இலங்கை ட்ரொட்ஸ்கிச தலைவர் விஜே டயஸின் 80 வது பிறந்தநாளில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 27 அன்று, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அதன் பொதுச் செயலாளர் விஜே டயஸின் எண்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு இணைய வழி சந்திப்பை நடத்தியது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் அவர்களால் பின்வரும் வாழ்த்துக்கள் வழங்கப்பட்டன.

அன்புடன் தோழர் விஜே,

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக, உங்கள் எண்பதாவது பிறந்தநாளில் உங்களுக்கு அன்பான மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்க என்னை அனுமதிக்கவும்.

உங்கள் பிறந்த நாள் தனிப்பட்ட மைல்கல்லை கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை விட மேற்பட்ட ஒன்றானதாக இருப்பதால், என்னால் சாதாரண முறையிலான வார்த்தைகளை பின்பற்றாமல் இருக்க முடியாதுள்ளது. அதே நேரத்தில் இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகும்.

ஒரு பரந்த வரலாற்று அனுபவம் உங்கள் வாழ்க்கையில் குவிந்துள்ளது. உங்கள் அரசியல் சுயசரிதையின் அத்தியாயங்கள் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளையும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவற்றின் நனவான வெளிப்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. இந்த நிகழ்வுகளில் உங்கள் வாழ்க்கை ஆழமாகப் பொதிந்துள்ளது. ஆனால் வரலாற்றுடனான உங்கள் உறவானது, மிகவும் நனவான மற்றும் செயலூக்கமாக பங்கேற்பாளரின் உறவாக இருந்தது.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ்

நிச்சயமாக, நீங்கள் இக்காலகட்டத்தின் ஒரு வெளிப்பாடாக இருப்பதுடன், 'ஏற்கனவே இருக்கும் சூழ்நிலைகளின் கீழ், கடந்த காலத்திலிருந்து வழங்கப்பட்ட மற்றும் சுமந்துவரப்பட்டதன்படி' செயல்படுகிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த சூழ்நிலைகளில், உங்கள் ஆறு தசாப்த கால அரசியல் செயல்பாடுகளில் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக வரலாற்றுத் தேவைக்கு ஏற்ப நிகழ்வுகளை வழிநடத்த முயன்றீர்கள். நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான போராட்டங்களை, 'குறைந்த தீமைகள்' என்பதிலிருந்து, அதாவது பல தோல்விகளுக்கு வழிவகுத்த சந்தர்ப்பவாத அடிபணிவின் பாதையிலிருந்து விலக்கி, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் இலக்கை நோக்கி திசைதிருப்ப போராடியுள்ளீர்கள்.

இதன் விளைவாக, அக்காலகட்டங்களில் மேலாதிக்கம் செய்யும் அரசியல் போக்குகளான வெளிப்படையான முதலாளித்துவ கட்சிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள், முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் பப்லோவாத அமைப்புகள் மற்றும் அவர்களுடைய அரசியல் கூட்டாளிகளுக்கு எதிராக உங்கள் பணியை நடத்த புறநிலை நிபந்தனைகளால் நீங்கள் நிர்பந்திக்கப்பட்டீர்கள். ஆனால் வரலாறு நிரூபித்தபடி, புரட்சிகர எதிர்ப்புடனான உங்கள் பணி, வர்க்கப் போராட்டத்தின் விதிகளைப் பற்றிய சரியான புரிதலை அடிப்படையாகக் கொண்டது.

1964 இல் திருமதி பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கத்தில் லங்கா சம சமாஜக் கட்சி நுழைவதை எதிர்த்ததில் நீங்கள் சரியாக இருந்தீர்கள்; LSSP(R) இன் கொள்கை கோட்பாடற்ற, மத்தியவாத ஊசலாட்டங்களை எதிர்க்கையில் சரியாக இருந்தீர்கள், 1968 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்த முடிவிலும் சரியாக இருந்தீர்கள்; 1970-71 இன் முக்கியமான காலகட்டத்தில் ஜேவிபி இன் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நிராகரித்தது சரியானது; 1971 இல், கிழக்கு பாகிஸ்தானில் இந்தியாவின் தலையீட்டிற்கு பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகம் ஒப்புதல் அளித்தபோது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமை சரியாக இருந்தது (பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதம் தொடர்பான அமெரிக்க வேர்க்கஸ் லீக்கின் எதிர்கால விமர்சனங்களை எதிர்பார்த்து); 1983 இல் சிங்கள முதலாளித்துவத்தால் தொடங்கப்பட்ட இனவெறிப் போருக்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் திவாலான தேசியவாதத்தை நிராகரிப்பதிலும் சரியாக இருந்தீர்கள்; மற்றும் 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தித்திற்கு எதிரான இலங்கை பிரிவின் நிலைப்பாடு மிகவும் சரியானது.

