Permanent Revolution & Results and Prospects
WSWS : Tamil : Ëôè‹

 

Preface
The Peculiarities of Russian Historical Development
The Towns and Capital
1789---1848---1905
Revolution and the Proletariat
The Proletariat in Power and the Peasantry
The Proletarian Regime
The Prerequisites of Socialism
A Workers’ Government in Russia and Socialism
Europe and Revolution
The Struggle for Power
Further Reading

 

I. ரஷ்ய வரலாற்று அபிவிருத்தியின் சிறப்பியல்புகள்

Use this version to print | Send feedback

ரஷ்ய சமூகத்தின் வளர்ச்சியை ஏனைய ஐரோப்பிய நாடுகளின் சமூக வளர்ச்சியுடன் நாம் ஒப்பிட்டால், அவற்றிற்கிடையிலான வரலாற்றின் பொதுவான தன்மைகளை ஒன்றுபடுத்தியும், ஐரோப்பாவின் வரலாற்றிற்கும் ரஷ்யாவின் வரலாற்றிற்கும் இடையிலான வேறுபட்ட தன்மைகளை பார்த்தோமானால், ரஷ்ய சமூக அபிவிருத்தியின் முக்கிய வேறுபடுத்திக்காட்டும் இயல்பு அதன் ஒப்பீட்டளவிலான நாகரிக முதிர்ச்சியற்ற தன்மையும், மெதுவான தன்மையும் ஆகும் என்று நாம் கூறவியலும்.

இங்கு, இந்த நாகரிக முதிர்ச்சியற்ற தன்மைக்கான இயற்கை காரணங்கள் பற்றி நாம் ஆராயப் போவதில்லை. ஆனால் ரஷ்ய சமூக வாழ்க்கையானது கூடுதலான, வறிய மற்றும் மிகப் பழைமையான பொருளாதார அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற உண்மையே ஐயத்திற்கு இடமில்லாததாக இருக்கிறது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது, சமூக-வரலாற்று நிகழ்ச்சிப் போக்கினை தீர்மானிக்கிறது என மார்க்சிசம் கற்பிக்கிறது. இந்த வளர்ச்சியானது ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அடைந்த பின்னர்தான் பொருளாதார நிறுவனங்கள், வர்க்கங்கள் மற்றும் சமூகப் பிரிவுகள் (எஸ்டேட்டுகள்) ஆகியவற்றின் உருவாக்கம் சாத்தியமாகும். சமூக பிரிவும் உழைப்பு பிரிவினை மற்றும் மிகவும் தேர்ச்சிபெற்ற சமூக தொழிற்பாட்டின் படைப்பின் அபிவிருத்தியால் தீர்மானிக்கப்படும் வர்க்க வேறுபாடு கண்டறிதலும், உடனடிப் பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மக்கட் தொகையின் குறிப்பிட்ட பகுதி தன்னுடைய சொந்த நுகர்விற்கும் அதிகமான மேலதிக உபரியை உற்பத்தி செய்வதற்கான முன்னிபந்தனையாக உள்ளது: இந்த உபரியை அதனிடமிருந்து உடைமை மாற்றுவதால்தான் உற்பத்தியில் ஈடுபடாத வர்க்கங்கள் எழுச்சியுற முடிகிறது மற்றும் தங்களை வடிவமைத்துக்கொள்ள முடிகிறது. மேலும், உற்பத்திசெய்யும் வர்க்கங்களுக்கிடையிலான தொழிற்பங்கீடு என்பது, விவசாயத்தில் ஈடுபடாத மக்கள் தொகையினருக்கு விவசாயப் பொருட்களை வழங்குவதை உறுதிப்படுத்தக்கூடியதாக இயலவைக்கும் அளவு விவசாய வளர்ச்சி ஒரு மட்டத்தை அடைந்த பின்னரே சாத்தியமாகும். இந்த சமூக வளர்ச்சியின் அடிப்படைக் கருத்தாய்வுகள் ஏற்கனவே ஆடம் ஸ்மித்தால் தெளிவாக வடிவமைக்கப்பட்டு விட்டன.

எனவே, நம்முடைய வரலாற்றில் நோவோகோரோட் (ரஷ்யாவின் வடமேற்கு பகுதி) காலகட்டம் ஐரோப்பிய மத்திய காலங்களின் ஆரம்ப நிகழ்வுப் பொருத்தத்தைக் கொண்டிருந்தாலும் கூட, இயற்கையான-வரலாற்று நிலைமைகளால் (குறைவான புவியியல் சாதகநிலை, சொற்பமான மக்கட் தொகை போன்றவற்றால்) விளைந்த மெதுவான பொருளாதார வளர்ச்சியானது, வர்க்க உருவாக்க நிகழ்ச்சிப்போக்கிற்கு தடையாக இருப்பதுடன், அதற்கு ஒரு மிக நாகரிக முதிர்ச்சியற்ற தன்மையை கொடுப்பதிலும் இணைந்திருந்தது.

