WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

Year in Review: 2008

மீளாய்வு ஆண்டு: 2008

2008 ஆம் ஆண்டில், நீண்ட காலமாக மேற்பரப்புக்கு அடியில் அபிவிருத்தியுற்று வந்த உலக முதலாளித்துவ நெருக்கடியானது, பெருமந்தநிலைக்குக் கட்டியம் கூறிய 1929 பங்குச் சந்தைப் பொறிவுக்குப் பிந்தைய மிகப் பெரும் நிதிக் கொந்தளிப்பாக வெடித்தது. இந்த நிகழ்வுக்கு இட்டுச் சென்ற நிகழ்முறைகளை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக WSWS பகுப்பாய்வு செய்து வந்திருந்தது.

வோல் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரும் முதலீட்டு வங்கியான லேஹ்மென் பிரதர்ஸ் செப்டம்பர் 15 அன்று திவாலானதைத் தொடர்ந்து உலகச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பலி கொடுத்து நிதியமைப்புமுறை மற்றும் வங்கிகளை முட்டுக் கொடுக்க முனைந்தன. உலகப் பொருளாதாரம் 1930களுக்குப் பிந்தைய ஆழமான சரிவுக்குள் மூழ்கியுள்ள நிலையில் தொழிலாள வர்க்கத்தின் மீதான வரலாறுகாணாத தாக்குதலை அமல்படுத்துவதன் மூலமாக நிதி உயரடுக்கின் கரங்களுக்கு பாரிய வளங்கள் வைக்கப்பட்டன. பெருகிய ஆட்குறைப்புகளும், வீழ்ச்சி கண்ட ஊதியங்களும் மற்றும் விண்ணை முட்டிய உணவுப் பொருட்களின் விலைகளுமாய் உலக அளவில் ஒரு சமூகப் பேரிடரை உருவாக்கின.

அமெரிக்காவில், மதிப்பிழந்து பரவலான வெறுப்பைச் சம்பாதித்திருந்த ஜோர்ஜ் W. புஷ்ஷின் நிர்வாகத்தை இடம்பெயர்த்தப் போகும் நிர்வாகத்தை தீர்மானிக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே இந்த நெருக்கடி தாக்கியது. அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை, நவம்பரில் பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டமையானது புஷ்ஷின் கீழான முந்தைய எட்டு ஆண்டுகளைத் தலைகீழாய் திருப்புவதற்கான ஒரு முயற்சியை வெளிப்படுத்தியது. ஆயினும் ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா, அரசியல் அமைப்புமுறைக்கான ஒரு பொலிவான தோற்றத்தை வழங்கினார் என்ற அதே சமயத்தில் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி அவருக்கு முன்னர் இருந்த ஜனாதிபதியின் அனைத்து கொள்கைகளையும் நீட்சி செய்பவராகவும் ஆழப்படுத்தக் கூடியவராகவும் இருந்தார்.

உலக முதலாளித்துவத்தின் மிக ஆழமான நெருக்கடி என்பதற்கான அறிகுறிகள் பெருகியதற்கான பதிலிறுப்பாய், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏராளமான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது. 2008 ஆகஸ்டில் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி தனது ஸ்தாபக காங்கிரசை நடத்தியது. அந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டிருந்த ஆவணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. இரண்டு மாதங்களுக்குப் பின்னல் உலக சோசலிச வலைத் தளம் தனது உள்ளடக்கம் மற்றும் வாசகர் எண்ணிக்கையின் தீவிர விரிவாக்கத்திற்கான ஒரு அடித்தளமாக ஒரு மிகப்பெரும் வடிவமைப்பு மாற்றத்தை முன்னெடுத்தது.

2008 இன் மாபெரும் பொறிவு

2008 இலையுதிர் காலத்தில் ஏற்பட்ட நிதிப் பொறிவானது, அமெரிக்காவை மையமாகக் கொண்டிருந்த ஒரு நெடிய உலக நெருக்கடியின் வெளிப்பாடாக நெடுங்காலம் தயாரிப்பில் இருந்த ஒன்றாகும். WSWS இந்த அபிவிருத்தியை முன்னெதிர்பார்த்தது என்பதோடு இந்தப் பொறிவுக்கு முந்தைய ஆண்டில் அமெரிக்க வீட்டுச் சந்தையின் கொந்தளிப்பின் நீண்டகால முக்கியத்துவத்தை விளக்கியிருந்தது.

உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்த குறிப்புகளும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள் மற்றும் கடமைகளும் என்ற தலைப்பில் அமெரிக்க SEP இன் தேசியக் கூட்டமொன்றில் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய ஒரு அறிக்கையை 2008 ஜனவரி 11 அன்று WSWS வெளியிட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு ஆரம்பித்தது:

2008 ஆம் ஆண்டானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி கணிசமாய் தீவிரமுறுவதைக் கொண்டு குணாம்சம் பெறும். உலக நிதிச் சந்தைகளிலான கொந்தளிப்பு வெறுமனே சந்தர்ப்பவசமான சரிவு அல்ல, மாறாக சர்வதேச அரசியலை ஏற்கனவே ஸ்திரம் குலைத்துக் கொண்டிருந்த ஆழமானதொரு அமைப்புமுறைக் கோளாறு ஆகும்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, அதாவது உலக முதலாளித்துவத்தின் திட்டவட்டமானதும் மாற்ற முடியாததுமான வெற்றியாகச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வுக்கு, பதினாறு ஆண்டுகளின் பின், உலகப் பொருளாதாரமானது சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

இந்த நெருக்கடியானது அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் உயரடுக்கின் கட்டமைப்பிலான மாற்றங்களுடன் என்ன உறவு கொண்டிருந்தது என்பதை நோர்த் திறனாய்வு செய்தார்:

ஊக இலாபக் குமிழிகளை உருவாக்குவதற்கான தொடர்ந்த போக்கு எதிலிருந்து எழுகிறது என்றால் உலக முதலாளித்துவ முறை அபிவிருத்தியின் ஆழமாய் வேர் கொண்ட முரண்பாடுகளில் இருந்து எழுகிறது, குறிப்பாக அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட வரலாற்றுப்பெரும் வீழ்ச்சியுடன் இது தொடர்புபட்டிருக்கிறது. அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறையில் இலாபவிகிதத்தில் ஏற்பட்ட நீண்டகால வீழ்ச்சியானது முதலீட்டின் மீது அதிக வருவாய் தரக் கூடிய மாற்று ஆதாரங்களைத் தேடுகின்ற அமெரிக்க நிதி ஸ்தாபனங்களின் முனைப்பிற்கு உந்துதல் அளித்திருக்கிறது. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உயிர் வாழ்வு முறையானது கடந்த 30 ஆண்டுகளில் சொத்துப் பெருக்க நிகழ்வுப்போக்கிற்கும் தொழிற்துறை உற்பத்தி நிகழ்வுப்போக்கிற்கும் இடையில் முன்னெப்போதையும் விட மிகப்பெரிய பிளவு உருவாக்கியிருப்பதைக் கொண்டு குணாம்சப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டிற்கு முந்திய ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் பொருளாதார வளர்ச்சியானது உடன்பொதிந்த ஸ்திரமற்ற நிலையைக் கொண்டதாக இருந்தது. இந்த ஸ்திரமற்ற நிலையானது அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவை மையமாகக் கொண்டதாக இருந்தது. SEP பொதுச் செயலரான நிக் பீம்ஸ் ஆஸ்திரேலிய SEP பள்ளியொன்றுக்கு வழங்கியதொரு அறிக்கையில் கூறியவாறு: இரத்தினச்சுருக்கமாகச் சொல்வதென்றால், அமெரிக்கக் கடன்களின் பாரிய வளர்ச்சியின் உதவியில்லாமல் சீனாவின் (மற்றும் பிற நாடுகளின்) விரிந்த வளர்ச்சி என்பது சாத்தியமாகி இருக்க முடியாது. அமெரிக்கப் பொருளாதாரத்தையும் அதேசமயத்தில் உலகளாவிய தேவையையும் பராமரித்து வந்திருக்கக் கூடிய இந்த கடன் வளர்ச்சி தான் இப்போது நெருக்கடியாய் விளைந்திருக்கிறது.  

2008 முழுவதிலும் நெருக்கடி அதிகரித்துச் சென்றதானது, வீட்டு அடமானக் கடன் சந்தைப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தி விடலாம் என்பதான அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது கூற்றுகளை மறுதலிப்பதாக இருந்தது. அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய முதலீட்டு வங்கியும் உலகின் மிகப்பெரும் நிதி மற்றும் தரகு நிறுவனங்களில் ஒன்றுமான பீயர் ஸ்டியர்ன்ஸ் (Bear Stearns) நிறுவனத்தின் பொறிவைத் தடுப்பதற்கு மார்ச் 14 அன்று அமெரிக்க கூட்டரசாங்க ரிசர்வ் வங்கி அவசரகால நடவடிக்கையை மேற்கொண்டது.

உலக நிதி நெருக்கடியின் உலகளாவிய சம்பந்தங்கள் குறித்து அடுத்த மாதத்தில் வெளியான ஒரு அறிக்கையில் பீம்ஸ் குறிப்பிட்டார்:

அந்த நாளில் உலகம் ஒரு அடிப்படையான விதத்தில் மாற்றம் கண்டது. அன்றாடம் பல்வேறு நிதி வருணனையாளர்களும், அரசியல் தலைவர்களும், பொருளாதாரக் கல்வியறிஞர்களும் மற்றும் ஊடக வித்தகர்களும் சுதந்திரச் சந்தையின் அற்புதங்கள் குறித்தும் மகிமைகள் குறித்தும் - சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பில் மிக உச்சமான வடிவத்தை இன்னும் சொன்னால் ஒரே சாத்தியமான வடிவத்தைக் குறித்ததாக - அளித்த லேகியங்கள் எல்லாம் முற்றிலும் பயனற்றவையாக நிரூபணமாகின.

ஜூலை 13 அன்று மிகப்பெரும் அமெரிக்க அடமானக் கடன் வங்கி நிறுவனங்களான ஃபேனி மே மற்றும் ஃபிரெடி மேக் நிறுவனங்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக பெடரல் ரிசர்வ் போர்டும் அமெரிக்க கருவூலமும் அவசரகால நடவடிக்கை எடுத்தன. செனட் வங்கிக் கமிட்டியின் ஜனநாயகக் கட்சித் தலைவரான கிறிஸ்டோபர் டோட் இரண்டு நிறுவனங்களும் நல்ல வடிவில் இருப்பதாகக் கூறியதோடு அதற்கு நிரூபணமாக, பெடரல் ரிசர்வ் தலைவர் நிறைய சொல்லியிருக்கிறார். கருவூலச் செயலர் நிறைய சொல்லியிருக்கிறார் என்றார். இத்தகைய ஊக்குவிப்புஎல்லாம் அதிகப் பயனளிக்கப் போவதில்லை என்பதை கடந்த ஆண்டின் அனுபவத்தைக் கொண்டு WSWS விளக்கியது.

அடமானக் கடன் நிறுவனங்களின் பிணையெடுப்பு என்பது நிதிச் சந்தைகளுக்கு முட்டுக் கொடுப்பதையும் அதன்வழியாக நிதிப் பிரபுத்துவத்தின் செல்வம் பாதுகாக்கப்படுவதையும் நோக்கமாய்க் கொண்டிருந்தது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து நூறு பில்லியன் கணக்கான டாலர்களை இந்த நோக்கத்திற்காய் உறுதியளிக்க கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் இப்போதும் கருவூலச் செயலருமான ஹென்றி போல்சன் உட்பட புஷ் நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுடன் திரைக்குப் பின்னால் வேலை செய்தது

அவசரநிலை நடவடிக்கைகளும் கூட போதவில்லை. ஃபேனி மே மற்றும் ஃபிரெடி மேக் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் அமெரிக்க அரசாங்கம் ஏறக்குறைய முழுவதுமாய் வாங்க இருக்கிறது என்பதை செப்டம்பர் 7 அன்று அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. 1930களுக்குப் பின்னால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் மிகப்பெரும் தலையீடாகும் இது.

அரசாங்கம் நிறுவனத்தைக் கையகப்படுத்திக் கொண்டமை இந்த நடவடிக்கை வரை கொண்டுவந்து விட்ட நெருக்கடியின் ஆழமான மற்றும் முறைமையான தன்மையை செப்டம்பர் 12 அன்றான மேலதிக ஆய்வு ஒன்று விளக்கியது. முதலீட்டு வங்கியான லேஹ்மென் பிரதர்ஸ் மற்றும் நாட்டின் மிகப்பெரும் சேமிப்பு மற்றும் கடன்களுக்கான வங்கியான வாஷிங்டன் மியூச்சுவல் ஆகியவை பொறிவு காண இருந்த நிலையின் அச்சத்திற்கு இடையே பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான பெரும் தலைச்சுற்றல்கள், மீட்பு நடவடிக்கை என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் கீழமைந்த நெருக்கடியைத் தீர்ப்பதை இன்னும் தொடங்கிக் கூட இராத ஒரு தற்காலிக நடவடிக்கை தான் என்பதை விளங்கப்படுத்தியது.

மூன்று நாட்களுக்குப் பின், லேஹ்மென் பிரதர்ஸ் வங்கி பொறிவு கண்டது. அதற்கடுத்த நாளில் உலகின் மிகப்பெரும் காப்பீட்டு நிறுவனமான American International Group (AIG) நிறுவனத்தின் 85 பில்லியன் டாலர் பிணையெடுப்பு நிகழ்ந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதிச் சந்தைகளில் பீதி பெருகியதன் அறிகுறிகளுக்கு இடையே உலகச் சந்தைகள் அமிழ்ந்தன. லேஹ்மென் பிரதர்ஸை திவால்நிலைக்கு அனுமதித்த புஷ் நிர்வாகத்தின் கொள்கையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தை AIG பிணையெடுப்பு எடுத்துக்காட்டியது.