ஆனாலும் கூட, புரட்சிகர எதிர்ப்பின் நீண்ட வரலாற்றில், ஆக்கபூர்வமான மற்றும் சாதகமான உள்ளடக்கம் உள்ளது. அது சரியான அரசியல் பாதையை தெளிவாகக் காட்டி நிரூபித்துள்ளது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீதான தீர்க்கமான வரலாற்று சோதனை 1985 இல் வந்தது. அதன்போது அது, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்ததோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தது. புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளராக தோழர் கீர்த்தி பாலசூரிய, அனைத்துலகக் குழுவிற்குள் நடந்த போராட்டத்திற்கு தனிச்சிறப்பு வாய்ந்த மற்றும் தொலைநோக்குள்ள தலைமையை வழங்கினார், மேலும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவால் அவரது பணி பெரிதும் வலுப்பெற்றது.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தில் உங்கள் முக்கிய பங்கு, அனைத்துலகக் குழுவுக்கு நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான், டிசம்பர் 1987 இல் தோழர் கீர்த்தியின் திடீர் மற்றும் சோகமான இழப்பை எதிர்கொண்டபோது, நீங்கள் இலங்கை பிரிவின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என முடிவெடுத்தது. கடந்த 34 வருடங்களாக நீங்கள் மேற்கொண்ட பொறுப்பானது, இலங்கையிலும் அனைத்துலகக் குழு முழுவதிலும் உள்ள உங்கள் தோழர்களின் மகத்தான மரியாதையை மட்டுமல்லாமல் உங்கள் ஆழ்ந்த பாசத்தையும் வென்றது.

பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கழகம் ஏற்பாடு செய்த ஒரு கோடைகால பள்ளியில் நாம் முதலில் ஜூலை 1972 இல் சந்தித்தோம். சிங்களத்தில் வழங்கப்பட்ட கீர்த்தியின் பங்களிப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் கடினமான பணியை நீங்கள் மேற்கொண்டதை நான் குறிப்பாக நினைவு கூர்கிறேன். அடுத்த தசாப்தத்தில் நாங்கள் பிரிட்டனில் எப்போதாவது சந்தித்தோம், ஆனால், துரதிருஷ்டவசமாக, விரிவான அரசியல் கலந்துரையாடலுக்கு சாத்தியமிருக்கவில்லை. நவம்பர் 1986 இல், நான் முதல் முறையாக இலங்கைக்குப் பயணம் செய்தபோது, அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விரிவாகவும் அரசியல் ரீதியாகவும் சாதகமான சூழலில் விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தோழர் கீர்த்தியின் மரணத்திற்குப் பின்னர், எங்கள் கூட்டுப் பணி நெருக்கமான மற்றும் ஒழுங்குமுறையான தன்மையைக் கொண்டிருந்தது. எங்கள் அரசியல் உறவு, நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் தனிப்பட்ட நட்பாக வளர்ந்தது. நீங்கள் ஒரு உண்மையான புரட்சியாளரின் சிறந்த பண்புகளை எடுத்துக்காட்டும் ஒரு மனிதர்: சந்தேகத்திற்கு இடமின்றி ஒருமைப்பாடு, உறுதிப்பாடு, நேர்மை, புறநிலை, தைரியம், தனிப்பட்ட இரக்கம், நம்பிக்கை மற்றும் அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

உங்கள் முக்கிய தனிப்பட்ட மைல்கல்லான 75 ஆவது பிறந்தநாளில் நான் பின்வருமாறு எழுதியிருந்தேன்:

ஒரு தோழர், போராளி மற்றும் ஒரு மனிதர் என்ற முறையில் உங்கள் மீதான எனது மரியாதையின் ஆழத்தை என்னால் போதுமான அளவு வார்த்தைகளால் தெரிவிக்க முடியாதுள்ளது. நீங்கள் தவறுகளை விட்டிருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் இப்போது ஒன்று கூட மனதில் வரவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் மார்க்சிச கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் சமரசமற்றவராக இருந்தீர்கள். நீங்கள் சிறை தண்டனையை அனுபவித்தபோது, சோசலிசப் புரட்சிக்கான உங்கள் அர்ப்பணிப்பால் சிறைக்காவலர் கூட ஈர்க்கப்பட்டார்.

இலங்கை முழுவதும், —உங்கள் அரசியல் எதிரிகளால் கூட— புரட்சிகர உறுதிப்பாடு கொண்டவராக மதிக்கப்படுகிறீர்கள். சிங்கள, தமிழ் சமூகங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதையை கொண்டுள்ள மற்றும் போற்றப்படும் இலங்கையின் ஒரே அரசியல் தலைவர் நீங்கள் மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறது மற்றும் அதேபோல் அனைத்துவகையான இனம் சார்ந்த கருத்துக்களையும் எதிர்க்கிறது என்பதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் போராட்டங்களின் போக்கிலும், எண்ணற்ற கஷ்டங்களை எதிர்கொள்ளும் போதும் —உங்கள் அன்பு மனைவி தோழர் பியசீலியின் இழப்பு உட்பட— நீங்கள் நான்காம் அகிலத்தின் பதாகையை தாங்கிப்பிடித்துள்ளீர்கள்.

2016 ஆம் ஆண்டில் நான் வெளிப்படுத்திய உணர்வுகள் கடந்த ஐந்து வருட அனுபவங்களால் வலுப்படுத்தப்பட்டது. ஏனெனில் நீங்கள் இலங்கை பிரிவிலும் அனைத்துலக் குழுவிலும் ஒரு சக்திவாய்ந்த குரலாகவும் முன்னிலையிலும் இருந்தீர்கள்.

தோழர் விஜே: நான்காம் அகிலத்தின் வரலாற்றிலும், உலகெங்கிலும் உள்ள உங்கள் தோழர்களின் இதயத்திலும் நீங்கள் ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றுள்ளீர்கள்.

ஆழ்ந்த பாசத்துடன்,

டேவிட்

Loading