ரஷ்யா தொடர்ந்து தனிமைப்பட்டிருந்திருந்தால் மற்றும் உள்ளார்ந்த போக்குகளின் செல்வாக்கின் கீழ் இருந்திருந்தால் ரஷ்ய சமூக வளர்ச்சி எத்தகைய வடிவத்தை எடுத்திருக்கும் என்று கூறுவது மிகக் கடினமானதாகும். இவ்வாறு நிகழவில்லை என்று கூறுவது போதுமானது. ஒரு குறிப்பிட்ட உள் பொருளாதார அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ரஷ்ய சமூக வாழ்வு, எல்லாக் காலத்திலும் அதன் வெளிச் சமூக-வரலாற்று சூழலின் ஒரு ஆளுமைக்கும், ஏன் அழுத்தத்திற்கும் கூட உள்ளாகியிருந்தது எனக் கூறலாம்.

இந்த சமூக மற்றும் அரச அமைப்பு, தன்னுடைய தோற்றத்தின் நிகழ்ச்சிப்போக்கில், மற்றைய, அண்மையில் உள்ள அமைப்புக்களுடன் மோதும் நிலைக்கு வந்தபோது, ஒன்றின் பொருளாதார உறவுகளின் பழைமை தன்மையும், மற்றவற்றின் ஒப்பீட்டளவிலான உயர்ந்த வளர்ச்சியும், பின்னர் தொடர்ந்த நிகழ்ச்சிப்போக்கினை தீர்மானிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

ஒரு நாகரிக முதிர்ச்சியற்ற பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியுற்றிருந்த ரஷ்ய அரசு, ஒரு உயர்ந்த மற்றும் இன்னும் உறுதியான அடித்தளத்தில் கட்டப்பட்டிருந்த அரசின் அமைப்புக்களுடன் தொடர்புகளுக்குள்ளானதுடன், மோதல்களுக்கும் உள்ளானது. அவைதாமே இரு சாத்தியங்களை முன்வைத்தன: ஒன்றில் ரஷ்ய அரசானது அவற்றுடனான அதன் போராட்டத்தில், முன்பு Golden Horde (துருக்கியர் மற்றும் மங்கோலிய கலப்பின மக்களின் பெருந்திரள்) மாஸ்கோ அரசுடனான அதன் போராட்டத்தில் தோல்வியுற்றது போலவே, அடிபணிய இருந்தது, அல்லது பொருளாதார உறவுகளின் வளர்ச்சியில் அவற்றையும் விஞ்ச இருந்தது மற்றும் தொடர்ந்து தனிமைப்பட்டிருந்த நிலையில் அது செய்ய முடிந்திருப்பதைவிடவும் மிகவும் உயிரோட்டமுள்ள சக்திகளை பெரிய அளவில் உள்வாங்க இருந்தது. ஆயினும், ரஷ்ய பொருளாதாரமோ முந்தைய நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்கு போதியதிறமையுள்ள வளர்ச்சியைக் கொண்டிருந்தது. எனவே, அரசு சிதறிவிடவில்லை; மாறாக பொருளாதார சக்திகளின் கடுமையான அழுத்தத்தின்கீழ் வளரத் தலைப்பட்டது.

இவ்வாறு, ரஷ்யா அனைத்துப் புறங்களிலும் விரோதிகளால் சூழப்பட்டிருந்தது என்பது முக்கியமானது அல்ல. அது மட்டும் அதன் நிலையை விளக்கிவிடவில்லை. உண்மையில் இது, ஒருவேளை இங்கிலாந்தை தவிர, மற்ற எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் பொருந்தும். இருத்தலுக்கான பரஸ்பர போராட்டத்தில், இந்நாடுகள் அனைத்துமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருளாதார அடித்தளங்களில் தங்கியிருந்ததால், அவற்றின் அரச அமைப்புக்களின் வளர்ச்சி மிகச்சக்தி வாய்ந்த வெளி அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கவில்லை.

கிரிமியன், நோகாய் டாட்டார்களுக்கு (Crimean and Nogai Tatars) எதிரான போராட்டம் மிகப் பெரிய முயற்சி தேவை என்று அறைகூவி அழைத்திருந்தது. ஆனால், இது ஒன்றும் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடைபெற்ற நூறாண்டுகளான போருக்கு தேவையாக இருந்த முயற்சிகளுடைய கடுமையை விடப் பெரியது அல்ல. பழைய ரஷ்யாவை சுடுகருவிகளை அறிமுகப்படுத்தவும், ஸ்ட்ரெல்ட்சியில் (ஷிtக்ஷீமீறீtsவீ) நிலையான படைப்பிரிவுகளையும் நிறுத்த வலியுறுத்தியது டார்ட்டார்கள் அல்லர்; குதிரைப்படை பிரிவுகளை, காலாட்படை பிரிவுகளை கட்டாயமாக நிறுவும்படி செய்ததும் டார்ட்டார்கள் அல்ல; இவை லித்துவேனியா, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவற்றின் அழுத்தங்களினால் நிகழ்ந்தவை.

