World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Further international protests against LTTE death threats

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக மேலும் அணைத்துலகக் கண்டனங்கள்

By K. Ratnayake
17 October 2002

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளம் (World Socialist Web Site) இலங்கையின் வடக்கின் ஊர்காவற்துறைத் தீவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) அங்கத்தவர்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) உள்ளூர் அலுவலர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலைக் கண்டனம் செய்யும் ஒரு தொகைக் கடிதங்களை உலகம் பூராவும் இருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம், சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுப்பதன் பேரில் ஒரு ஆசிரியர் குழு அறிக்கையை வெளியிட்டு மூன்று நாட்களின் பின்னர், அக்டோபர் 8 அன்று, ஊர்காவற்துறையில் சோ.ச.க.வின் முன்னணி உறுப்பனரான நாகராஜா கோடீஸ்வரனை நன்கு அறியப்பட்ட விடுதலைப் புலி அங்கத்தவரான கார்த்திகேசு அமிர்தலிங்கம் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தார். கோடீஸ்வரன் தப்பிய போதிலும் அவரது தலையிலும் கழுத்திலும் தோள்களிலும் கடுமையான காயங்களுக்கு உள்ளானதோடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இந்த வார ஆரம்பத்தில், அம்பிகை நகரில் உள்ள ஒரு மீனவர் ஊர்காவற்துறையின் வேலணையில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாமுக்குச் சென்று, அமிர்தலிங்கம் தன்னுடன் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடந்துகொள்வதாக முறையிட்டார். விடுதலைப் புலிகளின் அலுவலர்கள்: "நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அந்த ஐந்துபேர் சம்பந்தமாக மாத்திரமே அக்கறை செலுத்துகின்றோம். நாம் அவர்களுக்கு சரியான மருந்தைக் கொடுப்போம்," எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த "ஐவரும்" ஊர்காவற்துறை தீவில் உள்ள சோ.ச.க. அங்கத்தவர்களேயாகும். "சரியான மருந்து" எனபதானது, செப்டெம்பர் 6 அம்பிகை நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் ஒன்று கூடலின் போது, விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறைப் பிரதிநிதியான செம்மணனால் விடுக்கப்பட்ட முதலாவது எச்சரிக்கையை எதிரொலிக்கின்றது. அவர், ஊர்காவற்துறையில் சோ.ச.க. வின் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்ததோடு, 1991ல் ஒரு தற்கொலைப் போராளியால் கொல்லப்பட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மேற்கொண்டதைப் போன்று அவர்களுக்கும் செய்யப்படும் என எச்சரித்தார். "வெகு விரைவில் நாங்கள் நோயைக் கண்டுபிடித்து அவசியமான மருந்தைக் கொடுப்போம்," என செம்மணன் குறிப்பிட்டார்.

சோ.ச.க. அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ள போதிலும், பொலிசார் செம்மணணுக்கோ அல்லது அமிர்தலிங்கத்துக்கோ எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

செவ்வாய்கிழமை சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், ஊர்காவற்துறை பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பாக, தென் இலங்கையில் உள்ள உதவி பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்தார். "அவர்கள், பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றவியல் தாக்குதல்கள் சம்பந்தமான சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களின் முறைப்பாடுகளை சரியாகப் பதிவுசெய்துகொள்ள மறுத்ததாகவும், இந்த குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்," அவர் சுட்டிக் காட்டினார்.

அவர்கள் அனைவரும் நன்கு அறிந்த விடுதலைப் புலி உறுப்பினர்களாக இருந்தும் கூட, இரண்டு விடயங்களிலும் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் உறவு பற்றி எழுதுவதற்கு பொலிசார் தவறியதாக டயஸ் குறிப்பிட்டிருந்தார். தமது கடிதத்தை அடுத்து, டயஸ் உதவி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அங்கிருந்த பேச்சாளர் ஒருவர், முறைப்பாடு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ஆனால் விடயம் கவனத்தில் எடுக்கப்படும் என மட்டுமே குறிப்பிடக்கூடியவராக இருந்தார்.

