Home

Print Version

 

The world capitalist crisis and the tasks of the 4th international.
நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

சர்வதேசியமும்,பாட்டாளிவர்க்கமும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

சோவியத் யூனியன் இன்று

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான்,ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

பின்தங்கிய நாடுகளின் வறுமை

உலகக் கடனின் பெருக்கம்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

அனைத்துலகக்குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

 

 

Pabloism on the Role of Stalinism

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

47. பப்லோவாதிகளின் சந்தர்ப்பவாதத் தத்துவங்கள், சோவியத் அதிகாரத்துவத்துக்கு ஒரு புரட்சிகரப் பங்கு இருக்கின்றதென நியாயப்படுத்தும் முயற்சியில் அவற்றின் முதலாவது வெளிப்பாடுகளைக் காட்டின. பப்லோவினாலும், ஏர்ணஸ்ட் மண்டேலினாலும் வகுக்கப்பட்ட சாசனத்தில், முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வரலாற்று வளர்ச்சிப் போக்குக்கு இனிமேல் உந்துசக்தி அல்ல என்பதாகும். பதிலாக அது மார்க்சிசத்தினால் விஞ்ஞான ரீதியாக வரையறுக்கப்பட்ட வர்க்கப் போராட்டம் பப்லோவின் கருத்தின்படி, ''முதலாளித்துவ ஆட்சி மற்றும் ஸ்ராலினிச உலகம்'' எனப்படும் இரண்டு சக்திவாய்ந்த முகாம்களுக்கு இடையிலான மோதலினால் கடந்து சென்றுவிட்டது. இந்த புதிய ''புறநிலையான சமூக எதார்த்தத்தினுள்'' நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ் ஏகாதிபத்திய மற்றும் ஸ்ராலினிச ஆட்சிகள் இரண்டிற்கும் எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கு இடமே இல்லை. இரண்டு முகாம்களுக்கு இடையிலான பூகோளப் போர் தவிர்க்க முடியாததெனவும், அந்த ''அப்படியான போர்'' அதன் ஆரம்பத்திலிருந்தே ஒரு சர்வதேச உள்நாட்டுப் போரின் தன்மையைக் கொண்டிருக்கும் என்ற முடிவுக்கு பப்லோ வந்ததிலிருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கம், இருந்துவரும் ஸ்ராலினிச கட்சிகளினுள் செல்வாக்கு செலுத்தி அவற்றை இடதுபக்கம் செல்ல வைக்கும் முயற்சியைத் தவிர வேறு எதுவும் அங்கே செய்வதற்கு இருக்கவில்லை. ஸ்ராலினிசக் கட்சிகளினுள் இயங்கிவரும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் இரண்டாம்தர உதவியுடன் புறநிலை நிபந்தனைகளின் முழுமையான சக்தி, இப்படியான கட்சிகளை இடதுபக்கம் தள்ளி ஏகாதிபத்திய ஆட்சிகளைத் தூக்கிவீச அவர்களை நிர்ப்பந்திக்கும் என்றும், இவ்வாறாக நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் ''உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்'' ஸ்தாபிக்கப்படும் என்று பப்லோவாதிகள் கூறினார்கள்.

48. வரலாறு ஈவிரக்கமற்ற முறையில் இந்தப் போலியான முன்னோக்கின் மேலெழுந்தவாரியான தன்மையை அம்பலப்படுத்தியது. பப்லோ அவரது கருத்தான ''புறநிலையான சமூக எதார்த்தத்திற்கு'' இரட்டை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தார். அவையாவன அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க நிலை ஒருபுறமும் சோவியத் அதிகாரத்துவத்தின் ஆதிக்க நிலை மற்றொரு புறமுமாகும். இவை மோசமடைந்து செல்லும் அமெரிக்க வெளிநாட்டு செலுத்துமதி நிலையினாலும் (Blance of Payments) சோவியத் அதிகாரத்துவத்துக்கு எதிராக கிழக்கு ஐரோப்பாவில் வெடித்தெழுந்த எழுச்சிகளினாலும் விரைவாகவே முரண்பாடடைய ஆரம்பித்தன.