மேற்கு ஐரோப்பாவினால் ஏற்பட்ட இந்த அழுத்தத்தின் விளைவாக, அரசு மிக மிக அதிகமான வகையில், இந்த உபரி உற்பத்தியை விழுங்கியது; அதாவது தோற்றுவிக்கப்பட்டிருந்த சலுகை பெற்ற வர்க்கங்களின் இழப்புக்களில் இது வாழத் தொடங்கி ஏற்கனவே அவற்றின் மெதுவான வளர்ச்சியையும் தடைக்கு உட்படுத்தியது. ஆனால் இதோடு நின்றுவிடவில்லை. அரசானது விவசாயிகளுடைய 'இன்றியமையாத உற்பத்திப் பொருளை' ஆர்வத்துடன் கைப்பற்றுவதில் தங்கியிருந்ததுடன், அவருடைய வாழ்வை அழித்து, அவர் இன்னமும் முழுமையாக வேரூன்றியிராத பகுதியில் இருந்தும் ஓடிப்போகுமாறு செய்து மக்கட்தொகை வளர்ச்சியை தடை செய்தது மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் தடைக்குள்ளாக்கியது. இவ்வாறு மிகக்கூடுதலான முறையில் அரசு உபரி உற்பத்திப் பொருளை விகிதத்திற்கு அதிகமான முறையில் விழுங்கிவிட்டதால், சமூகப் பிரிவுகளுக்கு இடையிலான மெதுவான வேறுபாடு கண்டறிதலையும் தடைசெய்தது; ஏனெனில் இது அவசிய உற்பத்தியில் இருந்து முக்கியமான பகுதியை எடுத்துக்கொள்வதனூடாக அது தங்கியிருந்த பழைமையான உற்பத்தி தளங்களையும் அழித்தது.

ஆனால் தன்னை தக்கவைத்துக் கொள்வதற்கும், செயலாற்றுவதற்கும் அதனால், எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்குத் தேவையான சமூக உற்பத்தியின் ஒரு பகுதியை உடைமை மாற்றுதற்கு, அரசுக்கு சமூகப்பிரிவுகளின் படிநிலை கொண்ட அமைப்பு தேவைப்பட்டது. எனவேதான் தன்னுடைய வளர்ச்சிக்கான பொருளாதார அடித்தளங்களையும் இல்லாதொழிக்கும் அதேவேளை, உடன்நிகழ்வாக இந்த அடித்தளங்களின் வளர்ச்சியை அரசாங்க நடவடிக்கைகள் மூலம் தூண்டும் வகையில், மற்ற அரசுகளை போன்றே இச்சமூகப் பிரிவுகளின் வளர்ச்சியை தன்னுடைய சொந்த நலனுக்காக பயன்படுத்தும் வகையில் ஈடுபட்டது. ரஷ்ய கலாச்சாரத்தின் வரலாற்றாசிரியரான மில்யுகோவ், இந்த முறையில் மேற்கு ஐரோப்பிய வரலாற்றில் இருந்து ஒரு நேரடியான மாறுபட்டதன்மையை காண்கிறார். ஆனால், இங்கு அத்தகைய மாறுபட்டதன்மை இல்லை.

சமூகப் பிரிவுகள் - மத்திய காலத்தின் முடியரசு, அதிகாரத்துவ முறையில் வரம்பற்ற தன்மை உடையதாக வளர்ந்து, சில தெளிவான சமூக நலன்களையும் உறவுகளையும் வலியுறுத்தும் ஒரு அரசு வடிவத்தைக் கொண்டிருந்தது. ஆனால், தோற்றுவிக்கப்பட்டு, உயிரூட்டப்பட்டுவிட்ட, இந்த அரசுவடிவம்தாமே அதற்குரிய நலன்களை (பரம்பரை ஆட்சி, அரசவை, அதிகாரத்துவ...) கொண்டிருந்தது, அவை சமூகத்தின் கீழ்மட்ட பிரிவுகளின் நலன்களுடன் மட்டுமல்லாமல் சிலசமயம் உயர் பிரிவுகளின் நலன்களுடனும் மோதலுக்கு வந்தது. பெரும்பான்மையான மக்களுக்கும் அரசமைப்பிற்கும் இடையே இருந்த ஆதிக்கம் பெற்ற சமூகப் பிரிவுகள் சமூகரீதியாக தவிர்க்க முடியாத "நடுச் சுவர்" போல் இருந்து, அரசு அமைப்பின்பால் தங்களுடைய அழுத்தங்களையும் கொடுத்து, அரசின் நடைமுறை செயற்பாடுகளின் உள்ளடக்கத்தில் தங்களுடைய சொந்த நலன்களையும் நிறைவேற்றிக் கொண்டன. அதே நேரத்தில், அரச அதிகாரம் ஒரு சுதந்திரமான சக்தி என்னும் முறையில், உயர் பிரிவுகளின் நலன்களையும் தன்னுடைய சொந்த கண்ணோட்டத்தில் அக்கறையுடன் கவனித்து வந்தது. அது உயர் பிரிவுகளுடைய விருப்புகளுக்கு தடையை கொடுத்து அவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அரசுக்கும் சமூகப் பிரிவுகளுக்கும் இடையிலான உறவுகளின் உண்மை வரலாறு, அதன் விளைவான வழிகளில் சென்றது, சக்திகளின் உட்தொடர்பினால் அது நிர்ணயிக்கப்பட்டது.