புஷ் நிர்வாகத்தின் தலைமையிலும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடனும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிதி அமைப்புமுறைக்கு முட்டுக் கொடுக்கும் விரக்தியான முயற்சிகளாகவும் அதேசமயத்தில் செல்வத்தை வரலாறு காணாத மிகப்பெரும் அளவுக்கு தனது சொந்தப் பைகளுக்கு மாற்றுவதற்கு ஏற்ற வகையில் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் இருந்தன. இந்த நெருக்கடியை உருவாக்கியவர்கள் எந்தவிதத்திலும் அதற்குப் பொறுப்பாக்கப்படவில்லை என்பதோடு அவர்கள் தம்மை வளப்படுத்திக் கொள்ளவும் இயலும்வண்ணம் இருந்தது. உதாரணமாக AIG க்கு அளிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி, அந்நிறுவனத்துடன் காப்பீடு ஒப்பந்தங்களைக் கொண்டிருந்த கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற வோல் ஸ்ட்ரீட்டின் முக்கிய நிறுவனங்களுக்கு நேரடியாகக் கைமாறியது.

700 பில்லியன் டாலர் வங்கிப் பிணையெடுப்பில் உச்சமடைந்த இந்த குற்றவியல் வர்த்தக நடவடிக்கை  சிக்கலுற்ற சொத்து நிவாரணத் திட்டம் (TARP)என்பதாகச் சொல்லப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி இந்தப் பிணையெடுப்பைக் கண்டனம் செய்து அறிக்கை விடுத்தது. 9/11க்குப் பின்னர், அதுவரை முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகக் கருதப்பட்ட கொள்கைகளை முன் தள்ளுவதற்கு அந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ள எப்படி நிதி பிரபுத்துவம் முயன்றதோ, அதேபோல இந்தப் பிணையெடுப்பும் பரந்த மக்களின் நலன்களைப் பலிகொடுத்து பொதுப் பணத்தை பெரும் வங்கிகள் மற்றும் அமெரிக்க நிதி உயரடுக்கிற்கு முன்கண்டிராத பெருமளவில் மாற்றுவதற்கான திட்டம் என்று அது கூறியது

பிரதிநிதிகள் சபை, பெரும்பாலும் குடியரசுக் கட்சியின் வலது-சாரிப் பிரிவின் எதிர்ப்பின் காரணமாக, ஆரம்பத்தில் இந்தப் பிணையெடுப்பை நிராகரித்து விட்டது. இது பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சியைத் தூண்டியதோடு ஆளும் உயரடுக்கில் ஒரு பலமான எதிர்வினையையும் (முர்டோக்குக்கு சொந்தமான டைம்ஸ் ஆஃப் இலண்டன் நாடாளுமன்றம் சர்வாதிகாரத்திற்கான சிறந்த விளம்பரமாக இருக்கிறதுஎன்று ஒரு வருணனை வெளியிட்டதில் இது சுருங்க வெளிப்பட்டது)தூண்டியது.

அடுத்துவந்த ஒரு கட்டுரையில் WSWS எழுதியது: மிகவும் பரவலாக வெளிப்படுத்தப் பெறும் ஜனநாயக விரோத மனோநிலைகளில் இருந்து காரணரீதியாய் தேற்றம் பெற்றிருக்கும் இந்த சீண்டல் மொழியானது, இறுதியாக அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தை அரித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் புறநிலையான கிளைவிரிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதற்குப் பின் TARP மசோதா நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 3 அன்று சட்டமாக்கப்பட்டது. இதேபோன்ற பிணையெடுப்புகள் பிரிட்டனில் தொழிற்கட்சி அரசாங்கத்தினாலும், ஜேர்மனியில் அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கத்தினாலும், பிரான்சில் சார்க்கோசி அரசாங்கத்தாலும், அத்துடன் ஸ்பெயின், ஸ்வீடன், கிரீஸ், அயர்லாந்து மற்றும் கிழக்கு ஐரோப்பாவெங்கிலுமான அரசாங்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்டன. ஆளும் கட்சிகள் தாராளவாதிகளாய் இருந்தாலும் சரி அல்லது பழமைவாதிகளாய் இருந்தாலும் சரி, அதிவலதாக இருந்தாலும் சரி சமூக ஜனநாயகக் கட்சியினராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருமே ஒரே வர்க்க நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர், வங்கிகள் மற்றும் பெரு முதலீட்டாளர்களைக் காப்பாற்றுவது, அதற்காகும் செலவை உழைக்கும் மக்கள் மீது திணிப்பது என்ற நிலைப்பாடு தான் அது.

ஆனால் வோல் ஸ்ட்ரீட் பொறிவின் அதிர்வுகள் உலகப் பொருளாதாரமெங்கும் ஏற்கனவே பரவத் தொடங்கியிருந்தன. 2008 இன் கடைசிக் காலாண்டு நிதி அடுக்கில் ஒன்று மாற்றி ஒன்றாய் சீட்டுக்கட்டு போல் சரியக் கண்டது:

பிரிட்டனின் மிகப்பெரும் அடமானக் கடன் நிறுவனமான ஹலிஃபாக்ஸ் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து பொறிந்து போய் விற்பனைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது

மிகப்பெரும் அமெரிக்க சேமிப்பு மற்றும் கடன் நிறுவனமான வாஷிங்டன் மியூச்சுவல் பொறிந்து போய் ஜேபி மோர்கன் சேஸ் அதனைக் கையகம் செய்தது

பெல்ஜிய நிறுவனமான ஃபோர்டிஸ் உள்ளிட்ட நான்கு ஐரோப்பிய வங்கிகள்ஜேர்மனியில் ஹைப்போ ரியல் எஸ்டேட் நிறுவனம், அத்துடன் பிரிட்டன் மற்றும் ஐஸ்லாந்தில் சிறு நிறுவனங்கள் ஆகியவை ஒரேசமயத்தில் பிணையெடுக்கப்பட்டன

அயர்லாந்தில் வெகுஜன மக்களின் நலன்களைக் காவுகொடுத்து ஆறு முக்கிய வங்கிகள் பிணையெடுக்கப்பட்டன

ஐஸ்லாந்தில் நிதி அமைப்புமுறை முழுமையாக முறிந்து போனது, அரசாங்கம் வங்கிப் பங்குகளில் வர்த்தகத்தை நிறுத்தியதோடு மூன்று மிகப்பெரும் வங்கிகளைக் கையகப்படுத்தியது.

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஒருநாளைக்கான மிகப்பெரும் வீழ்ச்சியில் சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கான மதிப்பு பங்கு மதிப்புகளில் அழிக்கப்பட்டது

249 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் மிகப்பெரும் நிதி நிறுவனமான சிட்டி குழுமம் பிணையெடுக்கப்பட்டது

முன்கண்டிராத அளவிலான தனியொரு பெரும் பணமோசடித் திட்டத்தில் பெர்னார்ட் எல். மடோஃப் இன்வெஸ்ட்மெண்ட் செக்யூரிட்டிஸ் நிறுவனம் பொறிவு கண்டது.

சர்வதேச நிதி அமைப்புமுறையை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று எழுந்த அழைப்புகளுக்கு இடையில் நவம்பர் 15 அன்று, ஜி-20 குழுவைச் சேர்ந்த நாடுகளின் கூட்டம் வாஷிங்டனில் கூட்டப்பட்டது. இந்த உச்சிமாநாடு துரிதமாக ஆழமடைந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு எந்தத் தீர்வுகளும் வழங்கப் போவதில்லை. மாறாக, எந்த உருப்படியான திட்டமும் இல்லாத நிலையில், முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான பிளவுகள் மேலும் விரிவு காண்பதை காண முடியும்என்று WSWS விளக்கியது.

பாரிய ஆட்குறைப்புகள், நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்தத் துறைகளின் (குறிப்பாக அமெரிக்க வாகன உற்பத்தித் துறை)திவால்நிலைகள், மற்றும் வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமூகத் துயரம் பரவுதல் என உலகப் பொருளாதாரம் நில்லாது சரிந்து சென்ற நிலையுடன் அந்த ஆண்டு முடிவடைந்தது

http://www.wsws.org/asset/adb47226-72b0-4a47-92d6-d089d57bf81L/Lehman_Brothers_Times_Square_by_David_Shankbone.jpg?rendition=image480
டைம்ஸ் சதுக்கத்தில் இருக்கும் லேஹ்மென் பிரதர்ஸ் தலைமையகம்

http://www.wsws.org/asset/d72a3526-f4d5-401b-820d-f24959c3538E/bush_bipartisan_economic_meeting.jpg?rendition=image480
வங்கிப் பிணையெடுப்புகள் தொடர்பாக வேட்பாளர்கள் ஒபாமாவும் மக்கெயினும் ஜனாதிபதி புஷ்ஷையும் இருகட்சி அவையையும் மற்றும் செனட்டின் கட்சித் தலைவர்களையும் 2008 செப்டம்பர் 25 அன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

Featured material

11 January 2008 உலக முதலாளித்துவ அமைப்பின் அரசியல், பொருளாதார நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு மற்றும் பணிகளும் பற்றிய குறிப்புக்கள்

16 April 2008 Shades of 1929: the global implications of the US banking collapse
Part 1

8 September 2008 US government takes over mortgage giants to stave off financial meltdown

22 September 2008 வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்து காப்பாற்றுவதை நிராகரி!

24 October 2008 US layoffs mount, home foreclosures rise

27 October 2008 The “dirty little secret” of the US bank bailout

1 November 2008 Wall Street’s Great Heist of 2008

15 November 2008 G-20 உச்சிமாநாடு: 1944 பிரெட்டன் வூட்ஸ் போல் என்பதை விட 1933 லண்டனை போல் இருந்தது

16 December 2008 The Madoff scandal

19 December 2008 A lecture by Nick Beams
The World Economic Crisis: A Marxist Analysis
Part 1

2008 ஜனாதிபதித் தேர்தல்

நவம்பரில் ஜோன் மெக்கெயினை ஒபாமா வெற்றி கண்டதிலும், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலான நாடாளுமன்றம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதிலும் உச்சமுற்ற 2008 அமெரிக்க தேர்தல் பிரச்சாரமானது பொருளாதார நெருக்கடியானது கட்டவிழ்ந்து கொண்டிருந்ததன் பின்புலத்திலும் புஷ் நிர்வாகத்திற்கான பாரிய வெறுப்புக்கு இடையிலும் நடந்தேறியது. இருபதுக்கு குறைந்த ஒப்புதல் தரமதிப்பீட்டைப் பெற்று அமெரிக்க வரலாற்றின் மிகப் பரந்த வெறுப்புக்கு உள்ளான ஜனாதிபதியாக புஷ் அதிகாரத்தை விட்டு அகன்றார்.

தேர்தல் என்பது பாதையை மாற்றுவதற்கு, அதாவது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சித்திரவதை மற்றும் ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுவதை நிறுத்துவதற்கும், அத்துடன் செல்வந்தர்களால் உத்தரவிடப்படும் ஒரு பொருளாதாரக் கொள்கையைத் தலைகீழாக்குவதற்குமான ஒரு சந்தர்ப்பம் என்பதாக மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் நம்பிக்கை கொண்டனர். ஆனால், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பை மிகத் திறம்பட நடத்திச் செல்லக் கூடியவரும் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களைப் பாதுகாக்கக் கூடியவருமான ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதே ஆளும் வர்க்கத்தின் மையமான கவலையாக இருந்தது.

புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் அனைத்திலுமே ஜனநாயகக் கட்சி ஒத்துழைத்து வந்திருந்தது என்ற அதே நேரத்தில், அமெரிக்காவின் இருகட்சி ஆட்சிமுறையின் காரணத்தால் ஆளும் கட்சிக்கான பரந்த வெறுப்பு என்பது ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்கின்ற வடிவத்தை எடுத்தது. பராக் ஒபாமா என்ற ஆளுமையில் நம்பிக்கை மாற்றம் ஆகிய சுலோகங்களைச் சுற்றிய ஒரு பெரும் ஒருங்கிணைப்புடனான விளம்பரப் பிரச்சாரத்தை ஒழுங்கமைப்பதற்கான வாய்ப்பிருப்பதை ஆளும் வர்க்கம் கண்டுகொண்டது. உள்நாட்டிலும் வெளியிலும் அமெரிக்க கொள்கைகளின் அத்தனை அடிப்படைக் அம்சங்களையும் தொடர்ந்து நடத்துவதற்கு ஒபாமா தயாரிப்புடன் இருந்தார் என்றபோதும் முதல் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதி என்ற அவரது அந்தஸ்து, அவர் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு முக்கியமான வரலாற்று மைல்கல்லாகக் காட்டப்படக் கூடும் என்பதை உணர்த்தியது.

ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனுக்கும் ஒபாமாவுக்கும் இடையில் நீண்ட நெடியதொரு வேட்பாளர் போட்டி நடந்தேறியது. இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் இருந்த வித்தியாசங்கள் பெருமளவில் கற்பனையானவையே. இருவருமே இலாப அமைப்புமுறையின் பாதுகாவலர்கள் தான் என்பதுடன் இருவருமே அடையாள அரசியலின் வடிவங்களுக்குத் தான் விண்ணப்பம் செய்தனர். ஹிலாரி முதல் பெண் ஜனாதிபதியாக போட்டியிட்டார் என்றால் ஒபாமா முதல் ஆபிரிக்க-அமெரிக்கன் ஜனாதிபதியாக ஆவதற்காகப் போட்டியிட்டார். ஆயினும் ஹிலாரி கிளிண்டன் ஆதரவாக வாக்களித்திருந்த ஈராக் போருக்கு எதிர்ப்பானவராகக் கூறிக் கொள்ள ஒபாமாவால் இயன்றதானது ஒரு முக்கியமான அனுகூலமாக நிரூபணமானது.

