது யூ.என்.பி. ஆதரவு நிலைப்பாட்டை முன்கூட்டியே பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்ற விதத்தில் யூ.என்.பி. ஆட்சியை அமைப்பதற்கான இந்த ஆரம்ப நடவடிக்கைக்கு ஏற்றவாறு, சமசமாஜ-ஸ்டாலினிச துரோகிகளும் பங்கு கொண்ட முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தினதும் மற்றும் தமிழ் முதலாளித்துவப் பகுதியினரதும் வேலைத் திட்டங்களுக்கும் எதிராக, அந்த இடைத் தேர்தலினுள் சவால் செய்த ஒரே அரசியல் கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். அனைத்துலக சோசலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு முதலாளித்துவ கூட்டரசாங்கம் ஒரு பெரும் சவாலாக இருக்காதது போலவே, ஆட்சியைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருந்த யூ.என்.பி.யும் ஒரு சவாலாக இருக்கவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அன்று மத்திய குழு உறுப்பினரான ஆனந்த வக்கும்புரவை இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தி, சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டி இட்டு நிரப்ப வேண்டிய அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான போராட்டத்தில் இறங்கியது. கூட்டரசாங்கத்தின் வலதுசாரி ஈர்ப்பு மற்றும் யூ.என்.பி.யின் சவாலுக்கும் மத்தியில் சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முகம் கொடுத்து வந்த பெரும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி, அவர்கள் எடுக்க வேண்டிய அரசியல் தயாரிப்புக்களை தெளிவுபடுத்தியது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். அந்தத் தெளிவுபடுத்தல்களின் பொருத்தத்தையும் செல்லுபடியான தன்மையையும் அளவிட வேண்டியது பு.க.க. பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. அன்று போலவே பிற்காலத்திலும் பொது மக்கள் புறநிலை ரீதியில் கண்ட வரலாற்று நிலைமைகளுக்கு இணங்கவே அளவிட்டாக வேண்டும். அன்று பு.க.க. முன்வைத்த அரசியல் ஆய்வுகளுக்கும் மாற்று வேலைத் திட்டத்துக்கும் முழுப் புள்ளி கிடைக்கின்றது.

2. கொழும்பு தெற்கு தொகுதி இடைத் தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன அதிகப்படியான பெரும்பான்மை (25,800) வாக்குகளால் வெற்றி கண்டதன் பின்னர் கூட்டரசாங்கத்தின் வலதுசாரி பயணம் யூ.என்.பி.யுடன் போட்டிக்கு இடம்பெற்றது. ஜூலை 18ம் திகதி இடம்பெற்ற இடைத் தேர்தலின் சூடு இன்னமும் தணியாத ஒரு நிலையில், முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சித் தலைவர்களை கூட்டரசாங்க்ததில் இருந்து வெளியில் தள்ளத் தீர்மானித்தது. 1975 ஆகஸ்ட் 12ம் திகதி இடம்பெற்ற ஹர்த்தால் நினைவுதினக் கூட்டத்தில் என்.எம். பெரேரா நிகழ்த்திய பேச்சு இதற்கு சாட்டாக கொள்ளப்பட்டது.

என்.எம். பெரேரா அன்று நிகழ்த்திய உரை, இன்று வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் எதிரில் செய்யும் கோழைத்தனமான கெஞ்சல்களைக் காட்டிலும் அப்படி ஒன்றும் சவாலானதாக இருக்கவில்லை. சமசமாஜ தலைவர் அரசாங்கத்துக்கு நினைவூட்டியது எல்லாம் மக்களை குழப்ப தம்மால் சோடிக்கப்பட்ட கட்டுக் கதையையேயாகும். அதாவது "சோசலிசத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவே நாம் அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டுள்ளோம்" என்பதேயாகும்.

இந்தப் பொய் கட்டுக்கதைகளுள் ஒழிந்துகொண்ட சமசமாஜ தலைவர்கள், கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொண்ட நாளில் இருந்து அதுவரை ஆற்றிய ஏகாதிபத்தியச் சார்பு கடமை பற்றி எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடம் இருக்கவில்லை. எனினும், சிறப்பாக ஐரோப்பா பூராவும் 1968-75க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பரந்து வந்த தொழிலாளர் வர்க்கப் போராட்டத் தொடர்களினால் உருவான பீதியில் இருந்து தலையெடுக்க துரோத் தலைவர்களின் ஒத்துழைப்பை பயன்படுத்திக் கொண்ட ஏகாதிபதியவாதிகள், இலங்கையில் வர்க்கக் கிளர்ச்சிகளின் நிலைமைகளை முன்கூட்டியே சிதறடித்துவிட ஊக்கத்துடன் செயற்பட்டனர். இரத்தம் தோய்ந்த துரோகங்களினால் பொதுமக்களின் எதிரில் நாற்றம் கண்டுபோய்க் கிடந்த சமசமாஜத் தலைவர்களை வெளியே தள்ளி, வலதுசாரி அகதிகளாக்குவது அதற்கு உதவியாக இருக்கும் என அவர்கள் கணக்குப் போட்டனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த எச்சரிக்கை

எதிர்வந்து கொண்டுள்ள இந்த நிலைமையைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்தது ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் முன்னணி வாதத்தை எதிர்த்துப் போராடி வந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். "முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்து வெளியேறு" என சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களை நெருக்க பு.க.க. முன்வைத்த சுலோகத்தைச் சூழ, முன்கூட்டியே தனது அரசியல் சுயாதீனத்தினை மீண்டும் ஸ்தாபிதம் செய்யப் போராடாமல் இருந்திருக்கும் அளவுக்கு, தொழிலாளர் வர்க்கம் அரசியல் ரீதியில் நிராயுதபாணியாகி, ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவில் இருந்து தனிமைப்பட்டும் இருந்தது. பிற்போக்காளர்களின் கால் உதையை வாங்கிக் கொண்டு ஈடாட்டம் கண்டவர்களாக பின் கதவினால் வெளியே தூக்கி வீசப்படும் "தொழிலாளர் கட்சிகள்" அத்தகைய ஒரு நிலைமையில் இட்டு நிரப்பக்கூடிய முற்போக்குப் பாத்திரம் எதுவும் கிடையாது. சமசமாஜக் கட்சி தனது நடைமுறை மூலம் அன்றில் இருந்து இன்றுவரை இந்த உண்மையை நிரூபித்துக்கொண்டுள்ளது.

நாம் மேலே காட்டிய ஒரு அரசியல் பின்னணியின் கீழேயே தனிநாடு கோரிக்கையையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகப் பெயர் சூட்டிக்கொள்வதையும் நிறைவேற்றிக்கொண்டிருந்த வட்டுக்கோட்டை மகாநாடு, தமிழர் ஐக்கிய முன்னணியால் நடாத்தப்பட்டது.

இத்தகைய ஒரு பின்னணியானது முதலாளித்துவ, முதலாளித்துவ சார்பு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கலாக அரசியல் மேற்கட்டுமானத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மட்டும் அல்லாது வர்க்கப் போராட்டங்களின் தீவிரத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருந்தது. சிங்களம் பேசும் தொழிலாளர் வர்க்கத்தினை முதலாளித்துவ கூட்டரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்களில் இருந்து மீட்டு போராட்டப் பாதையில் இழுத்து வைத்திருந்ததைப் போலவே, வடக்கில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களும், கூட்டரசாங்கம் இனவாத தாக்குதல்களுக்குள் கட்டிப்போட்டு தமது வாழ்க்கைக்கு தொடுத்த தாக்குதல்களுக்கு எதிராகவும் கிளர்ந்து போராடும் நிலைமைக்கு கிளம்பினர். இத்தகைய ஒரு கூட்டுத் தாக்குதலை நசுக்குவதற்கு அப்பால், தாங்கிப் பிடித்துக்கொள்ளக் கூடிய நிலைமையிலும் முதலாளித்துவ அரசின் ஆயுதப் படைகள் இருக்கவில்லை. ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ சேவைக்கு அர்ப்பணம் செய்த ஆயுதப் படைகளின் தலைமையும் கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி - யூ.என்.பி. ஆகிய இரண்டுக்கும் இடையில் சிறைபட்டுக் கிடந்தது.

இந்த நிலைமையில் இருந்து தலையெடுப்பதற்காக, சமசமாஜக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி அகதி நிலைமைக்குள் தள்ளுவது சாத்தியமானது என ஆளும் வர்க்கம் சிந்தித்த அதே வேளை, தமிழ் மக்களை பொறுத்த மட்டில் தமிழர் ஐக்கிய முன்னணி தலைவர்களை சிறைக்குள் தள்ளி அதை இட்டு நிரப்பிவிட முடியும் எனவும் எண்ணியது.