இதே அடிப்படையில் ஒத்திருந்த ஒரு போக்கு ரஷ்யாவில் தோன்றியது. வளர்ந்து வரும் பொருளாதாரக் குழுக்களை பயன்படுத்திக்கொள்ளவும், அவற்றை தன்னுடைய சொந்த சிறப்பு நிதிய மற்றும் இராணுவ நலன்களுக்கு கீழ்ப்படுத்திக் கொள்ளவும் அரசு பாடுபட்டது. ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரக் குழுக்கள் அவை தோன்றியவாறாக, அரசை பயன்படுத்தி தங்களுடைய நலன்களை சமூகப் பிரிவுகளின் சலுகைகள் என்ற வடிவமைப்பிற்குள் வலுப்படுத்த முற்பட்டன. சமூக சக்திகளின் இந்த செயற்பாட்டில், விளைவானது, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் நிகழ்ந்தது போலல்லாது கூடுதலாக அரசு அதிகாரத்திற்கு சார்பாக சென்றது. அரசு அதிகாரத்திற்கும், உயர் சமூக குழுக்களுக்கும் இடையே நிகழ்ந்த சேவைகளின் பரிமாற்றம், உழைக்கும் மக்களின் இழப்பில் நிகழ்ந்ததாகும்; இதன் வெளிப்பாடுதான் உரிமைகள், கடமைகள், சுமைகள், சலுகைகள் இவற்றின் பங்கீட்டில் மேற்கு ஐரோப்பிய மத்தியகால சமூகப் பிரிவுகள்-முடியாட்சி நாடுகளில் இருந்ததை விட ரஷ்யாவில் பிரபுக்களுக்கும் சமய குருமார்களுக்கும் சற்று குறைந்த முன்னுரிமைகள் கிடைத்தன. இதில் ஐயத்திற்கு இடமில்லை. ஆயினும்கூட, மேற்கில் சமூகப் பிரிவுகள் அரசை தோற்றுவித்தது என்றால் அதேவேளை ரஷ்யாவில் அரசு சமூகப் பிரிவுகளை தன்னுடைய நலன்களுக்காக தோற்றுவித்தது என்று (மிலியுகோவ் கூறுவதுபோல்) உரைப்பது மிகப்பெரிய மிகைப்படுத்தலும், எதிர்மாறான கருத்தும் ஆகும்.