49. இது வெறுமனே ''போர் - புரட்சி'' தத்துவத்தின் பிரமாண்டமான பிரச்சாரங்கள் பற்றியதல்ல. ஆனால் மிக முக்கியமாக அதிகாரத்துவ சுயசீர்திருத்தம், ஸ்ராலினிசத்துக்கு இருக்கும் புரட்சிகரப் பங்கு பற்றிக் கோடிட்டுக் காட்டப்படும் கருத்துரு வரலாற்றினால் மதிப்பிழந்ததைக் காட்டுகிறது. ஸ்ராலினிசத்தின் இயல்பான பரிணாமம் இடது பக்கமாக இருக்கவில்லை, அதாவது உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டமாக இருக்கவில்லை. அதற்கு நேர்மாறாக அது தொடர்ச்சியாக வலதுபக்கம் நோக்கியே இருந்தது. அதாவது தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக உலக ஏகாதிபத்தியத்துடன் மேலும் அதிகரித்துச் செல்லும் நேரடிக் கூட்டை நோக்கியதாய் இருக்கிறது.

50. இருந்தபோதிலும் ஒவ்வொரு நெருக்கடியான கட்டத்திலும் ஸ்ராலினிசத்துக்கு எதிரான நான்காம் அகிலத்தின் உக்கிரப்படுத்தப்பட்ட சுதந்திரமான புரட்சிகரப் போராட்டத்தின் அவசியம் முன்வைக்கப்பட்ட பொழுது, அதிகாரத்துவத்தின் ஆற்றொணா யுக்திகளை, சுயசீர்திருத்த நிகழ்வுப் போக்கின் புதிய மற்றும் இன்றியமையாத சம்பவம் என்ற பிரமையை பப்லோவாதிகள் வளர்த்து வந்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் பப்லோவாதிகள் அதிகாரத்துவத்தில் மார்க்சிசத்தின் ஒரு மரண எதிர்ப்பை அல்ல ஆனால் பலவிதமான ட்ரொட்ஸ்கிசப் பிரிவுகளை வளர்ச்சி செய்வதற்கான அரசியல் விளைநிலத்தையே கண்டனர். இவ்வாறு 1962 மார்ச்சில் பல்வேறு ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களினுள்ளும் அதன் கூட்டாளிகளினுள்ளும் தோன்றுகின்ற தகராறுகளை ஆராய்ந்த ஏர்ணஸ்ட் மண்டேல், பின்வரும் வியக்கத்தக்க ஆய்வைச் செய்தார்;

51. ''சர்வதேச கம்யூனிச இயக்கத்துக்குள் இன்று நடக்கும் விவாதம் ஒரு புரட்சிகர மார்க்சிசத்தை ஒரு உடைந்த முறையில், அதாவது சூரியக் கதிர்களை எப்படி படிகம் அது கொண்டுள்ள வண்ணங்களின் நிறமாலையாகப் பிரிக்கின்றதோ அப்படி பிரதிபலிக்கின்றது என்று கூறமுடியும். விவாதத்தில் பங்குகொள்வோரில் ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடுகள் அத்தனையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்றைய இந்தப் போக்குகள் எதுவும் அவற்றை முழுமையாய் ஏற்கவில்லை. ஸ்ராலினிச மரபை ரஷ்யர்கள் கலைக்கின்றார்கள். சீனர்கள் நிரந்தரப்புரட்சி தத்துவத்திற்கு கிட்டுமானமாக வருகிறார்கள்; கியூபர்கள் தைரியமாக ஒரு தொழிலாளர் அரசு மற்றைய நாடுகளின் பாட்டாளிகளுக்கு, புரட்சியை சர்வதேச ரீதியாக விஸ்தரிக்க அறைகூவல் விட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். யூகோஸ்லாவியர்கள் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர் சபைகளின் கைகளில் இருக்கவேண்டும் என்று விளக்குகிறார்கள். இத்தாலியர்கள் (அவர்களிலும் பார்க்க குறைவாக போலந்து நாட்டவர்கள்) கட்சிக்குள்ளும், தொழிற்சங்கத்திற்குள்ளும் லெனினிய மரபான சுதந்திரக் கலந்துரையாடலுக்குத் திரும்புகிறார்கள்; அல்பானியர்கள் பெரிய அளவினதாயினும் எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் சம உரிமை என்னும் கோட்பாட்டையும் எல்லா சர்ச்சைகளையும் மனம் திறந்த நேர்மையான சர்வதேச கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைக்க வேண்டிய தேவையைப் பிரகடனப்படுத்துகின்றனர். புரட்சிகர மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை ரீதியான நிலைப்பாடு மட்டும் இந்தக் கட்சிகள் ஒன்றினால் கூட ஆதரிக்கப்படவில்லை. இது எமது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஏகபோகமாக இருந்து வருகிறது; அதாவது சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தை வழிநடத்தவும், ஒருமுகப்படுத்தவும் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர சர்வதேசியத்தின் முற்றுமுழுதான தேவையாகும்.'' உண்மையில் அது மட்டுமே!