தமிழர் ஐக்கிய முன்னணியின் வட்டுக்கோட்டை மகாநாடு நடைபெற்று ஒரு கிழமை கழிவதற்குள் அதன் தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு முதலாளித்துவ ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்தது.

கூட்டரசாங்கத்தினால் குடியரசுத் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த மே 22ம் திகதி இடம்பெறும் கொண்டாட்டங்களைப் பகிஷ்கரிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த குற்றத்தின் பேரில் 1976 மே 21ம் திகதி அ. அமிர்தலிங்கம் வீ.என். நவரத்தினம், கே.பி. இரத்தினம், கே. துரைரத்தினம், எம். சிவசிதம்பரம் முதலான தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மே 22ம் திகதி தம்புள்ளையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டார்: "குடியரசு அரசியலமைப்பையும் நாட்டின் அமைதியையும் காப்பதற்கு தமிழரசுக் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க எனக்கு நேரிட்டது" என்றார்.

அவர் ஒரே வசனத்தில் பொருத்திச் சொன்ன இரண்டு காரணங்களும் பொய்யானவை. 1. குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுவதைக் கட்டாயமாக்கும் சரத்துக்கள் அரசியலமைப்பில் இருக்கவில்லை. ஆதலால் விழாவைப் பகிஷ்கரிக்கும்படி கோருவது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல. ஆதலால் அத்தகைய கோரிக்கையை விடுத்தவர்களை கைது செய்வது அரசியலமைப்புச் சட்டத்தினைக் காப்பதாக இருக்கவில்லை.

2. இந்தக் நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு 1972 அரசியலமைப்புச் சட்டம் தொழிலாளர் வர்க்கத்துக்கும் தமிழ் மக்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான உள்நாட்டு யுத்தத்தின் திட்ட வரைவாக விளங்கியது. அதனைக் காப்பது என்பது சமாதானத்தைக் காப்பதன் எதிரிடையாக விளங்கியது. அரசியலமைப்புக்கு எதிர்ப்புக் காட்டியவர்களை கைது செய்வது என்பது நாட்டில் சமாதானத்தைக் காப்பதாகி விடாது. மாறாக, யுத்தத்தினை நோக்கி மேலும் ஒரு படி முன்செல்வதாகும். அந்தப் பிற்போக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வரைஞரான கொல்வின் ஆர். டி. சில்வாவின் முதுகில் விழுந்த கால் உதையில் அதுவே பொறிக்கப்பட்டு இருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட உயர் நீதிமன்ற வழக்கின் தன்மையும் அதையே சுட்டிக்காட்டியது. நீதிமன்ற வழக்கு விசாரணை, ஜூரிகள் அற்ற விதத்தில் சிறப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக் கொண்ட ஒரு நீதிமன்றத்துக்கு, சந்தேக நபர்களை பற்றிய ஒரு வழக்கு விசாரணையை நடத்த நியாய ஆதிக்கம் கிடையாது என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடக விளங்கியது. அப்பட்டமாகச் சொன்னால் அதன் அர்த்தம்: நிறுவப்பட்ட நீதிமன்றம் சட்டவிரோதமானது.

வழக்கு விசாரணைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் -1976 செப்டெம்பர் 19ம் திகதி இந்தச் சட்டப் பிரச்சினை மீது தீர்ப்பு வழங்கப்பட்டது- மாபெரும் சட்ட வல்லுனராக துள்ளிக்கொண்டிருந்தவரும் பிற்போக்கு வலதுசாரியாகப் புகழ் பெற்றவருமான நீதி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டையன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டையே நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதாவது அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் சட்டவிரோதமானது. நீதிமன்றம் எதிரிகளை விடுதலை செய்தது.

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த அரசாங்கம், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தது. அதன் இலக்காக இருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை எதுவிதத்திலும் சிறைக்குள் தள்ளி விடுவது அல்ல. 1977ல் நடைபெற இருந்த பொதுத் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தேர்தல் இலாபத்துக்கான பிற்போக்கு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும் நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பை மேன் முறையீடு இல்லாமல் ஒதுக்கி விடுவது முடியாது போயிற்று. ஏனெனில் அந்த தீர்ப்பு பாரதூரமான நிர்வாக நெருக்கடியைத் தோற்றுவித்தது.

நடைமுறையில் இருந்துகொண்டிருந்த அவசரகாலச் சட்டம் சட்டவிரோதமானதாயின் அதன் கீழ் அது வரை காலமும் எடுக்கப்பட்ட சகல நிர்வாக நடவடிக்கைகளும் செல்லுபடியாகாது போகும். அது முதலாளித்துவ ஆட்சியின் வீழ்ச்சியை தோற்றுவித்தது. பாராளுமன்றம் என்ற திரையினால் மூடி பொலிஸ்-இராணுவ ஆட்சிக்கு கதவுகளைத் திறந்து விடும் அவசரகாலச் சட்ட ஆட்சி வீழ்ச்சி காணுமானால், முதலாளி வர்க்கத்தின் புறத்தில் இருந்து கொண்டுள்ள தீர்ப்பு, இராணுவ-பாசிச சர்வாதிகாரத்துக்கு மாறுவதாகும். அன்று அதைச் செய்யக் கூடியதாக இருந்ததா? ஒரு புறத்தில் தெற்கில் தொழிலாளர் வர்க்கம் கொதித்து வர்க்கப் போராட்டப் பாதையில் இறங்கக் கர்ஜித்துக் கொண்டிருந்த நிலையில், வடக்கில் தமிழ் இளைஞர் பகுதியினர் ஆயுதம் தாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். இராணுவ சர்வாதிகாரத்துக்கு மாறிச் செல்வது என்பது பெரும் ஆபத்துக்களைக் கொண்ட ஒரு சூதாட்டமாக மாற இடமிருந்தது.

ஆதலால் ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் செய்துகொள்ளும் சமரசத்தின் மூலம் அதன் தலைவர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளவும் அவசரகாலச் சட்ட ஆட்சியைச் சட்டரீதியானதாக்கவும் முயன்றது.

அரசாங்கத்தின் மேன்முறையீட்டினை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதியரசர் விக்டர் தென்னக்கோன் உட்பட உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐவரைக் கொண்ட சபை, அவசரகாலச் சட்டம் சட்ட ரீதியானது எனத் தீர்ப்பு வழங்கியது. அப்போது எழுந்து நின்ற சட்டமா அதிபர் 'தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பது இல்லை' எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

முதலாளித்துவ அரசின் இன்றியமையாத பாகமான நீதிமன்றத்தின் பக்கச் சார்பற்ற தன்மை எனப்படுவதைப் போலவே முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையே பேரம் பேசுவதிலும் அதன் நாற்றம் கண்ட தன்மைக்கு இது நல்ல ஒரு எடுத்துக்காட்டான சந்தர்ப்பமாகும்.

யூ.என்.பி.யுடனான கூட்டை நோக்கி

எனினும் ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் கணக்குகள் சறுக்கிப் போயின. வழக்கில் இருந்து விடுதலையான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உடனடியாக யூ.என்.பி.யுடன் கூட்டு அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அது தமிழ் மக்களை இனவாத முதலாளித்துவ கூட்டரசாங்கத் தாச்சியுடன் கட்டிப் போடுவதற்குப் பதிலாக அடுப்புக்குள் தள்ளிவிடும் ஒரு விதிமுறையாகும் என்பதை அறியாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த தீர்மானம் அல்ல. அது தமிழ் முதலாளி வர்க்கம் நனவான விதத்தில் எடுத்த ஒரு தீர்மானம் ஆகும். சிறப்பாக அமெரிக்க ஆட்சியாளர்களை முன்னணியில் கொண்ட ஏகாதிபத்தியவாதிகள் யூ.என்.பி. க்கு வழங்கியிருந்த ஆதரவுக்கு அமைய எடுத்த ஒரு தீர்மானமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், முதலாளித்துவ ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தொடர்பான தமது எதிர்ப்பையும் மாற்று ஏகாதிபத்தியச் சார்பு யூ.என்.பி. தொடர்பான தமது நட்பையும் மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொண்டது "அணிசேரா மகாநாடு" எனப்படுவதன் பின்னராகும். "அணிசேரா மகாநாடு" ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சோவியத் ஸ்டாலினிச முகாமுக்கும் இடையேயான சுற்று மாற்றுக்களுக்கு, பின்தங்கிய நாடுகளில் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் திணித்த ஒரு மேடையாகியது. மூன்றாம் உலகம் எனப்படுவதன் குரலாகக் காட்டிக் கொண்ட இந்த மேடை உண்மையில் அந்தப் பின்தங்கிய நாடுகளில் வாழ்ந்த "நான்காம் உலகைச் சேர்ந்த" ஒடுக்கப்படும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த இருபக்கமும் தலைகள் உள்ள பாம்புகளின் இருப்பிடமாகியது.

