WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

Year in Review: 2003

மீளாய்வு ஆண்டு 2003

use this version to print | Send feedback

2003 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை குறித்து நின்றது. முக்கிய நாடுகள் அனைத்தும் உடந்தையாக இருக்க, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிற்கு எதிரான ஒரு மிருகத்தனமான மற்றும் சட்டவிரோதமான போரைத் தொடங்கியது. மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கையில் உலகின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் புறந்தள்ளி தீர்க்கவியலாத பொருளாதார முரண்பாடுகளால் உந்தப்பட்டு இராணுவ வேட்டை மற்றும் உலகைக் கைப்பற்றுவதற்கான ஒரு பிரச்சாரத்தை ஏகாதிபத்திய சக்திகள் அதிகரித்தன.

போருக்கான உந்துதல்

போர் வெகு அருகில் வந்துவிட்டமை மற்றும் ஆழமடைந்த பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்புலத்தில் தான் அந்த ஆண்டு ஆரம்பித்தது. உலக சோசலிச வலைத் தளம் சுமார் 700 கட்டுரைகளினூடாக, கட்டவிழ்ந்து கொண்டிருந்த பேரழிவின் அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்ததோடு அமெரிக்க இராணுவவாதத்தை தோற்கடிப்பதற்கான ஒரேயொரு சாத்தியமான முன்னோக்கையும் அபிவிருத்தி செய்தது. ஜனவரி 6 அன்று பிரசுரமான ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகம் போரில் இறங்கும் முடிவை ஏற்கனவே செய்து விட்டிருந்தது என்று WSWS ஆசிரியர் குழு எச்சரித்தது.

அமெரிக்கா நுழைவதைத் தடுக்க, சதாம் ஹுசைனை அகற்றுவது உட்பட ஈராக் எதைச் செய்வதும் பிரயோசனமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின்  தீர்மானங்களை ஈராக் மீறியதாக புஷ் பேசுவது போலிச்சாக்கு என்பது வெளிப்படையாக தெரிகின்றது. அமெரிக்காவின் நோக்கம் ஈராக்கிடம் இருந்து ஆயுதங்களை களைவதோ அல்லது சதாம் ஹுசைனை அகற்றுவதோ கூட இல்லை, மாறாக அந்நாட்டை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதே ஆகும்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது உலக மேலாதிக்க நிலையைப் பராமரிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கின்ற கடைசிப் போராக ஈராக் ஆக்கிரமிப்பு இருக்கப் போவதில்லை:

ஈராக்கிற்கு எதிரான போருக்கு காரணமாய் கூறக்கூடியவை தான் தவிர்க்கவியலாமல் ஈரான், சிரியா, மற்றும் அப்பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு எதிரான போர்களுக்கும் இட்டுச் செல்லவிருக்கின்றன. உலகின் எண்ணெய் வளங்களில் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற அமெரிக்காவின் உந்துதலானது ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் அமெரிக்காவின் பெரும் போட்டி நாடுகள் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சக்தி வாய்ந்த நாடுகளுடன் அதனை கடுமையான மோதலுக்குள் கொண்டு செல்லும். ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பது மூன்றாம் உலகப் போரை இறுதி விளைவாகக் கொண்ட ஒரு நிகழ்முறையைத் தொடங்கி வைக்கும்.

தனது முரட்டுத்தன நடவடிக்கைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, புஷ் நிர்வாகம் அப்பட்டமான பொய்களைப் பயன்படுத்துவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்தது. சதாம் ஹுசைன் அல்கொய்தாவுடன் தொடர்புகள் கொண்டிருந்தார் மற்றும் பேரழிவுகரமான ஆயுதங்களை கொண்டிருந்தார் ஆகிய கூற்றுகளைச் சுற்றி இந்தப் பொய்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன.

பெப்ரவரி 5 ஆம் தேதியன்று, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலரான கொலின் பௌல் .நா பாதுகாப்பு சபையில் தனது இழிபுகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். மறுநாள் WSWS ஆசிரியர் குழு "பௌலின் .நா பேச்சு ஈராக்கிற்கு எதிரான போருக்கு நாள் குறிக்கிறது என்கிற தலைப்பில் விடுத்த அறிக்கையில், போருக்கு அவர் அளித்த நியாயங்களை ஒரு முழு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியது. இக்காரணங்கள் எதிர்வரவிருக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஈராக்கின் பேரழிவு ஆயுதங்களின் காரணத்தாலும் ஈராக் அமெரிக்க பாதுகாப்புக்கும் உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் காரணத்தாலும் விளைவதாக கூறுகின்ற ஒரு மிகப் பிரம்மாண்டமான பொய்யைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்டதாகும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அமெரிக்காவிற்குள்ளாக, இந்தப் பொய்களை அமெரிக்க மக்களிடம் விற்பனை செய்வதற்கு புஷ் ஊடகங்களையும் ஜனநாயகக் கட்சியையும் சார்ந்திருந்தார். அனைத்து ஊடகங்களும் பௌலின் உரையை பற்றிக் கொண்டு, இது ஈராக் மீதான மறுக்கவியலாத குற்றப்பதிவு என்று ஒருமனதாக பிரகடனம் செய்தன. தாராளவாத வருணனையாளர்களில் ஏராளமானோர் வெளியுறவுச் செயலர் தனது பேச்சை முடிப்பதற்கு முன்பாகவே கூட பௌலின் கூற்றுகளுக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை அறிவிப்பதற்கு கடமைப்பாடு கொண்டவர்களாய் இருந்தனர் என்பதை WSWS குறிப்பிட்டுக் காட்டியது.

பௌலின் பேச்சு இன்று வரையான நிலவரத்தின் மிகவும் சக்திவாய்ந்த வாதம் என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. பௌல் மற்றும் புஷ் நிர்வாகம் பிரயோகித்த பொய்களை ஊக்குவிப்பதில் டைம்ஸின் சொந்த செய்தியாளர்கள் ஒரு அதிமுக்கிய பாத்திரத்தை ஆற்றினர். டைம்ஸின் செய்தியாளராக இருந்த ஜூடித் மில்லர் பெண்டகனின் ஊதுகுழலாக செயற்பட்டு பல பரபரப்பான செய்திகளைத் தொடர்ச்சியாக பிரசுரித்தார். இவை ஈராக்கிடம் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்ற நோக்கம் கொண்டவையாக இருந்தன. நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பை ஜனநாயக வேடத்தினால் மறைப்பதற்கு தாராளவாத பிரிவுகள் மேற்கொண்ட முயற்சியில் அது கொண்டிருந்த இழிதன்மை மற்றும் பிற்போக்குத்தனத்தின் உருவடிவமாக டைம்ஸ் இதழின் வெளிநாட்டு விவகார தலைமைப் பத்தியாளர் தோமஸ் ஃப்ரீட்மான் இருந்தார்.

இந்த குற்றவியல் சதியினை ஜனநாயகக் கட்சியின் எந்தவொரு முக்கியமான பிரிவுமே எதிர்க்கவில்லை. செனட்டர் ஜோசப் பிடேனும் செனட்டர் டயானே ஃபெயின்ஸ்ரைனும் பௌலின் உரை பதிலளிக்கமுடியாதது என்று உடனடியாக அறிவித்தனர். 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளரான வரவிருந்த ஜோன் கெர்ரி, பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பது அவசியம் என்று அறிவித்ததோடு, எந்த இராணுவ நடவடிக்கைக்கும் உறுதியான சர்வதேச ஆதரவைத் திரட்டுவதற்கும் புஷ் நிர்வாகத்தை வலியுறுத்தினார்.

