Home

Print Version

 

The world capitalist crisis and the tasks of the 4th international.
நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

சர்வதேசியமும்,பாட்டாளிவர்க்கமும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

சோவியத் யூனியன் இன்று

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான்,ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

பின்தங்கிய நாடுகளின் வறுமை

உலகக் கடனின் பெருக்கம்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

அனைத்துலகக்குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

 

 

Fifty Years of the Fourth International

நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

1. 1938 செப்டம்பரில் நான்காம் அகிலம் நிறுவப்பட்டு ஒரு அரை நூற்றாண்டின் பின்னர் உலகப் பாட்டாளிகளினுள்ளே புரட்சிகர தலைமை நெருக்கடியைத் தீர்த்து வைக்க அதனால் நடாத்தப்பட்ட ஈவிரக்கமற்ற போராட்டத்தினை வரலாறு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறது. அனைத்துலகக் குழுவினால் தலைமை தாங்கப்படும் நான்காம் அகிலத்துக்கு வெளியே, தொழிலாளர் வர்க்கத்தினை உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக புரட்சிகரப் போராட்டத்திற்கு அணிதிரட்டி, கல்வி புகட்டும் அரசியல் கட்சி எதுவுமே கிடையாது. அனைத்துலக ரீதியில் தொழிலாளர் இயக்கம் உக்கிரமான நெருக்கடிக் காலப்பகுதியினூடாகச் சென்று கொண்டிருக்கின்றது. இது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட உண்மையாகும். இன்றிருக்கும் பரந்த தொழிலாளர் கட்சிகளாலும், தொழிற்சங்க இயக்கங்களின் தலைமைகளாலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு காட்டிக்கொடுப்புகள், தோல்விகள், விரக்திகளைத் தவிர வேறெதனையும் வழங்கமுடியாதிருக்கிறது. ஸ்ராலினிஸ்டுக்கள், சமூக ஜனநாயகவாதிகள், அமெரிக்க ஏ.எப்.எல்.-சி.ஐ.ஓ. (AFL-CIO) க்களின் பழைய அதிகாரத்துவ இயந்திரங்கள் இதுகாறும் தொழிலாளர் இயக்கத்தினுள் முதலாளித்துவ வர்க்கத்தின் பொலீஸ் படையாக விசுவாசமான முறையில் சேவை செய்து வந்திருக்கின்றன. இவை கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கண்ணெதிரே முழுமையாக மதிப்பிழந்து கொண்டிருக்கின்றன. ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட தொழிலாளர் இயக்கம் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இதே கதைதான். வெட்கமற்ற விதத்தில் அதிகாரத்துவங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சகாக்களாக செயல்ப்படுகின்றன, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை சீர்குலைக்கவும், முதலாளித்துவ நெருக்கடியின் முழுச்சுமையையும் அதன் முதுகின் மீது சுமத்தவும் தம்மால் ஆனதை எல்லாம் செய்து வருகின்றன.

2. அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கம் அதனது பாரம்பரிய தலைமைகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குத் தாக்குதலுக்கு எதிராக மிகவும் அத்தியாவசியமான நலன்களைத் தன்னும் பேண இவர்கள் மறுக்கின்றார்கள். மாறாக இந்த திவாலான தலைமைகள், பாட்டாளி வர்க்கம் சமுதாயத்தின் ஒரு தனித்துவமான வர்க்கமாக இருக்கின்றதென்பதையும், அது முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அதனது சுயாதீனமான நலன்களைப் பேணியாக வேண்டும் என்ற அடிப்படையான கருத்துக்களையும் கூட காலத்திற்கு ஒவ்வாதது என நிராகரிக்கின்றார்கள். முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவகம் செய்யும் அவர்களின் திடசங்கற்பத்தில் அவர்கள் கடந்து செல்லத் தயார் இல்லாத கோடெதுவும் கிடையாது.

