பிரெஞ்சு போலி-இடது கட்சியான Lutte Ouvrière வலதுசாரி தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் இணைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு போலி-இடது அமைப்பான தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvrière — LO) கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டங்களில் அதிவலது சக்திகளின் பங்கை மூடிமறைக்க முயன்று வருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், கொரோனா வைரஸுக்கு விஞ்ஞான ரீதியான விடையிறுப்புக்கான எதிர்ப்பை நியாயப்படுத்த அது முயன்று வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பது என்று கூறி, அதிவலது ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு LO ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் வெடிக்கும் கோபம் அதிகரித்து வருகிறது, அது வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகளுக்கு மறுத்துவிட்டது. பிரான்சில் 110,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் மற்றும் ஐரோப்பாவில் 1.1 மில்லியன் இறப்புக்களுக்குப் பின்னர், டெல்டா திரிபு வகையின் தோற்றமானது ஒரு புதிய மரண அலைக்கு அச்சுறுத்துகிறது. இந்த நெருக்கடி ஒரு விஞ்ஞானரீதியான சுகாதார கொள்கையை நடைமுறைப்படுத்த தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் சாத்தியத்தையும் அவசரத்தையும் எழுப்புகிறது.

LO ஆனது மற்றய போலி-இடது கட்சிகளைப் போலவே, தீவிர வலதுகளுக்கு பின்னால் கோபமான மற்றும் மோசமான நிலைக்குள்ளாகியுள்ள சுகாதார ஊழியர்களை அணிதிரட்ட முயற்சிக்கிறது. சமீபத்தில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிலிருந்து (NPA) பிரிந்த மொரேனோவாத போக்கால் வெளியிடப்படும் Revolution permanente வலைத் தளமானது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் நவ-பாசிசவாதிகளின் பங்கை மறைக்கவில்லை, இருப்பினும் அது அவற்றில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது. மறுபுறம், LO ஆனது கட்டாய தடுப்பூசிகளுக்கு எதிரான அணிதிரள்வுகளை ஒரு தொழிலாள வர்க்க இயக்கமாக முன்வைக்கிறது, இதில் அதிவலதுகளுடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

'சுகாதார அனுமதி நுழைவுச் சீட்டு மற்றும் கட்டாய தடுப்பூசி: கூடாது!' என்ற ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் LO எழுதுகிறது:

'சுகாதார அனுமதி நுழைவுச் சீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட நிராகரிப்பானது சதி மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு கருத்துக்களால் மட்டும் நிலைத்திருக்கவில்லை. இது மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் முதலாளித்துவவாதிகளின் மோசமான நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் ஒரு அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. எனவே இந்த கோபத்தை [பிரான்ஸ் எழுந்து நில் கட்சியின் தலைவர் நிக்கோலா] டுபான்ட்-அய்னன் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி கவலைப்படாத [தேசபக்த கட்சித் தலைவர் ஃப்ளோரியான்] பிலிப்போ போன்ற அதிவலது வாய்ச்சவாடல்காரர்களால் சுரண்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் போராட வேண்டும். அனைத்து தொழிலாளர்களின் நலன்களுக்கு இணையான ஒரு வேலைத்திட்டத்தை பாதுகாப்பதன் மூலம் தொழிலாளர் உலகமானது அதற்கு ஒரு வழியை கொடுக்க முடியும் மற்றும் கொடுக்க வேண்டும்.'

மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராக பரந்த மக்களின் கோபம் உள்ளது, ஆனால் இது மக்ரோனின் 'சுகாதார அனுமதி நுழைவுச் சீட்டுக்கு' எதிரான எதிர்ப்புக்களின் தோற்றத்தை பொய்யாக்குதல் ஆகும். LO கூறுவதற்கு மாறாக, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிவலது (மரியோன் மரெசால் லு பென், பிலிப்போ மற்றும் டுபான்ட்-அய்னன் உட்பட) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சிக்குள் இருக்கும் சுதந்திரவாதிகளான பிரான்சுவா ரூஃபான் போன்றவர்களால் தொடங்கப்பட்டன. அவர்கள் பெருந்தொற்று நோய்க்கு எதிரான ஒரு விஞ்ஞானரீதியான சுகாதார கொள்கையை எதிர்க்கின்றனர்.