இந்த வருட முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழுவையும் சோ.ச.க. தொடர்புகொண்டது. கண்காணிப்புக் குழு உ.சோ.வ.த. பிரச்சாரத்தின் பிரதிபலனாக தொலைமடல் மற்றும் மின்னஞ்சல் செய்யப்பட்ட பல கடிதங்களை பெற்றுக்கொண்ட அதேவேளை அவற்றை நடவடிக்கை மேற்கொள்வதற்காக வட இலங்கை நகரான யாழ்ப்பாணத்தில் உள்ள அதனது அலுவலகத்துக்கு அறிவித்துள்ளதாக கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சோ.ச.க. யின் ஜனநாயக உரிமைகள் மீதான விடுதலைப் புலிகளின் வெளிப்படையான தாக்குலைக் கண்டனம் செய்து, உ.சோ.வ.த. வாசகர்களால் அனுப்பப்பட்ட கடிதங்களில் இருந்து சில தேர்வுகள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து பேராசிரியர் C எழுதியது: "வடக்கில் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை தெளிவான குரலில் கண்டனம் செய்ய வேண்டியது எனது கடமையென நான் கருதுகிறேன். இலங்கையின் தமிழ் மக்களின் உரிமைகளை மீறுவதற்கு எதிரான சோ.ச.க.வின் எதிர்ப்பு, வடக்குக் கிழக்கில் இருந்து ஆயுதப் படைகளை வெளியேற்றக் கோருதல் போன்ற அமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுப் பதிவுகள் மிகத் தெளிவானதும் அனைத்துலக சமூகம் நன்கு அறிந்ததுமாகும். விடுதலைப் புலிகள் சோ.ச.க.வுக்கு எதிரான வன்முறைகளை கண்டனம் செய்வதோடு இந்த சோசலிச அமைப்பின் அங்கத்தவர்களுக்கு அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க அனுமதித்து, மரண அச்சுறுத்தல்களை விலக்கிக்கொள்ள வேண்டும்."

சோ.ச.க. வின் ஜேர்மனிய சகோதரக் கட்சியான, சோசலிசத்துக்கும் சமத்துவத்துக்குமான கட்சியின் உறுப்பினர் ஹெல்மூட் ஏர்னஸ், ஹெசன் மாநிலத் தேர்தலில் ஒரு வேட்பாளராவர். அவர் விடுதலைப் புலிகளுக்கு எழுதிய கடிதத்தில்: "நான் எமது உறுப்பினர்களுக்கு எதிரான குற்றவியல் தாக்குதலை தேர்தல் தொகுதியின் கவனத்துக்கு கொண்டுவருவதன் பேரில் எமது தேர்தல் பிரச்சாரத்தை பயன்படுத்துவேன். நாகராஜா கோடீஸ்வரன் மீதான கொடூரமான தாக்குதலையிட்டுத் தெரியவந்தால் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் மற்றும் ஜேர்மனியில் உள்ள தமிழ் பேசும் சமூகத்துக்கு மத்தியிலும் எதிர்ப்புகள் தோன்றும்...

