The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

அத்தியாயம் 4

நிரந்தரப் புரட்சி தத்துவம் நடைமுறையில் எப்படித் தெரிகிறது?

Use this version to print Send feedback

எங்களது தந்திரோபாயமானது எங்களது தத்துவத்திலிருந்தே எடுக்கப்பட்டதென்று நாம் பார்த்தபடியே, எங்களது தத்துவம் பற்றிய அவரது விமர்சனத்தில் மேலும் றடெக் கூறினார். இது ஒரு முக்கியமான சேர்க்கை. உத்தியோகபூர்வமான ஸ்ராலினிஸ்டுகளின் "ட்ரொட்ஸ்கிசம்" பற்றிய விமர்சனத்தில், தத்துவம் பற்றிய பிரச்சனையை முன்னெச்சரிக்கையாகவே பேசாது விட்டனர்.... இருந்தபோதும் றடெக்குக்கு இது போதாதிருந்தது. சீனா பற்றிய (போல்ஷிவிக்குகளின்) திட்டவட்டமான தந்திரோபாய நிலைப்பாட்டிற்கு எதிராக அவர் போராடினார். அவர் இந்த நிலைப்பாட்டை நிரந்தரப் புரட்சித் தத்துவம் என்று சொல்லி நிந்திக்க முயன்றார். அதற்காக இந்த தத்துவத்தை பின்பற்றியதால் கடந்த காலத்தில் பிழையான தந்திரோபாய நிலைப்பாடு எடுத்ததாக காட்டவேண்டியிருந்தது அல்லது வேறு யாரோ ஏற்கனவே அதைக் காட்டினார்கள் என்று பாசாங்கு செய்ய வேண்டியிருந்தது. இங்கே றடெக் நேரடியாகவே தனது வாசகர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறார். அவர் புரட்சியிலே நேரடியாக பங்குகொள்ளாததால் அவருக்குப் புரட்சிகர வரலாற்றோடு பரீச்சயம் இல்லாதிருக்கக் கூடும். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையை ஆவணங்களிலிருந்து ஆராய ஒரு சின்ன முயற்சியையும் எடுக்கவில்லையென்று தெளிவாகத் தெரிகிறது. இவற்றின் மிக முக்கியமானவை எனது தேர்வு நூல் திரட்டின் இரண்டாம் பாகத்தில் உண்டு. அதை வாசிப்பவர்கள் அது சரியா பிழையா என்று பார்க்கலாம். 1905ம் ஆண்டு ரஷ்யாவில் சட்டவிரோதமாக தலைமறைவாகவும் 1906 ஆண்டு சிறையிலும் கழித்தபோதும் கூட முதலாவது புரட்சியின் முழுப்படி நிலைகளிலும் புரட்சிகர சக்திகளையும் அதன் அடுத்தடுத்த கடமைகளையும் மதிப்பீடு செய்வதற்கு, நான் லெனினுக்கு பூரண ஒத்தாசையாக இருந்தேன் என்று றடெக்குக்குச் சொல்லுவேன். இங்கே ஒரு குறைந்தபட்ச நிரூபணத்தையும் ஆவணத்தையும் காட்ட என்னை நானே எல்லைக்குட்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

முதலாவது போல்ஷிவிக் காங்கிரசுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு (அது மூன்றாவது கட்சிக் காங்கிரஸ் என்று வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது) 1905 பெப்ரவரியில் எழுதப்பட்டு மார்ச்சில் அச்சேறிய கட்டுரையில் நான் பின்வருமாறு எழுதினேன்:

"ஜாருக்கும் மக்களுக்கும் இடையேயான போராட்டத்தில் வெற்றியென்ற சிந்தனையை தவிர வேறு சிந்தனை இருக்க முடியாது. பூரண தேசந்தழுவிய கிளர்ச்சி எழுச்சி அப்போராட்டத்தின் உச்சக்கட்டமாகும். மக்களின், கிழடு தட்டிய எதிரிக்கெதிரான போராட்டத்தின் உச்சக்கட்ட வெற்றியாக தற்காலிக அரசாங்கம் அமையும். அத்தற்காலிக அரசாங்கம் ஜார் எதிர்ப்புரட்சி சக்திகளை நிராயுதபாணியாக்கி மக்களை ஆயுதபாணியாக்குவதோடு தேசத்திலுள்ள எல்லோருக்கும் சம உரிமையோடு கூடியதும், நேரடியானதுமான இரகசிய வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளான மக்கள் பிரதிநிதிச் சபையை ஏற்படுத்துதல்-இதுவே புரட்சியின் புறநிலைரீதியாக சுட்டிக்காட்டப்பட்ட படிநிலைகளாகும்" (தேர்வு நூல்திரட்டு, பாகம் II, பகுதி I, பாகம் 232)

அடிப்படைப் பிரச்சனைகளில் போல்ஷிவிக்குகளோடு எனது உடன்பாட்டை இனங்காண்பதற்கு 1905, மே, போல்ஷிவிக் காங்கிரசின் தீர்மானத்தோடு இந்தச் சொற்களை ஒப்புநோக்குதல் போதுமானதாகும்.

இது மாத்திரமல்ல. கிறாசின் (Krassin) உடன் இசைவுடையதாக, அந்த நாளில் நான் பீட்டர்ஸ்பேர்க்கில் எழுதிய, தற்காலிக அரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரையானது சட்டத்திற்கு விரோதமாக வெளிவந்தது. கிறாசின், போல்ஷிவிக் காங்கிரசில் அவற்றைப் பாதுகாத்தார். பின்வரும் லெனினது வாக்கியங்கள், அவர் எந்த மட்டத்திற்கு அதை ஏற்றுக்கொண்டார் என்பதை தெளிவாக்கும்:

"நான் தோழர் கிறாசினின் நிலைப்பாட்டோடு பூரண உடன்பாடுடையேன். ஒரு எழுத்தாளன் என்ற முறையில் அந்தப் பிரச்சனை பற்றிய இலக்கிய நடையில் நான் கவனம் செலுத்தியது இயற்கையானதாகும். அந்தப் போராட்ட இலக்கின் முக்கியத்துவத்தை தோழர் கிறாசின் சரியாகவே காட்டினார். அவரோடு நான் பூரண உடன்பாடுடையேன். எந்த இலக்கை அடைய வேண்டுமென்பதைக் கருத்திற் கொள்ளாமல் எவரும் போராட மாட்டார்கள். (VI பக்கம் 180) *

கிறாசினின் விசாலமான திருத்தப் பிரேரணையின் பெரும்பகுதி காங்கிரசின் தீர்மானத்திலிருந்து எடுத்ததாகும் என்று நான் வாசகர்களுக்கு கூறுவேன். அந்தப் பிரேரணைகளை எழுதியவன் நான் என்று கிறாசின் குறிப்பிலிருந்து நிரூபிக்கப்பட்டுவிட்டது. அந்தக் குறிப்பை இப்பொழுதும் நான் வைத்திருக்கிறேன். கட்சி வரலாற்றில் நிகழ்ந்த இந்த முழு நிகழ்ச்சிகளும் கமனேவுக்கும் மற்றவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

விவசாயிகளது பிரச்சனை, விவசாயிகளை தொழிலாளர் சோவியத்துகளுக்கு கிட்ட இழுக்கும் பிரச்சனை, விவசாயிகள் லீக்கை சோவியத்துக்களோடு ஐக்கியப்படுத்தும் வேலை போன்றவற்றை பீட்டர்ஸ்பேர்க் சோவியத்துக்கள் நாளாந்த கவனத்திற்கு எடுத்துச் செயல்பட்டன. சோவியத்துக்களின் தலைமை என்மேல் இருந்ததென்பது றடெக்குக்குச் சில வேளை தெரியுமோ? அந்தக் காலத்தில் புரட்சியின் தந்திரோபாயக் கடமை பற்றி நான் எழுதிய நூற்றுக்கணக்கான விடையங்களில் ஒன்று பின்வருமாறு:

"பாட்டாளிகள் நகர "சோவியத்துக்களை" உருவாக்கி நகர்ப்புற வெகுஜனங்களின் போராட்டத்தை வழிநடாத்துவதோடு அவர்களின் நாளாந்த முன்னணிக் கடமையாக இராணுவத்தோடும் விவசாயிகளோடும் கூட்டமைத்து போராடுவதற்கான ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்!" (நச்சாலோ, இலக்கம். 4, நவம்பர் 17, [புதிய கலண்டப்படி நவம்பர் 30] 1905.)

நான் சர்வாதிகாரத்திலிருந்து சோசலிசத்திற்கு "பாய்வதாக" ஒருபொழுதும் கூறவில்லை. இதை நிரூபிப்பதற்காக மேற்கோள்களை அடுக்கிக்கொண்டு போவது அலுப்புத்தட்ட வைப்பதும் சங்கடத்தை ஏற்படுத்துவதுமாகும். ஆனால் அதைச் செய்ய நான் நிர்பந்திக்கப்படுகிறேன். நான் 1906 பெப்ரவரியில், தற்காலிக அரசாங்கத்தின் கடமை பற்றி எழுதினேன். ஆனால் ஒரு போதும் ஸ்ராலினை பின்பற்றி, றடெக் அவசர அவசரமாக சீனாவில் நேற்றுச் செய்த சந்தர்ப்பவாத கொள்கையை அதீத இடதுசாரித்தனத்தால் துடைத்தெறிய முயன்றது போன்று தற்காலிக அரசாங்கம் சோவியத்துகளுக்கு ஈடாகும் என்று எழுதவில்லை.

"விடுதலையடைந்த மக்கள் தங்கள் சக்தியால் பிரதிநிதிகள் சபையை ஏற்படுத்த வேண்டும். பிரதிநிதிகள் சபையின் கடமைகள் அபாரமானது, அது ஜனநாயகக் கொள்கைகளின் பிரகாரம் ஓர் அரசை புதிதாக அமைக்க வேண்டும் அதாவது மக்களின் பரிபூரண தனித்துவத்தைப் பேணும் கொள்கையோடு, அதன் கடமைகளாவன: மக்கள் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்துவது, பெரிய மட்டத்தில் விவசாயிகள் நிலச் சீர்திருத்தத்தை செய்து முடிப்பது, எட்டு மணி நேர வேலையை ஏற்படுத்துவது, வருவாய் அளவுப் பிரமாணப்படி முற்போக்கான வருமான வரியை ஏற்படுத்துவது." (தேர்வு நூல் திரட்டு, பாகம் II,  பகுதி I, பக்கம் 349)

விசேஷமாக எப்படி சோசலிசத்தை "உடனடியாக" அறிமுகப்படுத்துவது என்று, 1905-ல் நான் ஒரு கிளர்ந்தெழவைக்கும் துண்டுப் பிரசுரத்தை எழுதினேன்.