எப்பொழுதும் போல், LO ஆனது தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அதன் அனைத்து முறையீடுகளுக்காகவும் உரையாற்றுகிறது, அதில் அது ஒரு பிரிவாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் போது தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொடங்கும் என்ற LO இன் கூற்று குறிப்பாக அபத்தமானது, இந்த வணிக சார்பு அமைப்புக்கள், மக்ரோனின் கொள்கையான வைரஸ் மக்கள் முழுவதும் தடையின்றி பரவுவதை ஆதரிப்பதற்கும், ஒரு விஞ்ஞானரீதியான சுகாதாரக் கொள்கைக்கான எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கும் 18 மாதங்களுக்கும் மேலாக செலவழித்துள்ளன. இந்த காரணத்திற்காக, பெருந்தொற்று நோய் முழுவதும் தொழிற்சங்கங்களின் உண்மையான பங்கு குறித்து LO எதுவுமே கூறவில்லை.

மேலும், தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அதிவலதுகளின் பங்கை மறுப்பதன் மூலம், LO ஆனது அதிவலதுகளின் முன்முயற்சிகளுடன் அதன் அணிதிரள்வை மறைக்க முயற்சிக்கிறது. Révolution Permanente போலவே, அதிவலதுகளால் ஒழுங்கமைக்கப்பட்ட, வெகுஜன தடுப்பூசி மற்றும் தொழிலாளர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு விரோதமான ஒரு இயக்கம் ஒரு முற்போக்கான போராட்டமாக இருக்கிறது அல்லது மாற முடியும் என்ற மாயையை ஊக்குவிக்க விரும்புகிறது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்த அதன் மாறுபட்ட பகுப்பாய்வுகளில், நவ பாசிசவாதிகளின் தடுப்பூசி எதிர்ப்பு வெறியையும், வைரஸ் பரவ அனுமதிக்கும் மக்ரோனின் கொள்கையையும் எதிர்ப்பதற்கு பதிலாக - தொழிற்சங்க எந்திரங்களின் பிடியை வலுப்படுத்த முயல்கிறது.

அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI) மற்றும் Révolution Permanente ஆகியவற்றால் வலதுசாரி எதிர்ப்புக்களை சட்டபூர்வமாக்கும் தங்கள் வாதங்களுக்கு ஒரு தவறான, இடதுசாரி போர்வையை கொடுக்க வேண்டும் என்று வாதிடப்படும் 'தனிமனித சுதந்திரங்கள்' (individual liberties) பாதுகாப்பதாக கூறப்படும் நவ-பாசிச வாதங்களை LO விமர்சிக்கிறது. அவர்கள் எழுதுகிறார்கள்:

சுகாதார அனுமதி நுழைவுச் சீட்டு மற்றும் தடுப்பூசி கட்டாயத்தை எதிர்க்கும் பலர், 'தனிமனித சுதந்திரங்களின்' பாதுகாப்பை முன்வைத்தனர். 'தனிமனித சுதந்திரங்களை' பாதுகாப்பது என்பது முதலாளியின் சுதந்திரத்தை அவர் விரும்பியபடி சுரண்டுவதற்கும் பணிநீக்கம் செய்வதற்கும் அங்கீகரிப்பதையும் குறிக்கிறது, மேலும் இந்த முழக்கம் தீவிர வலதுசாரி பிரமுகர்களால் பயன்படுத்தப்படுவது தற்செயல் நிகழ்வு அல்ல! தொழிலாளர்கள், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கைக்கூலிகள் மீது சுமத்தும் பொருட்டு தங்கள் வர்க்க நலன்களைப் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே தங்கள் சுதந்திரத்தை வெல்ல முடியும்.