3. இந்த ''கைவிடுதல்வாத'' நிகழ்வுப்போக்கு கிரெம்ளின் அதிகாரத்துவம் மற்றும் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் முதல் தொழிற்சங்க அதிகாரிகள் வரையில் தொழிலாளர் இயக்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பிரதிபலிக்கின்றது. கொர்பச்சேவின் தலைமையின் கீழ் ஸ்ராலினிச அதிகாரத்துவம் இன்று அக்டோபர் புரட்சியின் தேட்டங்களின் பேரிலான தமது வாயளவிலான விசுவாசத்தைக் கூட புறக்கணித்துவிட்டு முதலாளித்துவத்தின் மேன்மையை ஒப்புக்கொள்கின்றது. கொர்பச்சேவின் சைகையை ஏற்றுக்கொண்டு உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய முதலாளித்துவ அரசியலினுள் தமது இணைப்பினைப் பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பினைப் பயன்படுத்துகின்றன. சமூக ஜனநாயக அமைப்புக்களைப் பொறுத்தமட்டில், சீர்திருத்தங்களை வழங்க முடியாத முதலாளித்துவத்தின் இயலாமையை, அவை தமது பழைய 'குறைந்தபட்ச' வேலைத்திட்டங்களை நிராகரிப்பதன் மூலம் பிரதிபலிக்கின்றன. சோசலிசப் புரட்சியை 'யதார்த்தமற்றது' என ஒதுக்கித் தள்ளுவதன் மூலம் முதலாளித்துவத்துக்கு தமது அடிபணிதலை கடந்தகாலத்தில் நியாயப்படுத்தி வந்த மார்க்சிசத்தின் திருத்தல்வாத எதிர்ப்பாளர்கள், இன்று 'யதார்த்தத்தின் பேரால் சம்பள வெட்டுக்கள், பரந்த வேலைநீக்கங்கள், அத்தியாவசிய சமூகசேவைகள் ஒழிப்பு ஆகியவற்றை ஏற்கின்றார்கள். அதே பாணியைப் பின்தொடர்ந்து தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிற்சாலைகளில் எஜமானர்களின் பொலீஸ்காரர்களாக அப்பட்டமாகவே தொழிற்படுகின்றனர். முதலாளித்துவ சுரண்டலின் உக்கிரத்தைத் தணிக்க முயலும் தொழிலாள வர்க்கப் பாதுகாப்பு இயக்கங்களாக இருப்பதிலும் பார்க்க, தொழிற்சங்கங்கள் அந்த சுரண்டல் நுட்பங்களை சரியாகச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ வர்க்கத்துடன் நேரடியாக இணைந்து மேலும் மேலும் வெளிப்படையாகவே இயங்குகின்றன.

4. நான்காம் அகிலம் அதன் வரலாற்றினதும் வேலைத்திட்டத்தினதும் சீரிய பண்பு காரணமாக இந்த அழுகி நாற்றெமெடுத்த அதிகாரத்துவ ஒட்டுண்ணிகளின் காட்டிக்கொடுப்புகளுக்கான ஒரே புரட்சிகரப் பதிலீடாக இருக்கிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலம் முழுவதும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டி எழுப்புவதில்தான் பிணைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் முதலாளித்துவ அமைப்பின் தற்போதைய உலக நெருக்கடியினதும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அதன் தாக்கத்தினதும் உள்ளடக்கத்தில், புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் ஆழமான வரலாற்றுப் பரிமானத்தின் மதிப்பை இப்பொழுதுதான் முழுமையாகச் சரியாய் உணரமுடிகிறது.

5. ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை அமைப்பதற்கு முதல் அழைப்பை விட்டிருந்தபோது மகத்தான இரு அகிலங்கள் இருபது வருடங்களுக்குள்ளேயே வீழ்ச்சியுற்றிருந்தன - இரண்டாம் அகிலம் 1914லும் மூன்றாம் அகிலம் 1933லும் - இது 1847ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதிய காலம் முதல் போல்ஷிவிக்குகள் 1917ல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வரை வளர்க்கப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை தகர்க்கும் அளவிற்கு தாக்குதலைத் தொடுத்தது. முதலாவதாக சமூக ஜனநாயகமும் அதற்குப் பின் ஸ்ராலினிசமும் உலக ஏகாதிபத்தியத்தின் சேவையில் சேர்ந்தன. இவற்றின் காட்டிக்கொடுப்புகள் தொழிலாள வர்க்கத்திற்கு மிகப் பிரமாண்டமான தோல்விகளைக் கொடுப்பதற்குப் பொறுப்பாய் இருந்தன. ஏகாதிபத்தியத்தின் இந்த இரு ஏஜென்சிகளினுள்ளும் ஸ்ராலினிசத்தின் பங்கு அளவிடமுடியாத அளவு துரோகமானது. சமூக ஜனநாயகம் வெளிப்படையாகவே சோசலிசப்புரட்சியின் வேலைத்திட்டத்தை நிராகரித்த பொழுது, சோவியத் அரசின் பிரமாண்டமான வளங்களை சடரீதியாக அடிப்படையாகக் கொண்ட அதன் சர்வதேச நடவடிக்கைகள் மூலம் ஸ்ராலினிசமானது, 1917ன் பதாகையை சிடுமூஞ்சித்தனமாகச் சுரண்டியவாறு அதிகோர இரத்தம் தோய்ந்த எதிர்ப்புரட்சிக் குற்றங்களைச் செய்தது. இது அக்டோபர் புரட்சியின் வரலாற்றை நெறிமுறை ரீதியாகப் பொய்மைப்படுத்தி மாபெரும் போல்ஷிவிக்குகளின் பெயர்களை அவதூறுகளின் மூலம் மூடிமறைத்தது. லெனினின் கட்சியை அழித்தது., எண்ணற்ற ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்டுகளைப் படுகொலை செய்ய ஏற்பாடு செய்தது.

6. கற்பனை செய்யவே முடியாத கஷ்டங்களின் எதிரிலும் ட்ரொட்ஸ்கி மார்க்சிசத்தின் வரலாற்று மரபுகளை ஊர்ஜிதம் செய்ததோடு 'தனிநாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு தேசியவாத வேலைத்திட்டத்திற்கு எதிராக உலக சோசலிசப்புரட்சி முன்னோக்கினையும் பேணினார். அவர் போல்ஷிவிக் கட்சி மீதான ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வெற்றி சோவியத் குடியரசில் முதலாளித்துவ எதிர்ப்புரட்சியின் முதலாவது கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக விஞ்ஞான ரீதியில் எடுத்துக் காட்டினார். ஆதலால் முதலாவது தொழிலாளர் அரசினையும் 1917 அக்டோபர் புரட்சியின் தேட்டங்களையும் காக்கும் பொருட்டு ஒரு வரலாற்றுத் தேவையாக, அதிகாரத்துவத்தை ஒரு அரசியல் புரட்சி மூலம் தூக்கி வீசுவது அவசியமானது என்றார். இம் முன்னோக்கினை முன்வைக்கையில், ட்ரொட்ஸ்கி கிரெம்ளினில் ஜி.பி.யு மாபியாவை மட்டும் அல்லாமல், தோல்விகளதும் தனிமைப்படுத்தல்களினதும் காலப்பகுதியில் ஒரு அனைத்துலகக் கட்சியை நிறுவ முடியாது எனக் கூறிக்கொண்ட எண்ணற்ற மத்தியவாத போக்குகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. ட்ரொட்ஸ்கி தமது பதிலில் மார்க்சிச அரசியலில் எது சாத்தியமானது, அல்லது எது சாத்தியமற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை எனவும், மாறாக அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பணிகளை விஞ்ஞான ரீதியில் புரிந்து கொள்வதைத்தான் அடிப்படையாகக் கொண்டது எனவும் வலியுறுத்தினார். மேலும் அவர் நாளைய புரட்சிகளின் நீரோட்டத்திற்கு எதிராக இன்று நீச்சல் அடிப்பவர்களால் மட்டுமே அது தயார் செய்யப்பட முடியும் எனவும் பிரகடனம் செய்தார்.