1976 ஜூலை-ஆகஸ்ட் காலங்களில் அந்த ஊர்வன கும்பல் இலங்கைக்கு வந்தது சரிந்து வீழ்ந்து வந்த முதலாளித்துவக் கூட்டரசாங்கத்துக்கு பிராணவாயு ஏற்றுவதற்கேயாகும். இன்னமும் தமது ஏகாதிபத்தியச் சார்பு தன்மையை முழுமனே அம்பலமாக்கிக் கொள்ளாமல் இருந்து வந்த காஸ்ட்ரோ, கடாபி, அரபாத் போன்றவர்களை அணைத்துக்கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்க, இக்கட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த சமசமாஜக் கட்சித் தலைவர்கள் உட்பட முழு இடதுசாரி வேடதாரி கும்பல்களதும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கூட்டுச் சேரா நாடுகளின் தலைவியாகிக் கொண்டார். ஆனாலும் ஏகாதிபத்தியவாதிகளோ அக்கட்டத்தில் யூ.என்.பி. ஆட்சியாளர்களை இலங்கையில் ஆட்சிக்கு கொணரத் தீர்மானம் செய்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் தலைவர்கள் சாய்ந்தது ஏகாதிபத்திய சூறாவளி வீச்சுக்கு அமைய யூ.என்.பி. பக்கம் ஆகும். அது தற்செயலானது அல்ல. அது இந்தச் சகாப்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குழுக்களின் மீது ஆதிக்கம் கொண்டிருந்த சகல முதலாளித்துவ இயக்கங்களதும் ஏகாதிபத்தியச் சார்பு தன்மையைச் சுட்டிக்காட்டியது. இத்தகைய முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் ஆதரவுத் தேடித் திரும்பவில்லை. பொது மக்களை ஒடுக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் பக்கமே திரும்பின.

ஒடுக்கப்படும் மக்களைப் பற்றி அனுதாபம் கொண்டுள்ளதாகக் காட்டிக் கூச்சல் போடும் முதலாளித்துவத் தலைவர்கள், தலைவிகளின் கால்சட்டைகளிலும் சேலைத் தலைப்புக்களிலும் தொங்கிக் கொண்ட இடதுசாரி தீவிரவாதிகள், என்றும் தமது ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி வர்க்கத்தின் இந்தப் பிற்போக்குத் தன்மையை மூடி மறைக்க முயன்று வந்தனர். இந்த மூடிமறைப்புக்களில் அவர்கள் கட்டித் தொங்கவிட்ட குஞ்சம் எதுவெனில், தொழிலாளர் வர்க்கப் புரட்சியாளர்கள், தமது சுயாதீன அரசியல் விதிமுறைகளை கை கழுவிவிட்டு, முதலாளித்துவ மோசடிக்காரர்களின் சுலோகங்களிலும் வேலைத் திட்டங்களிலும் தொங்கிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதற்கு உதாரணமாக, இத்தகைய ஊமைக் கோட்டானொன்றின் சமீபகாலக் குரலைக் காட்ட முடியும். சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் தீர்வுப் பொதியினை கற்றுக்கொள்ளச் சபதம் பூண்ட 'தியச' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அஹிங்சக பெரேரா என்பவர், 1970பதுகளின் நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கும் நற்சான்றிதழ் வருமாறு; "அரச நிர்வாகிகள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொள்ளும் போது, அதற்கு எதிராக அணிதிரள தமிழ் தலைவர்கள் சிங்கள சமூகத்துடன் உறவை கட்டியெழுப்பிக் கொண்டு முற்படாததற்குக் காரணம், சிங்களத் தீவிரவாதிகள் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு தொடுத்த தாக்குதலேயாகும்." (சிங்களவர்களுக்கு இல்லாத தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன? பக்கம் 21)

கழுதைத்தனத்தை வெளிப்படுத்தும் இந்த ஆய்வின்படி "அரச நிர்வாகிகள்" அல்லது "சிங்கள சமூகம்" அல்லது "சிங்கள தீவிரவாதிகள்" அல்லது "தமிழ் தலைவர்கள்" ஆகியவற்றில் ஒன்றுக்குத் தன்னும் வர்க்கத் தரம் கிடையாது. ஆதலால் "சிங்கள சமூகம்" சிறுபான்மை தேசிய இனங்களுக்கு தாக்குதல் தொடுக்கும் "சிங்களத் தீவிரவாதிகள்" கொண்டதாக மாறுகிறது. அது மட்டுமன்றி வர்க்கமற்ற "தமிழ் தலைவர்கள்" இதற்குப் பதில் நடவடிக்கையாக "சிங்கள சமூகத்துடன்" உறவுகளை வெறுக்கின்றார்கள். தீர்வுப் பாற்கடலில் இருந்து தோன்றும் வெண்ணெய் படலத்தைப் போன்ற ஒரு பொதுஜன முன்னணியின் அரசியல் தீர்வுப் பொதியைப் பற்றி, இதைக் காட்டிலும் திரிக்கப்பட்ட பார்வையும் அங்கவீனமான ஆய்வும் வேறு இருக்க முடியுமா?

அத்தகைய ஒன்று இருக்க முடியாது என நாம் சந்தேகித்து இருந்தால் எமக்கு நல்லதே நடக்கட்டும். அத்தகை கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. அஹிங்சக பெரேராவின் மேற்சொன்ன உன்னத வாக்கியங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் நூலாக வெளிவந்த போது, அதற்கு முன்னுரை வரைந்த பேர்வழி அதை திரையிட்டுக் காட்டுகின்றார். அது வேறு யாரும் அல்ல. அரசியல் அரங்கில் நீண்டகாலமாக விநோத பாத்திரங்களை வகித்து வந்த பேராசிரியர் கார்லோ பொன்சேகாவே. அஹிங்சக பெரேராவின் நூலுக்கு வழங்கியுள்ள தமது முன்னுரையின் இறுதி பந்தியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"தேசியவாத செயற்பாட்டு முறைகள் மனித செயற்பாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டதல்ல. ஆதலால், அவை முக்கியமாக வழிநடாத்தப்படுவது பொருளாதாரக் காரணிகளாலா என்பது சந்தேகத்துக்கு இடமானது. மார்க்சின் சிந்தனையில் முதல் இடம் வகிப்பது பொருளாதாரக் காரணிகளாகும். ஆதலால் தேசியவாத செயற்பாட்டு முறைகளில் உள்ள தன்மையை புரிந்துகொள்ள கார்ல் மார்க்சைக் காட்டிலும் உதவுவது உயிரின பண்புகளை சிறந்த முறையில் ஆய்வு செய்த சர்ள்ஸ் டார்வினின் சிந்தனை மரபுகள் என நான் நினைக்கின்றேன்." (முன்னுரை: சிங்களவர்களுக்கு இல்லாத தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன?)

இலங்கையில் நாகரீகத்தின் ஆரம்ப காலம் தொட்டே, தேசிய இனங்களுக்கு தேசிய அரசும் இருந்து வந்ததாகக் கூறும் சிங்கள இனவாதிகளுக்கும் அப்பால் செல்லும் கார்லோ பொன்சேகா, ஆதி மனிதனின் காலத்தில் இருந்தே தேசியவாத பண்புகள் இருந்ததாகவும் கூறுகின்றார். இது இப்படியானால், தேசியவாதத்தில் இருந்து மீட்சி பெறவே முடியாது. தேசியவாத இனவாத மோதுதல்களை நியாயப்படுத்தும் இரத்தப் பிசாசுகள் இடையே மட்டுமே அத்தகைய கருத்துக்கள் வேரூன்றும். சுயநிர்ணய உரிமையை முன்வைத்து பொதுஜன முன்னணியின் "அரசியல் தீர்வுப் பொதியை" தூக்கிப் பிடித்து இனவாத யுத்தத்துக்கு வக்காலத்து வாங்கும் அஹிங்சக பெரேரா, கார்லோ பொன்சேகாவுக்கு கம்பளம் விரிக்கும் போது வெளிப்பட்டிருப்பதும் இதுவே. பெரேரா இவ்வாறு குறிப்பிடுகின்றார்: "முன்னுரையின் இறுதியில் பேராசிரியர் கார்லோ பொன்சேகா தலையீடு செய்துள்ளமையானது இந்த விடயத்தை மேலும் கற்றுக்கொள்பவர்களுக்கு மேலுமொரு விசேடமான வழிகாட்டியாக இருக்கும் என நான் நம்புகிறேன்."