"உடனடியாக ரஷ்யாவில் சோசலிசத்தை அறிமுகப்படுத்துவது என்பது நினைக்கக்கூடிய காரியமா? இல்லை. எமது நாட்டுப்புறம் மிக இருளில் சிக்குண்டு நனவற்றுக் கிடக்கிறது. விவசாயிகளினுள்ளே இப்போதும் மிகச் சொற்பமானவர்களே உண்மையான சோசலிஸ்ட்டுகளாக இருக்கின்றார்கள். வெகுஜனங்களை இருட்டிலே மூழ்கடித்து வைத்திருக்கும் இந்த சர்வாதிகார அரசாங்கத்தை முதலில் தூக்கியெறிய வேண்டும். கிராமப்புற வறிய விவசாயிகளை வரிச்சுமையிலிருந்து விடுதலை செய்யவேண்டும். வருவாய் அளவுப் பிரமாணத்திற்கேற்ப முற்போக்கான வருமான வரியை ஏற்படுத்த வேண்டும். சர்வவியாபகமாக கட்டாயக் கல்வியை ஏற்படுத்த வேண்டும். கடைசியாக கிராமப்புற பாட்டாளிகளையும், கிராமப்புற அரைப்பாட்டாளிகளையும் நகர்ப்புற பாட்டாளிகளோடு இரண்டற ஐக்கியப்படுத்தி தனியொரு சமூக ஜனநாயக இராணுவத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இராணுவம் மாத்திரமே மதிப்புமிக்க சோசலிசப் புரட்சியை பூரணமாக செய்து முடிக்க வல்லது." (தேர்வு நூல்திரட்டு, பாகம் II, பகுதி I, பக்கம் 228)

ஜனநாயக கட்டத்திற்கும், சோசலிச கட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நான் எப்பொழுதோ கண்டு கொண்டேன் என்பதை இது காட்டுகின்றது. றடெக், ஸ்ராலினதும் தால்மானதும் வாலில் தொங்கிக்கொண்டு இந்த விடையம் பற்றி எனக்கு போதிக்கத் தொடங்கியுள்ளார். இருபது வருடத்திற்கு முன்பு நான் எழுதினேன்:

"தங்குதடையற்ற புரட்சியை பற்றி சோசலிச பத்திரிகையில் வெளியிட்டபொழுது அதாவது சர்வாதிகாரத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் சோசலிசப் புரட்சியால் நிர்மூலமாக்கும் இந்தக் கருத்தை வெளியிட்டபொழுது, இதனோடு கூட சமூக முட்டி மோதல்களும் வெகுஜனங்களினுள்ளே ஒரு புதிய தட்டின் கிளர்ச்சியெழுச்சியும், ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அரசியல் விசேஷ சலுகைகளுக்கு எதிராக, பாட்டாளி வர்க்கத்தின் ஓயாத ஒழியாத தாக்குதல்களும் சேரவே எங்களது முற்போக்கு பத்திரிகைஏகமனதாக எரிச்சலடைந்து ஊளையிடுகின்றது" (எங்கள் புரட்சி, 1906, பக்கம் 258)*

முதலில், தங்குதடையற்ற புரட்சி என்பதன் வரைவிலக்கணத்திலுள்ள சொற்களைக் கூர்ந்து கவனிக்கும்படி கேட்பேன்: இது பல கூர்ப்படைந்த சமூக முட்டி மோதலால் வரும் சோசலிசப் புரட்சியால், மத்தியகால மனநிலையை நிர்மூலமாக்குவதை தொடுப்பதாகும். அப்படியென்றால் பாய்ச்சல் எங்கே இருக்கிறது? எங்கே ஜனநாயகக் கட்டம் தட்டிக்கழிக்கப்படுகிறது? எப்படிப் பார்த்தாலும் 1917-ல் இது இப்படி நடக்கவில்லையா?

இதற்கிடையில் "முற்போக்கு" வெளியீடானது 1905-ல் தங்குதடையற்ற புரட்சி பற்றி ஊளையிட்டதுபோல் மீண்டும் கால் நூற்றாண்டு மௌனத்திற்குப் பின்னர் அவ்விவகாரத்தில் தலையீடு செய்திருக்கின்ற தற்போதைய வாடகைக் குதிரைகளின் அரிதான முற்போக்கு ஊளையிடலுடன் ஒப்புநோக்குதல் அறிவுடமையாகாது.

அப்பொழுது நான் நிரந்தரப் புரட்சி பற்றி பிரேரித்தபொழுது, லெனினை கண்காணிக்கும் பத்திரிகை ஆசிரியராக கொண்டு வெளிவந்து கொண்டிருந்த போல்ஷிவிக் கட்சியின் பிரதான பத்திரிகையான நொவாயா சின் என்ன கூறிற்று? இந்த விடையம் அக்கறை குறைந்த ஒன்றல்ல. "தீவிரவாத" முதலாளித்துவ பத்திரிகையான நாஷா சின் (எங்கள் வாழ்வு) ட்ரொட்ஸ்கியின் "நிரந்தரப் புரட்சி" தத்துவத்திற்கு எதிராக லெனின் 'மிக அறிவுபூர்வமான' கண்ணோட்டத்தை நிறுத்துவதற்கு பெருமுயற்சி செய்தபொழுது, போல்ஷிவிக் பத்திரிகையான நொவாயா சின் (1905, நவம்பர் 27-ல்) பின்வருமாறு பதிலிறுத்தது:

"இந்த தேவையற்ற வெளியீடு மடத்தனமானது. பாட்டாளி வர்க்கப் புரட்சி நடைபெற முடியும். அது தொடங்கிய மாத்திரமே நில்லாமல் அது தனது பாதையில் தொடர்ந்து போகும். சுரண்டுவோரை மண்டியிடவைக்கும் என தோழர் ட்ரொட்ஸ்கி சொன்னார். லெனின் அரசியல் புரட்சி முதலாவது நடவடிக்கையாகும் என குறிப்பிட்டார். நாஷா சின் பத்திரிகைக்காரர்கள் இங்கே ஏதோ முரண்பாடை கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள். ஒட்டு மொத்த தவறாகப்புரிதலும் ஏன் வருகின்றதெனில், முதலாவதாக, சோசலிசப் புரட்சி என்ற பெயரே நாஷா சின்னுக்கு ஏற்படுத்தும் பயத்திலிருந்து ஆகும். இரண்டாவதாக, சமூக ஜனநாயக வாதிகளுக்குள்ளே ஏதோ கடுமையான மற்றும் பரபரப்பூட்டும் வேறுபாட்டை கண்டுபிடிப்பதற்கான அப்பத்திரிக்கையின் ஆவலில் இருந்து வருகிறது. மூன்றாவது ட்ரொட்ஸ்கி "ஒரே அடியில்" என்ற வார்த்தை பிரயோகத்தை பாவித்ததுதான். Nachalo இலக்கம் 10-ல், தோழர் ட்ரொட்ஸ்கி இதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

தோழர் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு கூறினார். "புரட்சியின் முழு வெற்றியென்பது பாட்டாளி வர்க்கம் வெற்றிவாகை சூடுவதாகும்." "இந்த வெற்றியென்பது முறையே இந்தப் புரட்சியின் தங்குதடையற்றதன்மையை உட்குறிப்பாய் தெரிவிக்கிறது. பாட்டாளி வர்க்கம் ஜனநாயகத்திற்கு வேண்டிய அத்தனை அடிப்படை நிபந்தனைகளையும் யதார்த்தமாக்க வேண்டும். அதன் உடனடி அர்த்தம், பாட்டாளி வர்க்கத்திற்கு முன்னால் உள்ள அரசியல் ஆட்சியதிகாரத்தை கெட்டியாக்க போராடுவதுதான். இது ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் வெறும் சோசலிசப் பிரச்சனையாக இருக்கும். சமூக ஜனநாயக வாதிகளின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்கும் உயர்ந்தபட்ச வேலைத்திட்டத்திற்கும் இடையே புரட்சி தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை வைத்திருக்க வேண்டும். இது தனிஒரு "அடியோ", ஒரு தனி நாளோ, அன்றேல் மாதம் பற்றிய பிரச்சினையோ அல்ல, மாறாக ஒரு சரித்திர சகாப்தம் முழுவதிலுமாக நடக்ககூடிய பிரச்சினை பற்றியதாகும். அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை முன்கூட்டியே கூறுவது முட்டாள்தனமாகும்.

குறிப்பிட்ட மட்டத்திற்கு இந்தக் குறுநூலைப் பற்றி விளக்குவதற்கு இந்த அத்தாட்சி மட்டுமே போதுமானது, இழிபாசாங்கினரது அடுத்தடுத்த முழு விமர்சனத்தை தவறெனநிரூபித்தல், லெனினது நொவாயா சின்னால் ஒப்புக்கொள்ளும் வகையில் மேற்கோள் காட்டப்பட்ட எனது செய்த்தித்தாள் கட்டுரையில் உள்ள இந்த தவறென மறுத்தலை விடவும் முறை பிசகாமலும் மறுக்கமுடியாமலும் மிகத்தெளிவாக விளக்க முடியும்? வெற்றிவாகை சூடிய பாட்டாளி வர்க்கம் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும்போது, அதன் நிலைப்பாட்டின் தர்க்கத்தினால் ஒரு குறித்த கட்டத்திலே சுத்தமாய் சோசலிசப்பிரச்சனையை தவிர்க்க முடியாது எதிர்கொள்ளப்பட நேரிடும் என்று என்னுடைய கட்டுரை விளக்குகிறது. இங்கேதான் குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்கும் உயர்ந்தபட்ச வேலைத்திட்டத்திற்குமிடையேயுள்ள தொடர்ச்சி, தவிர்க்க முடியாதபடி பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார மட்டத்திற்கு வளர்ந்துசெல்லும் என்பதைக் காட்டுகிறது. இது ஒரு திடீர் தாக்குதலால் அல்ல ஒரே பாய்ச்சலால் அல்ல முழு சகாப்தம் வரைக்கும் நீடிக்கும் என்று குட்டி முதலாளித்துவத்தை விமர்சிக்கும்பொழுது நான் விளக்கினேன். லெனினது நொவாயா சின்னில் இந்த முன்னோக்கோடு கூட்டுச்சேர்ந்து, 1917-ல் நடந்த சம்பவங்கள் இது தீர்க்கமாய் சரியென்பதை நிறுவிக்காட்டியது பெரிய உண்மை என்று நான் நம்புகிறேன்.