மற்ற முக்கிய நாடுகளில், குறிப்பாக தொழிற் கட்சி பிரதமர் டோனி பிளேயர் தலைமையிலான பிரிட்டனின், அதிமுக்கிய ஆதரவும் புஷ் நிர்வாகத்திற்குக் கிடைத்தது. தொடர்ச்சியான உளவுத்துறை அறிக்கைகளில், பிளேயர் அவசரமாக பயங்கரமான கருத்துக்களை முன் தள்ளினார். ஹூசைன் நைஜரில் இருந்து யுரேனியத்தை பெற முயற்சித்தார் என்றும் இது அணு ஆயுதங்களுக்காகவே இருக்க வேண்டும் என்றும், அத்துடன் அவர் 45 நிமிடங்களுக்குள்ளாக பேரழிவுகரமான ஆயுதங்களை பயன்படுத்தமுடியும் என்றும் (இதனையடுத்து செப்டம்பர் 2002 Sun இதழின் தலைப்பு: அழிவுக்கு 45 நிமிட தூரத்தில் பிரிட்டன்) திட்டவட்டமாகக் கூறியதும் இதில் அடக்கம்.  

மெதுவாகக் கட்டவிழ்ந்து கொண்டிருந்த போர் தயாரிப்புகளின் பயங்கரம் உலகெங்கிலும் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டியது. பிப்ரவரி 15-16 அன்று, வரலாற்றின் மிகப்பெரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 60 நாடுகள் மற்றும் 600 நகரங்களுக்கும் மேலான இடங்களில் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேரணி நடத்தினர். அண்டார்டிகா உட்பட அத்தனை கண்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ரோமில் 3 மில்லியன் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். இது வரலாற்றில் தனிப்பெரும் போர் எதிர்ப்புப் பேரணியாகும். மாட்ரிட்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் பேரணியில் பங்குபெற்றனர். இலண்டனில் 1 மில்லியன் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். அமெரிக்காவில் குறைந்தது 225 தனித்தனி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, இதில் நியூயோர்க் நகரில் 400,000 பேர் பேரணியில் பங்குபெற்றனர்.

உலகில் இரண்டு வல்லரசுகள்: ஒன்று அமெரிக்கா, இரண்டாவது உலக மக்களின் கருத்து என்பதை இந்த ஆர்ப்பாட்டங்கள் காட்டுவதாக நியூயோர்க் டைம்ஸ் பதட்டத்துடன் கருத்து வெளியிட்டது. உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்கிற கட்டுரையில் WSWS பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியது: ஒருங்கிணைந்த சர்வதேச அணிதிரட்டலுக்குப் பின்னர் போருக்கான ஜனநாயக அரசியல் அங்கீகாரம் என்பதன் அத்தனை போலிவேடங்களும் மறுக்கமுடியாதபடி  உடைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த உணர்வு ஒழுங்கமைக்கப்பட்ட எவ்விதமான அரசியல் வெளிப்பாட்டைப் பெறவில்லை என்பதை மட்டுமே வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளும் அவற்றின் ஆதரவாளர்களும் விநியோகித்த போர்-எதிர்ப்பு இயக்கம் எதிர்கொள்ளும் பணிகள் என்ற துண்டுப்பிரசுரத்தில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில், குடியரசுக் கட்சியினர் மட்டுமல்லாது, ஜனநாயகக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களும் கூட போரை ஆதரித்தவர்களாக இருந்தனர். ஐரோப்பாவில், இச்சமயத்தில் ஒரு இராணுவத் தாக்குதலை நிராகரிக்கக் கூடிய அரசாங்கங்களும் கட்சிகளும் கூட அமெரிக்காவின் போர் நோக்கங்களை, புரிந்து கொள்ளக் கூடியவை என்றும் நியாயமானவை என்றும் கூறி ஏற்றுக் கொள்கின்றன...

போர்-எதிர்ப்பு இயக்கமானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். இதற்கு இந்தப் போரின் பின்னமைந்த காரணங்கள் மற்றும் உந்துசக்திகளைப் புரிந்து கொள்வதன் அடிப்படையிலான ஒரு வேலைத்திட்டம் அவசியமாக இருக்கிறது. என்ன விலை கொடுத்தேனும் ஐக்கியப்படுவதல்ல, மாறாக தெளிவுபெறுவதுதான் இச்சமயத்தின் அத்தியாவசியமாக இருக்கிறது.

போர் எதிர்ப்பு வெற்றி பெற வேண்டுமாயின் முதலாளித்துவ ஒழுங்கின் முகாமினுள் ஒரு காலிலோ அல்லது இரு காலிலுமோ நிற்கக் கூடிய கட்சிகளான அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்ல, சமூக ஜனநாயகக் கட்சியினர், பசுமைவாதிகள், ஜேர்மன் ஜனநாயக சோசலிச கட்சி (PDS), பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இத்தாலியில் ஜனநாயக இடது ஆகிய கட்சியினருக்கு அது அடிபணிந்திருக்க செய்யப்படக் கூடாது என்பதை அந்த அறிக்கை வலியுறுத்தியது.

ஈராக்கிற்கு எதிரான போர் தயாரிப்புகள் முக்கிய நாடுகளுக்கு இடையில் பெருகிய மோதல்களை அம்பலப்படுத்தியது. ஈராக்கில் ஆக்கிரமிப்பதற்கு .நா. பாதுகாப்பு சபை ஒப்புதலைப் பெற அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சரான டொமினிக் டு வில்ப்பன் தடுத்து விட்டபோது பதட்டங்கள் அதிகரித்தன. எப்படியிருந்தபோதும், பிரான்சும் ஜேர்மனியும் இந்த போருக்கு கோட்பாடுரீதியான எதிர்ப்பை காட்டவில்லை. பிரான்சின் இடது குழுவான Attac இற்கு எதிராக WSWS எழுதியது: தற்போதைய நெருக்கடியில் பிரான்ஸ் அமைதிவாதியாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இப்போது அது மற்றவர்கள் முந்திக் கொண்டதை காண்பதாலும் இத்தருணத்தில் அமெரிக்க நோக்கங்களை மட்டுப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர வேறு தேர்வு எதுவுமில்லை எனக் கருதுவதாலும் தான். சூழல்கள் மாறுகையில், பிரான்சோ ஜேர்மனியோ அவை தனது சொந்த ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடங்குவதை நிச்சயம் எதுவும் தடுக்கப் போவதில்லை. 

 

.நாவில் ஈராக்கிற்கு எதிரான போருக்கு ஆதரவு பெற வாதாடும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பௌல், ஆந்த்ராக்ஸ் மாதிரி குப்பி ஒன்றைக் காட்டுகிறார்

மேலதிக தகவல்கள்

6 January 2003 ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

30 January 2003 Bush’s State of the Union speech: the war fever of a ruling elite in crisis

6 February 2003 Powell’s UN speech triggers countdown to war against Iraq

12 February 2003 போர் எதிர்ப்பு இயக்கம் எதிர்கொள்ளும் பணிகள்

19 February 2003 ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்


ஈராக் ஆக்கிரமிப்பு

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் குற்றவியல் உடந்தையாளர்களும் ஈராக்கிய சமூகத்தை அழிப்பதை உலக மக்கள் திகிலுடன் பார்த்தனர். புஷ்ஷின் அதிர்ச்சியும் திகைப்பும்  ஏற்படுத்தும் மின்னல்வேகத் தாக்குதல் பிரச்சாரம் பாக்தாத்தை ஒரு எரியும் நகராக மாற்றிக் கொண்டிருந்த அச்சமயத்தில், மார்ச் 21, 2003 அமெரிக்க வரலாற்றில் ஒரு அவமானகரமான நாள் என்று WSWS எழுதியது. உள்நுழைந்த துருப்புகளை ஈராக்கிய மக்கள் விடுதலை செய்ய வந்தவர்களாக எண்ணி வரவேற்காததில் ஆச்சரியமில்லை, பல நகரங்களில் கடுமையான கெரில்லா சண்டை நடந்தது.

