World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Top LTTE leaders remain silent as SEP defence campaign gathers support

சோ.ச.க.வை பாதுகாக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகிவருகையில் விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைமைகள் மெளனமாயுள்ளனர்

By K. Ratnayake
23 October 2002

Use this version to print | Send this link by email | Email the author

வட இலங்கையின் ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) அங்கத்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் சரீர ரீதியான வன்முறைகளை நிறுத்துமாறு கோரும் உலக சோசலிச வலைத்தளத்தின் (உ.சோ.வ.த) பிரச்சாரத்துக்கு பெருகி வரும் ஆதரவை எதிர்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் மெளனம் சாதித்து வருகின்றது.

இலங்கை கண்காணிப்பு குழு, உ.சோ.வ.த. பிரச்சாரத்தை ஆதரிக்கும் கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் பெற்றுக்கொண்ட பின்னர், அது விடுதலைப் புலிகளின் ஒரு உள்ளூர் அலுவலருடன் தொடர்புகொண்டதை அடுத்தே ஒரே ஒரு பதில் கிடைத்தது. அக்டோபர் 16 அன்று விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண அலுவலக பிரதி தலைவரான பாப்பா, ஊர்காவற்துறையில் உள்ள விடுதலைப் புலி அதிகாரிகள் சோ.ச.க.வுக்கு எதிராக எந்தவொரு அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை என வெறுமனே மறுத்துவிட்டதாக சோ.ச.க.விடம் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

பாப்பாவோ அல்லது விடுதலைப் புலிகளின் ஏனைய அதிகாரிகளோ சோ.ச.க. விபரித்துள்ள தகவல்களுக்கு முரணான எந்தவொரு சாட்சியத்தையும் வழங்கவில்லை. முதலாவது மரண அச்சுறுத்தலானது விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறை தலைவர் செம்மணனால் செப்டம்பர் 6 அன்று விடுக்கப்பட்டது. அவர் சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கொடுத்ததைப் போன்ற "தகுந்த மருந்தை" தரவுள்ளதாக எச்சரித்தார். காந்தி 1991ல் கொலை செய்யப்பட்டிருந்தார். இதே எச்சரிக்கையை செம்மணனின் உதவி அலுவலர் அருந்தவன் செப்டம்பர் 7 அன்று மீண்டும் விடுத்தார்.

அடுத்த இருவாரங்கள் பூர்த்தியாவதற்கு முன், அக்டோபர் 8 அன்று நன்கு அறிந்த விடுதலைப் புலி உறுப்பினரான கார்த்திகேசு அமிர்தலிங்கம், சோ.ச.க. உறுப்பினரான நாகராசா கோடீஸ்வரனை கூரிய கத்தியால் தாக்கி தலை, கழுத்து மற்றும் தோளில் கடும் காயங்களை ஏற்படுத்தினார். காண்காணிப்புக் குழுவின்படி, சம்பவம் நடந்த அம்பிகைநகர் கிராமத்துக்கு சென்றிருந்த போதிலும் தாக்கியவரை கண்டுபிடிக்க முடியவில்லை என ஊர்காவற்துறை பொலிசார் அறிவித்திருந்தனர். கண்கானிப்பு குழு தனது விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளதாக சோ.ச.க. விடம் பேசிய அந்த உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப் புலி அலுவலர்கள் கோடீஸ்வரன் மீதான தாக்குதலைப் பற்றி நிச்சயம் அறிவர். அநேக கண்டனக் கடிதங்களும் தொலை மடல்களும் அவர்களது அலுவலகத்திற்கு கடந்த இரு வாரங்களாக அனுப்பப்பட்டு வருவதுடன் ஊர்காவற்துறையிலுள்ள தமது சகபாடிகளுடன் அவர்கள் நெருக்கமாக வேலைபார்த்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக, அக்டோபர் 11ம் திகதி அருகாமையிலுள்ள நைனாதீவுக்கு சென்று திரும்பிய சமயம் பாப்பாவும் செம்மணனும் இலங்கைக் கடற்படையினரால் தடுக்கப்பட்டனர். தமது உரிமைகள் மறுக்கப்படுவதாக கண்காணிப்பு குழுவிடம் முறையிட்ட பின் வழியை தொடர அனுமதிக்கப்பட்டதாயும் தெரியவந்துள்ளது.

ஊர்காவற்துறை பொலிசார் அமிர்தலிங்கத்தை தேட உண்மையில் முயற்சித்திருப்பின், அவர்களது தேடுதல் அசாதாரணமாக மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர் தீவெங்கும் பகிரங்கமாக நடமாடித் திரிவதை சோ.ச.க. அங்கத்தவர்களும் அனுதாபிகளும் கவனித்துள்ளனர். இதற்கும் மேலாக அக்டோபர் 15 அன்று சோ.ச.க. உறுப்பினர் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் விசாரித்த சமயம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பேச்சாளரான தீபால் "மேலிடத்து உத்தரவு கிடைத்தால் மட்டுமே" நடவடிக்கை எடுக்க முடியும் என பதிலிறுத்துள்ளார்.

வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் தொலைபேசியில் பேசிய போதும் இதே பதில்தான் வழங்கப்பட்டது. இந்த விசாரணை ஒரு உயர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விஜே டயசுக்கு கூறப்பட்டுள்ளது. இவை யாவும் தெரிவிப்பது என்னவெனில் கோடீஸ்வரனைத் தாக்கியவரைப் பிடிக்க உள்ளூர் பொலிசாரால் முடியாதுள்ளமைக்கு இலங்கை அரசின் உயர் மட்டத்தின் தலையீடே காரணமாகும் என்பதேயாகும்.

இலங்கை மனித உரிமை குழுவுக்கு -இலங்கை அரசாங்கத்தின் ஒரு குழு- சோ.ச.க. விடுத்த ஒரு பொதுவான கோரிக்கையின் பின்னர் அதன் யாழ்ப்பாண இணைப்பாளர் ஆர். பி. சந்திரசேகர அக்டோபர் 17 அன்று ஊர்காவற்துறை பொலிசுக்கு எழுந்துள்ள இப்பிரச்சினை பற்றிய ஒரு அறிக்கையை இருவாரங்களுக்குள் கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமக்கு விடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளைப் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க தாம் சட்ட ரீதியாக கட்டுண்டுள்ளதாக அக்குழு பொலிசாருக்கு நினைவூட்டியுள்ளது.

உ.சோ.வ.த. பிரச்சாரமானது இலங்கை தினசரிகளில் குறிப்பிடத்தக்க உள்ளடக்கத்தை பெற்றுள்ளது. த ஐலண்ட் பத்திரிகை, "விடுதலைப் புலிகள் சோ.ச.க. அங்கத்தவர்கள், அனுதாபிகளின் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்தியுள்ளது" என்ற தலைப்பில் கோடீஸ்வரன் மீதான தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டுள்ளதுடன், அக்டோபர் 11ம் திகதி வெளியான உ.சோ.வ.த. ஆசிரியர் குழு அறிக்கையின் சில பகுதிகளையும் பிரசுரித்துள்ளது. கொழும்பில் வெளியிடப்படும் மற்றொரு தினசரியான டெயிலி மிரர் பத்திரிகையும், பிரசித்தி பெற்ற வார இதழான சண்டே டைம்ஸ் பத்திரிகையும் உ.சோ.வ.த. பிரச்சாரம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.

கண்டனக் கடிதங்கள்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான டெவ் குணசேகர இந்த தாக்குதலை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு பிரகடனம் செய்துள்ளார்: "தேசிய சிறுபான்மையினர் சார்பாயுள்ளவர்களில் முன்னணியிலுள்ளவர்களைக் கூட விடுதலைப் புலிகள் தனது தாக்குதலில் இருந்து விட்டு வைக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தேசிய சிறுபான்மையினருக்கு ஊறுவிளைவிக்கும்; இது சமாதானத்தை விரும்பும் பெருமளவிலான மக்களின் நலன்களை ஆட்டம் காண வைக்கும் பாசிச ரீதியிலானதும் பேரினவாத பாங்கிலானதுமான விடுதலைப் புலிகளின் அரசியல் போக்கினை தெளிவாக பிரதிபலிக்கிறது."

