Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
ஏகாதிபத்திய யுத்தத்தையும் காலனி ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்!
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

Oppose Imperialist War & Colonialism!
 

1. லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் அதன் காலனி ஆதிக்கத்திற்கும் எதிராக உலக தொழிலாளர் மாநாட்டைக் கூட்டுமாறு 1991, மே தினத்தன்று அழைப்பு விடுத்தது.

இந்த மாநாடு 1991 நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் பேர்லின் நகரில் நடைபெற்றது. இந்நகரில்தான் 75 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது ஏகாதிபத்தியப் போரைப் பற்றிய தனது அழியாப் புகழ் பெற்ற கண்டனத்தை கார்ல் லீப்னெஹ்ட் வெளியிட்டிருந்தார். இந்த மாநாடனது வெற்று ஆரவாரச் சொல்லுக்கும், வார்த்தை ஜாலத்திற்குமான காட்சி அறை அல்ல, அந்த வகையான நாடகப் பேச்சினால் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவித பலனும் இல்லை. பதிலாக அனைத்துலகக் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் மாநாடானது, ஏகாதிபத்திய முதலாளிகளின் தலைவர்களால் முனமொழியப்பட்ட பரந்த வறுமை, அடிமையாக்கல், 'புதிய ஒழுங்குக்கான போர்' ஆகியவற்றுக்கெதிராக, தொழிலாள வர்க்கத்தை, புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கான சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும் சேர்த்துக் கொள்ளவுமிருக்கிறது. உலகத் தொழிலாள வர்க்கத்தினுள் சமூக ஜனநாயக வாதிகள், ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் சந்தர்ப்ப வாதத்தின் அனைத்து பிரதிநிதிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்ட சோசலிச சர்வதேசிய வாதத்தின் மரபியத்தை புதுப்பிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

2. பாரசீக வளைகுடா யுத்தமானது, தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரிய தொழிற்சங்கங்களின் மதிப்பிழந்த தன்மையை அம்பலமாக்கிவிட்டது. ஈராக்கிற்கெதிரான போருக்கு எதிராக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்க எதிர்ப்பு என்று குறிப்பிடத்தக்க ஒன்று உலகில் எங்குமே இருக்கவில்லை. கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உண்மையான வெறுப்பும், தூஷித்தலும் இருந்தபோதிலும், ஏகாதிபத்திய வெறியாட்டத்துக்கு எதிரான வர்க்க எதிர்ப்பு, அமைப்பு ரீதியான, சுதந்திரமான அரசியல் வெளிப்பாட்டை எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை, ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புக்கள் முழுமையாக தவிர்க்கப்பட முடியாத இடங்களில் சமூக ஜனநாயகவாதிகளும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், அதேபோல் ஸ்டாலினிசவாதிகளும் "அவர்களுடைய" அரசாங்கங்களின் போர்க் கொள்கைகளுக்கு அவை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வடிவத்தை எடுக்காத வகையில் பார்த்துக் கொண்டனர். ஆயிரக்கணக்கான குட்டி முதலாளித்துவ சோம்பேறி வேலையாட்களைக் கொண்ட, தொழிலாளர் இயக்கத்தில் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட எல்லாவகையான பழமையான அமைப்புக்கள் அனைத்தும் முதலாளித்துவ அரசின் தொங்கு சதைகளாக மாறின, அவர்களது செயல்முறை மற்றும் அவர்களது அதிகாரபூர்வ வேலைத்திட்டம் ஆகியவற்றைப் பொறுத்த அளவில் ஸ்டாலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், மற்றும் அதிகாரபூர்வ முதலாளித்துவ கட்சிகள் அனைத்துக்கும் உள்ள அரசியல் வேறுபாடுகள் உண்மையில் இல்லாது போய்விட்டன. பிரான்சுவா மித்திரோனின் "சோசலிச" அரசாங்கம், பாரிசில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்ததுடன், ஈராக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளின்மேல் குண்டுகளைப் போட விமானங்களை அனுப்பியது, பிரிட்டனில் சமூக ஜனநாயகவாதிகள் அதிகாரத்தில் இல்லை என்ற ஒன்றுதான் அவர்களையும் அதே மாதிரி செய்யவிடாமல் தடுத்தது என்பதே உண்மை. இருந்த போதிலும் தொழிற் கட்சித் தலைவர் கின்னக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டோரிக் கட்சி பிரதமரின் பாதத்தை வணங்குவதிலும், பிரிட்டனின் தேசியக் கொடி (யூனியன் ஜக்) யின் முன்னால் மண்டியிடுவதிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகளைப் பொறுத்தவரை CDU-உடன் சேர்ந்து ஈராக்கிற்கெதிரான போரை ஆமோதித்துக் கையெழுத்திட்டதுடன், தொழிலாளர், இளைஞர் மத்தியில் எழுந்த போருக்கான எதிர்ப்பின் குரல் வளையை நெரிப்பதற்கு தமது சக்தியிலான அனைத்தையும் செய்தனர். ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்த வரையில் இந்த யுத்தமானது, உலக அரசியலில் சோவியத் அதிகாரத்துவம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியின் பிரதிநிதி என்ற முந்தைய கட்டுக்கதையின் மிச்சசொச்சத்தையும் அழித்தொழித்தது. சோவியத் யூனியனுக்குள் முதலாளித்துவத்தை மீளக் கொணர்வதற்கான கொர்பச்சேவ் அரசாங்கத்தின் வெளிப்படையான திட்டமானது, ஈராக்கிற்கெதிரான போரை கிரெம்ளின் ஆமோதித்துக் கையெழுத்திட்டதில் மிகக் கொடிய குற்றத்தின் சர்வதேச வெளிப்பாட்டைக் காட்டிக் கொண்டது. ஏகாதிபத்திய வாதிகளின் பின்னால் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் அவமானகரமான கூட்டானது, ஒவ்வொரு வர்க்க நனவுள்ள தொழிலாளிக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். அதாவது ஏகாதிபத்திய இராணுவ மயமாக்கலுக்கு எதிராக போராட்டத்தைக் கூர்மைப்படுத்தும் புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டுவதில் இனியும் காலம் கடத்தக்கூடாது எனபதுதான் அது.

3. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்கொண்ட அனைத்து விதமான மகத்தான வரலாற்று மற்றும் அரசியல் பணிகள் இப்போது மிக ஸ்தூலமான வடிவத்தில் முன்னுக்கு வந்துள்ளன. ஈராக் மீதான கொடூரமான குண்டுவீச்சும், அதனுடைய தொழிற்துறைக் கட்டமைப்பை முழுமையாக அழித்ததும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித் தனத்தின் புதிய கொந்தளிப்பின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. லட்சக்கணக்கானோரை அழிக்காமலும், அடிமைப்படுத்தாமலும் முதலாளித்துவத்தால் உயிர்வாழ முடியாது. இந்த நூற்றாண்டில் 1914லும் 1939லும் ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை, கோடிக்கணக்கான மனித உயிர்களைப்பலி கொண்ட இரண்டு போர்களில் தோய்த்தெடுத்தது. பாரசீக வளைகுடா யுத்தத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கையை இன்னும் கணக்கு எடுக்கவேண்டி இருப்பினும், அந்த யுத்தமானது அதைவிட பெரிய அளவிலான உலகப் போருக்கான தயாரிப்பு இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தி உள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு பெரும் நாடக ஆசிரியன், மனித குலத்தினை தனது பார்வையாளராகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதி இரத்தம் தோய்ந்த நிகழ்ச்சிகளை மீண்டும் அரங்கேற்ற தீர்மானித்திருப்பதைப் போலிருக்கிறது.

4. ஆகஸ்ட் 1990ல் இருந்து இவை எல்லாம் இடம் பெற்ற பின்னரும் பாரசீக வளைகுடா யுத்தம் ஒரு வெறும் தனித்த சம்பவம் எனவும், அது எந்தவொரு பரந்த ஏகாதிபத்திய நலன்களுடனும் தொடர்புபட்டது அல்ல எனவும், ஈராக் குவைத்தினை இணைத்துக் கொண்டதால் மட்டுமே அது தூண்டி விடப்பட்டது எனவும் தெளிவுப்படுத்த முடியாத அப்பாவி ஒருவரால்தான் இன்னும் நம்பமுடியும். எண்ணெய் வளமிக்க வளைகுடாப் பிராந்தியங்களை அமெரிக்காவின் பாதுகாப்பு வலயங்களாக மாற்றியதைத் தொடர்ந்து, போருக்குப் பிறகு ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவங்களினால் ஈராக்கின் வடபகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. நடப்பில் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஈராக், ஏகாதிபத்தியவாதிகளால் உலகம் புதிய பகுதிகளாக பிரிக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டதைத்தான் சமிக்ஞை காட்டுகின்றது. முன்னாளைய காலனிகள் மீண்டும் அடிமை நிலைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் சந்தர்ப்பவாதிகளாலும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களாலும், கடந்த காலத்துக்குரியது எனக் கூறிக்கொள்ளப்பட்ட கைப்பற்றல்களும் இணைப்புக்களும் திரும்பவும் இன்றைய நாளின் நடப்பாக இருக்கின்றன.

