Permanent Revolution & Results and Prospects
WSWS : Tamil : Ëôè‹

 

Preface
The Peculiarities of Russian Historical Development
The Towns and Capital
1789---1848---1905
Revolution and the Proletariat
The Proletariat in Power and the Peasantry
The Proletarian Regime
The Prerequisites of Socialism
A Workers’ Government in Russia and Socialism
Europe and Revolution
The Struggle for Power
Further Reading

 

IX. ஐரோப்பாவும் புரட்சியும்

Use this version to print | Send feedback

ஜூன் 1905ல், நாம் எழுதினோம்:

"1848ம் ஆண்டு முடிந்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது; உலகம் முழுவதும் இடைவிடாமல் முதலாளித்துவம் வெற்றி கொண்டு வருகிறது; பூர்சுவாக்களின் பிற்போக்கு சக்திகளுக்கும் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான அரைநூற்றாண்டுகால பரஸ்பர ஒத்துப்போதல்; இந்த அரை நூற்றாண்டில், மேலாதிக்கத்திற்கான வெறிநிறைந்த தன்மையையும், அதற்காக காட்டுமிராண்டித்தனமாக அவை போராட தயாராக இருப்பதையும் பூர்சுவாசி புலப்படுத்துவது நடைபெற்று வருகின்றன.

"தொடர்ச்சியான இயக்கத்தின் தன்மையை ஆராய விரும்புவர் புதிய தடைகளை எதிர்கொண்டு, அவற்றை நீக்குவதற்காக ஒவ்வொரு இயந்திரமாக கண்டுபிடித்துக் குவிப்பது போல், முதலாளித்துவ வர்க்கமும் தன்னுடைய அரச எந்திரத்தை மாற்றியும், மறுசீரமைத்தும், அதேநேரத்தில் அதற்கு விரோதமான சக்திகளுடன் "மேலதிக சட்டரீதியான" மோதலை தவிர்த்தும் வந்துள்ளது. ஆனால் நம்முடைய தொடர்ச்சியான இயக்கத்தின் தன்மையைக் கண்டறிய விரும்புபவர் இறுதியில் சக்தியின் அழியாத்தன்மை என்னும் கடக்க இயலாத விதியை எதிரிடுவதுபோல், பூர்சுவாசியும் இறுதியில் இனிக் கடக்க இயலாத தடையை அதன் பாதையில் எதிர்கொண்டே தீரவேண்டும்: அதுதான் வர்க்க முரண்பாடு என்பது; இது மோதலின் மூலம்தான் தவிர்க்கமுடியாமல் தீர்க்கப்படும்.

"அனைத்து நாடுகளையும் தன்னுடைய உற்பத்தி முறை, வணிகம் இவற்றால் பிணைத்துக் கொண்டு, முதலாளித்துவம் உலகம் முழுவதையும் ஒற்றைப் பொருளாதார, அரசியல் அலகாக மாற்றியுள்ளது. தற்கால கடன்முறை, பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களை, தன்னுடைய கண்ணிற்கு புலப்படாத தளைகளின் மூலம் இணைத்துக் கொண்டு, மூலதனத்திற்கும் நம்ப முடியாத அளவிற்கு நகரும் தன்மையை கொடுத்து பல சிறிய திவால்களை தடுத்து நிறுத்தியுள்ளதுபோல், அதே நேரத்தில் பொதுப் பொருளாதார நெருக்கடிகளும் முன்னோடி இல்லாத வகையில் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதுபோல், முதலாளித்துவ பொருளாதார, அரசியல் முயற்சிகள் அனைத்தும், அதன் உலக வணிகம், பாரியளவிலான வகையில் அரசுகளுக்கு கொடுத்துள்ள கடன், நாடுகள் அரசியல்ரீதியில் குழுக்களாக நிற்கும் நிலை, ஆகியவை அனைத்தும் உலகத்தை ஒரு கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் போல் மாற்றியுள்ளது, இது அனைத்து தனிப்பட˘ட அரசியல் நெருக்கடிகளையும் தடை செய்துவிட்டது போல், இதுகாறும் வெளிப்பட்டிராத வகையில் சமூக நெருக்கடிகளுக்கும் வழிசெய்துள˘ளது. நோய்களுக்கான காரணவழிவகைகள் அனைத்தையும் மூடிமறைத்துவிட்டு, அனைத்து இடர்ப்பாடுகளையும் தவிர்த்து, உள்நாட்டு, சர்வதேச அரசியல் பிரச்சினைகளின் ஆழ்ந்த தன்மைகளை ஒதுக்கிவிட்டு, எல்லா முரண்பாடுகளையும் பூசிமெழுகி, பூர்சுவாசி தனது இறுதிஅழிவை தள்ளிப்போடும் முயற்சியில் இதுகாறும் வெற்றியடைந்துள்ளது; ஆனால் அத்தோடு உலகம் முழுவதும் அதன் ஆட்சியை தீவிரமாய் இல்லாதொழிப்பதற்கான வழிவகையையும் தயாரித்துவிட்டது. அதன் மூலங்கள் என்னவென்பதை ஆராயாது பூர்சுவாசி ஒவ்வொரு பிற்போக்கு சக்தியையும் பேராசையுடன் பற்றியுள்ளது. இதனுடைய நண்பர்களில் போப்பும், சுல்தானும் உயர்ந்த இடத்தில்தான் உள்ளனர். சீனப்பேரரசருடன் "நட்பு பிணைப்புக்களை" அது ஏற்படுத்திக் கொள்ளாததற்கு ஒரே காரணம், அவர் எந்த சக்தியையும் பிரதிநிதித்துவப்படுத்தாததாலாகும். அவருக்கு அவருடைய கருவூலத்தில் இருந்தே ஊதியத்தை கொடுத்து, அவரை தன்னுடைய பணியின் பாதுகாப்பாளராக கொண்டிருத்தலைவிட, அவருடைய பகுதிகளை கொள்ளையடிப்பது பூர்சுவாசிக்கு கூடுதலான நன்மைகளை கொடுத்திருக்கிறது. எனவேதான் உலக பூர்சுவாசி அதன் அரசு அமைப்புமுறையின் உறுதிப்பாட்டை பூர்சுவா முறைக்கு முன்பு இருந்திருந்த, உறுதியற்ற பிற்போக்கு சக்திகளில் முக்கியமாக தங்கியிருக்க செய்துள்ளதை நாம் காண்கிறோம்.