மார்ச் 21, ஆக்கிரமிப்பு தினத்தன்று, WSWS, அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும் என்ற தலைப்பில் ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் இன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை இவ்வாறு ஆரம்பித்தது:

ஆத்திரமூட்டப்படாத நிலையிலும் கூட சட்டவிரோதமாக அமெரிக்காவால் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு வாழ்நாள் முழுவதும் அவப்பெயர் சம்பாதித்திருக்கும் ஒரு நிகழ்வாகும். இந்தப் போரைத் தொடங்கி வைத்திருக்கும் வாஷிங்டனில் இருக்கக் கூடிய அரசியல் குற்றவாளிகளும் சரி, இரத்த ஆற்றைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளக் கூடிய வெகுஜன ஊடகங்களில் இருக்கும் மடையர்களும் சரி இந்த நாட்டினை அவமானத்தில் மூழ்கடித்துள்ளனர். ஒரு மிருகத்தனமான கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ சக்தி தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு சிறிய நாட்டை அடித்து நொருக்குவதை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக் கூடிய நூறு மில்லியன் கணக்கிலான மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஈராக் ஆக்கிரமிப்பை ஏகாதிபத்தியப் போர் என்ற வார்த்தையின் பாரம்பரியமான அர்த்தத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்: அமெரிக்காவில் இருக்கும் மிகவும் பிற்போக்குத்தனமானதும் கொள்ளையிடும் நோக்கமுடையதுமான பிரிவுகளின் நலன்களின் பேரில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு வெறுப்பூட்டத்தக்க முரட்டு நடவடிக்கையாகும் இது. அதன் உடனடியானதும் வெளிப்படையானதுமான நோக்கம் என்னவென்றால் ஈராக்கின் பரந்த எண்ணெய் வளங்கள் மீதான கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதும், அத்துடன் வெகுகாலமாக ஒடுக்குமுறையைச் சந்தித்திருக்கும் அந்நாட்டை அமெரிக்கக் காலனித்துவ காப்பாட்சியாக மாற்றுவதுமே ஆகும்.

ஈராக் ஆக்கிரமிப்பு வலிந்து தாக்கிய ஒரு போராகவும், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டிருந்த சர்வதேசச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாகவும் இருந்தது. புஷ் நிர்வாகம் தொடங்கிய தெரிந்தெடுத்த போர்’, 1946 அக்டோபரில் நாஜி தலைவர்கள் எந்த முடிவுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டடார்களோ அதிலிருந்து அடிப்படையில் சட்டரீதியாக எந்தவிதத்திலும் மாறுபட்டது அல்ல என்று நோர்த் எழுதினார்.

அமெரிக்க ஆளும் வர்க்கம், அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சரிவை மீட்டுக்கொள்ள இராணுவ வலிமையைப் பயன்படுத்தும் ஒரு பரந்த மூலோபாயத்தின் பகுதியாக ஈராக்கின் எண்ணெய் வளங்களின் மீதான கட்டுப்பாட்டை கைப்பற்றும் பொருட்டே ஈராக் ஆக்கிரமிப்பை நடத்தியது. அமெரிக்காவிற்குள் இருக்கும் வெடிப்புடனான பதட்டங்களை வெளியே கொண்டுசெல்லும் ஒரு பொறிமுறையாகவும் இந்த முடிவற்ற போர் சேவை செய்தது. எப்படியிருந்தபோதிலும் ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தின் மூலம் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தீர்க்க நடத்தப்பட்ட முயற்சி தோல்விக்குரியதாகும்.

ஆரம்பித்திருக்கும் மோதலின் ஆரம்பகட்டங்களின் விளைவு என்னவாயிருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் நாசத்தைச் சந்திப்பதற்கு தேதி குறித்திருக்கிறது. அது உலகை வெற்றி கொள்ளவே முடியாது. மத்திய கிழக்கின் வெகுஜன மக்களின் மீது அது காலனித்துவ தளைகளை மீண்டும் திணிக்க முடியாது. போரென்னும் ஊடகத்தின் வழியாக தன் உள்ளே இருக்கும் நோய்க்கு ஒரு உகந்த மருந்தை அதனால் கண்டுபிடிக்க முடியாது. மாறாக, முன்னெதிர்பார்த்திராத சிக்கல்களும் பெருகிவரும் எதிர்ப்பும் சூழப்பட்ட இந்தப் போர் அமெரிக்க சமூகத்தின் உள்முக முரண்பாடுகள் அத்தனையையும் தீவிரப்படுத்தும்.

அமெரிக்க அதிகாரிகளும் போரை உபதேசித்தவர்களும் ஒரு சுலபமான வேலையையும் அமெரிக்க துருப்புகள் விடுதலைவீரர்களாக வரவேற்கப்படும் ஒரு காட்சியையும் கற்பனை செய்திருந்தார்கள். ஆனால் ஆக்கிரமிப்பின் சில நாட்களுக்குள்ளாகவே, ஆக்கிரமிப்புக்கான எதிர்ப்பு இந்த விடுதலைப் போர் பிரச்சாரத்தை உடைத்து நொருக்கி விட்டது. ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைனின் சிலை நாடக பாணியில் கவிழ்க்கப்பட்ட சம்பவம் மற்றும் பாக்தாத் போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டமை ஆகியவற்றைத் தொடர்ந்து எழுந்த புழுதி அடங்கிய சில காலத்திற்குள்ளேயே, ஈராக்கிய வெகுஜன மக்களின் ஆரம்ப கட்ட எதிர்ப்பு அடுத்த பல வருடங்களுக்கு நீடிக்கவிருந்த ஒரு முழு-வீச்சிலான கலகமாக அபிவிருத்தியடைந்திருந்தது. அந்நாட்டின் மீது ஏகாதிபத்திய நாடுகள் கொண்டிருந்த பிடி எத்தனை பலவீனமாக ஆகியிருந்தது என்பது குறித்த உண்மை நிலையை ஒரு பாரவூர்தியில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பிரதிநிதி செர்ஜியோ டி மெலோவை பலியெடுத்தபோது ஆகஸ்டில் எடுத்துக்காட்டப்பட்டது..

ஈராக்கிய மக்களை பொறுத்தவரை, இந்த ஆக்கிரமிப்பு ஒட்டுமொத்த சமூகத்தையும் கிழித்தெறிந்த பேரழிவின் ஒரு புதிய காலகட்டத்தை குறிப்பதாக இருந்தது. ஆக்கிரமிப்புக்கு ஒன்றரை மாத காலத்திற்குப் பின் வெளியான ஈராக் மீதான வன்முறை என்ற கட்டுரையில், WSWS இந்தப் போரை 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதிலும் நாஜிக்கள் நடத்திய மிருகத்தனமான ஆக்கிரமிப்புகளுடன் ஒப்பிட்டது.

இன்று ஈராக் சிதைந்து போய் கிடக்கிறது. ஒரு போர் என்பதை விடவும் படுகொலை என்று சொல்வதே பொருத்தமாக அமையக் கூடிய ஒரு பிரச்சாரமானது அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினர் என இரண்டு தரப்பிலுமாய் பல பத்து (பல நூறு என்று சொல்வதில் ஆட்சேபமிருந்தால்) ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளைக் கொண்டுவந்தது. மருத்துவமனைகள், பள்ளிகள், மின்சார வசதிகள், நீர் மற்றும் கழிவகற்றும் வசதிகள், குப்பை சேகரிப்பு மற்றும் ஒரு நகரமயமுற்ற சமூகத்தில் வாழ்க்கையைப் பராமரிப்பதற்கு அவசியமான ஒவ்வொரு பிற உள்கட்டமைப்பும் நொருக்கப்பட்டு விட்டிருக்கிறது. வாந்திபேதியும் பிற வியாதிகளும் பெரும் தொற்றுநோயாகும் அபாயத்தை எட்டியுள்ளன.

