WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

உலக சோசலிச வலைத் தளத்தின் நான்காம் ஆண்டு

use this version to print | Send feedback 

ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை ஜனாதிபதியாக அமர்த்தியதில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் பொறியமைவு செய்யப்பட்ட வலது-சாரி அரசியல் கவிழ்ப்பின் உச்சம் பெற்றதுடன் 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக அரசியலிலும் பரந்த ஒரு தீவிர வலதுநோக்கிய மாற்றம் நடந்துகொண்டிருந்தன என்பது வெகு விரைவிலேயே தெளிவானது.


தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் ஒரு இரக்கசுபாவமுள்ள பழைமைவாதிகள்என்று கூறியதில் சுருக்கமாக வெளிப்படுத்தியிருந்த அவரது கண்ணியமிக்கவர் போன்றதான நடிப்பை புஷ் கைவிட்டு வரலாற்றிலேயே செல்வந்தர்களுக்குக் மிகப் பெரிய வரிவிலக்குகளை மையமாக கொண்ட ஒரு அதி-வலதுசாரி வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார். பெருநிறுவன அதிகாரிகளையும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளையும் கொண்டு நிரப்பிய ஒரு அமைச்சரவையை அவர் உருவாக்கினார். ஈராக் மீதான அமெரிக்க குண்டு வீச்சை அவர் விரிவுபடுத்தினார். வெளித்தோற்றத்திற்கு விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படாதமண்டலத்தை திணிப்பது தான் நோக்கமாய் காட்டப்பட, ஆனால் மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் இருக்கக் கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கைப்பற்றுவதற்குத் திட்டமிடுவதற்கு துணை ஜனாதிபதி டிக் ஷென்னி தலைமையில் ஒரு இரகசிய எரிசக்தி செயற்குழுவை அமைத்தார்.

பரந்த இராணுவ நடவடிக்கைக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன, அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான போலிச்சாட்டு மட்டுமே அவசியமாக இருந்தது. சுமார் 3,000 பேரைக் கொன்ற செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதிகள் தாக்குதல் இதனை வழங்கியது. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கிளர்ச்சிக்கு சிஐஏ வழங்கி வந்த ஆதரவில் இருந்து எழுந்த ஒரு அமைப்பான அல் குவைதா நடத்திய இத்தாக்குதலில் நான்கு விமானங்கள் ஒரேசமயத்தில் கடத்தப்பட்டன. இது எச்சூழலில் இவ்வாறு நடக்க முடிந்தது என்பது இதுவரை தீவிரமாக விசாரிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. இராணுவவாதம் மற்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாது முக்கிய முதலாளித்துவ நாடுகள் அனைத்திலுமே ஜனநாயக உரிமைகளை அழிப்பதான ஒரு வேலைத்திட்டத்திற்கான சகலத்திற்கும் நியாயம் கற்பிப்பதற்கான காரணமாய் 9/11 தாக்குதல் ஆக்கப்பட்டது.

9/11க்குப் பின்னர் ஒரு மாதத்திற்கும் குறைந்தவொரு காலத்தில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானுடன் ஒரு முக்கியமான போரில் ஈடுபட்டிருந்தது. அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தொடர்பு கொண்டிராத ஈராக் மீது ஆக்கிரமிப்பு செய்வதற்கான அவசரகாலத் திட்டங்களை தயார் செய்வதற்கும் பெண்டகன் தொடங்கியது. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட நேட்டோ கூட்டணி உறுப்பினர்களும், அத்துடன் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நேட்டோ அல்லாத சக்திகளும் ஆப்கானிஸ்தான் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பில் பங்குபெற்றன.

அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே, புஷ் நிர்வாகம் ஒரு எல்லையற்ற பயங்கரவாதத்தின் மீதான போரைஅறிவித்திருந்தது, இது ஒட்டுமொத்த உலகத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஆப்கானிஸ்தானிலான இராணுவ நடவடிக்கை மற்றும் உள்நாட்டிலான அரச ஒடுக்குமுறையின் பிரம்மாண்டமான பெருக்கம் இரண்டையுமே வழிமொழிந்தனர். இது USA Patriot Act சட்டத்தின் நிறைவேற்றத்திலும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின்  உருவாக்கத்திலும் உருவடிவம் பெற்றது. 


2001 இல் புஷ் ஜோர்ஜியாவிலுள்ள துருப்புக்களை  பார்வையிடுகின்றார்


புஷ் நிர்வாகத்தின் முதல் மாதங்கள்

புஷ்ஷின் அமைச்சரவையில் பங்குபெற்றிருந்தவர்களிலும் அது பின்பற்றிய சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளிலும் புஷ் நிர்வாகத்தின் தீவிர- வலது குணம் துரிதமாக வெளிப்பட்டு விட்டது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அரச வழக்கு தொடுனர் ஜோன் ஆஷ்கிராப்ட். கிறிஸ்தவ அடிப்படைவாதியான இவர் தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பதையும் மற்றும் இதர அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் எதிரானவராய் இருந்தவர்.

திருடப்பட்ட 2000 தேர்தலுக்குப் பின்னர், புஷ் அதிகாரத்துக்கு வருவதை எதிர்ப்பதான எந்த பாவனைகளையும் ஜனநாயகக் கட்சி கைவிட்டதோடு, புதிய ஜனாதிபதிக்கு முகஸ்துதி செய்தது. இதை "புஷ்ஷின் அரசியல் தேனிலவு: ஜனநாயகக் கட்சியினர் ஏன் சட்டவிரோத அரசாங்கத்தின் பின்னால் திரள்கின்றனர்" என்கிற கட்டுரையில் WSWS விளக்கியது. ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து முன்னாள் பசுமைக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரல்ப் நாடரும் "பெருநிறுவன நலன்களுக்காக" வெட்டுகளை பரிந்துரைத்ததற்காக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் பக்கங்களில் புஷ்ஷை புகழும் அளவுக்குச் சென்றார்.

ஜனநாயகக் கட்சியினரின் உதவியுடன் புஷ் நிர்வாகம் பாரிய மற்றும் வரலாற்றில் இதற்கு முன்னர் கண்டிராத அளவுக்கு செல்வந்தர்களுக்கான வரி வெட்டுகளை முன்னெடுத்தது. இது சமூகத்தின் செல்வச்செழிப்பான அடுக்குகளுக்கு நூறு பில்லியன்கணக்கான டாலர்களைக் கொண்டு சேர்த்தது. அதே நேரத்தில் தீவிரமடைந்த மந்தநிலையில் பத்தாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர், அத்துடன் அரசாங்கத்தின் அத்தனை திசைகளிலும் இருந்தும் மிகப் பெரும் தாக்குதல் தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்ந்தது. வேலையிடப் பாதுகாப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரைமுறைகள் அகற்றப்பட்டமை, நசுக்கும் கடன் மட்டங்களில் இருந்து சாதாரண மக்கள் தப்பிப்பதை இன்னும் கடினமாக்கிய திவால் சட்டங்களிலான மாற்றங்கள், வழக்காடும் உரிமையில் கட்டுப்பாடுகள் ஸ்தாபிக்கப்பட்டமை, மத மூடநம்பிக்கைகளை ஊக்குவித்தமை, அறிவியல் மீதான தாக்குதல்கள், அத்துடன் தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பதை மாற்றுவதற்கான முனைப்புகள் ஆகியவை இத்தாக்குதலில் இடம்பெற்றன.