பராக் ஒபாமாவின் இரு முகங்கள் என்ற கட்டுரையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான ரீகன் காலத்து தாக்குதலுடன் நெருக்கமாய் தொடர்புபட்ட ஒரு ஆளுமையான பெடரல் ரிசர்வ் முன்னாள் தலைவரான போல் வாக்கர் ஒபாமாவை வழிமொழிந்தது குறித்து  WSWS கருத்து கூறியது:

பாரிய உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மாற்றும் நோக்கமில்லாமல் மாறாக அமெரிக்க நிதி மூலதனத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாப்பதையை நோக்கமாகக் கொண்ட பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு இந்த இல்லிநோய்ஸ் செனட்டர் ஒரு பயனுள்ள வாகனமாக இருப்பார் என்பதை வோல்கர் போன்றவர்கள் காண்கின்றனர்.

அமெரிக்காவின் முதல் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக் கூடிய ஒபாமா தொடர்ந்த பொருளாதார நெருக்கடியாலும் மற்றும் அதிகரிக்கும் சமூகப் பதட்டங்களாலும் முன்நிறுத்தப்படும் அபாயங்களை முகம் கொடுப்பதற்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று அவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி நம்புகிறார்கள். தேசிய ஐக்கியம் என்ற பேரிலும் மாற்றம் என்ற பேரிலும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து இன்னும் அதிகமான தியாகங்களைக் கோருவதற்கு இவரை விட யார் பொருத்தமாய் இருப்பார்? அதே சமயத்தில் உலகத்திற்கு அவர் அளிக்கும் ஒரு புதிய முகம் புஷ் நிர்வாகத்தில் இருந்து உருவான வெளியுறவுக் கொள்கை படுதோல்விகள் மற்றும் பெருகும் உலகளாவிய தனிமைப்படல் ஆகியவற்றில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விடுவிக்க உதவும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை ஆண்டின் பிற்பகுதியில் மேலும் மேலும் வெளிப்படையாகிக் கொண்டிருந்த ஒபாமாவுடனான அவர்களது காதல், அவருக்கு அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார சக்தியை எப்படிச் சித்தரிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவான புரிதல் உள்ளதாகவும் அவர் புஷ்ஷை விடவும் அதில் குறைந்த ஒருதரப்பானவராக இருப்பார் என்றும் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையில் வேரூன்றி இருந்தது.

ஒபாமா இறுதியாக வேட்பாளர் இடத்தை வென்றவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பெரு வணிகத்திற்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்துவதை நோக்கி விரைந்தார். அமெரிக்க இராணுவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குமான தனது ஆதரவை எடுத்துக்காட்டும் விதமாக தேசபக்திப் பயணம் என்று WSWS குணாம்சப்படுத்திக் காட்டிய ஒன்றைத் தொடங்கினார். கொஞ்ச நாட்களிலேயே ஈராக்கில் தொடர்ந்த ஆக்கிரமிப்புக்கு தனது ஆதரவைத் தெளிவாக்கிய அவர், ஆப்கானிஸ்தானிலான போரை அதிகரிப்பதற்கான தனது நோக்கத்தையும் மறுவலியுறுத்தம் செய்தார். உள்நாட்டில் ஒட்டுக்கேட்கும் புஷ்ஷின் திட்டத்திற்கு தனது ஆதரவைக் கூறினார். செனட்டர் ஜோசப் பிடனை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக அவர் தெரிவு செய்தமையானது ஒபாமாவின் மாற்றத்திற்கான அழைப்புகளை எல்லாம் நம்பியவர்களுக்கு மறுத்துரைப்பாக அமைந்தது.

இதனிடையே, WSWS விளக்கியது, தாராளவாத ஊடகங்களிலும் நடுத்தர வர்க்க தீவிரக் குழுக்களிலும் இருந்த ஒபாமாவின் ஆதரவாளர்கள், ஒபாமா அவரது கொள்கைகளில் வலது-சாரியாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு ஆபிரிக்க அமெரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முகாந்திரத்தின் கீழ் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு வரலாற்றுப் பெரும் அரசியல் உருமாற்றத்தைக் குறிக்கும் என்று கூறி ஆதரவளித்தனர்

1970களில் புகழ்பெற்ற அடையாள அரசியலின் விளைபொருளே ஒபாமா. ஆளும் உயரடுக்கின் பிரிவுகளால் ஊக்குவிக்கப்படும் இந்த சந்தர்ப்பவாதப் போக்கானது வர்க்க நிலைப்பாட்டிற்கு மேலாக இனம் மற்றும் பால் வித்தியாசத்தை மேலமர்த்தியதோடு உழைக்கும் மக்களும் ஏழை மக்களும் தங்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கமைந்த போராட்டத்தையும் நடத்துவதை கீழறுக்க சேவை செய்தது. கறுப்பினத்தவர், லத்தினோக்கள் மற்றும் பெண்களின் ஒப்பீட்டளவில் சிறு பிரிவினர் வெகுஜனங்களின் நலன்களைப் பலியிட்டு தங்களை முன்செலுத்துவதற்கான ஒரு வழியாக அது ஆனது.

ஒபாமாவுக்கும் பிப்ரவரியில் மிட் ரோம்னியின் வேட்புநிலையை வெற்றி கண்டு குடியரசுக் கட்சியின் வேட்பாளராகியிருந்த ஜோன் மக்கெயினுக்கும் இடையிலான பொதுத் தேர்தல் போட்டியில் உண்மையான பிரச்சினைகள் குறித்த எந்த விவாதமும் தவிர்க்கப்பட்டது. ஒபாமாவுக்கும் மெக் கெயினுக்கும் இடையிலான மூன்றாவது விவாதம் பெரு மந்தநிலைக்குப் பிந்தைய மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு நடுவில் நிகழ்ந்தது என்றபோதும் நிதிப் பொறிவு என்ற வார்த்தையே அதிகம் இடம்பெறாததாக இருந்தது. இரண்டு வேட்பாளர்களுமே வங்கிகளை 700 பில்லியன் டாலர் செலவில் பிணையெடுப்பதை ஆதரித்தனர் என்றபோதும், ஒபாமா கூடுதலாக நிபந்தனையின்றி ஆதரித்தார் என்பதால் வோல் ஸ்ட்ரீட்டில் அவருக்கான ஆதரவு அதிகரித்தது.

அதி வலது அலாஸ்கா ஆளுநரான சாரா போலினை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்திருந்த மக்கெயின் தனது வாய்ப்புகள் கரைந்து போய் கொண்டிருப்பதைக் கண்டார். தேர்தல் நெருங்க நெருங்க தனது ஆதரவு கரைந்து சென்ற நிலையில், மக்கெயின்-போலின் இணை அதி வலது உணர்வுகளைக் கிளறி விடுவதற்கு முன்னிலும் பகிரங்கமாய் முனைந்தது. அரை பாசிச மனோநிலைகளுக்கு விண்ணப்பம் செய்தது.

பெரு வணிகக் கட்சிகளை எதிர்த்து சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதிப் பதவிக்கு ஜெர்ரி வைட்டையும் துணை ஜனாதிபதி பதவிக்கு பில் வான் ஓக்கெனையும் நிறுத்தியது. சோசலிசத்துக்கு ஆதரவாக அமெரிக்காவெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் SEP பிரச்சாரம் செய்தது. அது எச்சரித்தது: ஜனநாயகக் கட்சியினரும் சரி அல்லது குடியரசுக் கட்சியினரும் சரி தொழிலாள வர்க்கத்திற்கு அவர்களது உண்மையான திட்டங்களை வழங்கவில்லை. அடுத்து வரும் நிர்வாகம் வேலைவாய்ப்பின்மையைப் பெருக்கும், அத்தியாவசியமாய் நிதியாதாரம் வேண்டி நிற்கும் சமூகத் திட்டங்களுக்கான செலவினங்களை வெட்டும், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது பெருநிறுவனங்களின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும், அத்துடன் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்க அடக்குமுறையைத் தீவிரப்படுத்தும்.

அமெரிக்காவில் வாக்குப்பதிவு நடந்த போது WSWS கூறியது: பத்து மில்லியன் கணக்கிலான மக்கள் ஒபாமாவுக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற போதும், வரவிருக்கும் நிர்வாகம் அம்மக்களின் பிரமைகளால் வழிநடத்தப்படாது, மாறாக உலகளாவிய நிதி நெருக்கடியின் யதார்த்தத்தால் தான் வழிநடத்தப் பெறும்.

அது விரைவிலேயே நடந்தேறியது. ஜனாதிபதியாகத் தேர்வான ஒபாமா கூட்டரசாங்க நிதிநிலைப் பற்றாக்குறையைக் குறைக்க உறுதிபூண்டதோடு வோல் ஸ்டீரிட்டிற்குத் தேவையானதை வாக்குறுதியளித்தார். அவரது பொருளாதார அணி நிதிப் பிரபுத்துவத்துடன் ஆழமான பிணைப்புகள் கொண்ட மனிதர்களைக் கொண்டதாக இருந்தது. ஒபாமா ஒன்றுசேர்த்த கேபினட் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத விசுவாசத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. புஷ்ஷின் பாதுகாப்புச் செயலரை ஒபாமா தக்கவைத்துக் கொண்டார் என்பதோடு முன்னாள் 4-நட்சத்திர ஜெனரல்களை முன்கண்டிராதவொரு எண்ணிக்கையில் தனது ஊழியர் படையில் நியமனம் செய்தார்

தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்க ஊடகங்கள் ஒபாமாவின் வெற்றி ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது எனக் கூறி அந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க இன அடிப்படையில் பொருள் விளக்கம் அளித்தன. இந்த நிலைப்பாட்டை WSWS நிராகரித்தது. புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை ஒபாமா திரும்பப் பெறுவார் என்ற வெகுஜன எதிர்பார்ப்புகள் குறித்த எந்த விவாதத்தையும் ஒடுக்குவதற்கே இது பயன்படுத்தப்படுகிறது; இதில் இனம் சம்பந்தப்பட்டது எதுவுமில்லை என்று WSWS  கூறியது. இனப் பிரச்சினைகளையே விடாப்பிடியாக பற்றிக் கொண்டதானது ஒபாமாவின் கொள்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவரை முன்னேற்றத்தின் ஒரு அடையாளமாக மாற்றி, அவர் தனது வலது-சாரி திட்டநிரலை அமல்படுத்துவதை எளிதாக்கியது.   

ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், அவரது நிர்வாகத்தின் குணாம்சமாகக் கூறக் கூடிய அடிப்படையான சமூக இயக்கவியலை WSWS விளக்கிக் காட்டியது.

தொழிலாள வர்க்கம் தனது சமூக நலன்களுக்காய் போராடத் தொடங்கி ஒபாமா நிர்வாகத்துடன் மோதலுக்கு வரும்போதும், ஒபாமா நிர்வாகத்தின் வர்க்க குணம் வெளிப்பட்டு தொழிலாளர்கள் அதனை எதிர்க்க முன்வரும்போதும் என்ன நடக்கும்? முதலாளித்துவ வர்க்கம் மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவின் அரசியல் நிலைப்பாடாக இருக்கும் தாராளவாதத்தின் வர்க்க அடிப்படையானது வெளிவரும், அதன் அடிப்படையான பிற்போக்குத்தன குணம் அம்பலப்படும்.

ஒபாமாவின் வெற்றி குறித்த ஆரம்பகட்ட கொண்டாட்டம் என்னவாக இருந்தபோதும், ஆழமடைந்து செல்லும் பொருளாதார நெருக்கடியானது மிக விரைவிலேயே பத்து மில்லியன்கணக்கான அமெரிக்கர்களின் வாழ்க்கையில் தன்னை உணரும்படி செய்யவிருக்கிறது, அத்துடன் புதிய நிர்வாகத்தின் கீழமைந்த வர்க்க நலன்களையும் தெளிவுபடுத்த ஆரம்பிக்கும். இது அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்திற்கு மேடையமைத்துத் தரும்.

http://www.wsws.org/asset/b2ec0c30-8666-4108-aa7f-7dd0b2b0486M/Bushes_with_Obamas.jpg?rendition=image480
ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட பராக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல்லும் ஜோர்ஜ் W. மற்றும் லாரா புஷ்ஷுடன் நிற்கின்றனர்

http://www.wsws.org/asset/103430fd-0246-4605-90c5-44550268704B/McCainPalin1.jpg?rendition=image480
குடியரசுக் கட்சி வேட்பாளர்களான ஜான் மக்கெயின் மற்றும் சாரா போலின்

Featured material

4 February 2008 US political establishment lines up behind Barack Obama

14 February 2008 The two faces of Barack Obama

20 March 2008 Race, class and the politics of the Obama campaign

9 July 2008 Obama’s swing to right sparks warnings fromleft” backers

5 August 2008 The making and marketing of Barack Obama: Image and identity in US politics

15 September 2008 The Palin interviews: Ignorance in the service of the ultra-right

7 November 2008 அமெரிக்காவிலுள்ள வர்க்கம், இனம் பற்றி சில சிந்தனைகள்

23 December 2008 Obama, the military and the threat of dictatorship

 

சோசலிச சமத்துவக் கட்சியின்(அமெரிக்க)ஸ்தாபக காங்கிரஸ்

2008 இல், முதலாளித்துவ நெருக்கடிக்கு பதிலிறுப்பாகவும் உலகமெங்கும் வர்க்கப் போராட்டம் பெருகவிருப்பதை முன்கணித்த நிலையிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏராளமான தீர்க்கமான முடிவுகளை எடுத்தது. ஆகஸ்ட் மாதத்தில் நிதி நெருக்கடி வெடித்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாகத் தான், நான்காம் அகிலம் மற்றும் சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி தனது ஸ்தாபக காங்கிரசை நடத்தியது. அடுத்து வந்த வருடங்களில் ஆஸ்திரேலியா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள பிரிவுகள் சோசலிச சமத்துவக் கட்சிக்கான ஸ்தாபக காங்கிரசுகளை நடத்தின.

