wsws : Tamil
 
1890ம் ஆண்டு ஜேர்மன் பதிப்பின் முகவுரை

 
 
 

1890ம் ஆண்டு ஜேர்மன் பதிப்பின் முகவுரை

மேற்கண்டது எழுதப்பட்ட பிறகு [F], அறிக்கையின் ஒரு புதிய ஜேர்மன் பதிப்பை வெளியிடுவது அவசியமாகியுள்ளது. அதோடு அறிக்கைக்கு நிகழ்ந்துள்ளவை பலவற்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இரண்டாவது ரஷ்ய மொழிபெயர்ப்பு ஒன்று வேராஸசூலிச்சால் செய்யப்பட்டு 1882ல் ஜெனீவாவில் வெளியாயிற்று. அந்தப் பதிப்புக்கு மார்க்சும் நானும் முகவுரை எழுதினோம். துரதிர்ஷ்டவசமாய் அதன் ஜேர்மன் மூலத்தின் கையெழுத்துப் பிரதி காணாமற் போய்விட்டது. ஆகவே அதை நான் ரஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து திருப்பிப்பெயர்த்து எழுத வேண்டியிருக்கிறது. மூல வாசகம் இதனால் எவ்வகையிலும் சிறப்படையப் போவதில்லை. அந்த முகவுரை வருமாறு;

''கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூன் மொழிபெயர்த்தது. அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோலகல் ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய நாட்டினர் அப்போது அதை (அந்த ருஷ்யப் பதிப்பை) அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து இன்று சாத்தியமாய் இராது.

''பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாய் இருந்தது என்பதை அறிக்கையின் கடைசிப் பிரிவு, பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப் பிரிவு, மிகத் தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ரஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ரஷ்யாவானது அனைத்து ஐரோப்பியப் பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் மூலம் உட்கவர்ந்து கொள்ளும் நாடாகவும் இருந்து வந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப் பொருள்களை வழங்கின. அதேபோது ஐரோப்பியத் தொழில்துறை உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே அந்தக் காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆதாரத் தூண்காளாய் இருந்தன.

''நிலைமை இன்று எப்படி மாறிவிட்டது! ஐரோப்பாவிலிருந்து நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான் வட அமெரிக்காவை பிரமாண்ட அளவிலான விவசாயப் பொருளுற்பத்திக்குத் தயார் செய்தது. இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியின் போட்டி ஐரோப்பாவின் சிறிதும் பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக் குலுக்குகிறது. அதோடு இந்தக் குடியேற்றம், இது காறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில் துறையில் வகித்துவரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமெனக் கூறும்படி அத்தனை விறுவிறுப் போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு, தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலைமைகளும் புரட்சிகர முறையிலான எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும் அடிநிலையான சிறுதிற, நடுத்தர உழவர் நிலவுடைமைகள் பெரும் பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசிந்து வருகின்றன. அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியக்கத்தக்க மிகப் பெரிய அளவிலான மூலதன ஒன்று குவிப்பும் தொழில் துறைப் பிரதேசங்களில் வளர்ச்சியுறுகின்றன.

''அடுத்து இப்போது ரஷ்யா! 1848-49ம் ஆண்டுகளது புரட்சியின் போது ஐரோப்பிய முடிமன்னர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தாரும், அப்போதுதான் விழித்தெழ முற்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க ரஷ்யத் தலையீடு ஒன்றே வழி என்று இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் அதிபதியாய்ப் பிரகடனம் செய்யப்பட்டார். இன்று ஜார் மன்னர் புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில் இருக்கிறார். ரஷ்யாவானது ஐரோப்பாவில் புரட்சி நடவடிக்கையின் முன்னணியாய்த் திகழ்கிறது.

''நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்டு அறிக்கையின் குறிக்கோள் ஆகும். ஆனால் ரஷ்யாவில் நாம் காண்பது என்ன? அதிவேகமாய் வளர்ந்து வரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையின் கூடவே, ரஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்கக் காண்கிறோம். இப்போது எழும் கேள்வி இதுதான்; ரஷ்ய 'ஒப்ஷீனா' வெகுவாய்ச் சீர்குலைக்கப்பட்டிருப்பினும், இன்னமும் நிலத்திலான புராதனப் பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே இருக்கும். இது, நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை எனும் உயர்ந்த வடிவமாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர்மாறாய், மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச் சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?

''இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான்; ரஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெறுமாயின், தற்போது ரஷ்யாவில் நிலத்திலுள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குரிய துவக்க நிலையாய்ப் பயன்படக்கூடும்.

கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்

லண்டன், 1882, ஜனவரி 21

ஏறத்தாழ இதே காலத்தில் புதிய போலிஷ் பதிப்பாகிய Manifest Kommunistyczny ஜெனீவாவில் வெளிவந்தது. தவிரவும் புதிய டேனிஷ் பதிப்பு ஒன்று 1885ல் Socialdemokratisk Bibliothek நூல் தொகுப்பில் வெளியாகியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாய் அது முற்றும் நிறைவானதாய் இல்லை. சில முக்கிய வாசகங்கள் மொழிபெயர்ப்பாளருக்கு இடர்ப்பாடுகளை உண்டாக்கின போலும், அவை விடப்பட்டுருக்கின்றன; அதோடு கவனக்குறைவின் அறிகுறிகளும் இங்கும் அங்கும் தென்படுகின்றன; மொழிபெயர்ப்பாளர் இன்னும் சற்று அதிக முயற்சி எடுத்திருந்தால் அவருடைய வேலை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை அவரது மொழி பெயர்ப்பு புலப்படுத்துவதால், இந்தக் கவனக் குறைவு வருந்தத்தக்கவாறு எடுப்பாய் முன்னிலையில் தெரிகின்றது. பாரிசில் 1885 Le Socialiste ஏட்டில் ஒரு புதிய பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதுகாறும் வெளியானவற்றுள் இதுவே சிறந்ததாகும்.

இதிலிருந்து செய்யப்பட்ட ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு ஒன்று அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. முதலில் மாட்ரிடில் El Socialista ஏட்டில் அச்சிடப்பட்ட இது, பிற்பாடு பிரசுர வடிவில் வெளிவந்தது; Manifiesto del Partido Comunista, por Carlos Marx y F.Engels, Madrid, Administracion de El Socialista, Hernan Corte 8.[G]

சுவையான மற்றெரு விவரத்தையும் இங்கு குறிப்பிடலாம்; ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்றின் கையெழுத்துப்பிரதி 1887ல் கான்ஸ்டான்டிநோப்பிளில் ஒரு பதிப்பாளரிடம் தரப்பட்டது. பாவம் அம்மனிதருக்கு மார்க்ஸ் பெயரைத் தாங்கிய ஒன்றை வெளியிடும் துணிவு வரவில்லை. மொழிபெயர்ப்பாளரைத் தாமே ஆசிரியர் என்பதாய்த் தம் பெயரைப் போடுமாறு ஆலோசனை கூறினார். ஆனால் மொழிபெயர்ப்பாளர் இதற்கு உடன்படவில்லை.

அதிகமாகவோ குறைவாகவோ பிழைபட அமைந்த அமெரிக்க மொழிபெயர்ப்புகள் முதலில் ஒன்றும் பிறகு மற்றொன்றுமாய் மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளாய் இங்கிலாந்தில் வெளியானபின் முடிவில் 1888ல் நம்பகமான மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதைச் செய்தவர் என் நண்பர் சாமுவேல் மூர். இதை அச்சகத்துக்கு அனுப்புமுன் நாங்கள் இருவருமாய்ச் சேர்ந்து மீண்டும் சரிபார்த்தோம். இந்தப் பதிப்பின் தலைப்பு வருமாறு; Manifesto of the Communist Party, by Karl Marx and Frederick Engels. Authorised English Translation, edited and annotated by Frederick Engels, 1888, London, William Reeves, 185 Fleet st., E.C.[H] இதன் குறிப்புகள் சிலவற்றை தற்போதைய இப்பதிப்பில் சேர்த்திருக்கின்றேன்.

அறிக்கையானது அதற்குரிய ஒரு வரலாற்றை உடையதாகும். அது வெளிவந்த காலத்தில், எண்ணிக்கையில் அதிகம் இல்லாத விஞ்ஞான சோஷலிச முன்னணிப் படையினர் அதை ஆர்வத்தோடு வரவேற்றனர் (முதலாவது முகவுரையில் குறிக்கப்படும் மொழிபெயர்ப்புகளின் விபரம் இதற்கு நிரூபணமாகும்). அதன்பின் சீக்கிரமே அது பின்னிலைக்குத் தள்ளப்பட்டது. 1848 ஜூனில் பாரீஸ் தொழிலாளர்களின் தோல்வியைத் தொடர்ந்து [19] மூண்ட பிற்போக்கு இப்படி அதைத் தள்ளிற்று. முடிவில், 1852 நவம்பரில் கொலோன் கம்யூனிஸ்டுகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது [20] ''சட்டத்தின்படி'' அது தீண்டாததாய் விலக்கி வைக்கப்பட்டது. பிப்ரவரிப் புரட்சியுடன் ஆரம்பமான தொழிலாளர் இயக்கம் பொது அரங்கிலிருந்து மறைந்துவிடவே, அதோடு கூட அறிக்கையும் பின்னிலைக்குப் போய்ச் சேர்ந்தது.

ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும் வர்க்கங்களது ஆட்சியதிகாரத்தின் மீது தாக்குதல் தொடுக்கப் போதிய பலத்தைத் திரட்டியதும் அகிலத் தொழிலாளர் சங்கம் உருப்பெற்று எழுந்தது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க் குணம் படைத்த தொழிலாளி வர்க்கம் அனைத்தையும் ஒரே பெரும் படையாய் ஒருசேர இணைத்திடுவதே இந்தச் சங்கத்தின் நோக்கமாய் இருந்தது. ஆகவே இச்சங்கம் அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளிலிருந்து தொடங்க முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற் சங்கங்களையும் பிரெஞ்சு, பெல்ஜிய, இத்தாலிய, ஸ்பெயின் நாடுகளது புரூதோனியர்களையும் ஜெர்மன் லஸ்ஸாலியர்களையும் [I] வெளியே வைத்துக் கதவடைக்காத ஒரு வேலைத்திட்டத்தை இந்தச் சங்கம் ஏற்க வேண்டியிருந்தது. அகிலத்தின் விதிகளது முகப்புரையாய் அமைந்த [21] இந்த வேலைத்திட்டத்தை மார்க்ஸ் வகுத்தளித்தார். பக்கூனினும் அராஜகவாதிகளுங்கூட அங்கீகரிக்கும்படி தேர்ந்த திறமையுடன் இதைச் செய்தார். அறிக்கையில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் இறுதி வெற்றிக்கு, ஒன்றுபட்ட செயற்பாட்டிலிருந்தும் விவாதத்திலிருந்தும் நிச்சயம் ஏற்பட்டாக வேண்டிய தொழிலாளி வர்க்க ஞான வளர்ச்சியைத்தான் முற்றும் நம்பியிருந்தார். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும், நல்லதும் கெட்டதுமான மாறுதல்களும், போரட்டத்தின் வெற்றிகளையும்விட அதிகமாய்த் தோல்விகளும், போராடுவோருக்கு எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல சஞ்சீவியாய் இது காறும் அவர்கள் கருதியிருந்தவை எவ்வளவு குறைபாடானவை என்பதைத் தெரியப்படுத்தவே செய்யும். தொழிலாளர்களது விடுதலைக்கு வேண்டிய மெய்யான நிலைமைகளைத் தீர்க்கமாய்ப் புரிந்து கொள்வதற்கு அவர்களது மனத்தைப் பக்குவமுடையதாக்கவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே நடைபெற்றது. அகிலம் கலைக்கப்பட்ட ஆண்டான 1874ல் இருந்த தொழிலாளி வர்க்கம், அகிலம் துவக்கப்பட்ட காலமாகிய 1864ம் ஆண்டின் தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் மாறானதாய் இருந்தது. லத்தீனிய நாடுகளில் புரூதோனியமும் ஜேர்மனிக்கு உரியதாய் இருந்த தனிவகை லஸ்ஸாலியமும் மடிந்து மறைந்து கொண்டிருந்தன. அக்காலத்தில் கடைந்தெடுத்த பழமைவாதப் போக்குக் கொண்டிருந்த ஆங்கிலேயத் தொழிற் சங்கங்களுங்கூட படிப்படியாய் முன்னேறி 1887ல் அவற்றின் ஸ்வான்சி காங்கிரசில் அவற்றின் தலைவர் ''கண்டத்தின் சோஷலிசம் எங்களுக்குக் கிலியூட்டுவதாய் இருந்த காலம் மறைந்துவிட்டது'' என்பதாய் அச்சங்களின் சார்பில் அறிவிக்கத் துணியும்படியான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஆயினும் கண்டத்து சோஷலிசமானது 1887க்குள் அனேகமாய் முழு அளவுக்கு, முன்பு அறிக்கை முரசறைந்து அறிவித்த அதே தத்துவத்தைக் குறிப்பதாய் இருந்தது. இவ்வாறு அறிக்கையின் வரலாறு 1848ம் ஆண்டு முதலான நவீனத் தொழிலாளி வர்க்க இயக்க வரலாற்றை ஓரளவுக்கு பிரதிபலிக்கிறது. தற்போது சோஷலிச இலக்கியம் அனைத்திலும் அறிக்கைதான் மிகவும் அதிகமாய்ப் பல்கிப் பரவி, மிகப் பெரும் அளவுக்கு சர்வதேசியத்தன்மை கொண்ட படைப்பாகும். சைபீரியாவிலிருந்து கலிவோர்னியா வரை எல்லா நாடுகளிலும் கோடான கோடியான தொழிலாளர்களது பொது வேலைத்திட்டமாகும் என்பதில் ஐயப்பாட்டிற்கு இடமில்லை.