லங்கா சமசமாஜக் கட்சியை வெளியேற்றி ஸ்தாபித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கத்தின் ஆயுள் காலத்தை நீடிக்கும் பொருட்டு இடம்பெற்ற சதி, 1976 டிசம்பரில் வெடித்த தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் பொது வேலை நிறுத்தத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்தப் பிற்போக்கு கூட்டையும் உடைத்தெறிந்தது. ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி, இன்னமும் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் பதுங்கிக்கொண்டிருந்த ஒரு நிலையில் தலைநீட்டிய அரசியல் நொருக்கடியின் சகல இலாபங்களையும் சுரண்டிக் கொள்ள யூ.என்.பி.க்கு அவகாசம் வழங்கிய சமசமாஜ கட்சி தலைவர்கள், தொழிலாளர் வர்க்க வேலை நிறுத்தத்தில் இருந்து முழுமனே கைகழுவிக் கொண்டனர். போராட்டத்தின் தலைமையினை வாய் வீச்சுக்களுக்குப் பேர்போன தொழிற்சங்க தீவிரவாதிகள் கும்பல் சுருட்டிக் கொண்டது. இவர்களுக்கு இயைந்து போவதற்கு நெருக்கிவந்த பல்வேறு அழுத்தங்களுக்கும் எதிராக, தொழிலாளர் போராட்டங்களுக்கு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து, அத்தருணத்தில் நாடு பூராவும் வளர்ச்சி கண்டு வந்த வலதுசாரி அச்சுறுத்தலை நசுக்கும் பொருட்டு, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது. அது முன்வைத்த வேலைத் திட்டமானது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தை சூழ கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கட் பகுதியினரை அணிதிரட்டுவதன் மூலம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வுகாணக் கூடிய தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வதாக விளங்கியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் வரலாற்றில் சாதித்தது என்ன? என்ற கேள்வியை பல்வேறுபட்ட அரசியல் போக்குகளின் மூடர்கள் எழுப்புவதன் பின்னணியில் இன்றைய முதலாளித்துவ ஆட்சி முறையை துக்கி வீசும் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுக்கு இருந்து வரும் முடிவுறாத ஐயமும் பகைமையும் பதுங்கிக் கொண்டுள்ளன. வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த முதலாளித்துவ அமைப்பைக் காத்துக் கொண்டு, அதன் கீழ் குறுக்கு வழிகள் மூலம் விரைந்து தீர்வு காணும் குட்டி முதலாளித்துவ அவஸ்தைகளில் இருந்து தலைநீட்டும் அவசரம் இருந்து கொண்டுள்ளது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்ததும், தமது போராட்டத்தின் அத்திவாரமாக கொண்டதும் இக்காலத்தில் மக்கள் மத்தியில் சிதறுண்டு போய்க் கிடந்த உணர்வுகளுக்கு பொருத்தமான வேலைத்திட்டம் அல்ல. மாறாக, அது முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தினுள் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையை ஊர்ஜிதம் செய்யவல்ல விஞ்ஞானரீதியான வேலைத்திட்டமாகும்.

இந்த வேலைத்திட்டத்தினை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லைதானே என்பது மேற்சென்ன கேள்வியுடன் சேர்ந்த விதத்தில் எழுப்பும் இரண்டாவது கேள்வியாகும். சரியான முறையில் என்றால் இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியது, பொதுமக்களை அழிவில் இருந்நு விடுதலை செய்யக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தினை முன்வைத்து, அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பிடம் அல்ல. அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக பல போலி வாதப்பிரதிவாதங்களை பின்னிக்கொண்டு பொதுமக்களை அதிலிருந்து அந்நியப்படுத்தி வைக்க முதலாளி வர்க்கத்தின் சார்பில் வக்காலத்து வாங்குபவர்களாக தொழிற்பட்ட அமைப்புக்களிடமே இந்தக் கேள்வியை எழுப்பவேண்டும். முதலாளி வர்க்கத்திடம் உதவி பெற்று, அந்த அமைப்புக்கள் முன்னெடுத்த முதலாளித்துவ சார்பு பிரதிவாதங்கள் இல்லாது இருந்திருக்குமானால், தமது விடுதலைக்கு அவசியமான புரட்சிகர வேலைத்திட்டத்தினை அரவனைத்துக்கொள்ள முடியாது செய்யும் மையத்தடை தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்கு இருந்தும் இருக்காது, இருக்கவும் மாட்டாது. தம்மால் வழிதடுமாறச் செய்யப்பட்ட வெகுஜன இயக்கம் அதற்குச் செலுத்தும் இரத்தப்பலியைக் கண்டு கூத்தாடும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர யதார்த்தம் ஒழிந்து போய்விட்டது எனவும் கோஷிக்கின்றார்கள்.

சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களின் துரோகங்களினாலும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளின் வழிதடுமாறல்களாலும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த அரசியலில் தொழிலாளர் வர்க்கம் நிராயுத பாணியாக்கப்பட்டு, குழப்பத்துக்குள் தள்ளப்பட்டு இருந்தது. இதனால் தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து உருவாகும் சுயாதீனமான அரசியல் சவாலுக்கு முகம் கொடுக்காமலே யூ.என்.பி. 1977ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு சக்தி வாய்ந்த முறையில் வெளிப்பாடாகவில்லை. இதன் காரணமாக யூ.என்.பி. முன்னொருபோதும் கண்டிராத பாராளுமன்ற ஆசனங்களை - பாராளுமன்ற ஆசனங்களில் ஆறில் ஐந்து பங்கினை- வெற்றி கொள்ள முடிந்தது.

இந்தப் பிரமாண்டமான வாக்குகளை சேகரிக்கும் பொருட்டு யூ.என்.பி. தலைவரான கிழட்டு நரி -ஜே.ஆர்.ஜயவர்தன- பல முன்னணிகளில் சதிகளில் இறங்கினார். கைது செய்யப்பட்டிருந்த விஜேவீர உட்பட்ட ஜே.வி.பி. தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, ரொனி டீ மெல்லைக் கொண்டு எடுத்த முயற்சி அன்று நன்கு பிரசித்தமான இரகசியமாகும். சிங்ஙள இனவாத ஜே.வி.பி.க்கு ஒரு கையை நீட்டும் அதேவேளையில் மறுகையை தமிழர் விடுதலைக் கூட்டனிக்கு நீட்டும் முயற்சியும் கூட இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் யூ.என்.பி. க்கும் இடையேயான இரகசியப் பேச்சுவார்த்தைகள், கொழும்பு றோயல் கல்லூரி எதிரில் உள்ள எஸ். தொண்டமானின் வீட்டில் இடம்பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எஸ். கதிர்வேற்பிள்ளை, அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரமும் யூ.என்.பி. சார்பில் ஜே.ஆர். ஜயவர்த்தன, எம்.டி. பண்டா, எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் (ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை) இப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடல்களில் யூ.என்.பி தலைவர்களுடன் கதிர்வேற்பிள்ளை ஆற்றிய உரையை பிற்கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் கேலிக்கூத்தானதாக இருந்தது. ''நாம் இங்கு வந்தது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அல்ல. இது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான காலமும் அல்ல. ஜனநாயகம் அனாதரவாகியுள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் உங்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்க நாம் தயார்'' என அவர் குறிப்பிட்டார்.

யூ.என்.பி. - தமிழர் விடுதலைக் கூட்டணி உடன்பாட்டின் அடிப்படை

அனாதரவாகிப் போன ஜனநாயகத்தின் மையப் பிரச்சினையாக தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக உரிமை விளங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் தலைவர்கள் அதைப் பாதுகாப்பதை பகிரங்கக் கட்டளை மூலம் யூ.என்.பி.யிடம் ஒப்படைத்தனர். இது ஒன்றும் புரியாமல் செய்யப்பட்டது அல்ல. 1958ல் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிரான யூ.என்.பி.யின் கண்டி பாதயாத்திரையின் பிரதம அமைப்பாளர் ஜே.ஆர். ஜயவர்தனவே. இது 1977 ஏப்பிரல் 5ம் திகதி செல்வநாயகம் காலஞ்சென்றாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய தலைவர்களின் நினைவில் இருந்து மறைந்து விடக்கூடிய ஒன்றல்ல. எனினும் தமிழ்-சிங்கள இரு தரப்பையும் சேர்ந்த முதலாளித்துவத் தலைவர்கள் 1976ன் இறுதியில் ஆரம்பமான வர்க்க நிலைமையையிட்டு குரோதம் கொண்டனர். தமது கோரிக்கைகளையும் கூடக் கைகழுவி விட்டு விட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி யூ.என்.பி.யுடன் இனக்கத்துக்கு வந்ததற்கான அடிப்படை அதுவே.