இதில் பங்குவகித்த பெருநிறுவன நலன்களையும் ஈராக்கிய வளங்களை தனியார்மயமாக்குவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் இருந்த திட்டங்களையும் தலையங்கம் விரிவாக அலசியது. இந்த ஜனநாயகத்திற்கான போர் இறுதியில் பல மில்லியன்கணக்கிலான ஈராக்கியர்களை அகதிகளாக, அநாதைகளாக, இயலாதவர்களாக அல்லது நடைப்பிணங்களாக மாற்றிவிடும். ஈராக்கிய மக்களுக்கு எதிராக கொத்து குண்டுகளையும் மற்றும் செறிவுகுறைந்த யுரேனிய ஆயுதங்களையும் ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்தியதிலேயே பேரழிவுகரமான ஆயுதங்கள் என்னும் மோசடியான போலிச்சாக்கிற்கு பின்னால் இருந்த வேடம் எல்லாம் வெட்டவெளிச்சமாகி விட்டது.

மே மாதத்தில், புஷ் நிகழ்த்திய இலக்கு சாதிக்கப்பட்டது என்ற இழிவுகரமான உரையில் அவர் வெற்றியைப் பிரகடனம் செய்ததோடு ஈராக்கில் முக்கிய மோதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததையும் அறிவித்தார். இந்த சாதனையை சமர்ப்பிக்கப் பெற்றவுடன் .நா பாதுகாப்பு சபையும் விரைந்து அதே வரிசைக்கு வந்து, ஈராக் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கு ஒப்புதலளிப்பதற்கு வாக்களித்து கடந்த கால, நிகழ்கால, மற்றும் வருங்கால குற்றங்களுக்கான பாவமன்னிப்பை வழங்கியது.

போர் நீண்டுகொண்டு சென்றவேளையில், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் போலியான போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டை WSWS தொடர்ந்து அம்பலப்படுத்தியது. இந்நாடுகள் தமது சொந்த செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கும், ஈராக்கின் எண்ணெய் வளத்தில் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அணுகலைப் பெறுவதற்கும், அத்துடன் மறுகட்டுமானத் திட்டங்களில் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஒரு பாத்திரத்தைப் பெறுவதற்கும் மட்டுமே .நாவைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முனைந்து கொண்டிருந்தன. ஜேர்மன் சான்சலரான ஹெகார்ட் ஷ்ரோடர் ஜேர்மன் மக்களது வலிமையான போர் எதிர்ப்பு மனோநிலைகளுக்கு ஏற்ப தனது அரசியல் வார்த்தைஜாலத்தை தகவமைத்துக் கொண்ட அதே நேரத்தில், அவரும் அவரது கூட்டணி சகாவான பசுமைக் கட்சியும், விரைவிலேயே ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு அளித்தனர் என்பதோடு ரம்ஸ்ரைன் நகரவிமானத்தளத்தில் இருந்து இயங்குவதற்கு அமெரிக்க போர் எந்திரத்திற்கு அனுமதியும் அளித்தனர். போர் மண்டலத்திற்கு இராணுவத்தினரையும் பொருட்கள் கொண்டு செல்வதிலும் இந்தத் தளம் மிக முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்கியது.

ஈராக் ஒருபோதும் பேரழிவுகரமான ஆயுதங்களை கொண்டிருந்திருக்கவில்லை என்பது மறுக்கவியலாத ஒன்றாக ஆனபோது, ஏகாதிபத்தியங்களின் மோசடி வலைப்பின்னல் கலைந்துபோனது. போருக்கான போலிச் சாக்குகளை உருவாக்குவதில் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் வகித்த பாத்திரத்தை விசாரணை செய்ய எழுந்த அழைப்புகள் ஆரம்பத்தில் மூடிமறைப்புகளைக் கொண்டும் பூசிமெழுகல்களைக் கொண்டும் எதிர்கொள்ளப்பட்டன. இருப்பினும் தகவல் வழங்கியவரும் .நா ஆயுத ஆய்வாளருமான டேவிட் கெல்லி மர்மமான முறையில் இறந்ததற்குப் பின்னர், விசாரணைக்கான கோரிக்கைகள் ஹுட்டன் விசாரணையைக் கொண்டுவந்தன. பிளேயர் மற்றும் மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் பொய்யுரைத்ததற்கான மறுக்கவியலாத ஆதாரத்தை இந்த விசாரணை வழங்கியது.

டிசம்பரின் பிற்பகுதியில் ஹூசைன் பிடிபட்டதை அடுத்து, புஷ் நிர்வாகத்தின் உறுப்பினர்களும் மற்றும் ஊடகங்களும் துரித விசாரணை நடத்தி அந்நாட்டின் முன்னாள் தலைவர் தூக்கிலிடப்படுவதற்கு கோரினர். ஹூசைன் மீது எந்த பகிரங்க விசாரணையும் நடப்பதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா விரும்புவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்று உலக சோசலிச வலைத் தளம் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டது. உண்மையில் ஈராக் மக்களுக்கு எதிராக ஹூசைன் ஆட்சி செய்த மிகப் பெரும் குற்றங்களான ஈரான்-ஈராக் போர், ஷியாக்கள் மற்றும் குர்திஸ்கள் போன்றோர் ஒடுக்கப்பட்டமை ஆகியவை அமெரிக்காவின் செயலூக்கமான ஆதரவுடனேயே நிகழ்த்தப்பட்டன.

போருக்கு அடித்தளம் அமைத்துத் தருவதில் ஊடகங்கள் வகித்த ஒருங்கிணைந்த பாத்திரமானது ஈராக் மீது திணிக்கப்பட்ட மனிதப் பாதிப்பை முன்பார்த்திராத அளவிலும் மிகசிரத்தையாகவும் தணிக்கை செய்ததிலும் சரி, நூற்றுக்கணக்கான உடன்செல்லும் செய்தியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்பில் பங்குபெற்றதிலும் சரி இறுதி மோதல் தொடங்கியவுடன் அதன் தர்க்கரீதியான முடிவை எட்டியது.

ஈராக்கின் ரமலாவில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு எண்ணெய் கிணற்றுக்கு காவலிருக்கும் ஒரு அமெரிக்கப்படையினர்

மேலதிக தகவல்கள்

21 March 2003 அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியும், ஈராக்கிற்கு எதிரான போரும்

22 March 2003 அமெரிக்க வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான நாள்
அமெரிக்க குண்டு மழை பாக்தாத் நகரை பயங்கரக் காட்சிக்களமாக மாற்றுகின்றது

24 March 2003 ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்

16 April 2003 US prosecuted Nazi propagandists as war criminals
The Nuremberg tribunal and the role of the media

7 May 2003 போர், சிறுகுழுவினராட்சி மற்றும் அரசியல் பொய்

9 May 2003 The rape of Iraq

18 June 2003 Washington’s war of terror in Iraq

15 December 2003 சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டமை ஈராக்கின் புதைசேற்றுச் சிக்கலைத் தீர்த்து வைக்காது



நெருக்கடியில் உலகம்

ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு அதன் முறையற்ற வெளிப்பாடாக இருந்த அதேசமயத்தில், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியானது உலகெங்கிலும் அரசியல் கொந்தளிப்புகளையும் சமூகப் பேரழிவுகளையும் உருவாக்கியது. முதலாம் உலகப் போரின் ஆரம்பகாலத்தில் ரோசா லுக்சம்பேர்க் சமூகத்தை, வன்முறைக்குள்ளான, மதிப்பிழந்த, இரத்தத்தில் தோய்ந்த, அழுக்கு வடியும் என்ற விவரித்தது பல நாடுகளில் இன்று பயங்கரமாக எதிரொலியை கண்டது.

புஷ் ஈராக் ஆக்கிரமிப்புக்கு தயாரிப்புகள் செய்ததுடன் கைகோர்த்து இஸ்ரேலில் பிரதமர் ஏரியல் ஷரோனின் மூர்க்கத்தனம் எழுந்தது. ஜனவரியில் மறுதேர்தலில் அவர் வென்ற பின்னர், ஷரோனின் அரசாங்கம் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியில் கூட்டுத் தண்டனை என்ற அதன் கொள்கையை தீவிரப்படுத்தி, பாலஸ்தீன மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை உண்டு வாழத் தள்ளப்படுகின்ற மட்டத்திற்கு உணவு விநியோகத்தை திட்டமிட்டு இடையூறு செய்தது. சட்டவிரோதக் குடியேற்றங்களையும் பாலஸ்தீன மக்களை சுற்றிவளைத்து அம்மக்களை இராணுவத் துப்பாக்கிகளின் இலக்குகளுக்குள் கட்டுப்படுத்தி வைக்கும் நோக்கத்துடனான 2 பில்லியன் டாலர் பாதுகாப்புச் சுவரையும் ஷரோன் விரிவுபடுத்தினார்.