காங்கிரஸ் குறித்த WSWS அறிக்கை ஒன்று விளக்கியது:

ஸ்தாபக காங்கிரஸ் என்பது அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் செய்யப்பட்ட தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான வேலைகளின் விளைபொருளாகும். SEP இன் முன்னோடிக் கட்சியான வேக்கர்ஸ் லீக் தன்னை ஒரு கட்சியாக மாற்றிக் கொள்ளும் நிகழ்முறையை 1995 ஜூன் மாதத்தில் ஆரம்பித்தது. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அதனையடுத்து ஸ்ராலினிசம் மீழ்க்கமுடியாத அளவில் மதிப்பிழந்து போனதும், அத்துடன் சேர்த்து சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாதக் கட்சிகளும் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளும் அரசியல் திவால்நிலையைக் கண்டதுமாய்ச் சேர்ந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடியால் தீவிரமுற்றுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களது போர்க்குணப் பிரிவுகளுக்கும் இடையிலான உறவில் அடிப்படையான மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்(ICFI)பார்வையை இது பகிர்ந்து கொண்டது.

1998 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட உலக சோசலிச வலைத் தளம் உலகில் அதிகம் வாசிக்கப்படுகின்ற இணைய வழி சோசலிச வெளியீடுகளில் ஒன்றாக விரைவாக அபிவிருத்தி கண்டதை அடுத்து ICFI இன் அரசியல் செல்வாக்கு அதிகரித்ததோடு கணிசமான எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சோசலிச சமத்துவக் கட்சிக்குள் வந்தனர். தவிரவும் முந்தைய தசாப்தத்தில் உலக முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரப்பட்டிருந்தமையானது SEP உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைந்திருந்த முன்னோக்கினை ஊர்ஜிதம் செய்தது.

ஸ்தாபகக் காங்கிரசுக்கு முன்வந்த ஆண்டுகளில், SEP, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய அடுக்கினை தனது பதாகைக்கு வென்றெடுக்கத் தொடங்கியிருந்தது. இது ஆரம்பம் மட்டுமே. ட்ரொட்ஸ்கிசத்தின் மறுஎழுச்சிக்கும் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்கும் தயாரிப்பு செய்கின்ற பொருட்டு முதலாளித்துவ அமைப்புமுறையின் பெருகும் நெருக்கடிக்கு SEP இன் பதிலிறுப்பாக இந்த ஸ்தாபக காங்கிரஸ் அமைந்தது.

காங்கிரஸ் இரண்டு முக்கியமான ஆவணங்களை ஏற்றுக் கொண்டது. முதலாவது, சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாட்டு அறிக்கை, இன்னொன்று கட்சிக்கான ஒரு அரசியல் யாப்பு. கட்சியின் அடித்தளத்தின் மையமாக வரலாற்றை நிறுத்திய SEP ஒரு புதிய சோசலிச இயக்கமானது ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் தொழிலாள வர்க்க இயக்கம் பெற்றிருந்த அனுபவங்களை உட்கிரகித்துக் கொள்வதன் அடிப்படையில் அமைவது அவசியமாக இருந்ததை வலியுறுத்தியது. வரலாற்று ஆவணம் கூறுகிறது:

கடந்தகாலப் போராட்டங்களின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டே புரட்சிகர சோசலிச மூலோபாயம் அபிவிருத்தி செய்யப்பட முடியும். அனைத்திற்கும் மேலாக, சோசலிஸ்டுகளுக்கான கல்வியானது நான்காம் அகிலத்தின் வரலாற்றின் மீதான ஒரு விரிவான அறிவை அபிவிருத்தி செய்வதை நோக்கி செலுத்தப்பட வேண்டும். சோசலிசப் புரட்சிக்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் முன்னணியாக மார்க்சிசத்தை அபிவிருத்தி செய்வதென்பது, தனது மிக முன்னேறிய வெளிப்பாட்டை, நான்காம் அகிலம் அது ஸ்தாபிக்கப்பட்ட 1938 ஆம் ஆண்டு தொடங்கி ஸ்ராலினிசத்துக்கு எதிராகவும், சீர்திருத்தவாதத்திற்கு எதிராகவும், ட்ரொட்ஸ்கிசம் மீதான பப்லோவாதத் திருத்தல்களுக்கு எதிராகவும் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் அத்தனை பிற வடிவங்களுக்கு எதிராகவும் நடத்தி வந்திருக்கக் கூடிய போராட்டங்களில் கண்டிருக்கிறது.

20 ஆம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள் குறித்தும் அவற்றின் மையமான மூலோபாய படிப்பினைகள் குறித்துமான ஒரு பொதுவான மதிப்பீடு இல்லாமல் கட்சிக்குள்ளாக வேலைத்திட்டம் மற்றும் இலக்குகள் ஆகிய அடிப்படையான பிரச்சினைகளில் அரசியல் உடன்பாட்டை எட்ட இயலாது.

கட்சியின் அங்கத்துவத்திற்கான அடிப்படையாக SEP இன் கோட்பாட்டு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம், முதலாளித்துவ நெருக்கடியின் தன்மை மற்றும் சோசலிசத்துக்கான அவசியம், சர்வதேசியவாதம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் போருக்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிச நனவுக்கான போராட்டத்தில் கட்சியின் பாத்திரம் ஆகிய அடிப்படையான பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாட்டை இது விரிவாக விளக்குகிறது. இது கூறுகிறது:

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் நவீன முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாள வர்க்கம் என்ற தலைமைத்துவமானதும் தீர்மானகரமானதுமான சர்வதேசப் புரட்சிகர சமூக சக்தியின் நலன்களை வெளிப்படுத்துகிறது. அமெரிக்கத் தொழிலாளர்களின் ஆதரவை சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு வென்றெடுப்பதே SEP இன் மையமான பணி ஆகும். அமெரிக்காவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் ஒரு தொழிலாளர்களது அரசை ஸ்தாபிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டுவதற்கு இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் SEP போராடுகிறது. ஒரு உண்மையான ஜனநாயகம் கொண்ட மற்றும் சமத்துவம் கொண்ட சோசலிச சமூகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புறநிலையான முன்நிபந்தனைகளை இதன்மூலம் இது உருவாக்கும். எல்லா நாடுகளிலுமான தொழிலாளர்களை உலக அளவில் ஐக்கியப்படுத்துவதையும் உலக ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை உருவாக்குவதையுமே தனது இலட்சியமாகக் கொண்ட ஒரு சர்வதேச மூலோபாயத்தின் கட்டமைப்புக்குள்ளாக மட்டுமே இந்த இலக்குகள் எட்டப்பட முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கான ஒரு புதிய தலைமையையும் இந்த காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது. டேவிட் நோர்த் தேசியத் தலைவராகவும் ஜோசப் கிஷோர் தேசிய செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்துடன் ஒரு புதிய தேசியக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியிலும் அதன் முன்னோடியான வேர்க்கஸ் லீக்கிலும் நெடுங்காலம் உறுப்பினராக இருந்திருந்த 55 வயதான எடி பெஞ்சமின் 2008 பிப்ரவரி 5 அன்று திடீர் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு இக்காங்கிரசில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எடி 1970களில் கறுப்பின தேசியவாதம் மற்றும் அடையாள அரசியலுக்கு எதிராக புரட்சிகர அரசியலுக்கு வென்றெடுக்கப்பட்டிருந்த ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாள வர்க்க இளைஞர்களின் ஒரு அற்புதமான தலைமுறையின் பகுதியாக இருந்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து அக்டோபரில் WSWS தனது வலைத் தளத்தை மறுவடிவமைப்பு செய்தது. பல்வேறு மாற்றங்களில் அன்றாட முன்னோக்கு பத்தி அறிமுகம் செய்யப்பட்டதும் ஒன்றாகும். துரிதமாக அதிகரித்த வாசிப்பு எண்ணிக்கை முன்வைத்த கோரிக்கைகளுக்கான பதிலிறுப்பாகவும் உலகப் பொருளாதார மற்றும் அரசியல் சூழலிலான முக்கிய மாற்றங்களை முன்கணித்தும் இந்த மறுவடிவமைப்பு முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் எழுதிய முதல் முன்னோக்கு, கட்டவிழ்ந்த நெருக்கடியின் புறநிலையான தாக்கங்கள் குறித்தும் மற்றும் WSWS இன் பங்கு குறித்தும் கூட WSWS இன் மதிப்பீட்டை சுருங்க விவரித்தது:

1. அமெரிக்காவை மையம் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியில் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் உடன்வருகின்ற தீர்க்கமுடியாத முரண்பாடுகள் குறித்த மார்க்சிச பகுப்பாய்வு ஒரு அதிர வைக்கும் நிரூபணத்தைப் பெற்றிருக்கிறது.

2. முக்கிய ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையில் ஏற்கனவே இருக்கிற முக்கியமான பதட்டங்களை, ஆழமடைந்து செல்லும் பொருளாதார நெருக்கடியானது மேலும் அதிகப்படுத்தும். உற்பத்தி சக்திகளின் சர்வதேச ஒருங்கிணைப்புடனான அபிவிருத்திக்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான அடிப்படை வரலாற்று மோதலானது உலகப் போர்களுக்கான அபாயத்தை முன்னிலும் பகிரங்கமாக மேலே கொண்டு வருகிறது. அமெரிக்கா தனது உலகப் பொருளாதார நிலை மோசமடைந்ததை - இது நடப்பு நெருக்கடியில் பகிரங்கமாக அம்பலப்பட்டிருக்கிறது - சரிக்கட்டுவதற்கு செய்கின்ற முயற்சிகள் மேலும் மேலும் ஒரு பொறுப்பற்ற மற்றும் கட்டுப்பாடற்ற இராணுவாத தன்மையை பெறும்.

3. மோசமடைந்து செல்லும் பொருளாதாரச் சூழலானது பிரிக்கவியலாமல் உலக அளவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட மறுஎழுச்சிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கம் அதன் போராட்டங்களைத் தடுப்பதற்கும் காட்டிக் கொடுப்பதற்கும் பழைய மற்றும் ஊழலடைந்த அதிகாரத்துவ அமைப்புகள் - அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் - செய்கின்ற முயற்சிகளை முழுத் தீர்மானத்துடன் எதிர்க்கும்.

4. மார்க்சிச தத்துவத்திற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைக்கும் புரட்சிகர சோசலிசத்திற்கான முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்கும் புதிதாக தீவிரமயப்பட்டிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இடையே ஒரு புதிய வாசகர்படை உருவாகும். மார்க்சிச தத்துவத்தில் உறுதியாகக் காலூன்றியிருக்கிற அத்துடன் ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்தை சந்தேகத்திற்கிடமின்றிப் பாதுகாக்கின்ற ஒரு கட்சியால் மட்டுமே ஒரு புதிய புரட்சிகர சகாப்தத்தின் சவால்களைப் பூர்த்தி செய்ய இயலும்.

அபிவிருத்தியுற்றுக் கொண்டிருக்கும் நெருக்கடி குறித்த இந்த மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் மறுவடிவமைப்பு மற்றும் மறுவெளியீட்டை ஒரு மிக முக்கியமான முன்னோக்கிய அடியாக சர்வதேச ஆசிரியர் குழு காண்கிறது

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளின் கூட்டு முயற்சிகளின் ஊடகாக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவுபடுத்தலில் ஒரு மாபெரும் முன்னோக்கிய படியாக SEP இன் ஸ்தாபக காங்கிரஸ் அமைந்திருந்தது.

http://www.wsws.org/asset/c555716e-4a4e-47ab-970b-fe8c34058f6A/Historical-Foundations.jpg?rendition=image480
SEP இன் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள்

Featured material

19 September 2008 Socialist Equality Party holds founding Congress

25 September 2008 Documents of the SEP Founding Congress: Statement of Principles

29 September 2008 சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாட்டு ரீதியான அடித்தளங்கள்

22 October 2008 Welcome the redesigned World Socialist Web Site

போர் மற்றும் இராணுவவாதம்

2008 ஆம் ஆண்டின் பொருளாதார மற்றும் அரசியல் கிளர்ச்சிகளானவை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டிலுமே ஏகாதிபத்தியப் போர் தொடர்ந்தமை, ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள்ளாக அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் மூர்க்கம் பெருகியமை, மற்றும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய வான் தாக்குதல்களுக்கான அடுத்த இலக்காக பரவலாய் உணரப்பட்ட ஈரானுக்கு எதிரான நெருக்குதல் அதிகரிக்கப்பட்டமை ஆகியவற்றின் பின்புலத்தில் நிகழ்ந்தது.