5. ஈராக்கை அழிக்கவும் கொள்ளையிடவும் ஏகாதிபத்தியவாதிகள் ஆச்சரியப்படத்தக்க அளவு உள்நோக்கத்தோடு ஒற்றுமையை வெளிக்காட்டிக் கொண்டார்கள்: இராணுவ வேசித்தனத்தை கௌரவமாகக் கருதும், ஏகாதிபத்தியத்தின் ஒழுக்கக்கேட்டின் விளைநிலமான ஐக்கிய நாடுகள் அவையில், பலஜோடி முதலாளித்துவ ராஜதந்திரிகள் பாதுகாப்புச் சபையின் கதவுக்குப்பின் வரிசையாக நின்று கொண்டு "வேலையில் இறங்கத் தயாராக இருந்தனர்". ஈராக்கிற்கு எதிரான தாக்குதலுக்காக அமெரிக்கா விடுத்த அழைப்பிற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் மட்டு மல்ல - அதைவிட சிறிய ஏகாதிபத்திய சக்திகளும் செவிசாய்த்தன. ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியன அவற்றில் சிலவாகும். டைனமைட் கண்டுபிடித்தவரின் நினைவாக ஆண்டுதோறும் கௌரவமான "அமைதிப் பரிசு" வழங்கும் நார்வே கூட - ஈராக் எதிர்ப்பு புனிதப்போரில் பங்களிப்பு செய்தது. இந்த கூட்டில் பரந்த அளவிலான பங்களிப்பு, ஈராக்கிற்கு எதிரான யுத்தம் எல்லா ஏகாதிபத்திய சக்திகளதும் காலனித்துவக் கொள்கையை புதுப்பிப்பதை சட்டரீதியாக்கும் என்ற மறைமுக விளக்கத்தின் அடிப்படையிலேயே ஏற்பட்டது. அமெரிக்கா தலைமையிலான இந்த யுத்தத்துக்கு ஆதரவளிப்பதை ஏனைய ஏகாதிபத்திய அரசுகள் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா முதலான இடங்களில் தமது எதிர்கால யுத்தங்களுக்கு அமெரிக்காவின் பூரண ஆதரவை அல்லது அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான முற்கொடுப்பனவாக (Down payment) கருதிக் கொண்டன. ஸ்பெயின் அரசாங்கம், செவில்லே அருகில் உள்ள மொரொன் விமானதளத்தில் அமெரிக்காவிற்கு வசதிகள் செய்து கொடுத்ததானது, மாக்ரெப்பில் தனது சொந்த திட்டத்திற்காக 'பெரும் வல்லரசை' வென்றெடுப்பதற்கே ஆகும், அமெரிக்காவிற்கு ஆதரவளிபப்தற்காக டச்சு அரசாங்கம் தனது முன்னாள் காலனியான சூரிநாமின் வெளிவிவகாரக் கொள்கையின் மீதான கட்டுப்பாட்டினை புதுப்பிப்பதற்கான ஆதரவினைப் பெற்றுக்கொண்டது. புஷ்சும் பேக்கரும் தமது கூட்டினைக் கூட்டியபோது, இத்தகைய எத்தனை கைமாறுகள் இடம்பெற்றனவோ என ஒருவர் கற்பனை செய்யலாம். ஆனால் திருடர்களுக்குள் நட்பு என்று ஏதும் கிடையாது, காலனித்துவத்தின் மறு உயிர்ப்பானது, நீண்டதும் பாரதூரமானதுமான விளைபயன்களைக் கொண்டிருக்கும். 1914க்கும் 1939க்கும் முன்னர்போன்று சிறியதும், பாதுகாப்பற்றதுமான நாடுகளைக் கொள்ளையடிப்பதும் அடிமைப்படுத்துவதும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் தகராறுகளையும் போராட்டங்களையும் ஆழப்படுத்துவதுடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது.