கிளிண்டன் நிர்வாகம் பின்பற்றிய இராணுவவாதக் கொள்கைகளை புஷ் கூர்மையாய் தீவிரப்படுத்தினார். ஈராக்கில் அவ்வப்போதான குண்டுவீச்சு நடவடிக்கைகளின் மூலமாக கிளிண்டன் நிர்வாகம் ஒரு பறக்கத் தடை பெற்ற மண்டலத்தைப் பராமரித்து வந்திருந்தது. புஷ், ஷென்னி மற்றும் ரம்ஸ்பீல்டுடன் சேர்த்து அரசாங்கத்திற்குள் கொண்டுவரப் பெற்றிருந்த நவ-பழமைவாதக் கூறுகள் ஈராக் மீது முக்கிய கவனம் செலுத்துவதை குறிப்பிட்ட WSWS, புஷ் ஈராக்கிற்கு எதிராகப் போருக்கு செல்ல தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறாரா என புதிய நிர்வாகத்தின் முதல் வாரத்திலேயே தீர்க்கதரிசனமான ஒரு கேள்வியை எழுப்பியது.

எனினும், சீனாவின் தென்கோடி மாகாணமான ஹைனான் தீவு அருகே சீனாவின் ஒரு போர் விமானத்துடன் மோதலில் அமெரிக்க உளவு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்ட போது புஷ் நிர்வாகம் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் விடயங்களை நகர்த்த நேர்ந்தது. வெள்ளை மாளிகையின் தரப்பில் இருந்து ஆரம்பத்தில் தீவிரமான பிரதிபலிப்புகள் வந்தபோதிலும், தமது பல பில்லியன் டாலர் முதலீடுகளைக் குறித்துக் கவலை கொண்ட வணிக நலன்கள், நிர்வாகம் இராஜதந்திரரீதியான தப்பிப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும் என்று கோரின.

அரசியல் ஸ்தாபகத்தின் அத்தனை அடுக்குகளுமே புஷ் நிர்வாகத்தின் வலது-சாரிக் கொள்கைகளுடன் ஒத்துழைத்துச் செல்வதை உபதேசித்த மற்றும் ஊக்குவித்த அச்சமயத்தில், சின்சினாட்டியில் நிராயுதபாணியான ஒரு ஆபிரிக்க-அமெரிக்க இளைஞரை போலிஸ் சுட்டுக் கொன்றதற்குப் பின்னர் வெடித்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலகத்தில் அமெரிக்காவின் வர்க்கப் பிரிவினையின் ஆழம் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது. இந்நகரின் குணாம்சமாய் இருந்த நச்சுத்தனமான இனவெறி உறவுகளின் விளைபொருளே இது என்று அநேக ஊடகங்கள் கூறியதற்கு மாறாக, உலக சோசலிச வலைத் தளமோ, சிறுபான்மையினருக்குச் சொந்தமான வணிகங்களும் கறுப்பின அரசியல்வாதிகளும் வறுமை, வேலையின்மை மற்றும் பெருகும் சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றையே உண்மையான பிரச்சினைகளாக கொண்டுருந்த அமெரிக்காவின் வெள்ளை அல்லது சிறுபான்மை தொழிலாளர்களுக்கு உதவுகின்ற எதையுமே செய்யவில்லை என்பதை வலியுறுத்தியது. 


ஜனாதிபதி புஷ் உயர் படை அதிகாரிகளை சந்திக்க பெண்டகனுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றார்

மேலதிக தகவல்கள்

·         6 February 2001 அமெரிக்க அரசியல் நெருக்கடியின் உலக வரலாற்றுத் தாக்கங்கள்

·         8 February 2001Bush's tax cut plan: big lies and a little truth

·         20 March 2001 அமெரிக்க பங்குமுதல் சந்தை சறுக்கி வீழ்ந்துள்ளது: அமெரிக்க,                      உலக அரசியலில் ஒரு திருப்பு முனை

·         16 May 2001The Bush cabinet: a government of the financial oligarchy

·         24 May 2001The Cincinnati riots and the class divide in America 
Part 1: gentrification and police repression

·         14 August 2001Bushs stem cell decision: an attack on medical science and democratic rights


2011 பயங்கரவாதத் தாக்குதல்

நியூயோர்க் நகரத்தின் உலக வர்த்தக மையத்தை அழித்து பெண்டகனை பெருமளவில் சிதைத்த 2001 செப்டம்பர் 11 தாக்குதல்கள் அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த படுகோரமான பயங்கரவாத நடவடிக்கைகளாக இருந்தன.

தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரங்களில் எழுதி அடுத்த நாளில் பிரசுரமான "நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் அரசியல் வேர்கள்" என்கிற WSWS இன் ஆரம்ப பிரதிபலிப்பு அனைத்து முக்கியமான அரசியல் பிரச்சினைகளையும் முன்வைத்தது. "இப்பயங்கரவாதத் தாக்குதல்களை WSWS திட்டவட்டமாக கண்டனம் செய்கிறது" என்று அக்கட்டுரை ஆரம்பித்தது.

வணிகரீதியான நான்கு பயணி விமானங்களைக் கடத்தி அவற்றை பறக்கும் குண்டுகளாக மாற்றியதற்குப் பொறுப்பானவர்கள் யாராயினும் அவர்கள் பாரியப் படுகொலைக் குற்றத்திற்குரியவர்களாவர்.....மனிதரை மனிதர் கொல்லும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் விரக்தியான அவநம்பிக்கை, மதரீதியான மற்றும் அதி-தேசியவாத ஆதீதவெறுப்பு  அத்துடன் அருவருப்பூட்டும் குணாம்சமுடைய அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் - இவற்றின் ஒரு நச்சுத்தனமான கலவையை வெளிப்படுத்துகின்றன.

ஆயினும் இத்தாக்குதலுக்கான முக்கிய பழியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதே WSWS சுமத்தியது. 1983 முதலாக அமெரிக்க அரசாங்கம் லெபனான், லிபியா, ஈராக், ஈரான், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் என ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேனும் ஒரு மத்திய கிழக்கு நாட்டின் மீது குண்டுவீச்சை நடத்தி வந்திருந்தது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது மனிதப்பண்பின் மீதானவெறுப்பு, முரட்டுத்தனம் மற்றும் பொறுப்பின்மையின் ஒரு கலவையாக இருக்கிறது. உலக மக்களின் பெரும் பிரிவினரிடையே   வஞ்சத்தைக் கொழுந்து விட்டு எரிய வைத்து, இரத்தம்தோய்ந்த  பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கான ஒரு பாதையை அமெரிக்கா பின்பற்றி வந்திருக்கிறது.

"தொழில்நுட்பரீதியாக மிகவும் முன்னேறிய பெரும் உளவு சாதனங்களின் உதவியுடன் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கக் கூடிய" ஒசாமா பின் லாடன் தான் இத்தாக்குதலின் பின்னமைந்த தனியொரு மனிதர் என்பதான குற்றச்சாட்டு "பிரச்சனைக்குரிய பல கேள்விகளை" எழுப்புகிறது என்று WSWS எழுதியது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு அரசாங்கத்தையும் அதன்வழியாக சோவியத்தின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து சண்டையிடுவதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்குவது என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்த முடிவின் விளைபொருட்களே பின் லேடனும் அல் குவைதாவும் என்பதை WSWS குறிப்பிட்டுக் காட்டியது.

பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து உடனேயே போருக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டதை சுட்டிக் காட்டியதன் பின்னர், இந்த அறிக்கை தீர்க்கதரிசனமான ஒரு எச்சரிக்கையுடன் முடித்தது:

ஆளும் உயரடுக்கின் மூலோபாய மற்றும் நிதியியல் நலன்களால் உந்தப்பட்டு அமெரிக்காவால் பின்பற்றப்பட்ட கொள்கைகளே செவ்வாயன்று கட்டவிழ்ந்த ஒரு பயங்கர சம்பவத்திற்கு அடித்தளமைத்தது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டப் போவதில்லைஎன்ற ஜனாதிபதியின் அச்சுறுத்தலால் சுட்டிக்காட்டப்படும் புஷ் நிர்வாகத்தினால் இப்போது  ஆலோசிக்கப்படும் நடவடிக்கைகள் மேலதிக பேரழிவுகளுக்கே வழியமைத்துத் தரும்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், புஷ் நிர்வாகம் போரை விரும்புவது ஏன் என்ற தலைப்பிலான ஆசிரியர் குழுவின் இரண்டாவது அறிக்கை, செப்டம்பர் 11 தாக்குதல்கள் வெளிநாடுகளில் வெகுகாலமாகத் திட்டமிடப்பட்டு வரும் இராணுவவாதத்தை அதிகரிப்பதற்கும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குமே வினையூக்கியாக சேவை செய்யும் என்று எச்சரித்தது. இந்த அபிவிருத்திகள் ஆழமான சமூக மற்றும் அரசியல் வேர்களைக் கொண்டிருந்ததை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியது.

உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீதான தாக்குதல்கள், ஆளும் வர்க்கத்தில் இருக்கும் மிகவும் வலது-சாரிக் கூறுகள் நீண்டகாலமாய் நடைமுறைப்படுத்துவதற்கு காத்துக் கொண்டிருந்த ஒரு அரசியல் செயல்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான வாய்ப்பாக பற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடந்து ஒரு நாள் கூட ஆவதற்கு முன்னேயே, தாக்குதலின் மூலகாரணம்  அல்லது இந்த சதியின் பரிமாணங்கள் வெளிப்படையாக எடுத்துக்காட்டப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்கா போரில் இறங்கி விட்டது என்றும் போர்கால அவசரநிலையின் பின்விளைவுகள் அனைத்தையும் அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றும் அரசாங்கமும் ஊடகங்களும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தைத் ஆரம்பித்துவிட்டிருந்தன.

 

வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை எல்லைகளின்றி விரிவுபடுத்துவது மற்றும் உள்நாட்டில் எந்த எதிர்ப்பையும் ஒடுக்குவது ஆகிய இப்போது முன்னெடுக்கப்படும் கொள்கைகள் வெகுகாலமாக தயாரிப்பில் இருந்து வந்திருப்பன ஆகும். இத்தகைய கொள்கைகளுக்கு அமெரிக்க மக்களிடம் இருந்து எந்த முக்கிய ஆதரவும் இல்லாததாலும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கும் ஏகாதிபத்தியப் போட்டியாளர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பினாலுமே அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்கு இக்கொள்கைகளை அமுல்படுத்த முடியாது இருந்தது.

இப்போது செப்டம்பர் 11 நிகழ்வுகளால் பொதுமக்களிடம் உருவாகியிருக்கும் அதிர்ச்சி மற்றும் வெறுப்பு மனோநிலையைச் சுரண்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய பொருளாதார மற்றும் மூலோபாய நோக்கங்களை முன்னெடுக்க புஷ் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அமெரிக்க-எதிர்ப்பு: முட்டாள்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்று தலைப்பிட்ட இன்னொரு கட்டுரை, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு கோட்பாட்டுடனான ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு பதிலாக கொச்சையான அமெரிக்க-எதிர்ப்பின் மூலம் பிரதிபலித்த விரக்தியுற்ற நடுத்தர-வர்க்கக் கூறுகளுக்கு எதிராய் ஒரு கோட்பாட்டுடனான நிலைப்பாட்டை எடுத்தது. உலகமெங்கும் ஏகாதிபத்தியக் கொள்கைகளை நடத்திக் கொண்டிருந்தது அமெரிக்க அரசாங்கமே அன்றி அமெரிக்க மக்கள் அல்ல என்பதை WSWS விளக்கியது.

அமெரிக்க அரசாங்கம் மக்களின் உண்மையான குரலாகவும் பிரதிநிதியாகவும் இருப்பதாகக் கூறிக் கொள்வதை அம்பலப்படுத்துவதே அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கும் எதிரான போராட்டத்திற்கு, முதலும் முதன்மையாய் அவசியமாயிருப்பதாகும். துயரகரமான பின்விளைவுகளைத் தவிர்க்கவியலாமல் தாங்கியிருக்கும் ஜனநாயக-விரோத மற்றும் கொள்ளையடிக்க அமெரிக்க ஆளும் உயரடுக்கு நடத்துகின்ற சமயத்தில், அப்பாதையில் அது அமெரிக்க மக்களின் பெயரை மோசடியாக பயன்படுத்திக்கொள்கிறது என்பதை விளக்க சோசலிஸ்டுகள் கடமைப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் WSWS, 9/11 நிகழ்வுகள் தொடர்பான உத்தியோகப்பூர்வ விளக்கத்தை  நிராகரித்து, பல விரிவான எச்சரிக்கைகள் மற்றும் சதிகாரர்கள் மீதான நேரடியான கண்காணிப்புகளையும் மீறி இந்தத் தாக்குதல்களை நடக்க விட்டதில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் பாத்திரம் இருக்கிறது என்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருந்த தகவல் மீதான தனது சொந்த மதிப்பாய்வையும் மேற்கொண்டது. 2002 ஜனவரியில் செப்டம்பர் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அரசாங்கம் முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்ததா? என்கிற தலைப்பில் பட்ரிக் மார்ட்டின் எழுதிய நான்கு-பாகங்கள் கொண்ட கட்டுரைத் தொடரில் இது சுருங்கக் கூறப்பட்டிருந்தது.


செப்டம்பர் 11, 2001 தாக்குதல்

 

மேலதிக தகவல்கள்

12 September 2001The political roots of the terror attack on New York and Washington

14 September 2001Why the Bush administration wants war

22 September 2001Anti-Americanism: The anti-imperialism of fools

18 December 2001The bin Laden videotape: the reactionary politics of terrorism


ஆப்கானிஸ்தானில் நேட்டோ போர்

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு ஒரு மாதத்திற்குப் பின், அமெரிக்க அரசாங்கம் தலிபான்களுக்கு எதிரான ஒரு குண்டுவீச்சுப் பிரச்சாரத்துடன் தனது ஆப்கான் ஆக்கிரமிப்பை தொடங்கியது. "தற்காப்புஎன்ற புஷ் நிர்வாகத்தின் கூற்றுகள் சுயதேவைகளுக்கான பொய்களே என்பதை WSWS அம்பலப்படுத்தியது. பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அல்லது பின் லேடனை நீதியின் முன் நிறுத்துவது இவற்றிற்கெல்லாம் கொஞ்சமும் தொடர்பின்றி அமெரிக்க ஆளும் உயரடுக்கானது தனது சொந்த பொருளாதார நலன்களை மேலும் முன்செலுத்துவதற்கான ஒரு போலிச்சாட்டாகவே பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டது.