"இப்பொழுது அவிழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு சர்வதேச தன்மையை கொடுத்து ஒரு பரந்த வெளியை அமைத்துக் கொடுத்துள்ளது. தொழ¤லாள வர்க்கத்தால் தலைமைதாங்கப்பட்ட ரஷ்யாவின் அரசியல் விடுதலையானது, அதனை இதுகாறும் வரலாற்றில் அறிந்திராத ஒரு உயர்மட்டத்திற்கு உயர்த்தும், அதற்கு பிரமாண்டமான ஆற்றலையும் வளங்களையும் மாற்றும், மற்றும் அதனை உலக முதலாளித்துவ அமைப்பு முறையை இல்லாதொழிக்கும் பணியை முன்னெடுப்பவனாக உருவாக்கும்; இதற்கான புறநிலை நிலைமைகள் அனைத்தையும் வரலாறு உருவாக்கியுள்ளது." [1]

ரஷ்ய தொழிலாள வர்க்கம் தற்காலிகமாக அதிகாரத்தை கைப்பற்றுமானால், ஐரோப்பிய மண்ணில் புரட்சியை ஏற்படுத்தும் சுயமான முன்னெடுப்புகளை தானாக மேற்கொள்ளாது, ஆனால் ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ-பூர்சுவா பிற்போக்கினால் அவ்வாறு செய்யுமாறு நிர்பந்திக்கப்படும்.. பழைய முதலாளித்துவ ஐரோப்பாவிற்கு எதிராக ரஷ்ய புரட்சி எந்த வகைகளில் தலையிடும் என்பதை பற்றி இப்போது தீர்மானிப்பது பிரயோசனமற்றது. இந்த வழிவகைகள் மிக எதிர்பாராவகையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும். புரட்சிகர கிழக்கிற்கும், புரட்சிகர மேற்கிற்கும் இடையேயான ஒரு தொடர்பாக போலந்தை உதாரணத்திற்கு வைத்துக் கொள்ளுவோம்; இருப்பினும் நாம் இதனை உண்மையான முன்கணிப்பு என்பதைக்காட்டிலும் எமது கருத்தின் ஒரு விளக்கம் கூறலாக எடுக்கிறோம்.