நாஷா ஜின்னின் (Nasha Zhizn) குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளிலிருந்து விலகி, 1905-ல், மற்றும் குறிப்பாக 1906ல் புரட்சியின் தோல்வி ஆரம்பித்ததன் பின் ஜனநாயகத்திற்கு மேலான சோசலிசத்தின் விசித்திரமான "பாய்ச்சலை" பற்றிப் பேசியது பிரதானமாக மென்ஷிவிக்குகள் ஆவர். மென்ஷிவிக்குகளிலே குறிப்பாக மாட்டினோவும் ஜோர்டான்ஸ்கியும் இதைச் செய்தார்கள். இருவரும் இறுதியில் தடித்த ஸ்ராலினிஸ்ட்டாக மாறினார்கள். "சோசலிசத்திற்கான பாய¢¢சல¢" என்று என்னிலே தொங்கிக்கொண்டிருந்த மென்ஷிவிக் எழுத்தாளர்களுக்கு நான் 1906-ல் ஒரு விசேஷ கட்டுரையில், அது தவறு மாத்திரமல்ல முட்டாள் தனமுமாகும் என்று விரிவாகவும் ஜனரஞ்சகமாகவும் விளக்கினேன். இந்த வரலாற்றை திரிப்பவர்களின் விமர்சனத்திற்கு எதிராக அந்தக் கட்டுரையை சிறிதும் சுருக்காமல் இன்றும் மறுபிரசுரம் செய்ய என்னால் முடியும். அந்தக் கட்டுரையின் சாராம்சத்தை இரத்தினச்சுருக்கமாக பின்வருமாறு தரலாம்:

'நான் தெளிவாக விளங்கிக்கொண்டேன். அந்த பத்திரிகை கட்டுரையில் மதிப்பீடு செய்தவரான Vordansky-க்கு நிச்சயமாக சொல்வேன், பத்திரிகை கட்டுரையில் ஒரு அரசியல் தடையை பாய்ந்து கடப்பது என்பது நடைமுறையில் அதனை வெற்றிகொள்வதாக ஆகவே ஆகாது. (தேர்வு நூல்திரட்டு, பாகம் II,  பகுதி  I, பக்கம் 454)

சிலவேளை இது போதுமானதா? போதாவிடில் நான் மேலும் போவேன். அப்படிப் போவதால் றடெக் போன்ற என்னை விமர்சிப்பவர்கள் தங்கள் கைவசம் ஆவணங்கள் இல்லையென்று வெளிப்படையாகச் சொல்வதற்கு இடமளிக்காமல் செய்யலாம்.

லெனினால் உடனடியாக பிரசுரிக்கப்பட்ட, 1906-ல் நான் சிறையில் இருந்து எழுதிய எங்களது தந்திரோபாயம் என்ற கட்டுரை பின்வருமாறு குணாம்சப்படுத்தியது:

"கிராமப்புற கிளர்ச்சி எழுச்சிகளுக்கு பாட்டாளி வர்க்கம் ஆதரவு வழங்குவதோடு அரசியல் வாழ்க்கையின் மையமான நகரங்களில் தானே எல்லாவற்றையும் முடிவெடுத்து தானே புரட்சியை தொடங்கி வைக்கும். விவசாய மூலகங்களுக்கு ஒத்தாசை வழங்குவதோடு தானே விவசாயிகளுக்கு தலைமை தாங்கும் பாட்டாளி வர்க்கம் எதிர்ப்புரட்சிகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது மாத்திரமல்ல புரட்சியின் வெற்றியை எவ்வாறு உத்தரவாதமாக்குவதென்றும் அதற்கு தெரியும்." (தேர்வு நூல்திரட்டு, பாகம் II, பகுதி I,பக்கம் 436 ஆங்கிலம்)

இது விவசாயிகளை உதாசீனம் செய்வதாக தோன்றுகிறதா? அதே குறுநூலில் பின்வரும் எண்ணக்கருவும் வளர்த்தெடுக்கப்பட்டது:

எங்களது தந்திரோபாயம் தங்குதடையின்றி புரட்சி வளரும் என்று நறுக்காக மதிப்பிட்டதோடு தவிர்க்கமுடியாதபடி புரட்சியில் வரும் மேடு பள்ளங்கள் ஏற்ற இறக்க நெளிவு சுழிவுகளை கருத்தில் கொள்ளத் தவறவில்லை. (தேர்வு நூல்திரட்டு, பாகம் II, பகுதி I,  பக்கம் 436)

இது ஒரு விசித்திரமான பாய்ச்சல் போலத் தோன்றுகிறதா?

முதலாவது சோவியத்துகளின் படிப்பினைகள் (1906) என்ற எனது கட்டுரையில் புரட்சியை மேலும் எப்படி வளர்த்தெடுப்பது என்ற வாய்ப்புவளத்தை நான் அகழ்ந்தெடுத்து (அல்லது யதார்த்தத்தில் மாறியது போல, ஒரு புதிய புரட்சிக்காக) பின்வருமாறு வரைந்தேன்:

வரலாறு திரும்பவும் அப்படியே நிகழ்வதில்லை - புதிய சோவியத்துக்கள் (1905ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை) ஐம்பது நாட்களைப் போல் மீண்டும் போகாமல் அந்த நாளைய நடைமுறை வேலைத்திட்டங்களை கடன்வாங்க வேண்டும். இந்த வேலைத்திட்டம் மிகத்தெளிவானது. அவையாவன, இராணுவத்துடனான புரட்சிகர ஐக்கியம், விவசாயிகளுடனான புரட்சிகர ஐக்கியம், நகர்ப்புற கீழ்மட்ட குட்டி முதலாளித்துவ பிலேபிய பாமரக் குடியோர்களோடான ஐக்கியம், எதேச்சதிகாரத்தை தூக்கியெறிதல், எதேச்சதிகாரத்தின் ஸ்தாபனங்களை நொருக்கியெறிதல், புதிய ஸ்தாபனத்தை அணிவகுத்தலும், இராணுவத்தை நிர்மூலமாக்கலும் அதிகாரத்துவ பொலிஸ் இயந்திரத்தை நிர்மூலமாக்கல், 8 மணித்தியால வேலைநாள், வெகுஜனங்களை ஆயுதபாணியாக்கல் எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கல் சோவியத்துக்களை நகர்ப்புற புரட்சிகர சுயநிர்வாக ஸ்தாபனமாக்கல், விவசாய சோவியத்துக்களையும் விவசாயிகள் சபைகளையும் உருவாக்கி அந்தந்த வட்டாரங்களில் விவசாயப் புரட்சியின் அங்கங்களாக்கல், சட்டசபைக்கான தேர்தல்களை ஒழுங்கு செய்தல், ஒரு திட்டவட்டமான வேலைத்திட்டத்தின் கீழ் தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சபைக்காக போராடுதல்." (தேர்வு நூல்திரட்டு, பாகம் II, பகுதி 2, பக்கம் 206)

இங்கே இது விவசாயிகள் புரட்சியிலிருந்து தள்ளிப்பாய்வதாக தெரிகிறதா, அல்லது விவசாயிகள் பிரச்சனையை குறைத்து மதிப்பிடுவதாக தெரிகிறதா? இதிலே எனக்கு ஜனநாயகக் கடமைகள் தெரியாமல் போய்விட்டதாக தெரிகிறதா? இல்லை, அப்படியல்ல. அப்படியென்றால் றடெக் என்ன மாதிரியான அரசியல் சித்திரத்தை வரைந்துள்ளதாக தெரிகிறது? ஒன்றுமில்லை.

றடெக் தாராளமாக எனது 1905ம் ஆண்டு நிலைப்பாட்டுக்கும், அதை அவர் திரித்துக் கையாண்டு, மென்ஷிவிக்குகளது நிலைப்பாட்டிற்கும்-மென்ஷிவிக் விமர்சனத்தில் முக்கால் வாசியைத் தானே திருப்பிச் சொல்லிக் கொண்டு அவரது இலக்கு வேறாக இருந்தபோதும், ட்ரொட்ஸ்கியும் மென்ஷிவிக் முறையையே கையாண்டார் என்று புரட்டாக எடுத்துரைக்கிறார். றடெக் இந்த அகவயச் சூத்திரத்தால் அந்தப் பிரச்சனை சம்பந்தமாக தனது சொந்த அணுகுமுறையையே நிந்திக்கிறார். முடிவானது எப்பொழுதும் கையாளும் முறையிலே தங்கியுள்ளது மாத்திரமல்ல அது இறுதி ஆய்விலே கையாளும் முறையால் நிபந்தனைக்கு உள்ளாக்கப்படும் என்று லசால்லுக்கு கூடத் தெரியும். அவர் இது சம்பந்தமாக " Franz von Sickingen" என்ற நாடகத்தை எழுதியுள்ளார். நான் கையாண்ட முறையும் மென்ஷிவிக்குகள் கையாண்ட முறையும் ஒரே மாதிரியானதா? விவசாயிகள் சம்மந்தமான நிலைப்பாடு அப்படியானதா? 1916-ல் லெனின் எழுதிய கட்டுரையில் நான் ஏற்கனவே எழுதிய மூன்று வரிகளை சுட்டிக்காட்டிய எதிர்மறுப்பை ஆதாரமாகக் காட்டி றடெக் நிரூபிக்கப் பார்க்கிறார். இங்கே லெனின் ட்ரொட்ஸ்கி என்ற பெயரைக் கையாண்டபோதும் உண்மையில் புகாரினையும் றடெக்கையுமே மறுத்துரைக்கின்றார். லெனினது இந்த மேற்கோளை மாத்திரமல்ல ஏற்கனவே நாங்கள் பார்த்தது போன்று லெனினது அந்தக் கட்டுரையின் சாராம்சம் முழுவதையும் மறுதலித்த போதும் றடெக் அதை ட்ரொட்ஸ்கியை மறுதலிப்பதாகக் கூறுகிறார். மென்ஷிவிக் கருத்துருவின் வெற்றுத்தன்மையை அம்பலப்படுத்தியதோடு, நான் எனது 1916 கட்டுரையில் கேட்டேன். தாராண்மை பூர்சுவாக்கள் தலைமை கொடுக்காவிடில் யார் தலைமை கொடுப்பார்கள்? நீங்கள் மென்ஷிவிக்குகள் ஒரு நாளும் விவசாயிகள் சுயாதீனமான அரசியல் பாத்திரம் வகிப்பார்கள் என்பதை நம்பமாட்டீர்கள். எனவே றடெக் என்னைக் கையும் மெய்யுமாய் பிடித்துவிட்டார். ட்ரொட்ஸ்கி மென்ஷிவிக்குகளது விவசாயிகள் பற்றிய பாத்திரத்தினை ஏற்றுக்கொண்டுவிட்டார். விவசாயிகளோடான ஐக்கியம் கபடமானதும் நம்பத்தகாததுமானதால் தாராள முதலாளிகளை தள்ளிவிடக் கூடாதென்று மென்ஷிவிக்குகள் நின்றார்கள். இதுவே மென்ஷிவிக்குகளது விதிமுறையாகும். என்னுடைய முறையானது தாராள முதலாளிகளை அகற்றிவிட்டு புரட்சிகர விவசாயிகளுக்கு தொழிலாள வர்க்கம் தலைமை கொடுக்கப் போராடுவதாகும். இந்த அடிப்படைப் பிரச்சனையிலே லெனினுக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை இல்லை. நான் மென்ஷிவிக்குகளுக்கு எதிராகப் போராடும்பொழுது, நீங்கள் ஒரு போதும் விவசாயிகள் தலைமைப் பாத்திரம் வகிப்பார்கள் என்பதை ஏற்க மாட்டீர்கள் என்று சொன்னேன். இப்படிக்கூறியது, றடெக் மறைமுகமாக முயற்சிப்பதுபோல் மென்ஷிவிக் வழிமுறைகளோடு உடன்பட்டதாகாது. மாறாக அது மாற்று நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைப்பதாகும். ஒன்றில் தாராள முதலாளிகளின் சர்வாதிகாரம் அன்றேல் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்.

