பகுதி இரண்டு

கிளிஃவ் சுலோட்டர்: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு (1928-1963)

பகுதி1| பகுதி2| பகுதி3| பகுதி4

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிளிஃவ் சுலோட்டரின் இந்த அரசியல் வாழ்க்கை வரலாறு 1928 க்கும் 1963 க்கும் இடைப்பட்ட காலத்தை உள்ளடக்கியது. இது நான்கு பகுதிகளாக வெளியிடப்படுகிறது. இது இரண்டாம் பகுதி. முதல் பகுதி நவம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. 1963 முதல் அவரது மரணம் வரையான வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பாகம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும்.

லேபர் ரிவியூ

சோவியத் டாங்கிகள் புடாபெஸ்டுக்குள் நுழைந்த பின்னர், மன்றத்தின் (Club) வேலை ஒரு புதிய கட்டத்தை எட்டியது. அது கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறியவர்களில் சிறந்த கூறுகளுக்கு ஒரு புரட்சிகர முன்னோக்கை வழங்க முயன்றது.

ஜனவரி 1957 இல், மன்றம் அதன் தத்துவார்த்த இதழான லேபர் ரிவியூவை புதுப்பித்தது, அது கடைசியாக 1954 இல் வெளியிடப்பட்டது. இடது அரசியலின் அரசியல் கட்டமைப்பு மிகவும் ஆழமாக மாறிவிட்டதால், மன்றம் சட்டபூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்ட பத்திரிகையின் முதல் தலையங்கமான, 'லேபர் ரிவியூவை அறிமுகப்படுத்துகிறது” என்ற தலைப்பு முற்றிலும் பொருத்தமானது. புதிய லேபர் ரிவியூவின் குறிக்கோள்களை விளக்கும் போது, ஆசிரிய தலையங்கக் கட்டுரை கூறியது:

கம்யூனிஸ்ட் கட்சி நம் கண்முன்னே சிதைந்து கொண்டிருக்கிறது. இரண்டு தசாப்தங்களாக உறுப்பினர்கள், 'தலைவரின்' தவறிழைக்காத கோட்பாட்டின் மூலம், அரசியல் யதார்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். இப்போது இந்த கட்டுக்கதை இறுதியாக உடைந்துவிட்டதால், உறுப்பினர் குழம்பி, திகைத்து, திசைதெரியாது நிற்கின்றனர். அடிமட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடலுக்கான அதிக சுதந்திரத்தைக் கோருகின்றனர். ஆனால் தலைவர்கள், இந்தக் கோரிக்கைக்கு ஓரளவு இணங்குவதாகத் தோன்றினாலும், அதன் விளைவுகளுக்கு அஞ்சுகிறார்கள். ஏனெனில், கடந்த காலத்தைப் பற்றி அளவுக்கதிகமாக ஊடுருவிப் பார்க்கும் ஆராய்ச்சி, மறைந்த ஸ்ராலின் மற்றும் பெரியா (Lavrentiy Pavlovich Beria - இரகசிய சேவையின் தலைவர்) மீது இப்போது வசதியாக சுமத்தப்படும் பிழைகள் மற்றும் குற்றங்களுக்கான தங்கள் சொந்த ஒப்புதலையும் குற்றங்களையும் வெளிப்படுத்தும்.

மிக நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசம்-லெனினிசத்தின் மரபியத்தை தனது சொந்த சொத்து என உரிமைகோரி, நீண்ட காலமாக இந்தத் தவறான கூற்றில் இருந்து தப்பிக்க முடிந்தது. மார்க்சிச தத்துவத்தின் புதிய பங்களிப்புகளின் ஒரே ஊற்றாக ஸ்ராலினைப் பார்த்ததன் விளைவு, உத்தியோகபூர்வ கம்யூனிஸ்ட் கட்சி ஆதாரங்களில் இருந்து சிறிதளவு பயனையும் பெறமுடியவில்லை. மாறாக, சோசலிச சிந்தனைக்கு புதிய மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புகளை, கடந்த இருபது வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக ஸ்ராலினிசத்தை தொடர்ந்து எதிர்த்தவர்களிடமிருந்து தான் நாம் தேடியாக வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த இலக்கியத்தின் பெரும்பகுதி இயக்கத்தின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே இதுவரை கிடைத்தது. லேபர் ரிவியூ-வின் நோக்கங்களில் ஒன்று, இந்தத் 'தடைசெய்யப்பட்ட' மார்க்சிச சிந்தனையாளர்களின் எழுத்துக்களை ஒரு பரந்த வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, எங்கள் இயக்கத்தின் தத்துவார்த்த அடித்தளங்களை மேலும் வளர்க்க உதவுவதாகும். [17]

'மார்க்சிஸ்டுகள் ஏட்டறிவு மெய்யியலார்களாக இருக்க முடியாது' மற்றும் அவர்கள் தங்கள் காலத்தின் அன்றாடப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகையில், தலையங்கம் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களைப் பற்றிய விரிவான அறிவின் அவசியத்தை வலியுறுத்தியது:

என்ன நடந்தது மற்றும் நிகழ்வுகள் ஏன் அவற்றின் போக்கை எடுத்தன என்ற அறிவின் மூலம் மட்டுமே என்னவாக இருக்கிறது, என்னவாக இருக்கும் என்பதைப் நாம் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தலைமுறை தொழிலாளர்களும் முந்தைய தலைமுறையினரால் அமைக்கப்பட்ட அடித்தளத்தில் கட்டியெழுப்புகிறார்கள். ஒவ்வொரு தலைமுறையும் கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்க இதை அடிப்படையாகப் பயன்படுத்துகிறது.

இதுதான் மார்க்சிச வழிமுறையின் சாரம். இந்த வழிமுறையைப் பயன்படுத்தத் தவறுதல் ஒருபுறம் சந்தர்ப்பவாதத்திற்கும் மறுபுறம் குறுங்குழுவாதத்திற்கும் இட்டுச்செல்லும். இந்த இரண்டு வெளிப்படையான முரண்பாடான நிகழ்வுப்போக்குகள், உண்மையில், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். அவை இரண்டும் எங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு திரட்டுவாத அணுகுமுறையிலிருந்து உருவாகிறது, இது தத்துவத்தை அவமதிப்பதன் தவிர்க்க முடியாத விளைவாகும். [18]

மீண்டும் தொடங்கப்பட்ட தத்துவார்த்த இதழின் முதல் இதழ், லேபர் ரிவியூ

பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் தத்துவார்த்த-விரோத தப்பெண்ணங்களை எதிர்கொள்ள, லேபர் ரிவியூ தலையங்கம், 'மார்க்சிசத்தின் மெய்யியல் அடிப்படையான, இயங்கியல் சடவாதத்திற்கு நமது ஆரம்பகால இதழ்களில் பல முக்கியமான கட்டுரைகளை அர்ப்பணிப்பதாக' உறுதியளித்தது. அது குறிப்பிட்டது:

சோசலிசத்தின் அனைத்து எதிரிகளும், அனைத்து அதிகாரத்துவத்தினரும் அவர்களின் அனைத்து 'இடது' குறுங்குழுவாத நிழல்களும், துணிவை இழந்தவரும் மற்றும் முதலாளித்துவத்துடன் எளிதில் இயைந்துபோக விரும்பும் அனைவரும், ஏதோ ஒரு வகையில் விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்குகின்றனர். ஆயினும், இந்தக் கோட்பாடுகள் மட்டுமே பிரிட்டிஷ் சோசலிச இயக்கத்தின் பிரச்சனைகளுக்கான பதில்களைத் தேடுவதில் திறம்பட வழிகாட்ட முடியும் என்பதை அனுபவங்கள் அனைத்தும் காட்டுகின்றன.

சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் வேறு எந்த அரசியல் போக்கினாலும் ஒப்பிடமுடியாத வரலாற்று அடிப்படையிலான நுண்ணறிவின் ஆழத்துடன் ஸ்ராலினிச ஏகபோகம் உடைக்கப்பட்டதால் எழுந்த சவால்களையும் பணிகளையும் புரிந்துகொண்டு, லேபர் ரிவியூ ஒரு இலட்சிய அறிவுசார் மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது:

மேலும், சோசலிச இயக்கத்தின் 'கூட்டு நினைவகம்' மீண்டும் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், இதனால் கடந்த முப்பது வருடங்களின் வரலாற்றுப் பதிவை நீண்ட காலமாக வேரூன்றிய பொய்களிலிருந்து சுத்தம் செய்ய முடியும். 1926 ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்தத்தின் தோல்வியுடன் தொடங்கிய பெரும் பனி யுகத்தின் (great Ice Age) முடிவில் நாம் இப்போது இருக்கிறோம். … உலகெங்கும் எதிரொலித்த விளைவுகளுடன் குருஷ்சேவ், 'இடதுசாரிகள்' எதை நம்புவது என நீண்ட காலமாக அனைவருக்கும் அறிவுறுத்திய “தவறே செய்யா தலைவரின்” அதிகாரத்தை இப்போது சிதைத்துவிட்டார். 1927 இல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஜனநாயகத்தை ஸ்ராலின் அணி அழித்ததிலிருந்து நாங்கள் இந்த போப் சோசலிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். C.P.S.U.வின் 20 வது காங்கிரசுக்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் எஞ்சியிருந்த அதிகாரத்தையும், ஹங்கேரியில் சோவியத் டாங்கிகள் இப்போது அழித்துவிட்டன.

இப்போதிலிருந்து, மார்க்சிச கருத்துக்களின் இயல்பான வளர்ச்சியை இனி அதிகாரத்துவ தடுப்பரண்களால் செயற்கையாக கட்டுப்படுத்தமுடியாது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள், ரஷ்யா முதல் அமெரிக்கா வரை ஒவ்வொரு நாட்டிலும், போராட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர். அவர்கள் தங்கள் இயக்கத்தின் கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கோருகிறார்கள். இந்த இளைஞர்கள் சிந்திக்கக், கற்றுக்கொள்ள, தங்கள் அரசியல் முயற்சியைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அதிகாரத்துவ 'தடைகள்' மற்றும் 'வழிபாட்டு முறைகள்' அவர்களை விரட்டுகின்றன. பதில்களைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுவதே எங்கள் கடமை. எனவே லேபர் ரிவியூ மார்க்சிசத்தின் வெளிப்படையான ஃபேபியன் எதிரிகள் மற்றும் அதன் நற்பெயரை மோசமாக மாசுபடுத்திய கூலிக்கு மாரடிக்கும் ஸ்ராலினிச எழுத்தாளர்கள் இருவருக்கும் சவால் விடுகிறது.

ஏனையவற்றுடன், கெய்ன்ஸ் அல்லது பகுதி தேசியமயமாக்கல் அல்லது 'புதிய' காலனித்துவ அரசியலமைப்புகள் அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடைகள், முதலாளித்துவம் ஒரு புதிய வாழ்வை அனுபவிப்பது பற்றிய ஃபேபியன் கனவுகளைப் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம்.

ஃபேபியனிசம் பற்றிய விவாதத்திற்கு இணையாக, முதலாளித்துவத்துடன் ஸ்ராலினிச வகையின் 'சமாதான சகவாழ்வு' மற்றும் துரத்துகின்ற போதும் பலவீனமான அதன் சந்ததியை-பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமான, சோசலிசத்திற்கான பிரிட்டிஷ் பாதை என்பதை அணுகுவோம். ஸ்ராலினிசம் எங்கிருந்து வந்தது, அது ஏன் தோன்றியது? அதன் உயர்வு தவிர்க்க முடியாததா? பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் உண்மையில் ஒரு மோசமான மற்றும் கொலைகார கொடுங்கோன்மையை அர்த்தப்படுத்துகிறதா? ஜனநாயக மத்தியத்துவம் என்பது முழுநேர அலுவலர் குழுவின் எதேச்சதிகாரமா? இவை அனைத்தும் வரவிருக்கும் மாதங்களில் நாம் பதிலளிக்க முயற்சிக்கும் சில கேள்விகளாகும்.