ஆக்கிரமிப்பு பற்றிய முதல் அறிக்கையில் WSWS ஆசிரியர் குழு பின்வருமாறு எழுதியது:

செப்டம்பர் 11 நிகழ்வுகள் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு செயலூக்கியாக சேவை செய்திருக்கும் அதே நேரத்தில், உண்மையான காரணம் இன்னும் மிக ஆழமான ஒன்றாகும். இந்தப் போர் அல்லது எந்தப் போராயினும் சரி, அதனது முற்போக்கான அல்லது பிற்போக்கான தன்மை என்பது, அதனை தொடர்ந்த உடனடி நிகழ்வுகளால் தீர்மானிக்கப்படுவன அல்ல, மாறாக வர்க்கக் கட்டமைப்புகள், பொருளாதார அடித்தளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுகளின் சர்வதேச பங்கு ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. இந்த தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்து கண்டால், அமெரிக்காவின் இப்போதைய நடவடிக்கை ஒரு ஏகாதிபத்தியப் போராகும்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நீண்டகால சர்வதேச நலன்களைப் பின்பற்றியே அமெரிக்க அரசாங்கம் போருக்கு தொடக்கமளித்திருக்கிறது. போரின் முக்கிய நோக்கம் என்ன? ஒரு தசாப்தத்திற்கு முன்னால் சோவியத் ஒன்றியம் உருக்குலைந்ததானது உலகில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்களின் அளவில் உலகின் இரண்டாம் பெரிய கையிருப்புப் பகுதியாய் நிரூபணமாகியிருக்கும்  மத்திய ஆசியாவில் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது.

மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் மேலாதிக்கம் செய்வதற்கான அமெரிக்க உந்துதல் பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து வந்ததில்லை மாறாக சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவால் அந்நிய முதலீட்டிற்கென திறந்து விடப்பட்ட எரிசக்தி கையிருப்புகளை சுரண்டுவதற்கான விருப்பத்தில் இருந்து வந்ததாகும். இப்பிராந்திய மேலாதிக்க விடயத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு மோதலின் சாத்தியத்தை 2001 இன் ஆரம்பத்திலேயே WSWS கட்டுரை ஒன்று ஏற்கனவே அடையாளம் காட்டியிருந்தது.

சோவியத் ஆக்கிரமிப்பின் முடிவு காலத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஒரு வரலாற்றுப் பார்வையைக் கொண்டு தனது ஆய்வை WSWS மேலும் ஆழப்படுத்தியது. ஒசாமா பின் லேடன் மற்றும் தலிபான் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆரம்பகாலத்தில் அமெரிக்கா ஆதரவளித்ததை நினைவுகூர்ந்த WSWS, அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அதே சமயத்தில் பிற்போக்குத்தனமானதும் இறுதியில் ஏகாதிபத்தியத்திற்கு உதவுவதாகவும் முடிகின்ற பயங்கரவாத வழிமுறையையும் கண்டனம் செய்தது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் சமரசமற்ற எதிரிகளாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு பரஸ்பர உறவைக் கொண்டிருக்கிறார்கள் என்பதோடு அமெரிக்க வெளிறவுக் கொள்கைக்கான முக்கியமான கருவிகளாகவும் சேவை செய்கின்றனர்.

அமைதிவாத மற்றும் முன்னாள் தீவிர இடதுவருணனையாளர்கள் ஏகாதிபத்திய முகாமுக்குள்ளே கூடுதலாக செல்வதை ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு கண்டது. 1990களில் பொஸ்னியா மற்றும் கொசவோ ஆகிய நாடுகளில் ஏகாதிபத்திய மனிதாபிமானதலையீடுகளுக்கு ஆதரவாக கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் போன்ற எழுத்தாளர்கள் அணிதிரண்டனர். இப்போது அவர்கள் இஸ்லாமிய-பாசிசம்என்று அழைக்கும் ஒன்றுக்கு எதிராகப் போரிடுவதற்கான கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்குவதை நியாயப்படுத்துவதற்கு 9/11 தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சியினருடன் கூட்டணி அரசாங்கத்தின் பகுதியாக இருந்த பசுமைக் கட்சி, போரை ஆதரித்தும் அதில் பங்குபெற ஜேர்மன் துருப்புகளை அனுப்புவதற்கும் ஆதரவாய் வாக்களித்தது.

மோதல் விரிவடைகையில், போரின் நிகழ்வுகளையும் சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்திலும் அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வுகளையும் WSWS மிக விரிவாய் வெளியிட்டது. மஸார்--ஷரிபில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் போர்க் கைதிகளைப் படுகொலை செய்தமை போன்ற நிகழ்வுகளில் சுருங்கக் கூறப்பட்டிருந்தவாறு காயம்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகள் பகிரங்கமாக மீறப்பட்டமை ஆகியவை குறித்தும், உலகளாவிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் மக்கள் முகம் கொடுத்த படுபயங்கர நிலைமைகள் குறித்தும் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.

அந்த ஆண்டின் இறுதியில், தலிபான்கள் ஒவ்வொரு முக்கிய நகரத்தில் இருந்தும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர் அல்லது அகற்றப்பட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு சக்திகளால் ஹமீத் கர்சாய் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார். இது ஒரு ஸ்திரமான சூழலைக் குறிப்பதற்குப் பதிலாக WSWS விளங்கப்படுத்தியபடி, இப்புதிய வாடிக்கைநாடு போட்டி அந்நிய சக்திகளின் ஆதரவுடன் இயங்கும் எதிரெதிர் இன மற்றும் மதபிரிவுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த சூழ்நிலைக்குள் இருந்தது.

ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு என்பது ஒரு தனித்துவமான காலகட்டமாக இருப்பதற்கு வெகு அப்பால், ஏகாதிபத்திய சக்திகளிடையே உலகம் புதிய முறையில் மறுபங்கீடு செய்யப்படுவதன் ஒரு பாகமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் போன்ற தோல்வியுற்ற நாடுகளில்களில் நேரடி காலனித்துவத்தை மறுஸ்தாபகம் செய்வதற்கு அழைத்து வோல் ஸ்டிரீட் ஜேர்னல் இதழில் வந்த கட்டுரைகள் குறித்து நிக் பீம்ஸ் எழுதிய ஒரு கட்டுரையில், ஆப்கானிஸ்தானை அடிபணியச் செய்தமை தவிர்க்கவியலாமல் மேலதிக மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பதை WSWS சுட்டிக் காட்டியது. பீம்ஸ் எழுதினார்:

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்கிற பதாகையின் கீழ் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் இராணுவ அதிகாரத்தைத் திணிப்பதன் மூலம் உலகை மறுஒழுங்கு செய்வதற்குச் சற்றும் குறைவற்றதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவதே இந்தக் கட்டுரைகளின் மதிப்பாகும். இது உடனடியான அரசியல் பின்விளைவுகளைக் கொண்டதாகும். சர்வதேச உறவுகள் இராணுவமயமாக்கப்படல் என்பது தவிர்க்கவியலாமல் உள்நாட்டில் அரசியலை இராணுவமயமாக்குவதையும் ஈடுபடுத்துகிறது. ஏனென்றால் ஏகாதிபத்தியம் ஜனநாயக ஆட்சி முறைகளுடன் இணக்கமற்றதாகும்.

மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பொன்னான நாட்களை திரும்பிப் பார்க்கையில் இக்கட்டுரைகள் ஒரு முக்கியமான விடயத்தை விட்டு விடுகின்றன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் உலகத்தை வடிவமைத்தது அமைதியையும் செழுமையையும் கொண்டு வரவில்லை. மாறாக அது மூலவளங்கள், சந்தைகள் மற்றும் செல்வாக்கு பிராந்தியங்களுக்கான ஒரு உலகளாவிய மோதலில் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய முக்கியமான முதலாளித்துவ சக்திகள் தவிர்க்கவியலாமல் ஒன்றுடன் ஒன்று மோதலுக்குள் தள்ளப்பட்டு இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான போருக்கும், நூறு மில்லியன்கணக்கிலான மக்களின் உயிரிழப்புக்கும் தான் இட்டுச் சென்றது.