தெற்கு காசாவில் 2003 மார்ச் 16 அன்று, வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசேல் கோரி என்ற அமெரிக்க மாணவர் இஸ்ரேலின் இராணுவ புல்டோசரால் திட்டமிட்டு நசுக்கிக் கொல்லப்பட்டார். அப்பெண்ணின் மரணம் சர்வதேச அளவில் எதிர்ப்பினை கொண்டுவந்தது. அக்டோபர் மாதத்தில், ஷரோன் சிரியாவுக்கு உள்பகுதி வரை ஒரு குண்டுவீச்சுத் தாக்குதலையும் நடத்தி, மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு கதவு திறந்தார்.

2003 ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த அரசியல் சமிக்கையை அட்லாண்டிக்கை கடந்து அனுப்புகின்ற விதமாக தனது முதல் சுயாதீனமான இராணுவ நடவடிக்கையைத் ஆரம்பித்து கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 1,400 துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டன. அந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆபிரிக்கா மற்றும் பிரான்ஸ்: இரண்டும் ஒரு புதிய கூட்டில் என்ற தலைப்பில் பாரிஸ் பிரான்ஸ்-ஆபிரிக்க உச்சி மாநாட்டை அடுத்து, சர்வதேச இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் படைத்த ஒரே உலக சக்தி அமெரிக்கா மட்டும் அல்ல என்பதை ஐரோப்பிய நாடுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன. பிரான்ஸ், மூலோபாய முக்கியத்துவம் நிறைந்ததொரு இடத்தில் அமைந்திருக்கும் அதன் முன்னாள் காலனி நாடான ஐவரி கோஸ்டில் நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போரிலும் தனது துருப்புகளின் வலிமையை அதிகரித்தது.

ஜுலை மாதத்தில் இந்தோனேசியாவில் ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரியின் அரசாங்கம் வடக்கு மாகாணமான சுமாத்ராவில் பிரிவினைவாத அசே சுதந்திர இயக்கத்தை (GAM) நசுக்குவதில் இறங்கியது. 30,000 க்கும் அதிகமான துருப்புகள், அவர்களுக்கு உதவியாக 13,000 க்கும் அதிகமான போலிசார், ஆயுதமேந்திய வாகனங்கள், போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் இவற்றுடனான ஒரு மிருகத்தனமான நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிற முக்கிய சக்திகளின் மறைமுகமான ஒப்புதல் இருந்தது.

அதே மாதத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்த வலது-சாரி ஹோவார்ட் அரசாங்கம் வளங்கள் செறிந்த பபுவா நியூகினியாவிற்குக் கிழக்கில் இருக்கும் முன்னாள் காலனித்துவப் பகுதியான சாலமன் தீவுகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் பொருட்டு துருப்புகளை அனுப்பியது. ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியமானது, தெற்கு பசிபிக்கில் அதன் சொந்த செல்வாக்கு மண்டலத்திற்குள் மட்டுப்படுத்தபட்டிருந்தாலும் புஷ் நிர்வாகத்தின் அதே இராணுவவாத முன்மாதிரியைத் தான் பின்பற்றிக் கொண்டிருந்தது என்பதை அடுத்து வந்த WSWS ஆசிரியர் குழு அறிக்கை விளக்கியது.

நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான படுகொலைக்கு உத்தரவிட்டிருந்ததற்கு பின்னர் அமெரிக்க ஆதரவுடனான பொலிவிய ஜனாதிபதி கோன்ஸாலோ சான்செஸ் டி லோஸாடா அக்டோபர் 18 அன்று இராஜினாமா செய்துவிட்டு நாடு கடந்து அமெரிக்காவில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். எரிசக்தி வளங்கள் தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்த்து ஒரு மாத காலம் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் உச்ச கட்டத்தில் இந்த இராஜினாமா நிகழ்ந்தது. இந்த இராஜினாமாவிற்கு சில நாட்கள் முன்னதாக, நாட்டுப்புறங்களில் விவசாயிகளின் மீதும் நகரங்களில் தொழிலாளர்கள் மீதும் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 86 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்திருந்தனர். WSWS இந்த நிகழ்வுகளை ஈராக்கில் அமெரிக்க மூர்க்கத்தனத்துடன் தொடர்புபடுத்திக் காட்டியது. பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை பாதுகாப்பதையும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சிய ஒரு சமூகக் கிளர்ச்சியை தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த ஒடுக்குமுறை நடத்தப்பட்டது என்று WSWS வலியுறுத்தியது.

நவம்பர் மாதத்தில், வண்ணப் புரட்சிகளில் முதலாவதாக, முன்னாள் சோவியத் குடியரசு நாடான ஜோர்ஜியாவில் ஜனாதிபதி எட்வார்ட் ஷெவார்ட்னாடெஸைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா பின்னிருந்து இயங்கியது. ஜோர்ஜியாவின் ரோஜா வண்ணப் புரட்சி’: அமெரிக்காவில் தயாரான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு என்ற WSWS கட்டுரை ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக வேடத்தை அம்பலப்படுத்தியது. அது சுட்டிக் காட்டியது:

அமெரிக்காவை பொறுத்தவரை, சந்தேகத்திற்கிடமில்லாமல் அமெரிக்க ஆதரவு கொண்ட ஒரு ஆட்சி நடைபெறுகின்ற ஜோர்ஜியாவில் ஓரளவுக்கு ஸ்திரநிலையைப் பராமரிப்பதென்பது மிகப்பெரும் அவசரமானதாக இருக்கிறது. அமெரிக்க எரிசக்தி பெருநிறுவனங்களின் நலன்கள் மற்றும் உலக இராணுவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்கள் இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக இந்தப் பிரச்சினையில் தான் சங்கமிக்கின்றன.

இதே மாதத்தில் இலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு அரசியல்சட்ட கவிழ்ப்பை மேடையேற்றினார். பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் தகவல்துறை அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ததோடு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிருந்த பழைமைவாத ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கூட நீக்கி விட்டு, அவரது சொந்த கட்சி சிறுபான்மை அந்தஸ்தைக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புப் படைகளை வழிநடத்தும் பொறுப்பை அவரே கையிலெடுத்துக் கொண்டார்.

2003 ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதிலும் ஆழமான சமூக வெட்டுகளும் அவற்றை எதிர்த்த பாரிய ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஜேர்மனியில், சான்சலர் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. நவம்பரில் நூறாயிரக்கணக்கிலான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பற்றவர்களும் பேர்லினில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், தொழிற்சங்கங்கள் எல்லாம் முடிந்த அளவு அதனைப் புறக்கணித்தன என்ற போதிலும். சமூக வெட்டுகள் மற்றும் போருக்கான ஒரு அரசியல் பதில் என்ற அறிக்கையை இந்தப் பேரணியில் WSWS விநியோகம் செய்தது. ஷ்ரோடர் அரசாங்கத்தின் சமூக விரோதக் கொள்கைகளுக்கும் ஈராக்கிலான போரில் அது நடைமுறையில் ஆதரவளித்ததற்கும் இடையிலிருந்த தொடர்பை இந்த அறிக்கை விளக்கியது.