சமூகப் பிரிவுகள் அரச நடவடிக்கையினாலோ, சட்டத்தினாலோ தோற்றுவிக்கப்பட இயலாதவை. அரச அதிகாரத்தின் உதவியுடன் ஏதேனும் ஒரு சமூகக்குழு ஒரு சலுகைமிக்க சமூகப் பிரிவாக வடிவமெடுப்பதற்கு முன்னர், அது அதன் அனைத்து சமூக சாதகங்களையும் நன்மைகளையும் கொண்டு பொருளாதார ரீதியாக கட்டாயம் அபிவிருத்தியடைந்திருக்க வேண்டும். முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருந்த அந்தஸ்தின் அளவுகோலின் படியோ அல்லது  Legion d'Honneur விதிமுறைகளின்படியோ சமூகப் பிரிவுகள் உற்பத்தி செய்யப்பட இயலாதவையாகும். அரச அதிகாரம், அதன் அனைத்து வளங்களுடனும் உயர்நிலைப் பொருளாதார அமைப்புக்களை கொண்டுவரக் கூடிய அடிப்படை பொருளாதார நிகழ்ச்சிப்போக்கிற்கு உதவ முடியும். மேலே குறிப்பிட்டபடி, ரஷ்ய அரசு ஒப்பீட்டளவில் நாட்டுச் சக்திகளின் பெரும் பங்கை நுகர்ந்துவிட்ட நிலையில், சமூக உருவாக்க நிகழ்ச்சிப்போக்கை தடைசெய்தது, ஆனால் இந்த நிகழ்ச்சிப்போக்கு அதனுடைய சொந்த நோக்கங்களுக்கு தேவையாக இருந்தது. எனவே இயற்கையாகவே இன்னும் கூடுதலான வித்தியாசமான மேற்கு ஐரோப்பிய சூழலின் செல்வாக்கு மற்றும் அழுத்தத்தின் விளைவாக இராணுவ-அரசு அமைப்பின் வழியே ஒரு அழுத்தம் செலுத்தப்பட்டது; தன்னுடைய பங்கிற்கு, முதிர்ச்சியற்ற பொருளாதார அடித்தளத்தின் அடிப்படையில் சமூக வேறுபடுத்தலின் வளர்ச்சியை தூண்டுவதற்கு பாடுபட்டது. மேலும், சமூக, பொருளாதார அமைப்புக்களின் வலுவற்ற தன்மையினால் விளைந்த இத்தகைய தூண்டலுக்கான தேவை, ஒரு பாதுகாவலன் என்ற வகையில் அரசானது அதன் முயற்சியில், தன்னுடைய விருப்புரிமைக்கேற்ப தன்னுடைய மேலாதிக்கச் சக்தியை உயர் வர்க்கங்களின் வளர்ச்சிக்காகவே இயக்கியிருக்கவேண்டும் என்பதை இயல்பாக்கியது. ஆனால், இத்திசையில் மிகப் பெரும் வெற்றியைச் சாதிக்கும் வழியில், அரசு முதலாவதாக தன்னுடைய பலவீனத்தாலும், தன்னுடைய சொந்த அமைப்பின் முதிர்ச்சியடையா தன்மையினாலும் தாமதத்திற்கு காரணத்தைக் கண்டது; நாம் முன்னரே பார்த்துள்ளபடி, சமூக கட்டமைப்பின் முதிர்ச்சியின்மைதான் இதற்குக் காரணம் ஆகும்.

இவ்வாறு, ரஷ்ய பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டிருந்த ரஷ்ய அரசு, அண்டையில் இருந்த அரசு அமைப்புக்களின் நட்புரீதியான அழுத்தத்தாலும், இன்னும் கூடுதலான முறையில் பகை அழுத்தத்தாலும் முன்னோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தது, சற்றே உயர்ந்த பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியுற்றது. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இருந்து, முக்கியமாக பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, அரசானது தன்னுடைய அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி நாட்டின் இயற்கையான பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த அரும்பாடுபட்டது. கைவினைகளின் புதிய கிளைகள் இயந்திரங்கள், ஆலைகள், பெரிய தொழிற்சாலைகள், மூலதனம் போன்றவை இயற்கையான பொருளாதார மூலத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டவை போல் வளர்க்கப்பட்டன. முதலாளித்துவம் அரசின் குழந்தை போல் தோன்றியது.

இந்த நிலைப்பாட்டில் இருந்து அனைத்து ரஷ்ய விஞ்ஞானமும், அரசாங்க முயற்சியின் செயற்கையான உற்பத்திப் பொருளாக, தேசிய அறியாமை என்ற இயற்கையான அடித்தளத்தில் இருந்து செயற்கையாக செதுக்கப்பட்டது என்று கூறவியலும்.[1]

ரஷ்ய பொருளாதாரத்தை போன்றே, ரஷ்ய சிந்தனையும் மேற்கு நாடுகளின் உயர் சிந்தனை மற்றும் கூடுதலான வளர்ச்சியடைந்திருந்த பொருளாதாரங்களின் நேரடி அழுத்தத்தினால் வளர்ச்சியடைந்தது. பொருளாதாரத்தின் தன்மைகள் இயற்கைப் பொருளாதார பண்பை ஒட்டி அமைந்திருந்தது என்பதனால், அதாவது வெளிநாட்டு வணிகத்தின் குறைந்த வளர்ச்சி, மற்றைய நாடுகளுடனான வணிகம் பெரும்பாலும் அரசாங்கத்தின் மூலம் நடத்தப்பட்டது போன்றவற்றால், மற்ற நாடுகளுடைய செல்வாக்கின் தாக்கம், நேரடியான பொருளாதாரப் போட்டியில் தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு அரசு நிலைபெற்றிருப்பதற்கான கடும் போராட்டத்தில் வெளிப்பாட்டைக் கண்டது. மேலைப் பொருளாதாரங்கள் ரஷ்ய பொருளாதாரத்தில் அரசின் மத்தியஸ்தம் மூலம் செல்வாக்கைச் செலுத்தின. தேர்ந்த முறையில் ஆயுதங்களைக் கொண்டிருந்த பகை நாடுகளுக்கு நடுவே தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்காக, ரஷ்யா ஆலைகளை நிறுவுதல், கடற்பயண பயிற்சி கூடங்களை அமைத்தல், அரணை வலுப்படுத்திக் கொள்வதற்கான நூல்களை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இந்த மிகப் பரந்த நாட்டின் உட்பொருளாதாரத்தின் பொதுவான போக்கு இந்த திசையிலேயே நகர்ந்து செல்லாமல் இருந்திருந்தால், பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சி பொது விஞ்ஞானம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் (General and Applied Science) இவற்றிற்கான தேவையை தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், அரசின் அனைத்து முயற்சிகளும் பயனற்று போயிருக்கும். இயற்கைப் பொருளாதாரத்தில் இருந்து இயற்கையாகவே பணம்-பண்டம் என்ற பொருளாதாரத்தை நோக்கி வளர்ந்து வந்திருந்த தேசிய பொருளாதாரம் தன்னுடைய வளர்ச்சிக்கு ஒத்திருந்த அரசாங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமே பதிலை அளித்தது, அதுவும் தன்னோடு இயைந்திருந்த மட்டத்திற்கு மட்டுமே பதிலளித்தது. ரஷ்ய தொழிற்துறை, ரஷ்ய நாணய முறை, அரசு கடன் இவை அனைத்தின் வரலாறும் மேற்கூறப்பட்டுள்ள கருத்திற்கு சிறந்த சான்றுகளாகும்.