ஃபேபியன் கொள்கைகளின் பயனற்ற தன்மையைப் பற்றி நாம் விவாதிக்கும்போது, பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மக்கள் முன்னணி அரசாங்கங்களின் தோல்விக்கான காரணங்களையும், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தை ஹிட்லர் தோற்கடித்ததற்கான காரணங்களையும் நாம் ஆராய வேண்டும். 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற முழக்கத்துக்கும் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்துக்கான இந்த பேரழிவுகளுக்கும், மாஸ்கோ வழக்குகள், ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம், ஐரோப்பா யால்டாவில் பங்கிடப்பட்டது ஆகியவற்றுக்கு எப்படி வழிவகுத்தது என்பதற்கும் இடையேயான தொடர்புகளைக் காட்ட முயற்சிப்போம். இறுதியாக கிழக்கு ஐரோப்பிய சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகளில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை பெருமளவில் படுகொலை செய்தனர். ரஷ்யப் புரட்சியின் தன்மை மற்றும் எதிர்கால வாய்ப்புகளை ஸ்ராலின் மூழ்கடித்த லெனினின் எழுத்துக்களை நாம் பாதுகாப்போம் மற்றும் ரஷ்ய புரட்சியில் லெனினின் உடனிணைந்த தோழரான ட்ரொட்ஸ்கியின் சில படைப்புகளை வெளியிடுவோம்.

அதன்படி லேபர் ரிவியூ சோசலிச இயக்கத்தின் அனைத்து தீவிர மாணவர்களின் ஒத்துழைப்பை வரவேற்கிறது. நாங்கள் அவர்களுக்கு எங்கள் பக்கங்களை பரவலாகத் திறப்போம். ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் வளரும் சோசலிச இயக்கங்களுடன் நெருக்கமான சகோதரத்துவ உறவை ஏற்படுத்துவதை நாங்கள் குறிப்பாக எண்ணுகிறோம். எனினும் லேபர் ரிவியூ வெறும் விவாத மேடையாக இருக்காது. தொழிலாளர் இயக்கத்தில் முதலாளித்துவ கருத்துக்கள் எங்கு வெளிப்பட்டாலும் அவற்றுக்கு எதிரான போராட்டத்தில் அது ஒரு ஆயுதமாக வடிவமைக்கப்படும். இது புறநிலை மற்றும் இன்னும் பக்கச்சார்பாக இருக்கும்; மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆகியோரால் விவரிக்கப்பட்ட உண்மையான கம்யூனிசத்தின் சிறந்த கொள்கைகளை, தொடர்ந்து தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஃபேபியன்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் இருவரிடமிருந்தும் அது பாதுகாக்கும்.[19]

மறுதொடக்கம் செய்யப்பட்ட லேபர் ரிவியூ முதல் இதழ் பீட்டர் ஃப்ரையரின் ஹங்கேரிய துயரத்தின் மதிப்பாய்வைக் கொண்டிருந்தது, இது ஜான் ரீட்டின் உலகைக் குலுக்கிய பத்து நாட்களுடன் ஒப்பிடுகிறது ஃப்ரையரும் ஒரு புரட்சியைப் பற்றி எழுதியிருந்தார், ஆனால் ஒன்று 'முதலாளித்துவத்திற்கு எதிராக அல்ல, ஆனால் ஊழல் மற்றும் சீரழிந்த அதிகாரத்துவத்திற்கு எதிராக'. [20] ஃப்ரையரின் படைப்பைப் பாராட்டும்போது, ஸ்ராலினிஸ்டுகள் புரட்சியை ஏன் நசுக்கினார்கள் என்பதை ஆசிரியர் விளக்கவில்லை என்று விமர்சன ரீதியாக அது குறிப்பிட்டது. 'பதில்வேண்டுமானால் ஒருவர் லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களுக்கு, குறிப்பாக அவருடைய 'காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி'’ க்கு சென்றாக வேண்டும். அதில் அவர் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவத்தின் தோற்றத்தைப் பகுப்பாய்வு செய்து விளக்குகிறார், ஸ்ராலினிசம் என்று இன்று நாம் அறிந்திருக்கும் இந்தச் சாதியை வளர்க்கவும் பாதுகாக்கவும் எந்தத் தத்துவங்கள் முன்மொழியப்பட்டன என்பதையும் விளக்குகிறார். அதை வன்முறையால் தூக்கியெறிய வேண்டியிருக்கும் என மிகத் தெளிவாகக் கூறுகிறார். [21]

எதிர்பார்த்ததுபோலவே, புதிய லேபர் ரிவியூ வின் அறிமுகம் இடதுசாரிப் பிரிவுகளில் இருந்து அதிருப்தியைச் சந்தித்தது. அவை, ட்ரொட்ஸ்கிச கருத்துக்களை ஆதரிப்பதை எதிர்த்தன, எனவே, இது ஒரு 'குறுங்குழுவாத' சகிப்புத்தன்மையின்மை ஆகும். மீண்டும் தொடங்கப்பட்ட லேபர் ரிவியூ வின் இரண்டாவது இதழில், 'கோட்பாடுகள் மீதான விவாதத்தை நோக்கி' என்ற தலைப்பில் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கப்பட்டது:

லேபர் ரிவியூ வில் பங்களிப்பவர்கள் எவராலும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களில் உடன்படாதவர்கள் எங்கள் பத்திரிகையை 'அனல்-தெறிக்கும்' குறுங்குழுத்தன்மையுடன் புறந்தள்ளக்கூடாது, ஆனால் அவர்கள் தங்கள் வாதங்களைப் போதுமான அளவு வளர்த்துக் கொண்டு, ஐயத்திற்கிடமின்றி, போதுமான அளவில் தங்கள் கருத்து வேறுபாடுகளை முன்வைக்கவேண்டும், இதன் மூலம் அவர்களின் வாதம் புரியும். அவற்றை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். [22]

ஆனால் லேபர் ரிவியூ ஸ்ராலினிசம் பற்றிய எந்த விவாதத்திலும், வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் பங்கையும், மார்க்சிச தத்துவம் மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பின் சமகால முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவை விளக்கும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் தேசியமயமாக்கப்பட்ட சொத்தின் முற்போக்கான தன்மைக்கும் அந்த நாட்டை ஆளும் பிற்போக்கு அதிகாரத்துவத்திற்கும் இடையிலான மோதலின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கான மார்க்சிசத்தின் பார்வையில் இருந்து, இதுவரை எடுக்கப்பட்ட ஒரே முயற்சியை 'ட்ரொட்ஸ்கிசம்,' குறிக்கிறது. [23]

இரண்டாவது இதழில் ஆவணக் காப்பகத்திலிருந்து நினைவுபடுத்தும் மற்றொரு கட்டுரை உள்ளது: ஹங்கேரிய புரட்சி மீதான கிரெம்ளினின் அடக்குமுறைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் குறித்து மைக்கல் பண்டா எழுதிய ஒரு கடுமையான மற்றும் வைராக்கியமான கண்டனம்:

குருஷ்சேவின் பேச்சு அதன் அனைத்து திகிலூட்டும் விவரங்களையும் பகிரங்கப்படுத்தியபோது, அது சர்வதேச ஸ்ராலினிச இயக்கத்தின் தலைமைகள் மீது திடீர் திடீரென திகைக்கும் வண்ணம் மீன்களின் கூட்டத்தில் வீசப்பட்ட ஜெலிக்னைட் குச்சியாய் வெடித்தது. அவர்களில் மிகவும் திகைப்புள்ளாகி சங்கடத்துக்குள்ளானவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள். ஏறக்குறைய முப்பது வருடங்களாக அவர்கள் ஸ்ராலினை தவறிழைக்கா வழிகாட்டியாகவும், அவர்களின் அப்பழுக்கற்ற ஆசிரியராகவும், அவர்களின் மேதைமைமிக்க கோட்பாட்டாளராகவும், அவர்களின் புகழ்பெற்ற தலைவராகவும் கருதினர். ஸ்ராலினின் ஒவ்வொரு வாசகமும் ஒரு வரலாற்று அறிவிப்பாகவும், ஒவ்வொரு செயலும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும், ஒவ்வொரு புத்தகமும் துண்டு பிரசுரமும் மார்க்சிச-லெனினிச இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகவும் இயங்கியல் சடவாதத்திற்கு நிரந்தர பங்களிப்பாகவும் கருதப்பட்டது. …

வரலாறு, திடீர்திடீரென மாறக்கூடியதாகவும் மற்றும் விபரீதமானதாகவும் இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் சிலைகள் மற்றும் அவற்றின் வழிபாட்டாளர்களின் பக்கத்தில் இருந்ததில்லை. என்.எஸ். குருஷ்சேவின் ஊடகத்தின் மூலம் அது ஸ்ராலினை ஒரு பண்பற்ற அதிகாரத்துவவாதியாகவும், சூட்சும புத்திகொண்ட கோமாளியாகவும், இரக்கமற்ற மற்றும் நேர்மையற்ற கொடுங்கோலனாகவும் உலகிற்கு வெளிப்படுத்தியது.

குருஷ்சேவின் பெரும்பழிக்கு ஆளாக்கும் வெளிப்பாடுகள் சீனத் தலைவர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் தெளிவற்ற வார்த்தைகளாகவும் வெளிவருவதில் வெற்றிபெற்றன. அது சீன மக்களின் பார்வையில் ஸ்ராலினுக்கு மறுவாழ்வு அளிக்க முயன்றதைத் தவிர புதிதாக எதுவும் சொல்லவில்லை. அது ஏப்ரல் 1956 இல் ஆகும். ஒன்பது மாதங்களுக்கு ஒரு புரிந்துகொள்ள முடியாத மற்றும் வெளிப்படையான அமைதி தொடர்ந்தது. உலக தொழிலாளர்கள் ஒரு மேலதிக விளக்கத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் வீணாகக் காத்திருந்தனர்.

சீனத் தலைவர்கள் மௌனமாக ஸ்ராலினின் குற்றங்களைப் பூசிமெழுகி மறைக்க முயன்றபோது, வரலாறு, அதன் சொந்த வில்லத்தனத்தின் தீய விளைவுகளால் வெட்கப்பட்டு வருத்தப்பட்டு, குருஷேவின் பேச்சுக்கு இரத்தக்களரியான மற்றும் துயரமான அத்தியாயத்தை எழுதத் தயாராகி வந்தது. இது புகழ்பெற்ற ஹங்கேரிய புரட்சியாக இருந்தது. [24]

கிரெம்ளினின் ஹங்கேரிய தலையீட்டின் மீதான சீன ஆட்சியின் பாதுகாப்பை அதன் பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச வேலைத்திட்டம் மற்றும் கருத்தியலுடன் தொடர்புபடுத்தி, கவனமாக வடிவமைக்கப்பட்ட தத்துவார்த்த கட்டுரையின் அறிமுகமாக இருக்கும் இந்த பத்திகளைப் படித்தவுடன், மாவோயிச ஆட்சியை பண்டா பின்னர் அரசியல்ரீதியாக தழுவிக்கொண்டதை நினைவுகூருவது தவிர்க்க முடியாது. 1986 இல் மிகவும் அசாதாரணமாக அவர் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டதோடு, ஸ்ராலினைப் புகழ்ந்தார்.

நியூஸ் லெட்டர் வெளியீடு

லேபர் ரிவியூ வின் தயாரிப்பை மேற்பார்வையிடும் போது, பீட்டர் ஃபிரையருடன் ஹீலியின் கலந்துரையாடல்கள் தொடர்ந்தன மற்றும் மற்றொரு முக்கியமான அரசியல் முயற்சிக்கு வழிவகுத்தன. ஸ்ராலினிசத்துடன் முறித்துக்கொண்டவர்களுக்கும், உண்மையான புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்பப் பாதை தேடும் போர்க்குணம் மிக்க தொழிலாளர்களுக்கும் கலந்துரையாடும் அரங்காக, மன்றத்தின் (Club) ஆதரவு மற்றும் உதவியுடன் ஃபிரையர் ஒரு 'செய்திமடலை' வெளியிட வேண்டும் என ஹீலி ஃபிரையருக்கு முன்மொழிந்தார்.