இதேபோன்ற போராட்டங்கள் ஐரோப்பிய கண்டத்தின் எஞ்சிய பகுதிகளையும் உலுக்கின. பிரான்சில் மே 13 அன்று ஓய்வூதிய சீர்திருத்தங்களை எதிர்த்து மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்தமை ஐரோப்பாவெங்கும் நிகழ்ந்த வெப்பம் அதிகரித்ததாலான மரணங்களின் எண்ணிக்கையில் பிரதிபலித்தது. குறிப்பாக பிரான்சில் இந்நிகழ்வு மிகக் கணிசமான அளவில் நிகழ்ந்தது. பொருளாதாரரீதியாக மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றான இந்நாட்டில் குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் காற்றோட்ட வசதி இல்லாமையின் காரணத்தினால் 10,000 க்கும் அதிகமான பேர், குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், உயிரிழந்தனர்.

டிசம்பர் மாதத்தில், ஒரு மில்லியன் இத்தாலிய தொழிலாளர்கள் வலது-சாரி பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆஸ்திரியாவில் ஓய்வூதிய அமைப்புமுறையில் பழைமைவாத அரசாங்கம் செய்த பாரிய வெட்டுகளுக்கு எதிராக 50 ஆண்டுகளின் மிகப் பெரும் அரசியல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500,000 தொழிலாளர்கள் பங்குபெற்றனர்.

கனடாவில், டிசம்பர் ஆரம்பத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கியூபெக்கின் லிபரல் அரசாங்கம் பொதுச் சேவைகள் மற்றும் தொழிலாளர்களது உரிமைகள் மீது தொடுத்த தாக்குதலை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடந்தன. தொழிற்சங்கங்கள் புத்தாண்டில் ஒரு பொதுவேலைநிறுத்தம் செய்வதற்கான போலியான அச்சுறுத்தல்களை வழங்கி விட்டு கிறிஸ்துமஸ் சண்டைநிறுத்தம் ஒன்றை அறிவித்து இந்த எதிர்ப்பு இயக்கத்தை தகர்த்து விட்டது.

செப்டம்பர் மாதத்தில், யூரோ அறிமுகத்துக்கு சுவீடனின் வாக்காளர்கள் இல்லை என வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 உறுப்பு நாடுகளில் 12 இல் அது அறிமுகப்படுத்தப்பட்டு 18 மாதங்களிலேயே, இந்த புதிய நாணயமானது வெகுஜன மக்களின் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்கான ஒரு சாதனமாகப் பார்க்கப்படும் நிலை தோன்றியிருந்தது.

அமெரிக்காவில் நடந்த இரண்டு நிகழ்வுகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிந்து செல்லும் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டின. முதலாவது கொலம்பியா சிதறி அழிந்த சம்பவம். விண்வெளிக் கலம் ஒன்று துயரகரமான வகையில் சிதறி அதிலிருந்த பணியாளர்கள் கொல்லப்படுகின்ற இரண்டாவது சம்பவமாக இது இருந்தது. ஒரு சமயத்தில் மிகவும் பீற்றிக் கொள்ளப்பட்ட இந்த அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் நெருக்கடியை அதன் வரலாற்று மற்றும் சமூக உள்ளடக்கத்தில் இருத்தி WSWS தொடர்ச்சியான பல கட்டுரைகளை வெளியிட்டது.

ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவிலும் கனடாவிலும் Great Lakes பகுதியை மையத்தில் கொண்ட பகுதிகளில் ஒருநாளைக்கும் அதிகமாக பத்து மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சக்தி துண்டிக்கப்பட்ட இருண்ட தினம் வந்தது. விண்வெளிக் கலம் சிதறிய சம்பவத்தைப் போலவே, இந்த இருண்ட தினமும் முதலாளித்துவத்தின் தோல்வியை விளங்கப்படுத்தியது. இலாப நோக்கங்கள் பகுத்தறிவான நீண்டகால திட்டமிடலுக்கான சமூக தேவைகளுடன் மோதலுக்குட்பட்டு சிக்கலான தொழில்நுட்ப அமைப்புமுறைகளை உரிய முறையில் பராமரிக்க முதலாளித்துவம் திறனற்றுப் போயிருந்ததை இது வெளிப்படுத்தியது

பாலஸ்தீன வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசேல் கோரி இஸ்ரேலிய புல்டோசர் ஒன்றினால் கொல்லப்பட்டார்

மேலதிக தகவல்கள்

27 June 2003 ஐரோப்பிய ஒன்றியம் கொங்கோவிற்குப் படைகளை அனுப்புகிறது.

15 August 2003 சொலமன் தீவுகளின் தலையீட்டின் பின்னணியில்: ஆஸ்திரேலியா பசிபிக் பகுதியில் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை நிறுவும் முயற்சிகள்

19 September 2003 கொலம்பியா விண்கல அழிவு: விஞ்ஞானமும் இலாப அமைப்பு முறையும்
பகுதி 1: விபத்தின் தொழிற்நுட்ப காரணமும் விண்வெளிக்கலத்தின் கட்டுமானத்தின் தேய்வும்

20 September 2003கொலம்பியா விண்கல அழிவு: விஞ்ஞானமும் இலாப அமைப்பு முறையும்
பகுதி 2 : பணிக்கால அட்டவணை அழுத்தங்கள் பாதுகாப்பு கவனங்களை குறைக்கின்றன

22 September 2003 கொலம்பியா விண்கல அழிவு: விஞ்ஞானமும் இலாப அமைப்புமுறையும்
பகுதி 3: விபத்திற்கு காரணமான அரசியல், பொருளாதாரக் காரணங்கள்

7 October 2003 சிரியாமீது குண்டு வீச்சு: அமெரிக்க - இஸ்ரேலிய வலியத் தாக்குதலின் புதிய வெடிப்பு

4 November 2003 இராணுவவாதத்தையும் போரையும் எதிர்ப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம்

6 November 2003 சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்பு சதியை கண்டனம் செய்கின்றது

5 December 2003 ஜோர்ஜியா: "ரோஜாப் புரட்சி" தெற்கு காகசஸ் பகுதியின் உறுதித்தன்மையைக் குலைக்கிறது. பகுதி 1


நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு

ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தையே நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு 2003 இல் தனது வேலைகளுக்கான மையமாக நிறுத்தியது. ஈராக் மீதான போரின் வரலாற்று முக்கியத்துவத்தை உலகிற்கு விளங்கப்படுத்தும் பொருட்டும், இராணுவவாதத்தை எதிர்கொண்டு நிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு முன்நிற்கும் பாதையை விளக்குவதற்கும் பொதுக் கருத்தரங்குகளை வரிசையாக ஏற்பாடு செய்தது. சோசலிசமும் போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டம் என்பது மார்ச் 29-30 இல், அதாவது போரின் உத்தியோகபூர்வ தொடக்கத்திற்கு ஒரே வாரத்தின் பிறகு, மிச்சிகன் ஆன் ஆர்பரில் நடத்தப்பட்ட, மற்றும் ஜூலை 5-6 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் பதாகையாக இருந்தது. இரண்டு நிகழ்வுகளிலுமே உலகெங்கிலும் இருந்து இளைஞர்களும் தொழிலாளர்களும் பங்குபற்றி அதைத்தொடர்ந்து அறிந்து கொண்டனர்.

ஆன் ஆர்பர் மாநாட்டில் கொந்தளிப்பு புயலுக்குள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும் என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் ஆரம்ப அறிக்கை அளித்தார்.

புஷ் அரசாங்கத்தின் பயங்கரவாதத்தின் மீதான போரில் உலக அரசாங்கங்கள் உடந்தையாக இருந்ததை இரண்டு விடயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின ஒன்று அமெரிக்க உத்தரவின் பேரில் ஜோர்டான் மற்றும் சிரியாவால் சித்திரவதைக்குள்ளான மஹேர் அரார் விடயம். இதற்கு கனடா அரசாங்கமும் உடந்தையாக இருந்தது. இரண்டாவது டேவிட் ஹெக்ஸ் விடயம் இஸ்லாமிற்கு மதம்மாறிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் ஹெக்ஸ் அவர் குற்றமெதுவும் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலேயே குவாண்டானாமோ கொண்டு செல்லப்பட்டு அங்கேயே பல வருடம் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அவரைப் பாதுகாத்து ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பிரச்சாரத்தை நடத்தியது. தனது மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்திக் கொண்டிருந்த டேவிட் ஹிக்ஸின் தந்தை டெர்ரி ஹிக்ஸை  உலக சோசலிச வலைத் தளம் நேர்காணல் செய்தது. அத்துடன் ஹோவார்டு அரசாங்கம், தொழிற் கட்சியின் எதிர்ப்பு மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றின் முட்டுக்கட்டை சுவரை உடைப்பதற்கு ஹிக்ஸின் குடும்பமும் குவாண்டானாமோ சிறையில் இருந்த இன்னொரு ஆஸ்திரேலியரான மம்தோ ஹபீப்பின் குடும்பமும், நடத்திய போராட்டங்கள் குறித்த செய்திகளையும் வெளியிட்டது.