யூ.என்.பி.க்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே தமிழ் மக்களுக்குத் தெரியாமல் உருவான சதிகார உடன்பாட்டின் இலக்கு, தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒருமைப்பாட்டைச் சிதறடித்து, அதை தவிடுபொடியாக்குவதாக விளங்கியது.

சுதந்திரம் எனப்பட்டதன் பின்னர், இலங்கையில் 1953ல் நடந்த ஹர்த்தாலை அடுத்து, முதலாளித்துவ ஆட்சியை பாரதுரமான நெருக்கடிக்குள் தள்ளிய வர்க்கப் போராட்டமாக 1976 போராட்டம் விளங்கியது. அது தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக உள்ளீர்த்துக்கொள்ளாது போனாலும், அது ஒரு தொகை பிரேரணைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் கோரிக்கைகளை முன்வைப்பதற்க்கும் அப்பால், தொழிலாளர்கள் நடைமுறையில் போராட்டத்தில் குதித்த ஒரு நிலையாகும். மறுபுறத்தில் அது பழைய சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் பிடிக்கு ஒரு சவாலாகத் தலையெடுத்த ஒன்றாகவும் விளங்கியது. அது அதன் பலமாக விளங்கிய போதிலும் மாற்று புரட்சிகர முன்னோக்கும் தலைமையும் அதனிடம் இல்லாமை அத்துடன் இணைந்த பலவீனமாக விளங்கியது. புரட்சிகரத் தலைமையினாலும் நனவினாலும் வழிநடத்தப்படாத தொழிலாளர் வர்க்க இயக்கம், அதன் வரலாற்று முற்போக்கு யதார்த்தம் இருந்தாலும் எதிரி வர்க்கத்தின் சூழ்ச்சிகளுக்கும் பொறிகளுக்கும் அகப்படுவதை தவிர்க்க முடியாது.

தமது சூழ்ச்சி, பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளும் தொழிலாளர் வர்க்கம் தொடர்பாக அனுதாபம் காட்டும் வகையில் சலுகை காட்டும் வழக்கம் முதலாளி வர்க்கத்துக்கு கிடையாது. ஆட்சியைக் கைப்பற்றிய யூ.என்.பி. இதன்படி முதலாளி வர்க்க ஆட்சியை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில் கிளர்ந்து வந்த தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும், அதற்கு தாக்குதல் தொடுக்கவும் வாய்ப்பான நிலைமைகளை சிருஷ்டிப்பதில் இறங்கியது.

தமிழ் முதலாளி வர்க்கமும் அதன் முக்கிய அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும், தொழிலாளர் கிளர்ச்சி தொடர்பாகக் காட்டிய மனோபாவம் இதில் இருந்து வேறுபட்டதல்ல. வேறுபடக் கூடியதும் அல்ல. அவ்வாறே தொழிலாளர் வர்க்கத்தை பிளவு படுத்தவும் நசுக்கித் தள்ளவும் யூ.என்.பி. திட்டமிட்ட வேலைத் திட்டத்துக்கு அது இயைந்து போவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக விளங்கியது.

யூ.என்.பி யைப் போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் முகம் கொடுத்த மற்றொரு பொதுப் பிரச்சினையும் இருந்து வந்தது. தீவிரமடைந்து வந்த இளைஞர் இயக்கத்தினை தமது பிடிக்குள் கொணர்வது எப்படி? என்பதே அப்பிரச்சனை.

அனைத்துலக ஐக்கியத்துக்கான தொழிலாளர் வர்க்க வேலைத்திட்டத்துக்கு எதிராக, சிங்கள சோவினிசத்தை தலைமேல் கொண்டிருந்த ஜே.வி.பி. தலைவர்கள், சதிகார ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தனர். அதன்படி அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்களேயானால், அவர்களால் திரட்டக்கூடிய குட்டி முதலாளித்துவ மக்கள் பகுதியினரை இனவாத குளறுபடிகளால் குழப்பியடித்து தம்பின்னால் ஈர்க்கும் வழி பற்றி சிந்திக்கும் வண்ணம் யூ.என்.பி. தள்ளப்பட்டது. அவ்வாறே சிங்கள இனவாத பாகுபாடுகளினதும் அடக்குமுறைகளினதும் தாக்கத்திற்கு உள்ளாகி பிரிவினைவாதத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களை தமது பிடிக்குள் கொணர்வது எப்படி என்பது முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் பகுதியினர் மீது அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் இரு சாராரும், தொழிலாளர் விரோத முதலாளித்துவ காட்டுமிராண்டி இலக்குகளை இட்டுநிரப்புவதற்கான மார்க்கமாக இனவாதத்தை கிளறிவிட முடிவுசெய்தனர். தமது ஆட்சியைக் காக்க அர்ப்பணித்துக்கொண்ட பிற்போக்கு முதலாளி வர்க்கம், தோலின் நிற வேறுபாடு மட்டும் அல்ல, ஒரே தோல் நிறத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களிடையே மொழி வேறுபாடுகளையும், ஒரே மொழி பேசுவோருக்கு இடையேயான வரலாற்று ரீதியில் நாற்றம் கண்ட சாதி, மத வேறுபாடுகளையும் கூடப் பாவித்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை ஆளுக்காள் மோதவைக்கும் மற்றும் கொன்று தள்ளும் கடைகெட்ட சமூக நிலைமைகளை நிர்மானிப்பதற்கும், இந்தச் சகாப்தத்தில் திரும்பியுள்ளது. ஒடுக்கும் தேசிய இனத்தினதும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தினதும் முதலாளித்துவ வர்க்கப் பகுதியினர் இடையேயும் இது சம்பந்தமாக எதுவித கருத்துவேறுபாடும் கிடையாது. முதலாளித்துவ அமைப்பின் செழிப்புக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்கள் மூலம், தம்பின்னால் ஈர்த்துக் கொண்ட கிராமப்புற, நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கங்களின் நுகர்வுக்கு முதலாளி வர்க்கத்தால் இன்று வழங்கக் கூடியது, அழிவுநிறைந்த இனவாதம் மட்டுமேயாகும்.

சிங்கள-தமிழ் வேறுபாடு இல்லாமல், முதலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இரண்டு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை சுரண்டி, ஒடுக்கி வந்த ஒரு காலப்பகுதியும் இருந்து வந்தது. முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி உக்கிரம் கண்டதனாலும் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து தோன்றிய சவாலினதும் எதிரில், தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடு உக்கிரம் கண்ட ஒரு நிலமையினுள், சிங்கள-தமிழ் முதலாளி வர்க்கத்தின் இரு சாராரினதும் அரசியல் ஐக்கியமும் சிதறுண்டு போயிற்று. அதன் பெறுபேறாக தமிழ் முதலாளி வர்க்கம் முற்போக்குத் தன்மையை கைவரப் பெற்றதோ அல்லது பெறப்போவதோ கிடையது. சிறுபான்மை மக்கள் குழுக்களுக்கு எதிரான இன, மத மற்றும் வேறு அழுத்தங்களைக் கட்டவிழ்த்துவிட உடன்பட்டு, இனவாத பாகுபாடுகளை ஒழித்துக்கட்ட தொழிலாளர் வர்க்கத்துக்கு உள்ள பலத்தை நிராகரிக்கும் அதே வேளையில் போலி வீரியத்தை காட்டும் பொருட்டு ஒடுக்கப்படும் மக்களின் முதலாளித்துவ பகுதியினருக்காக வக்காலத்து வாங்குவதையே குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் செய்கிறார்கள். இந்த முதலாளித்துவ சார்பு விதிமுறையை நிராகரிக்கும் மார்க்சிச புரட்சியாளர்கள், அனைத்துலகவாத தொழிலாளர் வர்க்கத் தீர்வுக்காக போராடுகின்றார்கள். என்றும் நிஜ மார்க்சிஸ்டுக்களின் விதிமுறை இதுவாகவே இருந்து வந்தது.

ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி முன்கூட்டியே தேசியவாத சேற்றினுள் புதைந்து கொண்டிருந்தது. இத்தருணத்தில் தோள்வரை புதையுண்டு போன சமசமாஜக் கட்சி, மார்க்சிச வேலைத்திட்டத்தில் இருந்து அன்னியப்பட்டுப் போயிருந்தது மட்டுமன்றி, முதலாளி வர்க்கத்துக்கு அவசியமான விதத்தில் இனவாதப் பிளவுகளைத் தோளில் சுமந்து கொண்டும் இருந்தது. இந்த அரசியல் வீழ்ச்சியினால் முதலாளி வர்க்கத்தின் இனவாதத்தினை எதிர்த்துப் போராடும் பலமோ அல்லது அவசியமோ சமசமாஜக் கட்சிக்கு இச்சமயத்தில் இல்லாது போயிற்று. 1964ல் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொள்ளும் சலுகைக்கான கப்பமாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை சமசமாஜ கட்சி ஆதரித்தது. இதில் இருந்து பத்து ஆண்டுகளின் பின்னர், 1974 அளவில் சமசமாஜக் கட்சி மலைநாட்டு சிங்கள மக்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டி விடுவதில் இறங்கியது. தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை உக்கிரமாக்கி அரசியலமைப்புச் சட்டத்தினை வரைந்த அரசியலமைப்பு விவகார அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவியையும் வகித்த லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவின் வார்த்தைகளில் இந்த நச்சுத்தனத்தின் பரிணாமம் வெளிப்பாடாகி இருந்தது.

இயக்கவியலில் சிலதை எடுத்துக்கொண்டு பலவிதமான அர்த்த திரிப்புக்களின் மூலம் பிற்போக்கு இலக்கு நோக்கி வழிநடத்தும் இயலுமை கொண்ட கொல்வின் ஆர்.டி.சில்வா, தோட்டத் தொழிலாளர் பிரச்சினை பற்றி 1974ல் பின்வருமாறு எழுதியுள்ளார்; ''சகல திசைகளிலும் பரந்துபட்டு வாழும் கிராமப்புற மக்களால் தோட்டப் பகுதிகளில் காணிகளைக் கைப்பற்றுவது இடம்பெறாமல் இருக்க முடியாத சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அத்தகைய பரந்த காணிகளை கைப்பற்றும் இயக்கம், நிச்சயமாக ஒரு ஆழமான புரட்சிகர நடவடிக்கையாகும். எனினும் அத்தகைய காணிகளைக் கைப்பற்றுவதன் நோக்கம், காணிகளை பங்கிட்டு வழங்குவதும் பின்னர் தோட்டத் துறையை உடைத்து எறிவதாக இருப்பதால், அந்த நடவடிக்கையின் இலக்கு குட்டி முதலாளித்துவ இலக்காகுவது மட்டுமன்றி, அது வர்க்க குழு என்ற முறையில் தோட்டத் துறையில் தொழிலாளர்களின் அடிப்படை அவசியங்களையும் பிரச்சனைக்கு உள்ளாக்குகின்றது.

''எம்மால் கவனத்தில் கொள்ளப்பட்ட இப்பிரச்சனை, இருந்துவரும் வர்க்க உறவுகளின் சிக்கலில் இருந்து தோன்றும் இலங்கைப் புரட்சியின் சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சிக்கல் தொடர்பாக விதிமுறையைக் கையாள்கையில் இடர்பாடுகள் தோன்றுகின்றது. எனினும் விதிமுறை தெளிவானது. அதாவது, புரட்சியின் வெற்றிகரமான அபிவிருத்தியை பற்றிய பரந்த அவசியத்துக்காக, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் உடனடி அவசியத்தை அவ்வாறே இட்டுநிரப்ப அர்ப்பணிக்க வேண்டும்.'' (கட்சியும் புரட்சியும் -கொல்வின் ஆர்.டி.சில்வா கட்சிக் காரியாளர்களுக்கு நிகழ்த்திய விரிவுரை- 1974, சமசமாஜ கட்சி வெளியீடு)

யூ.என்.பி.யில் இருந்து சி.ல.சு.க. ஊடாக ஜே.வீ.பி. வரையிலான சகல தொழிலாளர் எதிர்ப்புக் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வெளிப்படுத்தும் ஆழமான குரோதத்தினை சமசமாஜக் கட்சித் தலைவர் சுடச் சுட வாந்தியெடுக்கும் விதத்தை அந்த வாந்தியின் ''சிக்கலினால்'' தன்னும் மூடிக்கொள்ள முடியாது.

இத்தகைய ஒரு கட்சி 1977ல் வகித்த பாத்திரம், முதலாளி வர்க்கம் சுதந்திரமாக தமது இனவாத வேலைத் திட்டத்தினை நடைமுறைக்கிட இடமளித்ததும் அதனுடன் கூட்டுச் சேர்ந்ததுமேயாகும்.

1977 ஜூலை தேர்தலில் சி.ல.சு.க. பெற்ற பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 8 ஆக விளங்கிய அதே வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 17 ஆசனங்களைப் பெற்றது. இதனால் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தனிநாட்டுக்கு போராட சபதம் செய்திருந்தது. இது சம்பந்தமான கொள்ளை விளக்க அறிக்கையின் பந்தி பின்வருமாறு கூறுகின்றது; ''வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் தமிழ் பேசும் பிரதிநிதிகள், சமாதான வழியிலோ தீர்க்கமான வேலைத்திட்டத்தின் அடிப்படையிலோ ஒரு போராட்டத்தின் மூலம் தமிழ் ஈழத்தின் சுயாதீனத்தினை ஊர்ஜிதம் செய்யும் ஈழம் அரசுக்கான அரசியலமைப்பினை வரையும் பொருட்டு, தமிழ் ஈழத்தின் தேசிய சபையாகவும் ஒருங்கு திரள்கின்றார்கள்.'' பிரிவினைவாதத்தினை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கத்தின் தாக்கமும் அதைத் தமது கைக்குள் கொணரும் பொருட்டு தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் திருப்பமும் அந்த அறிக்கையின் மூலம் வெளிப்பாடாகியது.

தேர்தல் இயக்கத்தினுள் தமது நலனை முன்னிட்டு தாமும் அடிபணிந்து தூண்டிவிட்ட பிரிவினைவாத உணர்வுகள், இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்பதற்கு மட்டுமன்றி, அங்கு ஆசனங்களில் அமர்வதற்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்தன. இளைஞர் முன்னணி வெளியிட்ட பிரசுரம், ''தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்காமல், அரசியலமைப்பினை வரைந்து கொள்ளும் பொருட்டு தமிழ் ஈழ தேசிய சபையாக தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிதிரளவேண்டும்'' என்று கூறியது.

குட்டி முதலாளித்துவ இளைஞர்களின் உத்வேகம் என்னவாக இருந்த போதிலும், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக்கான நடவடிக்கையில் இறங்க இது தருணம் அல்ல எனத் தீர்மானம் செய்தது. அது கையைச் சுட்டுக் கொள்வதாகும். அந்தத் தீர்மானத்தின் பின்னணியில் ஆதிக்கம் செலுத்திய முக்கிய காரணி, பழைய தலைமைத்துவத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த, இந்நாட்டின் சிங்கள-தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்தினுள் இன்னமும் முழுமையாக சிதைந்து போயிருக்காத ஐக்கியமும் பலமுமே ஆகும். அந்தப் பலம் உடைந்து போகும் வரை தனிநாடாக அணிதிரள முடியாது என்பதை தமிழ் முதலாளிகள் புரிந்து கொண்டிருந்தது மட்டுமன்றி, அப்பணியை நிறைவேற்ற மத்திய அரசாங்கத்தில் ஆட்சிக்கு வந்த யூ.என்.பி. யின் உதவி இல்லாமலும் செய்ய முடியாது என்பதும் அந்த விளக்கத்தில் அடங்கி இருந்தது.

தொழிலாளர் வர்க்கத்தினை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கான முன்நிபந்தனையாக சிங்கள குட்டி முதலாளித்துவக் காடையர்கள் குண்டர்கள் பகுதியினரை இனவாதக் கலகங்களுக்குத் தூண்டும் பொருட்டு எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் ஜயவர்தன ஆட்சி உடன் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சிங்கள இனவாத, சாதிவாத இயக்கத்தின் முன்னணியில் நின்று பிரசித்தி பெற்ற சிறில் மத்தியூ, காவி உடை தரித்த கும்பலின் தோள்களில் ஏறி முன்னணிக்கு வந்தார்.