ஃபிரையர் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, ஒரு எழுத்தாளராக இந்தத் திட்டத்திற்கு விதிவிலக்கான திறமையைக் கொண்டு வந்தார். ஹீலியும் மன்றமும் முன்னோக்கு, பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் நிறுவன உந்துதலை வழங்கியதானது, நியூஸ் லெட்டரை பிரிட்டிஷ் இடதுகளில் ஒரு பலம்வாய்ந்த சக்தியாக மாற்ற உதவியது. நியூஸ் லெட்டரின் முதல் இதழ் மே 10, 1957 இல் வெளிவந்தது. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏப்ரல் 27–28 வார இறுதியில் சோசலிஸ்ட் அரங்கத்தின் (Socialist Forum) அனுசரணையுடன், நடைபெற்ற வோர்ட்லி ஹால் (Wortley Hall) மாநாட்டின் விரிவான தகவலை வழங்கியது. இதில் மைக்கல் பண்டா மற்றும் மன்றத்தின் பிற தலைவர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர், பிரிட்டிஷ் இடதுசாரிகளின் பரந்த அளவிலான பிரதிநிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய, மாநாட்டின் பங்கேற்பாளர்கள், ஸ்ராலினிசத்தின் நெருக்கடியின் முக்கியத்துவத்தையும் முன்னோக்கி செல்லும் வழியையும் பற்றி விவாதித்தனர்.

நியூஸ்லெட்டரின் முதல் இதழ்

பார்பரா மற்றும் கிளிஃவ் சுலோட்டர் இருவரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டத்தை கிளிஃவ் சுலோட்டர் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தார். 'அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பு கொண்ட பொழுதை, பார்பரா நினைவு கூர்ந்தார்,' அவர் கையில் கிடைத்த அனைத்தையும் படித்தார். 'வோர்ட்லி மாநாட்டு இடம் முற்றிலும் வாதிடும் மற்றும் ஆவேசமாக விவாதிக்கும் மக்களால் நிரம்பியிருந்தது”. மற்றவர்களைப் போலல்லாமல், ஹீலி பேசுவதை அவர் கேட்டதும் அவர் எவ்வளவு அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர் சொன்னதை நினைவில் கொள்ள எனக்கு ஒரே ஒரு விஷயம் இருக்கிறது. அது உண்மையில் என்னுடன் ஒட்டிக்கொண்டது, 'இதுதான் புத்தகங்களைப் படிப்பதற்கான நேரம். இது ரஷ்ய புரட்சியின் உண்மையான வரலாற்றைக் கண்டறிய வேண்டிய நேரம்.' அதில் நாடகத்தன்மையின் எந்த தடயமும் இல்லை. பல தசாப்தங்களாக இது போன்ற சூழ்நிலைக்காக அவர் காத்திருக்க வேண்டும். அவர் மிகவும் ஈர்க்கக்கூடியவராக இருந்தார் மற்றும் மற்றவர்களிடமிருந்து தனித்து நின்றார்.' [25]

பார்பரா நினைவுகூர்தல், நியூஸ் லெட்டரின் மாநாட்டைப் பற்றிய கணக்கின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது, அது ஹீலியின் கருத்துக்களை எடுத்துக்கொண்டது: 'இதுதான் புத்தகங்களைப் படிப்பதற்கான பருவம், அவற்றை எரிப்பதற்கானதல்ல.' என்று அவர் கூறினார். 'முன்கூட்டியே லேபிள் ஒட்டாமல் இருப்போம். சொல்லாடல்களிலிருந்து விடுபடுவோம். யாரையும் 'பீடத்தில்' வைக்காதீர்கள். படித்து ஆய்வு செய்யுங்கள். ஒவ்வொரு கண்ணோட்டத்தையும் ஆராயுங்கள்.' [26]

மாநாட்டில் முக்கியமான வேறுபாடுகள் வெளிப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கணிசமான அதிருப்தியாளர் பகுதியினரும், முன்னாள் உறுப்பினர்களும் ஸ்ராலினின் குற்றங்களைக் கண்டிக்கத் தயாராக இருந்தனர், ஆனால் அவர்கள் ஸ்ராலினிச ஆட்சியின் சமூக மற்றும் அரசியல் வேர்களைப் பற்றிய எந்த தீவிரமான ஆய்வையும் எதிர்த்தனர். அவர்களின் விமர்சனத்தின் பெரும்பகுதி தார்மீக கண்டனத்திற்கு அப்பால் செல்லவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய சர்வதேச மார்க்சிச மரபில் கவனம் செலுத்துவதை அவர்கள் எதிர்த்தனர்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றாசிரியர் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்த ஜான் சவில் (John Saville) இருந்தார். ஸ்ராலினிசத்தின் நெருக்கடிக்கு அடிப்படையில் தேசியவாத பதிலுக்காக அவர் வாதிட்டார். 'சூடாகப் பேசுவதை நிறுத்திவிட்டு, பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்கு ஏதாவது அர்த்தமுள்ள மார்க்சிச கருத்துக்களை உருவாக்குவது அவசியம்' என்று சவில் வாதிட்டதாக நியூஸ் லெட்டர் தெரிவித்தது. இது நமது சொந்தத் தொழிலாள வர்க்க இயக்கத்தையும் அதன் வரலாற்றையும் படிப்பதை உள்ளடக்கியது, அதைப் பற்றி எங்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும்.' [27]

ஆனால் 1957 இல் சோசலிச இயக்கத்தை எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனை, 1820 களில் மான்செஸ்டர் அல்லது லிவர்பூலில் என்ன நடந்தது என்பது பற்றிய போதிய அறிவு அல்ல, ஆனால் 1920 களில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்ன நடந்தது என்பதைப் பற்றிய போதிய அறிவாகும்.

சவில் மற்றொரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றாசிரியரான இ.பி தாம்சனுடன் நெருக்கமாகப் பணியாற்றினார், பின்னர் அவர் The Making of the English Working Class இன் ஆசிரியராகப் புகழ் பெறவிருந்தார், இது வர்க்க நனவின் வளர்ச்சியை, தனித்துவமான தேசிய அனுபவங்கள் மற்றும் மரபுகளின் விளைவாக விளக்கியது. சவிலும் தாம்சனும் இணைந்து தி நியூ ரீசனர் (The New Reasoner) என்ற பத்திரிக்கையைத் தொகுத்தனர். இது பின்னர் நியூ லெஃப்ட் ரிவியூ (New Left Review)வின் ஒரு பகுதியாக மாறியது. தாம்சன், ட்ரொட்ஸ்கிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையேயான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள் ஒரு புதிய இடது மறுகூடலுக்குப் பெரிதும் பொருத்தமற்றவை மற்றும் தீங்கு விளைவிப்பவை எனக் கருதினார். வோர்ட்லி மாநாட்டிற்குப் பின்னர் நியூஸ் லெட்டருக்கு எழுதிய கடிதத்தில், ட்ரொட்ஸ்கிசத்தின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்த (தொடர்ந்தும் இருந்த) தாம்சன் - 'ட்ரொட்ஸ்கிஸ்ட்' என்று முத்திரை குத்தப்பட்ட நிலைப்பாடுகளும் மனப்பான்மைகளும் குறுங்குழு பிளவுகளை நிலைநிறுத்தவும் இறுக்கவும் வாய்ப்புள்ளது என்று வலியுறுத்தினார். … [28]

கிளிஃவ் சுலோட்டர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைகிறார்

அரசியல் சீரமைப்பின் இந்தப் பதட்டமான காலத்தில்தான் கிளிஃவ் சுலோட்டர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி ஜெர்ரி ஹீலியுடன் விரிவான அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இது மூன்று தசாப்த கால அரசியல் ஒத்துழைப்பின் தொடக்கத்தைக் குறித்தது. சவில் மற்றும் தாம்சன் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கை சுலோட்டர் கடுமையாக எதிர்த்தார். ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் அவர் எழுதி நான்காம் அகிலத்தில் வெளியிடப்பட்ட ஒரு விவாதக் கட்டுரையில், 1956-57 இல் அதிருப்தியாளர்கள் மற்றும் முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளிடையே தோன்றிய தத்துவார்த்த மற்றும் அரசியல் பிளவுகளின் முக்கியத்துவத்தை சுலோட்டர் விளக்கினார். ஸ்ராலினின் குற்றங்களை அம்பலப்படுத்தியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர், அசௌகரியம் மற்றும் சங்கடத்தைப் பிரதிபலிக்கும் அவர்களின் சொந்த நம்பகத்தன்மையாலும் அதிர்ச்சி அடைந்தனர்:

ஸ்ராலினிச புத்திஜீவிகளில் பெரும்பான்மையானவர்கள் இப்போது தங்கள் அரசியல் போக்கை, புறநிலையாக அல்லாமல், அகநிலை ரீதியாக அமைத்துள்ளனர்: அவர்கள் தங்கள் 'கம்யூனிசத்தை' மிகப்பெரிய ஏமாற்றமாகக் கருதினர்; அவர்கள் வாழ்ந்த மற்றும் வேலை செய்த தாராளவாத வட்டங்களில் அவர்களால் இனிமேல் தலைதூக்க முடியாது; ஸ்ராலின் மற்றும் ஸ்ராலினிசத்தை இலட்சியவாதியாக ஏற்றுக்கொள்வது கொலை, சித்திரவதை மற்றும் அனைத்து சுதந்திரம் மற்றும் பலவற்றையும் ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டு அவர்கள் கோபமடைந்தனர்.

அரசியல் ரீதியாகப் பேசினால், அவர்களில் யாராவது தொடர்ந்தும் அரசியல் அரசியலில் நீடித்திருந்தால் இந்த எதிர்வினைகளுக்குப் பின்னால் உள்ள பொருள் ரஷ்ய புரட்சி மற்றும் கம்யூனிசத்தின் மீதான முதன்மை முதலாளித்துவ கருத்தியல் தாக்குதலை ஏற்றுக்கொள்வதாகும்: ஸ்ராலினிசம் அதன் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் காட்டிக்கொடுப்புக்களுடன், அடிப்படையில் லெனினிசத்தின் தொடர்ச்சி என ஏற்றல்; ஸ்ராலினிசத்தின் சாராம்சம் 'சர்வாதிகாரம்' அல்லது 'சர்வாதிபத்தியம்', 'உண்மையான அரசியல்' அல்லது நடைமுறை அதிகார அரசியலுடன்; மற்றும் சாமானிய உறுப்பினர்கள் இணைந்து இயக்கத்தை உருவாக்கும் 'இலட்சியங்கள்' தலைமைத்துவத்தில் அதிகார வெறி கொண்டவர்களால் வெறுமனே சிடுமூஞ்சித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் 'தொடர்ச்சியை' உணர்ந்து, முன்னாள் கம்யூனிஸ்டுகள் பின்னர் மாற்று தார்மீக மற்றும் அரசியல் கோட்பாடுகளுக்காக அலைந்தனர். முதலாளித்துவ நெறிமுறைகளின் எஞ்சியவை மற்றும் எஞ்சியவற்றை ஏற்றுக்கொண்ட பல சீர்திருத்தவாத மற்றும் தாராளவாத சந்தர்ப்பவாதத்தை தவிர வேறு எதையும் அவர்கள் காணமாட்டார்கள். இவை எவற்றாலும் தத்துவம் மற்றும் நடைமுறைக்கு நம்பகமான வழிகாட்டியை வழங்க முடியாது. ஏனெனில் இது வரலாற்று ரீதியாக அழிந்து, அழுகும் ஒரு சமூக ஒழுங்கிலிருந்து நேரடியாக எழுகிறது.