ரஷ˘யாவில் புரட்சியின் வெற்றி என்பது, போலந்தில் புரட்சிக்கு வெற்றி என்பதை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிடும். ரஷ்ய போலந்தின் பத்து மாநிலங்களில் ஒரு புரட்சி ஆட்சி உள்ளது என்பது, காலிசியா மற்றும் போஸ்னானில் எழுச்சியை ஏற்படுத்தும் என்பதை கற்பனை செய்வது ஒன்றும் சிரமம் அல்ல. ஹோஹென்சோலேர்ன் மற்றும் ஹாப்ஸ்பேர்க் அரசாங்கங்கள் இதற்குப் பதில் அளிக்கும் வகையில், போலந்தின் எல்லைக்கு படைகளை அனுப்பி, தம் விரோதியை அவனின் மையப்பகுதியான வார்சோவில் நசுக்குவதற்கே பின்னர் எல்லையைக் கடக்கும் வகையில் முயற்சியை மேற்கொள்ளுவர். ரஷ்ய புரட்சி தன்னுடைய மேற்கத்தைய முன்னணிப்படைகளை, ஒரு பிரஷ்ய-ஆஸ்திரிய படைகளிடம் விட்டுவிட முடியாது என்பது தெளிவாகிறது. அத்தகைய சூழ்நிலையில் இரண்டாம் வில்ஹெல்ம் மற்றும் பிரான்ஸ் ஜோசப்பின் அரசாங்கங்களுக்கு எதிராக போர் என்பது ரஷ்ய புரட்சிகர அரசாங்கத்தின் தற்காப்பு நடவடிக்கை என்று ஆகிவிடும். பின்னர் ஆஸ்திரிய, ஜேர்மன் தொழிலாள வர்க்கம் அந்நிலையில் எந்த அணுகுமுறையைக் கொள்ள முடியும்? தங்களுடைய நாட்டின் படைகள் ஒரு எதிர்ப்புரட்சி போரை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அமைதியாக இருந்துவிட முடியாது. நிலப்பிரபுத்துவ-பூர்சுவா ஜேர்மனிக்கும், புரட்சிகர ரஷ்யாவிற்கும் இடையே நடக்கும் போர் தவிர்க்க முடியாத வகையில் ஜேர்மனியில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு இட்டுச் சென்றுவிடும். இந்த வலியுறுத்தல் அளவுக்கு அதிகமாக ஆணித்தரமானதாக தோன்றுமாயின், அவர்களை, ஜேர்மன் தொழிலாளர்களையும் ஜேர்மன் பிற்போக்காளர்களையும் வெளிப்படையான பலப் பரீட்சையில் ஈடுபட நிர்பந்திக்கக்கூடிய சாத்தியம் உள்ள வேறு ஏதேனும் வரலாற்று நிகழ்வுகள் உண்டா என சிந்திக்க முயற்சிக்கவும் என நாம் கூறுவோம்.

எமது அக்டோபர் மந்திரிசபை எதிர்பாராமல் போலந்தை இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்த போது, பேர்லினுடைய நேரடி உத்தரவுகளின் பேரில் இது நடந்தது என்ற பெரிதும் நம்பத்தகுந்த வதந்திகள் வெளிவந்தன. டுமாவை கலைப்பதற்கு முன்பு, அரசாங்க செய்தித்தாள்கள் பேர்லின் மற்றும் வியன்னா அரசாங்கங்களுக்கிடையே ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில் படையெடுப்பின் மூலம் தலையிடுவதற்காக தொடர்புகள் இருந்ததாக, இந்த தேசத்துரோகத்தை நசுக்க வேண்டும் என்பதுபோன்ற அச்சுறுத்தல் செய்திகளை வெளியிட்டன. இந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சியின் விளைவை அகற்றுவதற்கு எந்த மந்திரிசபையின் மறுப்பும் பயன்படவில்லை. மூன்று அண்டை நாடுகளின் அரண்மனைகளில், குருதி சிந்த வைக்கும் எதிர்ப்புரட்சி பழிவாங்கல் நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டன என்பது தெளிவாக இருந்தது. நிகழ்வுகள் வேறு எவ்விதமாக இருக்க முடியும்? எல்லையில் உள்ள அரை-நிலப்பிரபுத்துவ முடியரசுகள், தங்களுடைய நாட்டின் எல்லைப்பகுதிகளில் புரட்சி நெருப்புக்கள் வெடித்துச் சிதறியிருக்கும்போது வாளாவிருந்துவிட முடியுமா?