52. 1963 மறு இணைப்பின் தறுவாயில் மண்டேல் எழுதுகையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் உள்ளே ஏற்பட்டுவரும் சுயசீர்திருத்தல் போக்குகள் ஒரு புதிய அனைத்துலக புரட்சிகர இயக்கத்திற்கு இட்டுச் செல்லும் எனவும் நான்காம் அகிலம் அதில் ஒரு பாகமாக இருக்கும் எனவும் நம்பினார்.. இன்றைய பிளவுகள், குழப்பங்கள் ஊடாக உலக கம்யூனிச இயக்கம் தவிர்க்கமுடியாதபடி தனது சொந்த விதிகளின் படி உயர்மட்டத்திற்கான ஒரு ஐக்கியத்தையும், ஒரு அமைப்பை நோக்கியும், எமது சகாப்தத்திற்குப் பொருத்தமான லெனினிச வேலைத்திட்டத்தின் அடிப்படையினைக் கொண்ட ஒரு கம்யூனிஸ்ட் அகிலத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கிறது'' என்றார்.

53. பப்லோ, அவரது பழைய கூட்டாளியை மீறவிடாதவாறு ஸ்ராலினிசத்துடனான பிளவின் மீண்டும் திருப்பமுடியாத தன்மையை பகட்டாகக் கூறுகையில் ஸ்டாலினுடைய மரணத்தின் பத்தாண்டுகளின் பின் குறிப்பாக சோவியத் யூனியனில் ஸ்ராலினிச ஒழிப்புப் போக்கானது மீண்டும் திருப்பமுடியாதது மட்டுமன்றி, சர்வதேச கம்யூனிச இயக்கம் முழுவதன் புரட்சிகர புத்துயிர்ப்புக்கான அடிப்படைகளை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது என்றவாறான பரிமாணத்தை எடுத்திருக்கின்றது. மற்றைய தொழிலாளர் அரசுகள் என்னவாக இருந்தபோதிலும், புரட்சிகர தலைமையை பின்னே விட்டவாறாக, சோவியத் யூனியனானது 'சீர்திருத்தம்' கூடிய ஒரு சகாப்தப் பாதையில் செல்லவில்லை. ஆனால் அதற்கு மாறாக, அது உலகப்புரட்சிக்கு ஆதரவாக, ஒரு ஸ்திரமான, தீர்மானகரமான, தெளிவான பங்கை நோக்கி செயற்படுகிறது.

54. ஸ்ராலினிசத்திற்கு பப்லோவாதிகளின் அடிபணிவு, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் திரித்தல்களுடன் நிற்கவில்லை. அது நான்காம் அகிலத்திற்கு எதிராக கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் ஜி.பி.யு. (GPU ) கே.ஜி.பி. (KGP) ஏஜெண்டுகளால் செய்யப்பட்ட குற்றங்களை மூடிமறைப்பதற்கும் கூட இட்டுச் சென்றது. 1950களின் ஆரம்பத்திலிருந்து ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது மகன் லியோன் செடோவ் உட்பட நான்காம் அகிலத்தின் முன்னணி உறுப்பினர்களின் படுகொலைகளுக்கு ஏற்பாடு செய்த ஸ்ராலினிச ஏஜெண்டுகள் தொடர்பான எந்தவித புலன் விசாரணைகளையும் பப்லோவாதிகள் எதிர்த்தே வந்தனர். 1955ல் மார்க் ஜிபோரோவ்ஸ்கியைப் பற்றிய அம்பலப்படுத்தல்களைத் தொடர்ந்து செடோவ், நான்காம் அகிலத்தின் செயலாளர் ரூடோல்ப் கிளமென்ட், மற்றும் ஜி.பி. யு விலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர் இக்னேஸ்ரெயிஸ் ஆகியோரைக் கொல்வதற்கு ஸ்ராலினிஸ்டுகளால் பயன்படுத்தப்பட்ட, தகவல்களைக் கொடுத்த, ஜி. பி. யு வின் பிரதான ஏஜண்ட் ஜிபோரோவ்ஸ்கியின் கடந்தகால நடவடிக்கைகளை நான்காம் அகிலம் புலன்விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை ஏர்ணஸ்ட் மண்டேல் நேரடியாகவே எதிர்த்தார்.

55. லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை சம்பந்தமாக புலன்விசாரணை நடத்த, 1975ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்பதை ஆரம்பித்தது. இக்கொலைக் குற்றத்தைத் தொடர்ந்து உடனடியாக சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) யின் வழக்கறிஞர் ஆல்பர்ட் கோல்ட்மெனால் முதல்முறையாக இப்படியான புலன்விசாரணை நடத்தப்பட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மற்றும் முன்னர் வகைப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தஸ்தாவேஜுகளில் அவற்றுள் பல தகவல் சுதந்திரச் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. அந்த தஸ்தாவேஜுக்கள், இந்தப் படுகொலைக்காக பெரிய அளவு ஜி. பி. யு. வலைப்பின்னல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையை பளிச்செனக் காட்டியது ஆரம்பத்திலிருந்தே இந்தப் புலன் விசாரணை பப்லோவாதிகளால் கண்டிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு எதிரான ஜி. பி. யு. குற்றங்கள் பற்றி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவினால் புதிதாக வெளிக்கொணரப்பட்ட இரகசியங்கள், என்றுமில்லாத அளவு வெளிப்படையான தங்களின் ஸ்ராலினிசக் கட்சிகளுடனான கூட்டினைத் துண்டித்துவிடும் என பப்லோவாதிகள் அஞ்சினர்.

56. ஒரு சமயம் கோயோகானில் (Coyoacan) லியோன் ட்ரொட்ஸ்கிக்கு செயலாளராகப் பணிபுரிந்த, அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) பப்லோவாதத் தலைவர் ஜோசப் ஹான்சன், 1940 படுகொலைக்கு முன்னரே ரகசியமாக ஜி. பி. யு. வை சந்தித்ததையும், ''தண்டனை பயமின்றி தகவல்களை தெரிவிப்பதற்காக ஒருவரிடம்'' ரகசியத் தொடர்பை ஏற்படுத்தித் தரும்படி அமெரிக்க அரசாங்கத்துடன் பின்னர் கலந்துரையாடலில் ஈடுபட்டதையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் புலன் விசாரணை வெளிப்படுத்திய தகவல்கள் அடையாளம் காட்டிய பொழுது, பப்லோவாதிகளின் எதிர்ப்பானது வெறித்தனமாக மாறத் தொடங்கியது. 1940ல் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த தலைமை உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட சத்தியப்பிரமாண சான்றுகளின் அடிப்படையில் கட்சி அமெரிக்க அரசாங்கத்துடனான ஹான்சனின் தொடர்புகள் பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்பதை அறிந்து கொண்டது.

57. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால், நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்பதனுள் திரட்டப்பட்டிருந்த ஆதாரங்களை ஆய்வு செய்யவும், தீர்ப்பு அளிக்கவும் விசாரணைக்குழுவினை நிறுவுவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட பொழுது, பப்லோவாதிகள் அவற்றைத் திரும்பத் திரும்ப நிராகரித்தனர். பதிலாக, ''வெட்கமற்ற ஜோடிப்பு'' என்று புலனாய்வைக் கண்டிப்பதற்காக, சர்வதேசப் பிரச்சாரத்துக்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த வகையில் ''ஜோடிப்புக்கள்'' என அழைக்கப்படுபனவற்றின் அப்பாவிப் பலியாட்களாக அவர்கள் வக்காலத்து வாங்குபவர்களுள் ஹேன்சன் மட்டுமல்ல, கடந்த 1930களில் மற்றும் 1940களில் ஜேம்ஸ் பி. கனனின் தனிச் செயலாளராக இருந்த சில்வியா பிராங்ளினுமாவார். இப்பெண்மணி ஸ்ராலினிஸ்டுகளால் திட்டமிடப்பட்டு வைக்கப்பட்டவர் என்று ஜி. பி. யு. வில் இருந்து வெளியேறிய லூயிஸ் புடன்ஸினால் 1947ல் அம்பலப்படுத்தப்பட்டிருந்தார். புடன்ஸின் வெளிப்படுத்தல்களுக்குப் பின் பிராங்ளின் திடீர் தலைமறைவு ஆகியிருந்த போதிலும், மற்றும் அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து, தனது முன்னாள் ஜி. பி. யு. கட்டுப்பாட்டு அதிகாரி ராபர்ட் ஸோப்லனுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது பற்றிய தயாரிப்பில் இருந்தபோதிலும் ஹேன்சனும், சோசலிசத் தொழிலாளர் கட்சியும் அவரை ''சீரிய'' தோழர் என்று தொடர்ந்து புகழ்ந்தனர். சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜாக்பான்ஸ், பிராங்ளினின் தன்னுடைய தனிப்பட்ட நாயகராக இருந்தார் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் 1983ல் கட்சித் தலைமையில் உள்ள அரசாங்க ஏஜண்டுகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் எதிராக, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் முன்னாளைய உறுப்பினர் அலன் கெல்பண்டினால் (Alan Gelfand) வழக்குத் தொடுக்கப்பட்டதன் விளைவாக, 1954 மற்றும் 1958ல் உயர்மன்ற நடுவர்களின் முன் வைக்கப்பட்ட பிராங்ளினின் தஸ்தாவேஜுக்கள் கடைசியாக வெளியிடப்பட்டன. தாம் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள் ஸ்ராலினிச உளவாளியாக செயல்பட்டிருந்ததை பிராங்ளின் ஏற்றுக்கொண்டார் என்பதை, கையெழுத்துப் பிரதிகளின் நகல்கள் காட்டுகின்றன. ஹேன்சனும், சோசலிசத் தொழிலாளர் கட்சியும் பிராங்ளினை விடாப்பிடியாக பேணியதை விளக்கும் சான்றினையும் கூட ஜி. பி. யு. ஏஜண்ட் என்று லூயிஸ் புடன்ஸினால் இனங்காட்டப்பட்டதானது, ஹேன்சனின் தனிப்பட்ட கடிதத் தொடர்புகளிலிருந்து தோன்றுகிறது, அனைத்துலகக்குழுவின் இந்த மறுக்கமுடியாத நிரூபனமான குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும் பப்லோவாதிகள் பிராங்களின் மற்றும் ஹான்சனைத் தொடர்ந்தும் பாதுகாத்தனர். இவ்வாறாக ஏஜெண்டுகளைப் பாதுகாத்தல், ஸ்ராலினிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பேரில் நான்காம் அகிலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக அலட்சியமாக இருத்தல், பப்லோவாதிகளின் ட்ரொட்ஸ்கிசக் காட்டிக்கொடுப்பின் மிகவும் கேவலமான வெளிப்பாடு மட்டுமேயாகும்.

58. தங்களுடைய வேலைத்திட்ட திருத்தல்கள் மற்றும் ஸ்ராலினிச குற்றங்களை மூடி மறைத்தல் ஆகிய இரண்டினாலும் பப்லோவாதிகள் நான்காம் அகிலத்தை ஸ்ராலினிசத்திற்கெதிரான புரட்சிகரப் போராட்டங்களிலிருந்து திசைதிருப்பி, அதிகாரத்துவத்தின்மேல் பிரமைகளை வளர்க்க முயற்சித்ததோடு ட்ரொட்ஸ்கியினுடைய ஆய்வின் உள்ளடக்கத்தைத் திரிக்கவும், அதன் புரட்சிகர முனைப்பை மழுங்கடிக்கவும் நான்காம் அகிலத்தின் சுதந்திரமான வேலைத்திட்டத்தை அரசியல் ரீதியில் அழித்தலை நியாயப்படுத்தவும் முயன்றார்கள். பப்லோவாதிகளின் ட்ரொட்ஸ்கிசம் பற்றிய இந்த திரித்துப் புரட்டல்களை திரும்ப நினைவு கூறுவோமாயின் அவ்வளவு வெளிப்படையாக வரலாற்றால் அது தவறானதென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை நினைவு கூறுவது ஒரு புலமைவாதப் பயிற்சி அல்ல. இன்றைய காலப்பகுதியில் ஸ்ராலினிச நெருக்கடியால் முன்வைக்கப்படும் புதிய அரசியல் சவால்களை எதிர்கொள்ள, திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வது இன்றியமையாதது.