 


ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் ஈடுபடுத்தப்பட்ட மரைன் படையினர்

 

மேலதிக தகவல்கள்

9 October 2001  ஆப்கானிஸ்தான் யுத்தத்தை நாம் ஏன் எதிர்க்கின்றோம்

18 October 2001 "பயங்கரவாத- எதிர்ப்பு" முகமூடிக்குப் பின்னால்: ஏகாதிபத்திய வல்லரசுகள் புதிய வடிவங்களிலான காலனித்துவத்திற்கு தயார் செய்கின்றன

19 October 2001 அமைதிவாதிகள் அமெரிக்க யுத்த நோக்கங்களின் பின் அணிதிரளுகின்றனர்

24 October 2001 தலிபான், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் மத்திய ஆசிய வளங்கள்

25 October 2001 தலிபான், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் மத்திய ஆசிய வளங்கள்-2

20 November 2001 செப்டம்பர் 11க்கு நீண்டகாலம் முன்னரே ஆப்கானிஸ்தானில் போருக்கு அமெரிக்கா திட்டமிருந்தது


போலிஸ்-அரசு கட்டியமைக்கப்படல்

வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவவாதத்தின் அதிகரிப்பு என்பது உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுடன் ஒன்றிணைந்து நிகழ்ந்தது என்பதை WSWS வலியுறுத்தியது. புஷ் நிர்வாகம் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது மற்றும் இணையத்தில் உளவு பார்ப்பது ஆகியவற்றில் அரசாங்கத்தின் திறனை விரைவாக விரிவுபடுத்தச் சென்றபோது அரசியல் அல்லது ஊடக ஸ்தாபகத்தில் இருந்து எதிர்ப்பு எதுவுமில்லை. அமெரிக்க தேசப்பற்று சட்டம் என்று ஓர்வெல்லிய வகைத் தலைப்பு கொண்ட ஒரு சட்டம் ஏறக்குறைய ஒருமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

ஊடக மற்றும் அரசாங்க இலக்குகளைக் குறிவைத்து அஞ்சல் வழியாக ஆந்த்ராக்ஸ் கிருமிகளை அனுப்புவதான தாக்குதல்கள் வரிசையாக நடந்ததில் கிளறப்பட்ட பரவலான பீதி, நிர்வாகத்திற்கு அப்பிரச்சாரத்தில் உதவியாக இருந்தது. ஆரம்பத்தில் அல்குவைய்தா மீதோ, அல்லது வருங்காலப் பொய்களுக்கு முன்னறிவிப்பாக, சதாம் ஹுசைனின் ஈராக்கிய ஆட்சியின் மீதோ தான் இத்தாக்குதல்களுக்கான பழி கூறப்பட்டது. அதேநேரத்தில், அமெரிக்க இராணுவ-உளவு அமைப்புக்குள்ளேயே இருக்கக் கூடிய ஒரு வலது-சாரி மூலம் ஒன்றில் இருந்து இது நடந்திருப்பதற்குத் தான் அவற்றை விட அதிகமான வாய்ப்பிருந்ததாக WSWS வாதிட்டது. இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் தடையங்கள் இராணுவத்தின் உயிரியல் ஆயுதங்களின் சோதனைச்சாலையுடன்  தொடர்புபடுத்தப்பட்ட போது இந்த எமது ஆய்வு இறுதியாக ஊர்ஜிதப்பட்டது.

ஜனநாயக உரிமைகள் மீதான பெருமளவிலான தாக்குதல்களுக்கும் புளோரிடாவில் தேர்தலுக்குப் பிந்தைய நெருக்கடியில் ஜனநாயக விரோதமான முறையில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட வகையில் புஷ் நிர்வாகத்தை ஆட்சியிலமர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுக்கும் இடையிலிருந்த தொடர்பையும் WSWS சுட்டிக் காட்டியது. செப்டம்பர் 11 தான் எல்லாவற்றையும் மாற்றி விட்டிருந்ததாகஊடகங்கள் கூறியதற்கு மாறாக, ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல்கள் 1998-99 இன் பதவிவிலக்கத் தீர்மான நெருக்கடி மற்றும் 2000 இன் திருடப்பட்ட தேர்தல் ஆகியவற்றின் அடியொற்றி வந்ததாகும்.


தேசப்பற்று சட்டத்தில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கையொப்பமிடுகிறார்

 

மேலதிக தகவல்கள்

19 September 2001 அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள்: புஷ்சின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தின் முதல் பலி

22 September 2001 Where is the Bush administration taking the American people?

13 October 2001 உள்நாட்டில் புஷ் இன் யுத்தம்: அரசாங்க தணிக்கை, இரகசியம், பொய்

7 November 2001Bushs war at home: a creeping coup détat

14 November 2001The 2000 election and Bushs attack on democratic rights


9/11 இன் உலகளாவிய தாக்கம்

9/11க்குப் பிந்தைய புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்தின் மீதான போர்அறிவிப்பு ஒவ்வொரு முக்கிய தொழிற்மயப்பட்ட நாட்டின் அரசாங்கத்திலும் எதிரொலித்தது. சில நாடுகள் நேரடியாக ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவுடன் இணைந்து பங்கேற்றன. இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அனுதாபமோ அல்லது ஏகாதிபத்திய-எதிர்ப்புக்கு அனுதாபமோ காட்டுபவர்கள் மீதான ஒடுக்குமுறையில் அனைத்து நாடுகளும் கைகோர்த்துக் கொண்டன. இந்நடவடிக்கை செயலூக்கத்துடன் இருந்த ஒவ்வொரு நாட்டிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் WSWSம் ஏகாதிபத்தியப் போர் மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பை அணிதிரட்ட முனைந்தன.

புஷ்ஷிடம்  அடிமைத்தனமாக இருந்ததில் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் முன்னிலையில் இருந்தார். அவரது தொழிற்கட்சி அரசாங்கம் அப்போது தான் ஜூன் 2001 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மத்திய கிழக்கிலும் தெற்காசியாவிலும் இழந்த தனது செல்வாக்கை ஓரளவுக்கு மீட்டெடுப்பதற்கான நுழைவுச் சீட்டாக அமெரிக்காவுடனான சிறப்பு உறவைபிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கண்டது.

பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டாம் பெரிய துருப்பு படையணியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதோடு புஷ்ஷினைப் பின் பற்றி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதையும் பின்பற்றியது. பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கமும் போரை எதிர்ப்பவர்களும் தான் இச்சட்டத்தின் உண்மையான இலக்கு. இப்போரில் பிரிட்டனின் பாத்திரம் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டியது. ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சுக்கு முடிவு கட்டக் கோரி இலண்டனில் 100,000 பேர் பங்குபெற்ற ஆர்ப்பாட்டமும் இதில் அடங்கும். 

போரை நிறுத்து என்ற கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தி புஷ் மற்றும் பிளேயர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இணங்கி நடக்க வேண்டும் என்பதற்கு மட்டும் அழைப்பு விடுத்த நடுத்தர-வர்க்க இடதுகளின் நிலைப்பாட்டில் இருந்து போருக்கான முழு எதிர்ப்பு என்கிற நமது நிலைப்பாட்டை வேறுபடுத்திக் காட்டும் பொதுக் கூட்டங்களை பிரித்தானிய சோசலிச சமத்துவகட்சியும் WSWSம் நடத்தின.