இன்னும் வெற்றி என்பதில் இருந்து தொலைவிலேயே இருக்கும் ரஷ்ய புரட்சி, ஏற்கனவே போலந்து வழியே காலிசியாவில் தன்னுடைய விளைவுகளை காட்டியுள்ளது. "இப்பொழுது காலிசியாவில் நடைபெறுவதைப்பற்றி, ஓராண்டிற்கு முன் எவர் யோசித்துப் பார்த்திருக்கமுடியும்? என இந்த வருடம் மே மாதம் லிவோவ் நகரில் நடைபெற்ற போலந்து சமூக ஜனநாயக கட்சியின் மாநாட்டில் டஷ்ஷின்ஸ்கி குரலெழுப்பினார். இந்தப் பெரிய விவசாயிகள் இயக்கம் ஆஸ்திரியா முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸபாரஸ் (Zbaraz) நகரம் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிராந்தியக் குழுவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. விவசாயிகள் "செங்கொடி" என்ற பெயரில் ஒரு சோசலிசப் புரட்சி நாளேட்டை வெளியிடுகின்றனர்; 30,000 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள், செங்கொடியுடனும், புரட்சிப் பாடல்களுடனும் விவசாயிகளால் முன்பு அமைதியாகவும், எதையும் பொருட்படுத்தாமலும் இருந்திருந்த காலிசியக் கிராமங்கள் வழியே அணிவகுத்து நடத்தப்படுகின்றன. ...இந்த வறுமையில் வாடும் விவசாயிகள் இருக்கும் நாட்டில் ரஷ்யாவில் இருந்து நிலங்களை தேசியமயமாக்கு என்ற முழக்கம் எழுந்தால் என்ன நிகழும்?" இரு ஆண்டுகளுக்கு முன்பு போலந்து சோசலிஸ்ட் லுஸ்னியா உடன் நடத்திய விவாதத்தில், போலந்தின் காலடியில் வைக்கப்பட்டுள்ள கனமான பந்து என்று ரஷ்யா கருதப்பட்டுவிடக் கூடாது என்றும், மாஸ்கோவிய காட்டுமிராண்டித்தன புல்வெளிகளில் ஒரு ஐரோப்பிய புரட்சியின் கிழக்குப்படைப் பிரிவு என்று போலந்து கருதப்பட்டுவிடக்கூடாது என்றும் காவுட்ஸ்கி சுட்டிக் காட்டியிருந்தார். ரஷ்ய புரட்சி ஏற்பட்டு அது வெற்றியையும் கண்டால், காவுட்ஸ்கியின் கருத்தின்படி, போலந்துப் பிரச்சினை, "மீண்டும் கூர்மையடையும், ஆனால் லுஸ்னியா நினைக்கும் வகையில் அல்ல. அது ரஷ்யாவிற்கு எதிராக செலுத்தப்படாமல், ஆஸ்திரியா, ஜேர்மனி இவற்றிற்கு எதிராக செலுத்தப்படும்; போலந்தை பொறுத்தவரையில், புரட்சியின் நிமித்தம் அது ஆற்றும் பணி ரஷ்யா மீதான புரட்சியை காப்பாற்றுவதாக இருக்காது, புரட்சியை ஆஸ்திரியாவிற்கும் ஜேர்மனிக்கும் கொண்டுசெல்லும் பணியாக இருக்கும்." இந்த தீர்க்கதரிசன பேச்சு காவுட்ஸ்கியால் நினைக்கப்பட்டதையும்விட சாத்தியமானதாகும்.

ஆனால், ஒரு புரட்சிகரப் போலந்து என்பது ஐரோப்பிய புரட்சிக்கு ஒரு ஆரம்ப கட்டமாக மட்டும் இருந்துவிடாது. முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்தும் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும் பல சிக்கல் வாய்ந்த, நெருக்கடியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதிலிருந்து திட்டமிட்டு தவிர்த்து வந்துள்ளதை நாம் எடுத்துக்காட்டியுள்ளோம். மிகப் பெரிய மக்கட்திரட்டை ஆயுதமயமாக்கி வைத்துள்ள நிலையிலும் பூர்சுவா அரசாங்கங்கள் சர்வதேச அரசியலின் சிக்கல்களை வாள்களின் மூலம் தீர்க்க இயலாத நிலையில் உள்ளது. முக்கிய நலன்களை பாதிக்கும் நாட்டு மக்களுடைய ஆதரவைக் கொண்டு செயல்படும் ஓர் அரசாங்கம், அல்லது தனக்கு இருக்கும் தளத்தை இழந்துவிட்டு திகைப்பூட்டிய ஏமாற்றத்தால் உந்துதல் பெற்றுள்ள அரசாங்கம்தான் பல்லாயிரக் கணக்கான மக்களை போருக்கு அனுப்பிவைக்க முடியும். தற்கால அரசியல் கலாச்சார, இராணுவ அறிவியல், அனைவருக்கும் வாக்குரிமை, அனைவருக்கும் கட்டாய இராணுவசேவை என்ற நிலைமகளின் கீழ் ஆழ்ந்த நம்பிக்கை அல்லது கிறுக்குத்தனமான தீரச் செயல்முறைதான் இருநாடுகளை மோதலுக்கு தள்ள முடியும். 1870ம் ஆண்டின் பிராங்கோ-பிரஷ்ய போரில், ஜேர்மனியை பிரஷ்ய மயமாக்கும் முயற்சியில் பிஸ்மார்க் ஒரு புறம் திணறிக் கொண்டதையும் --அது ஜேர்மனியை தேசிய ஒற்றுமைக்குள் கொண்டுவரும் முயற்சி, அடிப்படைத் தேவை என்று ஒவ்வொரு ஜேர்மனியராலும் உணரப்பட்டிருந்தது, மற்றொரு புறத்தில் செருக்குத்தனமான, ஆனால் அதிகாரமற்ற வகையில், மக்களால் வெறுக்கப்பட்ட, தன்னுடைய ஆட்சிக்கு இன்னும் 12 மாத கால அவகாசம்தான் கிடைக்கக் கூடும் என்று உறுதியளித்திருந்த எந்த சாகசத்திற்கும் தயாரான மூன்றாம் நெப்போலியனையும் காண முடிந்தது. இத்தகைய பங்குகளின் பகிர்வுதான் ரஷ்ய-ஜப்பானிய போரிலும் காணப்பட்டது. ஒருபுறத்தில் புரட்சிகர தொழிலாள வர்க்கத்தால் அதுவரை எதிர்ப்பிற்கு உட்படாத மிகாடோ அரசாங்கம், தூர கிழக்கை ஜப்பானிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்குட்படுத்தும் போரில் ஈடுபடுதலையும், மறுபறுத்தில் வெளிநாடுகளை வெற்றிகொள்ளுவதின் மூலம் உட்தோல்விகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும், தன்னுடைய காலத்தை கடந்துவிட்ட ஒரு சர்வாதிகார அரசாங்கம் செயல்பட்டதையும்தான் காண்கிறோம்.