இதே போல, இலங்கை ஐக்கிய சோசலிச கட்சி தனது அறிக்கையில், "ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான இந்தத் தாக்குதலை கண்டிப்பதுடன், சகல அமைப்புகளுக்கும் தமது சுய அரசியலை முன்னெடுப்பதற்கான உரிமையை காக்கின்றோம்," எனக் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக் கழக விரிவுரையாளரான டி.டி. எழுதியதாவது: "இலங்கை ஊர்காவற்துறையில் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் விடுத்த மரண அச்சுறுத்தலை நான் கடுமையாகக் கண்டனம் செய்கிறேன். இது விடுதலைப் புலிகள் இன்னமும் வன்செயலை ஓர் அரசியல் தந்திரமாக பயன்படுத்துவதுடன் தமிழ் மக்களினதோ அல்லது ஏனைய அமைப்புகளதோ ஜனநாயக உரிமைகள் பற்றிய எதுவித அக்கறையுமே அதற்கில்லை என்பதையும் இச்சம்பவம் நன்கு உறுதிப்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கையில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்துக்கு எதிராக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க போராடிய சிந்தனா சக்தியுள்ள முன்னேற்றமான ஒரு அரசியல் அமைப்பாகும்... உங்களது இயக்கம் சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த உடனடியாக செயல்படவேண்டும். அதற்கெதிரான எந்த தடையும் உங்கள் இயக்கத்தின் அரசியல் நிர்வாணத்தினையே வெளிப்படுத்துகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக் கழக விரிவுரையாளரான கே.ஏ: "அண்மையில் விடுதலைப் புலிகளால் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை நான் வன்மையாக எதிர்க்கிறேன். இந்த நாட்டில் இனப்பிரச்சினை தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழ் மக்களது ஜனநாய உரிமைகளை பாதுகாப்பதற்கான சக்திவாய்ந்த பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் முன்னெடுத்து வந்துள்ளன. ஆனால் சமீபத்தில் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சோ.ச.க.வின் உரிமையை தடை செய்துள்ளதுடன், அவ்வாறு செயற்படும் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு முரணானதாகும். இதற்கும் மேலாக சோ.ச.க. நடவடிக்கையாளர்களது அரசியல் உரிமையை மறுப்பதுமாகும். ஆகையால் நான் விடுதலைப் புலிகளின் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக கண்டனம் செய்வதுடன் சகல சோ.ச.க. உறுப்பினர்களுக்கும் வடக்கு கிழக்கில் செயல்படுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் கோருகிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் உள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச கல்விக் குழு கண்டனக் கடிதம் ஒன்றை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது: அக்கடிதத்தில், "ஊர்காவற்துறை தீவின் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிரான விடுதலைப் புலி அலுவலர்களது வன்செயல் அச்சுறுத்தலையும், தொடர்ந்து நடந்த ஒர் கத்திக் குத்து கொலை முயற்சியையும் விடுதலைப் புலிகளின் முன்னைய பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கையில் அது முழு இலங்கை தொழிலாளர் வர்க்கத்திற்கும் எதிரான தாக்குதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது... ஜனநாயக உரிமைகளுக்கு தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், தனக்குரிய முழு உரிமையுடன் சோ.ச.க. செயற்படுவதை அங்கீரிக்கவும் விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களை நெறிப்படுத்த வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கிறோம்," என குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்காம் அகிலத்தின் தலைமையிலான அனைத்துலகக் குழுவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவில் உள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகம், சோ.ச.க. உறுப்பினர் மீதான தாக்குதலை கண்டித்து பின்வருமாறு பிரகடனம் செய்தது: "இலங்கை அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களைப் பேணியும் தசாப்தகாலங்களாக நீண்ட, திடமானதும் கொள்கைரீதியானதுமான போராட்டம் நடத்தியதால் புகழ் பெற்ற, அனைத்துலக ரீதியில் பிரபலமான சோசலிஸ்டுகளான சோ.ச.க. வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வர்க்க எதிர்ப்பினை இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது."

ஊர்காவற்துறையில் தனது பிரதிநிதிகளின் செயலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமை கண்டனம் தெரிவிக்காமையும், பொலிசார் கோடீஸ்வரனை தாக்கியவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் இலங்கையின் வடக்கில் சோ.ச.க உறுப்பினர்கள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதையும் அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதலையும் நன்கு புலப்படுத்துகிறது. ஜனநாயக உரிமைகளை காப்பதில் அக்கறை கொண்ட சகலரையும் உலக சோசலிச வலைத் தள பிரச்சாரத்தில் பங்குகொண்டு ஆதரவளிக்குமாறு நாம் அழைக்கின்றோம். விடுதலைப் புலிகள், சோ.ச.க.வுக்கு எதிரான தமது அங்கத்தவர்களின் தாக்குதலை பகிரங்கமாக நிறுத்த கட்டளையிடவேண்டும். அதே வேளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக அமிர்தலிங்கத்தை குற்றவியல் குற்றச்சாட்டிற்காக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடிதங்களையும் அறிக்க்ைகளையும் தபால் செய்யவேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரிகள்:

யாழ்ப்பாணம்

Ilamparithi
LTTE Jaffna Office
Potpathy Road, Kokuvil
Jaffna

Sri Lanka

கொழும்பு

LTTE
c/- Sri Lanka Monitoring Mission
PO Box 1930
Galle Road
Colombo 3

Sri Lanka

Email: slmm-hq@mfa.no

அவை கீழ்வரும் முகவரிகளுக்கும் தபால் செய்ய அல்லது தொலைமடல் செய்ய முடியும்:

லண்டன்

The LTTE

c/- Eelam House

202 Long Lane

London SE1 4QB

United Kingdom

Telephone: 44-171-403-4554

Fax: 44-171-403-1653

தயவு செய்து அனைத்து அறிக்கைகளின் பிரதிகளையும் உ.சோ.வ.த.வுக்கும் அனுப்பி வைக்கவும்:

Email: editor@wsws.org

Fax:

United States: 248-967-3023

Britain: 0114 244 0224

Australia: 02 9790 3501

See Also :

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக மேலும் அணைத்துலகக் கண்டனங்கள்

உலக சோசலிச வலைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரண அச்சுறுத்தலுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்

ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில்
மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும்
பகுதி-1  | பகுதி-2

சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்

Top of page