1916-ல் மென்ஷிவிக்குகளுக்கு எதிராக நான் கூறிய பரிபூரண சரியான நியாயத்தை இப்பொழுது றடெக் நேர்மையற்ற முறையில் எனக்கெதிராக பாவிக்கிறார். இதே நியாயத்தை நான் 1907-ல் போல்ஷிவிக்குகளது லண்டன் காங்கிரசில், போல்ஷிவிக்குகளது பாட்டாளி வர்க்கமில்லாத கட்சிகள் சம்பந்தமான மனோபாவம் பற்றிய கொள்கை பிரேரணையை பாதுகாத்துப் பேசினேன். எனது லண்டன் பேச்சிலிருந்த முக்கிய அம்சங்களை இங்கே மேற்கோள் காட்டுகின்றேன். இது புரட்சி முடிந்த முதலாவது வருடத்தில் புரட்சியின்போது போல்ஷிவிக் கட்சியின் வர்க்கங்கள் சம்பந்தமாகவும் கட்சிகள் சம்பந்தமாகவும் நிலவிய மனோபாவத்தை விஸ்தரிப்பதற்காக அடிக்கடியும் திரும்பித் திரும்பியும் பாமாலைகளாயும் பாடப் புத்தகங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. அந்தப் பேச்சிலே நிரந்தரப் புரட்சித் தத்துவம் இரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு முறைப்படுத்திக் கூறப்பட்டது.

"மென்ஷிவிக் தோழர்களுக்கு அவர்களது சொந்தக் கண்ணோட்டங்களே அதிசிக்கலாக தோன்றுகிறது. ரஷ்ய புரட்சியின் போக்கு பற்றிய எனது கருத்துரு அளவுக்கதிகமாக எளிதாக்கப்பட்டது என்று அவர்களிடமிருந்து குற்றச்சாட்டுக்களை திரும்பத்திரும்பக் கேட்கிறேன். சிக்கலான வடிவங்களுள் ஒன்றாக இருக்கும் அவர்களின் அதிஒழுங்கற்ற நிலை இருப்பினும், - ஒருவேளை இந்த ஒழுங்கற்றதன்மையின் காரணமாக- மென்ஷிவிக்குகளது கண்ணோட்டங்கள் திரு. மில்லியுக்கோவ் கூட புரிந்துகொள்ளத்தக்கதாய் மிக எளிமையானதாக ஆகிறது.

கடெற் கட்சியின் தத்துவாத்த ஆசிரியரான மில்லியுக்கோவ், இரண்டாவது அரசு டூமாவின் தேர்தலானது எப்படி போகும்? என்ற புத்தகத்தின் பிந்திய பதிப்பில் பின்வருமாறு எழுதுகிறார்: "இடது கன்னைக்கு, இது குறுநோக்கில் பார்த்தாலும் கூட அதாவது சோசலிஸ்டுகளையும் புரட்சியாளர்களையும் நோக்குமிடத்து அவர்களோடு ஓர் இணக்கத்திற்கு வருவது மிக கஷ்டமாகும். ஆனால் மீண்டும் சொல்லுமிடத்து ஒரு தக்க நேர்காரணம் இல்லாவிடில் ஒரு தக்க மறைக்காரணம் எங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தினால், அவர்களது நோக்கு எங்களை விமர்சித்து எங்களது நற்பெயரை கெடுப்பதாகும். அந்த காரணத்திற்கு மாத்திரமாவது நாங்கள் டூமாவில் பங்கு பற்றி வேலை செய்வது அவசியமாகும். எங்களுக்கு தெரியும், சோசலிஸ்ட்டுகளை பொறுத்தளவில், ரஷ்யாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இடம்பெறவிருக்கும் புரட்சியானது முதலாளித்துவ புரட்சியே அன்றி சோசலிசப் புரட்சி அல்ல என்பதாகும். இந்தப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயகத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இந்த ஜனநாயகத்தை.... விலக்கி வைப்பதற்கு உலகத்திலுள்ள எந்த சோசலிஸ்ட்டுகளும் தயாரில்லை, அப்படியிருக்க நாடு அவர்களை அதிக அளவில் டூமாவுக்கு அனுப்பினால் அதன் அர்த்தம் சோசலிசத்தை இப்போதே கொண்டு வருவதற்காக அல்ல அல்லது அவர்களைக் கொண்டு முன்னேற்பாடான 'முதலாளித்துவ' சீர்திருத்தங்களை செய்வதற்கு அல்ல. இந்தப் பாத்திரத்தில் தாங்கள் சமரசம் செய்துகொள்வதைவிட பாராளுமன்றவாதிகளின் பாத்திரத்தை அவர்கள் எங்களிடம் விட்டுவிடல் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்."

இங்கே மிலியுக்கோவ் பிரச்சனையின் மையக்கருத்துக்கு நேரடியாக வருவதை நாம் பார்க்கலாம். மேற்சொன்ன மேற்கோள் புரட்சி பற்றியதும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் சோசலிச ஜனநாயகத்திற்கும் இடையேயுள்ள உறவைப் பற்றியதுமான மென்ஷிவிச மனோபாவத்திலுள்ள எல்லா முக்கியமான மூலங்களையும் தரும்.

"இப்பொழுது நடக்கவிருக்கும் புரட்சியானது முதலாளித்துவ புரட்சியே அன்றி சோசலிசப் புரட்சியல்ல" என்பதுவே முதலாவதும் முக்கியமானதுமான விஷயமாகும். முதலாளித்துவ புரட்சி "கட்டாயமாக முதலாளித்துவ ஜனநாயகவாதிகளால் நடாத்தி முடிக்கப்பட வேண்டுமென்பது" இரண்டாவது விஷயமாகும். சோசலிச ஜனநாயகவாதிகள் தங்களின் கைகளினால் முதலாளித்துவ சீர்திருத்தங்களை செய்யமாட்டார்கள். அவர்களது பாத்திரம் சுத்தமான எதிர்க்கட்சியாக இருப்பதுதான்: "விமர்சித்து மதிப்பிழக்க" செய்வதுதான். இதுவே மூன்றாவது விஷயமாகும். கடைசியாக நான்காவது விஷயம் என்னவென்றால் சோசலிஸ்டுகளை தொடர்ந்து எதிர்க்கட்சியினராக வைத்திருக்க வேண்டுமென்றால் (முதலாளித்துவ ஜனநாயகவாதிகள்) இங்கே நின்று செயற்பட வேண்டும்."

"ஆனால் நாம்அங்கே நின்று செயற்படவில்லை என்றால் என்ன நடக்கும்? முதலாளித்துவ புரட்சிக்கு தலைமை தாங்கும் தகைமை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு இல்லையென்றால் என்ன செய்வது? அப்படியான பட்சத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டாக வேண்டும். இந்த முடிவுக்கே மென்ஷிவிசம் வருகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தையும் அதன் இலட்சணத்தையும் வரலாற்றையும் மென்ஷிவிசம் தனது சொந்தக் கற்பனையில் உற்பத்தி செய்கிறது.

"நாங்கள் சடவாதிகள் என்ற முறையில், முக்கியமாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் சமூக அஸ்திவாரம் என்னவென்ற பிரச்சனையை கிளப்ப வேண்டும். முதலாளித்துவ ஜனநாயகம் எந்த தட்டில் அல்லது எந்த வர்க்கத்தில் தங்கியிருக்கின்றது?

'புரட்சிகர சக்தி என்ற வகையில் பெருமுதலாளிகள் விலக்கப்படமுடியும் என்பதில் நாங்கள் எல்லோரும் ஒத்துக்கொள்வோம். ஏன் பரந்துபட்ட அர்த்தத்தில் தேசிய புரட்சியாக இருந்த மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்தில் கூட சில லியோன் தொழிலதிபர்கள் எதிர்ப்புரட்சி பாத்திரத்தைத்தான் வகித்தார்கள். நடுத்தர முதலாளித்துவ வர்க்கம், மற்றும் பிரதானமாகவும் கூட குட்டிமுதலாளித்துவ வர்க்கம், முதலாளித்துவப் புரட்சியின் முன்னணி சக்தியாக இருந்து கொண்டிருப்பதாய் கூறப்பட்டோம். ஆனால் இந்த குட்டி முதலாளித்துவம் எதைப் பிரதிநிதித்துவப்படுத்தும்?

ஜாக்கோப்பின்கள் நகர்ப்புற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தனர், அது கைவினைச் சங்கங்களிலிருந்து வளர்ந்ததாகும். புரட்சிகர சான்குளோத்தின் இராணுவம் சிறு தேர்ச்சியாளர்கள், தினக்கூலி செய்வோர், நகர்ப்புற மக்கட்தொகையினர் அவர்களோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டு மொன்டாய்னர்களின் (Montagnards) முன்னணிக் கட்சிக்கு ஆதாரமாகிய, புரட்சிகர சான்குளோத்துக்களின் படையாய் அமைந்திருந்தனர். துல்லியமாக, கைவினைச் சங்கங்களின் நீண்ட வரலாற்றுப் பள்ளியினூடாக சென்றிருந்த, இந்த நெருக்கமாக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நகர்ப்புற வெகுஜன அமைப்பே, புரட்சியின் எல்லா சுமைகளையும் தன் தோள்களில் தாங்கியது. முதலாளித்துவ சுரண்டலுக்கு ஏற்ற 'சாதாரண' சூழ்நிலைகளை உருவாக்கியதே புரட்சியின் புறநிலை விளைவாகும். வரலாற்று நிகழ்வுப்போக்கின் சமூக இயங்குமுறை இந்த விளைவை படைத்தது, முதலாளித்துவ ஆதிக்கத்திற்கான சூழ்நிலைகள் நடுத்தெரு ஜனநாயகத்தின் அதாவது சான்குளோத்துக்களின் "கும்பலால்" படைக்கப்பட்டது. அவர்களது பயங்கரவாத சர்வாதிகாரம் முதலாளித்துவ சமுதாயத்தின் பழைய குப்பைகளையும் களைந்து தூய்மைப்படுத்தியது. அதன் பின்பு முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்து ஆட்சிக்கு வந்தது.