இதன் விளைவாக, 1956 க்குப் பின்னர் மலர்ந்த பல குழுக்கள் (இந்த வார்த்தைக்குப் பொருத்தமானதாக இருந்தால்) இறுதியில் சீர்திருத்தவாத மற்றும் தாராளவாத இயக்கங்களில் கரைந்துவிட்டன, அல்லது ஸ்ராலினிசத்தை நோக்கி மேலும் மேலும் நெருக்கமாக நகர்ந்தன, சில நேரங்களில் திறந்த மற்றும் நேரடி ஒத்துழைப்பு வடிவத்தில், மற்றவற்றில் கருத்தியல் ரீதியான ஏற்பின் மூலம் நகர்ந்தன. இது ஏனென்றால், சர்வதேச அளவில் முதலாளித்துவம் எவ்வித உள்ளார்ந்த வலிமையின் மூலமும் தப்பிப் பிழைக்கவில்லை, மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முண்டுகொடுக்கப்படுவதால் மட்டுமே பிழைக்கிறது. இது, பாட்டாளி வர்க்க புரட்சியைத் தடுக்கும் சமூக சக்தியாகும்.

சோசலிஸ்டுகளாக இருப்பதாகக் கூறிக்கொள்வோர் மத்தியில் எந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலை இருந்தாலும், அது ஸ்ராலினிசத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும் அல்லது புரட்சிகர மார்க்சிசத்திற்கு, ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஈர்க்கப்பட வேண்டும். நியூ லெஃப்ட் ரிவியூ 1956 முதல் அது ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள்மற்றும்லெஃப்ட் ரிவியூ மற்றும் நியூ ரீசனர் இவற்றின் ஒருங்கிணைப்பாக இருந்தது. இவை இரண்டும் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் மற்ற இடது புத்திஜீவிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும்.

நியூ ரீசனர் முதலில் தி ரீசனர், 1956 இல் இங்கிலாந்தின் வடக்கில் உள்ள அதிருப்தியுற்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான எதிர்ப்பு அறிவிப்பு வெளியீடாகும். அதன் ஆசிரியர்களான எட்வார்ட் தாம்சன் மற்றும் ஜான் சவில் ஆகியோர் தொடர்ந்தும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு கடுமையான எதிப்பாளர்களாக இருந்தார்கள். தாம்சன் ட்ரொட்ஸ்கிசத்தை பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தில் உள்ள ஒரு குறுங்குழுவாத, அதி-இடது மற்றும் புரட்சி எதிர்ப்பு போக்கு என்று விவரித்தார். அவர்களின் வாரிசுகளைப் போலவே, தாம்சனும் சவிலும் போல்ஷிவிக் பாரம்பரியத்திற்கு வெளியே உள்ள மூலங்களிலிருந்தும், குறிப்பாக பிரிட்டிஷ் தொழிலாள வர்க்க இயக்கத்தின் சில சிறப்பு சோசலிச பண்புகள் என்று கூறப்படுவதிலிருந்தும் எதிர்கால வளர்ச்சிக்கான ஆதாரங்களைத் தேடினர்.

ஸ்ராலினிசத்தின் வரலாற்று அர்த்தத்தையும், அதற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தையும் எதிர்கொள்ள அவர்கள் மறுப்பது, ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் நடத்தப்பட்ட ஸ்ராலினிசத்திற்கு எதிரான எந்த பிரச்சாரத்தையும் “கம்யூனிச-எதிர்ப்பு” க்கு வழிசேர்க்கிறது என்ற அடிப்படையில், அவர்கள் நிராகரிப்பதில் பிரதிபலித்தது. இந்த வழியில் அவர்கள் லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் இடையே ஒரு தொடர்ச்சி என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். [29]

ஜனவரி 4, 1958 இன் நியூஸ் லெட்டர், கிளிஃவ் சுலோட்டரை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட ஆசிரியர் குழுவை நிறுவுவதாக அறிவித்தது. லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலாளராக பணியாற்றிய சுலோட்டர், உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகினார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கென்யாவில் கிகுயூ மக்களின் போராட்டத்தின் பின்னணியில், நியூஸ் லெட்டரில் வெளியீட்டிற்காக சுலோட்டர் எழுதிய முதல் கட்டுரைகள் பிப்ரவரி 1958 இல் வெளிவந்தது.

கிளிஃவ் சுலோட்டர்

1956 நெருக்கடியின் விளைவாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தற்கு வென்றெடுக்கப்பட்ட பல கம்யூனிஸ்ட் கட்சி புத்திஜீவிகளில், சுலோட்டர் மார்க்சிசத்தை தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர போராட்டத்தின் ஒரு கருவியாக கருதுவதில் மிகவும் கோட்பாட்டளவில் உறுதியாகவும் ஆழமாகவும் இருந்தார்.

தொழிலாள வர்க்கத்தில் போராட்டம்

நியூஸ் லெட்டர் மே 1958 இல் அதன் முதல் நாள் விழாவைக் கொண்டாடியபொழுது, அது பல வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவு செய்திகளைப் பெற்றது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு, பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் இடது பிரிவுக்குள் இருந்த அதன் பல எதிரிகளால் கூட ஒப்புக்கொள்ளப்பட்டது. இடது ட்ரிப்யூன் குழுவின் தலைவர் மைக்கல் ஃபூட் எழுதினார்:

21 வயதான ட்ரிப்யூனிலிருந்து ஒரு வயது நிரம்பிய நியூஸ் லெட்டருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தொழிலாளர் இயக்கத்தின் தேவைகளில் ஒன்று, சோசலிசத்தை அடைவதற்கான சரியான மூலோபாயம் பற்றிய விவாதத்தில் பெரும் அதிகரிப்பு இருக்க வேண்டும் என்பதாகும்.

நியூஸ் லெட்டர் இந்த விவாதத்திற்கு ஒரு தனித்துவமான பங்களிப்பைச் செய்கிறது, மேலும் அது இன்னும் பரந்த விநியோகத்தைப் பெறும் என்று நம்புகிறேன். [30]

கம்யூனிச எதிர்ப்பு சூனிய வேட்டைக்காரர்களால் துன்புறுத்தப்பட்ட அமெரிக்க நாவலாசிரியர் ஹோவர்ட் ஃபாஸ்ட்டும் (Howard Fast) தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது சிறந்த படைப்புகளில் ஃப்ரீடம் ரோடு, சிட்டிசன் டாம் பெயின் மற்றும் ஸ்பார்டகஸ் ஆகியவை அடங்கும் (இது, ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய 1960 திரைப்படத்தை ஊக்குவித்தது). 1956 இல் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முறித்துக் கொண்ட அவர், இலண்டனில் ஹீலியைச் சந்தித்து, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு பற்றி கலந்துரையாடினார். நான்காம் அகிலத்தால் நடத்தப்பட்ட போராட்டத்திற்கான எழுத்தாளரின் மரியாதை நியூஸ் லெட்டருக்கான அவரது செய்தியில் வெளிப்பாட்டைக் காண்கிறது: “இந்த வெளியீட்டின் ஆண்டுவிழாவிற்கு உங்களுக்கு என்னுடைய சிறந்த மற்றும் அன்பான வாழ்த்துகள். எல்லாவற்றையும் உங்களுடன் நான் நேருக்குநேர் கண்ணால் பார்க்கிறேனா என்பது கேள்வி அல்ல; குறைந்தபட்ச உடன்பாட்டின் அடிப்படை இருந்தால் நான் நிறைய விஷயங்களை ஆதரிக்கிறேன்; சமாதானத்திற்கான போராட்டத்தையும் மனித ஒழுக்கத்தின் மற்ற அனைத்து பகுதிகளையும் முன்னரே தனதாக்கும் உரிமையை கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீங்கள் மறுக்கிறீர்கள் என்பதே உங்களின் முக்கியத்துவமாக இருக்கிறது. [31]

ஸ்ராலினிசத்திற்கு எதிராக பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நடத்திய போராட்டம் தொழிலாள வர்க்க இயக்கத்தில் அவர்களின் தலையீட்டை வலுப்படுத்தியது. ஸ்ராலினிசத்தின் குற்றகரமான பங்கை அம்பலப்படுத்துவது என்பது, பிரிட்டன் மற்றும் சர்வதேச அளவில், பிற்போக்குத்தனமான தொழிலாளர் அதிகாரத்துவங்களின் ஆதிக்கத்தை வென்று வருவதற்கான பரந்த போராட்டத்தின் இன்றியமையாத ஆனால் தனிமைப்படுத்தப்படாத கூறாகும். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியச் செய்த முக்கிய முகமை, தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க காங்கிரஸ் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்கள் ஆகும். இந்த அரசியல் சூழலில், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்கு, ஒன்றிணைந்த அதிகாரத்துவங்களுக்கு எதிராக பெருகிய முறையில் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகும்.

வளர்ந்துவரும் சாமானிய தொழிலாளர் அணிகளுடைய இயக்கத்திற்கு போர்க்குணம் கொண்ட நடைமுறைத் தலைமை மற்றும் அரசியல் திசைவழியை வழங்க நியூஸ் லெட்டர் 1958 ஆம் ஆண்டு முழுவதும் தீவிரமாக தலையீடு செய்தது. குறிப்பாக குறிப்பிடத்தக்க தலையீடு போட்டித் தொழிற்சங்கமான 'ப்ளூ யூனியன்' (Blue Union), வலிமையான போக்குவரத்து மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் (TGWU) கட்டுப்பாட்டிற்கு வெளியே நின்ற மற்றும் போர்க்குணத்திற்குப் பேர்பெற்றிருந்த, தேசிய ஒருங்கிணைந்த ஸ்டீவெடோர்ஸ் மற்றும் டோக்கர்ஸ் (NASD) க்கு நியூஸ் லெட்டரால் ஆதரவு வழங்கப்பட்டது. NASD க்கு உறுப்பினர்களை இழந்த TGWU, ப்ளூ தொழிற்சங்கத்தினருக்கு வேலை கிடைப்பதைத் தடுக்க முயன்றது, உத்தியோகபூர்வ தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லாத ஒரு தொழிலாளி 'தொழிற்சங்கவாதி அல்ல' என்று அறிவித்தது. ஜனவரி 1958 இன் பிற்பகுதியில், லிவர்பூலில் 'மெர்சிசைட்' இல் TGWU இன் கீழ்மட்ட அணி உறுப்பினர்கள் உட்பட, 9,000 க்கும் மேற்பட்ட துறைமுகத் தொழிலாளர்கள் 'ப்ளூ யூனியன்' உறுப்பினர்களைப் பாதுகாக்க வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 'ப்ளூ யூனியன்' மீதான தாக்குதல்களை எதிர்த்து, தங்கள் சம்பளத்தை வழங்குவதற்கு பங்களித்த தொழிலாளர்களை மட்டுமே TGWU அதிகாரிகள் தொழிற்சங்கவாதிகளாகக் கருத முடியுமெனக் கூறுகிறார்களா என்று நியூஸ் லெட்டர் கேட்டது.

வேலைநிறுத்தத்திற்குப் பின் உடனடியாக லேபர் ரிவியூவில் வெளியிடப்பட்ட 'ப்ளூ யூனியனின்' போராட்டம் பற்றிய மதிப்பீட்டில், லிவர்பூலில் தீவிரமாக செயல்பட்ட மன்றத்தின் மூத்த உறுப்பினர் பில் ஹண்டர் (Bill Hunter) எழுதினார்:

சந்தேகத்திற்கு இடமின்றி வடக்கு துறைமுகங்களில் 'ப்ளூ யூனியன்' இயக்கம் ஒரு முற்போக்கான வளர்ச்சியாகும். இன்று தொழிற்சங்க இயக்கத்தின் மிகப் பெரிய பணி சாமானிய தொழிலாளர் அணிகளை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகும். தொழிற்சங்க கட்டமைப்பில் எழுச்சிகள் இல்லாமல் மற்றும் வெடிக்கும் அசைவுகள் இல்லாமல் இது நடக்கும் என்று நம்புவது முட்டாள்தனமாக இருக்கும்.

