wsws : Tamil
 
1883ம் ஆண்டு ஜேர்மன் பதிப்பின் முகவுரை

 
 
 

1883ம் ஆண்டு ஜேர்மன் பதிப்பின் முகவுரை

தற்போதைய இந்தப் பதிப்பின் முகவுரைக்கு நான் அந்தோ! தனியே கையெழுத்திட்டாக வேண்டும். ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த அனைத்துத் தொழிலாள வர்க்கமும் மற்றவர் எவரையும்விட அதிகமாய் மார்க்சுக்கே கடமைப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார். அவருடைய சமாதியின் மேல் இப்போதுதான் பசும்புல் தளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப் பிறகு அறிக்கையில் திருத்தம் செய்யலாமென்றோ, செருகிச் சேர்க்கலாமென்றோ நினைப்பது முன்னிலும் முடியாத காரியம். பின்வருவதை வெளிப்படையாய்த் திட்டவட்டமாய் மீண்டும் இங்கு எடுத்துரைப்பது முன்னிலும் அத்தியாவசியமெனக் கருதுகிறேன்.

அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் முதலாய்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தப் போராட்டம் தற்போது வந்தடைந்திருக்கும் கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்து வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அனைத்தையும் அதே போது சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றுக்குமாய் விடுவித்தே ஆகவேண்டும் என்கிற இந்த அடிப்படை கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.[B]

முன்பே இதை நான் பலதடவை கூறியிருக்கிறேன். முக்கியமாய் இப்பொழுது அறிக்கையின் முகவுரையில் இதுவும் குறிக்கப்படுதல் அவசியமாகும்.

பிரெடெரிக் எங்கெல்ஸ்
லண்டன்
,1883, ஜூன்28


குறிப்புகள்

B) ''டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த வரையறுப்பு, என் கருத்துபடி வரலாற்றியலுக்கு ஆற்றப் போகிறது'' [9] என்ற ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் நான் எழுதினேன் (இப்பதிப்பு பக்கம் 21 ஐப் பார்க்கவும்) 1845 க்கு முந்திய சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் இந்த வரையறுப்பைப் படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருந்தோம். சுயேச்சையாய் நான் எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன் என்பதை எனது இங்லாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலமை நன்கு தெரிவிக்கின்றது. ஆனால் 1845ம் ஆண்டு வசந்தந்தில் நான் பிரஸ்ஸெல்சில் மார்க்சை மீண்டும் சந்தித்த போது, அவர் இந்த வரையறுப்பைப் பூரணமாய் வகுத்து வைத்திருந்தார். இங்கு நான் எடுத்துரைத்திருப்பது போல் எறத்தாழ இதே அளவுக்குத் தெளிவான வாசகத்தில் எனக்கு அறிவித்தார்''. [1890ம் ஆண்டு ஜேர்மன் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு.] [Top]

9) டார்வின் {Rarwin}, சார்லஸ் ராபர்ட் {1809-1882} ஆங்கில விஞ்ஞானி. பொருள்முதல்வாத உயிரியலை உருவாக்கியவர். உயிர் இயற்கையின் வளர்ச்சி பற்றிய சித்தாந்தத்தை ஏராளமான இயற்கை விஞ்ஞான விஷயாதாரங்களின் அடிப்படையில் முதன்முலாய் ஸ்தாபித்தவர் இவரே. அங்கத உலகின் வளர்ச்சி குறைந்த சிக்கல் கொண்ட வடிவங்களிருந்தது தொடங்கி, அதிகச் சிக்கலுள்ள வடிவங்களுக்குச் செல்லுகிறது என்றும். பழைய வடிவங்கள் மறைவது போலவே, புதிய வடிவங்கள் தோன்றுவது இயற்கை வரலாற்று வளர்ச்சியின் விளைவே என்றும் முதன்முதலில் நிருபித்தவரும் இவரே. இயற்கை, செயற்கைத் தேர்வின் மூலம் இனங்களின் தோற்றம் பற்றிய போதனையே டார்வின் சித்தாந்தத்தின் மையக் கருத்தாகும். மாறுந்தன்மையும் பாரம்பரியமும் அங்கஜீவிகளின் இயல்பு என்றும், ஒரு விலங்கிற்கோ தாவரத்துக்கோ வாழ்வதற்கான அதன் போராட்டத்தில் பயன்னுள்ளவையான மாறுதல்கள் நிலை பெற்று, குவிந்து, மரபுவழியாகப் பெறப்படுகின்றன என்றும், புதிய விலங்குகளும் தாவரங்களும் தோன்றுவதற்கு இவையே காரணமாகின்றன என்றும் டார்வின் உறுதிப்படுத்தினார். தமது சித்தாந்தத்தின் பிரதான கோட்பாடுகளையும் சான்றுகளையும் The origin of Species {''இனங்ளின் தோற்றம்''} {1859} என்னும் நூலில் டார்வின் விவரித்துள்ளார். [Top]

   
World Socialist Web Site
All rights reserved