மருத்துவமனைகளுக்கான ஆதார வளங்கள் இல்லாததையும் LO கண்டிக்கிறது:

தன்னை நியாயப்படுத்த, அரசாங்கம் நான்காவது பெருந்தொற்று நோய் அலைக்கு விடையிறுக்க வேண்டிய அவசியத்தை பயன்படுத்துகிறது. இது சிடுமூஞ்சித்தனமானது, ஏனெனில் இந்த அச்சுறுத்தல் எதிர்பார்க்கக்கூடியதாக இருந்தது, ஒரு வருடமாக, மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் முழு சுகாதார அமைப்புமுறையின் பொருள் வளங்கள் மற்றும் மனித வளங்கள் அதிகரிக்கப்படவில்லை.

இத்தகைய ஆதரவு வடிவ விமர்சனங்கள் இருந்தபோதிலும், தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை LO பாதுகாக்கவில்லை. இந்த போலி-இடது அமைப்பு மக்ரோனுக்கு அவரை வலதுபுறத்திலிருந்து விஞ்ஞான-விரோத 'எதிர்ப்புடன்' தன்னை இணைத்துக் கொள்கிறது. தடுப்பூசி என்பது ஒரு அடிப்படை சுகாதார நடவடிக்கை மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான தற்காப்புக்கான அடிப்படைத் தேவையாகும், இது வைரஸால் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அனுமதிக்கிறது. மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வளங்களின் வழிமுறைகள் சுகாதார கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவமனைகளில் வெகுஜன இறப்புக்களை நிறுத்தாது.

இந்த பெருந்தொற்று நோய் போலி-இடது அமைப்புக்களின் பண்பை அம்பலப்படுத்தியுள்ளது. சமூக எதிர்ப்புக்கு பயந்து, அவர்கள் வலதுபக்கம் திரும்பி, அதிவலது எதிர்ப்புக்களுக்கு LO மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து ஆதரவு தெரிவித்தனர். இது தொழிலாளர்கள் இந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பு அமைப்புக்களுடன் முறித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இறுதி பகுப்பாய்வில், வங்கிகள் மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையைத்தான் LO பாதுகாக்கிறது. இது மத்தியதர வர்க்கங்களின் மிகவும் வசதியான அடுக்குகளுக்காக பேசுகிறது, அவர்களுக்கு பொது நிதிகளானது சமூக இடைவெளி, கட்டுப்படுத்துதல் மற்றும் பெருந்தொற்று நோயைத் தடுக்கும் வெகுஜன தடுப்பூசி நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் வீணடிக்கப்படக்கூடாது. இந்த சமூக நலன்களில் இருந்து தொழிலாளர்கள் 'வைரஸுடன் வாழ' கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது, இதனால் வைரஸானது பத்தாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான கூடுதல் இறப்புக்களைத்தான் ஏற்படுத்தும். அதே நேரத்தில், ஐரோப்பிய பொது நிதிகளானது பங்குச் சந்தை விலைகளை உயர்த்தவும், இதனால் உயர் நடுத்தர வர்க்கத்தின் பங்கு முதலீடுகளின் மதிப்பை உயர்த்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

'சுகாதார அனுமதி நுழைவு சீட்டு' மக்ரோன் அரசாங்கத்தால் அத்தியாவசிய சமூக இடைவெளி நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் என நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. விஞ்ஞான பரிந்துரைகளை மீறி, வைரஸ் பரவ அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தச் சட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சியானது (PES) எதிர்க்கிறது. எவ்வாறெனினும், பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டமானது உலகளாவிய அனைவருக்கும் தடுப்பூசி உட்பட விஞ்ஞானரீதியாக நடத்தப்பட வேண்டிய ஒரு சர்வதேச போராட்டம் என்பதை PES வலியுறுத்துகிறது. இதைச் செய்வதற்கு, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும்.

இது அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதையும், நிதிய பிரபுத்துவத்தின் செல்வத்தை பறிமுதல் செய்வதன் மூலம், மக்களைப் பாதுகாப்பதையும், பரந்தளவிலான தடுப்பூசியை அனுமதிப்பதையும் குறிக்கிறது. அத்தகைய கொள்கையை செயற்படுத்தவதற்கு பிரான்சில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை எடுக்கும் ஒரு சமூகப் புரட்சி தேவைப்படுகிறது.

Loading