பிரிட்டனில் அதிக அதிகாரத்துவம் மற்றும் பெரும்பாலும் ஊழல் நிறைந்த தொழிற்சங்கங்களில், சாமானிய தொழிலாளர் அணிகளில் “ஜனநாயகம்” என்பது, அவர்கள் இருக்கும் முதலாளித்துவ சமுதாயத்தில் ஜனநாயகம் போன்று, பெரும்பாலும் விலையுயர்ந்த கேலிப்பொருளாக இருக்கிறது. ஜனநாயகம் என்பது வெறுமனே வாக்குப்பதிவு, தீர்மானங்கள் மற்றும் தலைவர்களிடையே மன மாற்றத்திற்கான அறிவொளிக்கான காத்திருப்பு பற்றிய பிரச்சினை அல்ல.

அதிகாரத்துவ எந்திரம் உறுப்பினர்களின் ஊழியராக இருப்பதை நிறுத்திவிட்டால், அது அந்தஸ்துக்கு மேலான எஜமானராக தன்னைப் பாதுகாத்துக் கொண்டால், தேர்தல்களை விட 'நியமனங்கள்' முறையால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, அது போராளிகள் மற்றும் குழுக்களைத் தொடர்ந்து அடித்தால், வெளியேற்றங்கள் தவிர்க்க முடியாதது. எனவே தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைமை ஆகிய இரண்டிற்கும் எதிராகப் போராட வேண்டிய போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை. மேலும், சரியான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்க உறுப்பினர்களின் பெரிய குழுக்கள், அனைத்து தொழிலாளர்களின் முன்முயற்சியானது, தங்கள் நலன்களைப் பாதுகாப்பதில் தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் அனைத்து முயற்சிகளும், கட்டுப்படுத்தப்படும், திசை திருப்பப்படும் அல்லது வெறுமனே அடக்கி வைக்கும் தொழிற்சங்க 'சிறை இல்லம்' ஆனதில் இருந்து முறித்துக்கொள்ள முயற்சிப்பதாக இருக்கும். [32]

ஹன்டரின் கட்டுரை 63 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது, அந்த நேரத்தில் தொழிற்சங்கங்கள், தற்போதைய பிற்போக்குத்தன சீரழிவுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட தொழிலாளர்களின் ஜனநாயகம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் கோட்டைகளாகத் தோன்றலாம். ஆனால் அப்போதும் கூட, பிளேயரின் கீழ் தாட்சரிசம் தொழிற் கட்சி மற்றும் TUC யின் உத்தியோகபூர்வ மதமாக மாறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பழைய அதிகாரத்துவ கட்டமைப்புகளுக்கு எதிராக ஒரு சாமானிய தொழிலாளர் அணிகளின் எழுச்சியின் வளர்ச்சியை நோக்கி தங்கள் பணியை வழிநடத்தினர்.

தொழிலாளர்களின் போராட்டங்களில் அதன் தலையீடுகளின் விளைவாக ஏற்பட்ட முன்னேற்றங்களின் அடிப்படையில், நியூஸ் லெட்டர் லண்டனில் ஒரு தேசிய தொழில்துறை சாமானிய உறுப்பினர்களின் மாநாட்டுக்கான (national industrial rank-and-file conference) அழைப்பை விடுத்தது. சூனிய வேட்டை மற்றும் தடைகளின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், நவம்பர் 16, 1958 அன்று நடைபெற்ற மாநாட்டில் 500 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேராளர்கள் அபரிமிதப் பெரும்பான்மையால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர், இதில் பெரிய தொழிற்துறைகளை முன்னாள் உரிமையாளர்களுக்கு இழப்பீடு இல்லாமல் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதற்கான அழைப்பு விட்டதும் உள்ளடங்கும்.

மாநாட்டில் சுலோட்டர் தனது உரையில், சமீபத்திய இனக் கலவரங்களின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்தார் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மைக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குற்றம் சாட்டும் முயற்சிகளைக் கண்டனம் செய்தார்:

இந்த நாட்டில் 200,000 வேறுநிறத்தவர் உள்ளனர், அவர்களில் 70,000 முதல் 80,000 பேர் வேலை செய்யும் தொழிலாளர்கள். ஆனால் 500,000 அல்லது அதற்கு மேற்பட்ட வேலையில்லாதவர்கள் உள்ளனர் மற்றும் இந்த எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 38,000 ஆக அதிகரித்து வருகிறது.

இனக் கலவரங்கள், வேறுநிறத்து மக்களை ஒரு திசைதிருப்பலாக பயன்படுத்துவதற்கு விரும்புவதே வேலையிலமர்த்தும் வர்க்கத்தின் நோக்கம் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

இனப் பாகுபாடுகளுக்கான அடிப்படை நமது சமூக அமைப்பில் உள்ளது. மலாயா, கொரியா மற்றும் சைப்ரஸ் ஆகியவற்றில் உள்ள வேற்றுநிற மக்களுக்கு எதிராக, அந்த மக்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறாமல் நீங்கள் இளம் வீரர்களை போர் செய்ய அனுப்ப முடியாது. ஏகாதிபத்தியம் தான் இன பாரபட்சத்திற்கு மூல காரணம். …

சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு பழமொழியைக் கொண்டுள்ளனர்: 'நாங்கள் கீழே இறங்கும்போது நாங்கள் அனைவரும் ஒரே நிறத்தில் இருக்கிறோம்.' இது வேலையின்மைக்கும் பொருந்தும். உதவி பெறும் நிலையில் அனைவரும் ஒரே நிறம்.

இறுதிப் பகுப்பாய்வில் ஏகாதிபத்தியத்தின் தோல்வி மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும், அதனுடன் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். [33]

முதலாளித்துவ பத்திரிகை, தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம், மற்றும், நிச்சயமாக, கம்யூனிஸ்ட் கட்சியில் எஞ்சி இருந்தவர்கள், நவம்பர் 16 நியூஸ் லெட்டர் மாநாட்டின் வெற்றிக்கு ட்ரொட்ஸ்கிச விரோத பிரச்சாரத்தால் பதில்கொடுத்தனர். 'ரெட் மன்றம் அம்பலமானது', 'நீங்கள் கண்காணிக்க வேண்டிய ஆண்கள்,' 'அவர்களின் குறிக்கோள் அதிக வேலைநிறுத்தங்கள்,' '600 சதி 24 மணி நேர வேலைநிறுத்தம்,' மற்றும் 'ரெட் மன்ற ஆண்கள் ஒரு இரகசிய மாநாட்டை நடத்துகிறார்கள்' போன்ற தலைப்புகள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவந்தன. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் 1959 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவை உருவாக்க அனைத்து முக்கிய தொழில்துறை மையங்களிலும் கூட்டங்கள் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்தனர். 'நியூஸ் லெட்டர் நம்புவது போல், ஒரு சோசலிச பதாகையின் கீழ் தொழிற்சங்கவாதிகளின் அடிமட்ட அணிகளை அரசியல் நடவடிக்கைகளுக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்புக்கு பரவலான ஆதரவு இருந்தால், இந்த கூட்டங்கள் அதன் தொடக்கத்திற்கு அடித்தளமாக அமையும்.' [34]

நியூஸ்லெட்டரின் டிசம்பர் 6, 1958 இதழ். அடிமட்ட அணிகளின் தேசிய மாநாட்டைத் தொடர்ந்து, செய்தித்தாளுக்கு எதிராக தொடங்கப்பட்ட சூனிய வேட்டைக்கு ஜெர்ரி ஹீலி அளித்த பதிலும் அதில் அடங்கும்

அதே இதழில் வெளியிடப்பட்ட திட்டமிட்ட கூட்டங்கள் குறித்த மற்றொரு அறிக்கையில் (கிளிஃவ் சுலோட்டர் உட்பட ஆசிரியர் குழுவின் உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டது), நியூஸ் லெட்டர் அறிவித்தது, “எம்மைப் பொறுத்தவரை, போராளிகளின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு ஏற்ப தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவ, சாமானிய தொழிலாளர் அணிகளின் அமைப்பின் ஏதோ ஒரு வடிவம் கட்டாயமானதாக ஆகும்பொழுது, அதற்கான நேரம் வேகமாக நெருங்கி வருவதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். [35]

சோசலிச தொழிலாளர் கழகத்தை ஸ்தாபித்தல்

சோசலிச தொழிலாளர் கழகத்தை (SLL) ஸ்தாபிப்பதற்கான முடிவு பிப்ரவரி 28, 1959 இன் நியூஸ் லெட்டர் வெளியீட்டில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. புதிய அமைப்பின் நோக்கங்களை ஆசிரியர் குழு விளக்கியது:

சோசலிசத் தொழிலாளர் கழகம் தொழிற்சங்கப் போராளிகளை ஒரு சோசலிசப் பதாகையின் கீழ் அரசியல் நடவடிக்கைக்கு கொண்டு வர முயற்சிக்கும்.

தொழிலாளர்களின் பணிநீக்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான போராட்டங்களில் வெற்றிபெறவும், அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கருத்துக்களை தொழிற் கட்சியின் இதயத்தில் கொண்டு வரவும் இது உதவும்.

இது, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய வலதுசாரி தலைவர்களுக்குப் பதிலாக சோசலிசக் கொள்கைகள் மற்றும் சோசலிச வேலைத்திட்டத்திற்கு உறுதியளித்த தலைவர்களைக் கொண்டு மாற்ற முயற்சிக்கும்.

இது, தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் போராளித் தொழிலாளர்கள் மீதான சூனிய வேட்டைக்கு எதிராகப் போராடும். [36]

அந்த அறிக்கை, 'அரசியல் மற்றும் தொழில்துறை இரண்டிலும், டோரிகளை ஒரேயடியாக வெளியேற்றுவதற்காக முழு தொழிலாளர் இயக்கமும் அணிதிரட்டப்பட வேண்டும்' என்று அழைப்பு விடுத்தது. அது தொடர்ந்தது: 'எங்கள் எல்லைகள் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. நாம் முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம். [37] சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை, அறிக்கை அறிவித்தது:

காலனிகள் மற்றும் அரை காலனிகளில் இருந்து பிரிட்டிஷ் துருப்புக்களை திரும்பப் பெறுதல், அணுக்கரு இணைவு குண்டுகள் மற்றும் ஏவுகணை தள கட்டுமானம் ஆகியவற்றை முடக்குதல் மற்றும் எல்லா இடங்களிலும் ஹைட்ரஜன் குண்டுகள் உற்பத்தியை முடிவுக்குக் கொண்டுவரல் மற்றும் சோசலிசத்திற்கு முன்னோக்கிச் செல்லலுக்கு உலக தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தின் ஒரு சோசலிச வேண்டுகோளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். [38]

சோசலிச தொழிலாளர் கழகத்தை நிறுவுவதை நியூஸ் லெட்டர் அறிவிக்கிறது

நியூஸ் லெட்டர் கணித்திருந்தவாறு, தொழிற் கட்சி, முதலாளித்துவ பத்திரிகை மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் SLL உருவாவதற்கு ஒரு மோசமான எதிர்த் தாக்குதல் மூலம் பதிலளித்தனர். அமைப்புக்குள் சோசலிச அரசியலுக்கான போராட்டத்தைத் தொடர்வதற்கான உரிமையைப் பெறுவதற்காக தொழிற் கட்சியில் சேருவதற்கான SLL - இன் முறையான விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்பட்டது. மாறாக, தொழிற் கட்சி SLL -க்கு எதிராக ஒரு பொருந்தாத தீர்மானத்தை நிறைவேற்றி, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைக்கப்படும் அனைத்து உறுப்பினர்களையும் வெளியேற்றும் முயற்சிகளை முடுக்கிவிட்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு தேர்வை எதிர்கொண்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன் இருந்த தேர்வு ஒன்றில் சமூக ஜனநாயக அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிந்து SLL ஐ கலைக்க வேண்டும் - அதன் மூலம் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடையே புரட்சிகர நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் அல்லது தொழிற் கட்சி அதிகாரத்துவத்தை மீறி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்பலை வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும்.