முந்தைய முதலாளித்துவ நாடுகளில் 'தேசிய' கோரிக்கைகள் என்று இருந்தது இல்லை; அதாவது ஆளும் பூர்சுவாக்கள் தாங்கள்தான் காப்பாளர்கள் என்று கூறிக்காள்ள முடிகின்ற பூர்சுவா சமுதாயம் ஒட்டுமொத்தத்தின் கோரிக்கைகள் இல்லை. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகியவற்றின் அரசாங்கங்கள் தேசியப் போர்களை நடத்தும் திறனற்று இருந்தன. மக்களுடைய முக்கிய நலன்கள், அடக்கப்பட்ட தேசிய இனங்களின் நலன்கள், அல்லது அண்டை நாட்டின் காட்டுமிராண்டித்தனமான உள்நாட்டு அரசியல் இவை அனைத்தும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைக் கூட சுதந்திரமாக்கும் என்ற வகையில் தேசியத் தன்மை கொண்ட போருக்கு உந்திச்செல்ல இயலவில்லை. மாறாக, முதலாளித்துவ கொள்ளை முறையின் நலன்கள், அவ்வப்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை உலகை வெல்லும் வகையில் போருக்கான பேரிகையை ஒலிக்கும் தன்மை மக்களிடத்தே எந்த ஆர்வத்தையும் கொடுக்காது. அந்தக் காரணத்தினால்தான் பூர்சுவாசி எவ்விதமான தேசியப் போர்களையும் நடத்தமுடியாததுடன், நடத்த விரும்பவும் இல்லை. தற்கால தேசிய-எதிர்ப்பு போர்கள் எவ்வாறு செல்லும் என்பதற்கான அண்மைக்கால அனுபவங்களை தென்னாபிரிக்காவிலும் தூரக் கிழக்கிலும் பார்த்தோம்.

பிரிட்டனில் ஏகாதிபத்திய பழமைவாதம் பெற்ற கடுமையான தோல்வி போயர் போரின் படிப்பினையால் நிகழ்ந்தது என்று கூறமுடியாது; ஏகாதிபத்திய கொள்கையின் இன்னும் கூடுதலான, முக்கியமான அச்சுறுத்தும் விளைவினால் (பூர்சுவாசிக்கு அச்சுறுத்தல்) பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுயநிர்ணயம்தான், இம்முயற்சி ஒரு முறை தொடங்கியதும் ஏழு இடங்களின் எல்லைதாண்டி முன்செல்லும். ரஷ்ய-ஜப்பானிய போர் பெட்ரோகிராட்டின் அரசாங்கத்திற்கு கொடுத்த விளைவுகளை பொறுத்தவரையில், இவை நன்கு அறியப்பட்டவை ஆகையால் அவற்றைப் பற்றிக் கூறவேண்டிய தேவையில்லை. ஆனால் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய பலத்தில் நிற்கத் தலைப்பட்டவுடன், இந்த இரண்டு அனுபவங்களும் இல்லாமலேயே, ஐரோப்பிய அரசாங்கங்கள் போரா அல்லது புரட்சியா என்ற கேள்வியை அதன் முன் வைப்பதற்கு எப்பொழுதுமே அஞ்சியுள்ளன. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற பயம்தான் முதலாளித்துவ கட்சிகளை கட்டாயத்திற்குட்படுத்தி சர்வதேச நடுவர் மன்றங்கள் தேவை என்ற கனவில் ஆழ்த்துவதோடு, ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் என்பதை ஒழுங்கமைக்கும் நினைப்பைக் கூட ஏற்படுத்தியுள்ளன. இந்த பரிதாபத்திற்குரிய அறிவிப்புக்கள் நாடுகளிடையேயுள்ள பகைமைகளையோ அல்லது ஆயுத மோதல்களையோ இல்லாதொழிக்கப் போவதில்லை.