7. இந்த முன்னாய்வு முழுமையாக ஊர்ஜிதமாகி இருக்கிறது. சோவியத் அதிகாரத்துவம் சர்வதேச சோசலிசம் தொடர்பான அக்கறையை அழுத்தமாக நிராகரிக்கிறது. உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் எவ்வளவுதான் அது வரம்புக்குட்படுத்தப்பட்ட போதிலும் அவற்றிலிருந்து தன்னைப் பகட்டான முறையில் வேறுபடுத்தி, அக்டோபர் புரட்சியின் பெரும் வெற்றிகளை அழிப்பதில் அதிகாரத்துவம் வெளிப்படையாகவே ஆரம்பிக்கிறது. மற்றும் சோவியத் யூனியனுள் முதலாளித்துவ உறவுகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. சோவியத் யூனியன் ஒரு தொழிலாளர் அரசாக உயிர் வாழ்வதென்பது நான்காம் அகிலத்தைக் கட்டி அமைப்பதிலேயே தங்கியுள்ளது. அக்டோபர் புரட்சி வேலைத்திட்டத்தையும், மரபுகளையும் ட்ரொட்ஸ்கிசம் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றது எனும் உண்மை ஒரு விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகும். சோவியத் சமூகத்துக்குள் தொழிலாள வர்க்கத்திற்கும், ஒட்டுண்ணி அதிகாரத்துவத்திற்கும் இடையிலான முனைப்படுத்தல் என்றுமில்லாத செறிவான மட்டத்தை அடைந்துள்ளது. ஒரு புரட்சிகர நிலைமையின் அனைத்து அத்தியாவசிய முன் தேவைகளும் - அனைத்து சமூகத் தட்டுக்களையும் பாதிக்கும் ஒரு தேசிய ரீதியான நெருக்கடியை - பழைய முறைகளில் ஆட்சி செய்ய ஆளும் வட்டங்களால் முடியாதிருத்தல், இருந்துவரும் நிலைமைகளை ஏற்றுக்கொள்ள ஆட்சி செய்யப்படுபவர்கள் சகிக்க முடியாத நிலையில் இருத்தல் இவை சோவியத் யூனியனுக்குள் மிக வேகமாக வளர்ச்சியடைகின்றன. இந் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் அதாவது சோவியத் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவத்துடன் ஒன்றிணைப்பதன் மூலமாகவும் சோவியத் யூனியனுக்குள்ளேயே முதலாளித்துவ உறவுகளை நீடிக்கச் (Expansion) செய்வதன் மூலமும் கொர்பச்சேவின் கொள்கைகள் நேரடியாகவே, போல்ஷிவிக் புரட்சியின் பிரதான வெற்றிகளான தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளை மற்றும் அரச திட்டமிடல் கொள்கைகளை அச்சுறுத்துகின்றன. கொர்பச்சேவின் பெரஸ்துரோய்கா வேலைத்திட்டத்தின் தாக்கம், திட்டமிட்ட பொருளாதாரத்தின் அடித்தளங்களைப் பேணுவதற்காக சோவியத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுக்கும்.

8. அழிந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மரண வேதனையின் முதல் வெளிப்பாடு ஆளும் அதிகாரத் தட்டுகளுக்கிடையிலான குரூரமான மோதல்கள் வெடித்தெழுவதில் வெளிப்படுத்தப்படுவது சாதாரண வழக்காகும். சோவியத் யூனியனுக்குள் இந்த வரலாற்றுப்போக்கு உணரப்பட்டுள்ளது. எனவே இறுதியில் வரலாறு ஸ்ராலினிசத்தையும், அதன் குற்றங்களையும் எட்டிப் பிடித்துள்ளது. மொஸ்கோ வழக்குகளை காலதாமதமாக நிராகரித்ததும், அதன் பலியாட்களை புனர்நிர்மாணம் செய்ததும், ஸ்டாலினால் கொலை செய்யப்பட்ட போல்ஷிவிக் தலைவர்கள் சோவியத் யூனியனுக்கு எதிராக எந்தவொரு குற்றத்தையும் செய்யாதவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளலும், கொர்பச்சேவின் எண்ணங்களும், சூழ்ச்சிகளும் எதுவாக இருப்பினும் அவற்றிலிருந்து ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எந்தவொரு குழுவும் மீளமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரொட்ஸ்கிசத்துக்கு அதாவது உண்மையான மார்க்சிசத்துக்கு எதிரான அதிகாரத்துவத்தின் போரின் பிரதான ஆயுதமாக அமைந்த குரூரமான பொய்ப்புனைவுகள் அம்பலப்படுத்தப்பட்டு மதிப்பிழந்துள்ளன. சோவியத் யூனியனுக்குள் வெடித்தெழுந்துள்ள அரசியல் நெருக்கடி ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு சாவுமணியை அடித்தது மட்டுமல்லாமல், அது நான்காம் அகிலத்தின் சகாப்தத்துக்கான ஓர் அறிகுறியாகும். அதாவது, நான்காம் அகிலம் சோவியத் மற்றும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த கட்சியாக மாறும் சகாப்தம் வந்துள்ளது.