2008 ஆகஸ்டில், ரஷ்யாவுக்கும் முன்னாள் சோவியத் குடியரசில் இடம்பெற்றிருந்த நாடான  ஜோர்ஜியாவுக்கும் இடையில் போர் வெடித்தது. ஜோர்ஜியாவுக்கு புஷ் நிர்வாகம் ஆதரவளித்தது. பிரிந்து செல்லும் நிலையில் இருந்த தென் ஒசடியா மாகாணத்தின் தலைநகருக்கு எதிராக ஜோர்ஜிய இராணுவம் தாக்குதல் தொடுத்தது. ரஷ்யா திட்டவட்டமாக பதிலடி கொடுத்து ஜோர்ஜியா இராணுவத்தை ஐந்தே நாட்களில் பின்வாங்கச் செய்தது. அமெரிக்காவும் மற்றும் அநேக மேற்கத்திய சக்திகளும் ஜோர்ஜியாவை நிபந்தனையில்லாமல் ஆதரித்தன. ஜோர்ஜியாவின் தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதான பேரில் அவை ரஷ்யாவுக்கு எதிரானதொரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டன.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முழுவீச்சிலான ஒரு சண்டையாக அபிவிருத்தியுற அச்சுறுத்திய இந்த இராணுவ மோதலுக்குக் கீழே, ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதற்கும், காகசஸின் வழியாக மத்திய ஆசியாவின் எரிசக்தி ஆதாரங்களின் மீதும் மற்றும் அவற்றின் போக்குவரத்துப் பாதைகளின் மீதுமான தனது மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த முனைப்பு இருந்தது WSWS இன் ஒரு கட்டுரை காகசஸில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினைகளை ஒரு சர்வதேசிய மற்றும் வரலாற்று முன்னோக்கில் பொருத்தியது.

அதே நேரத்தில், ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் இராணுவ அதிகரிப்புஈராக்கிய மக்களிலும் சரி அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளிலும் சரி உயிர்சேதத்தை மிகப் பெருமளவில் அதிகப்படுத்தியது என்றபோதும் அது ஒரு இராணுவ வெற்றியைக் கொண்டுவரத் தவறியது என்பதை அந்த ஆண்டின் ஆரம்பத்தில் WSWS குறிப்பிட்டுக் காட்டியிருந்தது

2008 ஆம் ஆண்டில் மொசூல், பஸ்ரா, பாக்தாத்தின் சதர் நகரம் மற்றும் அமரா ஆகிய இடங்களில் முக்கியமான இராணுவ நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. ஜூன் மாதத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கிய எண்ணெய் வளங்களைச் சுரண்டுவதற்கு ஏலமுறையற்ற ஒப்பந்தங்களைப் பெற்றன.

அந்த ஆண்டில், பாகிஸ்தானுக்குள் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மிகப்பெருமளவில் அதிகரித்தன. இந்த அதிகரிப்பு செனட்டர் ஒபாமாவின் வாய்மொழி ஆதரவுடன் சிஐஏ மற்றும் இராணுவத்தின் கூட்டு சிறப்பு நடவடிக்கைத் தலைமை ஆகியவற்றினால் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் இராணுவச் சாவடி ஒன்றில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 படையினர்கள் கொல்லப்பட்டனர். சோமாலியாவிலும் அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல்களை அதிகரித்த அதேநேரத்தில் நேட்டோ, ஏடன் வளைகுடாப் பகுதியில் அதிகமான எண்ணிக்கையிலான இராணுவக் கப்பல்களை நிறுத்தியது.

புஷ் நிர்வாகம் போருக்கு அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில், ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான அமெரிக்காவின் முனைப்பு மேலும் கூடியது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈரானை நினைவில் இல்லாமல் செய்து விட ஹிலாரி கிளிண்டன் அச்சுறுத்தினார் என்றால் பராக் ஒபாமா எல்லாத் தெரிவுகளுமே மேசை மீது உள்ளன என்பதை மறுவலியுறுத்தம் செய்தார்.

ஒபாமாவை அமெரிக்க ஜனாதிபதியாக அமரவைத்தமை ஈராக்குடன் ஒப்பிடுகையில் அதிககாலம் உதாசீனப்படுத்தப்பட்டிருந்த போர்நிலையான ஆப்கானிஸ்தானை நோக்கி பிராந்தியத்திலான அமெரிக்க இராணுவ முயற்சிகள் திருப்பப்படுவதற்கான சந்தர்ப்பமாக இருந்தது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவாகி போரினால் நாசமுற்ற இந்த இரு நாடுகளுக்கும் கோடையில் பயணம் செய்த ஒபாமா, துருப்புகளில் பலவும் ஈராக்கில் இருந்து திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டு ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்தார்.

நவம்பரில் நடந்த தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற பின்னர், புஷ்ஷின் பாதுகாப்புச் செயலரான ராபர்ட் கேட்ஸையே (அல்கெய்தா உருவாவதற்கு காரணமாக இருந்த 1980களில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆதரவுடன் நடந்த கிளர்ச்சியில் பங்கு கொண்டிருந்த மூத்த அதிகாரி) தக்கவைத்துக் கொண்டமை இந்த மத்திய ஆசிய நாட்டில் கவனம் புதுப்பிக்கப்பட்டிருப்பதை அடையாளப்படுத்தியது.

வெளியுறவுச் செயலராக ஹிலாரி கிளிண்டன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வுபெற்ற நேட்டோ தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் மற்றும் இவர்களுடன் ராபர்ட் கேட்ஸ் என ஒபாமாவால் ஒன்றுசேர்க்கப்பட்ட ஒட்டுமொத்த தேசியப் பாதுகாப்பு அணியானது, புஷ் நிர்வாகத்தின் போர்களுக்கு முடிவுகட்டும் நம்பிக்கையில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்திருந்தவர்கள் ஏமாற்றப்பட்டிருந்தனர் என்பதை எடுத்துக்காட்டியது.

2009 வசந்த காலத்தின் போது இரத்த ஆற்றை மேலும் ஆக்ரோஷமாய் அதிகப்படுத்துவதற்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை புதிய நிர்வாகம் இரட்டிப்பாக்க இருக்கிறது என்பதை அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் வெளிப்படுத்தி விட்டார்.

http://www.wsws.org/asset/d5a9bd7e-83f0-4d86-8fa5-e915e25eb73M/676px-Georgia%2C_Ossetia%2C_Russia_and_Abkhazia_%28en%29.png?rendition=image480
Russia, Georgia and South Ossetia

http://www.wsws.org/asset/cb7ccb01-e512-4dc4-8713-2eb6d2f5188C/MQ-1_Predator_unmanned_aircraft.jpg?rendition=image480
ஒரு ஆளில்லா விமானம்

Featured material

2 January 2008 The state of Iraq as it enters 2008

19 March 2008 Five years after the invasion of Iraq: A debacle for US imperialism

25 April 2008 How the Pentagon manipulated the media to promote the Iraq war

21 July 2008 The Obama candidacy and the new consensus on Afghanistan

24 July 2008 New York Times boosts Pentagon push for wider bombing in Afghanistan

6 August 2008 US calls for tougher sanctions on Iran

12 August 2008 Bush escalates confrontation with Russia over Georgia

6 December 2008 New York Times bares Obama’s campaign lies on Iraq war

பிற உலக அபிவிருத்திகள்

ஐரோப்பா

2008 மார்ச்சில், கொசாவா சேர்பியாவில் இருந்தான தனது சுதந்திரத்தை அறிவித்தது. பெல்கிரேடுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ போருக்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இது நிகழ்ந்திருந்தது. இதனை ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பால்கனில் உள்ள அவற்றின் இடது வக்காலத்துவாதிகள் மோசடியாக மனிதாபிமான நடவடிக்கைகளாகக் காட்டியதை WSWS அம்பலப்படுத்தியது. கொசாவோ விடுதலைப் படைத் தலைவரான ரமுஷ் ஹராதினாஜ் நடத்தப்பட்ட விதத்திற்கும் பொஸ்னியாவின் சேர்பியத் தலைவரான ரடோவன் கராட்சிக் நடத்தப்பட்ட விதத்திற்கும் இடையில் இருந்த வித்தியாசத்தை WSWS கட்டுரைகள் எடுத்துக் காட்டின. இருவருமே இனச் சுத்திகரிப்பு குறித்த குற்றவியல் குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தனர் என்றபோதும், கொசாவோ தலைவர் விடுதலை செய்யப்பட்டார், சேர்பியத் தலைவரோ கைது செய்யப்பட்டார்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ஸ்பெயின் பொதுத் தேர்தலில், வலதுசாரி மக்கள் கட்சியை(Popular Party)வென்று பிரதமர் ஜோஸ் லூயிஸ் சபேதரோவின் ஆளும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (Socialist Workers Party)மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னாள் ஸ்ராலினிசக் குழுவிற்குள்ளான பிளவின் காரணத்தால் ஐக்கிய இடது(IU)தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி(PCE)பெரும் தோல்விகளைச் சந்தித்தது.

ஏப்ரல் மாதத்தில், இத்தாலியில், பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பயங்கரமான ஊழலுக்கு இழிபுகழ் பெற்றிருந்தார் அத்துடன் பரவலான வெகுஜன வெறுப்பையும் சம்பாதித்திருந்தார் என்றபோதும் அவரது அரசாங்கம் மூன்றாவது முறையாக அதிகாரத்தைப் பிடித்தது. முன்னாள் ஸ்ராலினிசக் கட்சியான Rifondazione Comunista இன் நீண்டகாலத் தலைவரான ஃபாஸ்டோ பெர்டினோட்டி, பெர்லுஸ்கோனியின் வெற்றிக்கு இத்தாலிய மக்கள் தான் காரணம் என்று குறைகூறினார். என்றபோதும் அதற்கான உண்மையான பொறுப்பு இடது என்று சொல்லப்பட்ட கட்சிகளின் திவால்நிலையிலேயே அமைந்திருந்தது. Rifondazione ரோமனோ பிரோடியின் மைய-இடது அரசாங்கத்தில் இணைந்து அதனை இரண்டு ஆண்டுகள் அதிகாரத்தில் வைத்திருந்தது. அச்சமயம் அந்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை முன்னெடுத்ததோடு ஆப்கானிஸ்தான் போரையும் தொடர்ந்தது

கிரீஸில் சிக்கன நடவடிக்கைக்கான நிதிநிலை அறிக்கை ஆலோசனையையும் வங்கிப் பிணையெடுப்புகளையும் எதிர்த்து அக்டோபர் 21 அன்று ஒரு பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. டிசம்பர் மாதத்தில் 15 வயது மாணவர் ஒருவர் போலிசால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போர்க்குணத்தைக் கண்டு ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு அதிர்ச்சியடைந்தது. வெகுஜன ஆர்ப்பாட்டங்களால் முன்நிறுத்தப்பட்ட அரசியல் பிரச்சினைகளை WSWS அலசியது, அத்துடன் சோசலிஸ்ட் கட்சியும்(PASOK)மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் (KKE) வலது நோக்கிய கூரிய நகர்வு காண்பதானது தீவிர இடதின் குறிப்பாக SYRIZA இன் செல்வாக்கு பெருக இட்டுச் சென்று கொண்டிருந்தது எனக் குறிப்பிட்டது. SYRIZA தனது வாய்வீச்சுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்திற்குத் தீங்கிழைக்காத கொள்கைகளையே முன்செலுத்துகிறது என்று WSWS எச்சரித்தது

கனடா

நவம்பரின் பிற்பகுதியிலும் டிசம்பரின் ஆரம்பத்திலும், 2008 உலக நிதிப் பொறிவின் முதல் அரசியல் பின்னதிர்வுகளில் ஒன்றாக, கனடா ஒரு மிகப்பெரும் அரசியலமைப்பு நெருக்கடியால் உலுக்கப்பட்டது. இறுதியில் ஆளுநர்-ஜெனரல் நாடாளுமன்றத்தை மூடச் செய்வதில் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் வெற்றி கண்டதை அடுத்து சிறுபான்மை கன்சர்வேடிவ் அரசாங்கம் தப்பித்தது. WSWS இதனை ஒரு அரசியல் யாப்பு ரீதியான கவிழ்ப்புஎன்று வருணித்தது.

2006 பிப்ரவரி முதலாகவே ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்குத் தலைமை கொடுத்து வந்திருந்த ஹார்ப்பர், நிதி நெருக்கடியின் முழுத் தாக்கங்களை மறைத்து விடும் நம்பிக்கையில் செப்டம்பரில் ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததுடன் இந்த நெருக்கடி தொடங்கியது. கன்சர்வேடிவ் கட்சி தவிர்த்த எதுவாயினும்ஏற்புடையதே என்ற தொழிற்சங்கங்கள் மற்றும் நடுத்தர-வர்க்க இடதின் அரசியல் குறித்தும் தொழிலாளர்களை தாராளவாதக் கட்சி மற்றும் சமூக ஜனநாயக NDP இன் கூட்டணிக்குப் பின்னால் அணிதிரட்ட அவை நோக்கம் கொண்டுள்ளது குறித்தும் கனடாவின் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்திருந்தது.

ஹார்ப்பரின் எண்ணம் பலிக்கவில்லை, கன்சர்வேடிவ் கட்சியினருக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே கிடைத்தது. டிசம்பர் 1 அன்று, கனடா பொருளாதாரத்திலான துரிதமான சரிவை சரிக்கட்டுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் கன்சர்வேடிவ் கட்சி நிராகரித்தற்கு பின்னர், சிறுபான்மை கன்சர்வேடிவ் அரசாங்கத்தை ஒரு தாராளவாத-NDP கூட்டணி அரசாங்கத்தைக் கொண்டு இடம்பெயர்ப்பதற்குரிய ஒரு ஒப்பந்தம் ஒழுங்கமைப்பட்டிருப்பதாக லிபரல்களும், NDPயும் மற்றும் Bloc Québécois ம் அறிவித்தன.

கன்சர்வேடிவ்கள், அடிப்படை நாடாளுமன்ற மரபுகளை ஏறி மிதித்து, கனேடிய மூலதனத்தின் மிகச் சக்திவாய்ந்த பிரிவின் ஆதரவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு தங்களுக்கிருக்கும் அரசியல் அமைப்பு உரிமையைப் பயன்படுத்த விடாமல் தடுக்கும் வண்ணமாக நாடாளுமன்றத்தை ஆறு-வார காலத்துக்கு மூட வேண்டும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர் ஜெனரலுக்கு கோரிக்கை வைத்தனர். கூட்டணிக்கு ஆலோசனை வைத்தவர்கள் எல்லாம் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி ஏற்றுக் கொண்டனர்.

ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா

திபெத்தில் நடந்த தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களும் கலகங்களும் சீனாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அரசாங்கத்தை உலுக்கின. இதில் சம்பந்தப்பட்டிருந்த வர்க்கப் பிரச்சினைகளை WSWS ஆசிரியர் குழு விளக்கியது.

ஆசியாவில் நடந்த இரண்டு நாசகரமான இயற்கைப் பேரிடர்கள் அப்பிராந்திய வெகுஜன மக்களின் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு உள்நாட்டு மற்றும் சர்வதேச அதிகாரிகளின் சுய-நலனையும் அம்பலப்படுத்தியது. பர்மாவில் மே 3 அன்று தாக்கிய நர்கிஸ் புயலில் 60,000 பேர் உயிரிழந்தனர், காணாமல் போயினர். 2 மில்லியன் வரையான மக்கள் வீடிழந்தனர். மே மாதத்தின் பிற்பகுதியில், 7.8 அளவான பூகம்பம் ஒன்று சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை நொருக்கியது. 80,000க்கும் அதிகமான பேர் உயிரிழந்தனர், தொலைந்து போயினர். வறுமைப்பட்ட நகரங்களிலும் கிராமங்களிலும் இருக்கும் பாழடைந்த கட்டிடங்கள் குறித்தும் அதிகாரிகள் இடையே நிலவும் ஊழல் குறித்தும் எழுந்த பரவலான கோபம் ஆர்ப்பாட்டங்களுக்கு இட்டுச் சென்றது.

ஆகஸ்ட் மாதத்தில், பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நடுவே பெய்ஜிங்கில் ஒலிம்பிக்ஸ் நடத்தப்பட்டதானது முற்றுகையில் இருப்பதாக தன்னை உணரும் ஒரு ஆட்சியை வெளிக்காட்டியது. ஒரு சோசலிஸ்ட்அல்லது புரட்சிகரபாரம்பரியத்திற்கான தனது உரிமைகோரல்களை நீண்டகாலமாய் மறுதலித்து வந்திருக்கக் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வணிக-ஆதரவு ஆட்சியாக தனது பிம்பத்தை மறுவடிவமைப்பு செய்து கொள்ளும் முயற்சியின் பகுதியாக 100 மில்லியன் டாலர் செலவில் தொடக்க விழாவை நடத்தி 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியை இருட்டடிப்பு செய்திருக்கிறது என்று WSWS குறிப்பிட்டது.

இந்தியத் துணைக்கண்டத்தில், பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கொடுத்த அழுத்தத்தினால் உந்தப்பட்டு, முக்கியமான அரசியல் நிகழ்வுகள் நடந்தேறின. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு மூலோபாயக் கூட்டிற்கு உறுதி கூட்டும் வண்ணம் ஸ்ராலினிசத் தலைமையிலான இடது முன்னணியை தன் பக்கத்தில் இருந்து திறம்பட அகற்ற முடிவுசெய்ததை அடுத்து உருவான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் மயிரிழையில் உயிர்பிழைத்தது.

2008 ஆம் ஆண்டில் சீனாவின் கடுமையான ஆட்சேபங்களுக்கு இடையே அணு விநியோகக் குழுவானது (NSG)அமெரிக்காவின் உத்தரவின் பேரில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ அணுசக்தி பரிவர்த்தனை செய்து கொள்ள இருந்த தடையை அகற்றியது. சீனாவை தனிமைப்படுத்துவது, அவசியப்பட்டால் இராணுவரீதியாகவும் முறியடிப்பது என்ற அமெரிக்காவின் மூலோபாயத்திற்கு இந்தியாவைப் பட்டைதீட்டுவதே அதன் உண்மையான நோக்கமாய் இருந்தது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், உலகின் ஆக்கபூர்வ பணிகளுக்கான அணுசக்தி கட்டுப்பாட்டு நிர்வாகமுறையில் இந்தியாவிற்கு ஒரு பிரத்யேகமான அந்தஸ்திற்கு பரிந்து பேச அமெரிக்கா உடன்பட்டது.

நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில், இந்தியப் பெருநகரான மும்பையில், ஆயுதமேந்திய நபர்கள் பல இலக்குகளைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினர். 59 மணி நேரம் நடைபெற்ற இந்திய பாதுகாப்புப் படையினருடனான இந்த மோதலில் 170 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மும்பைத் தாக்குதல் இந்தியத் துணைக்கண்ட பதட்டங்களை மேலும் அதிகரித்தது. மும்பை தாக்குதலை பயங்கரவாதத்தின் மீதான போரை தீவிரப்படுத்துவதற்கு இந்தியா பயன்படுத்துவதற்கு, அமெரிக்காவிடம் இருந்தான செயலூக்கமிக்க ஆதரவு கிடைத்தது. டிசம்பர் இறுதியில், இந்திய நாடாளுமன்றம் அரக்கத்தனமான பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தை முன்நகர்த்தியது

ஆஸ்திரேலியாவில், முந்தைய இரண்டு நூற்றாண்டுகளில் பூர்வகுடி மக்களுக்கு எதிராக திட்டமிட்டுச் செலுத்தப்பட்ட இனஅழிப்புக் குற்றங்களுக்கு ஒரு முறையான மன்னிப்பு கோரும் அழைப்பை தொழிற்கட்சி அரசாங்கம் விடுத்தது. இந்த நல்லிணக்கத் திட்டம் பூர்வகுடி சமூகங்கள் எதிர்கொள்ளும் படுபயங்கரமான சமூக நிலைமைகளை வெல்வதற்கு எதுவொன்றையும் செய்யப் போவதில்லை என்று WSWSம் ஆஸ்திரேலிய SEPம் எச்சரித்தன. சலுகைபடைத்த பூர்வகுடித் தலைவர்களின் ஒரு அடுக்கை உள்ளிழுத்து, முந்தைய ஹவார்ட் அரசாங்கத்தின் போலிஸ்-இராணுவம் பூர்வகுடி சமூகங்களுக்குள் செய்த தலையீட்டை மேலும் ஆழப்படுத்துவதற்கு அத்தலைவர்களை பயன்படுத்திக் கொள்வது என்ற தொழிற்கட்சியின் திட்டத்திற்கு வசதி செய்து கொடுப்பதே இந்த மன்னிப்புக் கோரலின் உண்மையான நோக்கமாய் இருந்தது.

தொடர்ச்சியான பல கட்டுரைகளின் மூலமாகவும் கள அறிக்கைகளின் மூலமாகவும்  WSWS, பூர்வகுடி மக்கள் சகித்து வந்திருக்கக் கூடிய மிருகத்தனத்தின் அன்றாட யதார்த்தத்தையும் பல தசாப்தங்களாக ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் மறைக்க முனைந்து வந்திருக்கக் கூடிய குற்றங்களையும் அம்பலப்படுத்தியது. இதன் உச்சகட்டமாக வட பிராந்திய நிலைமைகள் குறித்த ஏழு பாகங்கள் கொண்ட கட்டுரை வெளிவந்தது.

http://www.wsws.org/asset/f0dd2713-b606-4ce6-91fb-359218fc6cdH/Cyclone_Nargis_-Myanmar-3May2008.jpg?rendition=image480
பர்மாவில் நர்கீஸ் சூறாவளி

Featured material

12 February 2008 Australian federal parliament’ssorry” resolution: the real agenda

1 March 2008 Independent” Kosovo: Anatomy of a Western protectorate

25 April 2008 The collapse of Rifondazione Comunista in Italy
The price of opportunism

21 May 2008 Rising death toll, popular anger in China quake

21 June 2008 Northern Territory intervention: an on-the-spot report
Rudd Labor deepens Howard’s assault on Aboriginal communities
Part 1

30 July 2008 The arrest of Radovan Karadzic and the complicity of the West in Bosnia’s civil war

4 November 2008 US and India forge a strategic partnership with globally disruptive nuclear treaty

1 December 2008 Mumbai atrocity: the dead end of communal politics

5 December 2008 Canadas constitutional coup: A warning to the working class

31 December 2008 The crisis of the Greek government and the role of the “left”

26 January 2009 Canada: Vital lessons from last month’s political crisis

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டங்கள்

உலகப் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்ததைத் தொடர்ந்து தொழிலாளர்களது வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் மீதான தயவுதாட்சண்யமற்ற தாக்குதலும் தீவிரமடைந்து கொண்டிருந்தது. இதற்கு தொழிலாளர்களின் சர்வதேச எதிர்ப்பு பெருகியதை 2008 ஆம் ஆண்டிலான தொழிலாளர் போராட்டங்கள் வெளிப்படுத்தின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரோமானியா, ஜேர்மனி, கிரீஸ், பிரான்ஸ், எகிப்து, துருக்கி மற்றும் தென் ஆபிரிக்காவில் முக்கியமான வேலைநிறுத்தங்கள் நடந்தன.

பல தசாப்த காலத்தில் அமெரிக்க வாகன உற்பத்தித் துறையில் நடந்த மிகப்பெரும் வேலைப் புறக்கணிப்புப் போராட்டமாக, பிப்ரவரியில் அமெரிக்க ஆக்சில் நிறுவனத்தைச் சேர்ந்த 3,600 தொழிலாளர்கள், 1 மணிநேர வேலைக்கான ஊதியமாக இருக்கும் 28 டாலரை 11.50 டாலர் என்ற அளவுக்கு குறைக்கக் கோரும் நிறுவனத்தின் கோரிக்கைகளை எதிர்த்து பிப்ரவரி 26 முதலாக மிச்சிகன் மற்றும் நியூயோர்க் ஆலைகளில் கடுமையான மூன்று-மாத கால வேலைநிறுத்தத்தை நடத்தினர். UAW சங்கம் தொழிலாளர்களை தகவலறியா நிலையிலும் வறிய விநியோக நிலைகளிலும் வைத்திருந்தது. சுமார் மூன்று காலாண்டின் வேலைநிறுத்த நிதி ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாய் சேமிக்கப்பட்டிருந்த நிலையில் வாரத்திற்கு 200 டாலர்கள் மட்டுமே வேலைநிறுத்தக் காலத்திற்கான உதவியாக அளித்தது.

WSWS இல் வெளியான 44க்கும் அதிகமான கட்டுரைகள் முற்றுகையிடங்களிலும் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் இடையேயும் விநியோகம் செய்யப்பட்டது. இதுதவிர, WSWS இன் செய்தியாளர் குழுக்கள் வேலைநிறுத்தம் செய்தவர்களுடன் பத்துக்கும் அதிகமான நேர்காணல் காணொளிகளை உருவாக்கின.

அமெரிக்கன் ஆக்சில் நிறுவனத்தில் UAW இன் காட்டிக்கொடுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு முன்னிலைத் தாக்குதலுக்கு அடித்தளம் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் ஊதியங்களை 50 சதவீதம் வரை வெட்டுவதன் மூலமாக அமெரிக்க வாகனத் தயாரிப்புத் துறையை பிணையெடுப்பு செய்வதற்கு நடந்த தயாரிப்புகளுக்கான களப்பணியாக இது அமைந்தது. WSWSம் அமெரிக்க SEPம் விடுத்த ஒரு அறிக்கை தொழிற்சங்கங்களின் இடது பாதுகாவலர்களது பாத்திரம் குறித்து துல்லியமான படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொண்டது:

தொழிற்கட்சி இடதுகள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சார்பான ஒரு அதிமுக்கியமான பாத்திரத்தை ஆற்றுகின்றன. UAW மற்றும் பிற தொழிற்சங்கங்கள் சீர்திருத்தப்பட முடியும் என்பதான பிரமைகளை ஊக்குவிக்க இவை முனைகின்றன. வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு எதுவுமே செய்திராத இந்த முன்னாள்-தீவிரவாதிகளும் மற்றும் தொழிற்சங்கங்களின் அதிருப்திப் பிரிவினரும் - இதில் டெட்ராயிட் அமெரிக்கன் ஆக்சிஸ் நிறுவனத்தில் முன்னாளில் உள்ளூர் தொழிற்சங்கத் தலைவராக இருந்தவரும் Labor Notes இன் ஆதரவாளருமான வெண்டி தாம்சனும் அடங்குவார் - தொழிற்சங்கத் தலைமையை போராடுவதற்கு நெருக்குதலளிப்பதன் மூலமாக இந்த வேலைநிறுத்தத்தை வெல்ல முடியும் என்று கூறி UAW இன் அதிகாரத்திற்கு தொடர்ந்து அங்கீகாரமளித்து வந்தனர்.

மார்ச் மாதத்தில் தேசியளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு 218 அமெரிக்க டாலர்களாக உயர்த்த அழைப்பு விடுத்து கெய்ரோவில் வேலைநிறுத்தம் செய்த ஆயிரக்கணக்கான நூற்பாலை தொழிலாளர்களுடன், வேலைநிறுத்தம் செய்த அரசுத் துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களும் கைகோர்த்தனர். 1940களின் பின்பகுதி மற்றும் 1950களின் ஆரம்பத்திற்குப் பின்னர் எகிப்தில் தொழிற்துறை போர்க்குணத்தின் மிகப்பெரும் அலையை இந்த வேலைநிறுத்தங்கள் குறித்தன.

ஏப்ரல் மாதத்தில் ரெனோல்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் ரோமானிய வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் 42 சதவீத சம்பள அதிகரிப்பைக் கோரினர்.