"தொழிற் துறையின் பெரும்பாலான கிளைகள் (உலோகம், சர்க்கரை, பெட்ரோலியம், வடிகட்டிப் பதனிடும் வகைகள், ஜவுளித் தொழில்கள் கூட), அரசாங்க நடவடிக்கையின் நேரடிச் செல்வாக்கினால், சில நேரம் பெரும் அரசாங்க உதவித் தொகைகளின் இயக்கத்தினால் தொடங்கின; அதிலும் சிறப்பாக அரசாங்கம் நனவுடன் பாதுகாப்புக் கொள்கையை பின்பற்றியதன் காரணமாக ஆகும். அலெக்சாண்டருடைய ஆட்சிக்காலத்தில் அரசாங்கம் தன்னுடைய பதாகையில் இந்தக் கொள்கையை வெளிப்படையாகவே பொறித்திருந்தது.... ரஷ்யாவிற்கு பிரயோகித்த பாதுகாப்பு கொள்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொண்டிருந்த அரசாங்க உயர் வட்டாரங்கள், எங்களது கல்வியறிவு படைத்த வர்க்கங்கள் அனைத்தையும்விட முற்றிலும் முன்னேறிய நிலையில்தான் இருந்தன என்பதற்கான நிரூபணமாகும்." (D.Mendeleyev, Towards the Understanding of Russia, St.Petersburg, 1906. p.84)