ஆஸ்திரேலியாவில், பூர்வீகப் பழங்குடியினரது வரலாறு குறித்து கெய்த் விண்ட்ஸ்கட்டில் எழுதிய ஒரு பிற்போக்குத்தனமான புத்தகத்தின் வடிவத்தை எடுத்த வரலாற்றுப் பொய்மைப்படுத்தலுக்கு எதிராகவும் SEP ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஒரே தேசம் கட்சியைச் சேர்ந்த பௌலின் ஹென்சன் மற்றும் டேவிட் எட்ரிட்ஜ் ஆகிய இரண்டு வலதுசாரி ஜனரஞ்சகவாத தலைவர்களை குற்றஞ்சுமத்தி சிறையிலடைத்ததையும்  சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்தது. உலக சோசலிச வலைத் தளம், ஒரே தேசம் கட்சியின் பிற்போக்குத்தனமான அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்த அதேநேரத்தில் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற போலி-இடது குழுக்களால் ஆதரவளிக்கப்பட்ட இந்த விசாரணையின் ஜனநாயக-விரோதத் தாக்கங்களை விளக்கியது.

அக்டோபர் மாதத்தில், கலிபோர்னியாவில் வலதுசாரி குடியரசுக் கட்சியின் பெரும் செல்வந்தர்களின் நிதியாதாரத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு மனுவையடுத்து நடந்த திருப்பி அழைப்பதற்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஒரு வரலாற்றுப் படுதோல்வியை சந்தித்தது. ஜனநாயகக் கட்சியின் ஆளுனரான கிரே டேவிஸ் திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டு குடியரசுக் கட்சியை சேர்ந்த ஆர்னோல்ட் சுவார்ட்ஸ்னேகர் அவரை இடம்பெயர்த்தார். டேவிஸ் 2002 திருப்பியழைக்கும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார், ஆனால் மின்சாரக் கட்டணங்களில் பெரும் உயர்வுகள் செய்தமை, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் பாரிய வெட்டுகள் செய்தமை, கார் உரிமக் கட்டணங்களை மும்மடங்காக்கியமை ஆகியவற்றின் பின்னர் அவரது ஆதரவு பாதாளத்திற்குச் சென்று விட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) திருப்பியழைப்பு தேர்தலில் தலையீடு செய்தது. மனித உரிமைகள் வழக்கறிஞரான ஜான் கிறிஸ்டோபர் பேர்டனை ஆளுனர் பதவிக்கான சுயேச்சை வேட்பாளராக களமிறக்கியது. இத்தேர்தலில் ஒரு கோட்பாட்டுரீதியான நிலைப்பாட்டை எடுத்த சோசலிச சமத்துவக் கட்சி, தேர்தல் நடைமுறையின் ஆபத்தான மற்றும் பிற்போக்குத்தனமான கைப்புரட்டு குறித்து தொழிலாளர்களை எச்சரிக்கும் விதமாக திருப்பியழைக்கும் தேர்தலில் இல்லை என வாக்களிக்க அழைப்பு விடுத்த அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே நடத்திய சமூக நிலைமைகளின் மீதான தாக்குதல்களை எதிர்த்த ஒரு வேட்பாளரையும் களத்தில் நிறுத்தியது.

இந்த திருப்பியழைப்புப் பிரச்சாரத்தின் போது கட்சி ஆயிரக்கணக்கான அரசியல் அறிக்கைகளை ஆங்கிலத்திலும் ஸ்பானிய மொழியிலும் விநியோகித்தது. இந்த அறிக்கைகள் கலிபோர்னியா நிதி நெருக்கடியின் வேர்களையும் போர் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவுடன் அது கொண்டிருந்த தொடர்பையும் பகுப்பாய்வு செய்தது. பசுமைக் கட்சி வேட்பாளரும் சோசலிச தொழிலாளர்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான பீட்டர் கமீஜோவை சோசலிச சமத்துவக் கட்சி அம்பலப்படுத்தியது திருப்பியழைப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர் ஜனநாயக உரிமைகள் விடயத்திலான தனது சந்தர்ப்பவாத அலட்சியத்தை எடுத்துக் காட்டினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு பரந்த திருப்பத்தின் பகுதியாக இருந்தது. தென் கலிபோர்னியாவில் வேலைநிறுத்தம் செய்து வந்த போக்குவரத்து மற்றும் பேரங்காடித் தொழிலாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரும் ஆதரவாளர்களும் அறிக்கைகள் விடுத்ததும் பயணங்கள் மேற்கொண்டதும் இதில் அடங்கும். போட்டியிட்ட 135 வேட்பாளர்களில் 6,200க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பேர்டன் 14வது இடத்தைப் பிடித்தார். பிரச்சாரத்தின் உச்சகட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸில் கலிபோர்னியா நெருக்கடி: உழைக்கும் மக்களுக்கான ஒரு சோசலிசக் கொள்கை என்ற தலைப்பில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

நவம்பரிலும் டிசம்பரிலும், லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்திற்குள்ளாக பப்லோவாதத் திருத்தல்வாதத்திற்கு எதிராய் நடைபெற்ற போராட்டத்தில் இருந்து உருவான அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்ட 50வது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் விதமாக, ஜேர்மனியின் பிராங்க்பேர்ட், இலண்டன், இலங்கையின் கொழும்பு மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய இடங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கூட்டங்களை நடத்தியது. 1953 நவம்பர் 16 அன்று அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி அதன் புகழ்பெற்ற பகிரங்கக் கடிதத்தில், அந்த சமயத்தில் நான்காம் அகிலத்தின் செயலராக இருந்த மைக்கேல் பப்லோவின் தலைமையின் கீழ் உருவாகியிருந்த ஒரு திருத்தல்வாதப் போக்கிற்கு எதிரானதொரு போராட்டத்தில் உலகெங்கும் இருக்கும் பாரம்பரிய ட்ரொட்ஸ்கிசவாதிகள் ஐக்கியப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

இந்த வரலாற்றை மீளாய்வு செய்த டேவிட் நோர்த் கொழும்பு கூட்டத்தில் பின்வருமாறு வலியுறுத்தினார்

அந்தப் போராட்டத்தில் அன்று செயலூக்கத்துடன் பங்குபற்றியிருந்த அனைவருமே இப்போது ஏறக்குறைய காட்சியில் இருந்து அகன்று விட்டார்கள். ஆனால் அவர்கள் எந்த அரசியல் கோட்பாடுகளுக்காகப் போராடினார்களோ அந்தக் கோட்பாடுகள் அப்படியே தான் இருக்கின்றன என்பதோடு இன்றைய காலகட்டத்தில் அது ஒரு பாரிய அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுத் திகழ்கிறது. மார்க்சிசத்தின் அடிப்படையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் கட்சிகளைக் கட்டியெழுப்புவது சாத்தியமே என்பதை நாம் விளங்கப்படுத்திக் காட்டுவோம். அதுவே இந்த ஆண்டுதினத்தின் பொருளாகும்.