நான் இப்பொழுது கேட்பேன், ஐயகோ இதுதான் முதல் தடவையல்ல!. பாட்டாளி வர்க்கம் தொடர்ந்து எதிர்க்கட்சியாக நீடித்தால், நமது நாட்டில் எந்த சமூக வர்க்கம் புரட்சிகர முதலாளித்துவ ஜனநாயகத்தை உயர்த்தும், இராட்சத கடமைகளை செய்யக்கூடியதாக்க அதை ஆட்சியில் அமர்த்தும்? இதுவே மையப் பிரச்சனையாகும். இதை நான் மென்ஷிவிக்குகளிடத்தில் மீண்டும் வைப்பேன்.

எங்கள் நாட்டில் பெருமளவிலான புரட்சிகர விவசாயிகள் இருக்கின்றார்கள் என்பது உண்மைதான். எனக்கு தெரிந்தது போன்றே மென்ஷிவிக் தோழர்களுக்கு விவசாயிகளை பற்றி நன்றாகத் தெரியும். அது எவ்வளவுதான் புரட்சிகரத் தன்மை கொண்டதென்றாலும் சுயாதீன பாத்திரத்தை வகிக்கத் தகமையற்றது என்றும் தலைமைத்துவ அரசியல் பாத்திரத்தை வகிக்க இன்னும் தகமையற்றதாகும் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சந்தேகமற்று விவசாயிகள் பிரமாண்டமான சேவையை செய்வார்கள் சந்தேகமற நிறுவிக்காட்டுவார்கள். ஆனால் விவசாயிகள் கட்சி தன்னை முதலாளித்துவ புரட்சியின் தலைமையாளன் பாத்திரத்தை வகிக்கச் செய்யும் என்பதையும் அது தனது சொந்த முயற்சியால் வழக்கமான தடைகளில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுதலை செய்யும் என்பதையும் மார்க்சிசவாதிகள் நம்புவார்கள் என்பது அர்த்தமற்றதாகும். நவீன சமுதாயத்தில் நகரமே மேலாதிக்கம் வகிப்பதும் தனித்து நகரமே முதலாளித்துவப் புரட்சியில் மேலாதிக்கம் வகிக்க தகைமையுள்ளதுமாகும். [1]

'நமது நாட்டில் முழு தேசத்தையும் தனக்குப்பின்னால் வரும்படி தலைமை தாங்கவல்ல நகர்ப்புற ஜனநாயகம் எங்கே இருக்கிறது? தோழர் மாட்டினோவ் பூதக்கண்ணாடியும் கையுமாக ஏற்கனவே இதை திரும்பத் திரும்ப தேடினார். அவர் அப்படித்தேடி சற்றோவ் ஆசிரியர்களையும், பீட்டர்ஸ்பேர்க் வழக்கறிஞர்களையும், மாஸ்கோ புள்ளிவிபரம் சேகரிப்போர்களையும் கண்டுபிடித்தார். அவரைப்போல் சிந்திப்பவர்கள் எல்லோருக்கும் கண்டு கொள்வதற்கு கஷ்டமாக விளங்கிய விஷயம் என்னவென்றால், பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி பிரெஞ்சுப் புரட்சியில்-சான் குளோத்தின் இன் அரைப் பாட்டாளி, கைவினைஞர் ஜனநாயகவாதத்தின் அதே அடிப்படையை ரஷ்ய புரட்சியில் தொழிற்துறை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றியிருந்தது. தோழர்களே இந்த அடிப்படை உண்மையில் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எங்களது பாரிய தொழிற்சாலைகள் கைத்தொழில்களிலிருந்து உடல்அமைப்பியலாய் வளர்ச்சியுறவில்லை. எங்களது நகரங்களின் பொருளாதார வரலாறு பூரணமாகவே கைவினைச்சங்க காலத்தை கண்டிராதது. ஐரோப்பிய மூலதனத்தின் உடனடியானதும் நேரடியானதுமான நெருக்கு வாரத்தினாலேயே எங்களது நாட்டில் முதலாளித்துவ தொழிற்சாலைகள் தோன்றின. அது முக்கியமாக ஒரு புராதன காலத்து கன்னி பூமியில் கைவினைச்சங்க கலாச்சாரத்தின் எந்த எதிர்தாக்கத்தையும் சந்திக்காது தோற்றமெடுத்தது. எங்கள் நாட்டில் பிற நாட்டு மூலதனங்கள் அரச கடனென்ற வழிகளாலும் தனியார் முன்முயற்சி குழாய்களாலும் பாய்ந்தன. இது தன்னைச் சூழ தொழிற்துறை பாட்டாளி வர்க்கம் என்ற பட்டாளத்தை சேர்த்துக்கொண்டதால் கைத்தொழில் கைவினைச்சங்கங்களின் எழுச்சியையும் வளர்ச்சியையும் தடுத்துவிட்டது. இந்த நிகழ்வுபோக்கின் பலாபலனாய் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் சந்தர்ப்பத்தில் எங்களுக்குள் நகர்ப்புறத்தின் தொழிற்துறை பாட்டாளி வர்க்கம் ஓர் உச்சக்கட்ட வளர்ச்சியடைந்த சமூகக் கூறாக தோற்றமெடுத்தது. இது ஓர் உண்மையாகும். இதை மறுதலிக்கவியலாது. எங்களது புரட்சிகர தந்திரோபாய முடிவுகளின் அடிப்படையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

'மென்ஷிவிக் தோழர்கள் புரட்சி வெற்றி பெறும் என்று நம்புவார்களேயானால் அது வெல்லக்கூடிய சாத்தியக்கூற்றை அங்கீகரிப்பார்களேயானால், எங்கள் நாட்டில் புரட்சிகர சக்தியின் வரலாற்று உரிமைக்காரன் பாட்டாளி வர்க்கமேயொழிய வேறொரு வர்க்கமுமில்லை என்பதை அவர்களால் எதிர்த்து வாதாட முடியாது. மகாத்தான பிரெஞ்சு புரட்சியிலே குட்டி முதலாளித்துவ நகர ஜனநாயகம் தன்னைத்தானே புரட்சிகர தேசத்தின் தலைமையில் வைத்ததுபோல பாட்டாளி வர்க்கம் ஒன்றேயொன்று மாத்திரமே எங்களது நகரங்களின் புரட்சிகர ஜனநாயகமாகும். புரட்சி வெற்றி பெறக்கூடிய அறிகுறியேதுமிருக்குமேயானால் அது விவசாய வெகுஜனங்களின் ஆதரவைப் பெற்று தன்னை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

'பாட்டாளி வர்க்கத்திலும், பாட்டாளி வர்க்கத்தினோடு புரட்சிகர விவசாயிகளிலும் நேரடியாக தங்கி நிற்கும் ஓர் அரசாங்கம் சோசலிச சர்வாதிகாரமாகாது. பாட்டாளி வர்க்க அரசாங்கத்தின் முன்னே உள்ள மேலும் கூடிய வாய்ப்புவளங்களை நான் இங்கே அலசப்போவதில்லை. முதலாளித்துவ ஆட்சிக்கு வேண்டிய பாதையை சுத்திகரிப்பதற்காக ஜாக்கோபின் ஜனநாயகம் வீழ்ந்ததுபோல் பாட்டாளி வர்க்கம் சிலவேளை வீழ்வது தலைவிதியாகலாம். நான் இங்கே ஒரு விஷயத்தை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். பிளெக்கானோவ் தீர்க்க தரிசனம் சொன்னவாறு, நமது நாட்டில் புரட்சிகர இயக்கம் தொழிலாளர் இயக்கமாக வெற்றிவாகை சூடுமானால், புரட்சியின் வெற்றி பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வெற்றியாக இருப்பதுதான் சாத்தியமாகும் - இல்லெனின் ஒட்டுமொத்தமும் முடியாத காரியமாகும்.

'நான் இந்த முடிவை வற்புறுத்திக் கூறுவேன். எவ்வளவுக்கு அழுத்திச் சொல்ல முடியுமோ அவ்வளவுக்கு அழுத்திச் சொல்வேன். பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்குமிடையே சமூக பகைமைகள் நிலவி, அது பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்குவதை தடை செய்வதால், பாட்டாளி வர்க்கம் வெற்றிவாகை சூடும் மட்டத்திற்கு வல்லமை பெறவில்லையென்று கருதினால் எங்களது புரட்சியை வெல்லவே முடியாது என்று எவரும் முடிவெடுக்கலாம். இந்த நிலைமைகளிலே தாராள முதலாளிகளுக்கும் பழைய ஆட்சியாளர்களுக்குமிடையே ஒருவித உடன்பாடு ஏற்படுவது புரட்சியின் இயற்கையான பலாபலனாகும். புரட்சி இப்படி விகாரமடைந்து போவதற்கான சாத்தியக்கூற்றை எவரும் நிராகரிக்க முடியாது. தெளிவாக இந்த விவகாரம் புரட்சியின் தோல்வியின் பாதையில் இருக்கும். அது புரட்சியின் உட்பலவீனங்களின் நிபந்தனையாகும். சாராம்சத்தில் மென்ஷிவிசத்தின் முழு ஆய்வும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது பாட்டாளி வர்க்கத்தை பற்றிய மதிப்பீடும் அவர்களது விவசாயிகளோடான உறவின் சாத்தியப்பாடும் புரட்சிகரத்தோல்வி மனப்பான்மை வாதத்திற்கே பெரிதாக இட்டுச்சென்றது.

ஆனால் அவர்கள் பிடிவாதமாக இந்தப் பாதையிலிருந்து திசை திரும்பி முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையில் புரட்சிகர வெற்றி மனப்பான்மையை படைத்தார்கள்.

இதனோடேயே கடேற்றுகளுடனான மனப்பாங்கு உண்டானது. அவர்களுக்கு முதலாளித்துவ ஜனநாயகத்தின் குறியீடு கடேற்றாகும், அதேவேளை அவர்களுக்கு புரட்சிகர சக்தியின் இயற்கையான உரிமையாளன் முதலாளித்துவ ஜனநாயகமாகும்....