6. 1945லிருந்து உலக முதலாளித்துவத்தின் வடிவத்திலும் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததுடன் நின்றுவிடவில்லை. முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த சந்தைகள், கச்சாப்பொருட்களின் வளங்கள் மற்றும் "மலிவான கூலி உழைப்பு" க்கான தேடல் இவற்றுக்கான அதே மோதல்கள் - மூன்றாவது உலகப் போருக்கும் ஈவிரக்கமற்ற முறையில் இட்டுச் செல்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல "அற்புதங்களை" சாதித்திருக்கிறது பிரபஞ்சத்தின் விதிகளைப் பற்றிய மனிதனின் புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது; அது அண்ட வெளியின் வெடிப்பைப்பற்றிய செயல்பாடுகளின் ஆய்வினை ஆரம்பித்து வைத்துள்ளது; அது மனித உயிரின் மரபியல் கட்டமைப்பை மிக நுட்பமாக வரைந்து காட்டியிருக்கிறது, இதன் மூலம் உயிரியல் ரீதியிலாவது மனித இனத்தின் "பூரணத்துவத்திற்கு" வழிவகுக்க முடியும், ஆனால் விஞ்ஞானத்தால் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியை சமாதான முறையில் தீர்த்து வைப்பதற்கான வழியை கண்டுப்பிடிக்கவும் முடியாது; காணப்போவதும் இல்லை. உலகச் சந்தையின் தேவைகளையும் தூண்டுதல்களையும் உற்பத்தியானது, முதலாளித்துவ அமைப்புமுறை வரலாற்று ரீதியாக வேருன்றி உள்ள உபயோகத்தில் இல்லாத தேசிய அரசு வடிவத்தின் வரையறைகளை உடைத்து நொருக்குகிறது. இந்த முரண்பாடானது, சிறிய எண்ணிக்கையிலான முதலாளித்துவ கும்பல்களினால் ஆளப்படும் உற்பத்தி சக்திகளைக் கொண்ட தனிச்சொத்துடமைக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகவும், திட்டமிட்டும் என்றுமில்லாத அளவு அதிக சிக்கலான வடிவத்தில் தன்னகத்தே கொண்டுள்ள உற்பத்தி முறைகளின் சமூகத் தன்மைக்கும் இடையேயான அடிப்படை மோதலை ஆழப்படுத்தியும் முடுக்கியும் விட்டுள்ளது.

7. சமூக உற்பத்திக்கும் தனிச்சொத்துடமைக்கும் இடையிலும் உற்பத்தியின் உலகத்தன்மைக்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலுமான - இந்த முரண்பாடுகள்தான், இருபதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் இந்தப் பூகோளத்தை திரும்பவும் குலுக்கி எடுக்கும் பலாத்கார அரசியல் வெடிப்புக்களுக்கும் பொருளாதார ஸ்தம்பித்தல்களுக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவற்றை அமுக்கிவைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தபோதும், அவை மீண்டும் ஒரு முறை வெடிப்பை நோக்கி எழுகின்றன. முதலாளித்துவத்தைத் தூக்கி வீசும் சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றி மூலம் அல்லாமல், மூன்றாவது உலகப்போரைத் தடுப்பதற்கான வேறு வழி ஏதும் இல்லை. போரைத் தவிர்ப்பதற்கான எல்லா ஆலோசனைகளும் "அணு ஆயுதக் கட்டுப்பாடு" ஒப்பந்தங்களுக்கான அழைப்புக்கள் முதல் ஆயுதக்குறைப்பிற்காக முதலாளித்துவ வாதிகளிடம் விடுக்கும் அமைதி வேண்டுகோள், மனசாட்சிப்படியான எதிர்ப்பு, கூட்டு வழிபாடுகள் வரை- அனைத்துமே தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் அல்லது மோசடி செய்யும் பயிற்சிகள்தான்.

[வரலாற்றின் படிப்பினைகள்]