ஆஸ்திரேலியாவில், 9/11 தாக்குதலையொட்டி ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியதில் ஜோன் ஹோவார்டின் வலது-சாரி அரசாங்கம் முதலாவதாய் இருந்தது. அமெரிக்க இராணுவவாதத்திற்கும் பயங்கரவாதத்தின் மீதான போருக்கும்தனது நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்த ஹோவார்டு தனது தேர்தலில் வெற்றிபெறும் சாத்தியங்களை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு போர் எனும் சீட்டைப் பயன்படுத்தினார். 

எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவுடன் இவரது அரசாங்கம் கொண்டுவந்த மிருகத்தனமான புலம்பெயர்வோருக்கு எதிரான  கொள்கையை நியாயப்படுத்துவதற்கு பிரதமர் பாதுகாப்பு காரணங்களைக் கூறினார். தம்பா என்ற நோர்வே கப்பலால் ஆஸ்திரேலிய கடற்பகுதியில் மீட்கப்பட்ட 433 அகதிகளை ஆஸ்திரேலிய மண்ணில் காலடி எடுத்து வைக்க அனுமதி மறுத்த இழிபுகழுடன் இக்கொள்கை ஆரம்பித்தது. இக்கொள்கை அக்டோபரில் SIEV X துயரத்தில் உச்சம் கண்டது. தஞ்சம் கோரியவர்களைக் கொண்ட ஒரு படகு ஆஸ்திரேலிய இராணுவக் கண்காணிப்பின் கீழிருந்த சமயத்திலேயே இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியில் மூழ்கியது. 350க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கினர், ஆயினும் அரசாங்கத்தின் சார்பில் குடியேற்றத் துறையின் அமைச்சரோ முன்னெதிர்பார்த்து தடுத்த இந்த நடவடிக்கையைப் பகிரங்கமாய் பாராட்டினார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவகட்சி போருக்கு எதிராகவும் வெளிநாட்டவர் மீதான பயத்தைக் கிளறிவிடுவதற்கு எதிராகவும் ஆளும் தாராளவாத-தேசிய கூட்டணி மற்றும் முக்கிய முதலாளித்துவ எதிர்க்கட்சியான ஆஸ்திரேலிய தொழிற்கட்சி ஆகிய இரண்டையும் எதிர்த்து பொதுக் கூட்டங்களை நடத்தியது.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவகட்சி தனது 2001 தேர்தல் அறிக்கையில்  பின்வருமாறு விளக்கியது: இரண்டு பெரும் கட்சிகளுக்கு இடையில் முன்கண்டிராத மட்டத்திற்கு ஒருமைப்பாடு  ஏற்பட்டிருப்பதென்பது ஆழமான முக்கியத்துவம் கொண்டதாகும். உத்தியோகப்பூர்வ அரசியலின் ஒட்டுமொத்த அமைப்பும் கூர்மையாக வலது நோக்கி நகர்ந்த ஒரு நீடித்த நிகழ்போக்கின் உச்சமே இது.நவம்பரில் ஹோவார்டு அரசாங்கம் மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்தது, ஆனால் பெருமளவிலான வாக்காளர்கள் இரண்டு கட்சிகளையுமே நிராகரித்திருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டின.

போர் வெடித்ததில் தெற்காசியாவை போல் வேறெந்த பகுதியும் மிகப் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பினால் உருவாக்கப்பட்ட பதட்டங்கள் அப்பிராந்தியத்தின் அணு ஆயுதங்கள் தாங்கிய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகளில் தீப்பற்ற வைத்தது. பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப், அமெரிக்கா விதித்த கெடுவுக்கு பதிலிறுப்பாக, இந்தியாவுக்கு எதிரிடையாக தலிபான்களை ஆதரிக்கும் கொள்கையில் இருந்து பின்வாங்கி தன்னை அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் பின்னால் இணைத்துக் கொண்டார். தெற்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஷ்தூன் மக்களிடையே பெரும் உயிர்ச் சேதாரம் நிகழ்ந்தையொட்டி உளநாட்டில் ஆர்ப்பாட்டங்கள் பெருகிய நிலையிலும் அவர் இதனைச் செய்தார்.

இந்து மேலாதிக்கவாத கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டிய டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தொடுக்கப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றினால் இரண்டு நாடுகளும் துருப்புகளையும், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளையும் எல்லைக்கு அனுப்பி, அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதையும் கொண்ட ஒரு முழு வீச்சிலான போரைக் கொண்டு அச்சுறுத்தும் நிலை உருவானது. தெற்காசிய மக்களுக்கு பெரும் துயரங்களைக் கொண்டுவரக் கூடிய சாத்தியங்களுடனான ஒரு கொந்தளிப்பான நிலை கொண்ட மோதலுடன் அந்த ஆண்டு முடிந்தது.

இலங்கையில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மக்கள் கூட்டணி அரசாங்கம் உலக நெருக்கடியை சுரண்டிக் கொள்ள முனைந்தது. தமிழர் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அது நடத்திக் கொண்டிருந்த போரை ஏகாதிபத்திய ஆதரவை வென்றெடுக்கும் நம்பிக்கையுடன் புஷ்ஷின் உலகளாவிய பயங்கரவாதத்தின் மீதான போர்உடன்  அடையாளப்படுத்தியது. 9/11க்குப் பிந்தைய சூழலைப் பயன்படுத்தி மக்களை தனக்குப் பின்னால் நெருக்கியடிக்கச் செய்யும் எண்ணத்துடன் குமாரதுங்கா நாடாளுமன்றத்தைக் கலைத்தார். ஆனால் வலதுசாரி ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றத்தில் குறுகிய வித்தியாசத்தில் பெரும்பான்மை பெற்று விட்டது.

தமிழர்களுக்கு எதிரான போரை எதிர்ப்பதில் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி தான் முன்னிலையில் நின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக புனைவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த ஹட்டன் தமிழ் தோட்டத் துறை இளைஞர்கள் ஆறு பேரை விடுதலை செய்யக் கோரும் மிக முக்கியமான அரசியல் மற்றும் சட்டப் பிரச்சாரத்தை நடத்தி இறுதியில் அந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு பிரதான வலது-சாரி முதலாளித்துவக் கட்சிகளையும் எதிர்த்து சோசலிச சமத்துவக் கட்சி தமிழ் பேசும் வேட்பாளர்கள் சிங்களம் பேசும் வேட்பாளர்கள் அடங்கிய ஒரு தொகுதி வேட்பாளர்களை நிறுத்தியது.


புஷ்ஷும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹவார்ட்டும்

 

மேலதிக தகவல்கள்

·         31 October 20012001 Australian elections: The political issues facing the working class

·         9 November 2001SEP meetings in Australia
The war in Afghanistan: the socialist perspective
 

Part 1

·         12 November 2001SEP meetings in Australia
The war in Afghanistan: the socialist perspective
 

Part 2

·         14 November 2001Britain's "anti-terror" measures--a fundamental attack on democratic rights

·         23 November 2001 2001 இலங்கைத் தேர்தலுக்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம்

·


 

பிற அரசியல் வருணனைகள் மற்றும் ஆய்வுகள்

9/11 தாக்குதலும் ஆப்கானிஸ்தான் போரும் தான் 2001 இல் உலக அரசியலின் அச்சாக இருந்த அதே நேரத்தில், அந்த ஆண்டில் இன்னும் பல முக்கியமான நிகழ்வுகளும் WSWS இல் பகுப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.