'கடேற் எழுந்து நிமிர்ந்து நிற்குமென்ற நம்பிக்கை உங்களுக்கு எதன் அடிப்படையில் ஏற்பட்டது? அரசியல் அபிவிருத்தியின் உண்மைகளின் அடிப்படையிலா? இல்லை உங்களது சொந்த திட்டத்திலா. 'ஆரம்பம் தொட்டு புரட்சியை முடிவுவரை நடாத்தி முடிப்பதற்கு' உங்களுக்கு நகர்ப்புற முதலாளித்துவ ஜனநாயகம் தேவைப்பட்டது. அதை ஆவலோடு தேடினீர்கள். ஆனால் கடேற்றை தவிர வேறொன்றும் உங்களுக்கு தென்படவில்லை. அதோடு நீங்கள் அவர்கள் சம்மந்தமாக வியக்கத்தக்க வெற்றி மனப்பான்மையை படைத்தீர்கள். அவர்களுக்கு புரட்சி வேடம் பூணவைத்து ஒப்பனைசெய்து படைக்கும் பாத்திரம் வகுக்கும்படி நிர்பந்தித்தீர்கள். அவர்கள் நடிக்க விரும்பாத அந்த பாத்திரத்தை அவர்களால் நடிக்க முடியாமல் போவது மாத்திரமல்ல அவர்கள் அப்படி நடிக்க விரும்பவுமில்லை. என்னுடைய அடிப்படைக் கேள்வி இதுதான். இதை நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். எனக்கு எந்தவித விடையும் கிடைக்கவில்லை. உங்களிடம் புரட்சி பற்றிய முன்கணிப்பு கிடையாது. உங்களின் கொள்கைக்கு எந்தவித பெரிய வாய்ப்புவளங்களும் பற்றாக்குறையாகவே இருக்கிறது.

'இது தொடர்பானதில், முதலாளித்துவக் கட்சிகள் சம்மந்தமாக காங்கிரஸ் "சந்தர்ப்பத்திற்கு ஏற்ற முறையில்" என்று முறைப்படுத்திக் கூறியது உங்களுக்கு ஞாபகமிருக்கும். பாட்டாளி வர்க்கம், வெகுஜனங்களின் செல்வாக்கை தன் பக்கம் வெல்லுமுகமாக வரிசைக்கிரமமாக போராடாத பட்சத்தில், சொல்வதானால், நானாவித உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தன்னைச் சூழ அணி திரட்டுவதற்கு மற்றும் தானே அவர்களின் தலைவனாகவும் கட்டியக்காரனாவும் வருவதற்கான தனியொரு வழிகாட்டும் கருத்திற்கு இணங்க அதன் தந்திரோபாய நடவடிக்கையை தீர்மானிக்காது என்று கூறப்படுகிறது. (ஐந்தாவது கட்சிக் காங்கிரசின் நிகழ்ச்சிக் குறிப்பும் தீர்மானங்களும் 180-5)

இந்தப் பேச்சானது எனது எல்லா கட்டுரைகளினதும் சொற்பொழிவுகளினதும் 1905 தொடக்கம் 1906 வரையான செயல்பாடுகளினதும் கூட்டுப் பொழிப்புரையாகும். இது லேசுவிக்களால் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கே றோசா லுக்சம்பேர்க்கையும் ரெய்ஸ்கோவையும் பற்றிச் சொல்லத் தேவையில்லை. (இந்தப் பேச்சின் அடிப்படையிலேயே நாங்கள் மேலும் அன்னியோன்னியமாக நெருங்கினதோடு இதுவே எங்களை போலிஷ் பத்திரிகையோடு ஐக்கியப்பட வைத்தது) மென்ஷிவிக்குகளுடனான எனது சமரச நிலைப்பாட்டை லெனின் மன்னிக்கவில்லை. அவரது நிலைப்பாடு சரியானதாகும். அவர் தானே அந்த பேச்சைப் பற்றி வேண்டுமென்றே வலியுறுத்திக்கூறியது குறிப்பிட்ட பயன்நோக்கி ஒதுக்கிவைக்கப்பட்டது. அவர் பின்வருமாறு கூறினார்:

'நான் வெறுமனே ட்ரொட்ஸ்கியை பார்க்க விரும்பினேன், அவரது கட்சியை பாதுகாப்போம் என்ற சின்னப் புத்தகத்தில் இன்றைய ரஷ்யப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் பொருளாதார கூட்டுரிமை என்று எழுதிய காவுட்ஸ்கியோடு பிரசித்தமாக உடன்படுவதை கூறியிருக்கின்றார். தாராள முதலாளிகளுக்கெதிரான ஓர் இடதுசாரி ஐக்கியம் ஏற்கக்கூடியதும் ஏதுவானதும் என்று ட்ரொட்ஸ்கி அங்கீகரித்திருக்கிறார். ட்ரொட்ஸ்கி எங்களது எண்ணக் கருத்தினங்களோடு அண்மித்திருக்கிறார் என்பதை இனங்காண இந்த விபரங்களே எனக்குப் போதுமானது. "தங்கு தடையற்ற புரட்சி" பற்றிய பிரச்சினைக்கு சுதந்திரமானதாய், முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவு என்ற அடிப்படை புள்ளிகள் சம்பந்தமாக எங்களிடையே ஐக்கியம் ஏற்பட்டுள்ளது.*

லெனின் தனது பேச்சிலே நிரந்தரப் புரட்சித் தத்துவம் பற்றிய பொதுவான மதிப்பீடு அளிப்பதற்கு முயற்சிக்கவில்லை. ஏனென்றால் நான் கூட எனது பேச்சை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு வேண்டிய மட்டத்திற்கு மேலும் வாய்ப்புவளங்களைநோக்கி அபிவிருத்தி செய்யவில்லை. அவர் வெளிப்படையாகவே இந்தப் பிரச்சனையில் எனது அடிப்படை எழுத்துக்களை வாசிக்கவில்லை. அல்லாவிட்டால் ஏதோ புதிதாக போல்ஷிவிசத்தின் எண்ணக் கருத்தினங்களோடு அண்மித்து வருகிறார் என பேசியிருக்கமாட்டார். எனது லண்டன் பேச்சும் கூட எனது 1905-06 எழுத்துக்களின் சுருக்கத்தை திருப்பிச் சொன்னதாகும். லெனின் சரியான நாவடக்கத்தோடேயே பேசினார். ஏனெனில் நான் போல்ஷிவிக் கன்னைக்கு வெளியிலேயே நின்றேன். அவரது பேச்சு இரத்தினச் சுருக்கமாக இருந்தபோதிலும் பிழையான வியாக்கியானத்திற்கு எந்த இடமும் வைக்கவில்லை. லெனின், அடிப்படைப் பிரச்சனை விஷயங்களில், அதாவது விவசாயிகள் மீதான மனோபாவமும் தாராள முதலாளிகள் சம்பந்தமாகவும் எங்களிடையே ஐக்கியம் இருப்பதை உறுதிப்படுத்தினார். றடெக் தப்பிதமாய் சொல்வதுபோல் அந்த ஐக்கியம் எனது இலக்குகளுக்கு பிரயோகிக்கற்பாலதல்ல. ஆனால் சுருக்கமாக வழிமுறை க்காகும் ஜனநாயகப் புரட்சியாய் வளரும் என்ற முன்னோக்குப் பற்றி லெனின் கூறாது தள்ளிவைத்துவிட்டு சுயாதீனமாக "தங்குதடையற்ற புரட்சி" பற்றிய பிரச்சனையை கூறியது சரியாகும். இந்த தள்ளி வைத்ததன் அர்த்தம் என்ன? மந்த புத்தியும் பழிக்கு அஞ்சாத எதிர்கால அங்கீகாரம் இல்லாத இழிபாசாங்கினர் கூறுவதுபோல லெனின் ஒரு நாளும் விதிப்பிரகாரம் விவசாயிகளை விட்டுவிட்டோ அல்லது விவசாயப் புரட்சியை விட்டுவிட்டு தாவிப்பாய்ந்தோ நிரந்தரப் புரட்சியோடு தன்னை இனங்காட்டவில்லை என்பது தெளிவானது. லெனினது சிந்தனை பின்வருமாறு: எவ்வளவு தூரத்திற்கு எங்களது புரட்சி வளரும், எங்கள் நாட்டில் பாட்டாளி வர்க்கம் ஐரோப்பாவிற்கும் முன்னதாக ஆட்சியை கைப்பற்றுவார்களா? இது சோசல¤ச முன்னேற்றத்திற்கு என்ன வழியைத் திறந்துவிடும். இந்தப் பிரச்சனையை நான் தொடவேயில்லை. இருந்தபோதும், விவசாயிகளோடும், தாராளவாத முதலாளிகளோடும் பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ள அடிப்படை பிரச்சனையில் 'எங்கள் இருவருக்குமிடையே ஐக்கியம் நிலவியதுதான்'.

நிரந்தரப் புரட்சி தத்துவம் பிறந்த 1905லே, போல்ஷிவிக் கட்சியின் நொவாயா சின் எவ்வாறு பதிலளித்தது என்று மேலே பார்த்தோம். நாங்கள் இப்போது லெனினினது தேர்வு நூல்திரட்டுக்களை வெளியிட்ட பதிப்பாசிரியர்கள், 1917-க்கு பின்பு இத்தத்துவத்தைப் பற்றி என்ன பகர்ந்தார்கள் என்பதை ஒரு தடவை நினைவு கூருவோம். தொகுதி XIV, பக்கம் 423-ல் பின்வரும் குறிப்பு:

'தற்பொழுது விசேஷ கவனத்திற்கு உரிய நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மூலத்தை (ட்ரொட்ஸ்கி) 1905ம் ஆண்டுக்கு முன்னதாகவே பிரேரித்திருந்தார், 1905-ன் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியானது பல தொடர்ச்சியான தேசிய புரட்சிகளினோடு, நேரடியாக சோசல¤சப் புரட்சிக்கு மாறிச் செல்லும் என அவர் அதிலே அடித்துக் கூறியிருந்தார்.'

நான் நிரந்தரப் புரட்சி தத்துவம் பற்றி எழுதியது எல்லாம் சரியானது என்று ஒத்துக்கொண்டதை காட்ட நான் இதைச் சொல்லவில்லை. இருந்தபோதிலும் அதைப்பற்றி றடெக் எழுதியதெல்லாம் சரியற்றது என்பதை இதன்மூலம் விளங்கிக்கொள்ள முடியும். முதலாளித்துவ புரட்சி நேரடியாக சோசல¤சப் புரட்சிக்கு வளர்ந்து செல்லும். இது சுருக்கமாக கூறின், வளர்ந்து செல்லும் தத்துவமே அன்றி தாண்டிப்பாயும் என்று சொல்லும் தத்துவமல்ல. இதிலிருந்து, அது யதார்த்தவாதமே அன்றி துணிச்சல்வாத தந்திரோபாயம் அல்லவென்று தெரியும். தற்பொழுது விசேஷ கவனத்திற்குரிய நிரந்தரப் புரட்சி தத்துவம் என்ற சொற்றொடர்களின் அர்த்தம் என்ன? அக்டோபர் புரட்சி நிரந்தரப் புரட்சி தத்துவத்தை விளங்க மேலும் புதிய ஒளியைப் பாய்ச்சியிருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். அதற்கு முன்பு அது அனேகருக்கு தெளிவற்றதாகவோ அல்லது "நிகழக்கூடாத" ஒன்றாகவோ தான் தெரிந்தது. லெனினது நூல்தொகுதி XIV -ன் இரண்டாம் பாகம், லெனின் உயிரோடு இருந்த காலத்திலேயே வெளியானது. ஆயிர பத்தாயிரக் கணக்கான கட்சி அங்கத்தவர்கள் இந்தக் குறிப்பை வாசித்தார்கள். ஒருவராவது 1924 வரை அது தவறு என சொன்னது கிடையாது. றடெக்கிற்கு கூட 1928-ல் மாத்திரந்தான் பிழையாகத் தெரிந்தது.