1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்

1977ல் யூ.என்.பி. அரசாங்கம் அமைக்கப்பட்டும் அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்றும் மூன்று வாரங்கள் செல்வதற்குள், தமிழர் விரோத ஆத்திரமூட்டல்களுக்கு ஜயவர்தன ஆட்சி வழியமைத்துக் கொடுத்தது. 1977 ஆகஸ்ட் 12ம் திகதி யாழ்ப்பாணத்தில் றோட்டரிக் கழகத்தினால் புனித பட்றிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டு வந்த கார்னிவேலுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் கூட்டமொன்று, நுழைவுச் சீட்டு இல்லாமலேயே மைதானத்துக்குள் நுழைந்து கொள்ள முயற்சித்தமை ஆத்திரமூட்டலின் ஆரம்பமாகியது. இதைப்பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதற்கு மறுதினம் கார்னிவேலுக்குள் நுழைந்த மற்றுறோர் பொலிஸ் அதிகாரிகள் கும்பல், அங்கு வருகை தந்திருந்தோர் மீது முதல் நாளைக் காட்டிலும் மோசமான முறையில் தாக்குதல் நடாத்தியது. இருப்பினும் கார்னிவேல் மைதானத்தில் கூடியிருந்த தமிழ் மக்கள் இந்த பொலிஸ் காடையர்கள் கும்பலை மைதானத்தில் இருந்து கலைப்பதில் வெற்றி கண்டனர்.

ஆகஸ்ட் 14ம் திகதி பொலிஸ் பழிவாங்கல்கள் யாழ்ப்பாண வீதிகளில் தலைநீட்டின. துவிச்சக்கர வண்டிகளில் சென்ற தமிழ் மக்களை தாக்கிய பொலிசார் வண்டிகளைத் தோளில் சுமந்து செல்லுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர். இந்தச் சித்திரவதைகளை சகித்துக் கொள்ள முடியாத ஒருவர் ஒரு பொலிஸ்காரரைச் சுட்டார்.

மறுநாள் அதிகாலை வீதிகளில் இறங்கிய பொலிசார் வீதிகளில் செல்வோர் மீது அளவு கணக்கற்று தாக்குதல் நடாத்தினர். இந்த நாசங்களைப் பற்றி கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு செய்த முறைப்பாடுகளாலும் கூட எதுவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இது யூ.என்.பி. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆசியுடன் தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு செய்யப்பட்ட காட்டுமிராண்டித் தாக்குதல் என்பது நிரூபிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ம் திகதி அதிகாலையில் சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாண நகரக் கடைகளுக்குத் தீமூட்டினர். இந்தத் தீவைப்பு 24 மணித்தியாலங்கள் பூராவும் தொடர்ந்து நடைபெற்றது. இச்சம்பவங்களால் நான்கு யாழ்ப்பாண நகரவாசிகள் கொல்லப்பட்டதோடு 30க்கும் அதிகமானோர் கடும் காயமடைந்தனர். யாழ்ப்பாண பொதுச் சந்தையின் ஒருபாகமும் தீக்கிரையானது. இச்சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதன் பின்னர் சந்தைப்பக்கம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கமும் தாக்கப்பட்டார். இச்சம்பவம் பற்றி பாராளுமன்றில் பேசிய அமிர்தலிங்கம் கூடியிருந்த பொலிஸ் அதிகாரிகள் தாம் யார் என்பதை அடையாளங்காட்டியதன் பின்னரும் தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.

கார்ணிவேலுக்கு வந்த நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் மீது ஆத்திரமுட்டும் வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆரம்பமான பொலிஸ் காடைத்தனங்கள், கொலைகள், இரத்தக்களரிகள் ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற இவற்றை எது விதத்திலும் திடீர் ஆத்திரத்தில் உருவானவையாகக் கொள்ள முடியாது. இவை திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒடுக்குமுறை இயக்கத்தின் ஒரு பாகமாகும்.

அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் நடாத்தும் திட்டமும் தீட்டப்பட்டு இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் கும்பல் எனக் கூறிக்கொண்டு ஒரு இனவாதக் கும்பல் பஸ்ஸில் ஏறி அனுராதபுரத்தில் இறங்கி தமக்கு யழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற பொய் பிரச்சாரத்தை நடாத்தியது. இதன் மூலம் தெற்கில் இனவாத இரத்தக் களரிக்கு களம் அமைக்கப்பட்டது. இச்சமயத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான மக்கள் படுகொலைத் தாக்குதல்கள் குருணாகலை, மாத்தளை, பொலநறுவை, கண்டி, பாணந்துறை போன்ற இடங்களில் விரைவாகப் பரவி இருந்தது. இது முன்கூட்டியே இரத்த வெறியுடனும் கொள்ளையடிக்கும் திட்டத்துடனும் ஆயத்தமாகி வந்த யூ.என்.பி. குண்டர்களை நடவடிக்கையில் இறக்கியதன் பெறுபேறாக ஏற்பட்டதாகும். கொழும்பிலும் தோட்டத்துறை உட்பட ஏனைய பகுதிகளிலும் தமிழர் விரோதக் காடையர்களின் கலகங்கள் வெடிக்க இச்சம்பவங்களில் இருந்து 24 மணித்தியாலங்கள் தன்னும் பிடிக்கவில்லை.

பல நாட்களின் பின்னர்-ஆகஸ்ட் 20ம் திகதி நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. சமாதானத்தைக் காக்கும் பேரில் இராணுவம் நாடு பூராவும் கட்டவிழ்த்து விடப்பட்டது. எனினும் பொலிசும் இராணுவமும் இனவாத இரத்தக் களரியுடன் கைகோர்த்தபடியே தொழிற்பட்டன. அவசரகால சட்டம், ஊரடங்குச் சட்டம் மற்றும் பொலிஸ்-இராணுவப் பாதுகாப்புடன் தமிழ் மக்களை கொன்று தள்ளவும் அவர்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கவும் இனவாதிகளுக்கு மிகவும் வாய்ப்பான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

யூ.என்.பி.அரசாங்கத்துக்குச் சொந்தமான பத்திரிகைகள் அறிக்கை செய்ததன்படி, இந்த ஒரு சில தினங்களுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் தொகை 112 ஆகும். நாட்டின் பல மாகாணங்களில் 50000க்கும் அதிகமான தமிழ் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். ரூபா.200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் கொள்ளை அடிக்கப்பட்டும் இருந்தன. இவை அனைத்தையும் காதுகளால் கேட்டது மட்டுமல்லாது கண்களால் நேரில் கண்டுமுள்ள நளின் த சில்வாவும், குணதாச அமரசேகரவும் அவர்களின் சீடர்களும் இன்னமும் ''தமிழ் மக்களுக்கு சிறப்பாக இழைக்கப்பட்ட அநீதி என்ன'' என்ற கேள்வியை இடைவிடாது எழுப்பிக் கொண்டுள்ளனர்.

யூ.என்.பி. அரசாங்கம் 1977ல் ஆட்சிக்கு வந்ததுதான் தாமதம் யாழ்ப்பாணத்தில் தொடங்கி நாடு பூராவும் கட்டவிழ்த்துவிட்ட இனவாத படுகொலைகள் மற்றும் சமூக அழிவுகளின் எதிரில் சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் அரசாங்கத்திற்கு சுண்ணம்பு பூசுவதிலும் இனவாத குண்டர்களை தூண்டுவதிலும் ஈடுபட்டனர்.

இந்த துரோக அரசியல் கட்சிகள் இரண்டும் அப்போது அமைத்துக்கொண்டிருந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி மூலம், 1977 ஆகஸ்ட் 24ம் திகதி 'ஜய தின' பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறிக்கொண்டது: "இந்த நிலைமையின் எதிரில் அரசாங்கம் செயற்பட்ட விதம் எந்தவிதத்திலும் திருப்தியற்றது என்பதே இடதுசாரி ஐக்கிய முன்னணியின் கருத்து என்றாலும், அதை ஒரு சந்தர்ப்பவாத பிரச்சினையாக இழுக்க இடதுசாரி ஐக்கிய முன்னணி விரும்பவில்லை...

"சமாதானக் குழுக்களை அமைத்து அவற்றை செயற்பட வைக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். ஆதலால், இத்தகைய சமாதான குழுக்களை அமைக்கவும் அவற்றை செயற்பட வைக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிசாருக்கும் ஆயுதப்படைகளுக்கும் அரசாங்கத்தின் ஏனைய அதிகாரிகளுக்கும் உடன் கட்டளை வழங்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்."