ஆயினும் முதலில் வெளிவந்த போது நாங்கள் அதற்கு சோஷலிஸ்டு அறிக்கை என்று பெயரளிக்க முடியவில்லை. 1847ல் இரு வகையானோர் சோஷலிஸ்டுகளாய்க் கருதப்பட்டனர். ஒருபுறத்தில் பற்பல கற்பனாவாதக் கருத்தமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; இங்கிலாந்தில் ஓவனியர்களும், பிரான்சில் ஃபூரியேயர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இரு தொகுதியோரும் அக்காலத்திலேயே சிறிது சிறிதாய் மறைந்து சென்ற குறுங் குழுக்களாய்க் குறுகிச் சிறுத்து விட்டவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட ரகங்களைச் சேர்ந்த சமூக மருத்துவ புரட்டர்கள் இருந்தார்கள்; மூலதனத்துக்கும் இலாபத்திற்கும் இம்மியளவும் தீங்கு நேராதபடி இவர்கள் தமது சர்வரோக நிவாரணிகள் மூலமும் எல்லா விதமான ஓட்டையடைப்புச் சில்லறைப் பணிகள் மூலமும் சமூகக் கேடுகளைக் களைய விரும்பினார்கள். இவ்விரு வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள். ''படித்த'' வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடியவர்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமுற உணர்ந்து கொண்டு, சமுதாயத்தில் அடிப்படை மாற்றம் செய்யப்பட வேண்டும்மென்று கோரிற்று; இந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. இன்னமும் அது அரைகுறையானதாகவே, உள்ளுணர்வால் உந்தப்பட்டநாகவே, பல சந்தர்ப்பங்களிலும் அவ்வளவாய்ப் பக்குவம்மில்லாத ஒரு கம்யூனிஸமாகவே இருந்தது. என்றாலும் அது இரண்டு கற்பனாவாதக் கம்யூனிச அமைவுகளை - பிரான்சில் காபேயின் ''ஐகேரியக்'' கம்யூனிசம், ஜேர்மனியில் வைட்லிங்கின் [22] கம்யூனிசம் - தோற்றுவிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாய் இருந்தது. 1847ல் சோஷலிசம் முதலாளித்துவ இயக்கத்தையும், கம்யூனிசம் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாய் இருந்தன. சோஷலிசமானது, எப்படியும் கண்டத்திலேனும் கனவான் மனப்பாங்குடையதாய் இருந்தது, ஆனால் கம்யூனிசம் இதற்கு நேர்மாறானதாய் இருந்தது. நாங்கள் அந்த ஆரம்பக் காலத்திலேயே ''தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால் தான் பெறப்பட்டாக வேண்டும்'' என்ற உறுதி மிக்க கருத்துடையோராய் இருந்ததால், இரண்டு பெயர்களில் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதென்பது குறித்து எங்களிடம் தயக்கத்திற்கு இடமில்லை. அன்று முதலாய் இந்த பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.

''உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!'' நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுந்த அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில் நாங்கள் இந்த முழக்கத்தைப் பிரகடனம் செய்ததோம். அப்போது ஒருசில குரல்களே இதை எதிரொலித்து எழுந்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28ல் பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளிகள் அழியாப் புகழ் நினைவுக்குரிய அகிலத் தொழிலாளர் சங்கத்தில் கைகோர்த்து நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளுக்கே நீடிப்பது என்பது மெய்தான். ஆனால் எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளிகளிடத்தே அது உருவாக்கிய அமர ஐக்கியமானது இன்றும் நிலைத்து நிலவுகிறது என்பதோடு, என்றையும்விட வலிமை மிக்கதாய் இருக்கிறது என்பதற்கு இன்றைய தினத்தைக் காட்டிலும் சிறப்பான சான்று ஏதுமில்லை. நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது போர்ப் படைகளை ஒத்திகை நடத்திப் பார்வையிடுகின்றது, இந்தப் படைகள் முதன்முதலாய் ஒரே சேனையாய், ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப்பெற்றனவாய் அணிவகுத்து நிற்கின்றன. 1886ல் அகிலத்தின் ஜெனீவா காங்கிரசாலும், மீண்டும் 1889ல் பாரிசில் தொழிலாளர் காங்கிரசாலும் பறைசாற்றப்பட்டது போல் சட்டம் இயற்றி முறையான எட்டு மணி நேர வேலைநாளை நிலைநாட்ட வேண்டுமென்ற உடனடிக் கோரிக்கையை எழுப்பிப் பாட்டாளிப் படை வரிசைகள் அணி திரண்டிருக்கின்றன. இன்றைய இந்தக் காட்சி எல்லா நாடுகளின் தொழிலாளர்களும் மெய்யாகவே இன்று ஒன்றுசேர்ந்து விட்டார்கள் என்பதை எல்லா நாடுகளின் முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் தெற்றெனப் புலப்படுத்தும்.

இதை நேரில் தம் கண் கொண்டு கண்டுகளிக்க என் பக்கத்தில் மார்க்ஸ் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!

பி. எங்கெல்ஸ்
லண்டன்
, 1890, மே 1


குறிப்புகள்

F) 1883 ஆம் ஆண்டு ஜேர்மன் பதிப்பிற்குத் தாம் எழுதிய முகவுரையை எங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார். இப்புத்தகத்தின் 13-14ம் பக்கங்களில் இந்த முகவுரையைக் காணலாம்.{பதிப்பாசிரியர்.} [Top]

G) கம்யூனிஸ்டுக் கட்சி ஆறிக்கை, ஆக்கியோர்; கார்ல் மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், எல் சோசியலிஸ்தா நிர்வாகம், மாட்ரிட், 8. ஹெர்னான் கொர்டேஸ். (பதிப்பாசிரியர்.) [Top]

H) கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை. கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெங்ஸ். அதிகாரபூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பு. பிரெடெரிக் எங்கெல்ஸ் சரிபார்த்தது. அவர் எழுதித் தந்த கட்டுரைகளும் அடங்கியது.1888, லண்டன், வில்லியம் ரீவ்ஸ், 185 பிளீட் தெரு, ஈ.ஸி. {பதிப்பாசிரியர்} [Top]

I) லஸ்ஸால் எங்களுடன் பேசுகையில் எப்போதுமே தாம் மார்க்சின் ''சீடராய் '' இருப்பதாகவும், எனவே அறிக்கையையே அடிநிலையாய்க் கொண்டிருப்பதாகவும் கூறி வந்தார். ஆனால் அவரைப் பினுபற்றியோரின் நிலை முற்றிலும் வேறு விதமாய் இருந்தது. அரசுக் கடன்களை ஆதாரமாய்க் கொண்ட உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வேண்டுமென்ற லஸ்ஸாலின் கோரிக்கைக்கு மேல் அவர்கள் செல்லவில்லை. தொழிலாளி வர்க்கம் முழுவதையுமே அவர்கள் அரசு உதவியின் ஆதரவாளர்களாகவும் தன்னுதவின் ஆதரவாளர்களாகவும் பிளவுபடுத்தினார்கள். {எங்கெல்ஸ் குறிப்பு.} [Top]

19) குறிப்பு 3 ஐப் பார்க்கவும். [Top]

20) சர்வதேச நிறுவனமான கம்யூனிஸ்டுக் கழகமான {1847-52} உறுப்பினர்களாகிய 11 பேர் மீது பிரஷ்யாவில் நடைபெற்ற வழக்கு விசாரணை {1852 அக்டோபர் 4 லிருந்து நவம்பர் 11 வரை} இங்கு குறிப்பிடப்படுகிறது. தேசத் துரோக குற்றம் சாட்டப் பெற்று ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஏழு பேருக்கு மூன்றிலிருந்து ஆறு ஆண்டு வரையிலான கோட்டைச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. [Top]

21) கார்ல் மார்க்சின், General Rules of the International Working Men's Association கிssஷீநீவீணீtவீஷீஸீ {''அகிலத் தொழிலாளர் சங்கத்தின் பொது விதிகள்''} என்ற பிரசுரத்தைப் பார்க்கவும். [Top]

22) குறிப்பு 16ஐப் பார்க்கவும். [Top]

   
World Socialist Web Site
All rights reserved