றடெக் தத்துவத்திற்கு எதிராக மட்டும் பேசவில்லை, தந்திரோபாயத்திற்கு எதிராகவும் பேசுகிறார். 1905 புரட்சியிலும் 1917 புரட்சியிலும் நான் நடைமுறையில் பங்கு கொண்டது என்ன குணாம்சத்தில் என்பதே அவருக்கு எதிரான முக்கியமான விவாதம் ஆகும். 1905 சென்ட் பீட்டர்ஸ்பேர்க்¢ சோவியத்துக்கள் சம்பந்தமான எனது வேலைகளும் புரட்சி எப்படி இருக்கும் என்ற எனது பார்வையின் விஸ்தரிப்பும் ஒன்றோடு ஒன்று பெருந்தியதையே இழிபாசாங்கினர் இன்று தங்குதடையின்றி தாக்குதலுக்கு உட்படுத்துகின்றார்கள். எப்படி அவர்கள் சொல்லும் தவறான பார்வை என்று கூறப்படுவது எல்லோரின் கண்களுக்கு முன்னாலும் ஒவ்வொரு நாளைய பத்திரிகையிலும் எழுதப்பட்ட என்னுடைய அரசியல் நடைமுறை வேலைகளில் ஏதோவொரு வழியில் பிரதிபலிக்காமல் இருந்தது? என்னுடைய அரசியலிலே அந்த தவறான தத்துவத்திற்கு எதிராக ஒன்றும் கூறாமல் ஏன் இந்தக் குற்றவியல் நடுவர்கள் அன்று மௌனிகளாக இருந்தார்கள்? மேலும் முக்கியம் என்னவென்றால், ஏன் லெனின் அந்த நாட்களில் பீட்டர்ஸ்பேர்க்¢ சோவியத் சம்பந்தமான எனது நிலைப்பாட்டை புரட்சியின் உச்சக்கட்டத்திலும் அதன் தோல்விக்கு பின்பும் மிக சக்தியோடு பாதுகாத்தார்?

அதே கேள்விகளை, சிலவேளை கூர்மையான கூரான வடிவில் முறைப்படுத்தி 1917 புரட்சிக்கு பிரயோகிக்கலாம். நியூயோர்க்கில் இருந்து நான் எழுதிய எத்தனையோ கட்டுரைகளில் பெப்ரவரி புரட்சியை நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் நோக்கில் மதிப்பீடு செய்தேன். இந்த அனைத்து கட்டுரைகளும் இப்பாழுது மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. எனது தந்திரோபாய முடிவுகள் அதே நேரத்தில் லெனின் ஜெனிவாவில் இருந்து எடுத்திருந்த முடிவுகளோடு பூரணமாக பொருந்தியிருந்தன. அதே நேரத்தில் காமனேவ், ஸ்ராலின் மற்றும் ஏனைய இழிபாசாங்கினரது முடிவுகளோடு கிஞ்சித்தும் சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகளை கொண்டிருந்தன. நான் பெட்ரோகிராட்டுக்கு வந்தபொழுது, நான் எனது நிரந்தரப் புரட்சி "தவறை" கைவிட்டுவிட்டேனா என்று என்னை எவரும் கேட்கவில்லை. அங்கே அதைக் கேட்பதற்கு கூட ஒருவரும் இருக்கவில்லை. லெனின் வருகை வரை அவர் ஆதரித்து வாதாடி வந்திருந்த கொள்கையை, கட்சி எவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மறக்கவேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையைக் கொண்டு, ஸ்ராலின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு சங்கடத்தில் கோழைத்தனமாக பதுங்கிச் செல்லுகிறார். Yaroslavsky மென்ஷேவிக்குகளுடன் ஒன்றாய், Ordzhonikidze உடன் ஒன்றாய் மற்றும் ஏனையோருடன் ஒன்றாய் இன்னும் கட்டுப்பாட்டுக் குழுவின் உணர்வூட்டுபவராகவில்லை, அவர் Yakutsk - ல் சலிப்பூட்டும் அரைத் தாராண்மை தாளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். லெனினை, ட்ரொட்ஸ்கிச வாதியென குற்றம் சாட்டிய காமனேவ் நான் அவரை சந்தித்தபொழுது: "நீ இப்பொழுது எங்களை பார்த்து நகைப்பாய்" என்றார். அக்டோபர் புரட்சியின்போது போல்ஷிவிக் கட்சியின் பிரதான பத்திரிகையில் நான் நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கைப்பற்றி எழுதினேன். அப்பொழுது எனக்கெதிராக எவரும் வரவில்லை. லெனினுடனான எனது ஐக்கியம் பூரணமானதும் நிபந்தனையற்றதுமாகும். றடெக் உட்பட எனது விமர்சகர்கள் இதுபற்றி என்ன சொல்ல முடியும்? என்ன தத்துவத்திற்கு வாதாடி வந்தேனோ அதை விளங்கிக் கொள்ள முற்றிலும் நானே தவறிவிட்டேன், அதுவும் அந்த முக்கிய வரலாற்று காலகட்டங்களில் அந்த தத்துவத்திற்கு நேர் எதிராக செயல்பட்டேன், மிகவும் சரியா? என்னை விமர்சிப்பவர்கள் மற்ற அனேகவற்றை விளங்காதது போலவே நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் விளங்கவில்லை என்று ஊகிப்பது இலகுவல்லவா? இந்த காலம் கடந்த விமர்சகர்கள் தங்களது சொந்த கருத்துக்களை மட்டுமல்லாமல் ஏனையோரது கருத்துக்களையும் நன்கு பகுப்பாய்வு செய்ய வல்லவர்கள் என்று ஊகித்தால், ஒருவரும் புறநீங்கல் இல்லாமல் 1917 புரட்சியின்போது என்ன கேடுகெட்ட நிலைப்பாட்டை எடுத்தார்களோ அதேபோன்று சீனப்புரட்சியிலும் எடுத்துவிட்டு தங்களை எப்போதுமாய் மறைக்கிறார்கள் என்பதை எவ்வாறு விளக்குவது?

சில வாசகர்கள் நினைவுகூர்ந்து "ஜார் ஒழிக, தொழிலாளர் அரசாங்கம் வருக" என்ற உங்களுடைய மிக முக்கிய தந்திரோபாய சுலோகம் என்னவாயிற்று என்று கேட்கலாம்.

குறிப்பிட்ட வட்டாரங்களில் இந்த வாதம் தீர்மானமானகரமானதாகக் கருதப்படும். இப்படி ட்ரொட்ஸ்கியின் பயங்கர சுலோகமான "ஜார் வேண்டாம்!" என்பது நிரந்தரப் புரட்சி பற்றி விமர்சிப்பவர்களது நாளாவித எழுத்துக்களிலும் இடம்பெற்ற ஒன்றாகும். சில களைப்படைந்த உள்ளங்களின் மற்றவர்களோடு சேர்ந்து தங்குமிடமாகவும், மிக முக்கியமானதும் தீர்க்கமானதுமான விவாதமாகவும் விளங்கியது.

இயற்கையாகவே இந்த விமர்சனம் அறிவின்மையினதும் விசுவாசமின்மையினதும் "பேராசான்களின்" ஒப்புவமையில்லாத லெனினிசத்தின் பிரச்சனைகளை சொல்லும்பொழுது கம்பீரத்தை அடைந்தது.

'நாங்கள் 1905-ல் தோழர் ட்ரொட்ஸ்கியின் மனோநிலையை பற்றி நீளமாக எழுத விரும்பவில்லை. (கட்டாயம் நீளமாக எழுதமாட்டீர்கள்-ட்ரொட்ஸ்கி) விவசாயிகள் ஒரு புரட்சிகர சக்தி என்பதை மறந்துவிட்டு "ஜார் வேண்டாம். தொழிலாளர் அரசாங்கம் வேண்டும்" என்ற அவரது சுலோகம் விவசாயிகள் அற்ற புரட்சியாகும்.' (லெனினிசத்தின் பிரச்சனைகள், ஸ்ராலின்-பக்கம் 174-175)

இந்த ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் விமர்சனத்தை எதிர்கொள்கையில் கிட்டத்தட்ட நம்பிக்கையற்ற எனது நிலைப்பாடு இருப்பினும், அதைப்பற்றிச் சொல்ல எனக்கு விருப்பமில்லாத போதும், இதைத் தணிக்கும் சில சந்தர்ப்பங்களை பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அப்படியான சந்தர்ப்பங்கள் சில உண்டு. தயவுசெய்து செவிமடுக்கவும்.

எனது 1905 கட்டுரையில் சில உதிரியான, சிலேடையான அல்லது பொருத்தமற்ற சுலோகங்கள் தப்பபிப்ராயத்தை தந்திருந்தாலும்கூட அதைப்பற்றி 23 வருடங்களுக்கு பின்னர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இதே பிரச்சனையை பற்றி என்னுடைய ஏனைய எத்தனையோ கட்டுரைகள் உள்ளன. அதனோடு சேர்த்தே அதைப் பார்க்க வேண்டும். இன்னும் முக்கியம் என்னவெனில், அந்த சம்பவங்களின்போது என்னுடைய அரசியல் நடவடிக்கையினோடு அதைக் கவனிக்க வேண்டும். வெறுமனே வாசகர்களுக்கு தெரியாத தலைப்பைக் கூறி (விமர்சகர்களுக்கும் தெரியாத) அந்த தலைப்பை நான் எழுதியதற்கு நேர் எதிரான அர்த்தத்தில் பயன்படுத்த முயல்வதை அனுமதிக்க முடியாது.

