மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெப்ரவரி 22 இல், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பெர்சிவெரன்ஸ் விண்கலம் தரையிறங்கி வெறும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர், நாசா விஞ்ஞானிகள் கிரக ஆராய்ச்சியின் மற்றொரு முதல் வெளியீடுகளை வெளியிட்டனர்: அந்த விண்கலத்தின் பார்வையிலிருந்து ஒரு விண்கலம் உள்ளே நுழைந்து, தரையில் இறங்கி தடம் பதிப்பது வரையில் பல்வேறு காணொளிகளை வெளியிட்டனர்.
பெர்சிவெரன்ஸ் தரையிறக்கத்தின் பல்வேறு கட்டங்களைப் படம் பிடிக்க மொத்தம் ஐந்து கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. இரண்டு கேமராக்கள் அந்த விண்கலத்தின் மேலே வைக்கப்பட்டிருந்தன, ஸ்கைக்ரேன் மூலமாக விண்கலத்தைத் தரையிறக்கும் அமைப்புமுறையின் பாகமாக இருந்த ராக்கெட் பொதியைக் கவனிக்க ஒரு கேமரா வைக்கப்பட்டிருந்தது, கீழ்நோக்கி பார்த்தவாறு வைக்கப்பட்டிருந்த ஒன்று, செவ்வாய் கிரக தரையை நோக்கி அந்த விண்கலம் செல்லும் போது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் ஒரு விண்கலத்தின் பார்வையிலிருந்து முன்வரிசை இருக்கையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
செவ்வாய் கிரக வளிமண்டலத்திற்குள் நுழையும் போது விண்கலத்தைப் பாதுகாத்த வெளிப்புற கூடாரம் மீது இன்னும் இரண்டு கேமராக்கள் இணைக்கப்பட்டிருந்தன, அவை இரண்டு வெவ்வேறு பார்வையிலிருந்து பாராசூட் நிலைநிறுத்தலைப் பார்ப்பதற்காக மேல்நோக்கி பார்த்தவாறு வைக்கப்பட்டிருந்தன. கடைசியாக விண்கலம் நிலைநிறுத்துவதைப் பதிவு செய்வதற்காக ராக்கெட் பொதியின் அடியில் மற்றொரு கேமரா சேர்க்கப்பட்டிருந்தது, இது அந்த செங்கிரகத்தின் மீது விண்கலம் மெதுவாக நிலைநிறுத்தப்படும் மலைப்பூட்டும் படங்களை வழங்கியது.
இந்த காணொளிகளின் ஒவ்வொரு காட்சியும் வரவிருக்கும் ஆண்டுகளில் கவனமாக ஆய்வு செய்யப்படும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் அந்த தருணத்திலேயே எவரொருவரும் அதை பார்க்க இயலும் வகையில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஒவ்வொரு கணமும் விண்கலத்தின் நிலை குறித்த முக்கியமான தகவல்களை வழங்குகின்றன, இது இந்த திட்டத்தின் மிகவும் சிக்கலான பாகமாக கூறப்படுகிறது.
ஸ்கைக்ரேன் (skycrane) ஐ எடுத்துக் காட்டிய இரண்டு காணொளிகளும் முதல்முறையாக இந்த திட்டத்தில் தென்படும் அமைப்புகளாகும். விண்கலத்தின் மற்ற ஒவ்வொரு அம்சமும் (பாராசூட், வெப்பக் கவசம், விண்கலம் ஆகியவற்றை) பூமியில் சோதிக்க முடியும் என்றாலும், ஸ்கைரேன் என்பது பிரத்யேகமாக செவ்வாய் வளிமண்டலத்தில் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசையில் மட்டுமே வேலை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது இதன் அர்த்தம் அதை பூமியில் பரிசோதிக்க முடியாது. இந்த அமைப்பு கியூரியாசிட்டி (Curiosity) விண்கல திட்டப் பணிக்காக முதல்முதலில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஊகிக்கப்பட்டிருந்தாலும், அதன் வடிவமைத்தவர்களே அதன் செயல்பாட்டை இப்போது தான் முதல்முறையாக பார்க்கிறார்கள். எல்லா விபரங்களின்படி, அந்த அமைப்பு எந்த குறைபாடுமின்றி சரியாக செயல்பட்டிருந்தது.
அதே நேரத்தில், நாசா செவ்வாய் கிரகத்தில் இருந்து முதல் ஒலிப்பதிவுகளையும் வெளியிட்டது. பெர்சிவெரன்ஸ் விண்கலம் அதன் முதன்மை கேமரா (SuperCam) கருவியுடன் இணைக்கப்பட்ட மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது, இது விண்கலத்தின் தரையிறங்கும் தளத்தில் மென்மையான காற்று வீசுவதைப் பதிவு செய்தது. மூல ஒலியும் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட ஒலிப்பதிவும் இங்கே இருக்கின்றன. இந்த மைக்ரோஃபோன் தொடர்ந்து ஒலிகளைப் பதிவு செய்யும், செவ்வாய் கிரக பாறைகள் முதன்மை கேமராவில் பொருத்தப்பட்ட லேசரால் ஆவியாகும் என்பதால் பிரதானமாக அதன் ஒலிகளைக் கேட்பதற்காக இது பொருத்தப்பட்டுள்ளது. இந்த பாறைகளின் வேதியியல் மற்றும் புவியியலைப் பகுப்பாய்வு செய்ய, விண்கலத்தின் கேமராக்கள் மற்றும் ஸ்பெக்ரோமீட்டர்களின் தரவுகளுடன் இணக்கமாக இந்த தரவுகள் பயன்படுத்தப்படும்.
விண்கலம் இறுதியாக தரையிறங்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்து நுண்ணோக்கும் சுற்றுவட்டப்பாதை ஆர்பிட்டர் எடுத்த விண்கலத்தின் தரையிறக்கும் அமைப்புமுறையின் புகைப்படங்கள், மற்றும் பெர்சிவெரன்ஸ் எடுத்த ஆயிரக் கணக்கான மூலப் படங்கள் உட்பட இன்னும் பல்வேறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மையாக இந்த விண்கலம் தரையிறங்கிய பின்னர் எதிர்பார்த்தவாறு செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக இந்த படங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படும் என்றாலும், அவை ஜெசெரோ பள்ளத்தின் வரலாறு குறித்து ஒருசில ஆரம்ப விஞ்ஞான உட்பார்வைகளை ஏற்கனவே வழங்கி உள்ளன.
தற்போது விண்கலத்தின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள இன்ஜெனியூட்டி (Ingenuity) ஹெலிகாப்டர் எதிர்பார்த்தவாறு இயங்குகிறது என்பதையும் இந்த திட்டக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில், அந்த வாகனத்தின் பேட்டரிகளை எப்போது பயன்படுத்த வேண்டுமோ அதற்கு தயாராக அவற்றை மின்னேற்றம் செய்வார்கள் என்பதோடு, அது செவ்வாய் கிரக மேற்பரப்பில் பறக்கத் தொடங்குமென நம்பப்படுகிறது, இதை 30 இல் இருந்து 60 நாட்களுக்குள் மேற்கொள்ள இப்போது திட்டமிடப்பட்டுள்ளது.