தென்னாபிரிக்காவில் ஆகஸ்ட் மாதத்தில் உணவுப்பொருள் விலை மற்றும் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ்(COSATU)தன்னுடைய இரண்டு மில்லியன் உறுப்பினர்களை ஒருநாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைத்தது. வெகுஜனக் கோபத்தை கட்டுப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்குள் திசைதிருப்புவது தான் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வேலை செய்து கொண்டிருந்த COSATU இன் நோக்கமாக இருந்ததாலேயே இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அது மேற்கொண்டது என WSWS எச்சரித்தது.

டிசம்பர் மாதத்தில் சிக்காகோவில் மூடும் நிலைமையில் இருந்த ரிபப்ளிக் விண்டோஸ் அண்ட் டோர்ஸ் என்ற தொழிற்சாலையில் 250 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கட்டவிழ்ந்து கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பதிலிறுப்பில் அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதி மேற்கொண்ட முதல் சுயாதீனமான நடவடிக்கையாக இது இருந்தது.

ஐக்கிய இராச்சியத்தில் நடந்த வேலைநிறுத்தங்கள் குறித்த விரிவான செய்திகள் WSWS இல் இடம்பெற்றன. ஊதியம் தொடர்பாக 200,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்குபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம், ஸ்காட்லாந்து சுத்திகரிப்புத் தொழிற்சாலை தொழிலாளர்கள், டாங்கர் டிரக் சாரதிகள், மற்றும் அரை மில்லியன் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் ஆகியோர் நடத்திய போராட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த எல்லா வேலைநிறுத்தங்களிலுமே ஒரே பிரச்சினை தான் முன்னால் நின்றது: உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் வீச்சையும் கால அளவையும் திட்டமிட்டு கட்டுப்பட்டுத்த முனைந்தன என்ற அதேசமயத்தில் முதலாளிகள் மற்றும் தொழிற்கட்சி அரசாங்கத்துடன் சமரசத்தைப் பேணிக் கொள்ள முனைந்தன.

வேலைநிறுத்தம் செய்த உள்ளூர் அரசாங்கத் தொழிலாளர்கள் இடையே விநியோகம் செய்யப்பட்ட பிரிட்டிஷ் SEP இன் துண்டுப்பிரசுரம் அறிவித்தது:

தொழிலாளர்கள் முன்முயற்சி எடுக்கத் தொடங்க வேண்டும். வசதியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிகாரத்துவத்தின் நலன்களுக்காய் அவர்கள் கவலைப்படாமல் தமது சொந்த நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற, போராட்டத்திற்கான தமது சொந்த சுயாதீனமான சாமானியத் தொழிலாளர் அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்தும் அவை பாதுகாக்கின்ற தொழிற் கட்சி அரசாங்கத்திடம் இருந்து முறித்துக் கொண்டு ஒரு உண்மையான சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவது என்பதே இதன் பொருளாகும்.

பேர்லினில் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கணிசமான ஊதிய உயர்வு கோரி சுமார் இரண்டு மாத காலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடெங்கிலும் எழுந்திருந்த ஒரு பரவலான வேலைநிறுத்தத்தின் பகுதியாக பேர்லின் வேலைநிறுத்தம் அமைந்திருந்தது. இது பொதுச் சேவையின் பிற துறைகளையும் அத்துடன் விமானநிலையங்கள் மற்றும் ஒட்டுமொத்த இரயில் போக்குவரத்து சேவை இரண்டையும் பாதித்திருந்தது. கடுமையான ஊதிய வெட்டுகளைத் திணித்து பொதுச் சேவையில் ஏராளமான வேலைகளை அழித்திருந்த சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சி இரண்டையும் கொண்ட (சிவப்பு-சிவப்பு கூட்டணி என்பதாய் கூறப்பட்டது)பேர்லின் மாநகராட்சி அரசாங்கத்திற்கு எதிராக செலுத்தப்பட்டதாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அமைந்திருந்தது.

வேர்டி தொழிற்சங்கம் ஆரம்பத்தில் கோரிய ஊதிய அளவை விரைவாக குறைத்து விட்டது, இறுதியில் வேலைநிறுத்தத்தை விலைபேசி விற்று விட்டது. BVG இன் வேர்டி உறுப்பினர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் சங்கத் தலைமையோ ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது. WSWS வெளியிட்டதொரு அறிக்கையில் BVG வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகளை விபரித்தது. தொழிற்சங்கங்களின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்ற புறநிலை அபிவிருத்திகளையும் அத்துடன் WSWS இன் சர்வதேச சோசலிச முன்னோக்கினையும் அந்த அறிக்கை விளக்கியது.

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய கல்விச் சங்கத்தின் (AEU)விக்டோரியா மாநிலக் கவுன்சில் மாநில தொழிற் கட்சி அரசாங்கத்துடனான (ஒரு வருட காலம் போராடி ஆசிரியர்கள் எழுப்பிய கோரிக்கைகள் அத்தனையையும் கைவிட்டு பலருக்கும் உண்மையான ஊதியத்தில் வெட்டு உருவாகச் செய்து வேலை பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தி வகுப்பறைகளில் நெருக்கடியை மேலும் சிக்கலாக்கிய) ஒரு புதிய தொழிற்துறை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாக மே மாதத்தில் வாக்களித்தது. எதிர்ப்பு அதிகரித்த நிலையில் ஒப்பந்தத்தை பலவந்தமாக நெருக்கி முன்தள்ளுவதற்கு AEU ஒரு தீவிர பிரச்சாரத்தை நடத்தியது.

அச்சுறுத்தல் மற்றும் பிரிவினையைத் தூண்டுதல் என்ற தொழிற்சங்கத்தின் தந்திரோபாயத்தை  WSWS தொடர்ந்து அம்பலப்படுத்தியது. இந்த விலைபேசலை ஆசிரியர்கள் நிராகரிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய SEP அழைப்பு விடுத்தது. சாமானிய ஊழியர் குழுக்களில் கணிசமான எதிர்ப்பிருந்தும், இந்த ஒப்பந்தம் இறுதியில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. தேசியக் கல்வி அமைப்புமுறையில் நீண்டகாலத்திற்கான வலது-சாரி சீர்திருத்தங்களின் ஒரு வரிசையை தொழிற்கட்சி பிரதமர் ரூட் அவிழ்த்து விடுவதற்கு இது பாதையமைத்துத் தந்தது.

http://www.wsws.org/asset/a9062bd9-cfd4-417b-ac32-db5bd491b45G/j07-axle-2008-480.jpg?rendition=image480 
மிச்சிகன் ஹேம்ட்ராம்கில் உள்ள அமெரிக்கன் ஆக்சில் தொழிற்சாலையில் 2008 வேலைநிறுத்தம் தொடங்கியபோது நடந்த முற்றுகைகள்

http://www.wsws.org/asset/e8eefa1c-a4e5-4c5e-bdcc-68436399e55D/Security_forces_cairo.jpg?rendition=image480
2008 எகிப்திய பொது வேலைநிறுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடிக்கின்றனர்.

Featured material

30 January 2008 Once again, the fundamental questions in the writers strike

20 May 2008 Australia: Demand mass meetings to reject Victorian teachers union sell-out!

31 May 2008 The political lessons of the American Axle strike

17 June 2008 Germany: A political balance sheet of the Berlin transport strike

25 June 2008 Teachers dispute in Victoria, Australia
Socialist Equality Party replies to Mary Bluett, AEU state president

8 July 2008 Australia: Why Victorian teachers ratified the AEU’s sell-out industrial agreement

11 December 2008 General strike, spreading protests rock Greek government

17 November 2008 The US auto bailout and the socialist alternative to concessions

25 November 2008 A tale of two bailouts

12 December 2008 Lessons of the Chicago factory occupation

லியோன் ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலத்தின் 70வது ஆண்டும்

2008 ஆம் ஆண்டு லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட 70வது ஆண்டாகும். சோசலிச சமத்துவக் கட்சி இதனையொட்டி உலகெங்கும் கூட்டங்களை நடத்தியது. அதேநேரத்தில் ICFI வரலாற்று உண்மைக்காகவும் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் பாரம்பரியங்களை பாதுகாத்துமான தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தது.

அமெரிக்காவில் நான்காம் அகிலத்தின் 70வது ஆண்டு: சோசலிசமும் மனிதகுலத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பின் கீழ் SEP ஏராளமான கூட்டங்களை நடத்தியது. நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி என்ற தலைப்பில் WSWS இல் வெளியான டேவிட் நோர்த்தின் ஒரு முக்கிய அறிக்கை உட்பட ஏராளமானவர்களிடம் இருந்தான அறிக்கைகள் இந்த கூட்டங்களில் இடம்பெற்றன.

நான்காம் அகிலத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமானது ட்ரொட்ஸ்கியால் முந்தைய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கியின் எழுத்துகள் நிராகரிக்கவியலாத வண்ணம் எப்படி இருந்தது என்பதைத் திறனாய்வு செய்த நோர்த், இது மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று தெரிவித்தார்:

முதல்முதலாக, ட்ரொட்ஸ்கிசெவ்வியல் மார்க்சிசத்தின்” (classical Marxism) மாபெரும் பிரதிநிதிகளில் கடைசியானவராக, அதாவது தனது வேரை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் உடன் நேரடியாக அடையாளம் காண்கின்றதும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் எழுச்சி கண்டதுமான பரந்த புரட்சிகர தொழிலாளர்இயக்கத்திற்கு உந்துசக்தியாக அமைந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பள்ளி மற்றும் பாரம்பரியத்தின் பிரதிநிதியாக இருந்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்களில் விளக்கியவாறு, புறநிலை யதார்த்தத்தை அறிந்துகொள்வதை நேரடியாக அறிந்துகொள்வதை நோக்கிய சடவாத தத்துவஞானத்தில் வேரூன்றிய மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கல்வியூட்டலையும் அரசியல்ரீதியாக அணிதிரட்டலையும் நோக்குநிலையாக கொண்ட, அத்துடன் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தையே மூலோபாயரீதியாக ஆழ்ந்து சிந்திக்கின்ற புரட்சிகரத் தத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கத்தின்உருவடிவமாய் ட்ரொட்ஸ்கி திகழ்ந்தார்.

இரண்டாவதாக, சோசலிசப் புரட்சியின் உலகளாவிய பரிமாணங்கள் மற்றும் இயக்கவியலையும், சர்வதேசிய சமூகப்பொருளாதார நிகழ்முறைகளுக்கும்  வரலாற்றுரீதியாய்-தீர்மானிக்கப்பட்ட தேசிய நிலைமைகளுக்கும் இடையிலான இயங்கியல் இடைத்தொடர்புகளையும்  இருபதாம் நூற்றாண்டின் வேறெந்த அரசியல் சிந்தனையாளரையும் விடவும் மிக ஆழமாக ட்ரொட்ஸ்கி உள்வாங்கிக் கொண்டிருந்தார். இந்தப் புரிதல் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் வெளிப்பாட்டை கண்டது. இத்தத்துவம் முதன்முதலாய் ரஷ்யாவில் 1905 புரட்சியால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கான பதிலிறுப்பாய் ட்ரொட்ஸ்கியால் சூத்திரப்படுத்தப்பட்டது. 1905 ரஷ்யப் புரட்சியில் ஒரு பின்தங்கிய நாட்டில் பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயகக் கடமைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் உட்பொதிந்த சோசலிச முயற்சிகளுக்கும் இடையிலான உறவு, நடப்பு கருத்தாக்கங்களுக்கு முரண்படும் வகையில் எழுந்ததோடு, ஒரு புதிய தத்துவார்த்த உயர்தளத்தைக் கோரியது.

மூன்றாவதாக, 1903 பிளவுக்கும் 1917 இன் புரட்சிகரத் தெளிவுக்கட்டத்திற்கும் இடையிலான ஆண்டுகளில் மென்ஷிவிக் சந்தர்ப்பவாதத்திற்கும் மத்தியவாதத்திற்கும் எதிராக லெனின் நடத்திய போராட்டத்தின் அத்தியாவசியமான அரசியல் படிப்பினைகளை ட்ரொட்ஸ்கி உட்கிரகித்துக் கொண்டார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிகள் 70 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்திய கூட்டங்கள் சிறப்பான வகையில் பலர் கலந்துகொண்டதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் WSWS கட்டுரையாசிரியர் ஜேம்ஸ் கோகன் நான்காம் அகிலத்தின் வரலாற்று மூலங்கள் மீதான ஒரு அறிக்கையை வழங்கினார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுக் கோட்பாடுகளின் பொருளில் உலக முதலாளித்துவ நெருக்கடியின் நிலையை நிக் பீம்ஸ் திறனாய்வு செய்தார்

நவம்பர் 20-23 இல், ஸ்லாவிக் ஆய்வுகள் முன்னேற்றத்திற்கான அமெரிக்க கூட்டமைப்பு தனது வருடாந்திரக் கூட்டத்தை நடத்தியது. இதில் ஒரு குழு சுயாதீன அறிஞரான லார்ஸ் லிஹ் தலைமையில் லியோன் ட்ரொட்ஸ்கியின் புத்திஜீவித மற்றும் அரசியல் பாரம்பரியம் என்ற தலைப்புக்காய் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. நோர்த், ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலையைச் சேர்ந்த ட்ரொட்ஸ்கிச அறிஞரான பரூச் நீய்-பாஸ்(Baruch Knei-Paz )மற்றும் WSWS கட்டுரையாசிரியர் விளாடிமிர் வோல்கோவ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத்தின் வரலாற்றுச்சரிதம் (Historiography), மற்றும் செவ்வியல் மார்க்சிசத்தின் கதி என்ற நோர்த்தின் அறிக்கை ட்ரொட்ஸ்கி மீதான வரலாற்றுச்சரிதங்களின் வரலாற்றைத் திறனாய்வு செய்தது. 1950கள் மற்றும் 1960களில் வெளிவந்த ஐசாக் டொச்ஷரின் பிரம்மாண்டமான முத்தொகுப்பு தொடங்கி, 1978 இல் வெளிவந்த நீ-பாஸ் எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கியின் சமூக மற்றும் அரசியல் சிந்தனை வழியாக, 1980கள் தொடங்கி ட்ரொட்ஸ்கி குறித்த அறிவுத்தகைமை தேய்ந்தது வரை இது அலசியது. இயன் தாட்சர் மற்றும் ஜெப்ரி ஸ்வேயின் எழுதியவை உட்பட ட்ரொட்ஸ்கி குறித்த பல வாழ்க்கைச் சரிதங்கள் வந்திருந்த போதும், இவற்றில் புதிதாக எந்த விவரங்களும் இல்லை, மாறாக அவதூறும் வரலாற்றுப் பொய்மைப்படுத்தலுமே இருந்தது என நோர்த் குறிப்பிட்டார்.