பிராங்கோ-பிரஷ்ஷிய போருக்குப் பிறகு தோன்றிய ஆயுதம்தாங்கிய சமாதானம், ஐரோப்பாவின் சக்திகளின் சமபலநிலையை தளமாகக் கொண்டிருந்தது; இது துருக்கி மீறக்கூடாத உயர்நிலையை முன்நிபந்தனையாக கொண்டிருந்ததோடு, போலந்துப் பிரிவினை, இனவகை உடற்கூறு மற்றும் சமூகப் பண்பாட்டு கோமாளி அங்கியால் ஆஸ்திரியா காக்கப்படல் வேண்டும், மேலும் ஐரோப்பிய பிற்போக்கிற்கு காவலாக இருக்கும் முற்றாக ஆயுதமயமாக்கப்பட்ட ரஷ்ய எதேச்சாதிகார ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பவற்றையும் கருத்தில் கொண்டிருந்தது. ஆனால் ரஷ்ய-ஜப்பானிய போர் இந்த செயற்கையாக நிலைநிறுத்தப்பட்டிருந்த, சர்வாதிகாரிகள் முன்னணி நிலை எடுத்திருந்த இம்முறைக்கு கடுமையான தாக்குதலை கொடுத்தது. வல்லரசுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடு என்ற கருத்தில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. சக்திகளின் சமபலநிலை அழிந்துவிட்டது. இதற்கு மாறாக, ஜப்பானுடைய வெற்றி முதலாளித்துவ பூர்சுவாசியின் ஆதிக்கம் செலுத்தும் மூர்க்கமான உணர்வுகளை தூண்டிவிட்டது; குறிப்பாக, அன்றாட அரசியலில் பெரும் பங்கை செலுத்திவந்த பங்குச் சந்தைகளில் அவ்வாறு நிகழ்ந்தது. ஐரோப்பிய நிலப்பகுதிக்குள்ளேயே போர் மூளும் அபாயம் பெரிதும் அதிகரித்திருந்தது. எல்லா இடங்களிலும் பூசல்கள் வெடித்து வெளிப்படத் தயாராக இருந்தன; இதுகாறும் அவை இராஜதந்திரச் செயற்பாடுகளினால் நிறுத்திவைக்கப்பட்ட போதிலும், அத்தகைய வெற்றிகரமான தடுப்பு நீடிக்கும் என்ற உறுதிமொழி இல்லாமற்போயிற்று. ஆனால் ஐரோப்பிய போர் தவிர்க்கமுடியாதவகையில் ஐரோப்பிய புரட்சியை அர்த்தப்படுத்தும்.

ரஷ்ய-ஜப்பானிய போரின்போது சர்வாதிகாரத்தின் சார்பாக பிரெஞ்சு அரசாங்கம் தலையிட்டால் பாட்டாளி வர்க்கத்தை உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு, கிளர்ச்சி செய்ய தான் அழைப்புவிடும் என பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அறிவித்தது. மார்ச் 1906ல் பிரான்சும் ஜேர்மனியும் மொரோக்கோ பற்றிய மோதலில் மோதும் நிலை வந்தபோது, சர்வதேச சோசலிச அமைப்பு, போர் ஏற்படக்கூடும் என்ற ஆபத்து ஏற்பட்டால், "அனைத்துச் சர்வதேச சோசலிசக் கட்சிகளும், மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கமும் போரை தடுப்பதற்கும் அதை முடிவிற்குக் கொண்டுவருவதற்கும் மிகவும் அனுகூலமான நடவடிக்கைகளை தியாகம் செய்யும்" என்று அறிவித்தது. உண்மையில் இது ஒரு தீர்மானம்தான். இதன் உண்மையான முக்கியத்துவத்தை சோதிப்பதற்கு ஒரு போர் தேவைப்பட்டது; ஆனால் அத்தகைய சோதனையை தவிர்ப்பதற்கு பூர்சுவாசி பல காரணங்களையும் கொண்டிருந்தது. எவ்வாறிருந்தபோதிலும், சர்வதேச உறவுகளின் தர்க்கம், இராஜதந்திர தர்க்கத்தை விட வலிமையானது என்பதுதான் பூர்சுவாசியின் துரதிருஷ்டமாகும்.