நான் எப்போதும் எந்த இடத்திலும் ஒரு போதும் "ஜார் வேண்டாம், தொழிலாளர் அரசாங்கம் வேண்டும்" என்ற சுலோகத்தை சொல்லவுமில்லை பிரயோகிக்கவுமில்லை என்று நான் மேலும் சொன்னால் என்னுடைய விமர்சகர்களுக்கு மிதமிஞ்சியதாகாது. இந்த முக்கிய விவாதத்தை ஆதாரமாக கொண்டே என்னுடைய நீதிபதிகள் பொய் சொல்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வெட்கங்கெட்ட உண்மையைத் திரிக்கும் தவறுகளை செய்கின்றார்கள். "ஜார் வேண்டாம், தொழிலாளர் அரசாங்கம் வேண்டும்" என்ற அறிக்கையை பற்றிய உண்மை என்னவென்றால், அதனை பார்வுஸ் (Parvus) எழுதி வெளியிட்டிருந்தார். ஏற்கனவே அந்த நாட்களில் நான் பீட்டர்ஸ்பேர்க்கில் நீண்ட நாட்களுக்கு சட்டவிரோதமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த துண்டுப் பிரசுரத்தை பற்றி எனக்கொன்றும் தெரியாது. இதைப்பற்றி பிற்காலத்தில் என்னை திட்டித்தீர்க்கும் கட்டுரையினூடே அறிந்தேன். இதைப்பற்றி என் கருத்தை தெரிவிக்க ஒரு வாய்ப்போ வசதியோ கிடைக்கவில்லை. அந்த அறிக்கையை நான் (என்னை விமர்சிப்பவர்களும் கூட) ஒரு பொழுதும் காணவோ வாசிக்கவோ இல்லை. இந்த பிரத்தியேக பிரச்சனையை பற்றிய உண்மையிதுவாகும். எல்லா தால்மான்களதும் செமாட்களதும் இலகுவாய் பரப்பவும் நம்பச் செய்யவும் கூடிய இந்த விவாதத்தை நான் கட்டாயம் இல்லாமற் செய்ய வேண்டும். என்ன செய்வது இதை எண்ணி மனம் வருந்துகிறேன். எந்த உணர்ச்சிகளையும் விட உண்மைகள் உறுதியானவை.

மேலும் சொல்வேன். தற்செயல் சம்பவங்கள் நற்பேறாய் பொருந்திவிட்டன. பார்வூஸ் வெளிநாட்டில் எனக்கு தெரியாமல் "சார் வேண்டாம், தொழிலாளர் அரசாங்கம் வேண்டும்" என்று வெளியிட்ட சுற்றறிக்கையின் போது நான் பீட்டர்ஸ்பேர்க்கில் "ஜார் வேண்டாம், உள்ளூராட்சி மன்றம் வேண்டாம், மாறாக மக்கள் அரசாங்கம் வேண்டும்!" (Neither Tsar nor Zemtsi!) என்ற அறிக்கையை சட்டவிரோதமாக வெளியிட்டேன். தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஆரத்தழுவும் சுலோகமாக மீண்டும் மீண்டும் துண்டுப் பிரசுரங்களின் உரைகளில் அடிக்கடி வெளியிடப்பட்ட இந்த தலைப்பானது, புரட்சியின் ஜனநாயக கட்டத்தை தாவிப் பாய்வது பற்றிய பிந்தைய விவாதப்பொருளை ஜனரஞ்சக வடிவத்தில் வாதிட்டு நிரூபிக்கும் பொருட்டு கருத்திற் கொள்ளப்பட்டது. இந்த வேண்டுகோள் எனது நூல்திரட்டில் மீண்டும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (பாகம் 2, பகுதி 1, பக்கம் 256) நான் விவசாயிகளிடம் கோரிய அறிக்கையை போல்ஷிவிக் கட்சியின் மத்திய குழு பிரசுரித்தது. இருந்தபோதும் "நான் இலகுவில் மறந்துவிட்டேன்" என்று ஸ்ராலினது மேதாவிலாசமான கூற்று கூறுகிறது.

இது மாத்திரமல்ல, சிறிதுகாலத்திற்கு முன்பு, தத்துவ ஆசிரியரும் சீனப்புரட்சியின் தலைவருமான மதிப்புக்குரிய றாபேஸ் (Rafes) சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் தத்துவார்த்த பத்திரிகைக்கு, ட்ரொட்ஸ்கி 1917-ல் பிரேரித்த இந்த பயங்கர சுலோகத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். 1905ம் ஆண்டு சுலோகமென்று எழுதவில்லை, 1917ம் ஆண்டு சுலோகம் என்று எழுதப்பட்டது!. மென்ஷிவிக்கான றாபேஸ்சை நாம் சிலவேளை மன்னிக்கலாம். 1920 வரை Petlyura-வின் அரசாங்கத்தில் "மந்திரியாக" இருந்து போல்ஷிவிக்குகளுக்கு எதிராக போராட வேண்டியது அரசின் கடமை என்று குற்றம் சாட்டிய அவர்களுக்கு அக்டோபர் புரட்சியிலே நடந்த விஷயங்கள் எப்படித் தெரிந்திருக்கமுடியும்! மத்திய குழுவின் பத்திரிகை ஆசிரியர் குழுவுக்கு ஏன் தெரியாமற் போனது? இதுவும் ஒரு அதிசயம்தான். ஒரு முட்டாள் தனம், அப்படி பார்த்தால் என்ன இப்படி பார்த்தால் என்ன...

ஆனால் அது எப்படி முடியும்? என்று நனவுடைய தற்கால வாசகர் ஒருவர் அண்மைய வருடங்களின் குப்பை கூளங்கள் பற்றி உரத்துக்கூவுவார். நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக் கணக்கான புத்தகங்களாலும் கட்டுரைகளாலும் நாம் கற்பிக்கப்படவில்லை.....?

'ஆம், நண்பர்களே, நாம் அப்படித்தான் கற்பித்தோம் இப்பொழுது நீங்கள் புதிதாக கற்க வேண்டியுள்ளது. அது பிற்போக்கு காலத்தில் நாங்கள் செலுத்திய வட்டியும் முதலுமாகும். அதற்கு எதிராக ஒன்றும் செய்திருக்க இயலாது. வரலாறு ஒரு பொழுதும் நேர்கோட்டில் செல்வதில்லை. அது தற்காலிகமாக ஸ்ராலினிச முட்டுச்சந்துக்குள் புகுந்துள்ளது.'

குறிப்புக்கள்

* புரட்சிகர தற்காலிக அரசாங்கம் பற்றிய தீர்மானத்தின் திருத்தப் பிரேரணை அது ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் நிகழ்த்திய பேச்சு, 4-வது பதிப்பு க்ஷிமிமிமி 366, லெனின் கிறாசினின் கட்சிப் பேரான Zimin என்ற பெயரைப் பாவித்துள்ளார்.

1:காலங்கடந்து நிரந்தரப் புரட்சியை விமர்சிப்பவர்கள் இதை ஏற்பார்களா? இந்த அடிப்படை உண்மையை கிழக்கு நாடுகளுக்கு சீனாவுக்கு, இந்தியா போன்ற நாடுகளுக்கு விஸ்தரிப்பதற்கு அவர்கள் தயாரா. [RETURN TO TEXT]

* ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் லண்டன் காங்கிரசின் முடிவுக் குறிப்புரையில் முதலாளித்துவ கட்சிகளுடனான கட்சியின் மனோபாவம் - தேர்ந்தெடுத்த படைப்பு 12, பக்கம் 423

ஜாக்கோபின்

இது அதிதீவிரப் போக்கோடும் வன்முறையோடும் அடையாளம் காணப்பட்ட, பிரெச்சு புரட்சியின் ஒரு அரசியல் குழுவாகும். அரசியற் சட்டத்தின் நண்பர்கள் சமுதாயம் என்ற பெயரில் 1789ல் அமைக்கப்பட்ட இது டொமினிகன்களின் முன்னாள் கான்வென்ட்டில் கூடுவதன் காரணமாக ஜாக்கோபின் மன்றமாக அறியலுற்றது. அது, இது ஆரம்பத்தில் எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக புரட்சியின் நலன்களை காப்பதற்கு தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகளால் அமைக்கப்பட்டது. 1792ல் முடியாட்சியை தூக்கி எறிவதில் அது நேரடிப்பாத்திரம் வகிக்காத போதும், அம்மன்றமானது பின்னர் சுதந்திரம் சமத்துவத்தின் நண்பர்கள், ஜாக்கோபின்களது சமுதாயமாக அதன் பெயரை மாற்றிக் கொண்டது. தேசிய பேரவையின் பிரதிநிதிகளாக இடதுசாரி மொன்டாக்னரை ஏற்றுக்கொண்டது மற்றும் மன்னனுக்கு மரதண்டனை விக்க வேண்டுமென்றும் கோன்டின்களை தூக்கி வீச வேண்டுமென்றும் கிளர்ச்சி செய்தது. 8,000 மன்றங்களுடனும் 500,000 உறுப்பினர்களுடனும் இருந்த ஜாக்கோபின்கள் 1793ல் பயங்கர ஆட்சியின் கருவிகளாக ஆனார்கள். இந்த பாரிஸ் மன்றமானது மாக்சிமில்லியன் ரொபேர்ஸ்பியரை ஆதரித்தது, 1794ல் அவரது வீழ்ச்சிக்கு பின்னர் மூடப்பட்டது. உத்தியோகபூர்வமாய் மூடப்பட்ட போதும் சில வட்டார மன்றங்கள் 1800 வரைக்கும் நீடித்தன.[ RETURN TO TEXT]

Journeyman : மற்றவருக்காக வேலை செய்யும், நாள் கூலி வழங்கப்படும், தேர்ச்சிபெற்ற, அனுபவம் கொண்ட தொழிலாளி.[ RETURN TO TEXT]

சன்குளோற்றர்கள்-(பிரெஞ்சு மொழியில் அரைக்காற்சட்டை இல்லாதவர்கள்) என்ற பதம் 1790க்கும் 1792க்கும் இடையில், மூன்றாம் பிரிவின் ஏயை உறுப்பினர்களை விவரிப்பதற்காக பிரபுக்களாட்சியால் உருவாக்கப்பட்ட பதமாகும். பிரெஞ்சுப் புரட்சியின் ஆரம்பத்தின் போது புரட்சிகர இராணுவத்தின் மோசமாக உடை அணிந்த மோசமாக ஆயுதம் தரித்த தொண்டர்களைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.[ RETURN TO TEXT]

The Mountain: பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றின் உள்ளடக்கத்தில், சட்டமன்றத்தில் உயர்ந்த வாங்குகளில் அமர்ந்திருந்து, தங்களை மொன்டாய்னார்ட்டுக்கள் என அழைத்துக் கொண்ட, உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியல் குழுவைக் குறிக்கும்[RETURN TO TEXT]

The mob: கும்பல் - சாதாரன பொதுமக்கள், வெகுஜனங்கள், கீழ்மட்ட அணி உறுப்பினர்கள், மூன்றாம் பிரிவைச் சேர்ந்தவர்கள், பிலெபிய பாமரக் குடியோன்கள், பாட்டாளி வர்க்கத்தினர், கீழ் வர்க்கத்தினர் இவர்கள் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.[ [RETURN TO TEXT]

 

 
 
©World Socialist Web Site
All rights reserved