ட்ரொட்ஸ்கி குறித்த புலமைத்தகைமையிலான இந்த மாற்றங்களுக்குப் பின்னால் இருந்த காரணங்களைத் திறனாய்வு செய்த நோர்த் ட்ரொட்ஸ்கியின் உலகப் பார்வைக்கும் இடது புத்திஜீவி வட்டத்தில் நிலவத் தொடங்கிய கருத்தாக்கங்களுக்கும் இடையிலிருந்த முரண்பாட்டின் மீது குறிப்பான அழுத்தத்தை வைத்தார். மெய்யியல் சடவாதம், வரலாற்று நிகழ்முறை நியதிகளால் ஆளப்படுகிறது என்பதிலான நம்பிக்கை, மனிதப் பகுத்தறிவின் (இந்த அம்சம் சடரீதியாகப் புரிந்துகொள்ளப்படுகின்ற மட்டத்திற்கு) சக்தி மற்றும் புறநிலை உண்மையை அறிவதற்கான அதன் திறன் மீதான நம்பிக்கை, அத்துடன் இதனுடன் தொடர்புபட்டு, அறிவியலின் முற்போக்கான பாத்திரத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றுக்கு ட்ரொட்ஸ்கி சமரசமற்ற உறுதிபூண்டவராக இருந்தார். ட்ரொட்ஸ்கி ஒரு தீர்க்கவாதி, நம்பிக்கைவாதி, அத்துடன் ஒரு சர்வதேசியவாதியாக இருந்தார் என்பதோடு சோசலிசப் புரட்சியானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளில் இருந்துதான் அவசியமாய் எழுகிறது என்பதில் உறுதி கொண்டவராய் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து உலக சோசலிசத்தின் அடித்தளங்களை அமைத்துத் தரக்கூடிய தொழிலாள வர்க்கம் என்கிறதொரு புரட்சிகர சக்தி சமூகத்திற்குள்ளாக இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

அக்டோபர் மாதத்தில் WSWS இல் வெளியான நோர்த் எழுதியஅலெக்ஸ் ஸ்ரைனரின் அரசியல் மற்றும் புத்திஜீவித நெடும்பயணம் என்ற கட்டுரை ஃபிராங்பேர்ட் பள்ளி மற்றும் அதன் வாரிசுகளின் நவ-கற்பனாவாத கருத்தாக்கங்களுக்கு எதிராக மார்க்சிசம் மற்றும் மெய்யியல் சடவாதத்தை பாதுகாத்தது.

http://www.wsws.org/asset/86fbd7a1-3194-4595-8f40-f4335234767A/Leon+Trotsky.jpg?rendition=image480
லியோன் ட்ரொட்ஸ்கி

Featured material

2 October 2008 Australia: Public meetings mark 70th anniversary of the Fourth International
Historical lessons discussed

3 October 2008 SEP public meetings in Australia
The enduring significance of the founding of the Fourth International

4 October 2008 Nick Beams addresses 70th anniversary meeting
Capitalist breakdown and the revolutionary perspective of the Fourth International
Part 1

22 October 2008 The Frankfurt School vs. Marxism:
The Political and Intellectual Odyssey of Alex Steiner—Part 1

3 November 2008 On the 70th anniversary of the founding of the Fourth International

1 December 2008 Leon Trotsky, Soviet Historiography, and the Fate of Classical Marxism

1 December 2008 Sri Lankan SEP marks 70th anniversary of Fourth International

கலை, கலாச்சாரம் மற்றும் அறிவியல்

2008 இல் திரைப்படம், நாடகம், இசை மற்றும் கலை வரலாறு குறித்து ஏராளமான கட்டுரைகள் WSWS  இல் வெளிவந்தன.

அந்த ஆண்டு தொடக்கத்திலும் மற்றும் முடிவிலும் டிரெவர் கிரிப்த்ஸ் என்ற பிரிட்டிஷ் நாடக ஆசிரியரின் படைப்புகள் ஆராயப்பட்டன. அவருடனான ஒரு நேர்காணலும் அமெரிக்காவின் புரட்சிகரவாதியான தோமஸ் பெயின் குறித்த அவரது திரைக்கதை குறித்த ஒரு திறனாய்வும் இடம்பெற்றன. அந்த ஆண்டின் பிற்பகுதியில் கிரிப்த்ஸும் WSWS கலைப் பிரிவு ஆசிரியரான டேவிட் வால்ஷும் எழுத்தாளரும் புரட்சியும்என்ற தலைப்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினர். இதில் கிரிப்த்ஸின் படைப்புகள் விவாதிக்கப்பட்டதோடு 1960களின் பிற்பகுதியிலும் மற்றும் 1970களிலும் கலைஞர்கள் முகம் கொடுத்த அரசியல் பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன

அந்த ஆண்டின் நிறைவுக் கட்டத்தில் WSWS கலைப் பிரிவு ஆசிரியர் டேவிட் வோல்ஷ் இங்கிலாந்தில் தொடர்ச்சியாக பல உரைகளை நிகழ்த்தினார். கலையும் சோசலிசமும்: உண்மையான அடிக்கோள்கள் என்ற தலைப்பிலான அந்த உரைகளில் கலை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஸ்ராலினிசம் அல்லது இடது பின்நவீனத்துவம் ஊக்குவித்த அணுகுமுறைக்கு எதிராக, ஒரு உண்மையான மார்க்சிச அணுகுமுறைக்காக வோல்ஷ் வாதாடினார்.

எது புரட்சிகரக் கலை அல்லது முற்போக்குக் கலை அல்லது குழிபறிக்கும்கலை என்பது குறித்து மாறுபட்ட தத்துவங்கள் இருக்கின்றன. நமது பார்வை ஏறக்குறைய நேரடியானது: கலை என்பது தனது சொந்த வழிமுறைகளின் ஊடாக, அனைத்திற்கும் மேலாக வாழ்க்கை மற்றும் யதார்த்தம் குறித்த உண்மையை, அது எத்தனை வலியுடையதாக அல்லது சிக்கலானதாக இருக்கின்றபோதும், எந்த மட்டத்திற்கு சொல்கின்றதோ அந்த மட்டத்திற்கு உண்மையாய் தீவிரப்பட்டதாக இருக்கிறது. உலகை அறிந்து கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தீவிரமானதொரு மாற்றத்தை உருவாக்க விரும்புவோருக்கு அவசியமான முன்நிபந்தனை ஆகும்.

இடைவந்த மாதங்களில் நாம் நிறைய திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் திறனாய்வு செய்தோம். மைக் நிக்கோலஸின் சார்லஸ் வில்சனின் போர் படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க எந்திரவியக்கங்களை அருவருப்பூட்டும் வகையில் அது கொண்டாடிய விதத்தில் தனித்துவம் பெற்றது. காயமடைந்த ஒரு மூத்த போர் வீரர் குறித்த பாடி ஆஃப் வார் படமும், அபு கரிப் சிறை சித்திரவதை குறித்த ஸ்டாண்டர்டு ஆபரேடிங் புரோசீசர் என்கிற படமும் சில முக்கியமான பலவீனங்கள் இருந்தபோதும் ஈராக் போரின் மிருகத்தனத்தை அம்பலப்படுத்தின.

பிரபலமான ஹாலிவுட் படைப்பாளிகள் மற்றும் சுதந்திரப் படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விமர்சனம் WSWS இல் வெளியாகியது. ஓலிவர் ஸ்டோனின் W, கோயன் பிரதர்ஸ்இன் பர்ன் ஆஃப்டர் ரீடிங், பால் தாம்சன் ஆண்டர்சனின் தேர் வில் பி பிளட், ஆங் லீயின் லஸ்ட், காஷன், மற்றும் கஸ் வான் சாண்டின் மில்க் ஆகிய படங்கள் இதில் அடங்கும்.

அதிகம் அறியப்படாத படங்களையும் நாங்கள் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். பிஃபோர் தி ரெயின்ஸ், ஃபுரோசன் ரிவர், யங்@ஹார்ட், மற்றும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்த பி கைண்ட் ரீவைண்ட் ஆகிய படங்கள் இதில் அடங்கும். இதில் 1982 ஆம் ஆண்டின் லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்த அசைவூட்ட நாடகமான வால்ட்ஸ் வித் பஷிர் சிறப்பாகக் குறிப்பிடுவதற்குரியது.

டிசம்பரில் டேவிட் வோல்ஷ் மைக் லேயை நேர்காணல் செய்து அவருடைய ஹேப்பி கோ லக்கி திரைப்படம் குறித்துப் பேசினார். அத்துடன் உலகெங்கும் நடைபெற்ற திரைப்பட விழாக்கள் குறித்த செய்திகளை WSWS தொடர்ந்து வெளியிட்டது.

நடிகர்கள் போல் நியூமேன், ரிச்சார்ட் வித்மார்க், மற்றும் சார்ல்டன் ஹெஸ்டன் மற்றும் இயக்குநர்கள் சிட்னி போலாக் மற்றும் ஜூலெஸ் டாஸின் (பிளாக்லிஸ்டட் என்று சொல்லக் கூடிய ஒதுக்கி வைக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றவர்)ஆகியோரின் மரணம் குறித்த செய்திகளை வெளியிட்ட WSWS அமெரிக்க சினிமாவின் வரலாற்றையும் ஹாலிவுட்டில் கம்யூனிச-விரோத வேட்டையாடலின் நீடித்த தாக்கத்தையும் ஆய்வு செய்தது. பிரிட்டிஷ் நடிகர்களான போல் ஸ்கோஃபீல்ட் மற்றும் கென் கேம்பல், எழுத்தாளரான ஹியூகோ கிளாஸ், நாடகாசிரியரான ஹரோல்டு பின்டர் மற்றும் கலைஞரான எர்தா கிட், ஓவியரான ராபர்ட் ரவுசென்பேர்க் ஆகியோரது மரணத்தையொட்டிய செய்திகளையும் WSWS வெளியிட்டது. கவிஞர் அட்ரியன் மிட்சேலின் மரணத்தையொட்டி, டேவிட் வோல்ஷ் அவரே தனிப்பட எழுதிய ஒரு கருத்தைத் தீட்டினார்.   

ஓவியத் துறையில், குஸ்டவே கோர்பெட் மற்றும் அலெக்சாண்டர் ரோட்செங்கோவின் படைப்புகளது கண்காட்சிகளை WSWS திறனாய்வு செய்தது. அலெக்சாண்டர் ரோட்செங்கோ சோவியத்தின் கலையில் ரஷ்யப் புரட்சியின் பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினார். கட்டுமானக் கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலும் நாம் இதேபொருளில் அலசியிருந்தோம். ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியம் குறித்த புகைப்படரீதியான வரலாற்றில் மகத்தான முறையில் உழைத்திருக்கக் கூடிய டேவிட் கிங்கை அந்த ஆண்டின் இறுதியில் டேவிட் வோல்ஷ் நேர்காணல் செய்தார்.

பாரிஸ் கம்யூன் மற்றும் ஆடிங் மெசின் போன்ற நாடகங்களின் திறனாய்வைக் கொண்டும் பெர்டோல்ட் பிரெச்டின் படைப்பு குறித்த ஒரு கருத்துப் பரிவர்த்தனையின் மூலமும் வரலாற்றுப் பிரச்சினைகளையும் நவீன நாடகத்திலான போக்குகள் குறித்தும் WSWS அலசியது.

விஞ்ஞானப் பிரிவில், அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாத்திகத்திற்கு உறுதி பூண்டவராக இருந்தாரென்பதை திட்டவட்டமாக நிறுவிய சமீபத்தில் ஏலம் விடப்பட்ட ஒரு கடிதம் குறித்து இரண்டு-பகுதியாக ஒரு தொடர்கட்டுரையை WSWS எழுதியது.

http://www.wsws.org/asset/9227873a-3a2d-44df-b049-ff54165a2e5G/d24-walt-480.jpg?rendition=image480
வால்ட்ஸ் வித் பஸீர் படத்தில் இருந்து ஒரு காட்சி

Featured material

26 February 2008 The 58th Berlinale—Part 1
Some alarm signals in contemporary film

7 April 2008 An interview: Filmmaker Jules Dassin, witch-hunting and Hollywood’s blacklists

10 May 2008 San Francisco International Film Festival 2008
Part 1: Some interesting films from newer directors

23 June 2008 Einstein letter sold for record sum—Part 1

18 September 2008 Toronto International Film Festival 2008—Part 1
Glimpses of life, if not the essential facts of the world

13 October 2008 Vancouver International Film Festival 2008—Part 1
Life in its incontrovertible reality

26 November 2008 A public lecture by David Walsh in the UK
Art and socialism: the real premises

4 December 2008 Uncovering the truth about Trotsky and the Russian Revolution “continues to run my life”
A conversation with the remarkable David King

11 December 2008 The Writer and Revolution: WSWS arts editor David Walsh in conversation with Trevor Griffiths—Part 1