பெப்ரவரி 6 அன்று, இஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வலதுசாரி லிகுட் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை வென்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் போர்க்குற்றவாளியுமான ஏரியல் ஷரோனை பிரதமர் பதவிக்கு கொண்டுவந்தது. மத்திய கிழக்கின் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதில் இஸ்ரேலிய முதலாளி வர்க்கம் ஆற்றிய கொலைகாரப் பாத்திரத்தை WSWS ஆழமாய் பகுப்பாய்வு செய்தது. அத்துடன் இஸ்ரேலிய முதலாளித்துவ அரசின் அடித்தளமாக நின்ற அரசியல் தத்துவங்களையும் விரிவாய் ஆய்வு செய்தது.

ஜீன் ஷால் எழுதிய இரண்டு கட்டுரை வரிசை பாலஸ்தீன மக்களின் வெளியேற்ற வரலாற்றையும் தொழிற்கட்சி ஜியோனிசத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியையும் ஆராய்ந்தது. செப்டம்பர் 7 அன்று வெளியான ஆசிரியர் குழு அறிக்கை ஒன்றில், பிராந்தியத்தில் எதிரிகளைப் படுகொலை செய்யும் இஸ்ரேலின் கொள்கைக்கு அமெரிக்கா பகிரங்க ஆதரவை அதிகமாக்கி வருவது குறித்து கவனத்தில் எடுக்கப்பட்டிருந்ததோடு, ஜியோனிச ஆட்சியை அடியொற்றி அமெரிக்காவும் அதனை பின்பற்றலாம் என்று அந்த அறிக்கை எச்சரித்திருந்தது.

பால்கன் பகுதி நெருக்கடி குறித்த செய்திகளையும் பகுப்பாய்வையும் WSWS வெளியிட்டது. முன்னாள் யூகோசுலேவியாவில் இருந்த சேர்பியாவில் இருந்து மாண்டிநீக்ரோ பிரிக்கப்பட்டது, ஏப்ரலில் ஸ்லோபோடான் மிலோசிவிக் கைது செய்யப்பட்டது, அத்துடன் ஹேக் நீதிமன்றம் என்றழைக்கப்படும் ஏகாதிபத்திய போலி நீதிமன்றத்தில் மிலோசெவிக்கிற்கு எதிரான ஆரம்பகட்ட விசாரணைகள் ஆகியவை இப்பகுப்பாய்வில் இடம்பெற்றன.

சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகவும், பிரான்சின் பிரதமராக இருந்த லியோனல் ஜோஸ்பன் இன்  வரலாறு குறித்த சர்ச்சையை பீட்டர் சுவார்ட்ஸ் எழுதிய ஒரு கட்டுரை பகுப்பாய்வு செய்தது. இவரது அரசியல் வேர்கள் முன்னாள் ட்ரொட்ஸ்கிச அமைப்பான OCI [Organisation Communiste Internationaliste] இல் இருந்துதோன்றியது.

இலண்டன் தரையடிப் போக்குவரத்து தனியார்மயமாக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட வேலைநிறுத்த செய்திகளும் WSWS இல் வெளியாயின. தொழிலாளர்களின் போராளித்தனமான நடவடிக்கை தொழிற்சங்கங்களினால் குழிபறிக்கப்பட்டது மற்றும் சிதறடிக்கப்பட்டது என்ற அதேநேரத்தில், போலி இடதின் ஒரு தலைவரான பொப் குரோ பிரதான இரயில்வே தொழிற்சங்கமான ரயில் மற்றும் நீர்ப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேசிய சங்கத்தின் (RMT)தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஜெனோவாவில் நடந்த G-8 நாடுகளின் உச்சிமாநாட்டில் வெளிப்பட்ட முக்கிய முதலாளித்துவ நாடுகள் இடையிலான அதிகரிப்பின் பிளவுகளை WSWS பகுப்பாய்வு செய்தது. புதிதாக அதிகாரத்தில் அமர்த்தப்பட்டிருந்த இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலது-சாரி அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய மூர்க்கமான தாக்குதல்கள் குறித்த செய்திகளையும் கண்டனத்தையும் WSWS வெளியிட்டது.

ஜனவரியில் தாய்லாந்தில் வலதுசாரி ஜனரஞ்சகவாதியும் பில்லியனருமான தக்ஷின் ஷினாவார்தா தேர்தலில் வெற்றி பெற்றமை, அதே ஜனவரியில் பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி ஜோசப் எஸ்ட்ராடாவை வெளியேற்றிய நீதிமன்ற பதவிக்கவிழ்ப்பு, ஏப்ரலில் ஜப்பானில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியிலான ஒரு கூர்மையான நெருக்கடிக்கு இடையே அதன் பிரதமராக ஜுனிசிரோ கொய்சுமி அமர்த்தப்பட்டமை ஆகிய ஆசியாவில் நிகழ்ந்த மூன்று முக்கியமான அரசியல் மாற்றங்கள் குறித்தும் WSWS ஆய்வு செய்தது. 1997-98 ஆசிய நிதி நெருக்கடியின் மதிதியில், சர்வதேச நாணய நிதியத்தின் சுதந்திரச் சந்தை திட்டநிரலை பெருகும் வெகுஜன எதிர்ப்புக்கு மத்தியில் எவ்வாறு அமுல்படுத்த வேண்டும் என்பதில் ஆளும் வட்டங்களுக்கு இடையிலிருந்த கூர்மையான பிளவுகளையே இந்த மூன்று அபிவிருத்திகளும் பிரதிபலித்தன.

அமெரிக்காவில், ஒரு முக்கியமான அமெரிக்க பல்கலைக்கழகத்தின் தலைவராக ஒரு போர்க் குற்றவாளி இருக்க அனுமதிக்கப்படுவதை எதிர்த்து அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பரந்த பிரச்சாரத்தை நடத்தியது. ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செனட்டரும் ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்பட்டவருமான ரொபேர்ட் கெர்ரி வியட்நாம் போர் சமயத்தில் அட்டூழியங்கள் புரிந்தவர் என்கிற 32 வருடங்களாக அவர் மறைத்து வந்திருந்த விடயம் நியூயோர்க் நகரின் நியூ ஸ்கூல் பல்கலைக்கழகத்தில் தலைவராக அமர்த்தப்பட்டு வெகுவிரைவிலேயே வெளிப்பட்டு விட்டது.

நியூ ஸ்கூலின் அறக்காவலர் குழுவில் இருந்த நிபந்தனையற்ற ஆதரவுடன், அரசியல் மற்றும் கல்வி ஸ்தாபகமும் ஊடகங்களும் கூட கெர்ரியைப் பாதுகாத்தன. இவை அனைத்துமே வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இழைத்த கொடுமைகளை மறைப்பதற்கும் அவற்றை அங்கீகரிப்பதற்கும் முனைந்தன. பாரிய படுகொலை குற்றம்சாட்டப்படும் ஒரு மனிதரை அமெரிக்காவில் தாராளவாத சிந்தனையின் கோட்டையாகக் கருதப்படும் நியூ ஸ்கூலில் தலைவராக அமர்த்துகின்ற விடயத்தின் முக்கியத்துவத்தை WSWS விளக்கியது. நாங்கள் பின்வருமாறு எழுதினோம்:

வியட்நாம் போர் குறித்து அதிகம் அறியாமலும் போரை மறுபுனருத்தாரணம் செய்வதற்கும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் போருக்கு எதிராக மில்லியன்கணக்கான மக்களை கிளர்ந்தெழ செய்த பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படுகிற ஒரு திட்டமிட்ட முனைப்புக்கு இடையே அமெரிக்காவின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறை வளர்ந்து வந்திருக்கிறது.