தொழிற்துறை பாதுகாப்பினை புகழ்ந்தேற்றும் கற்றறிந்தவர், அரசாங்கத்தின் கொள்கை தொழிற்துறை சக்திகளை வளர்ப்பதற்காக கொண்ட எந்தவித அக்கறையாலும் ஆணையிடப்பட்டது அல்ல என்பதையும், மாறாக முற்றிலும் நிதிய மற்றும் ஓரளவு இராணுவ-தொழில்நுட்ப காரணங்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டவை என்பதை சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டார். இந்தக் காரணத்தினால், பாதுகாப்புக் கொள்கை அடிக்கடி தொழிற்துறை அபிவிருத்தியின் அடிப்படை நலன்களால் எதிர்க்கப்பட்டது மட்டுமல்லாது பல வணிக குழுக்களின் தனிப்பட்ட நலன்களாலும் எதிர்க்கப்பட்டது. இந்த வகையில்தான், பஞ்சாலை முதலாளிகள் "பருத்தி துணிகள் மீதான உயர்ந்த காப்பு வரிகள் பருத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு என்றில்லாமல், முற்றிலும் நிதிநலன்களை கருத்திற்கொண்டு ஊக்குவிக்கப்படுகின்றன" என்று வெளிப்படையாக அறிவித்தனர். அரசாங்கம் மேற்கொண்டிருந்த சமூகப் பிரிவுகளின் 'உருவாக்கத்தில்' உள்ளவாறு, அனைத்திற்கும் மேலாக, அரசின் நோக்கங்கள், தொழிற்துறையை 'வளர்ப்பதை' போன்றே, நாட்டின் கருவூலத்தின் நலன்களை பெருக்கும் வகைகளின் தேவைக்கேற்பத்தான் இயக்கவேண்டும் என்பதை முக்கிய அக்கறையாகக் கொண்டிருந்தது. ஆயினும், எதேச்சாதிகாரம் ரஷ்ய மண்ணில் தொழிற்சாலைமுறை உற்பத்தி வகையை வேரூன்ற வைப்பதில் பெரும் பங்கை கொண்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சி பெறும் பூர்சுவா சமுதாயம், மேலைநாட்டு முறையிலான அரசியல் நிறுவனங்களின் தேவையை உணரத் தலைப்பட்ட நேரத்தில், ஐரோப்பிய நாடுகளின் அனைத்து சடரீதியான வலிமையுடனும் எதேச்சாதிகார ஆட்சி ஆயுதமாக்கப்பட இருந்ததை நிரூபித்தது. அது ஒரு மையப்படுத்தப்பட்டிருந்த அதிகாரத்துவ இயந்திரம் மீது தங்கி இருந்தது. அது புதிய உறவுமுறைகளை தோற்றுவிப்பதற்கு பயனற்றது என்றாலும், முறையான அடக்குமுறைகளைக் கையாள்வதில் பெரும் ஆற்றலை அபிவிருத்தி செய்யக்கூடியாதாக இருந்தது. நாட்டின் பல பகுதிகளுக்கும் இடையே இருந்த தொலைதூரத்தன்மை தந்தி முறையினால் கடக்கப்பட்டுவிட்டது; தந்திமுறை நிர்வாகத்தின் செயல்களுக்கு இரகசியத்தை அளிப்பதுடன், ஒப்புமையில் நிர்வாகத்தின் ஒரேமாதிரியான சீரான, விரைவுத் தன்மையும் (ஒடுக்குமுறைகளின் விஷயத்தில்) அதன் நடவடிக்கைகளுக்கு கிடைக்கிறது. இரயில்வே முறையினால் நாட்டின் ஒரு கோடியில் இருந்து மற்றொரு கோடிக்கு வெகு விரைவில் இராணுவத்தை அனுப்ப முடிந்தது. ஐரோப்பாவில் இருந்த புரட்சிக்கு முந்தைய அரசாங்கங்களுக்கு இரயில்கள் பற்றியும், தந்தி முறைகள் பற்றியும் ஒன்றும் தெரியாது. இந்த வரம்பிலா முடியாட்சி அதன் கீழ் இருந்த இராணுவத்தின்மீது கொண்டிருந்த கட்டுப்பாடு முழுமையானது ஆகும். ஜப்பானுடனான போரில் முக்கிய கட்டங்களில் இது சிறிதும் பயனற்ற தன்மையை கொண்டிருந்த போதிலும், உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இதற்குப் போதுமான வலிமை இருந்தது. மாபெரும் புரட்சிக்கு முன்பு இருந்த பிரான்சின் அரசாங்கம் மட்டுமல்ல, பின்னர் 1848 ல் இருந்த அரசாங்கமும் கூட, இன்றுள்ள ரஷ்ய இராணுவத்தைப் போன்ற ஒன்றைத் தெரிந்திருக்கவில்லை.

தன்னுடைய நிதிய, இராணுவக் கருவிகளினால் நாட்டை சுரண்டி வந்த அரசாங்கம் தன்னுடைய ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை, இரண்டு மிலியார்டன் ரூபிள் என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டு வந்தது. இராணுவத்தாலும், வரவு செலவுத் திட்டத்தினாலும் ஆதரவை கொண்டிருந்த எதேச்சாதிகார ஆட்சி ஐரோப்பிய பங்குச் சந்தையை தன்னுடைய கருவூலமாக்கிக் கொண்டு, ரஷ்ய வரிசெலுத்தவோரை இந்த ஐரோப்பிய பங்குச் சந்தையின் நம்பிக்கையற்ற கப்பம் செலுத்துபவராக மாற்றிவிட்டது.

இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், ரஷ்ய அரசாங்கம் தன்னுடைய மாபெரும் இராணுவ-அதிகாரத்துவ, நிதிய-பங்கு சந்தையின் அசைக்க முடியாத சக்தியாக உலகை எதிர் கொண்டது.

வரம்பிலா முடியாட்சியின் நிதிய, இராணுவ வலிமை, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துடன் மட்டும் இல்லாமல், வலிமையை வெளிப்படையாக அளவிடலில் வரம்பிலா முடியாட்சியுடன் முடிவுகளை காணும் சாத்தியத்தில் அனைத்து நம்பிக்கையையும் இழந்த, ரஷ்ய தாராளவாதத்தையும் திணறடித்து கண்திறக்க இயலாமற் செய்துவிட்டது. வரம்பிலா முடியாட்சியின் இராணுவ, நிதிய வலிமை ரஷ்ய புரட்சிக்கு எந்த வாய்ப்பையும் அளிக்காத வலிமையை கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைத்தான் கொடுத்திருந்தது. ஆனால், யதார்த்தத்தில் இதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டைத்தான் அது பெற்றிருந்தது.