ரஷ்ய அரசின் திவாலாகியிருந்த தன்மை, அதிகாரத்துவத்தால் விவகாரங்கள் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டதன் விளைவினாலாயினும் சரி அல்லது பழைய ஆட்சியின் பாவங்களுக்கு விலை கொடுக்க மறுக்கும் புரட்சிகர அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதன் விளைவினாலாயினும் சரி, பிரான்சின் மீது பயங்கரமான விளைவை கொண்டிருக்கும். பிரான்சின் அரசியல் விதியை தங்களுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்ட தீவிரவாதப்போக்கினர், மூலதனத்தின் நலன்களை காக்கும் செயல்களுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டதாக ஆயிற்று. அந்தக் காரணத்தினால், ரஷ்ய திவால்தன்மையில் இருந்து வெளிப்படும் நிதி நெருக்கடி பிரான்சில் நேரடியாக கடும் அரசியல் நெருக்கடி என்ற முறையில் வெளிப்படும் என்பதோடு, அது அதிகார மாற்றம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் போய்ச்சேருவதில் மட்டுமே முடிவுறும் என்று கருதுவதற்கு காரணம் இருந்தது. எப்படிப்பார்த்தாலும், போலந்தில் புரட்சி என்றாலும், ஐரோப்பிய போரின் விளைவு என்றாலும், அல்லது ரஷ்ய அரசின் திவாலின் விளைவு என்றாலும், புரட்சி என்பது பழைய முதலாளித்துவ ஐரோப்பிய பகுதிக்குள் வந்தே தீரும்

ஆனால் இந்தப் போர் அல்லது வங்குரோத்து போன்ற நிகழ்வுகளின் வெளி அழுத்தங்கள் இல்லாமலேயே, புரட்சியானது ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றில் வர்க்கப் போராட்டத்தின் மிகத் தீவிரத்தன்மையினால் வெகு சமீபத்தில் தோன்றக்கூடும். இந்தப் புரட்சி பாதையை எந்த ஐரோப்பிய நாடு மேற்கொள்ளும் என்ற முன்கருத்துக்களைக் கூற நாம் முயற்சி செய்யப் போவதில்லை; ஆனால் ஒன்று மட்டும் உறுதி; அது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் அண்மைக்காலத்தில் வர்க்க முரண்பாடுகள் உக்கிரத்தன்மையின் உயர் மட்டத்தை அடைந்துள்ளன என்பதேயாகும்.

அரை- வரம்பிலா அதிகார ஆட்சியின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள்ளே ஜேர்மனியில் பிரமாண்டமான வகையில் சமூக ஜனநாயகக் கட்சி வளர்ந்துள்ளது. இது இரும்பின் உறுதியுடன் ஒத்த தேவையுடன் பாட்டாளி வர்க்கத்தை, நிலப்பிரபுத்துவ-பூர்சுவா முடியாட்சியுடன் வெளிப்படையான மோதலுக்கு இட்டுச்செல்லும். அரசியல் சதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்ற வினா கடந்த ஆண்டு ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வாழ்வில் மையப் பிரச்சினைகளில் ஒன்றாகியுள்ளது. நீண்டகாலமாக தேசியவாதம் மற்றும் திருச்சபைக்கு எதிரான போராட்டத்தில் பூர்சுவா கட்சிகளுடன் இணைக்கப்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு, பிரான்சில் தீவிரவாதப் போக்கினருக்கு அதிகாரம் மாற்றப்பட்டுள்ளமை உறுதியாக அதன் தளைகளைத் தளர்த்துகிறது. அமரத்துவம் வாய்ந்த நான்கு புரட்சிகளின் மரபுகளில் செழித்திருக்கும் சோசலிஸ்ட் கட்சியும், தீவிரப்போக்கு என்ற திரைக்குப் பின்னர் பதுங்கியிருக்கும் பழைமைவாத பூர்சுவா கட்சியும் நேருக்கு நேர் மோதவேண்டிய நிலையில் உள்ளது. பிரிட்டனில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பாராளுமன்ற ஏற்ற - இறக்க (ஷிமீமீ-ஷிணீஷ்) விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு முதலாளித்துவ கட்சிகளில் இருந்து, தொடர்ந்துவந்த ஏராளமான காரணிகளின் செல்வாக்கின் கீழ் பாட்டாளி வர்க்கமானது சமீபத்தில்தான் அரசியலில் தனித்து இருக்கவேண்டும் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வழிவகையை அடைவதற்கு ஜேர்மனிக்கு நான்கு தசாப்தங்கள் ஆனபோது, பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கம், சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களை கொண்டும், பொருளாதார போராட்டத்தில் செழித்த அனுபவத்தை கொண்டும் விளங்குவதால் ஒரு சில பாய்ச்சல்களில் கண்டத்தின் சோசலிசப் படையை அடைந்துவிடக் கூடும்.