1947 முதல் அசாதாரண பொறுமையுடன் மேற்கொள்ளப்பட்ட தொழிற் கட்சிக்குள் உள்ள கன்னை வேலை ஹீலிக்கு எப்போதும் ஒரு தந்திரோபாயமாக இருந்தது. அதுபோல, உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் போராட்டங்களில் சுயாதீனமாக தலையிட முடியாத நிலைக்கு அது குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படாத வரை அது நியாயப்படுத்தப்பட்டது. துல்லியமாக இந்தக் காரணத்திற்காகவே அவற்றின் முந்தைய வடிவத்தில் அது நடைமுறைப்படுத்திய நுழைவு தந்திரோபாயங்கள் 1950 களின் இறுதியில் தீர்ந்துவிட்டிருந்தன. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தீவிர நடைமுறை ஈடுபாடு, தவிர்க்க முடியாமல் தொழிற் கட்சி மற்றும் TUC உடன் மோதலுக்கு வழிவகுத்தது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வர்க்கப் போராட்டங்களில் அவர்களின் தலையீடுளை, சாத்தியமான அளவுக்கு வளர்த்தெடுத்து விரிவாக்க வேண்டுமா அல்லது அதற்குப் பதிலாக, தொழிற் கட்சியின் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் ஒரு செயலற்ற, முற்றிலும் பிரச்சாரகராக இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டுமா என இவற்றுக்கு இடையில் தேர்ந்தெடுக்கவேண்டி இருந்தது. அவர்கள் முதல் தீர்வைத் தேர்ந்தெடுத்தனர்.

எனினும், இது தொழிற் கட்சிக்குள் தலையீடுகளை கைவிடுவதை அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, SLL இன் உருவாக்கம் உண்மையில் தொழிற் கட்சிக்குள் மிகவும் போர்க்குணமிக்க கூறுகளிடையே அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியது. SLL தடை செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், தொழிற் கட்சியின் 'இளம் சோசலிஸ்டுகளின்' தேசியக் குழுவில் பெரும்பான்மையான இடங்களை SLL கட்டுப்படுத்தியது மேலும் அதன் செய்தித்தாளான கீப் லெஃப்ட் (Keep Left) நிர்வாகத்தின் மீதான கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது.

'வெரோனாவின் சுவர்கள் இல்லாமல் உலகம் இல்லை' என்று ரோமியோ தனது நாடுகடத்தப்பட்டதை அறிந்ததும் புலம்பினார். பப்லோவாதிகள் மற்றும் பிற ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பு போக்குகளின் கடைகெட்ட சந்தர்ப்பவாதிகளுக்கு, தொழிற் கட்சியின் சோசலிச எதிர்ப்பு அரண்களுக்கு வெளியே மக்கள் இல்லை. மக்களின் அழுத்தத்தின் கீழ் வலதுசாரி அதிகாரத்துவங்களின் புரட்சிகர மாற்றத்தைப் பற்றிய தனது வழிகாட்டியின் கருத்துக்களைப் பற்றிக்கொண்ட பப்லோவாத டெட் கிராண்டிற்கு, தொழிற் கட்சியுடன் முறித்துக் கொள்ளும் நேரம் ஒருபோதும் வரவில்லை. தந்திரோபாயம் ஒரு மூலோபாயமாக மாறியது, மற்றும் மூலோபாயம் ஒரு வாழ்க்கை முறையாக மாறியது. அடுத்தடுத்த தசாப்தங்களில் -வில்சன், கலகன், டோட்ரிங் ஃபூட், கின்னாக், பிளேயர் மற்றும் பிரவுண் ஆகியோரின் ஆட்சி வரை- கிராண்ட் 2008 இல் 93 வயதில் அவர் இறக்கும் வரை, தொழிற் கட்சி வாதிகளில் மிகவும் விசுவாசமானவராகவும் உறுதியானவராகவும் தன்னைத்தானே நிரூபித்துக்கொண்டார்.

டெட் கிராண்ட்

சோசலிச தொழிலாளர் கழகத்தை நிறுவுவதாக அறிவித்த லேபர் ரிவியூ இதழ், கிளிஃவ் சுலோட்டர் அதன் இணை ஆசிரியராக (ஜான் டானியல்ஸுடன்) பணியாற்றிய முதல் இதழாக இருந்தது. SLL இன் தத்துவார்த்த ஏடாக லேபர் ரிவியூ வின் பணி, பிரிட்டிஷ் புரட்சியை நிறைவேற்ற, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்க, ஒரு தலைமுறை தொழிலாள வர்க்க போராளிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கும் கல்வியூட்டலை விடக் குறைவானது அல்ல” என்று ஆசிரிய தலையங்க அறிக்கை கூறியது. [39]

சுலோட்டரும் இந்த இதழுக்கு, 'புரட்சியும் வர்க்க நனவும்' என்ற ஒரு முக்கிய கட்டுரையைப் பங்களிப்புச் செய்தார், இது பல கோட்பாட்டு சிக்கல்களை எழுப்பியது மற்றும் 1961-63 இல் பப்லோவாதிகள் உடனான மறு ஐக்கியம் தொடர்பாக அனைத்துலகக் குழுவிற்குள் எழுந்த போராட்டத்தின் போது அவரது எழுத்துக்களில் வளர்த்தெடுக்கப்படவும் பாதுகாக்கப்படவும் இருந்த பல தத்துவார்த்தப் பிரச்சினைகளை எழுப்பியது.

1959 மற்றும் 1964 க்கு இடையில் சுலோட்டரின் தத்துவார்த்தப் பணியின் மையமாக இருந்த மார்க்சிசத்தின் முக்கியமான சாதனை, வரலாற்றின் இயங்கியல் சடவாத கருத்துரு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை அது உறுதிப்படுத்துவதாகும். எனவே, மார்க்சிஸ்டுகளின் மையப் பணி, நவீன சமுதாயத்தில் தொழிலாள வர்க்கம் முதன்மை புரட்சியாளர் என்பதை வெளிப்படையாக மறுக்கும் அளவிற்கு கேள்விக்குள்ளாக்கும் அனைத்து வகையான மார்க்சிச எதிர்ப்பு திருத்தல்வாதத்திற்கு எதிராகவும், இந்த வெற்றியை தத்துவம் மற்றும் நடைமுறை இரண்டிலும், பாதுகாப்பது ஆகும். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தின் மீதான சுலோட்டரின் வலியுறுத்தலானது, புரட்சிகர வர்க்க நனவின் வளர்ச்சியில் ஒரு தீவிரமான மற்றும் இன்றியமையாத சக்தியாக இருந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடைமுறை பற்றிய பிரச்சினையுடன் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது.

1956 நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட இடது அரசியல் எழுச்சிகளுடன் வர்க்க நனவு பற்றிய விவாதத்தில் எழுப்பப்பட்ட தத்துவார்த்த சிக்கல்களை தொடர்புபடுத்தி சுலோட்டர் தனது கட்டுரையைத் தொடங்கினார்:

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மார்க்சிஸ்டுகள் தங்கள் அடிப்படை அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது, மேலும் மார்க்சிச தத்துவத்தின் புரிதல் ஒருவேளை பிந்தைய நாள் 'கம்யூனிசம்' மீதான விசுவாசத்தால் சிதைந்திருக்கலாம் என்பதை உணர்ந்தனர். இதற்காக தேவைப்படும் சிறந்த வார்த்தை இல்லாததால் இங்கே 'ஸ்ராலினிசம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் கட்டுரையின் நோக்கம், மார்க்சிசத்தின் அனைத்து திருத்தல்வாதிகளின் முக்கிய இலக்காக இருக்கும் கருத்துருவின் வேருக்கு - தொழிலாள வர்க்கப் புரட்சி மற்றும் தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கு செல்வதாகும்: ஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வகையில், சோசலிச இயக்கத்தில் உள்ள 'புதிய சிந்தனையாளர்கள்' மற்றும் வெளிப்புற விமர்சகர்கள் அனைவரும், முதலாளித்துவ அமைப்பில் தொழிலாள வர்க்கம் மட்டுமே புரட்சிகர சக்தி என்றும் வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கிய முதல் படியாக அது கண்டிப்பாக அதன் சொந்த சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் என்ற மார்க்சிச கருதுகோளை கேள்விக்குள்ளாக்குகின்றனர். தொழிலாளர் வர்க்கத்திற்கு புரட்சி இனி சாத்தியமில்லை அல்லது அவசியமில்லாத வகையில் முதலாளித்துவம் மாறிவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். மற்றவர்கள் நவம்பர் 1917 ரஷ்யாவில் ஒரு புரட்சி நடந்தபோது, சோசலிசத்தின் எதிர்மறையான, ஒடுக்குமுறை மற்றும் மிருகத்தனமான சர்வாதிகாரத்தின் எழுச்சி, பொதுவாக சோசலிசத்தின் மறுப்பை தொழிலாள வர்க்கத்தால் தடுக்க முடியவில்லை என்பதை அனுபவம் நிரூபித்துள்ளது என்று கூறுகிறார்கள். [40]

போல்ஷிவிக் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட தோல்விகளின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகர வரலாற்றுப் பாத்திரத்தை இழந்துவிட்டது, புரட்சிகர செயலுக்கான இன்னொரு கருப்பொருளைக் கண்டாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்த, திசைதிருப்பப்பட்ட மற்றும் மனச்சோர்வடைந்த இடதுசாரி புத்திஜீவிகளுக்கு சுலோட்டர் தெளிவாக பதிலளித்தார். ஹேர்பர்ட் மார்கூஸ (Herbert Marcuse) வின் எழுத்துக்கள் தொழிலாள வர்க்கத்தை நிராகரிப்பதை எடுத்துக்காட்டுகின்றன, ஆனால் அவர் தனியாக இல்லை. ஃபிரான்ட்ஸ் ஃபனோன் (Frantz Fanon) இன் பூமியின் அவல நிலை தொழிலாள வர்க்கத்தின் மிக சக்திவாய்ந்த பிரிவுகளுக்கு இடமாக இருந்த ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து சாத்தியமான புரட்சிகர எழுச்சிகளின் இருப்பிடத்தை நகர்த்துகிறது. தொழிலாள வர்க்கத்தை நோக்கிய குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகளின் தீவிர ஐயுறவாதம் தீவிர சமூக சமூகவியலாளர் சி. ரைட் மில்ஸ் (C. Wright Mills) “நியூ லெப்ட்-க்கு கடிதம்” என்பதில், “மாற்றத்திற்கான வரலாற்று முகமை” மார்க்சிசம் அல்லாத அர்த்தத்தில் மறுவேலை செய்யப்பட வேண்டும் என்று தொகுத்துக் கூறப்படுகையில் வெளிப்படையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பிற்கெதிராக, இப்போது நிற்கும் வரலாற்றுச் சான்றுகளை எதிர்கொள்கையில், புதிய இடதுசாரி தத்துவார்த்தவியலார் 'முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் 'தொழிலாள வர்க்கத்தை' ஒரு வரலாற்று முகமையாக அல்லது மிகவும் முக்கியமான முகமையாகவும் வலுவாகப் பற்றிக்கொள்வது அறிவுக்கொவ்வாதது என்று அவர் கருதினார். மில்ஸ் “அடிப்படையில் யதார்த்தம் இல்லா அருவ தத்துவமான ஒரு தொழிலாளர்” 'விக்டோரியன் மார்க்சிசத்திலிருந்து ஒரு மரபு' என்று பண்பிட்டது, இப்போது முற்றிலும் யதார்த்தமற்றதாக இருக்கிறது. [41]

எழுத்தாளர் சவுல் லாண்டவுடன் சி. ரைட் மில்ஸ் (Wikimedia Commons) [Photo by Institute for Policy Studies / CC BY 2.0]

'புதிய இடது' க்கு ஈர்க்கப்பட்ட குழப்பமான புத்திஜீவிகளுக்கு மட்டும் சுலோட்டர் பதிலளிக்கவில்லை. கல்வியியல் புத்திஜீவிகளுக்குள் புழக்கத்தில் இருக்கும் பின்தங்கிய மார்க்சிச எதிர்ப்பு கருத்துக்கள் பப்லோவாத போக்குகளின் எதிரொலியாக இருப்பதை அவர் நன்கு அறிவார், அவை குட்டி முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் சரணடைவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டன.