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த அறிக்கையை "யூ.என்.பி. அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் மற்றும் ஆயுதப் படைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிக்கை" என சரியான விதத்தில் சுட்டிக்காட்டியது.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆசிரியரால் எழுதப்பட்டு அவரின் பெயரில் 1977 ஆகஸ்ட் 26ம் திகதி "கம்கறு மாவத்த" பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைப் பற்றி மேலும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அது பின்வருமாறு குறிப்பிட்டது: "இந்த தீர்க்கமான கட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பையிட்டு குரல் எழுப்பாத எவரும் சோசலிஸ்ட் என்ற பெயருக்கு பொருத்தமானவர் அல்ல. சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த கொள்கை சார்ந்த பொறுப்பில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்...

"இடதுசாரி ஐக்கிய முன்னணி தலைவர்கள் கூறுவது என்ன? இந்த நெறிகெட்ட ஆட்சியாளர்களின் 'மகிழ்ச்சியற்ற' செயற்பாடு வெளித்தோன்றுவது ஒரு "சந்தர்ப்பவாத பிரச்சினை" என்கிறார்கள். வடக்கில் தமிழ் மக்களினதும் சரி தெற்கில் சிங்கள மக்களினதும் சரி எந்தவொரு அடிப்படை பிரச்சினையையும் தீர்த்து வைக்காத முதலாளித்துவ ஆட்சியாளர்கள், படுகொலைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஒரே தீர்வாகக் கொண்டுள்ளதை மக்கள் படுகொலைகளின் மத்தியில் தன்னும் வாய் திறந்து பேசாத தலைமைத்துவம், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தலைமைத்துவமாவது எப்படி? அத்தகைய தலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் சகல எதிர்ப் புரட்சி திட்டங்களின் போதும் அதற்கு அடிபணிந்து செயற்படும் சந்தர்ப்பவாத தலைமைத்துவம் ஆகும்."

ஆகஸ்ட் 12ம் திகதி புனித பற்றிக் கல்லூரியில் நடைபெற்ற கார்னிவேலில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட ஆத்திரமூட்டுகின்றதும் அழிவுநிறைந்ததுமான நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்ட பிற்போக்கு சக்திகளை பெயர் குறிப்பிட்ட அக்கட்டுரை, சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் துரோகத்தை மேலும் விவரிக்கையில் கூறியதாவது:

"நாடு பூராகவும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் தூண்டுதல்களினதும் சொத்து சூரையாடல்களதும் கொலைகளதும் முன்னணியில் நின்றவர்கள் தேர்தல் காலத்தில் தலையில் பச்சை தொப்பி போட்டுக்கொண்ட யூ.என்.பி. காடையர்களும் பொலிஸ்காரர்களுமே. பிரதமர் உட்பட யூ.என்.பி. தலைவர்கள் வாய்களைத் திறந்த போதெல்லாம் இவர்களைத் தூண்டினர். இனவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் காரர்களும் இதில் சேர்ந்துகொண்டனர். ஆத்திரமூட்டும் வதந்திகளைப் பரப்பும் அப்பட்டமான சாதனங்களாக ஆயுதப் படைகள் விளங்கின. இதை முழு நாடும் அறியும்.

"இடதுசாரி ஐக்கிய முன்னணி தலைவர்கள், இந்த சம்பவங்கள் ஒன்றை பற்றியோ அல்லது அதன் சிருஷ்டிகர்த்தாக்கள் பற்றியோ ஒரு வார்த்தை தன்னும் கூறாமல் நாடு சகஜ நிலைமைக்குத் திரும்புவது பற்றி பேசுவது படு கேவலமான மோசடியாகும்.

இந்த சகல நிலைமைகளும் அம்பலமாகியுள்ள ஒரு நிலையில், ஒன்றில் கோழைத்தனமான மடையர்களுக்கு அல்லது திட்டமிட்டு தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இயக்கத்தை தடம்புறள வைக்கும் முதலாளித்துவ கொந்துராத்தினை எடுத்தவர்க்கே தமிழ் மக்களின் பாதுகாப்பினை புறக்கணித்து யூ.என்.பி. அரசாங்கத்திற்கும் ஆயுதப் படைகளுக்கும் பந்தம் பிடிப்பது சாத்தியமாகும். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைமையின் பெரும்பான்மை குழுவினர் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவர்கள். இதை அவர்கள் தமது வரலாற்றின் மூலம் நிரூபித்துக்கொண்டுள்ளனர். முதலாம் தரத்தைச் சேர்ந்த சிலரும் கடந்த கூட்டரசாங்க காலத்தில் எச்சில் சோற்றில் வயிற்றை நிரப்பிக்கொண்டு இந்த கட்சியின் தலைமையின் மூலைமுடுக்குகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர். இப்போது தமது வர்க்கத்தினதும் விவசாயிகளதும் வேலையற்ற இளைஞர்களினதும் வீட்டுப் பெண்களினதும் தமிழ் பேசும் மக்கள் பகுதியினரதும் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொருட்டு முன்னணியில் நிற்கையில் தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ள முக்கிய தடை இந்தத் தலைவர்கள் கும்பலே." (விஜே டயஸ், கொள்ளை கொலை பரவுகையில் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் சந்தர்ப்பவாத அறிக்கை. கம்கறு மாவத்த 1977 ஆகஸ்ட் 26)

இந்த ஆய்வுகளுக்கு இனங்க, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தால் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய பணி பற்றி சுருக்கமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்த "கம்கறு மாவத்த" ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: "யூ.என்.பி. அரசாங்கத்தின் கீழ் ஆரம்பமான இனவாத ஆத்திரமூட்டல்களின் முக்கிய படிப்பினை, சீர்திருத்தவாத தலைமைகளை கலைத்துவிட்டு தமது கைக்குள் அரச அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் முன்நோக்கின் கீழ் வழிநடாத்தும் தலைமையைக் கட்டியெழுப்பும் பணியை தொழிலாளர் வர்க்கம் பின்தள்ளிப் போட முடியாது என்பதாகும். தொழிலாளர் வர்க்கத்தினை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்குவது என்பது எதிர்ப் புரட்சி சக்திகளை ஆயுதபாணியாக்குவதாகும்.

"யூ.என்.பி. அரசாங்கத்தை வெளியேற்றி தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொணரும் முன்நோக்கின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை சூழ தமிழ் பேசும் மக்கள் உட்பட சகல ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்ட தொழிலாளர் வர்க்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிபந்தனையற்று ஊர்ஜிதம் செய்வதும் அனைத்து இனவாத சட்டங்களையும் ஒழித்துக் கட்டுவதும் சகல முதலாளித்துவ இராணுவங்களையும் குண்டர் படைகளையும் கலைக்கும் பொருட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாப்புக் கமிட்டிகளைக் கட்டியெழுப்புவதும் இனவாத குண்டர் படைகளை வீதிகளில் இருந்து கலைக்க நடவடிக்கை எடுப்பதுவும் இந்த முன்நோக்கின் தவிர்க்க முடியாத அம்சங்களாகும்."

சமசமாஜ கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமன்றி சகல வகையான மத்தியவாதிகளும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் இந்த முன்நோக்கும் வேலைத் திட்டமும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களிடையே வேரூன்றச் செய்யும் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டனர். அதில் விக்கிரமபாகு கருணாரட்னவின் தலைமையில் பிற்காலத்தில் நவசமசமாஜக் கட்சியை அமைக்க ஒன்றிணைந்த வாசுதேவ நாணயக்கார முக்கிய பேர்வழியாவார்.

இந்தச் சகலரதும் உதவியோடு தமது கையை மேலும் பலப்படுத்திக் கொண்ட யூ.என்.பி. அரசாங்கம், ஆகஸ்ட் இனவாத பயங்கர இயக்கத்தின் மத்தியில் நாடு பூராகவும் அடக்குமுறையை இறுக்கமாக்கும் பொருட்டு புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரைந்துகொள்ள விரைவாக நடவடிக்கை எடுத்தது. 1977 செப்டெம்பரில் அதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. 1948 சுதந்திரம் என சொல்லிக்கொள்ளப்பட்ட பெப்பிரவரி 4ம் திகதியின் முப்பது ஆண்டுகளின் பின்னர், 1978ல் ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதி பதவியில் வேரூண்றிக்கொள்ள இதனைப் பயன்படுத்தினார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை நிறைவேற்றிக்கொள்வதற்கு முன்னரே, 1972 அரசியலமைப்புக்கு கொணர்ந்த ஒரு திருத்தத்தின் மூலம் இதற்கு வழிவகுக்கப்பட்டது. 1972 அரசிய&#