குவாண்டானோமோவில் முன்னாளில் கைதியாக இருந்த டேவிட் ஹெக்ஸ் 2012 இல்

மேலதிக தகவல்கள்

1 April 2003 கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்

2 April 2003 உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு

10 July 2003 அமெரிக்க இராணுவவாதத்தின் அரசியல் பொருளாதாரம்

21 July 2003WSWS/SEP international conference
The eruption of militarism and the crisis of American capitalism

3 July 2003In the midst of budget meltdown
Republican right tries to overthrow California Governor

30 August 2003 கலிஃபோர்னியாவின் திருப்பியழைத்தல் தேர்தலில் சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கை
கலிஃபோர்னிய திருப்பியழைத்தல் தேர்தலில் ``வேண்டாம்`` என்று வாக்களியுங்கள், நெருக்கடிக்கு சோசலிசத் தீர்வுகாண ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்கு கவர்னர் பதவிக்கான வாக்கை அளியுங்கள்

23 December 2003 நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50-வது ஆண்டு பற்றிய கூட்டங்கள்
நிக் பீம்ஸ்: "நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டம் காலத்தின் சோதனையைக் கடந்து விட்டது"


கலாச்சாரமும் ஈராக் போரும்

ஈராக்கிய போர் 2003 ஆம் ஆண்டின் கலை மற்றும் கலாச்சார வாழ்வின் மீது ஒரு கணிசமான நிழலாய் படர்ந்தது. .நா பாதுகாப்பு சபையில் போருக்காக கொலின் பௌல் வாதாடுவதற்கு முன்பாகவே பிக்காசோவின் பிரபலமான போர் எதிர்ப்பு ஓவியமான குவெர்னிகா மறைக்கப்பட்ட நிகழ்வை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் ஈராக்கிய தேசிய அருங்காட்சியகம் சூறையாடப்படுவதற்கும் ஈராக்கிய தேசிய நூலகம் கொளுத்தப்படுவதற்கும் அனுமதித்ததன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியமானது மனிதக் கலாச்சாரத்திற்கான ஒரு பெரும் அடியைக் கொடுத்தது என்று கூறலாம்.

கலைஞர்களிடையே போர் எதிர்ப்பு உணர்வு தோன்றினால் அதை கறுப்புபட்டியலில் இடவும் தணிக்கை செய்வதற்கும் ஊடகங்களும் பொழுதுபோக்கு கூட்டுநிறுவனங்களும் சிரத்தையுடன் முயற்சிகள் செய்தன, என்றபோதிலும் ஏராளமான கலைஞர்கள் தமது எதிர்ப்புக் குரலை எழுப்பும் துணிச்சல் கொண்டிருந்தனர். சமாதானவாத பிரமைகள் அரசியல் நோக்குநிலை பிறழல்கள் ஆகியவற்றின் சாயல்கள் தவிர்க்கவியலாமல் இருந்தபோதிலும், திரைத்துறையிலும் பிற கலைப் பிரிவுகளிலும் பல முக்கியமான ஆளுமைகள் பிற்போக்குத்தன அலை என்ற அப்போதைய பொது நீரோட்டத்திற்கு எதிர்நீச்சலிட முயற்சிகள் செய்தனர். நடிகர்கள் சீன் பென் மற்றும் மார்டின் ஷீன், அமெரிக்க நாட்டுப்புற இசைக் குழுவான டிக்சி சிக்ஸ், அத்துடன் அந்த ஆண்டின் ஆஸ்கார் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஏராளமான கலைஞர்கள் ஆகியோர் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கலைத் துறை செய்திகளின் எல்லையை WSWS தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டும் ஆழப்படுத்திக் கொண்டும் சென்றது. பல்தரப்பான விவாதப் பொருட்கள் குறித்த கட்டுரைகள் எழுதப்பட்டன. பிரான்சிஸ் பேகனின் artwork , ஆங்கிலேய தேசிய நாடகப் பாடகர்களின் strike , லியானார்டோ டாவின்சியின் ஓவியக் exhibition, மற்றும் எட்கர் டீகாஸின் sculpture ஆகியவை குறித்த செய்திகளும் இதில் இடம்பெற்றன.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, அகாதமி விருதுக்காக போட்டியிட்ட படங்கள் ஓரளவுக்கு அமெரிக்க கலை வாழ்க்கையின் மோதல் போக்குகளை எடுத்துக் கூறுவதாக இருந்தன. ஒரு பக்கத்தில் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் துயரமான நிகழ்வுகளை புறநிலைத்துவத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் கையாள முயற்சிகள் இருந்தன (ரோமன் போலன்ஸ்கி The Pianist); இன்னொரு பக்கத்திலோ குறுகிய கலைத்துறை பார்வையுடனும் சுயமோகத்துடனான போக்குகள் தென்பட்டன (The Hours); இறுதியாக கலைஞர்களின் பின்தங்கியதொரு தட்டினரிடையே வெகுஜன மக்களை தணியாத வெறுப்புடன் பார்க்கின்ற ஒரு போக்கு பெருகி வந்தது (Gangs of New York).

சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏராளமான சுவாரஸ்யமான படங்கள் திரையிடப்பட்டன. வான்கூவர், டொரோண்டோ, புவனர்ஸ் ஏரஸ், பேர்லின் மற்றும் சிட்னியில் இருந்து விரிவான செய்திகளை WSWS வழங்க முடிந்தது. தவிரவும் ஹாலிவுட் நடிகர்களான கேதரின் ஹெப்பர்ன் மற்றும் கிரிகோரி பெக் மற்றும் நாஜிக்களின் திரைப்பட உருவாக்குநரான லெனி ரைபென்ஸ்டால் ஆகியோருக்கான இரங்கல் செய்திகளும் இடம்பெற்றன. ஜப்பானிய படைப்பாளி அகிரோ குரோசோவா மற்றும் ஜேர்மன் இயக்குநர் றைய்னர் வேர்னர் பாஸ்பிண்டர் ஆகியோர் இயக்கி 1950கள் மற்றும் 1970களில் வெளிவந்த முக்கியமான திரைப்படங்களும் பகுப்பாய்வில் இடம்பெற்றன.

இறுதியாக, மனித கலாச்சாரத்தின் பிற துறைகளின் மீதான வருணனையையும் WSWS வழங்கியது. குறிப்பாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்களின் புதிய அபிவிருத்திகளின் தாக்கங்கள் குறித்த பகுப்பாய்வுகள் இடம்பெற்றன. இதில் மனித மரபணுத்தொகுதி ஆராய்வு நிறைவுபெற்றமை அத்துடன் எதியோப்பியாவில் நவீன மனிதப் புதைபடிவில் மிகப் பழமையானது கண்டுபிடிக்கப்பட்டமை, அத்துடன் நவீன காலங்களின் மிகவும் பரவலாய் ஆபத்து விளைவித்த தொற்றுநோயான SARS இன் முக்கியத்துவம் குறித்த ஒரு மதிப்பீடு போன்றவை குறித்த பகுப்பாய்வுகள் இடம்பெற்றன.

http://www.wsws.org/asset/2e222071-9cfb-4d16-8a0a-e488cfda76aG/3430203459_da103cf63d_o.jpg?rendition=image480
Detail of the tapestry of Pablo Picasso's Guernica at the United Nations

Featured material

8 February 2003 UN conceals Picassos Guernica for Powells presentation

25 March 2003 Iraq war dominates 75th Academy Awards
Filmmaker Michael Moore denounces Bush

19 April 2003 ஈராக்கின் கலைப் பொக்கிஷங்கள் திட்டமிட்டு
கொள்ளையடிக்கப்பட்டதில் அமெரிக்க அரசாங்கம் உடந்தை

12 May 2003 சார்ஸ் தொடர்பான அறிவியலும், சமூகவியல் தன்மையும்
பகுதி-1: வைரசுக்களும் தற்போதைய பரவலின் தன்மையும்

13 May 2003 சார்ஸினுடைய அறிவியல், சமூகவியலின் தன்மை
பகுதி-2: விஞ்ஞானம், சர்வதேசியம் மற்றும் இலாப நோக்கமும்

16 July 2003 Katharine Hepburn, Gregory Peck and American filmmaking