"உள்நாட்டு யுத்தத்தில் அவர்களின் முன்நாள் எதிரிகளுடன் நெருக்கமான அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களின் தொழிலாள வர்க்க எதிரிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இவ்வாறான முறைகளைக் கையாண்டிருப்பது தற்செயலானதல்ல. இலங்கையின் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாள வர்க்கம் இந்த முன்நோக்கை நிராகரிக்கும் என்பது எனக்கு நிச்சயம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து AI: "கடற்தொழிலாளர் சங்கத்தை சுரண்டுவதற்கான முயற்சி (பணம்) தோல்விகண்டதை அடுத்து, இந்த மாத முற்பகுதியில் செம்மணன் மற்றும் அவரது உதவியாளர் அருந்தவனாலும் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலானது, இந்த கொலை முயற்சி விடுதலைப் புலிகளின் முன்கூட்டிய அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பாகமேயாகும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது," எனக் குறிப்பிட்டுள்ளார். சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்த அவர்: "ஏனையவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பீர்களேயானால், நீங்கள் தமிழ் மக்களை ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியச் செய்வீர்கள்," என சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு பண்டகசாலை ஊழியரான SP, விடுதலைப் புலிகளுக்கு எழுதிய கடிதத்தில்: "இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் இந்தத் தாக்குதல் சம்பந்தமாக எந்தவொரு அறிக்கையையும் விடுக்க மறுப்பதானது, தமிழர் விரோத மற்றும் தொழிலாளர் வர்க்க விரோத கொழும்பு அரசாங்கத்தின் வழியில் செல்வதாகும்... இலங்கை அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் நீங்களும் தமிழ் தொழிலாளர் வர்க்கத்துக்கெதிரான கொடூரமான பொலிஸ் படையையே பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள்... விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை ஆதரிக்கின்றதா அல்லது இல்லையா? இதைப் பற்றி நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரோமானியாவின் புக்காரெஸ்ட்டில் இருந்து GA குறிப்பிடுகையில்: "இலங்கை அரசாங்கத்துடனான கொடுக்கல் வாங்கல்கள் காட்டுவதுபோல், விடுதலைப் புலிகள் இயக்கம் கொழும்பு ஸ்தாபனத்தின் அரசியல் வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது.... இது சோ.ச.க. போராளிகள் மீதான மரண அச்சுறுத்தலை முழுமையாகத் தெளிவுபடுத்துகின்றது.... நான் விடுதலைப் புலிகளின் நடத்தையை உறுதியாகக் கண்டனம் செய்கிறேன். இந்த அமைப்பு இடதுசாரிப் போராளிகள் மீதான பயமுறுத்தல்களையும் பலாத்காரங்களையும் ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் இருந்து PS எழுதியதாவது: "உங்களது அமைப்பு (விடுதலைப் புலிகள்) சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களை நிறுத்துவதோடு விலக்கிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுப்பதற்காக, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் உ.சோ.வ.த. வின் அறிக்கையில் நான் எனது கையொப்பத்தையும் இடுகிறேன்."

உ.சோ.வ.த. ஜேர்மனி, இலங்கை மற்றும் கனடாவிலிருந்தும் சோ.ச.க. வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலைக் கண்டனம் செய்யும் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

நாம் சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தலை விலக்கிக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை கோரும் உ.சோ.வ.த. பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு ஜனநாயக உரிமைகளை காப்பதில் அக்கறைகொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

கடிதங்களையும் அறிக்கைகளையும் தபால் செய்யவேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரிகள்:

யாழ்ப்பாணம்

Ilamparithi
LTTE Jaffna Office
Potpathy Road, Kokuvil
Jaffna

Sri Lanka

கொழும்பு

LTTE
c/- Sri Lanka Monitoring Mission
PO Box 1930
Galle Road
Colombo 3

Sri Lanka

Email: slmm-hq@mfa.no

அவை கீழ்வரும் முகவரிகளுக்கும் தபால் செய்ய அல்லது தொலைமடல் செய்ய முடியும்:

லண்டன்

The LTTE

c/- Eelam House

202 Long Lane

London SE1 4QB

United Kingdom

Telephone: 44-171-403-4554

Fax: 44-171-403-1653

தயவு செய்து அனைத்து அறிக்கைகளின் பிரதிகளையும் உ.சோ.வ.த.வுக்கும் அனுப்பி வைக்கவும்:

Email: editor@wsws.org

Fax:

United States: 248-967-3023

Britain: 0114 244 0224

Australia: 02 9790 3501

See Also:

உலக சோசலிச வலைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரண அச்சுறுத்தலுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்

ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில்
மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும்
பகுதி-1  | பகுதி-2

சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்

Top of page