சுலோட்டரின் கட்டுரை மார்க்சிச சிந்தனையின் வரலாற்று வளர்ச்சியைக் கவனமாக பரிசீலனை செய்தது, தத்துவார்த்தப் பகுப்பாய்வு மற்றும் புறநிலை சமூக செயல்முறையின் பரஸ்பர தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்தது. அவர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பாகக் கவனம் செலுத்தினார்:

வரலாற்று முக்கியத்துவத்திற்கு இணையாக இல்லாத இந்த ஆவணத்தில், வர்க்கப் போராட்டத்தின் கருத்துக்கள், சமூகத்தின் பொருளாதார அமைப்பு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கு, முதலாளித்துவத்தின் தேவையான சுய அழிவு மற்றும் இயங்கியல் முறை ஆகியவை அவற்றின் எளிமை மற்றும் முதிர்ச்சியில் வியக்க வைக்கின்றன. பலர் சோசலிசத்தை முதன்முதலில் சந்திக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை படித்து, அதை இன்னும் ஒரு துண்டுப்பிரசுரமாகவே கருதுகின்றனர். ஆயினும், இது மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் மிக முழுமையான படைப்பாகும், அதன் பின்னணியில் அவர்களின் பிற்கால வேலைகள் அனைத்தும் விளக்கப்பட வேண்டும். [42]

கம்யூனிஸ்ட் கட்சிஅறிக்கை காலாவதியாகி விட்டது எனக் கூறுபவர்கள், பாட்டாளி வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கம் என்ற மார்க்சின் பண்பிடலைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகின்றனர்:

ஒரு புரட்சி என்பது, ஒரு வர்க்கம் தனது சொந்த நலன்களுக்காக, நிலவும் சமூகக் கட்டமைப்பைத் தூக்கியெறியும் வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். முந்தைய அனைத்துப் புரட்சிகளிலும் வெற்றி பெற்ற வர்க்கம் ஏற்கனவே இருக்கும் சமூக நிலைமைகள் முழுவதையும் தூக்கி எறியவில்லை. முதலாளித்துவ வர்க்கம் போன்ற வர்க்கங்களுக்கு அரசியல் புரட்சியின் நோக்கம், முன்பு இருந்த மேலாதிக்கம் செய்யும் முறைக்கு தங்களின் சொந்த மேலாதிக்க முறையை, ஏற்கனவே வளர்ந்திருந்த, கையகப்படுத்தல் முறையை மாற்றுவதாகும். ஆனால் முதலாளித்துவம், கூலித் தொழிலாளர் மீதான முதலாளித்துவ சுரண்டலைத் தவிர அனைத்து வகையான மேலாதிக்க முறைகளையும் அகற்றுவதற்கான தவிர்க்க முடியாத போக்கைக் கொண்டுள்ளது, இதனால் இரண்டு அடிப்படையான வர்க்கங்கள் மட்டுமே ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன. வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் தனித்துவமான பங்கிற்கு இது முக்கியமானது. அது முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் சொந்த ஒதுக்கீட்டு முறையை மாற்ற முடியாது, ஏனெனில் மூலதனத்தை ஒழிப்பதன் மூலம் அது தேவையான எதிர்நிலையான - கூலி உழைப்பை ஒழிக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் பாட்டாளி வர்க்கம் இல்லாத, சுரண்டல் இல்லாத, அரசு இல்லாத சமுதாயத்தை நோக்கி இயக்கப்படுகின்றன. [43]

சுலோட்டரின் கட்டுரை சோசலிசத்திற்கான போராட்டத்தின் முழு வரலாற்றையும் உள்ளடக்கிய ஒரு செயல்முறையில் சோசலிச தொழிலாளர் கழகத்தை நிறுவ முயன்றது. இந்த வரலாற்றின் அடிப்படையில், சுலோட்டர் தற்போதுள்ள அதிகாரத்துவ அமைப்புகளை மார்க்சிசத்திலிருந்து பிரிக்கும் இணைக்க முடியாத இடைவெளியை எடுத்துக்காட்டியது:

சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டும் மார்க்சிசத்தின் மையக் கருத்துக்களிலிருந்து விலகிவிட்டன. அவை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அனுபவத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சமூகத்தின் அனைத்து தீவிர அரசியல் பிரச்சினைகள் மற்றும் அனைத்து அடிப்படை நிறுவனங்களின் அத்தியாவசிய வர்க்க அடிப்படையை இரண்டும் மறுக்கின்றன. பாராளுமன்றம் உட்பட முதலாளித்துவ அரசு நொறுக்கப்பட வேண்டும் மற்றும் தொழிலாளர்களின் அதிகார உறுப்புகள் அதன் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இரண்டும் நிராகரிக்கின்றன. இரண்டும் உண்மையான தொழிலாள வர்க்க சர்வதேசியத்திலிருந்து விலகிவிட்டன. மக்கள் அனைவரின் நடவடிக்கை மற்றும் முன்முயற்சியைக் கண்டு மற்றெதையும் விட இரண்டும் அஞ்சுகின்றன, எனவே “தொழிலாளர் சார்பாக” செயல்படும் அதிகாரத்துவ கட்சி எந்திரங்கள் அல்லது அரசு அமைப்புகளை நிறுவுகின்றன. மார்க்சிசத்திலிருந்து இந்த ஒவ்வொரு விலகல்களும் ஏற்கனவே மார்க்ஸ் இன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் 1848 புரட்சிகள் பற்றிய அவரது எழுத்துக்களிலும் கண்டனம் செய்யப்பட்டுள்ளன. [44]

சுலோட்டரின் கட்டுரை, தற்போதுள்ள அதிகாரத்துவ அமைப்புகளை இடது பக்கம் தள்ளுவதைத் தவிர வேறு எதையும் நாடாத ஒரு கட்சியைக் கட்டமைக்க எழுதப்படவில்லை.

மே 1959 இல் திட்டமிடப்பட்ட ஒரு ஸ்தாபக மாநாட்டிற்கான தயாரிப்பில், நியூஸ் லெட்டரின் ஆசிரியர் குழு ஒரு விரிவான வேலைத்திட்ட அறிக்கையை வெளியிட்டது. அதன் தொடக்கப் பகுதியான 'சோசலிச தொழிலாளர் கழகம் என்றால் என்ன?' விளக்குவதாவது:

சோசலிச தொழிலாளர் கழகம் என்பது தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்குள் உள்ள மார்க்சிஸ்டுகளின் அமைப்பாகும், அது வர்க்கக் காட்டிக்கொடுப்பின் தற்போதைய கொள்கைகளுக்குப் பதிலாக சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தங்களை சோசலிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் மற்றவர்களிடமிருந்து வேறுபடும் வகையில் மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவத்தை நிலவும் நிலைமையில் இருந்து சீர்திருத்தவோ அல்லது அமைதியான வழிகளில் சோசலிசமாக மாற்றவோ முடியும் என்று நம்பவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அனுபவம், முதலாளித்துவ வர்க்கம் அரசு இயந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டையும் உற்பத்தி சாதனங்களின் உடைமை உரிமையையும் தக்க வைத்துக் கொள்ள, தனது முழு வலிமையையும் பயன்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.

மார்க்சிஸ்டுகள் அரச அதிகாரத்தை அடைவதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் மூலம் மட்டுமே முதலாளித்துவத்தைத் தூக்கி எறிய முடியும் என்று நம்புகிறார்கள்.

பாராளுமன்ற பெரும்பான்மையை உறுதி செய்வதன் மூலம் முதலாளித்துவத்தை அழிக்க முடியாது. தொழிலாளர் பிரதிநிதிகளால் பாராளுமன்றத்திலும் உள்ளூர் சபைகளிலும் பங்கேற்பது சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு உதவ முடியும், ஆனால் அந்தப் பிரதிநிதிகளின் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நேரடி நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே.

தற்போதைய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் தொழிற் கட்சியும் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, தொழிலாள வர்க்க அதிகாரத்தை அடைவது மற்றும் சோசலிசத்தை உருவாக்குவது என்பதில் உறுதியாக இல்லை.

சோசலிச தொழிலாளர் கழகத்தின் முக்கிய பணிகளில் ஒன்று, தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிற் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் கூட்டுச் செயல்பாடு மற்றும் அரசியல் கலந்துரையாடல் மூலம் சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய தலைமையை உருவாக்குவதற்கு உதவுவதாகும்.[45]

தொழிற் கட்சிக்குள்ளேயே இருந்த உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு எதிராகப் போராடி, உறுப்பினர் உரிமையை தொடர்ந்து கோருகையில், குறுகிய கால அமைப்பு ரீதியான பரிசீலனைகளின் நலன்களுக்காக கோட்பாடுகளுக்கான தனது போராட்டத்தை தியாகம் செய்யாது என்பதை SLL தெளிவுபடுத்தியது. தொழிற் கட்சி மற்றும் TUC அதிகாரத்துவங்களுடன் நேரடி மோதலைத் தவிர்ப்பதற்காக பல மையவாத போக்குகள் தங்களைத் தாமே இலாயக்கற்றவர்களாக்கி உள்ளன என்று அது குறிப்பிட்டது:

சோசலிச தொழிலாளர் கழகம், இத்தகைய மத்தியவாத குழுக்களின் அனுபவங்களை மீண்டும் செய்வதற்காக உருவாக்கப்படவில்லை, மாறாக இந்த புதிய காலகட்டத்தில் வலதுசாரி தலைவர்கள் மற்றும் வலதுசாரி அரசியலுக்கு எதிராக ஒரு புதிய வகையான போராட்டத்தை நடத்த வழிநடத்துவதற்காக ஆகும்.

மார்க்சிஸ்டுகளின் அமைப்பு தத்துவார்த்த கல்வி மற்றும் கொள்கை விவாதத்தின் நோக்கத்திற்காக மட்டுமல்லாமல், முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் உடனடி போராட்டங்களில் அவர்களுக்கு உதவியையும் தலைமைத்துவத்தையும் வழங்க வேண்டும்.

போக்குவரத்து, துறைமுகம், கட்டடம் மற்றும் பொறியியல் தொழில்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்டுகளும் அவர்களின் பத்திரிக்கையான நியூஸ் லெட்டரும் உதவிய விதத்தில் SLL ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் தடை செய்யப்பட்டது.

சோசலிச தொழிலாளர் கழகத்தால் முன்வைக்கப்பட்ட சீரிய மாற்று வர்க்க ஒத்துழைப்பு கொள்கைகளின் பிரதிநிதிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு என்ன பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை வலதுசாரி பார்க்கிறது.

சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் நியூஸ் லெட்டருக்கு எதிரான சூனிய வேட்டை எமது அமைப்பையும் எமது பத்திரிகையையும் அடித்து நொறுக்கும் அதன் நோக்கத்தில் வெற்றி பெறாது. உண்மையான சோசலிசக் கொள்கைக்காகப் போராடுவதும், அது அவர்களின் கடமை என்பதை ஒப்புக்கொள்வதும் மட்டுமே குற்றமாக இருக்கும் சோசலிஸ்டுகளை வெளியேற்றுவதற்கு எதிராக நாம் உறுதியான போராட்டத்தை நடத்துவோம். [46]

இந்தப் பிரகடனத்தில் 'சோசலிச தொழிலாளர் கழகத்தின் சர்வதேச முன்னோக்கு' என்ற தலைப்பில் ஒரு கணிசமான பகுதி இருந்தது, அது பின்வரும் வாக்கியத்துடன் தொடங்கியது: 'மார்க்சிஸ்டுகள் தொழிலாள வர்க்க சர்வதேசியவாதிகள்.' [47] ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தின் நிபந்தனையற்ற பாதுகாப்பிற்கான SLL இன் உறுதிப்பாட்டை இந்தப் பகுதி கூறியதுடன், ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வின் சுருக்கமான மதிப்பாய்வையும் வழங்கியது. இந்த அறிக்கையானது, 'ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரத்திற்காக அனைத்துக் காலனித்துவ மற்றும் சார்பு மக்களின் போராட்டங்களை ஆதரிப்பதாகவும் அறிவித்தது, ஆனால் பரிதாபம் காட்டுவதற்காக அல்ல, மாறாக பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு இது ஒரு பொதுவான எதிரிக்கு எதிரான பொதுவான போராட்டம் என்பதற்காக ஆகும்.” [48] SLL ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை பிரிட்டனுக்குள் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கும் போராட்டத்துடன் இணைத்தது:

பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்த மற்றும் வெள்ளைத் தொழிலாளர்களின் பொதுவான வர்க்க நலன்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிரிப்பது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமே இருக்க முடியும். எனவே அனைத்து வகையான இனவெறி பிரச்சாரம், தூண்டுதல் அல்லது வன்முறைக்கு எதிராக வெள்ளை மற்றும் கறுப்பு தொழிலாளர்களின் ஒன்றிணைந்த எதிர்ப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம். [49]

இந்த அறிவிப்பு தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் SLL இன் தலையீட்டின் தீர்க்கமான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த தலையீடு முதன்மையாக சாதாரண தொழிலாளர்களை இலக்காகக் கொண்டது மற்றும் ஆளும் வர்க்கத்தின் மோதல்களில் அவர்களின் மகத்தான போரிடும் சக்தியை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டது:

ஒரு போராளியைப் பணிநீக்கம் செய்வதன் மூலம்; அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் முழு வலிமையையும் சவால் செய்வதாக முதலாளிகள் உணர்ந்தாக வேண்டும்.

ஒன்றில் தொழிலாளர்கள் திமிர்பிடித்த முதலாளிகளுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலளிப்பார்கள், அல்லது தொழிலாள வர்க்கம் தங்கள் அமைப்பையும் அதன் தேட்டங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதைக் காண நேரிடும்.

ஆனால் ஒவ்வொரு வேலைநிறுத்தத்துடனும் தாக்குதலைத் தொடங்கும் இந்த இலக்குக்கு, ஒரு தீர்க்கமான வெற்றியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு சர்ச்சையையும் வழிநடத்தும், திறமையான, முழுமையான மற்றும் நனவான தயாரிப்பு தேவைப்படுகிறது.

மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் நம்பிக்கைக்குரிய போராளிகள் மற்றும் உள்ளூர், பிராந்திய மற்றும் இறுதியாக தேசிய அளவில் இந்தக் குழுக்களின் இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட சாமானிய அணியின் தொழிலாளர் குழுக்களை நிறுவுவது முடிந்தவரை அனைத்துத் தொழில்துறைகளிலும் ஊக்குவிக்கப்பட்டாக வேண்டும்.

தொழிலாளர்கள் அவர்களால் கட்டமைக்கப்பட்ட சாமானிய அணியின் குழுக்களில், அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கும்போது, தொழிலாள வர்க்கம் பெரும் தொழில்துறை போராட்டங்களுக்குத் தயாராகும் அனைத்து வழிகளையும் கொள்ளும். [50]

சாமானிய தொழிலாளர் அணிகளின் மூலோபாயத்தின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து வந்த பகுதியானது, 'ஒரு மார்க்சிசவாதியாக இருப்பதன் அர்த்தம் என்ன” என்று தலைப்பிடப்பட்டது:

அனைத்து தொழிலாளர்களிலும் மார்க்சிஸ்டுகள் மிகுந்த நனவுடையவர்கள். அவர்கள் சோசலிசம் அல்லது அதனை அடைவதற்கான போராட்டத்தை ஒரு இலட்சியவாத வழியில் பார்க்கவில்லை, மாறாக ஒரு விஞ்ஞானபூர்வ வழியில் பார்க்கிறார்கள்.

அவர்கள் தங்கள் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை, சமூகத்தில் செயல்படும் புறநிலை வர்க்க சக்திகளைப் பற்றிய ஆய்வு, தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நிலை மற்றும் தேவைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் கொண்டுள்ளனர். மார்க்சிசம் என்பது தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான விஞ்ஞானமாகும்.

மார்க்சிசம் ஒரு விஞ்ஞானம் என்பதால், அதை ஒரு விஞ்ஞானமாகப் படித்தாக வேண்டும். எனவே, சோசலிச தொழிலாளர் கழகம் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் முறையாகவும் முழுமையாகவும் பயிற்சி அளிக்கிறது. இது அவர்களுக்கு மார்க்சிச தத்துவம் மற்றும் அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கத்தின் அனுபவங்களைக் கற்பிக்கிறது மற்றும் இந்த அனுபவங்களிலிருந்து விதிகளையும் பாடங்களையும் அவர்களுக்குப் புகட்டுகிறது.

ஆனால் மார்க்சிசம் என்பது வெறுமனே ஒரு தத்துவம் மட்டுமல்ல, அது, எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்கப் போராட்டத்தில் முதன்மையானதும் முக்கியமானதுமான மனித நடவடிக்கையின் தத்துவம். ஒரு மார்க்சிசவாதியாக இருப்பது என்பது வெறுமனே படிப்பது மட்டுமல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் சார்பாக போராடுவதற்கும் செயற்படுவதற்கும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக படிப்பதாகும்.

ஆனால் ஒரு தனிநபராக போராடுவது போதாது. ஜனநாயக கலந்துரையாடல்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பொறுப்புள்ள தலைமை அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ், ஒழுங்குபடுத்தப்பட்ட குழுவாக மார்க்சிஸ்டுகள் போராடி, செயற்படுகிறார்கள். [51]

இந்த ஸ்தாபக அறிக்கையில், சோசலிச தொழிலாளர் கழகம் தொழிற் கட்சிக்குள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட போக்காக வேலை செய்ய விரும்புவதாக தன்னை முன்வைக்கிறது. எவ்வாறாயினும், அதன் வேலைத்திட்டமும் அதன் விளைவாக நடைமுறையும், தொழிற் கட்சி ஒரு பொருந்தாத தீர்மானத்தை ஏற்கத் தூண்டியது, இது SLL நிறுவப்பட்ட உடனேயே நடந்தேறியது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தலையிட சோசலிச தொழிலாளர் கழகத்தின் வலியுறுத்தல் - அதன் அதிகாரத்தின் முழு ஆற்றலையும் பெறும் நோக்கத்துடன், ஒவ்வொரு மோதலையும் ஒரு பரந்த தேசிய மற்றும் உலகளாவிய வர்க்கப் போரில் ஒரு சண்டையாகப் பார்க்கும், பாட்டாளி வர்க்கத்திற்குள் ஒரு வர்க்கமாக அதன் வலிமை பற்றிய விழிப்புணர்வின் வளர்ச்சி மற்றும் ஒரு புதிய சோசலிச உலக அமைப்பை உருவாக்குவதில் அதன் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய புரிதல் - அதற்கும் தொழிற் கட்சிக்கும் இடையே ஒரு பிணைக்க முடியாத இடைவெளியை உருவாக்கியது. ஆனால் தொழிற் கட்சிக்குள்ளே ஒரு போக்காக இயங்குவதை இயலாமற் செய்யும் தடைகள் இருந்தபோதிலும், சோசலிச தொழிலாளர் கழகம் அதன் முதல் மாநாட்டை மே 16-17, 1959 விடுமுறை வார இறுதியில் நடாத்தியதுடன் முன்னோக்கிச் சென்றது.

பீட்டர் ஃப்ரையர் லேபர் ரிவியூ வில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கினார்:

இலண்டனில் விட்சன்ரைட்டில் நடைபெற்ற சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஸ்தாபக மாநாடு, முப்பது வருடங்களாக மார்க்சிஸ்டுகளின் தலைமுறையை தனிமைப்படுத்தி, துன்புறுத்தலில் வைத்திருந்த கருத்துக்கள் பிரிட்டிஷ் மண்ணில் வேரூன்றியுள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. மார்க்சிச இயக்கம் வடிவம் பெற்றுள்ளது. அது முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும், வலதுசாரி மற்றும் ஸ்ராலினிச தவறான வழிகாட்டிகளுக்கும், 'புதிய சிந்தனையாளர்கள்' மற்றும் 'புதிய இடது' கும்பல்களுக்கும், பல்வேறு குறுங்குழுவாத குழுக்களுக்கும் சவால் விட்டது. ஒவ்வொரு சூனிய வேட்டை தாக்குதல், ஒவ்வொரு தடை, விலக்கிவைத்தல் மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றுக்கு சான்றாக, பணிகளைக் கொண்டதாய் இங்கே ஒரு இயக்கம் உள்ளது; வர்க்கப் போராட்டம் தீவிரமடையும் காலகட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம்; எனவே அளவு மற்றும் செல்வாக்கில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு இயக்கம் இங்கே உள்ளது. [52]

தொடரும்

குறிப்புகள்:

[17] Labour Review, January 1957, Volume 2, Number 1, p. 1.

[18] Ibid., p. 2.

[19] Ibid., pp. 2–3.

[20] Ibid., p. 29.

[21] Ibid., p. 30.

[22] Ibid., March-April 1957, Vol. 2, No. 2, p. 35.

[23] Ibid.

[24] “The Chinese C.P. and Hungary,” Michael Banda, Labour Review, March-April 1957, Vol. 2, No. 2, p. 57.

[25] Email from Barbara Slaughter to David North, July 20, 2021.

[26] The Newsletter, Vol. 1, No. 1, May 10, 1957, p. 5

[27] Ibid.,p. 4.

[28] The Newsletter, Vol. 1, No. 3, p. 21

[29] Cliff Slaughter, “Trotsky’s Marxism Under Attack,” Fourth International, August 1968, pp. 45–46.

[30] The Newsletter, May 3, 1958, p. 133.

[31] Ibid.

[32] Labour Review, “Hands off the ‘Blue Union’! Democracy on the Docks”, Volume 3, Number 1, January-February 1958.

[33] The Newsletter, November 22, 1958, p. 309.

[34] The Newsletter, January 3, 1959, p. 1.

[35] Ibid., pp. 2–3.

[36] The Newsletter, February 28, 1959, p. 1.

[37] Ibid., pp. 2–3.

[38] Ibid., p. 3.

[39] “The Challenge of the Socialist Labour League,” Labour Review, April-May 1959, Vol. 4, No. 1, p. 1.

[40] “Revolution and Class Consciousness,” Labour Review, April-May 1959, Vo. 4, No. 1, p. 5.

[41] The letter is available here.

[42] Labour Review, April-May 1959, p. 7.

[43] Ibid., p. 9.

[44] Ibid., p. 12.

[45] The Newsletter, “The Socialist Labour League Looks to the Future,” April 11, 1959, pp. 108–09.

[46] Ibid., p. 110.

[47] Ibid.

[48] Ibid., p. 111.

[49] Ibid.

[50] Ibid., p. 112.

[51] Ibid.

[52] “Marxists in Conference,” Labour Review, July-August 1959, Vol. 4, No. 2, p. 40.

Loading