ஓர் அரசாங்கம் கூடுதலான முறையில் மையப்படுத்தப்பட்டிருந்தால் மற்றும் கூடுதலான முறையில் சமூகத்தில் இருந்து சுதந்திரமாக இருந்தால், சமூகத்திற்கும் மேலாக நிற்கும் ஒரு சர்வாதிகார அமைப்பாக விரைவிலேயே ஆகிவிடும். அத்தகைய அமைப்பின் நிதிய, இராணுவ சக்திகள் பெருகியுள்ள தன்மையில், அது தப்பிப்பிழைத்திருப்பதற்கான அதன் போராட்டத்தை வெற்றிகரமாக மற்றும் நீண்டகாலம் அது தொடர முடியும். எனவேதான் இரண்டு மில்லியார்ட்(2,000,000,000) வரவு செலவுத் திட்டத்தையும், எட்டு மில்லியார்ட் (8,000,000,000) கடனையும், ஆயுதமேந்திய இன்னும் அதிகமான மில்லியன் கணக்கான மனிதர்களைக் கொண்ட இராணுவத்தையும் கொண்டு விளங்கிய மையப்படுத்தப்பட்ட அரசு, உள்நாட்டு நிர்வாகத்தின் தேவைகள் என்று மட்டுமில்லாமல், அது உண்மையில் பராமரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பின் தேவைகளையும்- சமூக வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவைகளை திருப்தி செய்வதை நிறுத்திவிட்டிருந்த பின்னர், தன்னுடைய நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

அத்தகைய நிலை நீடித்துக் கொண்டுபோனால், பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சிகளின் தேவைகளுக்கும், தன்னுடைய பலம் வாய்ந்த "மில்லியாடன்-வகையிலான" செயலற்ற தன்மையையும் வளர்த்துக் கொண்ட, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு மிகப் பெரிதாகப் போகும். இந்த முரண்பாடுகளை களையாத, அதற்கு மாறாக அவற்றை முதல்முறையாக தெளிவாக பகிரங்கப்படுத்திய -'பெரும் ஒட்டுப்போடும் சீர்திருத்தங்களின்' சகாப்தம் விட்டுச்செல்லப்பட்டிருந்த பின்னர், அரசாங்கத்தை பொறுத்தவரை அது தானாகவே முன்வந்து பாராளுமன்றப்பாதையை எடுப்பது இன்னும் கடினமாகவும், உளவியல் ரீதியாக என்றும் இயலாததாகவும் ஆனது. இந்த முரண்பாடுகளின் நிலைமை சமூகத்திற்கு சுட்டிக்காட்டுகின்ற, இந்த முரண்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, வரம்பிலா முடியாட்சி என்னும் கொதிகலத்தினுள்ளே, ஏராளமான நீராவி என்னும் சக்தியை குவியச்செய்வதன் மூலம் அதனை வெடிக்க வைப்பதாகும்.

இத்தகைய விதத்தில், சமூக வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் கூட, நிர்வாக, இராணுவ, நிதிய சக்தியினால் நிலைநிறுத்தப்பட்ட வரம்பிலா முடியாட்சி, தாராளவாதிகள் கருத்தைப்போல புரட்சியின் சாத்தியத்தை விலக்கவில்லை என்பது மட்டுமல்ல; மாறாக புரட்சி ஒன்றுதான் வழி என்ற நிலையை ஏற்படுத்தியது; இன்னும் கூடுதலான விதத்தில், வரம்பிலா முடியாட்சி தன்னுடைய வலிமையினால் மிகப் பெரிய அளவில் ஒரு பாதாளத்தை தனக்கும் தேசத்திற்கும் இடையே தோண்டிவிட்ட அளவிற்கு ஏற்ப அனைத்து விதமான அதிகமான தீவிரத் தன்மையையும் முன்னெடுப்பதில் இந்தப் புரட்சி முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்டிருந்தது; இந்த வளர்ச்சியின் திசையை பற்றி விளக்கியதுடன், தாராளவாதிகள் "நடைமுறைவாதம்" (Practicalism) என்ற மிகுந்த கற்பனை உலகின் கூறுபாடுகளில் சஞ்சரிக்கையிலும், புரட்சிகர "நரோத்னிக்" பெரும் கற்பனை, பொய்த்தோற்றங்களில் மூழ்கி (Phantasmagoria), பெரும் அற்புதங்களில் நம்பிக்கை வைத்தி ருக்கையில், இதன் பொதுவான வடிவம் தொடர்பாக முற்கூட்டி கூறியது தானே என ரஷ்ய மார்க்சிசம் நியாயத்துடன் பெருமிதப்பட முடியும்.

மேலே விளக்கப்பட்டுள்ள சமூக வளர்ச்சி, புரட்சி தவிர்க்கப்பட முடியாது என்பதை முழுமையாகக் காட்டியது. அப்படியானால், இந்தப் புரட்சியின்

 சக்திகள்தாம் எவை?