ரஷ்ய புரட்சியின் செல்வாக்கானது, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் மீது பிரமாண்டமானதாக இருக்கும். ஐரோப்பிய பிற்போக்கின் முக்கிய சக்தியாக இருக்கும் ரஷ்ய வரம்பிலா அதிகார ஆட்சியை அழித்தலைத்தவிர, இதுதான் புரட்சிக்கு தேவையான முன்நிபந்தனைகளை ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் நனவிலும் மனநிலையிலும் உருவாக்கும்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது எவ்வாறு சமூக உறவுகளை புரட்சிகரமாக்கியதோ அதேபோல், சோசலிஸ்ட் கட்சிகளின் பணி தொழிலாள வர்க்கத்தின் நனவை புரட்சிகரமாக்கியதும் புரட்சிகரமாக்குவதுமாகும். ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் அணிகளில் கிளர்ச்சி மற்றும் அமைப்பு வேலை ஓர் உட்தேக்க நிலையை கொண்டிருக்கிறது. ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சிகள், முக்கியமாக அவற்றில் பெரிதான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவை, பெரும்பாலான மக்கள் சோசலிசத்தை ஏற்று, இம்மக்கட் திரளினர் மிகவும் உயர்ந்தளவில் ஒழுங்கமைக்கப்பட்டும், ஒழுங்குமுறையுடனும் உள்ளதற்கு ஏற்ற வீதத்தில் தங்களுடைய சொந்த பழைமைவாதத்தை அபிவிருத்தி செய்துள்ளன. இதன் விளைவாக, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அனுபவத்தை பொதிந்துள்ள அமைப்பு என்னும் முறையில் சமூக ஜனநாயக கட்சி ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தொழிலாளர்களுக்கும் பூர்சுவா பிற்போக்குகிற்கும் இடையே ஏற்படக்கூடிய வெளிப்படையான மோதலில் ஒரு நேரடித் தடையாகக் கூடும். இதையே வேறுவிதமாகக் கூறினால், பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் பிரச்சார-சோசலிச பழைமைவாத தன்மையானது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் நேரடியான போராட்டத்திற்கு தடையாகலாம். ரஷ்ய புரட்சியின் அளப்பரிய செல்வாக்கானது கட்சி நடைமுறை, பழைமைவாதம் போன்றவற்றை அழித்து, தொழிலாள வர்க்கத்திற்கும் அப்பொழுது இருக்கும் முதலாளித்துவ பிற்போக்கிற்கும் இடையிலான வெளிப்படையான பலப்பரீட்சையை நிகழ்ச்சிநிரலில் இருத்தியதை காட்டுகின்றது. ஆஸ்திரியா, சாக்சோனி, பிரஷ்யா ஆகிய நாடுகளில் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்பதற்கான போராட்டம் ரஷ்யாவில் அக்டோபர் வேலைநிறுத்தங்களின் நேரடி செல்வாக்கிற்கு பின்னர் மிகவும் நெருக்கடி கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. கிழக்கில் ஏற்படும் புரட்சி மேற்கின் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சி உயர்சிந்தனை முறையில் உற்சாகத்தை கொடுத்து தங்களுடைய விரோதிகளிடம் "ரஷ்ய மொழியில்" பேசுவோம் என்ற விருப்பத்தை அதிகரிக்கும். எமது பூர்சுவா புரட்சியின் தற்காலிக சூழ்நிலையில் தற்காலிக விளைவுகளினால்கூட ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தில் இருத்திக்கொள்ளும் நிலை வருமேயானால், அது உலகப் பிற்போக்கு சக்தியின் ஒழுங்கமைக்கப்பட்ட விரோதத்தை எதிர்கொள்ளும்; அதே நேரத்தில் உலகத் தொழிலாள வர்க்கம் ஒழுங்கமைக்கப்பட்ட ஆதரவு கொடுப்பதற்கு தயாராக இருக்கும் நிலையையும் காணும்.

அதனுடைய சொந்த வளங்களுக்கு விட்டுவிட்டால், ரஷ்ய தொழிலாள வர்க்கம், விவசாயிகள் இதற்கு ஆதரவை நிறுத்தியவுடனேயே எதிர்ப்புரட்சியால் தவிர்க்கமுடியாமல் நசுக்கப்பட்டுவிடும். அது தன்னுடைய அரசியல் ஆட்சியின் விதியை, அதையொட்டி ரஷ்ய புரட்சி ஒட்டுமொத்தத்தின் விதியை, ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சியின் விதியுடன் இணைத்துக் கொள்ள நேரிடுவதை தவிர வேறு மாற்றீடு இல்லை. . ரஷ்ய பூர்சுவா புரட்சியின் தற்காலிக சூழ்நிலைகளின் இணைவால் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரச-அரசியல் அதிகாரம், உலக முதலாளித்துவத்தின் முழு வர்க்கப் போராட்டத்தின் அளவையும் நிர்ணயிக்கும் பங்கிற்கு அழைத்துச் செல்லும். அரச அதிகாரம் தன்னுடைய கைகளில் இருக்கும் நிலையில், எதிர்ப்புரட்சியை தனக்கு பின்னும் ஐரோப்பியப் பிற்போக்கை அதற்கு முன்னும் எதிர்கொள்ளவேண்டிய நிலையில், உலகம் முழுவதும் இருக்கும் தன்னுடைய தோழர்களுக்கு அது தன்னுடைய பழைய அறைகூவலை, தற்போதைய கடைசித் தாக்குதலுக்கான அறைகூவலாக முன்வைக்கும்: அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!