கெர்ரியை பாதுகாப்பதும் மற்றும் வியட்நாம் போரை அங்கீகரிப்பதற்கான முனைப்பும் கடந்த காலம், நிகழ்காலத்தின் மீது மட்டுமல்ல, எதிர்காலத்தின் மீதும் தொடர்பு கொண்டிருக்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் புதிய குற்றங்களுக்கான ஆயத்தத்தின் பகுதியாக அவை இருக்கின்றன. இக்குற்றங்கள் ஏற்கனவே திட்டமிடப்படும் கட்டத்தில் இருக்கிறது.

அமெரிக்காவின் பிற முக்கிய நிகழ்வுகளில் ஒக்லஹாமா நகரில் 180க்கும் அதிகமான மனிதர்களைக் கொலை செய்த டிமோதி மெக்வேய் என்கிற வலது-சாரி பயங்கரவாதிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை விடயமும் இடம்பெற்றிருந்தது. ஒரு தொழிலாள வர்க்க இளைஞனை சுயவருத்தமற்ற பாரிய படுகொலையாளனாக மாற்றிய சமூக-உளவியல் நிகழ்போக்கு என்ன? என்கிற கேள்வியை WSWS கட்டுரை முன்வைத்தது. பொருளாதாரரீதியான பரிதாப நிலை மற்றும் மெக்வேய் பங்குபெற்ற 1990-91 பாரசீக வளைகுடாப் போர் உள்ளிட்ட அரசியல் பிற்போக்குத்தனம் இவற்றின் கூட்டு நிகழ்போக்குகளில்தான் இதற்கான பதில் இருக்கிறது என்று டேவிட் வால்ஷ் வாதிட்டார். அமெரிக்க ஊடகங்களில் இந்த தண்டனை கொண்டாடப்பட்ட அவலட்சணத்தை பரி கிரே கண்டனம் செய்த கட்டுரை அதனையடுத்து வெளிவந்தது.

டிசம்பர் மாதத்தில், வரலாற்றில் அதுவரையான காலத்தில் மிகப்பெரும் பெருநிறுவன திவாலாய் உருவெடுத்த என்ரோன் நிறுவனத்தின் உருக்குலைவு, 1990களின் இரண்டாம் பாதியில் மேலாதிக்கம் செலுத்திய நிதி எழுச்சியின் மோசடியான தன்மை மீது வெளிச்சம் பாய்ச்சியது. 2002 இல் WSWS விரிவாக ஆராயவிருந்த நிதி மோசடிகளின் வரிசையில் மிக மலைப்பூட்டக்கூடியதாக என்ரோன் இருந்தது.

 
பாதுகாப்புச் செயலர் டோனால்டு ரம்ஸ்பீல்டு (வலது பக்கம் நிற்பவர்) இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோனை 2001 இல் சந்தித்துப் பேசினர்

 

மேலதிக தகவல்கள்

22 January 2001  இனச்சுத்திகரிப்பில் சியோனிசத்தின் பாரம்பரியம்

பகுதி 1- இஸ்ரேலும் நாடு திரும்புவதற்கான பாலஸ்தீனர்களின் உரிமையும்

23 January 2001 இனச்சுத்திகரிப்பில் சியோனிசத்தின் பாரம்பரியம்

பகுதி2- இஸ்ரேலும் நாடுதிரும்புவதற்கான பாலஸ்தீனர்களில் உரிமையும்

4 May 2001  ரொபேர்ட் கெர்ரியும் இரத்தம் தோய்ந்த வியட்னாம் மரபு வழியும்

1 June 2001 New York's New School president accused of war crimes
What is at stake in the fight to remove Robert Kerrey?

27 June 2001  லியோனல் ஜொஸ்பனும் ட்ரொட்ஸ்கிசமும்: பிரான்ஸ் பிரதமரின் கடந்தகாலம் தொடர்பான விவாதம்

4 July 2001 மிலோசிவிக்கின் மீதான வழக்கின் பின்னணி: அமெரிக்காவும் ஐரோப்பாவும் பால்கனின் சீரழிவும்

20 June 2001 Rail union winds down opposition to London Underground privatisation

6 December 2001Enron: The real face of the "new economy"


கலை, கலாச்சாரம் மற்றும் வரலாறு

WSWS இல் கலைப் பிரிவின் செய்திகளில் திரைப்பட விமர்சனங்கள் முக்கியமான இடம் பெற்ற நிலை தொடர்ந்தது. Pollock (இது அமெரிக்காவில் போருக்குப் பிந்தைய கலை மற்றும் புத்திஜீவித வாழ்க்கை தொடர்பான சில விடயங்களை விவாதித்தது), கோயன் பிரதர்ஸின் O Brother, Where Art Thou? பிரான்சிஸ் ஃபோர்டு கபோலாவின் Apocalypse Now Redux, Amelie, The Pledge மற்றும் Memento ஆகியவை 2001 இல் ஆராயப்பட்ட முக்கிய திரைப்படங்களாகும். நடிகர் Jack Lemmon  மற்றும் இயக்குநர் Stanley Kramerஆகியோருக்கான நினைவஞ்சலிகளும் வெளியிடப்பட்டன.

WSWS இன் செல்வாக்கு அதிகரித்தமை, Buenos Aires திரைப்பட விழாவுக்கான அழைப்பைக் கொண்டு வந்தது. இது தற்போதைய உலக சினிமாவின் நிலையையும் அத்துடன் இலத்தின் அமெரிக்க திரைப் படைப்பாக்கத்தின் குறிப்பிடத்தக்க நிலையையும் சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு புதிய வாய்ப்பை வழங்கியது.

பேர்லின் மற்றும் சிட்னி திரைப்பட விழாக்கள் குறித்த எமது செய்திகள் தொடர்ந்து நடைபெற்றன. சிட்னி விழாவில், சத்யஜித் ரே எழுதி இயக்கிய Apu Trilogy, மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸை ஜேர்மன் ஆக்கிரமித்தது தொடர்பான The Sorrow and the Pity என்கிற மார்சல் ஓபுல்ஸின் ஆவணக் காவியம் ஆகிய இரண்டு மகத்தான படைப்புகள் திரையிடப்பட்டது குறித்த வருணனையை ரிச்சர்டு பிலிப்ஸ் வழங்கினார். Garin Nugroho என்கிற இந்தோனேசிய திரைப் படைப்பாளியையும் பிலிப்ஸ் நேர்காணல் செய்தார்.

டொரொண்டோ மற்றும் வான்கூவர் திரைப்பட விழாக்கள் முறையே 9/11 தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆகிய மிகப் பெரும் நிகழ்வுகளின் சமயத்தில் நடைபெற்றன. இந்த அபிவிருத்திகளின் வெளிச்சத்தில் கலையியல் முன்னோக்கின் பிரச்சினைகள் புதிய முக்கியத்துவம் பெற்றன.

நவம்பரில், புஷ் நிர்வாகம், எந்த வித எதிர்ப்புகளுமின்றி போருக்கான தனது முனைப்பிற்கு, அமெரிக்க திரைப்படத் துறை பிரமுகர்களை வென்றெடுக்க முனைந்தது.